Wednesday, January 6, 2016

வாட்ஸ்அப் தகவல்களைப் பரப்பலாமா?....நிதின் பாய்

Return to frontpage

அவசரகதியில் பகிரப்படும் தகவல்களால் தீமைகள்தான் அதிகம்

எதையும் அலசி ஆராய்ந்து வாதப் பிரதிவாதம் செய்யும் இந்தியர்களின் இடத்தை எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கியெழும் இந்தியர்கள் அபகரிக்கத் தொடங்கிவிட்டார்களோ எனும் ஐயம் எழுகிறது. விசாலமான பார்வைகளை முன்வைக்கும் பொது விவாத மேடைகள் அரிதாகிவருகின்றன. பொது மேடைப் பேச்சுகள் என்றாலே கத்திக் கூப்பாடுபோடுவது என்றாகிவிட்டது. இந்தப் போக்கு தணியப்போவதாகத் தெரியவில்லை. ஆக, தலைப்புச் செய்திகளையும் உடனடி அலசல்களையும் விட்டு விலகி நிற்க வேண்டிய நேரம் இது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஊழலுக்கு எதிராகக் களமிறங்கிப் போராடினார்கள். அதன் பிறகு, இந்தப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அந்த வரிசையில் நடிகர் மற்றும் இயக்குநர் அனுபம் கெருக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தது நினைவிருக்கும். இந்தியாவில் சகிப்புத்தன்மையும் பாதுகாப்பின்மையும் அதிகரித்துவிட்டதாக நடிகர் அமிர்கான் கூறியதைக் கண்டித்து, அனுபம் கெர் ஊர்வலம் நடத்தினார். இப்படி எதிர்ப்பை எதிர்த்ததற்காக அனுபம் கெருக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

எதிர்ப்புச் சங்கிலிகள்

இதேபோன்று சமீபத்தில் பெங்களூருவில் நடத்தப்பட்ட இலக்கியச் சங்கமமும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொடூரமாகக் கொல்லப்பட்டத்தைக் கண்டித்து, இந்தியாவில் சகிப்பின்மையும் வெறுப்பு அரசியலும் அதிகரித்துவருவதாகக் கூறி, எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதுகளைத் திரும்ப ஒப்படைத்தனர் இல்லையா! அந்த எதிர்வினையைச் சிலர் விமர்சித்தனர். அப்படி விமர்சித்தவர்களில் ஒருவர் எழுத்தாளர் விக்ரம் சம்பத். இவர் இலக்கியவாதிகளின் ஒப்பற்ற படைப்புகளுக்கு அரசு சாரா நிறுவனமான சாகித்ய அகாடமி கொடுத்த விருதுகளை எதற்காகத் திருப்பித் தர வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். அவர் ஒருங்கிணைத்த இலக்கியக் கூட்டம்தான் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவை முறியடிக்கச் சில எழுத்தாளர்கள் முயன்றதாகச் சிலர் ஆவேசப்படுகிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு நிகழ்வுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவோம். அதற்கு அடுத்த காலகட்டத்தில் ஒரு பிரச்சினைக்கு ஊடகம் ஏற்படுத்தும் பிம்பத்துக்கு எதிர்வினை ஆற்றத் தொடங்கினோம். இப்போது சமூக வலைதளங்கள் மூலம் எதிர்வினைக்கு எதிர்வினை ஏவப்படுகின்றன. இப்படியாக எதிர்வினைக்கு எதிர்வினை. மீண்டும் அதற்கு எதிர்வினை என ஒரு தொடர் சங்கிலியாக எதிர்வினைகள் முடிவிலியில் சுழன்றுகொண்டிருக்கின்றன. ஆக, செய்திகளுக்குப் பதிலாக எதிர்வினைகளும் எதிர்ப்பலைகளும் சுழன்றுகொண்டே இருக்கின்றன. பொதுவெளிகளில் விவாதம் என்பது சுருங்கிக்கொண்டே போகிறது. நாடகத்தனமாகக் கூச்சலிடும் செய்தித் தொகுப்பாளர்களும், கத்திக் கூப்பாடுபோடும் பேச்சாளர்களும், பிரச்சினையைப் பூதாகாரமாக்கும் நிருபர்களும், ஒருதலைப்பட்சமான வர்ணனையாளர்களும், சந்தர்ப்பவாதிகளான ஆதரவாளர்களும், தான் நினைப்பது மட்டுமே சரி எனப் பதாகை தூக்கிப்பிடிக்கும் இணையவாசிகளும் ஒன்றுகூடி நாளொன்றுக்கு ஒரு சாத்தானைத் தேடி அலைகின்றனர்.

செயல்படாத ஜனநாயகம்

இந்தப் போக்கு சமூக நலத்துக்கு அபாயகரமானது. அதைவிடவும் ஜனநாயகத் தூணையே அசைத்துப் பார்க்கிறது. அரசியல் கொள்கைகள் இதுவரை காணாத அளவுக்குத் தூக்கி எறியப்படுகின்றன. அரசியல் அதிகாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எதுவுமே உண்மை என நம்ப முடியாத இடத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒருபுறம் முழுமையான ஜனநாயகம் மறுபுறம் ஜனநாயகத்துக்குச் சவால்விடும் சம்பவங்கள். இப்படி இரண்டுக்கும் இடையில் லாவகமாகக் கயிறு மேல் நடப்பதுபோன்ற சாகசத்தைப் பல தசாப்தங்களாக இந்தியா செய்துவந்தது. ஆனால், அந்தக் கயிற்றிலிருந்து இந்தியா இடறி விழுந்துவிடுமோ எனும் அச்சத்தைச் சமீபகாலப் போக்குகள் ஏற்படுத்துகின்றன. ‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்பார்கள். ஆனால், ஜனநாயகத்தைப் பொறுத்தவரை மக்கள் எவ்வழியோ அரசன் அவ்வழியே. நம்மில் ஒருவர்தான் நம்மை ஆளுகிறார் என்பதுதானே ஜனநாயகம். ஆனால், இன்றைய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் ஆன்மாவை இழந்துவருகிறது. சரியான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான கலந்துரையாடல்களுக்குப் பதிலாகக் களேபரங்கள்தான் அநேகமாக நாடாளுமன்றத்தில் நிகழ்கின்றன.

சமூகவியலாளர் மற்றும் குற்றவியல் ஆய்வாளரான ஸ்டேன்லி கோஹன் 1960-களில் உருவாக்கிய சொல்லாடலான

`தார்மீகப் பதற்றம்’என்பதில் நாம் ஆழ்ந்திருக்கிறோம். ஸ்டேன்லி பார்வையில் இத்தகைய தார்மீகப் பதற்றத்தை ஊடகம்தான் கட்டமைக்கிறது. மக்கள் எதைப் பார்த்து அஞ்ச வேண்டும், எதைக் கண்டிக்க வேண்டும், எதை நிந்திக்க வேண்டும் என்பதையெல்லாம் ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. ஊடகங்கள் இல்லையேல் தார்மீகப் பதற்றமே இல்லை என்றுகூடச் சொல்லலாம். சில தனிநபர்களையும் அமைப்புகளையும் சமூக விரோதிகள் போல கட்டமைப்பது மோசமான சில ஊடகங்கள்தான் என்கிறார் ஸ்டேன்லி. ஒரு கட்டத்தில் காரணம் தெரியாமலேயே இப்படியாக முன்நிறுத்தப்படும் பிம்பங்களை மக்கள் வெறுக்கிறார்கள், தண்டிக்கிறார்கள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தார்மீகப் பதற்றம் உருவாகலாம். மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் அவை ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. இதன் விளைவாகத்தான், எதற்கெடுத்தாலும் எதிர்ப்புத் தெரிவிப்பது என்னும் போக்கு உருவெடுக்கிறது.

சமூக ஊடகங்களின் தாக்கம்

சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு தார்மீகப் பதற்றத்தின் போக்கு மாறியுள்ளதா என்பதை இதுவரை யாரும் கல்வி நிறுவனங்களில் ஆராயவில்லை. அதிலும் மொபைல் போன்களும், இணையதளமும், சமூகத்துக்குள் ஊடுருவிய பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, பொதுவெளிகளில் நடைபெறும் கருத்துரையாடல்களின் தரத்தை டுவிட்டர் தளர்த்திவிட்டது. ஒரு காலத்தில் வலைப்பூ எழுத்துகள் தரத்தை மேம்படுத்த உதவின. ஆனால், தற்போது பொதுப்படையான கண்ணோட்டம் இல்லாமல் தனிப்பட்ட பார்வையிலிருந்து ஒரு செய்தியை விவரிக்கும் முறையான ‘கான்சோ ஊடகவியல்’தான் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு உகந்த உதாரணம் வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் தகவல்கள். தனிப்பட்ட கருத்துகளை இதன்மூலம் நாம் முன்னோக்கிப் பரப்புகிறோம். இதில் ஆபத்து என்னவென்றால், வெகுஜன ஊடகங்களில் காணும் செய்திகளைவிடவும் இத்தகைய ஃபார்வர்ட் தகவல்கள் உளவியல்ரீதியாக நமது நம்பகத்தன்மையைச் சுலபமாகச் சம்பாதித்துவிடுகின்றன. “தான் நினைப்பதுபோலவே பலரும் நினைக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ளும் துறுதுறுப்பில் எதை வேண்டுமானாலும் பரப்பும் போக்கு அதிகரித்துவருகிறது. அரசியல் மதிநுட்பமே இல்லாமல் பொத்தாம்பொதுவாகப் பரப்பப்படும் இத்தகைய தகவல்கள், ஒரு கட்டத்தில் இயக்கமாகவே உருமாறுகின்றன” என எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் சந்தோஷ் தேசாய் சுட்டிக்காட்டுகிறார்.

இதை எப்படித்தான் எதிர்கொள்வது என்றால், செய்திகளை வாசிக்கும் அனைவரும் தங்களுக்குள் அதை ஆழமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதே போலச் சமூக ஆர்வலர்களும், ஊடகமும், பொதுச் சமூக அறிஞர்களும் பரபரப்புக்குப் பின்னால் ஓடாமல் ஒவ்வொரு சம்பவத்தின் மையத்தையும் கேள்விக்குட்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். என் கருத்தை நான் திணிப்பதாகக்கூட வாசகர்கள் நினைக்கலாம். ஆனால், முதல் கட்டமாகத் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்பேன். எல்லா சேனல்களையும்தான் சொல்கிறேன்! வாட்ஸ்அப் தகவல்களையும், ஃபார்வர்ட் மின்னஞ்சல்களையும் நம்ப வேண்டாம். நெருக்கடியான சூழல்களைத் தவிர மற்ற நேரங்களில் சமூக ஊடகங்களைக் கையில் எடுப்பதைத் தவிர்க்கலாம். என்றென்றும் பேட்டரி சார்ஜ் இறங்காத சிறந்த வயர்லெஸ் தொழில்நுட்பம் நாளிதழ்களும் பத்திரிகைகளும்தான்! உங்கள் டுவிட்டர் ஆப்ஸும் தொலைக்காட்சியும் தரும் சுடச்சுடச் செய்திகள் ஆற அமர விரிவான செய்தி தரும் அச்சு ஊடகத்துக்கு இணையாகாது.

இத்தனையும் சொல்லிவிட்டு இந்தக் கட்டுரையை நான் டுவீட் செய்வேன், ஃபேஸ்புக்கில் பகிர்வேன், வாட்ஸ்அப்பிலும் மின்னஞ்சலிலும் ஃபார்வர்ட் செய்வேன். எப்படியும் என்னை எதிர்த்துப் போராட யாரோ, எங்கேயோ தயாராக இருப்பார்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில்: ம.சுசித்ரா

Tuesday, January 5, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 15 - தற்கொலை எண்ணத்தைத் தூர எறிவோம் .....டாக்டர் ஆ.காட்சன்

Return to frontpage

வளர்இளம் பருவத்தில் ஒரு சிலருக்குத் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. இது இயல்பானதல்ல. இது போன்ற எண்ணங்கள், முயற்சிகளை எதிர்கொள்வதற்கு என்ன செய்யலாம்?

l வளர் இளம் பருவத்தினர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தினால், அதைப் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக மனநல ஆலோசனைக்கு அழைத்துச்செல்வதே சரி.

l ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற நபர், மருத்துவச் சிகிச்சைக்குப் பயந்து மறுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்யமாட்டார் என்பதும் தவறான நம்பிக்கை. அவர்கள்தான் அதிக ஆபத்தான வட்டத்தில் இருப்பவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

l வீட்டில் பெரியவர்கள் யாராவது மருத்துவச் சிகிச்சைக்காகத் தூக்க மாத்திரை சாப்பிட்டுவந்தால், அதைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவேண்டும். பார்வையில் தெரியும்படி வீட்டில் பூச்சிக்கொல்லிகளை வைக்கக் கூடாது.

l வளர்இளம் பருவத்தினரின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்வது அவசியம். ஏனென்றால், எல்லா மனநோய்களும் வெளிப்படையாகத் தெரிந்துவிடுவதில்லை.

l தற்கொலை எண்ணங்கள் கொண்ட எல்லோரையும் கவுன்சலிங்கால் மட்டுமே மாற்றிவிட முடியாது. மனநோய்களால் ஏற்படும் தற்கொலை எண்ணங்கள், காரணமே இல்லாமல் ஏற்படக்கூடியவை. மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்.

l ஊடகங்கள் மற்றும் சினிமாக்களில் காண்பிக்கப்படும் தற்கொலை சம்பந்தப்பட்ட காட்சிகள் பல நேரங்களில் ‘தற்கொலை செய்வது எப்படி?’ என்று தேவையற்ற பாடம் எடுப்பது போலவே பல நேரம் அமைந்துள்ளன. இதுபோன்ற காட்சிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சமீபத்தில் நான் பார்த்த ஒரு மாணவன் ‘3’ படத்தில் தனுஷ் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொள்வதைப் போலவே, முயன்றது ஓர் உதாரணம்.

l பள்ளி வகுப்புகளிலும் பாடத்திட்டங்களிலும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வு சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், வளர்இளம் பருவத்தினரின் திடீர் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணம் தற்கொலை என்பதை மறந்துவிடக் கூடாது. பல வளர்இளம் பருவத்தினர் தங்கள் எண்ணங்களைச் சக மாணவர்களிடமே முதன்முதலில் வெளிப்படுத்துகின்றனர்.

l காசநோயின் அறிகுறிகள் பற்றியும், புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என்றும், அவசரத் தேவைக்கு 108-ஐக் கூப்பிடுங்கள் என்றும் செய்யப்பட்ட தொடர் விளம்பரங்கள் எந்த அளவுக்குப் பலன் தந்தனவோ அதைப் போலவே தற்கொலைக்கான காரணங்கள், ஆலோசனைக்கான வழிகாட்டுதல்களை அரசு மற்றும் தொண்டுநிறுவனங்கள் விளம்பரம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

l மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களிடம்கூடத் தற்கொலை குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது வேதனையான விஷயம். ஏனென்றால், தற்கொலை முயற்சிக்கான முதலுதவி சிகிச்சை முடிந்ததும், மனநலப் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும் வளர்இளம் பருவத்தினரின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. தற்கொலை முயற்சி என்பதே ஒரு மனநலப் பாதிப்பின் அறிகுறிதான்.

l இவர்களுக்குப் பெற்றோரின் ஆறுதலும் அரவணைப்பும்தான் முதல் தேவையே தவிர, தண்டனையும் கண்டிப்பும் அல்ல. பெற்றோருக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் தற்கொலை ஏற்கத்தக்க விஷயம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

(அடுத்த முறை: ஏன் இந்த அழுத்தம்?)

