Friday, March 25, 2016

சேமிப்பவர்கள் ஏமாளிகளா?

சேமிப்பவர்கள் ஏமாளிகளா?

DINAMANI

By எஸ். ஸ்ரீதுரை


First Published : 24 March 2016 01:29 AM IST
இந்தியா ஓர் ஆன்மிக தேசம்தான், சந்தேகமில்லை. நேற்று இருப்பவர்கள் இன்று இல்லை, இன்று இருப்பவர்கள் நாளை இருக்கப் போவதுமில்லை என்ற வேதாந்தக் கருத்துகள் மக்களுக்குத் தெரிந்ததுதான்.
அதற்காக, யாரும் எதிர்காலத்துக்கென்று நாலு காசு சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது என்றோ, எல்லாவற்றையும் தெய்வம் பார்த்துக் கொள்ளும் என்று மூலையில் சும்மா உட்கார்ந்து கொள்ளவேண்டும் என்றோ கூறிவிட முடியுமா..?
அப்படித்தான் சொல்கிறது நமது மத்திய அரசின் நிதி அமைச்சகம். சிறு சேமிப்பு, ஆயுள் காப்பீடு என்றெல்லாம் காலம் காலமாக நமது தேசத்தின் கோடிக்கணக்கான மக்களையும், சேமியுங்கள், சேமியுங்கள் என்று சொல்லிவிட்டு, இன்று அரசு நிதி நிறுவனங்களில் சேமிப்பவர்களை "அட அப்பாவிகளே! இன்னுமா எங்களை நம்பி சேமித்துக் கொண்டிருக்கிறீர்கள்'? என்று எள்ளி நகையாடிக்கொண்டிருப்பதை கண்கூடாகப் பார்க்கிரோம்.
30 ஆண்டுகளுக்கு முன்பு, தபால் துறையின் கிஸான் பத்திரத்தில் ஒருவர் சேமிக்கும் தொகை ஐந்தரை வருடங்களில் இரட்டிப்பாகும். இந்திர விகாஸ் பத்திர சேமிப்பு ஐந்தே வருடங்களில் இரட்டிப்பாகும். அரசுத்துறை ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பிராவிடண்ட் ஃபண்டு தொகைக்கு 11% வட்டி உண்டு. ஒரு நிதியாண்டு முழுவதும் அதிலிருந்து பணம் எடுக்காத பட்சத்தில் போனஸ் வட்டியும் உண்டு.
அரசுத் துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நிலை வைப்புக்கான குறைந்த கால முதலீட்டுக்கே 12.5%, நீண்ட கால நிலை வைப்புகளுக்கு 15% வரையிலும் வட்டி கொடுக்கப்பட்டது. தபால் துறை மற்றும் பொதுத் துறை வங்கிகளில் துவங்கப்படும் தொடர்வைப்புகளுக்கும் 12% வட்டி இருந்தது.
ஏழை எளியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஓய்வூதியம் பெறுபவர், சிக்கனம் பேணும் இல்லத்தரசிகள் ஆகிய எல்லோருடைய சேமிப்புகளுக்கும் பாதுகாப்பானதாகவும், நியாயமான லாபம் தேடித் தருவதாகவும் விளங்கிவந்த இத்தகைய சிறு சேமிப்புகளுக்கும் அடுத்தடுத்து வந்த அரசுகளால் அதிர்ச்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை வாழ்விப்பதற்காகவே அவதரிக்கின்ற ஒவ்வொரு நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கி ஆளுநர்களும் தங்களது மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசனைகள் பல செய்து ஒரு முடிவுக்கு வந்து, இந்தியத் திருநாட்டின் சிறு சேமிப்பாளர்களை ஓட ஓட விரட்டிவிட்டு, அதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த உத்தேசித்திருப்பதாகத் தோன்றுகின்றது.
இல்லாவிட்டால், ஒரு காலத்தில் சாதாரண சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்பட்ட 7% வட்டியை நீண்டகால டெபாசிட்டுகளுக்கு வழங்கும் வினோதம் எங்காவது நடைபெறுமா?
அப்படி அற்ப சொற்பமாக வழங்கப்படும் வட்டியிலும் TDS என்ற வகையில் ஒரு பிடித்தம் செய்து அதை வருமான வரித்துறை எடுத்துக் கொள்ளுமா? அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டத்திற்கான போனஸும் 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு அதுவும் இல்லாமல் ஆக்கப்படுமா? மூத்த குடிமக்கள் நிலை வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் இப்படிக் கண்மூடித்தனமாகக் குறைக்கப்படுமா?
1990களில் ஆங்காங்கே நகைக் கடைகள், மகிழுந்து விற்பனைக் கூடங்கள், தேக்குப் பண்ணை வியாபாரிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் முளைத்து 18%, 24% வட்டி என்றெல்லாம் ஆசை காட்டியதில் மக்கள் பலரும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து முதலுக்கே மோசமாகிப் போனது நினைவிருக்கலாம்.
அந்தச் சுனாமிகளிலிருந்தெல்லாம் தப்பித்த மக்கள்தான் இப்போது, சேமித்த சொற்பப் பணத்தைக் காப்பாற்றிகொண்டால் போதும் என்றும், அதையும் தபால் துறை, பொதுத் துறை வங்கிகள் போன்றவற்றில் முதலீடு செய்தால் குறைந்த வட்டியானாலும், போட்டு வைத்த பணம் பத்திரமாயிருக்கும் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்களைச் சீரமைக்கிறோம் என்ற பெயரில், குறைத்துக் கொண்டே போனால், அப்புறம் யாருக்குத்தான் சேமிப்பில் ஊக்கமும் உற்சாகமும் இருக்கும்..?
விலைவாசி உயர்வு, விழித்தது முதல் உறங்குவது வரை கடன், கடன் அட்டை, மாதத் தவணை விற்பனையில் மகிழுந்து முதல் சகலமும் விற்பனை, கெளரவத்திற்காக வரவுக்கு மீறிய செலவு... என்று எல்லாவற்றையும் கடந்து கொஞ்சமாவது சேமிக்க வேண்டும். அதையும் அரசுத் துறை நிதிகளில் சேமிக்கவேண்டும் என்று முனைகின்ற நடுத்தர மக்களை வட்டிக் குறைப்பு, வட்டிக்கு வரி என்றெல்லாம் அரசே மிரட்டுவது நியாயம்தானா..?
ஒருபுறம் சேமிக்கும் மக்களை வெறுப்பேற்றுவது, கல்லூரிப் படிப்பிற்கும், விவசாயத்திற்கும், வீடு கட்டுவதற்கும் வங்கிக் கடன் வாங்கும் மக்களை அலைக்கழித்து அவமானப்படுத்துவதும், மறுபுறம் எல்லையில்லாத கடன்களை மல்லையாக்களுக்குக் கொடுத்துவிட்டு விழிப்பதுதான் சிறந்த நிர்வாகம் என்பதன் அளவு கோலா என்பதை நம்மை ஆள்பவர்களும், அதிகாரிகளும் யோசிக்க வேண்டும்.
மொத்தத்தில் சொல்வதென்றால், அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்களில் இனி முதலீடு செய்வதும் ஒருவகை முட்டாள் தனமோ, ஏமாளித்தனமோ என்ற எண்ணம் நமது மக்களின் மனத்தில் தோன்றுவதற்கு முன்பு உரியவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும்தான்... ஆனால், அதற்கு ஏழை, எளிய சேமிப்பாளர்களின் வயிற்றில் அடிப்பதைத் தவிர வேறு சிறந்த வழிமுறைகள் உண்டு. நம்மை வழி நடத்தும் பொருளாதார அறிஞர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும், நெஞ்சில் ஈரத்தோடு...

Thursday, March 24, 2016

டி.எம்.சவுந்தரராஜன் 10 ராஜலட்சுமி சிவலிங்கம்



பிரபல பின்னணி பாடகர்

‘டிஎம்எஸ்’ என்று அன்போடு அழைக்கப்படும், தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் (T.M.Soundararajan) பிறந்த தினம் இன்று (மார்ச் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# மதுரையில் சவுராஷ்டிரக் குடும்பத்தில் (1923) பிறந்தார். தந்தை தொகுளுவ மீனாட்சி ஐயங்கார், கோயில் அர்ச்சகர். ‘தொகுளுவ’ என்பது குடும்பப் பெயர். பஜனைப் பாடல் பாடுவதில் வல்லவர். இவரும் இயல்பாகவே பாடுவதில் நாட்டம் கொண்டிருந்தார்.

# பள்ளி இறுதிப் படிப்பு வரை பயின்றார். காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று, கச்சேரிகள் செய்தார். எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களை மேடைகளில் அவரைப் போலவே பாடினார்.

# பிரபல இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்னி தனது ‘கிருஷ்ண விஜயம்’ (1950) திரைப்படத்தில் ‘ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி’ பாடலைப் பாட வாய்ப்பு அளித்தார். தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தன. ‘தூக்குத் தூக்கி’ (1954) திரைப்படப் பாடல்கள் இவரைப் புகழேணியில் ஏற்றிவிட்டன.

# 1960, 70-களில் இவர் பாடாத படங்களே இல்லை எனலாம். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட அனைவருக்கும் பாடி 5 தலைமுறை பின்னணிப் பாடகர் என்ற பெருமை பெற்றார். அந்தந்த நடிகருக்கேற்ப குரலை மாற்றிப் பாடும் ஆற்றல் பெற்றவர்.

# இந்தி இசையமைப்பாளர் நவ்ஷாத் இவரை பலமுறை அழைத்தும் ‘எனக்கு தமிழ் போதும்’ என்று மறுத்துள்ளார். இது இந்தி சினிமாவின் நஷ்டம் என்றாராம் நவ்ஷாத். இவரது ‘ஓராயிரம் பாடலிலே’ பாடலைக் கேட்டு உருகிய இந்தி பாடகர் முகம்மது ரஃபி, இவரது தொண்டையை வருடி ‘இங்கிருந்துதானா அந்த குரல் வருகிறது?’ என கேட்டாராம்.

# 60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி, மெல்லிசைப் பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார். இவரது முருக பக்திப் பாடல்கள் மிகவும் பிரசித்தம்.

# தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். பல நாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார். பட்டினத்தார், அருணகிரிநாதர், அகத்தியர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

# பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்ம உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். அருமையாக ஹார்மோனியம் வாசிப்பார். 2002-ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

# காஞ்சி மஹா பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர். இவரை ‘கற்பகவல்லி’ பாடலை பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்த காஞ்சிப் பெரியவர், தான் போர்த்தியிருந்த சால்வையை பரிசாக அளித்தார். பாடலின் பொருள் உணர்ந்து பாட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். திருப்புகழ் பாடும் வாய்ப்பு வந்தபோது, வாரியாரிடம் சென்று அதன் பொருளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகே பாடினார்.

# தன் பாடல்கள் மூலம் இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் டிஎம்எஸ் 91-வது வயதில் (2013) மறைந்தார்.

கவுசல்யாக்களின் கதி என்ன? ....பாரதி ஆனந்த்



சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதற்காகத் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட இளவரசனை மறந்துவிட்டோம்... படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் பற்றிய விவாதங்கள் ஓய்ந்துவிட்டன.. இப்போது பரப்பபாகப் பேசப்படும் சங்கர் கொலையும் காலத்தினால் கட்டாயம் அழிந்துவிடும்.

ஆனால், இந்தச் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதியின் பிடியில் கருகிய திவ்யா, ஸ்வாதி, கவுசல்யாவின் எதிர்காலத்தைப் பற்றி நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இன்று இவர்களது நிலைமை என்ன? வறட்டு சாதி கவுரவத்தினால் தலைக்கேறிய ஆணவத்துக்கு இரையானதைத் தவிர இவர்கள் அடைந்த பலன் என்ன?

இளவரசன் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் இந்தச் சமூகத்தில் சுதந்திரமாக வலம்வருகின்றனர். கோகுல்ராஜ் கொலையில் சம்பந்தப்பட்ட யுவராஜ் போலீஸுக்கே சவால்விடும் அளவுக்குச் செய்த அலப்பறைகளை யாரும் மறந்திருக்க முடியாது. சங்கரைக் கொலை செய்தவர்கள் சலனமில்லாமல் சாவியை மாட்டி வண்டியைச் செலுத்தியபோது தெரிந்த சாதி வெறி இன்னும் சில நாட்களாவது மனசாட்சி உள்ளவர்களின் நினைவுகளில் நிற்கும்.

சாதிப் பெருமையை, குலப் பெருமையைக் காக்க வேண்டிய நிர்பந்தம் பெண்கள் மீது இச்சமூகத்தால் திணிக்கப்பட்டிருக்கிறது.

உயர்கல்வி, வேலை நிமித்தமாகச் சொந்த ஊரை விட்டு நகரங்களுக்குச் செல்லும் பெண் பிள்ளைகளுக்குக் குடும்பப் பெரியவர்கள் திருநீறு இட்டு ஆசீர்வதிக்கும்போது, ‘நம் குடும்ப கவுரவத்தை நீதான் அம்மா காப்பாற்ற வேண்டும்’ என்றே ஆசீர்வதிப்பார்கள். அதன் பின்னால் உள்ள அரசியல் சாதி மாறி திருமணம் என்பதைக் கனவிலும் நினைத்துவிடாதே என்பதே. அதையும் மீறி காதல் செய்ததாலேயே இன்று சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகிறார்கள் சில பெண்கள்.

இன்று தனி மரமாக நிற்கும் கவுசல்யாவின் ஒற்றைக் கோரிக்கை, தன் படிப்பைத் தொடர வேண்டும் என்பதுதான். இளவரசன் தற்கொலைக்குப் பின் தனக்கு மனநல ஆலோசனை வழங்கிய மருத்துவர்களிடம் திவ்யா தெரிவித்ததும் படிப்பைத் தொடர வேண்டும் என்ற விருப்பத்தையே.

‘படிப்பைத் தொடர உதவுங்கள்’ என கவுசல்யா முன்வைத்த வேண்டுகோளுக்கு சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகள் அதிர்ச்சி தருகின்றன. படிக்கும்போது காதலில் விழுந்ததற்காகக் கிடைத்த தண்டனையை அனுபவியுங்கள், உங்கள் நிலை மற்றவர்களுக்கு ஒரு பாடம் போன்ற கருத்துகளே பகிரப்படுகின்றன. வீட்டில் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு இருக்கும் என்ற பயத்திலேயே அவசரமான திருமண பந்தத்துக்கு திவ்யாவும் கவுசல்யாவும் தள்ளப்பட்டனர். ஒருவேளை அவர்கள் காதலுக்கு அவர்கள் வீடுகளில் அங்கீகாரம் இருந்திருந்தால் படிப்பை முடித்துவிட்டுத் திருமணத்தைப் பற்றி யோசித்திருப்பார்கள். எந்தத் திருமணம் தங்களைப் பிரிக்காது என நினைத்தார்களோ அதே திருமணம்தான் அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கிறது.

