Tuesday, September 15, 2015

எம்.எஸ்: தன்னைக் கரைக்கும் இசை by டாக்டர் ராமானுஜம்

Return to frontpage




இசையின் மூலம் தனது இருப்பின் அர்த்தத்தை உணர்ந்தவர்; உணர்த்தியவர்.

அது 1998-ம் ஆண்டு. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் என்ற நகரம். பிரபல கட்டுரையாளர் ராமச்சந்திர குஹா ‘தைனிக் பாஸ்கர்’ என்ற இந்தி நாளிதழின் பிலாஸ்பூர் பதிப்பைப் பார்க்கிறார். அதன் தலையங்கத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாரத ரத்னா விருது வாங்கியதைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. கர்னாடக சங்கீதத்தையோ கச்சேரிகளையோ கேட்கும் வாய்ப்பே இல்லாத ஒரு பத்திரிகையாளர், சத்தீஸ்கரின் ஒரு இந்தி நாளிதழ் பதிப்பில் எம். எஸ்ஸைப் பற்றி எழுதிய புகழாரங்களைப் படிக்கும்போது, இந்தியாவை இணைப்பது பாலிவுட் சினிமா மற்றும் கிரிக்கெட் மட்டுமல்ல என்று தாம் உணர்ந்ததாக குஹா குறிப்பிடுகிறார்.

அதற்கு முந்தைய வருடம் பாரத ரத்னா விருது பெற்று, சமீபத்தில் காலமான அப்துல் கலாமைப் போன்றே எம்எஸ்ஸையும் இந்தியாவே கொண்டாடியது. அது அவரது திறமைக்காக மட்டுமல்ல; அவரைவிட இசைஞானம் கொண்ட கலைஞர்கள் இருந்தனர்; இருக்கின்றனர். ஆனால், கலாமைப் போன்றே எளிமையான பின்னணியில் பிறந்து தன்னுடைய நற்பண்புகள், எளிமை மற்றும் ஆத்மபலம் ஆகியவற்றாலேயே புகழ்வானில் மங்காத நட்சத்திரமாய் மின்னுகிறார் எம்.எஸ்.

சிகரம் தொட்ட குரல்

உயர் மட்டத்தில் இருப்பவர்களின் பிடியில் இருந்த கர்னாடக இசை, உலகில் சமூக உயர் அங்கீகாரம் இல்லாத இசை வேளாளர் குடும்பப் பின்புலத்தில் இருந்து வந்து, அதுவும் ஒரு பெண்ணாகச் சிகரத்தில் இடம்பிடித்தது அவரது மனப்பான்மையால்தான். (கர்னாடக சங்கீதத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான சங்கீத கலாநிதியைப் பெற்ற முதல் பெண் அவர்தான்.)

எம்.எஸ்ஸின் இசையில் அப்படி என்ன சிறப்பு? இசை என்பது ஒழுங்கமைக்கப்பட்ட ஓசைதான். ஆயினும் அதை உன்னதமாக்குவது அதன்பின்னே இருக்கும் உணர்வு. ஒரு வார்த்தைகூடப் புரியாவிட்டாலும் வார்த்தையே இல்லாவிட்டாலும் உள்ளத்தில் உணர்ச்சியைப் பொங்க வைப்பது இசை. எம் எஸ்ஸின் இசையின் தனித்தன்மை அதில் கலந்த உணர்வுதான். ராகம், தாளம், பாவம் ஆகிய மூன்றும் இசைக்கு மூன்று தூண்கள் என்றாலும் பாவமே சாதாரண இசையை உன்னதமாக்குகிறது.

கர்னாடக இசையில் ஒவ்வொரு பாடகருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. ஜி.என். பாலசுப்பிரமணியன், மதுரை மணி போன்றவர்கள் யுவராஜ் சிங் சிக்சர்களாக அடிப்பதுபோல் வாண வேடிக்கை காட்டித் தமது திறமையைக் காட்டுவார்கள். செம்மங்குடி சீனிவாச அய்யருடையதோ ராணுவ ஒழுங்குபோல் கட்டுக்கோப்பாகப் பாடும் கறாரான பள்ளித் தலைமையாசிரியரின் அணுகுமுறை. எம்.டி. ராமநாதனோ குழந்தை ஐஸ்க்ரீமை ரசிப்பதுபோல் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் பாடுபவர். சில சமயம் மூக்கால்கூட குழந்தை ஐஸ்க்ரீமைச் சாப்பிட்டுச் சேட்டை செய்யும்.