தமிழகத்தில் தற்கொலைத் தடுப்பு இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் முன்னோடி அமைப்பு சிநேகா. இந்த நிறுவனத்தின் தொலைபேசி உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்: 044-2464 0050, 044-2464 0060. நேரடியாகக் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை ஆலோசனை பெறலாம். முகவரி: சிநேகா, 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028 / www.snehaindia.org

மின்னஞ்சல் தொடர்புக்கு: help@snehaindia.org

இலவச ஆலோசனை

புதுச்சேரியில் தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பு மைத்ரேயி. தொலைபேசி எண்: 0413-2339999, மின்னஞ்சல் முகவரி: bimaitreyi@rediffmail.com. நேரடியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை அணுகலாம். முகவரி: மைத்ரேயி, 225, தியாகமுதலி தெரு, புதுச்சேரி - 615001

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

பெண்கள் கிண்டலுக்குரியவர்களா? by அரவிந்தன்

Return to frontpage

இன்றைய காலகட்டத்தின் நியதிக்கு உட்பட்டு நானும் வாட்ஸ்அப் குழுக்கள் சிலவற்றில் சேர்க்கப்பட்டிருக்கிறேன். Literary & Intellectuals என்றொரு குழு அதில் உண்டு. பல்வேறு செய்திகள், கட்டுரைக்கான இணைப்புகள், குறிப்புகள் ஆகியவற்றுடன் சில சமயம் நகைச்சுவைத் துணுக்குகளும் அதில் பரிமாறிக்கொள்ளப்படும். அதில் அண்மையில் ஒரு நகைச்சுவைத் துணுக்கு வந்திருந்தது. ஒரு மனைவியின் பிறழ் நடத்தையை வைத்து உருவாக்கப்பட்ட துணுக்கு.

இந்தத் துணுக்கைப் பார்த்ததும் “பெண்களை இழிவுபடுத்தும் நகைச்சுவைத் துணுக்குகளைத் தவிர்க்கலாமே” என்று அதற்குப் பதில் எழுதினேன். அந்தத் துணுக்கைப் பதிவிட்டிருந்த நண்பர் அப்படிச் செய்தது தவறுதான் என ஒப்புக்கொண்டார். “ஆனால், எல்லா ஜோக்குகளும் யாராவது ஒருவரை இழிவுபடுத்துபவைதானே?” என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். “பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் வரலாறு கொண்டவர்கள் நாம். இனிமேலாவது அதற்குப் பிராயச்சித்தம் செய்வோம்” என்று பதில் எழுதினேன்.

ஆதரித்து ஒரு செய்தி

சில வாரங்களுக்கு முன்பு வேறொரு குழுவில் (இது எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் குழு) பெண்களைக் கேலி செய்யும் வேறொரு துணுக்கு பதிவிடப்பட்டிருந்தது. அப்போதும் நான் எதிர்க் குரல் எழுப்பினேன். பதிவிட்டவரிடமிருந்து அதற்குப் பதில் வரவில்லை. குழுவில் இருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து என்னை ஆதரித்து ஒரு செய்தி வந்தது.

நண்பர் சொன்னது ஒரு விதத்தில் சரிதான். நகைச் சுவைத் துணுக்கு என்பதே ஒருவரின் அசட்டுத்தனம், முட்டாள்தனம், அபத்தம், பிறழ் நடத்தை ஆகிய எதையேனும் பகடிசெய்து சிரிப்பதுதான். யாரையும் சற்றேனும் நெளியவைக்காமல் நகைச்சுவை, கிண்டல், கேலி ஆகியவை இருக்க முடியாது. இது அளவோடு இருக்கும்வரை பரவாயில்லை. எல்லை மீறிப் புண்படுத்தும் அளவுக்கு இது செல்லக் கூடாது. ரசனையும் நாசூக்கும் கொண்ட நகைச்சுவைத் துணுக்குகள் அவற்றுக்கு இலக்காகுபவர்களையும் மனம்விட்டுச் சிரிக்கவைத்துவிடும். எல்லை மீறும் துணுக்குகள் அவமானத்துக்கு உள்ளாக்கும்.

பெண்களைப் பற்றிய துணுக்குகள் பெரும்பாலும் இரண்டாவது ரகத்திலேயே இருப்பதுதான் சிக்கல். பெண்கள் மீதான ஈர்ப்பும் இளக்காரமும் ஒருங்கே கொண்ட ஆண்கள், பெண்களைப் பற்றிய தங்கள் மனப் பிறழ்வுகளைப் பழமொழிகள், நகைச்சுவைத் துணுக்குகள் எனப் பல விதங்களிலும் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள். பெண்களைப் பற்றிய மேலோட்டமான, ஒருதலைப்பட்சமான விமர்சனமே இந்தக் கேலிகளின் அடிப்படை. மேற்படிக் குழு ஒன்றில் பகிர்ந்துகொள்ளப்பட்ட துணுக்கு ‘ஓடிப் போன’ பெண் பற்றி ஒரு கணவனின் பார்வையாக வெளிப்பட்டிருக்கிறது. பெண்களை இலக்காக்கும் எல்லாத் துணுக்குகளிலும் இதுபோன்ற போக்கைக் காணலாம்.

ஏன் பெண்களை, அதிலும் மனைவியரைக் குறிவைத்தே அதிகத் துணுக்குகள் உருவாக்கப்படுகின்றன? ஆண்கள் அபத்தம், முட்டாள்தனம், பிறழ் நடத்தை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்களா? ஆண்களைக் கேலிசெய்யும் துணுக்குகள் ஆணை / கணவனைப் பொதுமைப்படுத்திப் பேசுவதில்லை. தொழில், ஊர், மதம் ஆகிய பிரிவுகளுக்குள் ஆணைச் சித்தரித்துக் கேலி செய்கின்றன. கேலிக்குரியவர் ஆண் என்றால், அவர் பொதுவாக டாக்டர், வக்கீல், மேனேஜராக இருப்பார். கேலிக்குரியவர் பெண் என்றால், பொதுவாக மனைவி, மாமியார் அல்லது அம்மா பாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டுப் பரிகசிக்கப்படுவார். அல்லது

`வேலைக்காரி ஜோக், நர்ஸ் ஜோக்'. ஒரு கணவன் அல்லது ஒரு ஆண் என்று குறிப்பிட்டு ஆணைப் பொதுவாகக் கேலிசெய்யும் துணுக்குகள் முதலமைச்சரின் பேட்டி போலவே அரிதானவை. ஆண்கள் அல்லது கணவர்கள் கேலிக்குரியவர்கள் இல்லையா?

கைபேசியில் இடம் பொருள் ஏவல் அறியாமல் சத்தமாகப் பேசும் கணவன்மார்களைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொள்ளும் மனைவிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மனைவியுடன் போய்க்கொண்டிருக்கும்போதும் வெட்கமில்லாமல் பிற பெண்களைப் ‘பராக்கு’ பார்க்கும் ஒரு ஆண், தன் மனைவி மீது பிற ஆண்களின் கண் பட்டால் ரோஷப்படும் அபத்தமும் அன்றாடம் அரங்கேறத்தான் செய்கிறது. நடுத்தர வயதைத் தாண்டிவிட்ட கணவன்கள், எதிர் வீட்டுக்குப் புதிதாகக் குடிவரும் கல்லூரிப் பெண்ணைப் பார்த்து அசடுவழியும் அற்பத்தனமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ‘குடும்பத் தலைவர்’களான கணவன்களுக்கு ‘ஓடிப் போக’ வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பிறழ் உறவுகளுக்கும் சில்லறைச் சபலங்களுக்கும் பஞ்சமே கிடையாது. மாட்டு வண்டியே தன்னைக் கடந்துபோனாலும் கவலைப்படாத ஆண் சிங்கங்கள், ஒரு பெண்ணின் இரு சக்கர வாகனம் கடந்து சென்றுவிட்டால் அவமானமடைந்து ஆக்ஸிலேட்டரைத் திருகும் கேலிக்கூத்தும் சாலைகளில் அன்றாடக் காட்சிதான். பொது இடம் என்றும் பாராமல் கிடைக்கிற சந்துகளுக்கெல்லாம் சிறுநீர் அபிஷேகம் நடத்தும் ஆண்களை எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். சாலைகளில் (சிகரெட்) புகை மண்டலப் பூஜை நடத்திப் பிறரைத் துன்புறுத்துவதும் பல ஆண்களுக்கு வாடிக்கைதான். இதையெல்லாம் பரிகசித்து, நாகரிகம் இல்லாத ஆண் அல்லது விவஸ்தையற்ற கணவன் என்னும் பொதுப் பாத்திரத்தை முன்வைத்துத் துணுக்குகள் அதிகம் வருவதில்லை.

`பெண்டாட்டிக்குப் பயப்படும் கணவன்' ஜோக் மட்டுமே வருகிறது. யதார்த்தத்துக்குப் புறம்பான இதை விட்டுவிட்டால் கணவன் பாத்திரம் பொதுவாக கிண்டலடிக்கப்படுவதில்லை.

இதே ஆண்கள் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பெண்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். சிறுமிகள் முதல் மூதாட்டிகள்வரை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை வரையறுக்கிறார்கள். அவர்கள் எங்கே, எப்போது, எப்படிப் போகலாம் அல்லது போகக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முயல்கிறார்கள். குடும்பத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் “பொம்பள சரியில்ல, அதான் காரணம்” என்று கூசாமல் சொல்கிறார்கள். பொது வாழ்வில் வெற்றிபெறும் பெண்கள் மீது வெட்கமின்றி அவதூறு சுமத்துகிறார்கள். இதெல்லாம் போதாதென்று, அவர்களைப் பரிகசித்து நகைச்சுவைத் துணுக்குகளையும் அள்ளிவிடுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒன்றுதான்: பெண்களை இழிவாக, இளக்காரமாக, இரண்டாந்தர மனிதர்களாகப் பார்க்கும் போக்கு.

தொடரும் அசிங்கம்

ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இந்தச் சமூக அமைப்பு, பெண்களுக்கு இழைத்துவரும் அநீதிகளில் ஒன்றாகவே இந்தத் துணுக்குகளையும் பார்க்க முடிகிறது. வீடுகளிலும் பத்திரிகை, நாடகம், திரைப்படங்கள் ஆகியவற்றிலும் இவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி ரசிப்பதன் மூலம், ஆண் சமூகம் இவற்றை சகஜப்படுத்திவைத்திருப்பது இந்தத் துணுக்குகளைக் காட்டிலும் கொடுமையானது. உடன்கட்டை ஏறுதல், விதவைகளை முடக்கிவைத்தல், கல்வி மற்றும் சொத்துரிமையை மறுத்தல் போன்ற குற்றங்களுக்குப் பரிகாரம் கண்டதுபோலவே ஆண் உலகம் இதற்கும் பரிகாரம் காண வேண்டும்.

முதலாவதாக, நீண்ட காலமாகத் தொடரும் இந்த அசிங்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அடுத்தபடியாக, ஆண்கள் தங்களைப் பரிகசிக்கும் நகைச்சுவைத் துணுக்குகளை உருவாக்கிப் பெருமளவில் உலவவிடலாம். மிஸ்டர் எக்ஸ் என்ற பாத்திரத்தை வைத்துத் துணுக்குகள் வந்ததுபோல ‘அசட்டுக் கணவன்’ அல்லது ‘அலட்டல் பையன்’ என்னும் பாத்திரத்தை வைத்துத் துணுக்குகளை ஆண்களே உருவாக்கலாம். பெண்களும் அதில் பெருமளவு உதவலாம். வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் இவற்றைப் பகிர்ந்துகொண்டு கைகொட்டிச் சிரிக்கலாம். பெண்களைக் கேலிப்பொருளாக்கியதற்கான பிராயச்சித்தத்தைச் சிரித்துக்கொண்டே தொடங்க இது நல்ல வழியாக இருக்கும்.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

4G-ஐ விட வேகமான 40 ஆயிரம் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகளை இந்தியா முழுவதும் நிறுவுகிறது பி.எஸ்.என்.எல்

இந்தூர்,

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நாடு முழுவதும் 40 ஆயிரம் வை-ஃபை ஹாட் ஸ்பாட்டுகளை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது. 4G இண்டர்நெட் சேவையை வழங்க போதுமான வசதிகள் இல்லாததால் அதை சமாளிக்கும் வகையில் இந்த வசதியை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வை-ஃபை ஹாட் ஸ்பாட்டு இண்டர்நெட் வசதி 4G-ஐ விட வேகமானது. இதுவரை 500 ஹாட் ஸ்பாட்டுகளை நிறுவியிருப்பதாகவும், இந்த ஆண்டு முடிவுக்குள் 2,500 ஹாட் ஸ்பாட்டுகளை நாடு முழுவதும் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதுதவிர, தொலைதொடர்பு சேவையை அதிகரிக்க 25 ஆயிரம் புதிய மொபைல் டவர்களை நிறுவவும் முடிவு செய்துள்ளது பி.எஸ்.என்.எல்.

இலவசங்கள், மானியங்கள் வேண்டாம்!

logo


ஒருமாத காலமாக கனமழையால் தத்தளித்த தமிழ்நாட்டில், இப்போது அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மே மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதையொட்டி, ஒவ்வொரு கட்சியுமே, இப்போதே ‘கோதாவில்’ இறங்க தயாராகிவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் அடுத்த கட்சித்தலைவர்களை குறிவைத்து அறிக்கைககள் விடத்தொடங்கிவிட்டனர். முதல்–அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ம.க. அறிவித்துவிட்டது. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணியை அமைத்துவிட்டது. பா.ஜ.க.வை பொருத்தமட்டில், எங்கள் கூட்டணி அப்படியே இருக்கிறது என்று சொன்னாலும், அதில் சலசலப்பு இருப்பது தெரிகிறது. அடுத்து தி.மு.க. கூட்டணியில் யார்–யார் இடம்பெறப்போகிறார்கள்? என்பது ஒரு எதிர்பார்ப்பு. அ.தி.மு.க.வை பொருத்தமட்டில், பாராளுமன்ற தேர்தலைப் போல தனித்து போட்டியிடுமா?, அல்லது கூட்டணி வைக்குமா? என்று ஏற்பட்டுள்ள சந்தேகத்துக்கு விடையளிக்கும் வகையில், சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவு எடுப்பேன் என்று பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா அறிவித்து விட்டார். விரைவில் ஒரு தெளிவான நிலை ஏற்பட்டுவிடும்.

இந்த பிரச்சினைகளில் எல்லாம் ஒரு தெளிவு ஏற்பட்டவுடன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதைச்செய்வோம், இதைச்செய்வோம், இதைத்தருவோம், அதைத் தருவோம் என்று இலவசங்கள், மானியங்கள் பட்டியல் அடுக்கடுக்காக வரப்போகிறது. ஆனால், உழைப்பே உயர்வுதரும் என்று வாழும் இந்த தமிழ்நாட்டில், 45 ஆண்டுகளுக்கு மேலாக ஓசியே, மானியங்களே, சுகம் தரும் என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. உழைத்து சம்பாதிக்கவேண்டிய வயதில், ஓசிகளை வாங்கியே வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற ஒரு சோம்பேறித்தனமான எண்ணம் ஆழமாக வேரூன்றிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு நிச்சயமாக இதுபோன்ற எண்ணங்கள் பயனளிக்காது. முன்னுக்கு செல்லவேண்டிய தமிழ்நாட்டை பின்னுக்கு இழுத்துவிடும்.

தமிழ்நாட்டில், அரசின் மொத்த வருவாயில் 41 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காகவும், பென்சனுக்காகவும் சென்றுவிடுகிறது. 40 சதவீத வருவாய் அரசு வழங்கும் மானியங்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் சென்றுவிடுகிறது. வருகிற மார்ச் இறுதியில் தமிழக அரசின் மொத்தக்கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 ரூபாயாக இருக்கும். இந்த கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டிக்காக 12 சதவீதம் சென்றுவிடுகிறது. வருவாயின் இவ்வளவு தொகை இந்த 3 இனங்களுக்கு மட்டுமே சென்று விட்டால், எப்படி வளர்ச்சித் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கமுடியும்? அரசு இனிமேலும் கடன்வாங்கி காலத்தை தள்ளமுடியாது. ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைத்து, மேலும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினால்தான் மாநிலம் வளர்ச்சியை காணமுடியும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 87 லட்சத்தை நெருங்கிவிட்டது. ஆக, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி, உட்கட்டமைப்பு வசதிகள், தொழில்வளர்ச்சி, விவசாய வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேர்தல் அறிக்கை வரவேண்டுமே தவிர, இலவசங்கள், மானியங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி, நாட்டை பின்னுக்கு தள்ளக்கூடிய தேர்தல் அறிக்கை தேவையில்லை என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

குஜராத்தில் முதல்–மந்திரியாக இருந்த நரேந்திரமோடி, ஒருபோதும் இலவசங்களை அறிவித்து ஓட்டு கேட்கவில்லை என்று பெற்ற பெயரை, வருகிற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் அதைப்போல அறிவித்து, நற்பெயரை பெறவேண்டும். இறக்கம் தரும் இலவசங்கள், மானியங்கள் வேண்டாம். ஏற்றம் தரும் வேலைவாய்ப்புகளை தந்தால், அவர்களே உழைத்து சம்பாத்தியம் செய்துக் கொள்வார்கள்.