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோரைக் கொன்று தாகம் தீர்த்துக் கொண்ட சாதி வெறி திவ்யாவையும், கவுசல்யாவையும் அவர்கள் பாதையில் விட்டுவைக்குமா? சமூகத்தை நோக்கிக் கரம் நீட்டியிருக்கும் திவ்யா, கவுசல்யாக்களுக்கு நாம் செய்யப்போவது என்ன? இதற்கான பதிலில்தான் அவர்கள் வாழ்வும் எதிர்காலமும் அடங்கியிருக்கின்றன.

எம்ஜிஆர் 100 | 28 - ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’!

‘சிரித்துவாழ வேண்டும்’ பட பூஜையில் எம்.ஜி.ஆரை வரவேற்கிறார் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனின் மகனும் படத்தின் இயக்குநருமான எஸ்.பாலசுப்ரமணியன்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. தனக்கு கெடுதல் செய்தவர்களுக்கு கூட நன்மை செய்யும் எண்ணம் கொண்டவர். அப்படிப்பட்டவர், தனக்கு உதவி செய்தவருக்கு நன்மை செய்யாமல் விடுவாரா? அப்படி எம்.ஜி.ஆருக்கு உதவி செய்ததோடு, அவரால் உயரத்துக்குச் சென்றவர்களில் முக்கியமானவர் மணியன்.

ஆனந்த விகடன் பத்திரிகையில் பணியாற்றி வந்த மணியன், 1968-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி ஒரு கட்டுரை வேண்டி எம்.ஜி.ஆரை அணுகினார். அந்த நட்பு தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு சென்று வந்து பயணக் கட்டுரைகளை ஆனந்த விகடனில் எழுதிக் கொண்டிருந்தார் மணியன். அந்த அனுபவத்தால் வெளிநாடுகளில் அவருக்கு தொடர்புகள் உண்டு. அந்த சமயத்தில்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

வெளிநாடுகளில் படம் எடுப்பதற்காக எம்.ஜி.ஆர். செல்வாரா? மாட்டாரா? ஏறத் தாழ ஒன்றரை மாதம் எப்படி எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் இருக்க முடியும்? இங்கு எவ்வளவு படங்கள் நடிக்க வேண்டியுள் ளது? அரசியல் வேறு இருக்கிறது; எம்.ஜி.ஆர். போகமாட்டார் என்று சந்தேகங்கள், வதந்திகள் றெக்கை கட்டி பறந்த நிலையில், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக வெளிநாட்டுக்கு பறக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்து விட்டார்.

1970-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி, ரசிகர்கள், பொதுமக்கள், திரையுலகினர் வாழ்த்துக்களுடன் எம்.ஜி.ஆர். ஜப்பா னுக்குப் புறப்பட்டுவிட்டார். இங்கே பல்வேறு பணிகள் இருந்தாலும் இனி யும் தாமதிக்காமல் உடனே புறப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்ததற்கு முக்கிய காரணம் எக்ஸ்போ 70 கண்காட்சி. செப்டம்பர் 15-ம் தேதி யுடன் அந்த மகத்தான கண்காட்சி முடியப் போகிறது என்று செய்தி வந்தது. அதற் குள் அங்கு சென்று காட்சிகளை படமாக்கி தமிழக மக்களின் கண்களுக்கு விருந் தாக்க வேண்டும் என்ற துடிப்புதான் எம்.ஜி.ஆரை புறப்பட வைத்தது.

எக்ஸ்போ -70 கண்காட்சி உட்பட, கீழ்திசை நாடுகளில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புகள் நடப்பதற்கு உதவியவர் மணியன். தனது குழுவின ரோடு செப்டம்பர் 5-ம் தேதி டோக்கியோ நகரின் ஹனீதா விமான நிலையம் சென்று இறங்கினார் எம்.ஜி.ஆர்.! அவரை வரவேற்க ஏராளமான தமிழர்கள் திரண்டிருந்தனர். அவர்களோடு ஜப்பா னின் தேசிய உடையான ‘கிமோனோ’ அணிந்த பெண்கள் கையில் மாலையுடன் எம்.ஜி.ஆரை வரவேற்க காத்திருந்தனர்.. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘பன்சாயி...’ பாடலின் ஆரம்பத்தில் நடிகை சந்திரகலா வித்தியாசமான உடை அணிந்திருப்பாரே? அதுதான் ‘கிமோனோ'.

டோக்கியோவில் எம்.ஜி.ஆரை பார்த் தவர்களுக்கு வியப்பு. தனது வழக்கமான தொப்பி, கண்ணாடி, வேட்டி, சட்டையுட னேயே டோக்கியோவில் எம்.ஜி.ஆர். கால் பதித்தார். வரவேற்பை ஏற்றுக் கொண்டு டோக்கியோவின் பிரபல இம்பீரியல் ஓட்டலில் இரவு ஒரு மணிக்கு தான் சென்று தங்கினார் எம்.ஜி.ஆர்.

அசதி, சோம்பல், நீண்ட ஓய்வு இதெல் லாம் எம்.ஜி.ஆர். அறியாத ஒன்று. இரவு ஒரு மணிக்கு ஓட்டலுக்கு சென்று படுத் தாலும் மறுநாள் அதிகாலையிலேயே எம்.ஜி.ஆர். தயாராகிவிட்டார். செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எக்ஸ்போ கண்காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. எட்டு லட்சம் பேர் உள்ளே போய் விட்டார்கள். இனிமேல் உள்ளே வர இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. கண்காட்சிக்கு உள்ளே செல்லும் நுழைவாயில்கள் மூடப்பட்டன.

முக்கியமான அதி காரிகளை சந்தித்து கண்காட்சிக்கு உள்ளே செல்ல அனுமதி பெற்றுத் தந்தார் மணியன். அதிகாரிகளி டம் ‘இந்தோகா ஹிதேகி தகஹாஷி’ என்று ஜப்பானிய மொழி யில் ஒரு அஸ்திரத்தை வீசினார் மணியன். உடனே அனுமதி கிடைத்தது. ஜப்பானில் மக்களால் விரும்பப்படும் புகழ் பெற்ற நடிகரின் பெயர் ஹிதேகி தகஹாஷி. ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’ என்று எம்.ஜி.ஆர். பற்றி மணியன் கூறியது தான் அனுமதிக்கு காரணம்.

மணியனால் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு இன்னொரு பெரும் புதையலும் கிடைத் தது. ஆனந்த விகடன் இதழில் ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர். தனது வாழ்க்கை வரலாற்றை எழுதக் காரணமாக இருந்த வர் மணியன். வெளிநாடு களில் படப்பிடிப்பு நடத்த தனக்கு உதவி செய்த மணிய னுக்கு, பதிலுக்கு உதவ முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.

ஒருநாள் மாலை. சென்னை தியாக ராய நகரில் மணியன் வீட்டு வாசலில் எம்.ஜி.ஆரின் கார் சென்று நிற்கிறது. திடீரென தனது வீட்டுக்கே வந்துவிட்ட எம்.ஜி.ஆரை பார்த்து மணியனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அந்த பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கு முன்பே, அவருக்கு அடுத்த இன்ப அதிர்ச் சியை எம்.ஜி.ஆர். அளித்தார். ‘‘வித்வான் லட்சுமணனுடன் சேர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்குங்கள், நான் நடிக்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

பேப்பரும் பேனாவும் கேட்டு வாங்கி, தனது கையாலேயே படக் கம்பெனியின் பெயரை யும் எழுதினார். அப்போது எம்.ஜி.ஆரால் உதய மானதுதான் ‘உதயம் புரொடக் ஷன்ஸ்’ பட நிறு வனம். அந்நிறுவனம் தயாரித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயவீணை’. பின்னர், படத் தயாரிப்பாளராக மட்டுமின்றி, பத்திரிகை அதிபராகவும் உயர்ந்தார் மணியன்.

‘இதயவீணை’ படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. திமுகவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், கட்சி நிர்வாகிகளின் சொத்து விவரம் கேட்டதையடுத்து, 1972-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி திமுகவில் இருந்து நீக்கப் பட்டார். அதுவரை புரட்சி நடிகராக இருந்தவர் புரட்சித் தலைவரானார். அப்போது, ‘இதயவீணை’ படப்பிடிப்பில் இருந்தார்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட விஷ யத்தைக் கேள்விப்பட்டு, பாயசம் கொண்டு வரச் சொல்லி எல்லாருக்கும் கொடுத்து, தானும் குடித்துவிட்டு, ‘‘இப் போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்றார். படத்தில் கார் விபத்து காட்சி ஒன்று வரும். அன்று அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர். சிறப்பாக எடுத்து முடித்தார்.

‘இதயவீணை’ படம் முதலில் 1972 அக்டோபர் 6-ம் தேதி வெளிவருவதாக விளம்பரம் வந்தது. இடையில் அரசியல் பரபரப்புகள் காரணமாக படம் ‘ரிலீஸ்’ தள்ளிப் போய் அக்டோபர் 20-ம் தேதி படம் வெளியானது. இடைப்பட்ட நாட் களில் அப்போதைய சூழலுக்கேற்ப அரசியல் பொடிவைத்து எழுதப் பட்ட பாடல் காட்சியைப் படமாக்கி, பொருத்தமான இடத்தில் படத் தில் சேர்த்தார் எம்.ஜி.ஆர்.

திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் போது, ரசிகர்களின் அலப்பறையால் தியேட்டரே ஆடிய அந்தப் பாடல்:

‘ஒரு வாலும் இல்லே, நாலு காலும் இல்லே; சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே....’

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

‘இதயவீணை’ படத்தை தொடர்ந்து ‘உதயம் புரொடக் ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய படங் களையும் மணியன் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே 100 நாட் கள் ஓடி அமோக வெற்றி பெற்றன.

- தொடரும்...

மல்லையாவை பிடியுங்கள் பிறகு எங்களிடம் அபராதம் கேளுங்கள்..: பயணியின் பதிலடியால் ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி

மல்லையாவை பிடியுங்கள் பிறகு எங்களிடம் அபராதம் கேளுங்கள்..: பயணியின் பதிலடியால் ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி

Return to frontpage

தெற்கு மும்பையின் புலேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்லதா பன்சாலி. இரு குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை, மகாலஷ்மி ரயில் நிலையத்தில் இருந்து இறங்கிய

போது டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்டுள்ளார். அப் போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததை ஒப்புக் கொண்ட பன்சாலி, இதற்காக ரூ.260 அபராதம் செலுத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித் துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிக்கெட் பரிசோதகர் அங்கிருந்த ரயில்வே போலீஸார் மூலம் அவரை கைது செய்ய முயன்றார்.

இதனால் ஆவேசமடைந்த பன்சாலி, ‘‘வங்கி கடன் ரூ.9,000 கோடியை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள். அதன் பிறகு என்னை கைது செய்யுங்கள்’’ என தெரிவித்தார்.

இதனால் ரயில்வே போலீஸார், அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கிருந்த ரயில்வே பெண் போலீஸ் அவருக்காக அபராத தொகை செலுத்தவும் முன் வந்தார். எனினும் அதை ஏற்காத பன்சாலி சுமார் 12 மணி நேரம் வரை ரயில்வே அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தார்.

‘சாமான்ய மக்களை துன் புறுத்துவதை விட்டு விட்டு, மல்லையா போன்றவர்களை கைது செய்யுங்கள். எதற்காக அவர்களிடம் மட்டும் மென்மை யான போக்கை கடைபிடிக்கிறீர் கள்’ என தொடர்ந்து கேள்வி எழுப்பி யுள்ளார்.

இதனால் திகைத்த அதிகாரி கள் பன்சாலியின் கணவரை வர வழைத்தனர். ஆனால் அவரையும் அபராதம் செலுத்த விடாமல் பன்சாலி நீதிமன்றத்துக்கு சென்று தனது தவறை ஒப்புக் கொண்டார். அத்துடன் அபராதத் துக்கு பதில் 7 நாட்கள் சிறை வாசத்தையும் தேர்ந்தெடுத்தார்.

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று



1923 - மார்ச் 24 : 'கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்; உள்ளம் உருகுதையா, நான் ஆணையிட்டால், யாருக்காக, அமைதியான நதியினிலே ஓடம்...' உட்பட, தமிழக நெஞ்சங்களை உருக்கும் பாடல்களைப் பாடி, நம் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்திருப்பவர், டி.எம்.சவுந்தரராஜன். தன் குடும்பப் பெயரான, தொகுளுவா மற்றும் தந்தை பெயரான மீனாட்சி அய்யங்காருடன் இணைந்தே, டி.எம்.சவுந்தரராஜன் என்றழைக்கப்பட்டார். வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம் மற்றும் கிராமிய மணம் கமழும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், நாகேஷ் உட்பட நடிகர்களின் முகத்தை, தன் குரலின் மூலம், ரசிகர்களின் மனக்கண்ணில் நிலை நிறுத்தும் ஆற்றல் பெற்றவர். 2013, மே 25ம் தேதி இறந்தார். பத்மஸ்ரீ டி.எம்.சவுந்தரராஜன், பிறந்த நாள் இன்று!

வெளிநாட்டு மாணவர்களை கண்காணிக்கிறது மத்திய அரசு!



வெளிநாட்டு மாணவர்களை கண்காணிக்கிறது மத்திய அரசு!
DINAMALAR

புதுடில்லி : வெளிநாட்டு மாணவர்களின் வருகை குறித்து 24 மணி நேரத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பல்கலை.,களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டிலிருந்த கல்வி கற்க இந்தியா வரும் மாணவர்களின் விவரங்களை, பல்கலைகளும், கல்வி நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள், மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதேபோல், ஹோட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநாட்டினர் குறித்து 24 மணி நேரத்தில் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆவணப்புத்தகத்தில் வெளிநாட்டினரின் பெயர், அவர்களின் நாடு, இந்தியா வந்ததன் நோக்கம், இந்தியாவில் அவர்கள் தங்க திட்டமிட்டிருக்கும் நாட்கள், இங்கு அவர்கள் சந்திக்கும் நபர்களின் விவரங்களைச் சேகரித்து பராமரிக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பொருந்தாது என்று தனது அறிவிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ரஷ்யாவில் கழிவறை கழுவ வைத்து கொடுமை; மருத்துவ மாணவர்கள் புகார் மார்ச் 23,2016,12:41 IST


ரஷ்யாவில் கழிவறை கழுவ வைத்து கொடுமை; மருத்துவ மாணவர்கள் புகார்
மார்ச் 23,2016,12:41 IST
DINAMALAR





மருத்துவம் படிக்க வைப்பதாக கூறி, ரஷ்யாவில் கழிவறை கழுவ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தேனி, தஞ்சாவூர், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களை சேர்ந்த, எட்டு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம், ஒரு புகார் மனு அளித்தனர்.


கோவை ஆர்.எஸ்.புரத்தில், ஆதாம் டிரஸ்ட் - ஆல்பா கன்சல்டன்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தினர், பிளஸ் 2 முடித்த மாணவர்களை, ரஷ்யாவில் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க வைப்பதாக விளம்பரப்படுத்தினர். கடந்தாண்டு நிறுவனத்தை அணுகினோம். அப்போதுஅட்மிஷன் செய்ய, 25 ஆயிரம் ரூபாய் கட்ட அறிவுறுத்தினர்.