இசை அர்ப்பணம்

எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாணி அர்ப்பணிப்பு உணர்வுக்கே முதலிடம் கொடுப்பது. அவரைப் பொறுத்தவரை இசை என்பது ஒரு வேள்வி. அதில் தன்னுடைய ஆத்மாவைக் கரைத்துக்கொண்டு பாடுவதே அதன் லட்சியம். ஆங்கிலத்தில் ‘ஓஷியானிக் ஃபீலிங்’ (Oceanic feeling) என்றழைக்கப்படும் கடலில் கரைவது போன்ற உணர்வை அவரது இசை தரும். பாடும்போது அருமையான சங்கதிகள் வந்தால்கூட ஒரு பெருமிதமோ அளவுகடந்த மகிழ்ச்சியோ அவரிடம் வெளிப்படாது. கண்களை மூடி ஒரு கும்பிடு! அதில் ஒரு ஆன்மிகப் பரவச உணர்வே வெளிப்படும். எம்.எஸ். பழுத்த இறை நம்பிக்கையாளர். ஆயினும் இந்த உணர்வு கடவுள் நம்பிக்கை, மதங்களுக்கு அப்பாற் பட்டது. இதை நாத்திகர்களால்கூட உணர முடியும்.

உணர்ச்சிக்கே முதல் உரிமை கொடுத்ததால் இசை அறிவைப் பிரதானமாகக் காட்டும் சிக்கலான தாளக் கணக்குகள் போன்றவற்றின் பக்கம் அவர் போவதே இல்லை. மூளையால் பாடுவதைவிட இதயத்தால் பாடவே அவர் விரும்பினார். அதற்காக அவரது சங்கீத ஞானம் குறைவானது அல்ல. கம்பரின் ராமாயணத்தின் புகழ் வெளிச்சம் அவர் எழுதிய பிற நூல்களை மறைத்ததுபோல் சுப்ரபாதம், பஜகோவிந்தம் போன்ற சுலோகங்கள், பஜனைப் பாடல்கள் எம். எஸ்-ஸின் கர்னாடக இசைத் திறமைகளைச் சற்றுப் பின்னுக்குத் தள்ளின என்றுகூடக் கூறலாம்

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவரது குரல் வளம். சுருதிப் பெட்டியை விழுங்கிவிட்டாரோ என்று வியப்பு கலந்து நகைச்சுவையாகச் சொல்லும் அளவுக்கு மிகவும் சுருதி சுத்தமான குரல் அவருடையது. அக்கால நாடக நடிகர்களைப் போல் மிக அநாயாசமாக உச்ச ஸ்தாயியை எட்டும் குரல். அவரது முதல் ஒலிப்பதிவான ‘மரகத வடிவம்’ என்ற பாடல் இணையத்தில் கேட்கக் கிடைக்கிறது. பிற்காலத்தில் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டாலும் துளியும் பிசிறின்றி உச்ச ஸ்தாயியை அடைவது கேட்பவர்களுக்குப் பரவசமளிக்கக்கூடியது அவரது குரல். குறியீட்டுரீதியாக அவருக்கு உச்ச ஸ்தாயியில் கரைவது ஒரு ஆன்மிகச் சாதனையாக இருந்திருக்கக்கூடும். கடினமான ராகம் தானம் பல்லவி பாடுவது, எழுபத்தியிரண்டு மேளகர்த்தா ராகங்களால் ஆன ராகமாலிகையைப் பாடுவது போன்ற இசைத் திறமைகளை நிரூபிக்கும் முயற்சிகளையும் அவர் செய்யத்தான் செய்தார். ஆனால், அது தனக்கான தளமல்ல என்பதை உணர்ந்தவர்.

இணையொன்றும் இல்லை!

மிகவும் அற்புதமான உச்சரிப்பு அவருடையது. பாடல்களின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு உள்வாங்கிப் பலமுறை பயிற்சி செய்த பின்னே அரங்கேற்றுவார். அவர் எடுக்கும் பாடல்கள் சோடைபோவதே இல்லை. அதனால்தான் ‘குறையொன்றுமில்லை’ போன்ற பாடல்கள் அவரைத் தவிர வேறு யார் பாடினாலும் சாதாரணமாக ஒலிக்கிறது.

எளிய சூழலில் பிறந்து இசையை மேட்டிமைப்படுத்தும் கலாச்சாரத்தின் ஒரு கருவியாகத் தன்னை மாற்றிக்கொண்டார் என்று அவர் மீது குறைகள் சொல்பவர்களும் உண்டு. ஆயினும், அவரது இசை பண்டிதத் தன்மையற்றது; எளிமையானது. கற்பனா சக்தி குறைவானவர் என்று சங்கீத விமர்சகர்கள் சிலர் விமர்சித்துக்கூட உள்ளனர்.

அவரளவில் ‘செய்க தவம். தவமாவது இசை’ என்பதுபோல் இசையின் மூலம் தன் இருப்பின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டார். பணம், புகழ் போன்றவை எல்லாம் அவருக்குப் பொருட்டே இல்லை. அளவுக்கு அதிகமாக நிதியுதவிகளும் நன்கொடைகளும் அளித்தவர் அவர்.

தான் பிறந்த சூழலின் பின்னணியிலிருந்து தனி மனித உன்னத உயரத்தை அடைய அவர் தன்னைக் கரைத்துக்கொண்டு செய்த தவமே அவரது இசை. உடல் காற்றில் கரைந்தாலும் கரையாமல் காற்றினிலே வரும் கீதம் அவருடையது.