Monday, January 4, 2016

ஏரியை ஆக்கிரமித்தால் தட்டி கேளுங்கள்: ஐஏஎஸ் அதிகாரி அமுதா வலியுறுத்தல்

Return to frontpage

மழை வெள்ள மீட்பு பணிக்கான சிறப்பு அதிகாரி அமுதா ஐஏஎஸ்: நமது உடலில் உள்ள நீர் மற்றும் மலம் எங்கும் ஒன்றாக சேராது. இரண்டும் தனித்தனியாகத் தான் உடலில் இருந்து வெளியேறும். இயற்கை அப்படித்தான் நம்மை படைத்துள்ளது. வெளியே வந்ததும் நாம் ஒன்றாக சேர்த்துவிடுகிறோம். அதன்பின் அதனை பிரிக்க செலவு செய் கிறோம். இயற்கை செய்தது போலவே நாமும் செய்தால் கோடிக் கணக்கான பணம் மிச்சம் ஆகும்.

மாற்றம் மனதளவில் நம்மிடையே வரவேண்டும். அந்த மாற்றம் உள்ளிருந்து வரவில்லை என்றால், இதுபோன்ற பேரழிவுகள் வந்து கொண்டே இருக்கும். நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் எங்கு தேங்குமோ அங்குதான் தேங்கும். நாம் அங்கு சென்று வீடுகளை கட்டிவிட்டு தண்ணீர் தேங்குகிறது என்று சொன்னால் அது நம்முடைய குற்றம். தண்ணீரோட குற்றம் இல்லை. நீர் மேலாண்மையில் நம்முடைய முன்னோர்கள்தான் உலகத்துக்கே முன்னோடி.

ஆறு, ஏரி, கலங்கல், மதகு, குட்டை, தாங்கல் என்று அந்த காலத்தில் இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,200-க்கும் மேல் ஏரிகள் இருந்துள்ளன. எப்படி திட்டமிடப்பட்டதோ அதேபோல் கடந்த 20, 30 ஆண்டுகளில் திட்டமிட்டு அழித்துவிட்டோம். ரியல் எஸ்டேட் மூலம் நிறைய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் அரசு தான் காரணம் என்கிறார்கள். நம்முடை யது ஜனநாயக நாடு. நாம்தான் அரசு. நாம் எல்லாவற்றையும் விட்டு விலகியிருக்கிறோம்.

சிலர் தவறு செய்யும் போது, அதனை தட்டிக்கேட்டு நிறுத்தாததால் எல்லோரும் கஷ்டப்படுகிறோம். ஒரு ஏரியில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்யும் போதோ அல்லது வீடு கட்டும் போதோ தட்டிக்கேட்க வேண்டும். நமக்கு சொந்தமான ஏரி, வாய்க்கால், நீர்நிலைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும். மக்கள் சக்திக்கு முன்னால் எதுவும் ஒன்றுமில்லை.

முதல் மழைக்கும் இரண்டாவது மழைக்கும் இடைப்பட்ட காலத்தில் அடையாறை 30 மீட்டரில் இருந்து 60 மீட்டருக்கு ஆழப்படுத்தினோம். முன்னதாக அங்கிருந்த 127 குடும்பங்களை உடனடியாக அரசுசின் உத்தரவு வாங்கி பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்றினோம். அந்த குடும்பங்களுக்கு வீடு கிடைத்ததால் சந்தோஷமாக இருக் கிறார்கள். அடையாறை ஆழப் படுத்தியதால் 5 ஆயிரம் குடும்பங் கள் காப்பாற்றப் பட்டுள்ளனர்.

மக்கள் நியாயமான எந்த செயலாக இருந்தாலும் ஆதரவு தருவார்கள். மக்கள் நல்லவர்கள். சுனாமி, தானே, வெள்ளம் வரும்போது மட்டும் மனிதாபிமானத்தை காட்டக் கூடாது. அது எப்பவும் இருக்க வேண்டும். அரசு நல்ல படியாக செயல்பட வேண்டும் என்றால் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் முடியும். இந்த மழை வெள்ளம் நம்மை ஒன்று சேர்த்துள்ளது.

அரசு சொத்து எல்லாம் என்னுடைய சொத்து. பள்ளி, மருத்துவமனை, சாலை, தெரு விளக்கு என அனைத்தையும் நான் பாதுகாப்பேன். யாராவது சேதப்படுத்தினால் நான் தட்டிக்கேட்பேன் என்று இருக்க வேண்டும்.

பார்வை: ஆடையால் கெடுகிறதா புனிதம்?....அஜிதா



Return to frontpage

ஆடையால் நமது கோயில்களின் புனிதம் கெட்டுவிடுவதாகக் கருதி, இந்து சமய அறநிலையத் துறையின் சட்டத்தின் விதியை மேற்கோள் காட்டி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேசத்தையே உலுக்கிய நிர்பயா கொடூரத்துக்கும்கூட ஆடை பற்றிய கருத்துக்கள் வெளிவந்தன. ‘நிர்பயாவைப் போல இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் கவர்ச்சிகரமான உடையில் வெளியே போனால்…’ என்ற ரீதியில் வன்மமான கருத்துக்களைப் பேசியவர்களில் பலரும் நன்கு படித்த, வசதி வாய்ப்புள்ள நடுத்தர வர்க்கத்தினரே.

ராமாயண, மகாபாரதக் காலத்திலிருந்து இன்றுவரை பெண்களின் மீதான வன்முறைகளுக்குக் காரணம் பெண்தான் என்ற வன்முறைவாதம், வன்முறையாளர்களுக்கு மட்டுமே ஏற்புடைய ஒரு விஷயம், மக்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

சரி இப்போது ஆடைகளுக்கு வருவோம். “நமது கலாச்சாரம் காக்கப்பட வேண்டும்” என்கிற வாதத்தை எடுத்துக்கொள்வோம். நமது கலாச்சாரம் புடவை கட்டுதல், வேட்டி அணிதல் என்று வைத்துக்கொள்வோம். இன்றைக்கு 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் - பெண்களைத் தவிர புடவையும் வேட்டியும் மட்டுமே தமது உடை என்று கருதாதவர்கள் 90 சதவீதம் பேர்.

ஆண்களில் அதுவும் இல்லை. கிராமப்புறங்களைத் தவிர்த்து சிற்றூர், நகரங்கள் உட்பட 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பேண்ட் சட்டைதான் அணிகிறார்கள். வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வேட்டி கட்டுவது வழக்கத்தில் உள்ளது. எனவே, ‘நமது கலாச்சாரம்’ என்று கூறுவது வெகுவாக மாறிவிட்டது. 25-30 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடையில் ‘நமது கலாச்சாரத்தில்’ இல்லை என்பது நிதர்சனமான உண்மை. எனவே, வாழ்க்கையில், உடையில் ஏற்படும் மாற்றத்தை நீதித்துறை முதல் பள்ளி, கல்லூரிவரை ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு மாற்றத்துக்கு உள்ளாகிவிட்ட ஆடையைச் சட்டம் போட்டு, விதிகளைப் போட்டாலும் மாறுவது கடினம். அநாகரிகமாக இல்லை என்றால் ஏற்றுக்கொண்டு போக வேண்டும் என்பதுதான் நியதி.

“பிறர் கண்ணை உறுத்துவது போல் இருக்கக் கூடாது” என்று சொல்லப்படுகிறது.

பேசாமல் எல்லாரும் உடல் முழுக்க மூடும் புர்க்காவை அணிந்துவிட்டால் யார் கண்ணையும் உறுத்தாது. நமது சமூகத்திலேயே வாழும் இஸ்லாமிய சமூகத்தினர்கூட இதில் மாற்றம் வர வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால், எது எவர் கண்ணை உறுத்தும் என்ற கேள்விக்கு ஒரு விடை சாத்தியமில்லை. “சரி துப்பட்டாவைப் போடுங்கள், சுடிதாரை ஏற்றுக்கொள்கிறோம்” என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இது இன்றைக்குக் கோயில்களில் வைக்கப்படுவது மட்டுமல்ல. பல முன்னணிக் கல்லூரிகளில், ஏறக்குறைய எல்லாப் பொறியியல் கல்லூரிகளிலும் துப்பட்டாவை ஊக்கு போட்டு இருபக்கமும் ஆடையுடன் குத்திக்கொள்ள வேண்டும் என்று விதி இருக்கிறது. இது மார்பகங்கள் தெரியாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அன்றி வேறல்ல. ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு தாவணி போட வேண்டும் என்று 90-களுக்கு முன்பு இருந்த பள்ளிக்கூட விதிக்கு ஒப்பானது.

சமீபத்தில் நண்பர் ஒருவர் மிகவும் மனமொடிந்து கூறும்போது, முன்பெல்லாம் என் 11 வயது மகளை நான் சுதந்திரமாக உடுத்த அனுமதித்தேன். இப்போது நான் துப்பட்டாவைப் போட்டு மறைக்கும் விதமாக உடுத்தச் சொல்கிறேன் என்று கூறினார். ஏனெனில், பக்கத்து வீட்டுக்காரரின் பார்வை சரியில்லாமல் இருக்கிறது என்று வேதனையுடன் கூறினார். இதே தந்தையின் வேதனையை, சமீபத்தில் தீர்ப்பெழுதிய நீதித்துறையின் மனநிலையோடு ஒத்ததாக இருக்கும் என்று கருத முடியுமா? முடியாது. ஏனெனில் இவர்களுடைய நோக்கம் வக்கிரப் பார்வையுடன் பார்க்கும் ஆணின் கண்களிலிருந்து பெண்ணைக் காப்பாற்றுவது அல்ல. மாறாக, பெண்ணின் உடையால் ஆணின் மனது (சமூகம்) வக்கிரப்படக் கூடாது என்பதும், இதுபோன்ற வக்கிரமான உடையால் கோயிலின் புனிதம் கெடக் கூடாது என்பதும்தான். எப்படிப்பட்ட அணுகுமுறைக் கோளாறு இது? எப்படிப்பட்ட கருத்து வக்கிரம் இது?

உண்மையில் ஆண் மனது பெண்ணின் அங்க அவயங்களைப் பார்த்தால் உணர்ச்சி தூண்டப்பட்டு, வன்முறை புரிய இடமளிக்கும் என்று கருதுகிறதா இந்தத் தீர்ப்பும் சுற்றறிக்கையும்? உண்மையில் நமது இளைஞர்கள் அப்படி இல்லை என்பதுதான் நிஜம். அப்படிப்பட்ட உணர்வுரீதியாகப் பண்படாத ஆண்கள் இருக்கும்வரை இந்தச் சமூகம் எப்படி வளரும்? அப்படியானால் ‘பெண்களின் உடையால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகின்றன’, ‘பெண்கள்தான் அவர்கள் மீதான வன்முறைக்கு காரணம்’ என்ற கருத்துகளும் சரிதானோ? நிர்பயா குற்றவாளி சொன்னதுபோல், அவ்வளவு எதிர்ப்பு காட்டாவிட்டால் அவ்வளவு வன்முறை நடந்திருக்காது என்று ‘இந்தியாவின் மகள்’ விவரணப் படத்தில் அவன் பேசிய வார்த்தைகளின் மற்றொரு பரிமாணம்தானா இந்தச் சமீபத்திய தீர்ப்பும் சுற்றறிக்கையும் என்று நாம் யோசிக்க வேண்டியுள்ளது. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்? என்ன விதமான பொய்மைகளில் பெருமை கொள்கிறோம் நாம் என்று யோசிக்க வேண்டும்.

கோயில்களின் புனிதத்தை ஆடைகள் கெடுக்க முடியுமா ?

கோயில்களின் புனிதம் உள்ளுறை தெய்வங்களால் ஏற்பட்டதா? அந்த தெய்வங்களைக் கும்பிட வரும் மனிதர்களால் ஏற்பட்டதா? ஒரு புனிதமான கோயிலுக்குள் நூறு பாவங்களைச் செய்த பாவிகள் வருகிறார்கள். மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கொடியவர்கள் வருகிறார்கள். பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிகள் வருகிறார்கள். மனத்தில் இருளையும், செயல்களில் கயமையும் வைத்துள்ளவர்கள் வருகிறார்கள். அதனால் கெடாத கோயில்களின் புனிதம் பெண்கள் உடையால் ஆண்களின் அரைக் கால் சட்டைகளால் கெடுவதாகக் கூறுகிறீர்களே, நீங்கள் கடவுளின் புனிதம் குறித்தும் கடவுள் உறையும் கோயில்களின் புனிதம் குறித்தும் இவ்வளவுதான் உணர்ந்துள்ளீர்களா?

ஒவ்வொரு மதமும் பற்றற்று இருப்பதையே தமது மத தத்துவத்தின் அடி நாதமாகக் கொண்டுள்ளது. ஆகவே, பெண்ணின் உடைக்குக் கட்டுப்பாடு போட்டு ஒழுக்கத்தைக் கொண்டுவரப் பார்ப்பது மாட்டுக்கு முன்னால் வண்டியைக் கட்டும் வேலை. இத்தகைய சமூகம் முன்னே செல்லாது.

- கட்டுரையாளர், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

நாஞ்சில் சம்பத் சறுக்கல்: கட்சியின் குரல்களும் கேள்விகளும்!

Return to frontpage

ப.கோலப்பன்


தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சி செய்தித் தொடர்பாளரின் பொறுப்பு மிகவும் சவாலானது. அது முழுக்க முழுக்க கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக் கீழ் உள்ள பதவியாகும்.

நாஞ்சில் சம்பத் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டு தனியார் தொலைக்காட்சிகளில் அடுத்தடுத்து அவர் அளித்த பேட்டிகளே இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் எதிர்கொண்டுள்ள சவால் எவ்வளவு சிக்கலானது என்பதை நாம் சற்றே ஆழமாக அலசுவோம். ஒவ்வொரு கட்சியின் செய்தித்தொடர்பாளரும் கம்பியின் மீது நடந்து வித்தை காட்டும் நபரைப் போலவே ஆட்டுவிக்கப்படுகிறார் என்றால் அது மிகையாது.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சி செய்தித் தொடர்பாளரின் பொறுப்பு மிகவும் சவாலானது. அது முழுக்க முழுக்க கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக் கீழ் உள்ள பதவியாகும். அதேபோல், கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்படும் பதவியும் கூட. கட்சியின் மேடை பேச்சாளருக்கும், செய்தித் தொடர்பாளருக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.

கட்சி செய்தித்தொடர்பாளர் உதிர்க்கும் வார்த்தைகள் தலைமையின் மனதில் உள்ளவையாக இருக்க வேண்டும். அதே வேளையில் கட்சியின் கொள்கையை எடுத்துரைப்பதாகவும் இருக்க வேண்டும். ஒரு மெலிசான கோட்டின் மீது நிற்பது போன்றது. ஆனால், கட்சியின் மேடை பேச்சாளருக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை.

இத்தகைய மெலிசான கோட்டில் பயணித்தபோது, கட்சி தலைமையை பாதுகாக்க முயன்றபோது நாஞ்சில் சம்பத் சறுக்கியிருக்கிறார். வெள்ளத் துயரத்தில் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் தேவையா என்ற கேள்விக்கு 'ஒப்பாரி சத்தம் கேட்கிறது என்பதற்காக திருமணத்தை நிறுத்த முடியுமா' என்ற சர்ச்சை கேள்வியை கேட்டு சறுக்கியிருக்கிறார்.

1990-களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக ஞானதேசிகன் அக்கட்சியின் தலைவர் மூப்பனாரால் நியமிக்கப்படும் வரை தமிழக அரசியல் வட்டாரத்தில் செய்தித் தொடர்பாளர் என்றொரு பதவியும், சொல்லும் புதிதாகவே இருந்தது.

திராவிட அறிஞர் திருநாவுக்கரசு செய்தித் தொடர்பாளர் பதவி குறித்து கூறும்போது, "கட்சிக்காக செய்தித் தொடர்பாளரை நியமிக்கும் வழக்கம் டெல்லியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். தமிழக அரசியலில் இத்தகைய கலாச்சாரமே இல்லை. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டங்கள் மூலமாக மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தனர். இல்லாவிட்டால் ஊடகங்கள் வாயிலாக மக்களுடன் தொடர்பில் இருந்தனர்" என்றார்.