ஒரு ஆண்டு உதவித் தொகையாக, 4 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், நல்ல அரசு கல்லூரியில் சீட் வாங்கி தருவதாகவும், இரண்டாம் ஆண்டு வங்கி கடன் பெற வழிவகை செய்வதாகவும் தெரிவித்தனர். இதை நம்பி, அட்மிஷன் தொகையை செலுத்தினோம். பின், அவர்களது அறிவுறுத்தலின்படி, வங்கி கணக்கில் 75 ஆயிரம் ரூபாய் செலுத்தினோம்.

ரஷ்யா கிளம்பும் ஒருநாள் முன், 1.86 லட்சம் ரூபாய் கட்ட சொல்லி வாங்கினர். இதன்பின், கடந்தாண்டு ரஷ்யா செயின்ட் பீட்டர்ஸ் பார்க் ஸ்டேட் மெடிக்கல் பல்கலையில் சேர்ப்பதாக சொல்லி ஒரு மட்டமான டியூஷன் சென்டரில் சேர்த்து விட்டனர். அங்கு 2 மணி நேரம் வகுப்பு நடத்திவிட்டு, ஒரு மருத்துவமனையில் கழிவறை கழுவவைத்தனர்; அறையை சுத்தம் செய்ய வைத்தனர்.

பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு மிரட்டினர். அங்கு தங்கியிருந்த தமிழக மக்கள் வாயிலாக, இந்திய தூதரகத்தை அணுகி, புகார் அளித்து, தப்பி வந்தோம். எங்களை போன்று பலரிடம், மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த ஆல்பா கன்சல்டன்சியை சேர்ந்த எஸ்தர் அனிதா, ஜான்பிரிட்டோ, காமராஜ், ஆன்டனி, ஜெனிபர் ஆகியோர் மீது,நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து கேட்க, ஆதாம் டிரஸ்ட்-ஆல்பா கல்சல்டன்சி நிறுவனத்தினரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும், போனை எடுக்கவில்லை.

40 பேர் சிக்கியுள்ளனர்

தப்பி வந்த மாணவர்கள் கூறுகையில், எங்களை போல் ரஷ்யாவில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்களையும் ஆல்பா கன்சல்டன்சி நிறுவனம்தான் அனுப்பி வைத்துள்ளது. அங்கு மருத்துவமனையில் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர்களை மீட்டு, ஆல்பா கன்சல்டன்சி நிறுவனத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நாம் எந்தக் கட்சி?



சொல் வேந்தர் சுகி சிவம்


. நாம் எந்தக் கட்சி?

வாழ்க்கையில் வெற்றி பெறும் கலையை முழுக்க முழுக்க இன்னொருவர் கற்றுத் தந்துவிட முடியாது. நாமாகத்தான் கற்க வேண்டும். உள்வாங்க வேண்டும். பத்து மாணவர்களுக்கு ஆசிரியர் ஒரே மாதிரித்தான் பாடம் நடத்துவார். அதிகமாக உள்வாங்கும் திறன் உடையவன் முதல் மதிப்பெண் பெறுகிறான். மழை சமமாகப் பெய்தாலும் களிமண் நீரை உள்ளே விடாது. மணல் முழுக்க உள்ளே உறிஞ்சும். செம்மண்ணும் மணலும் கலந்த பூமி அதிகம் உள்வாங்கிக் கொஞ்சம் வெளியே நிறுத்தும். தாவரங்கள் செம்மண் பூமியில் தளதளவென்று வளருகின்றன.

சுயமாக முன்னுக்கு வந்த கலைஞர்கள், வணிகர்கள், தொழிலதிபர்களைப் பார்த்து, ""நீங்கள் முன்னுக்கு வந்த டெக்னிக்கைச் சொல்லிக் கொடுங்கள்'' என்றால் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்களைச் சுயநலவாதி, கர்வி, தான் மட்டும் முன்னேற ஆசை என்று உலகம் வாரி வைகிறது. சொல்லித் தரக்கூடாது என்ற எண்ணம் அல்ல. இது சொல்லித் தரமுடியாதது என்பது ஏன் பலருக்குப் புரிவதில்லை? பரபரப்பில்லாமல் சிந்தித்தால் இந்த உண்மை உங்களுக்குப் புரியவரும்.

நடிப்புக் கல்லூரியில் நடிப்பைப் படிப்பாக முடித்த எவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விஞ்சியது இல்லை. என்ன புரிகிறது? ஒன்றைச் சொல்லிக் கொடுப்பதைவிடக் கற்றுக் கொள்வதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. சிவாஜி கணேசன் கல்லூரியில் நடிப்பைக் கற்கவில்லை. ஆனால் உலகம் முழுவதிலும் இருந்து நடிப்பைக் கற்றுக் கொண்டார். சொல்லிக் கொடுப்பதில் வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் கற்றுக் கொள்வதில் வேறுபாடு இருக்க முடியும். தனித்தன்மை சுடர்விட முடியும். இதனைப் புரிந்து கொள்ளாமல் சிலர், புகழ்பெற்றவர்கள் வெற்றி ரகசியங்களை மறைத்து வைப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இது பிழை.

இன்னொரு செய்தி. புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரின் வீட்டைத் தேடிப்போய் ஒருவர் தம்மை முன்னேற்றி விடும்படிக் கேட்டிருக்கிறார். நடிகர் மவுனமாகவே இருந்ததும், ""நான் கண்டிப்பா பெரிய ஆளா வருவேன். நீங்க சில டெக்னிக் கத்துக் குடுத்து வாய்ப்பும் வாங்கிக் குடுத்தா நான் நிச்சயம் பெரிய நடிகனா ஆக முடியும்... மத்தவங்களை வளர்க்கணும்னு உங்களுக்குக் கடமை இருக்கு'' என்று பாடம் நடத்தியிருக்கிறார்.

""இதோபார்... இப்படி எந்த இடத்திலும் போய் நான் நிற்காததால்தான் பெரிய நடிகனாக இருக்கிறேன்'' என்று கூறிவிட்டு, படார் என்று கதவைச் சாத்திக்கொண்டு போய்விட்டார். போனவர் அப்ùஸட். நடிகரை மண்டைக் கனம் பிடித்தவர் என்று வசை பாடுகிறார். உண்மை அது அல்ல. நிறையக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் எதையும் சொல்லித் தர முடியாது. பிறரைக் குற்றம் சாட்ட வேண்டாம். நமது அக்கறையை அதிகப்படுத்த வேண்டும்.

"சமைத்துப்பார்' என்கிற புத்தகத்தைப் படித்துச் செய்த சமையலைவிட அருமையாகச் சமைக்கிற அம்மணிகள் ஆயிரம் ஆயிரம் இருக்கிறார்கள். அவர்கள் குழம்பு கொதிக்கும் போதே, "உப்பு கம்மி... புளி அதிகம்' என்று ரிப்போர்ட் கொடுப்பார்கள். இது அனுபவம் மட்டுமல்ல... பழக்கம் மட்டும் காரணம் அல்ல. மனம் விழித்த நிலை. விவரிக்க முடியாத சக்தியான மனம் பூரணமாக விழித்திருந்தால் நுட்பமான பல கலைகளைக் கற்றுக் கொள்ளும்.

தூக்கத்தில் இருந்து உடல் விழித்தால் போதாது. மனதும் விழிக்க வேண்டும். வீட்டு ஜன்னலை விரியத் திறந்தால் போதாது. மூளையின் சாளரங்களை மூச்சுக் காற்றால் திறக்க வேண்டும். அப்போதுதான் நிறைய நிறைய உள்வாங்க முடியும். "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற பொன் மொழி கோடி கோடி பெறும். சொல்லிக் கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டும் நம்பி ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியாது.

ஹெலன் கெல்லர் என்ற பெண்மணி கண்ணில்லாதவர். கண்ணில்லாத போதும் கல்வி கற்பது எப்படி என்று அவர் ஆசிரியர் ஆனி சல்லிவன் கற்றுக் கொடுத்தார். ஆனால் ஆசிரியர் கற்றுக் கொடுக்காத ஆற்றலை ஹெலன் கெல்லர் சுயமாகப் பெற்றார். அதுதான் அவரை உலகின் ஆச்சரியப் பொருளாக்கியது.

விழிப்புலன் இல்லாத அவர் தொட்டுத் தொட்டு ஒவ்வொரு பொருளையும் உணர்ந்து பெயர் குறிக்கும் வித்தையை அவரது ஆசிரியர் கற்றுக் கொடுத்தார். ஹெலன் கெல்லர் ஒரு படி மேலே போய் ஒரு பொருளைத் தொட்டுவிட்டு அதன் நிறம் இன்னது என்று சொல்லத் தொடங்கினார். இது ஆசிரியர் சொல்லித் தராதது. விழிப்படைந்த மனம் அவர் விரல் நுனியில் பூரணமாய் நின்றதால் கண்களின் வேலையைக் கைகளே செய்தன. பள்ளி, கல்லூரிகளில் படித்துவிட்டால் படிப்பே முடிந்துவிட்டதாகப் பலர் கருதுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் எதையும் பூரணமாகக் கற்றுத் தர முடியாது. வேண்டுமானால் எப்படிக் கற்க வேண்டும் என்கிற தொடக்கத்தைச் சொல்லித் தரலாம். "கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த படிப்பும் எத்தனை நாள் வரும்?' என்ற கிராமத்துக் கவிதையை உணருங்கள். உயர்வது நிச்சயம்.

ஆசார்ய ரஜனீஷ் இதை விளக்க ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு மகாராஜா மகன் மிக மக்காய் இருந்தான். பவர் உள்ள பல குடும்பங்களில் "மக்கு மகன்' பிரச்சினை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியைக் கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. "என்ன செய்யலாம்' என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில் மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பல துறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பிவந்தான்.

அவனது நடை, உடை, பாவனைகள் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள். மகாராஜவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன், அறிவாளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைப் பாராட்டினர்.

ஒரு கிழவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். ""என்ன படித்தாய்?'' என்றார். ""நிறைய நிறைய... சோதிடம் கூட முறையாகக் கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால்கூடச் சொல்வேன்'' என்றான். கிழவர் மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, ""இது என்ன?'' என்றார். இளவரசன் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ கணக்குப் போட்டான். அப்படி இப்படி தலையை ஆட்டிக் கொண்டான். ""உங்கள் கையில் உள்ளது வட்டமானது. ஒளியுடையது'' என்று விடை சொன்னான். கிழவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், ""அடையாளங்களைச் சொல்லுகிறாயே ஒழிய அது இன்ன தென்று சொல்லக்கூடாதா?'' என்றார். ""அது எங்கள் பாடத் திட்டத்தில் இல்லை'' என்றான் இளவரசன். ""யூகித்துச் சொல்'' என்றார் கிழவர். உடனே இளவரசன் ""பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லிவிடுவேன்... அது ஒரு வண்டிச் சக்கரம்'' என்றான்.

மடப்பயல்... சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவனும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரியவில்லை.

YOU CAN EDUCATE FOOLS; BUT YOU CAN NOT MAKE THEM WISE என்பது சத்தியம். முட்டாளைப் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது. அதனால்தான் கீதையில், ""புத்திமான்களுக்குள் நான் புத்தி'' என்கிறான் கண்ணன். புத்தியில்லாத புத்திமான்கள் அநேகம் பேர். "செவன்த் சென்ஸ்' பெறப் பலர் தியானம் செய்கிறார்கள். "காமன் சென்ஸ்' இல்லாவிட்டால் இவர்களை என்ன செய்ய..? படிக்காத மேதைகளும் உண்டு; படித்த முட்டாள்களும் உண்டு. நாம் எந்தக் கட்சி..? கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்

Wednesday, March 23, 2016

எம்ஜிஆர் 100 | 27 - மனிதரை மனிதராக மதிப்பவர்!

எம்ஜிஆர் 100 | 27 - மனிதரை மனிதராக மதிப்பவர்!

THE HINDU TAMIL
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. மனிதரை மனிதராக மதித்து நேசிப்பாரே தவிர, அவரது வாழ்க்கைத் தரம் என்ன? எந்த பதவியில் இருக்கிறார்? என்றெல்லாம் பார்த்து மரியாதை செய்ய மாட்டார். முக்தா சீனிவாசன் ஒருமுறை கூறியது போல, முதல் நாள் எம்.ஜி.ஆரின் காரில் ராஜீவ் காந்தியை பார்க்கலாம்; அடுத்த நாள் அதே காரில் ஒரு லைட் பாய் எம்.ஜி.ஆருடன் சென்று கொண்டிருப்பார். கடைநிலை ஊழியராக இருந்தால்கூட, அவர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் எம்.ஜி.ஆர். மரியாதை அளிப்பார்.
எம்.ஜி.ஆரின் கார் டிரைவராக இருந்தவர் கோவிந்தன். மிகத் திறமையான டிரைவர். எந்த கூட்டத்திலும் சாமர்த்தியமாக காரை ஓட்டிச் செல்லும் திறன் கொண்டவர். எம்.ஜி.ஆருக்கு கோவிந்தனின் டிரை விங் பிடிக்கும். 1976-ம் ஆண்டு எம்.ஜி.ஆரிடம் டிரைவராக பணிக்கு சேர்ந்தார் கோவிந்தன். சென்னை லாயிட்ஸ் சாலையில் எம்.ஜி.ஆர். வசித்து வந்தபோது அங்கு காவலாளியாக பணி யாற்றி, எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக விளங்கிய தாமோத ரனின் மருமகன்தான் கோவிந்தன். பல ஆண்டுகளாக டூரிஸ்ட் கார் ஓட்டி வந்தவர். தாமோதரனின் சிபாரிசின் பேரில் கோவிந்தனை டிரைவராக பணிக்கு சேர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வ ராகிவிட்டார். அவர் தினமும் ராமாவரம் தோட்ட வீட்டில் இருந்து கோட்டைக்கு செல்லும்போது டிரைவர் கோவிந்தன் தான் காரை ஓட்டிக் கொண்டு செல்வார். முதல்வரின் டிரைவர் என்பதால் பணிக்கு தினமும் கோவிந்தனை அவரது வீட்டுக்கு வந்து போலீஸ் ஜீப்பில் அழைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர். வீட்டுக்கு செல்வார் கள். மாலையில் பணி முடிந்ததும் மீண்டும் வீட்டில் கொண்டுவிட்டு செல்வார்கள்.
ஒருநாள் பணிக்காக வீட்டில் இருந்து போலீஸ் ஜீப்பில் வரும்போது, சென்னை கத்திபாரா சந்திப்பு அருகே ஜீப் மீது எதிரே வந்த பெரிய லாரி மோதியது. போலீஸ் ஜீப் டிரைவர் பலத்த காயங்களோடு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். டிரைவர் கோவிந்தன் சம்பவ இடத்தி லேயே பலியானார். அவர் இறந்த செய்தி வயர்லெஸ் மூலம் எம்.ஜி.ஆருக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அதிர்ச்சி அடைந்தார். கோவிந்தனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தில் யாருக்கும் விருப் பம் இல்லை. பிரேத பரிசோதனை வேண் டாம் என்று அவரது உறவினர்கள் கேட்டுக் கொண்டபோதும், சட்டப்படி கோவிந்த னின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். பிடிவாதமாக இருந்தார். அதன்படி, பிரேத பரிசோதனை நடந்தது.
பின்னர், கோவிந்தனின் உடல் அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு சில மணி நேரம் வைக்கப்பட்டு, அங்கிருந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு ஒரு வேனில் கோவிந்தனின் உடல் ஏற்றப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இங்கே ஒரு முக் கியமான விஷயம். அந்த இறுதி ஊர்வலத் தில் முதல்வர் எம்.ஜி.ஆர். நடந்தே சென்றார். முக்கிய பிரமுகர்கள் பலரின் இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர். நடந்து சென்றிருக்கிறார். இருந்தாலும், தன்னிடம் பணியாற்றிய டிரைவரின் இறுதி ஊர்வலத்தில் நடந்து செல்லாமல், அஞ்சலி மட்டும் செலுத்தி விட்டு சென்றிருந்தால் அவரை யார் கேட்க முடியும்? ஆனால், இறந்து போன தனது ஊழியருக்காக அவரது இறுதி ஊர்வலத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் நடந்து சென்றார் என்றால் அது எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
கோவிந்தனின் குடும்பத்தினரை அழைத்து பண உதவி செய்ததுடன், கோவிந்தன் பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணம் விரைவில் கிடைக்க ஏற்பாடுகளும் செய்தார். தாங்கள் வேண்டாம் என்று மறுத்தும் கோவிந்தனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். ஏன் பிடிவாதமாக இருந்தார் என்பது அப்போதுதான் கோவிந்தன் குடும்பத்தாருக்கே தெரிந்தது. விபத்தில் மரணம் ஏற்பட்டால் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தால்தான் இன்சூரன்ஸ் தொகையைக் கோர முடியும். கோவிந்தனின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வீட்டு வசதி வாரியத்தில் பணி வழங்கியும் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.
கோவிந்தன் இறந்த துயரத்தையும் மீறி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டும் அன்பையும் ஆதரவையும் கண்டு ஆனந் தக் கண்ணீருடன் அவருக்கு நன்றி தெரிவித்தது கோவிந்தனின் குடும்பம்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே புதிய சுரங்கப் பாதை திறக்கப்பட்டது. விழாவில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்டு சுரங்கப் பாதையை திறப்பார் என அறிவிக்கப் பட்டிருந்தது. குறிப்பிட்டபடி விழாவுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். திறப்பு விழா நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உதவியாளர்களிடம் காதில் கிசுகிசுத்தார்.
அவர்கள் சென்று ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தவரை அழைத்து வந்து எம்.ஜி.ஆரிடம் நிறுத்தினர். அவர் பெயர் ஏழுமலை. எம்.ஜி.ஆரை வணங்கிவிட்டு ஏதும் புரியாமல் படபடப்புடன் நின்று கொண்டிருந்தவரின் கையில் கத்தரிக் கோலைக் கொடுத்து, சுரங்க நடைபாதை திறப்புவிழாவுக்கு அடையாளமாக ரிப்பனை வெட்டச் சொன்னார் எம்.ஜி.ஆர்.!
கண்களில் நீர் மல்க ரிப்பனை வெட்டி திறந்து வைத்த ஏழுமலைதான், அந்த சுரங்கப் பாதையை கட்டிய மேஸ்திரி!
எம்.ஜி.ஆரைப் பற்றி கவிஞர் வாலி ஒருமுறை இப்படி வாழ்த்திப் பாடினார். ‘‘மனிதர்களில் எத்தனையோ நடிகர்கள் உண்டு. நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் நீதான்!’’
படம் உதவி: ஞானம்
முன்பெல்லாம் சைக்கிளில் பின் னால் அமர்ந்து கொண்டு ‘டபுள்ஸ்’ செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சைக்கிளில் ‘டபுள்ஸ்’ சென்றால் போலீஸார் அபராதம் விதிப்பார்கள். எம்.ஜி.ஆர். முதல்வரானவுடன் ஏழை களின் வாகனமான சைக்கிளில் ‘டபுள்ஸ்’ செல்ல தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்தார்.
- தொடரும்...

'ரூ. 10 லட்சம் கொடுக்கறேன்னு சொல்லியும் கேக்கலை!'- கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்!

'ரூ. 10 லட்சம் கொடுக்கறேன்னு சொல்லியும் கேக்கலை!'- கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்!


கோவை: "சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு பேரையும் கொலை செய்ய முடிவு செஞ்சேன்," என போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் கெளசல்யாவின் தந்தை சின்னசாமி.
உடுமலையில் காதலித்து கலப்பு திருமணம் திருமணம் செய்து கொண்ட சங்கர் - கெளசல்யா தம்பதியினர், கடந்த 13-ம் தேதியன்று பஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்பட்டனர். இதில் கணவர் சங்கர் பரிதாபமாக இறந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனது தந்தை, தாய், மாமாதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என கவுசல்யா போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து  14-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த கெளசல்யாவின் தந்தை சின்னசாமியை கைது செய்தனர் போலீசார்.
7 நாட்களுக்கு பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னசாமியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தான்தான் இந்த கொலையை செய்ய சொன்னதாக சின்னசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

"எனது மகள் கீழ் ஜாதியைச் சேர்ந்த பையனை கல்யாணம் பண்ணிகிட்டது எனக்கு ரொம்ப அவமானமா போச்சு. என் பொண்ணு மேல எனக்கு ரொம்ப பாசம் ஜாஸ்தி. எப்படியாவது வந்துடுனு கெஞ்சி பாத்தேன். மிரட்டியும் பாத்தேன். கவுசல்யாவோட அம்மாவ விட்டு கூட மிரட்டி பார்த்தேன். எதுவும் நடக்கலை. அந்த பையனுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறேன். நீ வாங்கிட்டு போயிடு என் பொண்ணை என்கிட்ட விட்டுடுனு சொன்னேன். அவனும் கேக்கலை. ரெண்டு பேரும் பிடிவாதமா இருந்தாங்க. 

இன்னொரு பக்கம் எனக்கு என் சொந்த பந்தங்க கிட்ட ரொம்ப கேவலமா போச்சு. எங்கே போனாலும் என்னை அவமானப்படுத்துனாங்க. அதனாலதான் இந்த முடிவுக்கு வந்தேன். ஜெகதீசன்கிட்ட இதைப்பத்தி சொன்னேன். என் பொண்ணை கூப்பிட்டு வா. வரலைனு சொன்னா அவளையும் கொன்னுடுனு சொன்னேன்." என சின்னசாமி கூறியதாக விவரிக்கின்றனர் போலீசார்.
இதற்கிடையே பல்லடம் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜரான கவுசல்யா, நடந்தவை குறித்து ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதால் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் கெளசல்யாவின் தாயார், மாமா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கூறிய திருமணங்களை நாடக காதல் என்றும், பணம் பறிக்கும் முயற்சி என்றும் சில சாதி அமைப்புகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பல லட்சம் பணம் கொடுப்பதாக சொல்லியும், சங்கர் மறுத்ததாக கெளசல்யாவின் தந்தை அளித்துள்ள வாக்குமூலம் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.

- ச.ஜெ.ரவி

தலப்பாகட்டி பிரியாணி கடையின் மனிதநேயம்...!' -நெகிழும் 'செப்டிக் டேங்க்' தொழிலாளி

தலப்பாகட்டி பிரியாணி கடையின் மனிதநேயம்...!' -நெகிழும் 'செப்டிக் டேங்க்' தொழிலாளி

vikatan.com
னவரி 19-ம் தேதி காரப்பாக்கம், தலப்பாகட்டி பிரியாணி கடையில் நடந்த கழிவுநீர்த் தொட்டி சுத்திகரிப்பு பணியின்போது நான்கு பேர் பலியான சம்பவத்தை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது. இதில், உயிர் பிழைத்த ஒரே நபர் விஜயகுமார் என்ற தொழிலாளிதான். எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போய்ப் படுத்த படுக்கையாக இருக்கும் விஜயகுமாரை நேரில் சந்தித்து உதவிக்கரம் நீட்டியுள்ளது தலப்பாகட்டி நிர்வாகம்.
நுரையீரலில் ஓட்டை விழுந்து, மூச்சு விடுவதற்குக்கூட சிரமப்பட்ட நிலையில் படுக்கையில் கிடக்கிறார் விஜயகுமார். தலப்பாகட்டி பிரியாணி கடையில் நடந்த சம்பவம், அவரது வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.
சென்னை, கண்ணகி நகர் குடியிருப்பில் வசித்து வரும் விஜயகுமாரை சந்திக்கச் சென்றேன். ஏற்கனவே, நடந்த ஒரு விபத்தில் கைவிரல் அனைத்தையும் இழந்த மாற்றுத் திறனாளி இவர். கட்டிலில் படுத்துக் கொண்டே நம்மை வரவேற்றார்.
" என் மனைவி அடையாறுல ஒரு வீட்டுல வேலைக்குப் போயிட்டு இருந்தா. என்னால நடக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னதும், என்னை கவனிச்சிட்டு இருக்கா. ஒரு பையன். ஒரு புள்ளை. ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போயிட்டு இருக்காங்க. எல்.பி ரோடு பக்கத்துல இருக்கற மரக் கடையில வேலை பார்த்துட்டு இருந்தேன். திடீர்னு ஒருநாள் மரம் அறுக்கும்போது என் வலது கைவிரல் நாலும் மிஷின்ல சிக்கிடுச்சு. கை மூளியாப் போச்சு. அப்புறம் என்னைக் காதலிச்ச அம்முவைக் கல்யாணம் பண்ணிகிட்டேன். எதாவது வேலை செஞ்சு பொழைச்சே ஆக வேண்டிய கட்டாயம். மெட்ரோ வாட்டர் போர்டு கழிவுநீர் சுத்தம் பண்ற லாரியில கிளீனரா வேலைக்குப் போயிட்டு இருந்தேன். சாக்கடைக்குள்ள இறங்கி சுத்தம் பண்றதுதான் முழு நேர வேலை. ஒருநாளைக்கு 300 ரூபாய் கிடைக்கும். அடிக்கடி, தனியார் ஓட்டல், ஆஸ்பத்திரியில இருக்கற செப்டிக் டேங்குகளை கிளீன் பண்ற வேலைக்குப் போவேன்.

அப்படித்தான், என்னோட வேலை பார்த்த குமார், அவர் அண்ணன் சரவணன், முருகன்னு மூணு பேரும் தலப்பாகட்டி ஓட்டல் செப்டிக் டேங்க்கை கிளீன் பண்ணக் கூட்டிட்டுப் போனாங்க. அந்த செப்டிக் டேங்க் பதினைந்து அடி நீளம், பத்து அடி ஆழத்துல இருந்துச்சு. ஒரே ஒரு மேன் ஹோல்தான் இருந்துச்சு. வேற பாதையே இல்லை. சரியான இருட்டு. டேங்க்ல இருந்த பத்தாயிரம் லிட்டர் கழிவுத்தண்ணியை லாரியில நிரப்பி அனுப்பினோம். ஒரு கையால கயித்தைப் பிடிச்சு தொங்கிட்டே ரெண்டு காலாலயும் செப்டிக் டேங்க் சுவத்தை சுத்தம் பண்ணிட்டு இருந்தேன். அதுக்குள்ள கயிறு கட்டிட்டு சரவணனும், குமாரும், முருகனும் உள்ள இறங்கிட்டாங்க. சாக்கடைத் தண்ணியை காலால கிளறிட்டே இருந்தாங்க. உள்ள இருந்து முட்டை வடிவத்துல இருந்து கேஸ் வெடிக்க ஆரம்பிச்சது. நாத்தம் தாங்க முடியாம உள்ள விழுந்துட்டேன். அஞ்சு நாள் கழிச்சுத்தான் முழிச்சுப் பார்த்தேன். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில வச்சிருந்தாங்க. இனிமேல் ஏதாவது வெயிட்டான பொருளைத் தூக்குனா ஆயுசு அவ்வளவுதான்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. அதே இடத்துல என்னோட வந்த நாலு பேரும் உள்ள விழுந்து செத்துப் போயிட்டாங்கன்னு தகவல் சொன்னாங்க. அவங்க குடும்பத்துக்கு பத்து லட்ச ரூபாயை தலப்பாகட்டிகாரங்க கொடுத்தாங்க. எனக்கு எதாவது உதவி செய்தால் நல்லாயிருக்கும்னு விகடன்ல சொன்னேன். அதுல வந்த செய்தியைப் பார்த்துட்டு தலப்பாகட்டி ஓனர் என்னைப் பார்க்க வந்தார் " எனச் சொல்ல,

அடுத்துப் பேசினார் அவரது மனைவி அம்மு, " எங்களுக்கு ரேஷன் கார்டுகூட இல்லை. சோத்துக்குக் கஷ்டப்படறோம்னு விகடன்ல செய்தி வந்த மறுநாள் ஓட்டல்காரங்க வந்தாங்க. ' உங்க குடும்பத்துக்கு இப்படியொரு நிலை வந்திருக்குன்னு செய்தியைப் பார்த்துத்தான் தெரிஞ்சுகிட்டோம். எங்ககிட்ட வந்து சொல்லியிருந்தா, கண்டிப்பாக உதவி செஞ்சிருப்போம்'னு சொல்லிட்டு, என் பொண்ணு, பையன் பேர்ல ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் பிக்சட் டெபாசிட்டும், என் பேர்ல அம்பதாயிரத்துக்கு டெபாசிட்டும் பண்ணிட்டு பத்திரத்தைக் கொடுத்தாங்க. இப்படி திடீர்னு வந்து உதவி பண்ணுவாங்கன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. எங்க தலையெழுத்து இவ்வளவுதான்னு அழுதுட்டு இருந்தோம். தனியார் முதலாளிகள்னா, எதுவும் பண்ண மாட்டாங்கன்னு தப்பா நினைச்சுட்டோம். அவ்வளவு அணுசரனையாக பேசினாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்குங்க" என்றார் நெகிழ்ச்சியான குரலில்.
ஊரெல்லாம் கடை பரப்பி பிரியாணி வாசத்தை மணக்கச் செய்யும் தலப்பாகட்டி நிர்வாகம், ஒரு தொழிலாளியின் வாழ்விலும் வசந்தத்தைப் பரப்பியதை வரவேற்போம்.

-ஆ.விஜயானந்த்
படங்கள்: தி.ஹரிகரன்

எம்ஜிஆர் 100 | 26 - படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி!

எம்ஜிஆர் 100 | 26 - படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி!

THE HINDU TAMIL

M.G.R. ஒரு காரியத்தில் இறங்கினார் என்றால் என்ன இடையூறு வந்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார். அதற்கு மிகப் பெரிய உதாரணம் அவர் முதன் முதலில் தயாரித்து, இயக்கி, நடித்து பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படமான ‘நாடோடி மன்னன்’.

‘மலைக்கள்ளன்', ‘அலிபாபாவும் 40 திருடர்களும்', ‘மதுரை வீரன்', ‘தாய்க்குப் பின் தாரம்' என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் ‘நாடோடி மன்னன்’ படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.! அது ஏன் என்பதற்கான விளக்கமும் கொடுத்தார்.