ஆனால், டெல்லி அரசியல் வட்டாரத்தில் உள்ள செய்தித் தொடர்பாளர்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக தெரிவிக்க முடியும். ஆனால், தமிழக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் தாங்கள் பேசவிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் நிதானித்துப் பேச வேண்டும். ஒரு வார்த்தை தவறினால்கூட கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரும்.

திமுக தலைமையின் கருத்துடன் ஒத்திராத கருத்துகளை தெரிவித்ததற்காக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

டி.கே.எஸ்.இளங்கோவன் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வேலையை பல ஆண்டுகளாக செய்துவந்தாலும் கடந்த ஆண்டுதான் அவர் முறைப்படி அப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் செய்தித்தொடர்பாளர் பதவி குறித்து அவர் கூறும்போது, "ஒரு செய்தித்தொடர்பாளர் ஒவ்வொரு பிரச்சினையிலும் கட்சித் தலைமையின் நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல், கட்சியின் கொள்கையையும், கட்சியின் திட்டங்களையும் நன்றாகவே புரிந்து வைத்திருக்க வேண்டும். பிரச்சினைகளில், என்னுடைய சொந்த கருத்துகளை தெரிவித்தபோது மட்டுமே கட்சித் தலைமையால் நான் கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன்" என்றார்.

சேட்டிலைட் சேனல்களும், செய்தித்தாள்களும் புற்றீசல் போல் பெருகிவிட்ட சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க செய்தித்தொடர்பாளர்களை நியமிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு விதிவிலக்காக தேமுதிக மட்டும் திகழ்கிறது.

செய்தித் தொடர்பாளர் பணியை எப்படி நேர்த்தியாக செய்யலாம் என ஞானதேசிகன் கூறும்போது, "கட்சித் தலைமையின் மனநிலை குறித்த தெளிவான புரிதலும், கட்சி பயணிக்கும் திசையை நன்கு உணர்ந்திருந்தாலே இப்பதவியை செவ்வனே செய்யலாம். மூப்பனார், எனக்கு நல்ல சுதந்திரம் அளித்திருந்தார். 1998-ல் ஐக்கிய முன்னணியில் எங்கள் கட்சி வெளியேறுவதையே நான்தான் அறிவித்தேன்" என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தபோதும் சரி தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருக்கும்போதும் சரி பல்வேறு சவால்களை சந்தித்திருப்பதாக கூறுகிறார் கோப்பண்ணா. அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்பது என்பது முகவும் கடினமாக பணியே என அவர் கூறியுள்ளார்.

NAAC report goes missing in Barkatullah University?



The Times of India
TIMES OF INDIA

BHOPAL: Even after failing to improve its NAAC grading, Barkatullah University (BU) authorities seem to have adopted a casual approach towards it.

Sample this: After last year's NAAC accreditation, the inspection team had given a report to BU to make improvements in different university teaching departments (UTDs). However, UTDs are yet to receive the report even when the VC office had got it almost six months back. The UGC has made NAAC mandatory for every university and college to take accreditation. BU has been receiving B grade during last two accreditations. Educational institutions are graded under four categories which are A, B, C and D, denoting very good, good, satisfactory and unsatisfactory levels, respectively.


Pleading anonymity, a senior BU officer, said, "After every grading the inspection team submits a report to the vice-chancellor. This report carries feedbacks and suggestions by the team to improve the respective areas where they find bottlenecks. After receiving the report, the VC sends it to the concerned departments where NAAC suggested improvements. On the basis of this report, departments make improvements to get better grading in next inspection." However, the BU authorities apparently forgot to provide the report, having feedback, to the departments.



Sources said that in such a situation, BU will not be able to improve its accreditation in the next inspection. "Every department needs time to make improvement according to the NAAC report. If they don't get it on time then it won't be possible for them to do it," said a head of the department, without quoting his name.



When contacted, BU vice-chancellor Prof MD Tiwari, admitted that the report was received after NAAC inspection last year. He rubbished speculations that the report has gone missing. "The report is in the office and will be provided to the departments over the next couple of days," he said.



National Assessment and Accreditation Council (NAAC) is an autonomous body established by the UGC to assess and accredit institutions of higher education in the country. It is an outcome of the recommendations of the National Policy in Education (1986), which laid special emphasis on upholding the quality of higher education in India. NAAC was established in 1994 with its headquarters at Bangalore.




Share to Twitter

சொல்லிக் கொடுக்காத கல்வி!

Dinamani


By உதயை மு. வீரையன்

First Published : 02 January 2016 01:00 AM IST


அண்மைக்காலமாக நிகழும் சம்பவங்களும், அது பற்றி வரும் செய்திகளும் மனதிற்குக் கவலையைத் தருகின்றன. நாட்டு நலனில் ஆர்வமும், சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையும் கொண்டவர்களுக்கு அத்தகைய வருத்தம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சியில்தான் நாடும் இருக்கிறது; நாமும் இருக்கிறோம். அதற்குத் தளர்ச்சி ஏற்படுமானால் என்ன செய்வது?
நாடெங்கும் கடந்த ஆண்டில் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இத் தகவலை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தம் தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் 7,753 மாணவர்களும், யூனியன் பிரதேசங்களில் 315 மாணவர்களும் என மொத்தம் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதில் அதிகப்படியாக மகாராஷ்டிரத்தில் 1,191 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 853 பேரும், மேற்கு வங்காளத்தில் 709 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.
மாணவர் தற்கொலையில் மட்டுமல்லாமல் விவசாயிகள் தற்கொலையிலும் மகாராஷ்டிரம் முதலிடம் பெறுகிறது. கடந்த 14 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 17,276 என்று மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது.
விவசாயிகளின் தற்கொலையை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அதற்குக் கூடுதலான காரணங்கள் இருக்கின்றன. வேளாண்மையில் ஈடுகட்ட முடியாத இழப்பும், கடன் தொல்லையும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. "மேழிச் செல்வம் கோழை படாது' என்று கூறப்பட்டாலும், அதையும் மீறி மானமே பெரிதென எண்ணும் மறவர் பெருங்குடி இவ்வாறு மரணத்தைத் தழுவுவது வேதனையானது.
எல்லாம் சரி, சிறகடித்துப் பறக்க வேண்டிய வயதில் இந்த மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? படிப்பைத் தவிர வேறு நெருக்கடிகள் ஏதும் உண்டா? இல்லை, படிப்பே ஒரு நெருக்கடியாகிப் போனதா? இதுபற்றி இந்தச் சமுதாயம் கவலைப்பட வேண்டாமா?
"பள்ளிப் படிப்பு கூழாங்கற்களுக்கு ஒளியேற்றும்; வைரங்களை ஒளி மழுங்கச் செய்யும்' என்ற மேலை நாட்டு அறிஞனின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன. இதனையே நமது நாட்டுப்புற மக்கள், "பள்ளிக் கணக்கு புள்ளிக்கும் உதவாது' என்று கூறிச் சென்றுள்ளனர். என்றாலும், அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே'
என்று நமது நீதி நூல் கூறுகிறது.
சங்க இலக்கியமாகிய புறநானூறு கல்வியின் பெருமையைப் போற்றிப் பாடு
கிறது. அதன் தேவையையும் எடுத்துப் பேசுகிறது.
"உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே'
பல பிள்ளைகளைப் பெற்ற தாயும் கல்வியில் சிறந்தவனையே விரும்புவாள். ஒரே குடியில் பிறந்த பல பிள்ளைகளுள் கல்வி கற்காத மூத்தவனை அரசன் மதிக்க மாட்டான். இளையவனாயினும் கற்றவனையே மதிப்பான்.
வேறுபாடுடைய நால்வகைக் குலத்துள் கீழ் நிலையிலுள்ள ஒருவன் கல்வி கேள்விகளில் வல்லவன் ஆயின் மேல்நிலையிலுள்ளவனும் அவனை மதித்து மரியாதை செய்வான் என்று அக்காலத்திலேயே பாடப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட கல்வியைப் பயிலும் இக்கால மாணவர் சமுதாயம் வாழ்க்கையை ஏன் வெறுக்க வேண்டும்? உயிர் வாழ ஆசைப்பட வேண்டிய வயதில் தற்கொலையைத் தேர்வு செய்வதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா?
மாணவர்களுக்கு மன அழுத்தமும், மனச்சோர்வும் ஏற்படுவதற்குக் காரணம் கல்வி வணிகமாக மாறியதுதான் என்று கல்வியாளர்களும், உளவியல் வல்லுநர்களும் கூறுகின்றனர். "மாதா பிதா குரு தெய்வம்' என்ற நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
கல்வி என்பது மனவளமும், பண்பாடும், ஒழுக்கமும் கற்றுத் தருவதுதான் என்ற நிலை மாறி, கல்வி என்பது பணம் பண்ணுவதற்கான புதிய கருவி என்ற நிலை உருவாகிவிட்டது. கல்வி இப்போது கடைச்சரக்காகி விட்டது. முயற்சியும், உழைப்பும் இல்லாமல் வாங்கும் பொருளாக நிலை தாழ்ந்துவிட்டது.
பெற்றோரின் பேராசைக்குத் தீனி போடும் நிலையங்களாகத் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக கசக்கிப் பிழியப்படுகின்றனர்.
அவர்கள் விரும்பாத பாடத்தை பெற்றோரின் கட்டாயத்துக்காகப் படிக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் இளமைக்கால விளையாட்டு வாழ்க்கையே பறிக்கப்படுகிறது. அவர்களது சிரிப்பும், கும்மாளமும் எங்கே போனது?
இப்படிப்பட்ட பெற்றோர்களுக்காகவே கவிஞர் கலீல் கிப்ரான் கூறுகிறார். "உங்கள் குழந்தைகளிடம் அன்பைக் கொடுங்கள். உங்கள் எண்ணத்தை விதைக்காதீர்கள். அவர்கள் தங்கள் எண்ணத்துடன் வளரட்டும்'.
அவர்களது குழந்தைகளாகவே இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் திணிப்பது வன்முறையேயாகும். வன்முறைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிள்ளைகள் சுதந்திரமாக வளர்வதைப் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.
ஆண்டுதோறும் மாணவர்கள் தேர்வின் தோல்வியால் மனமுடைந்து தற்கொலையை நாடுவோர் தொகை இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. கல்லூரிகளில் "ஈவ் டீசிங்' என்னும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். இவர்களில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் என்று கூறலாம்.
2012-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவி தைரியலட்சுமியின் சோகம் அனைவரும் அறிந்ததுதான். தமிழ்வழியில் படித்து 92 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்குக் கூறப்பட்ட காரணம் ஆங்கிலம் புரியவில்லை என்ற அவமானம் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான்.
பள்ளி முதல் உயர்கல்வி வரை மாணவியர் பலர் ஆசிரியர்களின் பாலியல் வன்முறை காரணமாகத் தற்கொலை வரை சென்ற நிகழ்வுகளும் உண்டு. வெளியில் சொல்ல முடியாத ஊமைக் காயங்கள் அவர்களை வாழ்க்கையின் இறுதிக்கே இட்டுச் செல்கிறது.
மாணவர்களின் தற்கொலை மட்டுமல்லாமல் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கையும், சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 1912-ஆம் ஆண்டில் 39,822- ஆக இருந்த சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கை, அடுத்த ஆண்டு 43,506-ஆக அதிகரித்துள்ளது என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2014 அன்று இது 48,230 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசும், கல்வித்துறையும் தேர்ச்சி விழுக்காட்டை முதன்மைப்படுத்த ஆணைகளை வெளியிடுகின்றன. மாணவர்கள் தண்டிக்கப்படுவதைத் தடைசெய்துவிட்டு, தேர்ச்சி விழுக்காட்டுக்கு கேள்வி எழுப்புகிறது. தலைமையாசிரியரும், பாட ஆசிரியர்களும் தேர்ச்சிக் குறைவுக்குப் பதில் கூற வேண்டும்.
இதனால் மாணவர்களைப் பண்படுத்தக்கூடிய நீதிபோதனை வகுப்புகளும், மன இறுக்கத்தைக் குறைத்து மகிழ்ச்சியைத் தரும் விளையாட்டு மற்றும் இசை வகுப்புகளும் இல்லாமல் போய்விட்டன. பொது அறிவை வளர்க்கும் நூலக வகுப்புகளும் இல்லை.
இந்த வகுப்புகள் எல்லாம் பாட வகுப்புகளாக மாற்றப்பட்டு, அவர்களது முறையான வளர்ச்சி பறிக்கப்பட்டு விட்டது. மாணவர்களின் மன இறுக்கம் தொடர்பான வடிகால்கள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன.
தற்கொலை என்பது திட்டமிட்டு நடத்தப்படுவதல்ல; உணர்ச்சிவயப்பட்டு ஒரு சில நொடிகளில் நடந்து முடியக்கூடியதாகும். அந்த நேரத்தில் அது தடுக்கப்படுமானால் தற்கொலை செய்ய முயன்றவர்கள் தான் செய்ய நினைத்த தவறுக்காக வாழ்நாள் முழுவதும் வருந்துவார்கள், வெட்கப்படுவார்கள் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நூறாண்டு காலம் வாழ வேண்டிய இனிய வாழ்க்கையை அற்பக் காரணங்களுக்காக முடித்துக் கொள்ளத் துடிக்கும் மாணவர்கள் தங்களை நம்பியுள்ள பெற்றோரையும், மற்றோரையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தேவையற்ற இறப்பையும், இழப்பையும் தடுத்துவிட வேண்டும்.
"ஒருவரிடமுள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியாகும். மனித வர்க்கமாகிய புத்தகத்தைவிடச் சிறந்த புத்தகம் வேறு இருக்க முடியுமா?' என்று கேட்கிறார் காந்தியடிகள்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கானது. அது தனக்காக மட்டும் வாழும் சுயநலம் கொண்டது அல்ல. தன்னை நம்பியுள்ள மனித சமுதாயத்துக்காக வாழும் பொதுநலம் சார்ந்தது. அதை இடையில் முடித்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. இதனைச் சொல்லிக் கொடுக்காத கல்வியை என்னென்பது?
பெற்றோர்களுக்காகவே கவிஞர் கலீல் கிப்ரான் கூறுகிறார், "உங்கள் குழந்தைகளிடம் அன்பைக் கொடுங்கள். உங்கள் எண்ணத்தை விதைக்காதீர்கள். அவர்கள் தங்கள் எண்ணத்துடன் வளரட்டும்'.

மதத்தில் இல்லை, மனதில் தேடுங்கள்...