‘‘நான் சொந்தத்தில் ‘நாடோடி மன்னன்’ படத்தை ஏன் ஆரம்பித்தேன்? எனக்காக எத்தனையோ படங்கள் காத்திருக்கும் நேரத்தில் அதில் நடித்து முடித் தாலே வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாம். ஆனால், ‘நாடோடி மன்னன்’ ஒரு பரி சோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘நாடோடி மன்னன்’ படத்துக்கான கனவு 20 வயதிலேயே எம்.ஜி.ஆரின் மனதில் கருக்கொண்டது. படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல் கத்தா சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு ‘இஃப் ஐ வேர் கிங்’ என்ற படத்தைப் பார்த்தார். இந்தப் படமே எம்.ஜி.ஆர். மனதில் விதை யாய் விழுந்து விருட்சமாக வளர்ந்தது. அதன் விளைவுதான் ‘நாடோடி மன்னன்.’

படத்துக்காக பணத்தை பணம் என்று பார்க்காமல் எம்.ஜி.ஆர். செலவழித்தார். சில நேரங்களில் அவரது அண் ணன் சக்ரபாணியே கவலைப்படும் அள வுக்கு கடன் வாங்கி செலவு செய்தார். காட்சி களின் பிரம் மாண்டத்துக்கு மட்டுமல்ல; படத்தில் பணி யாற்றும் நடிகர்களுக் கும் தொழிலாளர் களுக்கும் தாராள மான சம்பளமும் வழங்கப்பட்டது.

படப்பிடிப்பு குழுவினர் விரும்புவதை சாப்பிடுவதற் காக படப்பிடிப் பின்போது மினி ஓட்டலையை எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து விட்டார். அந்தக் காலத்தில் பணக்காரர் கள் மட்டுமே குடிக்கும் ‘ஓவல்டின்’ என்ற பானம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட் டது. முதன்முதலாக பல தொழிலாளர்கள் ‘ஓவல்டின்’ குடித்ததே அப்போதுதான்.

படம் முடிந்த பிறகு ‘‘வெற்றியோ, தோல்வியோ அது மக்கள் தீர்ப்பைப் பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி’’ என்று சர்வ சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர்.

மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில் புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது ‘நாடோடி மன்னன்’. 19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது ‘நாடோடி மன்னன்’.

மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத் தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளை அண்ணா பரிசளித்தார்.

இந்தக் கூட்டத்தில்தான், ‘‘மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்’’ என்று அண்ணா பேசினார்.

‘நாடோடி மன்னன்’ பற்றி குறிப்பிடும் போது நடிகை பானுமதி பற்றி சொல்லி யாக வேண்டும். நடிப்பு, தயாரிப்பு, இசை, இயக்கம் என்ற பன்முகத்திறமை கொண்டவர் பானுமதி. ‘மலைக்கள்ளன்’, ‘மதுரை வீரன்’ என்று ஏற்கெனவே வெற்றி பெற்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கு பானுமதியே ஜோடி. ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவரையே நாயகியாக நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்தார்.

பானுமதி அந்தக் காலத்திலேயே சுதந்திரமாக செயல்படும் நடிகை. எம்.ஜி.ஆரும் அப்படியே. தான் விரும்பு கிறபடி காட்சிகள் வரும்வரை எம்.ஜி.ஆர். விடமாட்டார். அதனால்தான் இன்றும் அவர் படங்களை ரசிக்க முடிகிறது. எம்.ஜி.ஆர். மீண்டும் மீண்டும் காட்சி களை எடுப்பது பானுமதிக்கு பிடிக்கவில்லை. ‘‘எடுத்த காட்சிகளையே எத்தனை முறை எடுப்பீங்க?’’ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டார்.

சக நடிகையின் ஒத்துழைப்பு இப்படி இருக்கும்போது கோபம் வந்தாலும், எம்.ஜி.ஆர். அமைதியாகவே பதில் சொன்னார், ‘‘படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி, இயக்குநரும் நான்தான். என் இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் நடிங்க. இல்லைன்னா விட்டுடுங்க.’’ இதைத் தொடர்ந்து, படத்தில் இருந்து விலகிக் கொண்டார் பானுமதி. பிறகு, அவர் இறப்பது போல காட்சிகள் மாற்றப்பட்டு நடிகை சரோஜா தேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரின் திறமையை எம்.ஜி.ஆர். மதிப்பார். படத்தில் இருந்து பாதியில் விலகினாலும் சென்னையில் நடந்த வெற்றி விழாவுக்கு பானுமதியையும் பெருந்தன்மையுடன் அழைத்து, அவருக் கும் விருது வழங்கினார் எம்.ஜி.ஆர்.

அதன் பின்னரும், எம்.ஜி.ஆர். - பானுமதி நடிப்பில் ‘ராஜா தேசிங்கு’, ‘கலை அரசி’, ‘காஞ்சித் தலைவன்’ ஆகிய படங்கள் வெளியாயின.

பன்முகத் திறமை மிக்க பானுமதிக்கு தமிழக அரசின் சார்பில் அதுவரை ‘கலைமாமணி’ பட்டம் வழங்கப்படாததை அறிந்த எம்.ஜி.ஆர், தான் முதல்வராக இருந்தபோது ‘கலைமாமணி’ விருதை பானுமதிக்கு வழங்கி கவுரவித்தார்.

எம்.ஜி.ஆர். நல்ல இசை ஞானம் உடை யவர். ‘நாடோடி மன்னன்’ படப்பிடிப்பின் போது ஒருநாள், இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவுடன் பாடல் களுக்கான இசையமைப்பு பற்றி எம்.ஜி.ஆர். ஆலோசித்துக் கொண்டிருந் தார். அப்போது, ‘‘நீங்கள் இசையமைப் பில் எல்லாம் தலையிட வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார் பானுமதி. இசை பற்றி எம்.ஜி.ஆருக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்காது என்ற எண்ணம் பானுமதிக்கு.

எம்.ஜி.ஆருக்கு நினைவாற்றல் அபா ரம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எதை யும் மறக்க மாட்டார். பானுமதி கேட்ட கேள்விக்கு, 27 ஆண்டுகளுக்குப் பின் முதல்வராக இருந்தபோது செயல்வடி வில் அவருக்கு பதிலளித்தார் எம்.ஜி.ஆர்.

தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக பானுமதியை எம்.ஜி.ஆர். நியமித்தார். பின்னர், அந்த பதவியின் அந்தஸ்து மேம்படுத்தப்பட்டு இயக்குநர் மற்றும் முதல்வராக பானுமதி பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு பானுமதி மறைந்த தினம், எம்.ஜி.ஆர். நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதி.

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட 33 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. எந்த கருப்பு வெள்ளை படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. பெங்களூரிலும், இலங்கையிலும் தலா ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளி விழா படம் என்பதோடு, ரூ.1 கோடி வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமை பெற்றது ‘மதுரை வீரன்.’

- தொடரும்...

மதிப்பெண் மனஅழுத்தம்!

மதிப்பெண் மனஅழுத்தம்!
By ஆசிரியர்
First Published : 18 March 2016 12:40 AM IST
மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பிளஸ்2 கணிதத் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்; பெற்றோர்கள் மனக்கொதிப்பில் இருக்கிறார்கள்; புகார்கள் குவிந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும்போது, அதிக கரிசனம் காட்டப்படும் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்திருப்பது ஓரளவு ஆறுதல் தந்தாலும், இந்த வினாத் தாள் மூலம் மாணவர்கள் அடைந்திருக்கும் மனஅழுத்தம் நீங்கியபாடில்லை.

மாணவர்களின் கண்ணீர் போதாதென்று, அரசியல்வாதிகளும் சேர்ந்து கொண்டுவிட்டனர். இந்த கணிதத் தேர்வு வினாத்தாள் பாட்னாவில் முன்னதாகவே வெளியாகிவிட்டதாகவும், கட்செவிஅஞ்சலில் (வாட்ஸ்ஆப்) அனைவருக்கும் கிடைத்ததாகவும், தென்னிந்திய மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள் என்பதாகவும் மக்களவையில் உறுப்பினர்கள் ஆவேசமாகப் பேசியுள்ளனர். மத்திய அரசும் இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

இருப்பினும், சி.பி.எஸ்.இ. கல்வி நிர்வாகம் இதை மறுத்துள்ளது. கட்செவிஅஞ்சலில் வெளியானதாகக் கூறப்படும் வினாத்தாளில் இடம்பெற்றிருந்த இரண்டு கேள்விகள் மட்டுமே, மார்ச் 14-ஆம் தேதி தேர்வுக்கான கேள்வித்தாளுடன் ஒத்திருப்பதாகவும், இது தற்செயலானது என்பதோடு, இந்தக் கேள்விகள் பிளஸ்2 மாணவர்களின் கணிதப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பவை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற பொறியியல் கல்லூரிகளில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சேர்வதற்கு கணித மதிப்பெண் ஒரு தடையாக இருக்கப்போவதில்லை. ஏனெனில், இந்த மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெறுவதன் மூலம் அங்கே இடம் பெற்றுவிட முடியும்.

ஆனால், சி.பி.எஸ்.இ. பயிலும் எல்லா மாணவர்களுக்கும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி.களில் இடம் கிடைத்துவிடுவதில்லை. சி.பி.எஸ்.இ. மாணவர்களில் பலரும், குறிப்பாக தமிழகத்திலேயே உயர்கல்வியைத் தொடர்கின்றனர். "கட்-ஆஃப்' மதிப்பெண் அடைவதில் கணித மதிப்பெண் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கணித மதிப்பெண் குறையக் குறைய அவர்கள் "கட்-ஆஃப்' மதிப்பெண்ணில் பின்தங்கி, கலந்தாய்வில் கடைசியாக இடம்பெறுவர். ஆகவேதான், பொறியியல் படிப்பு வாய்ப்பு அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. மாணவர்களும் பெற்றோரும் கவலைப்படுகின்றனர்.

இதுபோல ஒரு கடினமான வினாத்தாள் தமிழகக் கல்வித் துறை நடத்தும் பிளஸ்2 தேர்வில் இடம்பெற்றிருந்தால் என்னவாகியிருக்கும்? பெற்றோரும் மாணவர்களும் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தியிருப்பார்கள்; அரசியல் கட்சிகளும் சேர்ந்து கொண்டிருக்கும்; மறுதேர்வு நடத்தும்படி செய்திருப்பார்கள். ஆனால், சி.பி.எஸ்.இ. மீண்டும் இத்தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பது சந்தேகமே.

கணிதத் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தம், அடுத்துவரும் தேர்வுகளை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள மனத்தடைகள் என யாவற்றையும் பார்க்கும்போது, தற்போதைய கல்வி முறை கேள்விக்குரியதாகிறது. இரண்டு ஆண்டுகள் கல்வி பயிலும் ஒரு மாணவரின் வெற்றித் தோல்வியை ஒரேயொரு பாடத்தின் வினாத்தாள் மூலம் தீர்மானிப்பது சரியான முறையல்ல.

வளரிளம் பருவத்தை எட்டும் மாணவர்களின் ஆர்வம், உள்ளார்ந்த இலக்கு, விருப்பம் எல்லாமும் மாறுகிறது. சில மாணவர்கள் கணிதத்தில் புலிகளாக மாறுகிறார்கள். சிலர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் புலமைப் பெறுகிறார்கள். இவர்களுக்கு ஏதாவது ஒரு பாடம் ஈர்ப்பில்லாமல் போய்விடுகிறது. அந்த ஒரு பாடத்தில் மட்டும் அவர்கள் சரியாக தேர்ச்சி பெறுவதில்லை. ஒரு பாடத்தில் ஒரு மாணவரால் சிறப்பாக எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை என்றால், அவர் தோல்வியுற்றவராகக் கருதுவதை இன்னமும் எத்தனைக் காலத்துக்குத் தொடரப் போகிறோம்? மேலைநாடுகளில் மாணவர்கள் அவரவருக்கு விருப்பான பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தைப் பொருத்தவரை, கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருப்பது கணிதமும் ஆங்கிலமும்தான். தற்போதைய கல்விமுறைப்படி 10-ஆம் வகுப்பு வரை கணிதம், ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும். மேனிலைப் பள்ளியில்தான் ஒரு மாணவர் கணிதம், அறிவியல் அல்லாத பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும் வசதி உள்ளது. அங்கும்கூட, ஆங்கிலத்திலிருந்து தப்பித்தல் சாத்தியமில்லை. இத்தகைய கல்விமுறை மாணவர்களை வடிகட்ட உதவுமே தவிர, மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் ஊக்குவிப்பதாக அமையாது.

எட்டாம் வகுப்புவரை மாணவர்கள் கல்வியை எளிமையாகவும், விளையாட்டாகவும், மதிப்பெண்கள் குறித்த கவலையில்லாமலும் பயின்று முடிக்க வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளை அவர்களே தேர்வு செய்துகொள்ள வாய்ப்பு தர வேண்டும். அவர்கள் விரும்பித் தேர்வு செய்யும் பாடங்களில் ஒவ்வோர் ஆண்டும் நுட்பமான, கடினமானப் பகுதிகளைப் புகுத்திக்கொண்டே போகும்போது, விருப்பமான பாடம் என்பதால் அவர்களும் அதை எளிமையாகக் கடந்து வருவார்கள்.

எல்லாரும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும்தான். ஆனால், சிறந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. பள்ளியில் படித்தவற்றை ஒருவர் மறந்த பின்னர் மிச்சமாக இருப்பதுதான் கல்வி (Education is what remains after one has forgotten what one has learned in school)  - என்கிறார் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நம் பள்ளிக் கல்வியின் மிச்சம் எது? மதிப்பெண் மட்டும்தானா?

நமது கல்வி முறையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மதிப்பெண் மாயையிலிருந்தும் மனஅழுத்தத்திலிருந்தும் மாணவர்களைக் காப்பாற்ற முடியும்.

ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி

ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி
DINAMALAR

பத்தனம்திட்டா : கேரளாவில், ஓட்டுப்பதிவு குறைவதை தடுக்கும் வகையிலும், வாக்காளர்களிடையே ஓட்டு போடும் ஆர்வத்தை துாண்டும் வகையிலும், குலுக்கல் நடத்தி பரிசு வழங்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
வாக்காளர்களை கவருவதற்காக, அரசியல் கட்சிகள், இலவச பொருட்கள், அன்பளிப்பு, பணம் கொடுத்து வருகின்றன. இப்போது, வாக்காளர்களை வழிக்கு கொண்டு வர, தேர்தல் கமிஷனும், பரிசுத் திட்டத்தில் இறங்கியுள்ளது. படித்தவர்கள் அதிகம் வசிக்கும் கேரள மாநிலத்தில் தான் இந்த கூத்து. இங்குள்ள பத்தினம்திட்டா மாவட்டம், அதிக அளவு மலைப்பகுதி நிறைந்த இடமாகும். தேர்தலில் ஓட்டு போட இங்குள்ள வாக்காளர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.

மாநில அளவில், 75 சதவீத ஓட்டுகள் பதிவாகும் நிலையில், இங்கு, 65 சதவீதத்தை தாண்டுவதே பெரும்பாடாக உள்ளது. அதுவும், மலைப்பகுதியைச் சேர்ந்த, 100 ஓட்டுச்சாவடிகளில் மிக மிக குறைந்த அளவு ஓட்டுகள் தான் பதிவாகின்றன. இதையடுத்து, மே மாதம், 16ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு சதவீதத்தை எப்படியும் அதிகரித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன், கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஹரிகிஷோர் களமிறங்கியுள்ளார்.