Dinamani

By மதுரா

First Published : 04 January 2016 03:41 AM IST


இறைவன் இருக்கிறாரா, இல்லையா என்று கேட்பவர் ஒரு சிலர். இறைவனுக்கு உருவம் இல்லை, அவர் ஜோதி வடிவானவர் என்று கூறுவோர் ஒரு பக்கம். இவர் ஒருவர் தான் இறைவன் என்று கூறுவோர் ஒரு பக்கம். இறைவனை பல உருவங்களில் வடித்து இவர் தான் இறைவன் என்று கூறுவோர் ஒரு பக்கம்.
இறைவன் பெயரில் மதங்களை வளர்த்து போற்றும் அனைத்து மதவாதிகளுக்கும் சில கேள்விகள்:
இறைவனை மதம் என்ற ஒன்றில் அடக்கலாமா? இறைவனை ஒரே ஒரு நாமத்தில் (பெயரில்) அடக்கிவிடமுடியுமா? இறைவனை வேதம் அறிந்தவர்கள் தான் அறிய முடியுமா? வாய் பேசமுடியாத உயிரினங்கள் இறைவனை வணங்க முடியாதா? இறைவன் பெயரில் உருவான மதங்கள் சொல்வது என்ன?
இறைவனை தீபமாக பார்ப்பதும், சிலையாய் பார்ப்பதும் அவரவர் மனநிலையைப் பொருத்தது இல்லையா? எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை எப்படி உணர்ந்தால் என்ன? என்னை வழிபடுபவரைத்தான் நான் காப்பாற்றுவேன் என்று இறைவன் கூறியதுண்டா?
இயற்கையை நாம் வணங்கினால் இறைவன் கோபித்துக் கொள்வாரா? அப்படி அவர் நினைத்தால் இறைவனின் மனநிலை சராசரி மனிதர்களின் மன நிலை தானா? இறைவனை நேசித்து ஒற்றுமையாக இருக்க வேண்டியவர்கள் இறைவனை பகடையாக வைத்து சண்டையிடுவது சரியா?
எங்கள் இறைவன் தான் சிறந்தவர் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் துன்புறுத்திக் கொள்வது சரியா?
ஆதி மனிதன் முதலில் நெருப்பை கண்டுபிடித்து, பின் அந்த நெருப்பால் உணவுகளை சமைத்து சாப்பிட ஆரம்பித்தான். அதன் பிறகு, வேளாண்மை செய்து வாழத் தொடங்கிய மனிதன் சூரியனையும், இயற்கையையும் தன்னை வாழ வைக்கும் கடவுளாக வணங்கியிருப்பான்..
மனிதர்கள் பெருக பெருக, கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினான். கூட்டங்களாக வாழ்ந்த மனிதன், அந்தந்த மண் சார்ந்த உணவு முறைகளை பயிரிடத் தொடங்கி அவனுக்கென்று உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் என்று வளரத்தொடங்கினான்.
வெளிநாடுகளின் தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தாற் போல் அந்நாடுகளின் மக்களின் வாழ்க்கை முறை, உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் அமைந்துள்ளன. அவர்களின் பழக்கங்களுக்கு தகுந்த மாதிரி அவர்களின் இறைவழிபாடும் உள்ளது.
அதேபோல், இந்திய நாட்டில் வாழும் மக்களுக்கு பழக்க வழக்கங்கள் வழிபாட்டு முறைகள் என்று உள்ளன. இந்தியா இயற்கை வளங்கள் கொண்ட நாடு. இங்கு விளையும் பொருள்களை, நன்றி சொல்லும் வகையில் முதலில் இறைவனுக்கு செலுத்தும் வகையில் இறைவனை வணங்கிவிட்டு பிறகு தான் அதை நாம் பயன்படுத்துவோம். இது இந்திய கலாசாரம்.
மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்திற்கு தகுந்த முறையில் அவர்களின் இறை வழிபாடு உள்ளது. அவரவர் மொழிக்குத் தகுந்த முறையில் இறைவனுக்குப் பெயர் வைத்து அழைக்கின்றனர்.
ஆனால், அவரவரும் தாங்கள் அழைக்கும் நாமம் தான் இறைவன் என்று சண்டை போட்டுக் கொள்கிறோம். அதர்மங்கள் ஆட்சி செய்யும் இடங்களில் எல்லாம் இறைவன் அவதரித்து தர்மத்தை போதித்துள்ளான்.
இறைவன் பல ரூபத்தில் அவதரித்தாலும் "அன்பாய் இரு, பிறரை துன்புறுத்தாதே, இல்லாதவர்க்கு உதவி செய்' என்றுதான் போதித்துள்ளான். ஆனால், மனிதன் அந்த போதனைகளைக் கைவிட்டு தன் சமுதாய கலாசாரத்தை பெரிதுபடுத்தவே போராடுகிறான்.
ஆதி மனிதன், தினம் விடியலை தந்த சூரியனையும் இரவில் வரும் நிலவையும், அவன் பசிக்கு உணவு தரும் மரம் செடிகளை தான் கடவுளாக வணங்கியிருப்பான். நமக்கு உதவி செய்பவர்களை மதிப்பதும் நன்றி செலுத்துவதும் மனிதனின் நற்பண்பு அல்லவா? இதை இந்திய கலாசாரம் செய்கிறது.
நம் இந்திய கலாசாரம் ஓர் உன்னதமான கலாசாரம். நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்து வைத்தான் தமிழன். ஒவ்வொரு நிலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும், செய்யும் தொழிலும் வேறுபடுகின்றன.
அவரவர் வாழ்க்கை முறைக்கு தகுந்த வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆனால், இதற்கு மனிதன் மதச்சாயம், சாதிச்சாயம் பூசி என் மதம் தான் சிறந்தது, என் சாதிதான் சிறந்தது என்று சண்டையிடத் தொடங்கினான்.
காலப்போக்கில் இறைவன் பெயரில் மனிதநேயத்தை வளர்ப்பதற்குப் பதிலாக மதத்தையும், சாதியையும் வளர்க்கிறான். மனிதன் ஒன்று கூடி இறைவனை வணங்கவேண்டும் என்றுதான் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் கட்டப்பட்டன. இதுவும் அந்தந்த நாட்டின் கட்டட கலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது.
கட்டடக் கலையில், இந்தியக் கட்டடக் கலை மனிதனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அதனால்தான்,கோயில்களில் மனிதர்கள் போலவும், விலங்குகள் போலவும் சிற்பங்களை வடித்தார்கள்.
இறைவனை மதங்களில் தேடாதீர்கள்.. மனங்களில் தேடுங்கள். இறைவனை கோயிலிலும், தேவாலயத்திலும், மசூதியிலும் காணலாம். எங்கும் இறைவனைக் காணும் மனநிலை தான் பண்பட்ட மனம் ஆகும்.

அவசியம்தான் இந்தக் கட்டுப்பாடு!


Dinamani


By ஆசிரியர்

First Published : 02 January 2016 12:58 AM IST


நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளிலிருந்து தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வந்திருக்கிறது. இந்த நடைமுறை ஏற்கெனவே நமது அண்டை மாநிலங்கள் மூன்றிலுமே நடைமுறையில் இருப்பவைதான். தமிழகத்திலும் இருந்துவந்த நடைமுறைதான் இவை.
கேரள மாநிலத்திலுள்ள ஆலயங்களில் ஆண்களாக இருந்தால் வேட்டி அணிந்து சென்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முழுக்கால் சட்டை, பைஜாமா உள்ளிட்ட தைக்கப்பட்ட ஆடை எதையும் அனுமதிப்பதில்லை. அதுமட்டுமல்ல, மேல் சட்டை அணிவதும் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களும்கூட தென்னிந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்துச் சென்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல, திருப்பதி - திருமலை தேவஸ்தானத்திலும் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற நடைமுறைகள் சிறப்பு தரிசனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இறைவழிபாட்டிற்கும் தெய்வத்தின் தரிசனத்துக்கும் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இந்து மதத்துக்கு மட்டுமே இருப்பவை அல்ல. இஸ்லாமியர்களின் தொழுகைக்கு மிக அதிகமான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதேபோல, கிறிஸ்தவர்களுக்கும்கூட பெண்கள் தலையைத் துணியால் போர்த்திக்கொள்வது உள்ளிட்ட சில மாதா கோயில் வழிபாட்டு முறைகள் உள்ளன. சீக்கியர்களுக்கும், பெளத்த மதத்தினருக்கும்கூட இதுபோன்ற சம்பிரதாயங்கள் உண்டு.
இந்து கோயில்களில் ஆண்கள் வேட்டி கட்டுவது, அங்கவஸ்திரம் மட்டுமே போர்த்திக்கொண்டு ஆலயத்திற்குள் செல்வது உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பின்னால் சில காரணங்கள் உண்டு. ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை அமைக்க ஆகம விதிமுறைகளோ, இன்ன இடத்தில் இன்ன பிராகாரங்கள் அமைய வேண்டும் என்றோ விதிமுறைகள் கிடையாது. ஏனைய மதங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றுகூடி பிரார்த்திக்கும் இடமாக மட்டுமே வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ஆனால், இந்து மதத்தில் அப்படி அல்ல.
இங்கே வழிபாட்டுத் தலங்கள் எனப்படுபவை கூட்டுப் பிரார்த்தனைத் தலங்களாக இல்லாமல், பரிகாரத் தலங்களாகவும் இருக்கின்றன. அவை ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள ஈர்ப்பு சக்தியை மையப்படுத்தி ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டவை. அதனால்தான், இன்னென்ன பிரச்னைகளுக்கு இன்னென்ன குறிப்பிட்ட ஆலயங்களைத் தரிசிப்பது, அங்கே பரிகாரங்களைச் செய்வது போன்றவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
மேலாடை அணியாமல் செல்லும்போது அந்த ஆலயத்தின் அடிப்படையாகக் கருதப்படும் கிரகத்தின் காந்த சக்தியை முழுமையாக உடலில் வாங்கிக் கொள்ள முடியும் என்பதுதான் இதுபோன்ற விதிமுறைகளுக்குக் காரணம். கோயில்களில் வலம்வருவது, கொடி மரத்துக்கு முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரிப்பது போன்றவையும் இதனால்தான்.
இறை நம்பிக்கை இல்லாத, அன்னிய மோகத்தின் பாற்பட்ட திராவிட அரசியலின் காரணமாக இந்து ஆலயங்களின் வழிபாட்டு முறைகளும், சம்பிரதாயங்களும் கேலிக்கும், பழிப்புக்கும் உள்ளாயின. மேல் சட்டை அணியாமல் ஆலய வழிபாடு என்கிற சம்பிரதாயம் பூணூல் அணிந்த பிராமணர்களையும், அணியாத பிராமணர் அல்லாதவர்களையும் பிரித்தறிந்து பார்ப்பதற்காகத்தான் என்கிற குதர்க்கமான பொய்ப் பிரசாரத்தை புத்திசாலித்தனமாக முன்னெடுத்துச் சென்று அனைவரையும் நம்ப வைத்தனர் அந்த இறை மறுப்பாளர்கள். ஆலயங்களில் மட்டுமல்லாமல் மகான்களையும், துறவிகளையும், வயதில் மூத்தவர்களையும் தரிசிக்கும்போதுகூட மேலாடை அணியாமல் செல்வதன் மூலம் அவர்களிடம் இருக்கும் ஆத்ம சக்தியையும் அருளையும் முழுமையாகப் பெற முடியும் என்கிற பாரம்பரிய நம்பிக்கைக்கும்கூட இதேபோன்ற காரணத்தைக் கூறி பழிக்க முற்பட்டனர்.
கடந்த 70 ஆண்டு கால இந்து மத எதிர்ப்பை (வெறுப்பை) முன்னிலைப்படுத்தும் சக்திகளின் பிரசாரத்தால், இடையில் சிறிது காலம் துவண்டுபோன இறை நம்பிக்கை உணர்வு, இப்போது மிகப்பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது. ஆலயங்களில் முக்கியமான தினங்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் அதற்கு கட்டியம் கூறுகிறது. அதேநேரத்தில், ஆலயம் தொழுவது ஏனைய மதத்தினரிடம் காணப்படும் ஈடுபாட்டைபோல இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது.
அண்மைக்காலமாக இளைஞர்களிடம் புதிய போக்குகள் தோன்றி டி-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ் உள்ளிட்ட நாகரிக ஆடைகளும், பெண்கள் லெக்கின்ஸ், ஸ்கின் டைட் ஜீன்ஸ், டாப்ஸ் உள்ளிட்ட ஆடைகளும் அணிந்து கோயிலுக்கு வரத்தொடங்கியதால், தமிழக ஆலயங்களில் ஆடைக் கட்டுப்பாடு குலைந்தது. நமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, பாவாடை - தாவணி போன்றவை காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. நமது பாரம்பரியச் சின்னங்களைக் குறைந்தபட்சம், ஆலய வழிபாட்டிலாவது கடைப்பிடிக்க இந்த உடைக்கட்டுப்பாடு நிச்சயமாக உதவும். இறை வழிபாட்டைப் பொருத்தவரை நாம் இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.
ஆலயங்களில் உடைக் கட்டுப்பாடு என்கிற நல்லதொரு முடிவை நடைமுறைப்படுத்தி இருக்கும் இந்து அறநிலையத் துறையையும், அரசையும் பாராட்டும் அதேநேரத்தில் இன்னும் ஒரு வேண்டுகோள். இதேபோல, கோயிலுக்குள் செல்லிடப்பேசியை அனுமதிப்பதற்கும் தடை பிறப்பிக்க வேண்டும். கோயிலுக்குள் செல்லிடப்பேசி ஒலித்தால் அபராதம் விதிப்பது, செல்லிடப்பேசியில் படம் பிடித்தால் பறிமுதல் செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை ஆடைக் கட்டுப்பாட்டுடன் சேர்த்து அமல்படுத்த வேண்டும்!

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது

சென்னை,

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை

மத்திய கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட அட்டவணை விவரம் வருமாறு:-

10-வது வகுப்பு தேர்வு

மார்ச் 1-ந் தேதி -பாதுகாப்பு, டைனமிக் ரீடெய்ல் உள்ளிட்ட தேர்வுகள்

2-ந் தேதி -அறிவியல்

3-ந் தேதி -தெலுங்கு, பிரெஞ்சு

5-ந் தேதி -ஓவியம்,

8-ந் தேதி -தமிழ்

10-ந் தேதி - சமூகஅறிவியல்

12-ந் தேதி - மனைஅறிவியல்

15-ந் தேதி -ஆங்கிலம்

19-ந் தேதி -கணிதம்

22-ந் தேதி -தட்டச்சு

28-ந் தேதி -ரஷ்ய மொழித்தேர்வு

12-வது வகுப்பு தேர்வு

மார்ச் 1-ந்தேதி-ஆங்கிலம்

5-ந் தேதி - இயற்பியல்

8-ந் தேதி -வரலாறு

9-ந் தேதி- வேதியியல்

11-ந் தேதி- தமிழ்

12-ந் தேதி -என்ஜினீயரிங் கிராபிக்ஸ்

14-ந் தேதி - கணிதம், மைக்ரோ பயாலஜி

17-ந் தேதி - அக்கவுண்டன்சி

18-ந் தேதி -அரசியல் அறிவியல், உயிரி தொழில்நுட்பவியல்

19-ந் தேதி -விவசாயம்

21-ந் தேதி -உயிரியல்

26-ந் தேதி-

கம்ப்யூட்டர் சயின்ஸ்

28-ந் தேதி- உடற்கல்வி

31-ந்தேதி-பொருளாதாரம்

ஏப்ரல் 2-ந் தேதி

- உளவியல்

4-ந் தேதி- சமூகவியல்

7-ந் தேதி - புவியியல்

12-ந் தேதி

- மனை அறிவியல்

16-ந் தேதி -தத்துவ இயல்

22-ந்தேதி-என்.சி.சி.தேர்வு

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வழக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட 3 பேர் கைது

கிருஷ்ணகிரி,

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரோக்கர்-ஆசிரியர் கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 37). பிளஸ்-2 படித்துள்ள இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே எர்ரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். இவர் போலி சான்றிதழ் மூலமாக ஆசிரியர் பணிக்கு சேர்ந்ததாக வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முனியப்பன், கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேந்திரன் (42) என்ற புரோக்கரை சந்தித்ததும், அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரின் பெயரில் ஆசிரியர் பயிற்சி முடித்ததைபோல ஒரு போலி சான்றிதழ் தயாரித்து முனியப்பனை அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு சேர்த்து விட்டதும் தெரியவந்தது. முதலில் நாமக்கல் மாவட்டத்தில் வேலை பார்த்த முனியப்பன், பிறகு வேலூர் மாவட்டத்திற்கு இடமாறுதல் ஆனார். இதையடுத்து முனியப்பன், புரோக்கர் ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

போலி சான்றிதழ்

இந்நிலையில் புரோக்கர் ராஜேந்திரன் மூலமாக போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக மேலும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார். அதன் விவரம் வருமாறு:-

வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வாத்தூர்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பி.செந்தில்குமார். இவர் கிருபா என்ற பெயரில் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியாற்றி வருவதாக வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணி பதிவேடு மற்றும் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த செந்தில்குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா கூச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர். கிருபா என்ற பெயரில் ஆதிதிராவிடர் என்று போலி சான்றிதழ் பெற்று சேலம் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியராக செந்தில்குமார் பணியில் சேர்ந்து, பிறகு மாறுதல் ஆகி தற்போது வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செந்தில்குமாரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

விசாரணையில் அனைத்து சான்றிதழ்களும் புரோக்கர் ராஜேந்திரன் வழங்கியதும், அந்த சான்றுகள் வேறொருவருடையது என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த செந்தில்குமாரை (37) போலீசார் நேற்று கைது செய்தனர். போலி சான்றிதழ் வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான செந்தில்குமார், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதாகி உள்ள 3 பேருக்கும் மேலும் சில மோசடியில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தடையற்ற சான்றிதழ் கேட்ட பி.எட். கல்வி நிறுவனங்களின் விண்ணப்பம் மீது 4 வாரத்துக்குள் முடிவு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு


logo

சென்னை,

தடையற்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள பி.எட். கல்வி நிறுவனங்களின் விண்ணப்பம் மீது 4 வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பம்

வேலூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி கல்வி அறக்கட்டளை, கே.டி. கல்வி அறக்கட்டளை, மதுரையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை ஆகிய நிறுவனங்கள், பி.எட். கல்வி தொடங்குவதற்காக அனுமதி கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்திடம் விண்ணப்பித்தன.