மிக குறைவாக ஓட்டுப்பதிவாகும் ஓட்டுச்சாவடிகள் மீது, சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அங்குள்ள வாக்காளர்களை ஈர்க்கும் விதத்தில், அதிரடி திட்டம் ஒன்றையும் கலெக்டர் அறிவித்துள்ளார். அதன்படி, அங்கு, ஓட்டு போடும், வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட எண் உடைய, அட்டை வழங்கப்பட உள்ளது. 'தேர்தலுக்கு பின், குலுக்கல் நடத்தி, வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்' என்றும், கலெக்டர் அறிவித்துள்ளார்.

குறள் இனிது: கூலிக்கு மாரடிக்கிறவனை வச்சிக்கிட்டு...

குறள் இனிது: கூலிக்கு மாரடிக்கிறவனை வச்சிக்கிட்டு...

சோம.வீரப்பன்

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு பிபிஎஃப்-ல் பணம் செலுத்துவதற்காக நாகபுரி ஸ்டேட் பாங்கின் பிரதான கிளைக்குச் சென்றிருந்தேன். பழமையான கட்டிடம், உயர்ந்த தூண்கள். மிகப்பெரிய ஹாலில் வரிசையாகக் கவுண்டர்கள். எக்கச்சக்கக் கூட்டம். 41டிகிரி வெயிலின் எரிச்சல், ஒன்றும் புரியவில்லை. யாரைக் கேட்டாலும் முறைப்பார்கள்; அல்லது விசாரணைக் கவுண்டரில் கேளுங்கள் என்பார்கள்.

பிரச்சினை என்னவென்றால் விசாரணைக் கவுண்டர் இருக்குமிடமும் யாருக்கும் தெரியவில்லை. நான் சோர்ந்து போய் கிட்டத்தட்ட மயங்கிய நிலையில் இருந்த பொழுது, சேமிப்புக் கவுண்டரில் இருந்த இளம்பெண் ஒருவர் என்ன வேண்டுமென ஆதரவாய்க் கேட்டார். நான் சொன்னதும் ‘நீங்கள் 53 ஆம் நம்பர் கவுண்டருக்குச் செல்லுங்கள். அது பின்னால் உள்ள கட்டிடத்தில் பெரிய கடிகாரம் மாட்டி இருக்கும் தூணுக்கு அருகில் உள்ளது' என இந்தியில் கூறினார். நான் மகிழ்ச்சியுடன் நடக்கத் தொடங்கியதும் பின்னால் ஒடி வந்து ‘இந்தப் பக்கம் குறுக்கு வழி உள்ளது, சீக்கிரம் போய் விடலாம்' என்றும் கைகாட்டினார்!

செய்யும் வேலையைச் சிரத்தையுடனும் மகிழ்ச்சியுடனும் செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களை வேலையில் வைத்து இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் தரையைத் துடைக்கும் தொழிலாளியிடம் கமல்ஹாசன் சொல்வாரே அதுபோல, ஒவ்வொரு வேலையும் முக்கியமானதே. இதையே தான் மார்ட்டின் லூதர்கிங்கும் ‘நீங்கள் தெருவைக் கூட்டும் வேலையைச் செய்தால் கூட, ஏதோ மைக்கேல் ஆஞ்சலோ ஓவியம் தீட்டுவது போலப் பெருமையுடன் செய்யுங்கள்' என்கிறார்.

பற்று இல்லாதவனை பணிக்குத் தேர்வு செய்யக்கூடாது; அப்படிப்பட்டவன் பழிக்கும் அஞ்ச மாட்டான் என்கிறது குறள்.இல்லையா பின்னே?எடுத்த வேலை ஒழுங்காக முடிந்தால் மகிழ்ச்சி அடைபவன்தானே அது சரியாய் நடக்காவிட்டால் வரும் கெட்ட பெயருக்கும் பயப்படுவான்? காலையில் எழுந்தவுடன் அலுவலகம் சென்று இதைச் செய்ய வேண்டும் அவரைப் பார்க்க வேண்டும் என்று உற்சாகமாய் உத்வேகத்துடன் இருப்பவர்கள் அவர்கள்!

செய்யும் பணியில் திருப்தி (job satisfaction) என்பது இல்லாவிட்டால், அதைப் போன்றக் கொடுமையான தண்டனை வேறு இல்லை! எனவே வேலைக்குத் தேர்வு செய்யும் பொழுது எம் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் எண்ணம் உண்டா என்றும் பார்ப்பது நன்று!

எந்த ஒரு வேலையையும் சிறப்பாக, செவ்வனே செய்வதில் உள்ள ஆத்ம திருப்திக்கு ஈடு இணை இல்லையே. உங்கள் உழைப்பின் உண்மையான ஊதியம் அதுவே. சற்றே சிந்தித்துப் பாருங்கள். அந்த ஆனந்தத்தை வேறு யாராலும் கொடுக்க முடியாது; உங்களிடமிருந்து யாராலும் அதைப் பறிக்கவும் முடியாது!

இக்குறளை பந்த பாசம் இல்லாதவனை வேலைக்கு எடுக்கக் கூடாதெனக் கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம்.உண்மை தானே, கார் ஓட்டுநர்களில் சிலர் தம் மனைவி மக்கள் புகைப்படத்தை காரில் கண்ணில் தெரியும்படி வைத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் வண்டியை கவனமாக ஓட்டுவதாக சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஷிமோகா ஆர்டிஓவில் இதை விதியாகவே ஆக்க நினைக்கிறார்களாம்!

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி (குறள் 506)

தொடர்புக்கு - somaiah.veerappan@gmail.com

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?
DINAMALAR

சென்னை;'வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:மார்ச், 24 - ஹோலி பண்டிகை; 25 - புனித வெள்ளி; 26 - நான்காவது சனிக்கிழமை; 27 - ஞாயிற்றுக்கிழமை. இதனால், நான்கு நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில், ஹோலி பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்பதால், 24ல், இங்கு வங்கிகள் இயங்கும்.

பொதுத்துறையைச் சேர்ந்த, ஐ.டி.பி.ஐ., வங்கியை, தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டித்து, மார்ச், 28ல், ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தம், ஐ.டி.பி.ஐ., வங்கியில் மட்டும் நடக்கும் என்பதால், மற்ற வங்கிகள், 28ல் வழக்கம் போல இயங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

ரயிலில் 'சீட்' ஒதுக்கீடு பட்டியல் உண்டு: பின் வாங்கியது தெற்கு ரயில்வே

ரயிலில் 'சீட்' ஒதுக்கீடு பட்டியல் உண்டு: பின் வாங்கியது தெற்கு ரயில்வே


DINAMALAR


சென்னை: ரயில் பெட்டிகளில், 'சீட்' ஒதுக்கீடு விவர பட்டியலை, மீண்டும் ஒட்டுவது என, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயிலில் பயணிக்க, முன்பதிவு செய்யும் பயணிகளின் மொபைல் போன் எண்ணுக்கு, சீட் ஒதுக்கீடு விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படுகிறது. காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு, டிக்கெட் உறுதி செய்யப்பட்ட உடன், தகவல் சென்று விடுகிறது. இதனால், ரயில் பெட்டிகளில் சீட் ஒதுக்கீடு விவர பட்டியல் ஒட்டும் பணியை, படிப்படியாக நிறுத்த, தெற்கு ரயில்வே முடிவு செய்தது. முதற்கட்டமாக, சென்னை சென்ட்ரல் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம் - டில்லி நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில், மார்ச் 20ம் தேதி முதல், ஒரு மாதத்திற்கு சோதனை அடிப்படையில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவித்தனர்.


இதனால், முன்பதிவு செய்த போது, மொபைல் போன் எண் தராதவர்களில் சிலர், கடைசி நேரத்தில் தவிப்பிற்கு ஆளாகினர். காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள், தங்களுக்கு டிக்கெட் உறுதியாகி விட்டதா என்பதை அறிவதிலும் சிக்கல் ஏற்பட்டது.இதனால், இந்த விஷயத்தில் தெற்கு ரயில்வே பின்வாங்கி உள்ளது. 'இந்த ரயில்களில் சீட் ஒதுக்கீடு விவர பட்டியல், மீண்டும் ஒட்டப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை

பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை
DINAMALAR

தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு, மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது.
தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2வுக்கு, ஏப்., 1ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 10ம் வகுப்புக்கு, ஏப்., 11; விருப்ப பாடம் எழுதுவோருக்கு, ஏப்., 13ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஏப்., 15ம் தேதிக்குள் தேர்வுகள் முடிகின்றன.

அதே போல், 6ம் வகுப்பு - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 21; மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், ஏப்., 30ம் தேதி தேர்வுகள் முடிகின்றன.
எனவே, ஏப்., 22ம் தேதி முதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும்; மே 1ம் தேதி முதல், துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும், கோடை விடுமுறை துவங்குகிறது. ஜூன் 1ம் தேதி, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம், விரைவில் வெளியிடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -

மாஜி கணவருக்கு கஷ்டம் கொடுக்காதீங்க!'பெண்ணுக்கு கோர்ட் அறிவுரை

மாஜி கணவருக்கு கஷ்டம் கொடுக்காதீங்க!'பெண்ணுக்கு கோர்ட் அறிவுரை

DINAMALAR

புதுடில்லி;'ஜீவனாம்சம் கேட்டு, முன்னாள் கணவருக்கு நிதிச்சுமை ஏற்றுவதற்கு பதில், வேலைக்குச் சென்று சம்பாதிக்கலாமே' என, முதுகலை பட்டதாரி பெண்ணுக்கு, டில்லி கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.டில்லியைச் சேர்ந்த அந்த தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்றது. 'பெண்ணின் வாழ்க்கைக்காக, மாதம், 12 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்' என, குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, கணவர், மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கை மாவட்ட நீதிபதி, ரேகா ராணி விசாரித்தார். விசாரணையின் போது, முன்னாள், கணவன் - மனைவி இருவரும் கோர்ட்டில் ஆஜராகியிருந்தனர். அப்போது, கணவன், ''என்னை விட நன்றாக படித்திருக்கிறார். வேலைக்கு சென்றால், கை நிறைய சம்பாதிக்கும் திறமை அவருக்கு உள்ளது. ஆனால், அப்படிச் செய்யாமல், வீட்டிலேயே உட்கார்ந்திருக்கிறார்,'' என்றார்.

உடனே நீதிபதி, ''நீங்கள் தான், எம்.எஸ்சி., வரை படித்திருக்கிறீர்களே... முன்னாள் கணவருக்கு நிதிச் சுமை ஏற்றுவதற்கு பதில், வேலைக்கு செல்லலாமே,'' என அப்பெண்ணிடம் கேட்டார்.
அதற்கு அப்பெண், ''எனக்கு எந்த அனுபவமும் இல்லை; இதுவரைக்கும் நான் வேலை தேடிச் செல்லவும் இல்லை. தனியாக செல்ல பயமாக இருக்கிறது,'' என்றார்.
உடனே நீதிபதி, ''கணவனுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்காக கோர்ட் வரை தனியாக வந்த உங்களால், வேலை தேடுவதற்கு தனியாக செல்ல முடியாதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட கணவர், ''அவர் வேலை தேடுவதற்காக, துணைக்கு செல்லவும், வேலை தேட உதவி செய்யவும் தயாராக இருக்கிறேன்.

அவர் வேலை தேடும் வரை, ஓராண்டுக்கு மட்டும், மாதம், 12 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்கவும் தயாராக இருக்கிறேன்,'' என்றார்.இதை ஏற்ற நீதிபதி, ரேகா ராணி, ''ஓராண்டுக்குள் வேலை தேட வேண்டும். அதற்கு உதவி செய்வதாக கூறிய கணவனுக்கு, மொபைல் எண், இ-மெயில் முகவரியை மனைவி வழங்க வேண்டும். ஓராண்டுக்கு, மாதம், 12 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த உத்தரவு, ஓராண்டுக்கு மட்டுமே செல்லும்,'' என, உத்தரவிட்டார்.

344 மருந்துகளுக்கு விதித்த தடை தொடரும்:மத்திய அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் 'ஓகே'

344 மருந்துகளுக்கு விதித்த தடை தொடரும்:மத்திய அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் 'ஓகே'

DINAMALAR

சென்னை:'ஒன்றுக்கு மேற்பட்ட மருந்து கலவைகளை உடைய, 344 வகையான மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ கூடாது' என, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.தென் இந்திய மருந்து உற்பத்தியாளர் சம்மேளனத்தின் தலைவர் சேதுராமன், தாக்கல் செய்த மனு:பொதுநலன் கருதி
மத்திய சுகாதார துறை, 2016 மார்ச், 10ல் பிறப்பித்த உத்தரவில், 'பிக்சடு டோஸ் காம்பினேசன்' எனப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட மருந்து கலவைகளை உடைய, 344 வகையான மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ கூடாது' என, தெரிவித்துள்ளது; பொதுநலன் கருதி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்த மருந்துகள், பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.ரகசியமாக... மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ், இந்த குழு அமைக்கப்படவில்லை. அனைத்து நடவடிக்கைகளும், ரகசியமாக வைக்கப்பட்டன. மத்திய அரசு உத்தரவு பொதுநலனுக்கு எதிரானது. ஏனெனில், இந்த மருந்துகளைத் தான், பெரும்பாலும் டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மத்திய அரசின் உத்தரவுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எனவே, மத்திய அரசின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். எங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு
உள்ளது.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' மனுவை விசாரித்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் சீனிவாசன், தமிழக அரசு சார்பில், அரசு பிளீடர் மூர்த்தி, 'நோட்டீஸ்' பெற்றனர்.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மத்திய அரசின் உத்தரவுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது; விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என, உத்தரவிட்டுள்ளதும், எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்தில், நாங்கள் உடன்படவில்லை; அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை. பல ஆண்டுகளாக மருந்து விற்பனை நடந்து கொண்டிருப்பதால், அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என, கூற முடியாது. இந்தப் பிரச்னையை ஏற்கனவே, நிபுணர் குழு ஆராய்ந்துள்ளது. அனைத்து நடைமுறைகளும், சட்ட விதிகளும் பின்பற்றப்பட்டனவா என்பது, விசாரணையின் போது ஆராயப்படும். மத்திய அரசு உத்தரவுப்படி, தடை செய்யப்பட்ட மருந்துகளை
விற்கக்கூடாது.ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மருந்துகளை வைத்திருக்கும், உற்பத்தியாளர்கள் மற்றும், 'ஸ்டாக்கிஸ்ட்'கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கூடாது.இவ்வாறு நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.

MCI for overhaul of medical curriculum


MCI for overhaul of medical curriculum

TIMES OF INDIA

Ahmedabad: In a rare instance, senior members of Medical Council of India (MCI) interacted directly with medical students. At NHL medical college's Adrenaline Medical Conference held within VS Hospital campus on Sunday, the president of MCI, Dr Jayshree Mehta, along with past MCI president and president-elect of World Medical Association, Dr Ketan Desai and chairman of academic council, MCI, Dr Vedprakash Mishra accepted questions from a jam-packed audience including faculty at the college. The conference was moderated by Adit Desai, chairman of the Adrenaline Conference.

Many students at this interactive session were eager to learn from MCI president Jayshree Mehta whether there was any scope for research in the present medical curriculum. She replied, "The MCI has just recently given directions to create a research centre in every medical college to promote research activities amongst undergraduate and postgraduate students."

Another hot issue was the status of the National Entrance Eligibility Test (NEET) in the coming years. The NEET entrance exam will eliminate separate common entrance tests conducted by colleges, and instead prescribe a common exam for all undergraduate, as well for postgraduate courses across medical colleges. Dr Desai said, "A review petition has been filed by the MCI as wells as the central government with the constitution bench of five judges. The matter will be taken up for final hearing by the Supreme Court." Desai added, "In the meantime MCI has already recommended to the central government to amend the MCI Act to empower the MCI to conduct the NEET examination."

Dr Mishra assured the audience, "The MCI has recommended complete revamp of the curriculum to make it a competency-based curriculum."

Many students were also concerned over the affordability of medical education. They had asked as to how the MCI plans to increase social equity in medical education. Other questions revolved around inclusion of credit based award system, possibility of integrated learning in medical education. Adit Desai said, "This happens to be rare occasion where MCI panel members engaged directly with students. This interaction was successful, and I feel more such events should be held."

OCI cards enough to visit India

OCI cards enough to visit India


THE HINDU

Overseas citizens of India and Indian Origin just need OCI document and will not require a visa, but passport will be mandatory

The Indian diaspora will no longer have to get a visa affixed on their passports every time they travel to India as the Union government has decided to do away with the process.

The government has decided that since the categories Overseas Citizen of India (OCI) and the Persons of Indian Origin (PIO) were merged last year, the OCI card will suffice to enter the country and hence would require no visa.

Carrying a passport will, however, be mandatory, an official said.

“Till now, every OCI card holder also had to get a visa affixed from the Indian High Commission whenever they planned a visit to India. Now, only the OCI card will be needed,” a senior government official said.

The government is also planning to make arrangements to print OCI cards at a few big missions like the U.K and the U.S., countries where many Indians reside.

The OCI card bears certain security features that cannot be tampered with and are made after several layers of checks.

Prime Minister Narendra Modi announced in 2014 that the PIO and OCI would be merged for the benefit of the diaspora.

Amendment

The government amended the Citizenship Act last year and a notification was issued to merge the two cards.

“Since the announcement, there was a lot of confusion among the diaspora regarding the two cards. The respective missions in foreign countries held workshops and tried to clear doubts. The earlier deadline to migrate from PIO to OCI was January 2016, but we have now extended the deadline to June 30,” the official said.

An official explained that the move would also help create a database of the Indian diaspora as a consolidated figure is not present with the government.

After the notification was issued last year, only one OCI card with enhanced benefits is in existence.

Ordinance

“Keeping in view the promise [made by PM Modi in the USA and Australia in 2014], an ordinance was promulgated on January 6, 2015 whereby the eligibility and additional benefits of the PIO card have been incorporated in the OCI card and certain other relaxation to OCI card holders have been given by amending the Citizenship Act, 1955. The PIO and the OCI cards used to exist simultaneously, leading to a lot of confusion among the PIOs residing abroad,” an official said.

Overseas Indians challenge govt order on surrogacy

Overseas Indians challenge govt order on surrogacy

HINDUSTAN TIMES
A group of people categorised as overseas citizens of India (OCIs) have challenged a Central notification disallowing them from commissioning surrogate children in the country. In a petition before the Supreme Court, the OCIs termed the move as discriminatory.

Taking up the petition on Thursday, a bench of justices Ranjan Gogoi and NV Ramana asked the government to explain the logic behind leaving the OCIs out in the notification, even as the proposed law does not envisage it.

The SC is hearing a PIL filed by an advocate Jayashree Wad who complained that India had become a major hub for commercial surrogacy in the world due to unregulated practice of the trade.

The Centre issued a notification in November to regulate commercial surrogacy in India, considered to be a $445 million annual business. As a part of stringent measures, the government banned import of human embryo except for research.

“Under what authority of law have you imposed this ban? Even the draft bill does not contemplate it,” the bench asked the government counsel who assured the court to be back with a response on April 13.

The judges also asked the government to spell out the fate of the bill that was to be tabled before the Parliament. They recalled that the solicitor general had on October 2015 said the bill was at a consultative stage and would be introduced in the Parliament soon.

“More than three months have passed what happened to the consultative process?” the bench asked the government advocate who said the bill was now pending before a parliamentary standing committee.

The orders issued on November 3 and 4 last year said stated that no Indian mission or foreign office shall issue visa to foreign nationals for this purpose. The detailed advisory by the MHA and health ministry go a step further to stop commercial surrogacy even as the government works on a legislation to bar foreigners from renting a womb in India.

During the hearing, the bench indicated staying the notification in favour of the OCIs. However, on the request of the government counsel it did not issue any order.

The counsel said the purpose behind the notification was to extend the benefit to the “infertile Indian parents.”

“What is the law or mechanism by which you are stopping them (OCIs)? What is the policy? This is contrary to your bill,” Justice Gogoi heading the bench observed.

The Overseas Citizenship of India (OCI) scheme launched in 2005 provides for registration as OCIs of all persons of Indian origin (PIOs) who were Indian citizens from January 26, 1950 or were eligible to become Indian citizens on that date and who are citizens of other countries, except Pakistan and Bangladesh.

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?
DINAMALAR
23.3.2016

சென்னை;'வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:மார்ச், 24 - ஹோலி பண்டிகை; 25 - புனித வெள்ளி; 26 - நான்காவது சனிக்கிழமை; 27 - ஞாயிற்றுக்கிழமை. இதனால், நான்கு நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில், ஹோலி பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்பதால், 24ல், இங்கு வங்கிகள் இயங்கும்.

பொதுத்துறையைச் சேர்ந்த, ஐ.டி.பி.ஐ., வங்கியை, தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டித்து, மார்ச், 28ல், ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தம், ஐ.டி.பி.ஐ., வங்கியில் மட்டும் நடக்கும் என்பதால், மற்ற வங்கிகள், 28ல் வழக்கம் போல இயங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வயதான காலத்தில் பாதுகாப்பு

வயதான காலத்தில் பாதுகாப்பு

DAILY THALAYANGAM

மின்சார வயர்கள் செல்லும் சில இடங்களில் ‘‘இந்த இடத்தை தொட்டால் ஷாக் அடிக்கும்’’ என்று அபாய எச்சரிக்கை விடுக்கும் போர்டுகளை பார்க்க முடியும். அதுபோல தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை தொட்டால், அரசாங்கத்துக்கு நிச்சயமாக ‘ஷாக்’ அடிக்கத்தான் செய்கிறது. தனியார் நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு மாத பென்ஷன் கிடையாது. அவர்களுடைய ஓய்வுகாலத்துக்கு சேமிப்பு என்றால், அது அந்த நிறுவனம் தரும் பணிக்கொடையும், மாதாமாதம் அவர்கள் சேமிப்பில் சேர்ந்துகொண்டிருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியும் மட்டுமே ஆகும். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி என்பது, ஒவ்வொரு மாத சம்பளத்திலும் தொழிலாளர்களின் பங்காக அதிகபட்சமாக 12 சதவீத தொகை எடுத்துக்கொள்ளப்படும். அவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனமும் அதே 12 சதவீதத்தை தன்பங்காக தொழிலாளர்களுக்கு அளிக்கும் இந்த 24 சதவீத தொகையும் வருங்கால வைப்புநிதியத்தில் ‘டெபாசிட்’ செய்யப்பட்டு, அதற்கு தற்போது 8.8 சதவீத வட்டியும் கொடுக்கப்படுகிறது.

இதுவரையில் பதவியில் இருந்து ஓய்வுபெறும்போது இந்த தொகையை எடுத்தால் அதற்கு வட்டி கிடையாது என்று இருந்தது. இந்த ஆண்டு மத்திய அரசாங்க பட்ஜெட்டில் திடீரென்று இதில் கைவைக்கும் வகையில், பதவியிலிருந்து ஓய்வுபெறும்போது இந்த தொகையை எடுக்கும் நேரத்தில் 40 சதவீத தொகைக்கு மட்டுமே வரி கிடையாது, மீதமுள்ள 60 சதவீத தொகை வேறு ஏதாவது பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டால் மட்டுமே வரி கிடையாது. இல்லையென்றால், வரி கட்டவேண்டும் என்ற அறிவிப்பு வந்தவுடன் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு அலைகள் வீசியது. இதனால் பிரதமரே தலையிட்டதன்பேரில், இந்த வரிவிதிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்பாடா! என்று ஒரு வழியாக தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டநேரத்தில், இப்போது திடீரென்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை எடுப்பதற்கான ஓய்வுகால வயது 55–லிருந்து 58 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அதற்கு முன்பாக இந்த நிதியை எடுக்கும் தொழிலாளர்கள் முழுத்தொகையையும் எடுக்கமுடியாது. தாங்கள் கட்டிய தொகையை மட்டும் வட்டியோடு பெற்றுக்கொள்ளலாம். தொழில் நிறுவனங்கள் கட்டிய தொகை 58 வயதாகும் போதுதான் வட்டியோடு அவர்களுக்கு திரும்பத்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் பலத்த எதிர்ப்புகள் வெளிவந்துள்ளன.

தொழிலாளர்களின் சேமிப்பை அவர்கள் விரும்பும் நேரத்தில் எடுத்துக்கொள்வதற்கு உரிமை உண்டு. சிலர் அவசரத்தேவைக்காக இந்த பணத்தை எடுக்க நினைப்பார்கள். சிலர் வேலையிலிருந்து நிற்கும் நேரத்தில் ஏதாவது முதலீடு செய்வதற்கோ, அல்லது சுயதொழில் தொடங்குவதற்கோ இதை பயன்படுத்த நினைப்பார்கள். அவர்களுடைய உரிமையை இந்த அறிவிப்பு பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், தொழிலாளர் வைப்புநிதிக்கான விதியில் 3 ஆண்டுகள் செயல்படாமல் இருந்தால், அதற்காக வட்டி வழங்கப்படமாட்டாது என்று இருக்கிறது. ஆக, 45 வயதில் ஒருவர் பணியிலிருந்து விலகி, தன் பங்குதொகையை மட்டும் பெற்றுக்கொண்டால், அடுத்த 13 ஆண்டுகள் தொழில் நிறுவனங்கள் கொடுத்த நிதி தூங்கிக்கொண்டிருக்குமே?, இதற்கு வட்டி உண்டா என்று அறிவிக்கப்படவில்லையே? என்று தொழிலாளர்கள் தரப்பு வினாக்களை எழுப்புகிறது. ஆனால், வயதான காலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு அவர்கள் சேமிப்பின் ஒரு பகுதியாவது நிச்சயமாக கைகொடுக்கும் என்ற வகையில் இந்த புதிய அறிவிப்பை வரவேற்கும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வருங்கால வைப்புநிதி என்பது, வங்கிகளில் போடும் சேமிப்பு கணக்குபோல அல்ல, நினைத்த நேரத்தில் எடுத்துக்கொள்வதற்கு இது எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்கும் தொகை ஆகும். இந்த தொகையையும் எடுத்து ஒருவேளை பணம் செலவழிந்துவிட்டால், வயதான காலத்தில் யார் கை கொடுப்பார்கள்?. எனவே, இந்த அறிவிப்பை ஓய்வுகால நலனுக்காக வரவேற்கத்தான் வேண்டும்.

சொல் வேந்தர் சுகி சிவம்

சொல் வேந்தர்
சுகி சிவம்

நம்பர் ஒன்னா? நம்பர் டூவா?

உலகத்திலேயே மிகமிக அதிர்ஷ்டசாலி யார்? எல்லா வசதி வாய்ப்புகளும் பெற்று எந்தவிதக் கவலையும் சிக்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழக் கூடிய வாய்ப்பு ஒருவருக்கு உண்டா? உண்டு என்றால் அவர் யார்?

இந்தக் கேள்விக்குப் பதில் என்ன தெரியுமா? அமெரிக்காவின் துணை ஜனாதிபதி. அவர்தான் சகல வசதி வாய்ப்புகளுடன் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாழும் வாய்ப்பு உடையவர். அவரைப் பற்றி பிரசித்தி பெற்ற ஜோக் ஒன்று உண்டு.

காலைத் தூக்கம் கலைந்ததும் படுக்கையில் இருந்து எழாமலேயே, "ஜனாதிபதி நன்றாக இருக்கிறாரா?' என்று கேட்டு, "ஆம்' என்று பதில் வந்தால், மறுபடியும் போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்கப் போய்விடலாம். அவருக்கு என்று அமெரிக்காவில் எந்தப் பொறுப்பும் எந்த வேலையும் கிடையாது. ஆனால் ஜனாதிபதிக்கு நிகரான வாழ்க்கை வசதிகள் உண்டு.

ஜனாதிபதி இறந்தால் மட்டுமே அவரது இயக்கம் ஆரம்பம் ஆகும்! சகல வசதி வாய்ப்புடன் எந்தவித வேலைப் பளுவும் இல்லாத இந்த உதவி - துணை என்கிற பதவிகளைச் சிலர் விரும்புவார்கள். காரணம், முதலாவதாக இருப்பதில் பெருமை இருக்கிற அளவு பொறுப்பும் பாரமும் துன்பமும் விமர்சனமும் உண்டு. ஆனால் நம்பர் 2 ஆக இருப்பதில் சுகமும் போகமும் மட்டுமே உண்டு.

ஆனால் இந்த நம்பர் 2-ல் திருப்தி அடைவது வாழ்க்கையே அல்ல. போராட்டங்கள் நிறைந்த நம்பர் ஒன்னாக இருக்கவே ஆசைப்படுங்கள்.

ஆனந்த் தியேட்டர் அதிபர் அமரர் உமாபதி அவர்களைப் பற்றிய சுவையான செய்தி ஒன்று உண்டு.

எந்த விழாவுக்குப் போனாலும் முதல் வரிசையில் இடம் இருந்தால்தான் அமருவார். இரண்டாவது வரிசையில் இருக்க அவருக்குப் பிடிக்காது என்று சிலம்பொலி செல்லப்பன் ஒருமுறை சொன்னார்கள். எனக்கும் இந்த இயல்பு உண்டு.

எல்லோருக்கும் முதல் வரிசையில் இடம் கிடைக்குமா? எல்லோரும் நம்பர் ஒன் ஆக முடியுமா என்று தத்துவ வினாக்கள் எழுப்ப வேண்டாம்! அந்த விவாத நேரத்தைக்கூட வீணாக்காமல் நம்பர் ஒன் ஆவதற்கு முயலுங்கள்.

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் சீனியாரிட்டிபடிப் பார்த்தால் கலைஞர் தி.மு.க.வின் தலைவராகவும் முதல்வராகவும் ஆகியிருக்க முடியாது. அமரர் எம்.ஜி.ஆர். கூடக் கலைஞரை முதல் இடத்தில் ஒப்புக்கொண்டார்.