இந்த நிலையில் அந்த கல்வி அறக்கட்டளைகளுக்கு கல்விக் குழுமத்தின் தென் மண்டல இயக்குனர் ஒரு நோட்டீசு அனுப்பினார். அதில், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தடையற்ற சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்காததால், ஏன் உங்கள் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

கல்வி விதிகள்

இந்த நோட்டீசை எதிர்த்து 3 கல்வி அறக்கட்டளைகளும் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தன. தடையற்ற சான்றிதழ் இல்லாமலேயே அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அவை கோரின.

இந்த வழக்கை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கல்வி விதிகளின்படி விண்ணப்பத்தோடு தடையற்ற சான்றிதழ் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வாரங்களுக்குள்

ஆனால் 3 கல்வி நிறுவனங்களும் நோட்டீசை பெற்றுக் கொண்டு அதற்கு பதில் சொல்லவில்லை. மாறாக, அந்த நடவடிக்கையை செல்லத் தகாததாக செய்வதற்காக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்த நோட்டீசுக்கு பதிலளிக்க கல்வி அறக்கட்டளைகளுக்கு 2 வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுபோல தடையற்ற சான்றிதழ் கேட்டு கல்வி அறக்கட்டளைகள் கொடுத்துள்ள விண்ணப்பங்களை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் இன்னும் 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு பிரதமரின் பரிசு

logo

பொதுவாக புத்தாண்டு தினத்தன்று எல்லோரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வார்கள். சிலர் புத்தாண்டு பரிசுகளை வழங்குவார்கள். ஆனால், இந்த 2016–ம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்தாகவும், பரிசாகவும் இந்திய நாட்டு இளைஞர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஒரு நல்ல அறிவிப்பை அதாவது, இனி மத்திய அரசாங்க குரூப்–3 மற்றும் குரூப்–4 பணிகளுக்கு இண்டர்வியூ என்று சொல்லப்படும் நேர்முகத்தேர்வு கிடையாது. அவர்கள் இனி தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருக்கிறார். அதாவது, அவர்கள் படித்த படிப்பின் இறுதித்தேர்வில் பெற்ற மார்க்குகள் மற்றும் எழுத்துத்தேர்வின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த முடிவுக்கான ஒரு அடிப்படைக்கருத்தையும் பிரதமர் தெரிவித்து இருக்கிறார். இண்டர்வியூ என்றாலே பிரபலமானவர்களின் சிபாரிசு என்பதுதான் பொருள் என்று அனைவருக்கும் தெரியும். வலுவான பரிந்துரை இல்லாவிட்டால் தகுதி இருப்பவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காது. இதனால்தான் குரூப்–3 மற்றும் குரூப்–4 பிரிவுக்கான பணிதேர்வுகளுக்கு இண்டர்வியூ வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம்.

ஒருவர் தகுதி படைத்தவர் என்றால், அவருக்கு வேலை நியமனத்துக்கான உத்தரவு வீடு தேடி வரும். ஊழலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கை இது. இந்த புதியமுறை ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது மத்திய அரசாங்க பணிகளோடு நின்று விடக்கூடாது, மாநில அரசுகளும் நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றாத இண்டர்வியூ முறையில் இருந்து வெளிவர வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். குரூப்–3 மற்றும் குரூப்–4 என்பது இளநிலைப்பணிகள்தான். இந்த பணிகளுக்குத்தான் ஏராளமானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்குமேல் உள்ள பணிகள் அதிகாரிகள் பணிகள். எனவே, இந்த குரூப்–3, குரூப்–4 பணிகளுக்குத்தான் இளைஞர்கள் கூட்டம் அலைமோதும். புதுமை இந்தியாவை படைக்கப் போகும் நுழைவு வாயில் இந்த பணிகள்தான்.

பள்ளிக்கூட படிப்பு காலத்தில் இருந்தே நான் படித்து முடித்தவுடன், இந்த வேலைக்குத்தான் போவேன் என்று ஒரு இலக்கோடு மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடருவார்கள். அப்போது தொடங்கி கல்லூரி படிப்பை முடிக்கும்வரை அந்த லட்சியத்தோடு இரவு–பகலாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். படித்து முடித்து வேலைக்கு முயற்சிக்கும் போது, தகுதியுள்ளவனுக்கு வேலை கிடைக்காமல் பணம் கொடுத்து, சிபாரிசு பெற்று தகுதி இல்லாதவன் அந்த பணிக்கு தேர்வானால், அறிவாற்றல் மிக்க இளைஞர்கள் சோர்ந்து போய் விடுவார்கள். தகுதியற்றவனுக்கு வேலை என்பதோடு முடிந்து விடுவது இல்லை. பணம் கொடுக்க வசதி உள்ளவனுக்கே வேலை என்று வேலைவாய்ப்புகள் விலை பேசப்பட்டால், அரசு நிர்வாகத்தில் ஆற்றல் இல்லாமல் போய்விடும். இதுமட்டுமல்லாமல், பணம் கொடுத்து வேலைக்கு சேருபவன் கை சும்மா இருக்காது. வேலைக்கு சேர்ந்த நாள் முதல் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வரை அவன் லஞ்சம் வாங்கிக் கொண்டே இருப்பான். அவனால் அவன் பணியாற்றும் அலுவலகமே ஊழலின் ஊற்றுக்கண்ணாகி விடும். அந்த வகையில், தகுதியை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ள இளைஞர் சமுதாயமும், அரசு நிர்வாகத்தில் ஊழல் இருக்கக் கூடாது என்று லஞ்சத்தை எதிர்ப்போரும் இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறார்கள். ஆனால், வெறும் மதிப்பெண்கள் மூலமும், எழுத்துத்தேர்வு மூலமும் ஒருவரது திறனாய்வை, உடனடி முடிவெடுக்கும் ஆற்றலை, நடத்தையை, தோற்றத்தை, உடல் திறனை கண்டுபிடிக்க முடியாதே என்று சொல்வோரும் உண்டு. ஆனால், ஒவ்வொரு பணியிலும் தகுதி காண்பருவம் என்று அதிகபட்சம் 2 ஆண்டுகள் உண்டு. அந்த காலகட்டத்தில் ஒருவரது பணி நிறைவளிக்க வில்லையென்றால், அவரை நிறுத்திவிட முடியும். எனவே, இந்த புதியமுறை பலனளிக்கக்கூடியதே, இதன் வெற்றியைப் பார்த்து மாநில அரசு பணிகளிலும் பிரதமர் வேண்டுகோளின்படி நடைமுறைப்படுத்த வேண்டும்.

Saturday, January 2, 2016

புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமிதரிசனம்



புத்தாண்டையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சிறப்பு வழிபாடு

திருவாரூரில் உள்ள புகழ் பெற்ற தியாகராஜ சாமி கோவிலில் நேற்று புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல காகிதகாரத் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் கோவில், கீழவீதியில் பழனியாண்டவர் கோவில், துர்வாசகர் கோவில் அமைந்துள்ள பாலஅய்யப்பன் கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், சர்க்கரை விநாயகர் கோவில், காட்டூர் கீழத்தெரு மகா காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் புத்தாண்டு வழிபாடு நடந்தது. காலை முதல் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

பாத்திமா அன்னை ஆலயம் 

திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புத்தாண்டு தொடக்கத்தையொட்டி நள்ளிரவு 12 மணி முதல் பொதுமக்கள் வெடி, வெடித்து உற்சாகத்துடன் வரவேற்றனர். ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

நீடாமங்கலம் 

நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பெற்ற சிறப்புடையது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. 

இதை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், கெஜலெட்சுமி சன்னதிகளில் வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டிருந்தது. அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து குருபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும், கோவில் செயல்அலுவலருமான சாத்தையா, அறநிலைய உதவி ஆணையரும், கோவில் தக்காருமான சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

இதேபோல் ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளி உள்ள சங்கடஹர மங்கள மாருதி 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், குழந்தை பாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமர் கோவில், பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் புத்தாண்டு விழா மகிழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

ஏப்ரல் 1–ந் தேதி முதல் மண்ணெண்ணெய் மானியமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு


ஏப்ரல் 1–ந் தேதி முதல் மண்ணெண்ணெய் மானியமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு


புதுடெல்லி,

சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியம் நேரடியாக நுகர்வோர் வங்கி கணக்குக்கு செலுத்தும் திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மண்ணெண்ணெய் மானியமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.

இந்த திட்டத்தை சில வடமாநிலங்கள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் செயல்படுத்த முன்வந்துள்ளன. அந்த பகுதிகளில் ஏப்ரல் 1–ந் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் அந்த பகுதிகளில் நுகர்வோர் வெளிமார்க்கெட் விலைக்கு ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்க வேண்டும். அதற்கான மானியம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்

logo

இந்தியா பண்டைய காலத்தில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்கியிருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டு, வடக்கே நாளந்தா பல்கலைக்கழகமும், தமிழ்நாட்டில் காஞ்சி பல்கலைக்கழகமும்தான். கி.பி. 5–ம் நூற்றாண்டில் இருந்து 12–13–ம் நூற்றாண்டுவரை நாளந்தா பல்கலைக்கழகம் பிரமாண்டமாக இயங்கியதற்கு சரித்திரச்சான்றுகள் இருக்கின்றன. இங்கு வெளிநாடுகளில் இருந்து எண்ணற்றோர் படிக்க வந்திருக்கிறார்கள். இதுபோல, காஞ்சீபுரத்தில் அதே காலகட்டங்களில் பல்கலைக்கழகம் இயங்கியதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்படி கல்வியில் சிறந்து விளங்கிய இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க, வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் படையெடுத்து வந்த காலம் போய், இப்போது நிறைய மாணவர்கள் சிறந்த கல்வியை நாடி வெளிநாடுகளுக்கு அலை, அலையாய் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற தகவல், மத்திய–மாநில அரசுகளைத் தட்டியெழுப்பும் தகவலாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சர்வதேச கல்வி நிறுவனம், சர்வதேச கல்வி பரிமாற்றம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2014–15–ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவுக்கு படிக்க வந்த வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்கள் கூடுதலாக வந்த சதவீதம்தான் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கவந்த மாணவர்களின் எண்ணிக்கையைவிட, 29.4 சதவீதம் அதிகமாக வந்திருக்கிறார்கள்.

இந்த கணக்குப்படி, இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 888 மாணவர்கள் அமெரிக்காவில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில், 80 சதவீத மாணவர்கள் என்ஜினீயரிங், கணக்கு, கம்ப்யூட்டர் அறிவியல், வர்த்தக படிப்புகளைப் படிக்கவே சென்று இருக்கிறார்கள். அங்கு மட்டுமல்ல, ஜெர்மனி, சீனா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளுக்கு படிக்கச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேப்போகிறது. இது ஒருபுறம் இருக்க, இந்தியாவுக்கு படிக்கவரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பாக அண்டை நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. காரணம், கல்வித்தரம் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை என்ற எண்ணம் வளர்வதாகும். வசதி படைத்தவர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டுமல்லாமல், வசதி இல்லாதவர்கள்கூட வங்கிக்கடனை பெற்று வெளிநாடுகளுக்கு படிக்கச்சென்றுவிடுகிறார்கள். சிறந்த கல்விக்கும், நல்ல வேலைவாய்ப்பு தரும் செயல்முறை பயிற்சிக்கும் வெளிநாடுகளில் சீரிய வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறார்கள்.

இந்த நிலையில், உடனடியாக உயர்கல்வியில் மேலான மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியில் இன்னும் தீவிரமாக மத்திய–மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். இந்தியாவில் 1992–ல்தான் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, இப்போதுதான் புதிய கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. உலகம் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டாலும், நமது கல்விக்கொள்கை மட்டும் மாற்றம் காணாமல் இருப்பது சரியல்ல. சர்வதேசதரத்துக்கு இணையான பாடத்திட்டங்களை இணைக்கும் வகையில், கல்லூரிப்படிப்பு இருக்கவேண்டும்.

ஒருகாலத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நான் மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவன் என்று சொன்னால் தனி மதிப்பு இருக்கும் என்பார்கள். அத்தகைய நிலை மீண்டும் தோன்றவேண்டும். சர்வதேச அளவில் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம்கூட இல்லை என்பது வெட்கித்தலைகுனிய வைக்கிறது. அதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் முதல் கல்லூரிகளில் உள்ள சோதனைக்கூட அட்டெண்டர்கள் நியமனம்வரை லஞ்சம் இல்லாத நியமனங்களாக, தகுதிபடைத்தவர்களாக நியமிக்கப்பட்டால், கல்வி நிச்சயமாக வளரும்.

தகுதிபடைத்த ஆசிரியர்கள், தரமான கல்வி என்றால் போதும், வெளிநாட்டுக் கல்வி இங்கேயே கிடைத்துவிடும். உயர்கல்விகளில் சிறந்த கல்வியாளர்கள் வேண்டும். கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தன்னாட்சி கொண்டதாக இருந்தால் நல்லது. புதிய கல்விக்கொள்கை இதையெல்லாம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

வி.எஸ்.ராகவன்10 ....i ராஜலட்சுமி சிவலிங்கம்



பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவன் (V.S.Raghavan) பிறந்த தினம் இன்று (ஜனவரி 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கத்தில் (1925) பிறந்தவர். மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு புனித கொலம்பஸ் பள்ளி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார். தந்தை மறைவுக்குப் பிறகு, தாயுடன் புரசைவாக்கத்தில் அக்கா வீட்டில் வசித்தார்.

l சிறு வயது முதலே நாடகங்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டிருந்தார். காஞ்சிபுரம் பகுதியில் இயங்கிய நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்தார். பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் கொண்டவர். துமிலன் நடத்திய ‘மாலதி’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

l ஓர் அச்சகத்தில் வேலை செய்தபோது, சக ஊழியர்கள் நடத்திய நாடகங்களில் நடித்தார். அப்போதுதான் மாலி, வாடிராஜ், நடராஜ், கே.பாலசந்தர் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து ‘இந்தியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பெயரில் நாடக கம்பெனி தொடங்கினார். சென்னையில் பல இடங்களில் நாடகங்களை இந்த கம்பெனி நடத்தியது.

l கம்பெனி மூடப்பட்ட பிறகு கே.பாலசந்தரின் மேடை நாடகங்களில் நடித்தார். ‘நகையே உனக்கு நமஸ்காரம்’ என்ற நாடகம் மிகவும் பிரபலம். சினிமாவில் நடிப்பதற்கும் தொடர்ந்து முயற்சி செய்தார். இவர் நடித்த ‘வைரமாலை’ என்ற மேடை நாடகம் 1954-ல் திரைப்படமாகத் தயாரானது. நாடகத்தில் ஏற்ற அதே கதாபாத்திரத்தில் திரையிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் இவரது முதல் திரைப்படம்.

l தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்தார். வானொலி நாடகங்களிலும் நடித்தார். குணச்சித்திர வேடங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக் குரல்’, ‘சவாலே சமாளி’, ‘வசந்த மாளிகை’, ‘சுமை தாங்கி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும் வரை’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

l 30-35 வயது இருக்கும்போது, ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு தந்தையாக பல படங்களில் நடித்துள்ளார். ‘உலக அளவில் தலைசிறந்த நடிகர் சிவாஜி கணேசன்’ என்று அடிக்கடி கூறுவார்.

l நாகேஷ் இவரது நெருங்கிய நண்பர். வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, ‘எனக்கு ஒரு ஸ்ட்ராங் ஃபில்டர் காபி’ என்றவாறே நுழைவாராம். ‘‘அவரைப் போன்ற அபாரமான நடிகர், அற்புதமான மனிதரைக் காண்பது அரிது’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுவார். நாடக மேடையில் இருந்து என்னை சினிமாவுக்கு கொண்டுவந்தது நாகேஷ்தான் என்றும் சொல்வார்.

l திரைத்துறையில் 60 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். எம்ஜிஆர், சிவாஜி, பின்னர் ரஜினி, கமல் மட்டுமல்லாது, அஜித், விஜய், விமல் என 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

l சாகும் வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அவ்வாறே, கடைசிவரை நடித்து, சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்தார். பல தொலைக்காட்சித் தொடர்கள், சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

l அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும் பழகக்கூடியவர். நினைவாற்றல் மிக்கவர். 1000-க்கும் அதிகமான படங்கள், ஏராளமான நாடகங்கள் என வெற்றிகரமான நடிகராக வலம் வந்து நடிப்புத் துறையில் முத்திரை பதித்த வி.எஸ்.ராகவன் 2015-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி 90-வது வயதில் காலமானார்.