அமரர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் இன்றைய தமிழக முதல்வரும் சீனியாரிட்டிகளைப் புறக்கணித்து நம்பர் ஒன் என்று தன்னை நிரூபித்தார். அவர் நம்பர் 2 ஆக இருக்க விரும்பியதே இல்லை!

நம்பர் டூ பாதுகாப்பானது... ஆனால் விரும்பத்தக்கது அல்ல.

ஆபத்துகளை, விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனிதர்களே எப்போதும் நம்பர் ஒன் என்ற முதலிடம் பெறுகிறார்கள்.

கஷ்ட காலத்தில் ஒரு குழுவைக் கட்டுக்குலையாமல் கொண்டு செலுத்தும் துணிவுடையவர்கள் பிறவித் தலைவர்கள். அவர்களிடம் இருந்து அந்தப் பண்பை நாம் படித்தாக வேண்டும்.

சைவ சமயத்தில் இறைவனைக் குறித்துப் பாடிய நாயன்மார்கள் பாடலை நம்பியாண்டார் நம்பி என்பவர் வரிசைப்படுத்தி முறைப்படுத்தினார். காலத்தால் பிந்திய- வயதில் சின்னவரான ஞானசம்பந்தர் பாடல்களைத்தான் முதல் திருமுறை என்று அறிவித்தார். சைவ சமயத் தலைவர்களை வரிசைப்படுத்தும்போது முதலில் ஞானசம்பந்தர் என்றே வரிசைப்படுத்துவார்கள்.

ஏன்?

சைவ சமயத்துக்குப் பிற சமயங்களால் துன்பம் நேர்ந்தபோது அஞ்சாமல் தலைமை ஏற்று நின்ற தமிழ் முதல்வர் சம்பந்தர். அது மட்டுமா? பாண்டிய நாட்டில் திருநீறு வைத்தாலே தீட்டு என்று அரசருக்கு அஞ்சி மக்கள் திருநீறு வைக்காதபோது நெற்றி நிறைய நீறு பூசி, திருநீற்றுப் பதிகம் பாடி, மன்னருக்கே திருநீறு கொடுத்த தமிழ்த் தலைவன் ஞானசம்பந்தன்.

எனவே நம்பர் ஒன் என்பது அவரைத் தேடி வந்தது. அவரைக் கொல்லப் பல முயற்சிகள் நடந்தன. பல ஆபத்துகளை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது என்றாலும் அவர் எதிர்கொண்டார்.

நம்பர் 2-ல் செüகரியங்கள் அதிகம். நம்பர் ஒன்னில் சங்கடங்கள் அதிகம். என்றாலும் நம்பர் 1 தான் உங்கள் லட்சியமாக இருக்க வேண்டும்.

நம்பர் ஒன் ஆக வேண்டும் என்றால் தகுதி, உழைப்பு, தியாகம், தலைமைப் பண்புடன் ஆக வேண்டுமே ஒழிய தவறான பாதைக்குத் தாவக் கூடாது.

ஒரு சில சைவ மடங்களில்கூட அசைவ வேலைகள் செய்து தலைமையைப் பெற ஆசைப்படுகிறார்கள். அதுவல்ல சரியான வழி...


ஞானசம்பந்தர் மாதிரி அஞ்சாமை, பொறுப்புணர்வு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் நம்பர் ஒன் ஆக வேண்டும்.

மகாபாரதத்தில் வியாசர் ஓர் அருமையான விளக்கம் சொல்லுகிறார்...

""எவன் பெரியவன் என்ற கேள்விக்கு அவர் சொல்லும் பதில் ஆச்சரியமானது. நான்கு வர்ணங்களில், அந்தணரில் அறிவு அதிகம் உடையவனே பெரியவன். அரசரில் பலம் அதிகம் உடையவனே பெரியவன். வணிகரில் பணம் அதிகம் வைத்திருப்பவனே பெரியவன். நாலாம் வர்ணத்தில் மட்டுமே வயது மூத்தவன் பெரியவன்.

காலம் மாறிவிட்டது. வர்ணாச்ரமம் வடிவம் மாறிவிட்டது... என்றாலும் வியாசரின் அணுகுமுறை ஆழ்ந்த அறிவு, மாற முடியாது.

உங்கள் ஆசிரியரைவிட நீங்கள் அதிகம் படித்தால் நீங்கள் நம்பர் ஒன். உங்கள் மேல் அதிகாரியைவிட உங்கள் பலம் பெருகிவிட்டால் நீங்கள் நம்பர் ஒன். உங்களைச் சுற்றி இருப்பவரைவிட உங்கள் பண பலம் பெருகிவிட்டால் நீங்கள் நம்பர் ஒன்.

வயது மூத்தவர்களை மரியாதையுடன் நடத்தினால் அப்போதும் நீங்கள் நம்பர் ஒன்.

சௌரியம் கருதி நம்பர் டூ ஆகவேண்டாம். சங்கடம் என்றாலும் நம்பர் ஒன்தான் நமது லட்சியம்.

இந்த லட்சியம் இருந்தால் வெற்றி நிச்சயம்!

Monday, March 21, 2016

தோற்றவர் வென்றார்!

சொல் வேந்தர்
சுகி சிவம்

தோற்றவர் வென்றார்!

வெற்றி - தோல்விகளைப் பற்றி உலகம் வைத்திருக்கிற அபிப்ராயங்கள், அளவுகோல்கள் எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. உலகின் நடைமுறைகள், தோல்வியுற்றதாக அறிவித்தவர் வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டு. சில சமயம் சிலரது வெற்றிகளைப் புரிந்து கொள்ளும் சக்தியே உலகத்துக்கு இல்லாமல் போவதும் உண்டு. எனவே உலகம் அறிவிக்கின்ற வெற்றி - தோல்விகளைப் பற்றிக் கவலையே இல்லாமல் உழைப்பதும் வெற்றி பெறுவதும் மிக மிக முக்கியம்.

மராட்டிய மாநிலத்தில் தேர்வில் தேர்ச்சி பெறாதவனாக அறிவிக்கப்பட்ட மாணவன் ஒருவன் மறுகூட்டல் கேட்டபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவன்தான் மாநிலத்திலேயே முதலாவதாக மதிப்பெண் பெற்றவன். சில நாள்களில் வெற்றி, தோல்வி தலைகீழாகிவிட்டது. பிறரது அளவுகோல்களால் நிர்ணயிக்கப்படுகிற வெற்றி - தோல்விகளால் தயவுசெய்து பாதிக்கப்படாதீர்கள்.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் நான் பி.ஏ. பொருளாதாரம் படித்தபோது நடந்த நிகழ்ச்சி. மாணவர் தலைவர் தேர்தல். போட்டியிட்டு 32 ஓட்டுகள் குறைவாகப் பெற்று நான் தோல்வி அடைந்தேன். நான் அறிவும் விழிப்பும் பெற்றதற்கு மூல காரணம் அந்தத் தோல்வி. எத்தனையோ வகையில் அந்தப் பதவிக்குத் தகுதி எனக்கிருந்தும் நான் மாணவர்களால் நிராகரிக்கப்பட்டேன். பிறரது அங்கீகாரம் அல்லது அனுமதி பெறுகிற வெற்றி ஒரு வெற்றியே அல்ல என்று அப்போதுதான் நான் முடிவெடுத்தேன். என் வாழ்க்கை மாற்றம் அதனால் நிகழ்ந்தது. நமக்குள்ள தகுதியைப் புரிந்து கொள்கிற தகுதி பிறருக்கு இல்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்?

அந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றிருந்தால் அரசியலுக்குப் போய் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருப்பேன். ஆனால் எழுத்தும் பேச்சும் சமூக விழிப்பும் என் வாழ்வாகித் தோல்வியே அற்ற வெற்றிகளை நான் இன்று சந்திக்கிறேன். தேர்தலில் என்னைத் தோல்வியுறச் செய்த என் நண்பர் அரசியல் கட்சிகளில் சிக்குண்டு அவதிப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன் நான் அவரைச் சந்தித்தபோது கண்ணீருடன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, ""தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் நீ வாழ்க்கையில் வெற்றி பெற்றாய்'' என்றார். எனவே வெளியில் நிர்ணயமாகும் வெற்றி - தோல்விகள் ஒரு பெரிய விஷயம் அல்ல என்று நான் புரிந்துகொண்டேன். நீங்கள்..?

பெருந்தலைவர் காமராஜர் இந்தியாவில் ஒரு தமிழனும் அடைய முடியாத பெரும் புகழ் அடைந்த தமிழன். இமயம் முதல் குமரி வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த பல முதலமைச்சர்களையும் பிரதம மந்திரிகளையும் தன் உத்தரவுக்குக் கட்டுப்பட வைத்த வலிமையான காங்கிரஸ் தலைவர் அவர். அவர் மட்டுமே. அவருக்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு மக்கள் தலைவரைத் தமிழ் மண் கண்டதில்லை. பின்னும் இதுவரை ஒரு தலைவனைத் தமிழ் மண் தரவேயில்லை. ஆனால் அவரை அவரது விருதுநகர் மண்ணிலேயே ஒரு கல்லூரி மாணவர் தோற்கடித்தார். எப்படி முடிந்தது?

உணர்ச்சி வசப்படுகிற மக்கள் தீர்மானிக்கிற வெற்றி - தோல்விகள் பெரிய விஷயமே அல்ல. அதை விளக்கியவர் பேரறிஞர் அண்ணா. ஒரு விழாவில் பேசிய ஒருவர், ""பெருந் தலைவர் காமராஜரைத் தோற்கடித்த திரு. சீனிவாசன்'' என்று பேசிய போது பேரறிஞர் அண்ணா குறுக்கிட்டு, ""தேர்தலில் வெற்றி பெற்ற சீனிவாசன் என்று சொல்லுங்கள். "பெருந்தலைவர் காமராஜரைத் தோற்கடித்த' என்று சொல்லாதீர்கள். அவரை ஒரு போதும் யாராலும் தோற்கடிக்க முடியாது. அவர் வெற்றியை வரலாறு சொல்லும்'' என்று கூறினார். வாழ்வின் வெற்றி - தோல்விகள் ஒரு சில சம்பவங்களின் வெற்றி - தோல்விகளையே அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பதைத் தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தோற்கவில்லை என்பதை இந்திய வரலாறு சொல்கிறது. நண்பர் ஒருவர் சொன்ன இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். நண்பர் திருச்சியில் இருந்து நெல்லை செல்லும் தனியார் விரைவுப் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் இருந்த பெரியவர் ஒருவர் கை கால் வலியால் அவதிப்படுகிறவர். பேருந்து எங்காவது நிற்காதா... கொஞ்சம் கையைக் காலை நீட்டிச் சோம்பல் தீர நடக்க மாட்டோமா என்று ஏங்கிப் புலம்பியிருக்கிறார். தனியார் பேருந்து... எனவே எங்கும் நிற்காமல் பேருந்து பறந்து போய்க் கொண்டே இருந்தது. முடிவில் ஓர் இடத்தில் இரவுக் கடை முன் பேருந்துகள் நிற்கும் இடத்தில் வண்டி நின்றது. ""ஐயா... ரொம்ப நேரமா இறங்கணும்னு சிரமப்பட்டீங்களே... இங்க இறங்கி நிக்கலாம் வாங்க...'' என்று பெரியவரை அழைத்திருக்கிறார். ""இது எந்த ஊருப்பா...'' என்றபடியே வெளியே எட்டிப் பார்த்த பெரியவர் ""சே... இங்க மனுஷன் இறங்குவானா?'' என்று மறுத்துவிட்டார். நண்பர் "ஏன்' என்று திகைத்தவுடன் பெரியவர், ""இது விருதுநகர். பெருந்தலைவரைத் தோற்கடிச்ச ஊருப்பா... இதுல கால் பட்டாக்கூடப் பாவம்'' என்றாராம்.

இப்போது புரிகிறதா? ஊரும் உலகமும் நிர்ணயித்த வெற்றி - தோல்விகளுக்கு அப்பாலும் சில வெற்றிகள் இருக்கின்றன. இன்னொன்று சொல்கிறேன். தத்ரூபமாகச் சிலை வடிக்கும் போட்டி ஒன்று நடந்தது. இரு சிற்பிகள் ஒரே மாதிரி இரு சிலைகளைச் செய்திருந்தனர். அவர்களுக்குள் கடும் போட்டி நிலவியது. நடுவர் குழு ஒருவரை வெற்றி பெற்றதாக அறிவித்தது. காரணமும் சொன்னது. ஒரு இளம்பெண் தலையில் திராட்சைப் பழக் கொத்துகளைச் சுமந்து செல்வது போல் சிலைகள் இருந்தன. ஒருவர் சிலையில் இருந்த திராட்சைக் கொத்துகளை நிஜம் என நம்பிக் காக்கைகள் கொத்த வந்தன. அதனால் அவர் வெற்றி பெற்றார் என்றனர் நீதிபதிகள்.

ஆனால் மற்றவர் செய்த சிலையில் இருந்த பெண்ணையும் அவர் கையில் இருந்த குச்சியையும் நிஜம் என்று பயந்த காக்கைகள் அந்தச் சிலை மீதிருந்த திராட்சைகளைக் கொத்தாமல் விட்டன. இது நீதிபதிகளுக்குப் புரியாமல் போய்விட்டது. அந்த நீதிபதியைப் பார்த்துக் காக்கைகள் தமக்குள் கேலியாகச் சிரித்தன. யாருடைய வெற்றி உண்மையான வெற்றி?

வெற்றி - தோல்விகள் வாழ்வின் ஓரிரு சம்பவங்களை மட்டுமே சார்ந்தவை அல்ல. அவை முழு வாழ்வையும் சார்ந்தவை. இதைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

last updated: Mar 21, 2016, 1:07 AM (IST) SHIFTING OF 141 MBBS STUDENTS MCI fined Rs1 lakh for delay in taking decision


Tribune News Service

Faridkot, March 20The Punjab and Haryana High Court has slapped a fine of Rs 1 lakh on the Medical Council of India (MCI) for inordinate delay in taking a decision regarding the shifting of 141 MBBS students of Chintpurni Medical College and Hospital (CMCH), Pathankot, to eight other medical colleges in the state.

Though the decision to shift the students was to impact the lives and careers of 141 medical students, the MCI failed to respond to the communication of the Punjab Government in the past six months.

The MCI cannot be permitted to take such matters so lightly, ruled the high court while imposing the fine.

After the state Medical Education Department had decided to shift the final year students from CMCH on August 31, 2015, the state government submitted a list of eight medical colleges to the MCI for its decision. But the MCI failed to respond despite the high court giving it six opportunities.

The state government had agreed to shift the students of the 2011 batch from CMCH as the college had failed to get approval to admit students in 2012, 2013 and 2015 due to various shortcomings.

Fearing that their MBBS degree might not be recognised by the MCI, the first batch of students who had joined the college in 2011 have been demanding that the state government should shift them to other medical colleges.

After some students filed a writ petition in the high court, the court had asked the Punjab Government to raise the matter with Centre and MCI to work out the possibility of shifting these students.

The Baba Farid University of Health Sciences (BFUHS) had also recommended to the state government to shift these students to other colleges after adopting the due procedure.

This shifting of the students is subject to the permission by the MCI, said Hussan Lal, secretary, medical education and research, Punjab.

NEWS TODAY 20.09.2024