விவரங்கள் சரிபார்ப்பு: வெள்ள நிவாரணம் கிடைப்பது எப்போது? - வருவாய்த் துறையினர் தகவல்

Return to frontpage

வெள்ள நிவாரண கணக்கெடுப்பு விவரங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. மேலும், ஏற்கெனவே நிவாரணம் பெற்றவர்கள், எதற்காக நிவாரணம் பெற்றனர் என்பது உள்ளிட்ட விவரங்களும் தொகுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிய ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால், பொங் கலையொட்டி, நிவாரணம் மற்றும் 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மற்றும் கடலூர் மாவட்டங் களில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி பெய்த கனமழையால், பெரும் பாலான பகுதிகள் பாதிக்கப் பட்டன. இதன் காரணமாக, லட்சக்கணக்கானவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இதையடுத்து, வெள்ள நிவாரணமாக குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம், மற்ற வீடுகளில் 2 நாட்கள் மழைநீர் சூழ்ந்திருந்தால் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இதையடுத்து, வெள்ள நிவாரண கணக்கெடுப்பு முடிக்கப் பட்டு, தற்போது தகவல்கள் தொகுப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன.

முன்னதாக, வெள்ள நிவாரண கணக்கெடுப்பின்போது, பெயர், வங்கியின் பெயர், கணக்கு எண், கிளை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன. அந்த விவரங்களை சரிபார்க்கும்போது சிலரது பெய ரும் வங்கிக்கணக்கும் பொருந்த வில்லை. சிலர் வங்கிக்கணக்கு விவரங்களை தெரிவிக்கவில்லை. எனவே இந்த விவரங்களை பெறும் முயற்சியில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.

கணக்கெடுப்பின்போது சம்பந் தப்பட்ட குடும்பத் தலைவரின் கைபேசி எண்ணை பெற்றுள்ள தால், அந்த எண்ணுக்கு மாவட்ட ஆட்சியர் பெயரில் தமிழிலும், ஆங்கிலத்திலும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அதில் வங்கிக்கணக்கு பொருந் தாதவர்களுக்கு, ‘குடும்பத் தலை வரின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் பொருந்த வில்லை. எனவே, கணக்கு வைத்திருப்பவர் பெயர், வங்கியின் பெயர், கிளை, வங்கிக்கணக்கு எண் விவரத்தை இதே கைபேசியில் இருந்து ‘98401 31067’ என்ற எண்ணுக்கு ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி அனுப்பவும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிக்கணக்கு எண் அளிக் காதவர்களுக்கு, பெயர், வங்கியின் பெயர், எண், கிளை விவரங்களை தெரிவிக்குமாறும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனால், கணக்கெடுப்பின்போது விவ ரங்கள் அளித்த பயனாளி களுக்கு உரிய நிவாரணம் சென்ற டையும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

‘வாட்ஸ் அப்’ குழப்பம்

அந்த குறுஞ்செய்தி தற்போது ‘வாட்ஸ் அப்’பில் பரவி வரு கிறது.

இதுதொடர்பாக வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘வாட்ஸ் அப் பார்த்து தகவல் அனுப்பினால் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, யாருடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளதோ அவர்கள் மட்டும் விவரங்களை அளித்தால் போதும்’ என்றார்.

Friday, January 1, 2016

புத்தாண்டுக் கொண்டாட்ட விநோதங்கள் .......... சைபர் சிம்மன்


புத்தாண்டு என்றதும் நள்ளிரவுக் கொண்டாட்டமும், வாணவேடிக்கையும் வாழ்த்துப் பரிமாற்றங்களும் நினைவுக்கு வரலாம். அமெரிக்காவின் நியூயார்க் நகரச் சதுக்கம், பாரிஸ் ஈஃபெல் கோபுரம், ஆஸ்திரேலியாவில் சிட்னி துறைமுகம் ஆகியவை புத்தாண்டுக் கொண்டாட்ட‌த்திற்கான புகழ் பெற்ற இடங்களாக இருக்கின்றன என்பதும் தெரியும். ஆனால் உலகம் முழுவதும் புத்தாண்டு எத்தனை விதமாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?

அதாவது பல நாடுகளில் புத்தாண்டை வரவேற்க விதவிதமான வழக்கங்கள் கொண்டிருக்கின்றனர் தெரியுமா? இப்படி ஒவ்வொரு நாட்டிலும் புத்தாண்டு தொடர்பாக உள்ள விநோதமான கொண்டாட்ட வழக்கங்களை 'தி லிட்டில் திங்ஸ்' இணையதளம் பட்டியலிட்டுள்ளது:

இதன்படி தென்னமெரிக்க நாடான ஈக்வேடாரில் புத்தாண்டுக்கு முந்தைய இரவில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களின் உருவ பொம்மைகளை எரிக்கின்றனராம். இதன் மூலம் கடந்த ஆண்டின் தீமை ஒழியும் என்பது நம்பிக்கையாம். இதேபோல சுவிட்சர்லாந்து நாட்டில் தரையில் ஐஸ்கிரீமை சிந்துகின்றனராம். இது அதிர்ஷ்ட‌த்திற்கு வழி வகுக்கும் என்பது நம்பிக்கையாம்.

ஸ்பெயின் நாட்டில் அனைவரும் தொலைக்காட்சி முன் அல்லது பொதுச் சதுக்கங்களில் கூடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்போது சிவப்பு உள்ளாடை அணிந்து கையில் ஒரு கோப்பைத் திராட்சைப் பழங்களையும் வைத்திருப்பார்கள். புத்தாண்டு மணி 12 முறை ஒலிக்கும் போது 12 திராட்சகளை விழுங்கினால் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் நீடிக்குமாம்.

டென்மார்க்கில் புத்தாண்டு பிறக்கும்போது நாற்காலியிலிருந்து குதிப்பதையும், பக்கத்து வீட்டில் தட்டை வீசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் நட்பு தழைக்கும் என்பது நம்பிக்கை. எஸ்டோனியா நாட்டில் 7, 9 மற்றும் 12 எண்கள் ராசியானவையாக கருதப்படுவதால் இத்தனை முறை சாப்பிட முடிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்.

காற்றில் கலந்த இசை - 36: பருவங்களின் கூட்டிசை!....வெ.சந்திரமோகன்

Return to frontpage




இளையராஜாவின் படைப்பாற்றல் உச்சத்தில் இருந்த சமயத்தில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடிக்கும் பாக்கியம் மோகனுக்கு அதிகமாகவே கிடைத்தது. இன்றும் மோகன் ஹிட்ஸ் என்ற பெயரில் விற்கப்படும் சிடிக்களில் அவரது படத்தைவிடப் பெரிய அளவில் சிரித்துக்கொண்டிருப்பது இளையராஜாதான். தமிழ்த் திரை இசையின் வசந்த காலமான 80-களில் மோகனை நாயகனாக வைத்து ஆர். சுந்தர்ராஜன், கே. ரங்கராஜ் என்று பல இயக்குநர்கள் ‘இனிய கானங்கள் நிறைந்த படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தனர்.

அந்தப் பட்டியலில் இடம்பெறும் முக்கியமான இயக்குநர் மணிவண்ணன். ‘திரில்லர்’, குடும்பக் கதைகள், அரசியல் விமர்சனம் என்று பல்வேறு வகைப் படங்களை இயக்கிய மணிவண்ணன், இறுதிவரை இளையராஜாவின் மீது பெரும் மதிப்பும் அபிமானமும் கொண்டிருந்தார். 1983-ல் அவரது இயக்கத்தில் வெளியான ‘இளமைக் காலங்கள்’ படத்தின் பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. கோவைத் தம்பியின் ‘மதர்லேண்ட் பிக்சர்’ஸின் இரண்டாவது தயாரிப்பு இப்படம்.

இப்படத்தில் எஸ்.பி.பி. ஜானகி பாடிய ‘இசை மேடையில் இன்ப வேளையில்’ பாடல் முகப்பு இசை தரும் சுகந்தம் செழுமையானது. வசந்தத்தை மீட்டும் பெண் குரல்களின் ஹம்மிங்குடன் பாடல் தொடங்கும். ஹம்மிங்கின் மேலடுக்கில் ஜானகியின் அதிரசக் குரல் சிணுங்கும். பள்ளத்தாக்கின் மீது படர்ந்திருக்கும் காற்றில், சிறகை அசைக்காமல் பறந்துகொண்டிருக்கும் பறவையைக் காட்சிப்படுத்தும் வயலின் இசைக் கோவையைத் தொடர்ந்து, ‘இசை மேடையில்…’ என்று பாடத் தொடங்குவார் ஜானகி.

பல்லவியின் சில நொடிகளில் எஸ்.பி.பி.யின் மெல்லிய ஹம்மிங் வந்துபோகும். இளமையின் உற்சாகத்தை உணர்த்தவோ என்னவோ குதிரைக் குளம்பொலியைப் போன்ற தாளக்கட்டை இப்பாடலுக்குத் தந்திருப்பார் இளையராஜா. நிரவல் இசை முழுவதும் வயலின்களின் ராஜாங்கம்தான். முகப்பு இசையில் பயன்படுத்தியதுபோலவே இரு வேறு அடுக்குகளில் ஜானகியின் ஹம்மிங்கையும், பெண் கோரஸ் குரல்களையும் ‘மிக்ஸிங்’ செய்திருப்பார் ராஜா.

மோகன் இளையராஜா கூட்டணியின் முக்கியக் கண்ணி எஸ்.பி.பி.யின் குரல். இந்தப் பாடலில் அதை உறுதியாக நிரூபித்திருப்பார் எஸ்.பி.பி. ‘முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்’ எனும் வரியின் இறுதியில் சின்ன பிர்கா ஒன்றைத் தருவார். ‘கொன்னுட்டான்யா’ என்று தோன்றும். இரண்டாவது நிரவல் இசையில் ‘பாப்பபப பாப்பப’ எனும் ஹம்மிங்கை ஜானகி பாடுவார். அதைத் தொடர்ந்து வரும் ஹம்மிங் ஆண் தன்மையும், பெண்ணின் இனிமையும் கலந்த குரலாக ஒலிக்கும். அது ஜானகியின் ஹம்மிங்கா, எஸ்.பி.பி.யுடையதா என்று குழம்பாமல் அப்பாடலைக் கடந்துவர முடியாது. அந்த அளவுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களைத் தனது இசையில் இளையராஜா புகுத்திய காலம் அது.

இப்படத்தில் ஷைலஜா பாடும் ‘படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ’ பாடல், அக்கால ‘ஆடம் டீஸிங்’ பாடல்களில் ஒன்று என்றாலும், வேகமான அதன் தாளக்கட்டும் ஷைலஜாவின் கூர்மைக் குரலும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

இப்படத்தில் சுசீலாவுடன் ஷைலஜா இணைந்து பாடும் ‘ராகவனே ரமணா ரகுநாதா’ பாடலில் பஜன் பாடல்களுக்குரிய பக்தி மணமும், காதல் ரசமும் ஒரு புள்ளியில் இணைவதை உணரலாம். நிதானமான தாளக்கட்டில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக் கருவிகளுடன் தனது வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷன் முத்திரையை இணைத்து இளையராஜா உருவாக்கிய பாடல் இது. இரண்டாவது நிரவல் இசையில் வயலின் இசைக் கோவையின் மேலடுக்கில் ஒலிக்கும் சுசீலாவின் ஆலாபனை, இப்பாடலின் உச்சபட்ச இனிமைத் தருணம்.

இப்படத்தில் ஜேசுதாஸ் பாடிய ‘ஈரமான ரோஜாவே’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. பேஸ் கிட்டாரின் அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டிருக்கும் காதல் சோக கீதம் இது. தாளக்கட்டில் மிருதங்கத்தின் ஒரு துளி, முதல் நிரவல் இசையில் கனத்த நெஞ்சின் விம்மலைப் போன்ற வயலின் கீற்று, விரக்தியை வெளிப்படுத்தும் விசில் என்று இப்பாடலின் ஒவ்வொரு நொடியிலும் இசை நுணுக்கங்களைப் புதைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் பனியால் உருவான மேகத்தின் நகர்வைப் போன்ற வயலின் இசைக் கோவை, நம்மைத் தழுவியபடி நகர்ந்து செல்வதை உணர முடியும்.

இப்படத்தின் மிக முக்கியமான, அற்புதமான டூயட், ஜேசுதாஸ் சுசீலா பாடிய ‘பாட வந்ததோர் கானம்’ பாடல். சுசீலாவின் ‘லாலலா’வுடன் தொடங்கும் இப்பாடலிலும் தாளக்கட்டில் மிருதங்கத்தைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. பல்வேறு இசைக் கருவிகளின் நடுவே பியானோவைப் பிரதானமாக ஒலிக்கச் செய்த அரிதான பாடல்களில் ஒன்று இது.

பல்லவியிலிருந்தே பியானோவின் உரையாடல் தொடங்கிவிடும். முதல் நிரவல் இசையில் விண்கல்லின் வீழ்ச்சியைப் போன்ற ஒற்றை வயலின் நீட்சி ஒலிக்கும். சரணத்தில், ‘கண்ணில் குளிர்காலம்… நெஞ்சில் வெயில் காலம்’ எனும் வரியின்போது அந்த இரண்டு பருவங்களையும் இசையாலேயே உணர்த்தியிருப்பார் இளையராஜா. பாந்தமான அமைதியுடன் ஜேசுதாஸும், காதலின் பரவசத்தை வெளிப்படுத்தும் குரலில் சுசீலாவும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள்.

இளையராஜா பாடல்களின் உடனடி வெற்றிக்கு, தனித்த சுவை கொண்ட மெட்டுக்கள் காரணம் என்றால் 30 ஆண்டுகள் தாண்டியும் அவை ரசிகர்களின் மனதில் வியாபித்திருப்பதற்குக் காரணம், வெவ்வேறு மனச் சித்திரங்களை எழுப்பும் அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷன்தான். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷன் மேதைமைக்குச் சான்றுகள்.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் `பான்’ கட்டாயம்: ஹோட்டல் பில்களுக்கு உத்தரவு இன்று முதல் அமல்

Return to frontpage

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக ரூ. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹோட்டல் பில்களுக்கு நிரந்தர கணக்கு என் (பான்) கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்புது உத்தரவு புத்தாண்டு முதல் (ஜனவரி 1) அமலுக்கு வருகிறது.

நிரந்தர கணக்கு எண் தற்போது பல்வேறு நிலைகளில் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 2 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பிலான தங்க நகைகளை வாங்குவோர் கட்டாயம் நிரந்தர கணக்கு எண் (பான்) விவரம் அளிக்க வேண்டும். கடன் அட்டை மூலம் இத்தொகை செலுத்தப்பட்டாலும் கட்டாயம் பான் எண் விவரம் அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அதேபோல ரூ. 10 லட்சத்துக்கு மேற்பட்ட அசையா சொத்துகளை பரிவர்த்தனை செய்தாலும் பான் எண் அவசியமாகும். சிறிய அளவில் முதலீடு செய்து வீடு வாங்குவோருக்கு இது ஓரளவு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். முன்னர் இந்த வரம்பு ரூ. 5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குறித்த கால வரையறையுடன் கூடிய சேமிப்புத் திட்டங்களில் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்வோர் கட்டாயம் பான் எண் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் இல்லாத பிற நிதி நிறுவனங்களில் (என்பிஎப்சி) முதலீடு செய்வோரும் பான் விவரத்தை அளிக்க வேண்டும்.

ரூ. 50 ஆயிரம் வரையிலான தொகையைச் செலுத்தி கேஷ் கார்டு மற்றும் முன்கூட்டி பணம் செலுத்தி பெறும் பிற வசதிகளைப் பயன்படுத்துவோரும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத ரூ.1 லட்சத்துக்கு மேலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் பான் விவரத்தை அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து வங்கிக் கணக்குக ளுக்கும் நிரந்தர கணக்கு எண் (பான்) அவசியம் அளிக்க வேண்டும். பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்துக்கு மட்டும் இது அவசியம் இல்லை.

சமீபத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரூ.2 லட்சத்துக்கு மேலான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் அதாவது ரொக்கமாகவோ அல்லது கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டால் பான் அட்டை விவரம் கட்டாயம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

2015-16-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

தற்போது இது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பான ரூ. 5 லட்சத்தைவிட இது குறைவாகும்.

வங்கிகளில் ரொக்கமாக ரூ. 50 ஆயிரம் செலுத்துவது, காசோலை மற்றும் வரைவோலை பெற ஒரே நாளில் ரூ.50 ஆயிரமோ அதற்கு மேலோ செலுத்துபவர்கள் பான் அட்டை விவரத்தை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் பொதுத்துறை வங்கிகளில் கணக்கு தொடங்கினால் அந்த கணக்கை வைத்திருப்பவர்கள் மட்டும் பான் அட்டை விவரத்தை தாக்கல் செய்யத் தேவை யில்லை.

இது தவிர எந்த வங்கியில் கணக்கு தொடங்கினாலும் குறிப்பாக கூட்டுறவு வங்கிகளில் தொடங்கினாலும் பான் அட்டை விவரத்தைத் தாக்கல் செய்ய முடியும்.

UGC asks varsities to adopt online admission process


The University Grants Commission has urged universities – private and public - to adopt online admission system for all programmes offered by them from the next academic year.

The aim is to ensure greater efficiency and promote transparency, besides enabling parents and students to make informed choices, the UGC has said in its notice.

Though professors feel that the system would not only usher in a paperless admission process but also bring about some amount of transparency, they are uncertain if it can be implemented immediately.

While Anna University and the Tamil Nadu Dr. MGR Medical University have in place a single window admission process, they also allow candidates to purchase application forms. Thousands of candidates purchase the hard copy of the forms. The 11 State-run arts and science universities have started publishing exam results online, but many candidates rely on hard copy of application forms even in autonomous colleges.

A few years ago government colleges implemented the single-window system of admission. This has cut the cost on application forms for students, says P. Sivaraman, president of the Government College Teachers Manram.

During her tenure as Vice-Chairperson of the Tamil Nadu State Council for Higher Education Cynthia Pandian had tried to introduce single-window system of admission for postgraduate programmes in arts and science colleges. “She had wanted all universities to sent particulars but no one responded,” recalls K. Pandiyan, former State president of Association of University Teachers.

In the 1980s, the government issued an order empowering regional joint director to receive details of admission from colleges on a daily basis during the season. The order also specifies that colleges should submit admission particulars subject-wise and community-wise.

Colleges should display vacancies on the notice board too. “Yet, for the last 15 years no college has followed the rule,” Prof. Pandiyan says, adding that universities should not have trouble implementing the notice as already hall tickets and exam results are issued online. But he wonders how private institutions would react.

The Registrar of a private university in South Chennai points out that such a system would work only for programmes that admit without entrance exams. “It is a good idea but applicability is the issue. We are thinking about taking counselling online but it is in the preliminary stages,” the official informs.

UGC Vice Chairman H. Devaraj, however, says the aim is to expedite the admission process, bring in transparency and create a database.

HAPPY NEW YEAR 2016


சென்னை வெள்ள நிவாரணம்: ரூ.10 கோடி திரட்டிய சிங்கப்பூர் ஊடகங்கள்,,,dinamani

சென்னை வெள்ள நிவாரணம்: ரூ.10 கோடி திரட்டிய சிங்கப்பூர் ஊடகங்கள்

First Published : 01 January 2016 01:03 AM IST
சென்னை வெள்ள நிவாரணத்துக்காக சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் சார்பில் 2,14,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) நிதி திரட்டப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அந்நாட்டைச் சேர்ந்த "மீடியா கார்ப்' என்ற நிறுவனம் வெளியிட்ட செய்தி: சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு "மீடியா கார்ப்' நிறுவனத்தின் கீழ் இயங்கும் வசந்தம் தொலைக்காட்சியும், ஒலி பண்பலை அலைவரிசையும் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டன. "லிட்டில் இந்தியா ஷாப்கீப்பர்ஸ்', "ஹெரிடேஜ் அúஸாசியேஷன்' உள்ளிட்ட நிறுவனங்களும் அந்தப் பணிகளில் இணைந்து பணியாற்றின.
 ஹிந்து அறக்கட்டளை வாரியம், நற்பணி பேரவை, சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவுவிடுதிகள் சங்கம், சிங்கப்பூர் தமிழ் சமூகத்துக்கான தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவையும் நிவாரண நிதி திரட்டும் பணிகளுக்கு பெரும் பங்காற்றின.
 இதுவரை 2,14,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) நிதி திரட்டப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் சென்னை வெள்ளத்துக்கு நிவாரண நிதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

வணிகப் பொருளாகிவிட்ட வாடகைத் தாய்கள்

Dinamani


By ரமாமணி சுந்தர்

First Published : 30 December 2015 01:02 AM IST


திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தைப் பேறு கிட்டாத தம்பதிகளுக்கு இனப் பெருக்கத்திற்கு உதவும் தொழில்நுட்பங்கள் (Assisted Reproductive Technology) வரப்பிரசாதமாக விளங்குகின்றன. குழந்தையின்மை மருத்துவத்தில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்த கண்டுபிடிப்பு, IVF (in vitrofertilization) எனப்படும் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்யும் தொழில்நுட்பம்.
1978-ஆம் ஆண்டு ஜூலை மாதம், IVF செயற்கைக் கருவூட்டல் முறையைப் பயன்படுத்தி உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையைப் பிறக்க வைத்தார் இங்கிலாந்து நாட்டு மகப்பேறு மருத்துவர் பேட்ரிக் ஸ்டேப்டேயும், விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்சும். (இவர் இந்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றார்).
இந்த மருத்துவ அதிசயம் நடந்த இரண்டே மாதங்களில், இரண்டாவது சோதனைக் குழாய் குழந்தையை நமது நாட்டில் பிறக்கச் செய்து சாதனை புரிந்தார் கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் முகோபாத்யாய்.
செயற்கைக் கருவூட்டல் முறையில், பெண்ணின் சினைப்பை முட்டை தூண்டப்பட்டு, அது வெளியே எடுக்கப்பட்டு, ஆண் விந்து அணுவுடன் சேர்த்து கருவை உருவாக்கி, உருவான கருவை குறிப்பிட்ட நாள்கள் வரை இன்குபேட்டரில் வளர்த்து, பிறகு வளர்ந்த கரு தாயின் கருப்பைக்குள் வைக்கப்படுகிறது.
இந்த செயற்கைக் கருவூட்டல் முறையின் வெற்றிதான், ஒரு பெண்ணின் கருப்பைக்கு குழந்தையைப் பத்து மாதங்கள் சுமப்பதற்கான சக்தி இல்லாமல் இருந்தால்,அல்லது வேறு ஏதாவது மருத்துவச் சிக்கல் இருந்தால், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருவை, வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி, அவள் மூலம் குழந்தையைப் பெற முடியும் என்பதைச் சாத்தியமாக்கியது. இதுவே, வாடகைத் தாய் என்ற கருத்திற்கு வித்திட்டது.
1986-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாடகைத் தாயின் மூலம் உலகின் முதல் குழந்தை பெற்றெடுக்கப்பட்டது. இந்தியாவில், 2001-ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டில் வாழும் இந்திய தம்பதியருக்காக வாடகைத் தாய் ஒருவர், குழந்தையைப் பெற்றெடுத்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில்தான் வாடகைத் தாய் சேவை மையங்கள் அதி வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன
தற்பொழுது தில்லி, மும்பை, சென்னை போன்ற எல்லா பெரு நகரங்களிலும் செயற்கைக் கருவூட்டல் மையங்களுக்கும், வாடகைத் தாய் சேவைக்கும் பஞ்சமில்லை என்றாலும், நமது நாட்டில் வாடகைத் தாய் சேவைக்கு பிரசித்தி பெற்ற இடம் குஜராத் மாநிலத்திலுள்ள ஆனந்த் எனும் ஊர்தான்.
நாட்டில் பால் தட்டுப்பாடு என்பதை அறவே மறக்கச் செய்து வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட ஆனந்த், இன்று பல தம்பதியருக்கு, குறிப்பாக வெளிநாட்டினருக்கு, குழந்தை பாக்கியத்தை அளித்து அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. வாடகைத் தாய்களின் சுற்றுலாத் தலமாக மாறி விட்ட ஆனந்த், கடந்த பத்தாண்டுகளில், செயற்கைக் கருவூட்டல் மையங்கள், வெளிநாட்டினர் தங்குவதற்கான விடுதிகள், உணவகங்கள், வாடகைக் கார்கள், ஆட்டோக்கள், சுற்றுலா முகவர்கள் மற்றும் வணிக வளாகங்கள் என மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
சுமார் இரண்டு லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஆனந்தில், 5 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் துறையில் உள்ளனர். சுமார் ஆயிரம் பெண்மணிகள் தங்கள் சினை முட்டைகளைத் தானமாக வழங்குவதிலும், தங்கள் கருப்பையை வாடகைக்கு விற்று குழந்தையைப் பெற்றுக் கொடுப்பதிலும், பிறந்த குழந்தைக்கு சில மாதங்கள் வரையில் தாய்ப் பால் புகட்டி வளர்ப்பதிலும், ஈடுபட்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தித் திரைப்பட உலகின் பிரபல நடிகர்களான ஆமிர் கானும், ஷாருக் கானும் வாடகைத் தாயின் மூலம் குழந்தை ஒன்றைப் பெற்றது பரபரப்பாக பேசப்பட்ட விஷயம். இப்படி ஒரு சில இந்தியர்களும் வாடகைத் தாய்களின் சேவையை நாடுகிறார்கள் என்றாலும், இந்தியாவிற்கு வரும் அயல் நாட்டவர்களுடன் ஒப்பிடுகையில், வாடகைத் தாயின் சேவையை நாடும் உள்நாட்டு தம்பதியரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும், இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்களும் மட்டுமல்லாது, அயல் நாட்டவர்களும் வாடகைத் தாயைத் தேடி இந்தியாவிற்கு வருவதற்கான காரணம் என்ன?
இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற பல நாடுகளிலும், அமெரிக்காவின் பல மாநிலங்களிலும், வேறு ஒரு பெண்மணி மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை, குறிப்பாக வர்த்தக ரீதியாக, குழந்தை பெற்றுக் கொள்வதை சட்டம் தடை செய்கிறது.
நமது நாட்டில் வாடகைத் தாய்களின் மூலம் குழந்தை பெறுவதற்கு தடையொன்றும் இல்லை. இதுவே பல்வேறு நாடுகளிலிருந்து தம்பதிகள் இந்தியாவை நோக்கி வருவதற்கு முக்கியக் காரணம். நமது நாட்டின் நவீன மருத்துவ தொழில்நுட்பமும், ஆங்கிலம் பேசும் மருத்துவர்களும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாட்டினரை இந்தியா ஈர்ப்பதற்கான மேலும் சில காரணங்கள்.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. மேலும், நமது நாட்டில் பணத்திற்காக தங்கள் சினை முட்டைகளை தானம் செய்வதற்கும், கருப்பையை வாடகைக்கு விடுவதற்கும் பல ஏழை, எளிய பெண்கள் தயாராக இருக்கிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, வாடகைத் தாயாக செயல்பட்ட பெண்மணிகளில் பலர் கணவனால் கைவிடப்பட்டவர்கள். பெரும்பாலான வாடகைத் தாய்கள், வீட்டு வேலை அல்லது கட்டடப் பணிகளில் கூலி வேலை செய்பவர்கள் அல்லது செயற்கைக் கருவூட்டல் மருத்துவ மனைகளில் பணியாற்றும், செவிலித் தாய்கள்.
ஒப்பந்தம் செய்து கொள்ளும் பெற்றோர்கள் தங்களுக்காகக் குழந்தையைச் சுமக்கும் பெண்ணிற்கு நான்கு அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரையில் ரொக்கப் பணம் கொடுக்க வேண்டும். இதைத் தவிர, பிரசவம் ஆகும் வரையில் மாதா மாதம் சத்துள்ள உணவு, மருந்து மாத்திரைகள், மற்றும் பிரசவத்திற்கான செலவு என்று எல்லா செலவுகளையும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் தம்பதியரே கவனித்துக் கொள்ள வேண்டும்.
வாடகைத் தாயாகச் செயல்படும் ஏழைப் பெண்களுக்கு நான்கு, ஐந்து லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகை. தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை இவர்கள் பெரும்பாலும் வீடு வாங்குவதற்கு, மருத்துவச் செலவிற்கு அல்லது குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று குஜராத்தில் நடத்தப்பட்ட ஆய்வு சொல்கிறது.
தற்பொழுது நமது நாட்டில் வாடகைத் தாய் வர்த்தகம் ஆண்டொன்றிற்கு சுமார் 900 கோடி ரூபாயிலிருந்து 1,300 கோடி வரையில் புழங்கும் தொழிலாக வளர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படி, கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இந்தத் தொழிலைச் சார்ந்தவர்களுக்கு, சமீபத்தில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
வர்த்தக ரீதியாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அரசு ஆதரிக்கவில்லை என்று அறிவித்ததோடல்லாமல், அயல் நாட்டவர்கள் இந்தியாவுக்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதையும் தடை செய்துள்ளது. இனப் பெருக்கத்திற்கு உதவும் நாட்டிலுள்ள எல்லா தொழில்நுட்ப மையங்களுக்கும் சென்ற அக்டோபர் 27-ஆம் தேதியன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தடை உத்தரவு அனுப்பியுள்ளது.
வெளிநாட்டவர்கள் இங்கு வந்து வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெறுவதில், குழந்தையை அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான கடவுச் சீட்டு, விசா போன்றவைகளைப் பெறுவது போன்ற பிரச்னைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.
வாடகைத் தாய் தங்களுக்காக பிள்ளையைச் சுமந்து கொண்டிருந்த அந்த பத்து மாத காலத்திற்குள், அதன் ஜப்பானியப் பெற்றோர் விவாகரத்து செய்து விட, தனக்கு அக்குழந்தை வேண்டாம் என்று தாய் முடிவெடுக்க, அந்தப் பெண் குழந்தையை தந்தை தத்தெடுக்க இந்திய சட்டம் அனுமதி அளிக்காததால் தர்ம சங்கடமான நிலைமை உருவாகியது அனைவரும் அறிந்ததே!
பணம் படைத்த அயல் நாட்டினர், நமது ஏழை எளியப் பெண்களைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. நமது பெண்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் உடலுக்கு கூறு விளைவித்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் இந்தத் தொழிலில், வாடகைத் தாய்கள், குழந்தையின் பெற்றோர்கள் போடும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு குழந்தையை உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்களாகவும், குழந்தைகள் விற்பனைப் பொருளாகவும் ஆகி விட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணிற்கும், பணத்திற்காக குழந்தையைப் பெற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இடையே ஏற்படும் இந்த ஒப்பந்தத்தில் இரண்டு தரப்பு பெண்களும் பயனடைகிறார்களே, இதில் என்ன தவறு? என்று கேட்கிறார்கள் மற்றொரு சாரார்.
இன்று நாட்டில் பெருகிவரும் மருத்துவச் சுற்றுலாவில், வாடகைத் தாய் தொழிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டிற்கு கணிசமான அன்னியச் செலாவணியை ஈட்டிக் கொடுத்து, வேலை வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தொழிலை தடை செய்ய வேண்டுமா என்றக் கேள்வியும் எழாமல் இல்லை.
செயற்கைக் கருவூட்டல் மற்றும் வாடகைத் தாய் தொழில்களுக்கான விதிமுறைகளை எடுத்துரைக்கும், இனப் பெருக்கத்திற்கு உதவும் தொழில்நுட்ப (ஒழுங்காற்று) மசோதா 2014, இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
இதில் குறிப்பிட்டுள்ள விதி முறைகளைக் கடைப்பிடித்து, வாடகைத் தொழிலை, ஒழுங்குபடுத்தி, வெளிநாட்டவர் வாடகைத் தாயைப் பயன்படுத்துவதற்கானத் தடையை நீக்கினால், வாடகைத் தாய்களின் சேவையின் மூலம் பலரும் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.
வாடகைத் தாயாகச் செயல்படும் ஏழைப் பெண்களுக்கு நான்கு, ஐந்து லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகை.
தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை இவர்கள் பெரும்பாலும் வீடு வாங்குவதற்கு, மருத்துவ செலவிற்கு அல்லது குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்துகிறார்கள் என்று குஜராத்தில் நடத்தப்பட்ட ஆய்வு சொல்கிறது.

NEWS TODAY 16.09.2024