- டாக்டர் ராமானுஜம்,

'நோயர் விருப்பம்' நூலின் ஆசிரியர்,

தொடர்புக்கு: ramsych2@gmail.com

செப்டம்பர் 16 எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள்

தடுத்திருக்கலாம்! By ஆசிரியர்

Dinamani


மத்தியப் பிரதேசம், ஜாபுவா மாவட்டம், பெட்லவாட் நகரில் வெடிமருந்துக் குவியல் வெடித்ததில் 89 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை யாவும் கொந்தளிக்கும் மனநிலையை ஆற்றுப்படுத்தும் அறிவிப்புகள் மட்டுமே.
பெட்லவாட் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வணிகக் கட்டடத்தில், ஓர் உணவகம், பல்வேறு கடைகள் இடம்பெற்றிருந்த பகுதியில் ஜெலட்டின் வெடிமருந்துகளை ஒருவர் விற்க முடிகிறது என்பதே அப்பகுதியின் அரசு நிர்வாகத்துக்கும், காவல் துறைக்கும் பெருத்த அவமானம். அதிலும் குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக இவ்வாறு அக்கடையின் உரிமையாளர் ராஜேந்திர கசவா சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகளை விற்று வந்திருக்கிறார் என்று அரசு அதிகாரிகள் கூறுவது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர கசவா சகோதரர் சிறு வெடி விபத்தில் இறந்தது மூடி மறைக்கப்பட்டதாக இப்போது வாய் திறக்கிறார்கள். அப்போதே அதிகாரிகள் இதைப் பற்றி பேசியிருந்தாலும், ஊடகத்துக்குத் தகவலைக் கசியச் செய்திருந்தாலும், இந்தச் சட்டவிரோத வியாபாரத்தை தடை செய்ய முடியாது போனாலும்கூட, குறைந்தபட்சம் வேறு இடத்துக்கு, பொதுமக்கள் கூடுகிற இடமல்லாத ஓர் இடத்துக்கு மாற்றவாகிலும் வழி பிறந்திருக்கும்.
பத்து ஆண்டுகளாக ராஜேந்திர கசவா இவ்வாறு சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகளை விற்று வருகிறார் என்பது தெரிந்திருந்தும் அல்லது ஜெலட்டின் குச்சிகளை விவசாயக் கிணறு வெட்டும் பயன்பாட்டுக்கு விற்பனை செய்ய அவர் அனுமதி பெற்றிருந்தாலும்கூட, அளவுக்கு அதிகமான வெடிமருந்தை இருப்பில் வைத்திருந்ததற்காக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்தான் உண்மையில் கொலைக் குற்றவாளிகள்.
கும்பகோணம் பள்ளித் தீவிபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில், அந்தப் பள்ளிக்கு அனுமதி வழங்கிய, இடவசதியை சரிபார்க்கத் தவறிய அனைத்து அதிகாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டதைப்போலவே இந்த விபத்திலும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த வெடிமருந்து விற்பனையைத் தடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தலைமறைவான ராஜேந்திர கசவாவைக் கைது செய்யும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, இதற்குக் காரணமான அனைத்து அரசு அதிகாரிகளையும் இப்போது கைது செய்வதில் என்ன தடை இருக்க முடியும்?
இந்த வளாகத்தில் இருந்த உணவகத்தில்தான் முதலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிக்கும் சப்தம் கேட்டதாகவும் அதன் பிறகே வெடிமருந்துகள் வெடிக்கத் தொடங்கின என்றும் பார்வையாளர்கள் சிலர் கூறியுள்ளனர். அருகருகே ஓர் உணவகத்தையும் ஒரு சட்டவிரோத வெடிமருந்து விற்பனைக் கடையையும் எவ்வாறு ஒரு நகர மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இதுகுறித்து யாருமே ஒரு சின்ன எதிர்ப்புக்கூடத் தெரிவிக்கவில்லையா? எதிர்க்கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் எல்லாமும் மௌனமாக இருந்தனவா? மிக ஆச்சரியமாக இருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் நமக்குப் பல்வேறு வசதிகளைச் செய்து தந்திருக்கிறது. தவறுகளைத் தட்டிக் கேட்கத் துணிவில்லை, முடியவில்லை என்றாலும், வெளிச்சம் போட்டுக்காட்டப் பல வழிமுறைகளை தகவல் தொழில்நுட்பம் தந்துவிட்டிருக்கிறது. முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை போன்றவற்றின் மூலம் தவறுகள் வெளிச்சம் போடப்படுவது அதிகரித்து வருகிறது என்றாலும்கூட, இன்னும் சமுதாயத்தின் பொறுப்புணர்வு அதிகரிக்காததுதான் மிகப்பெரிய குறை.
தன்னார்வ அமைப்புகளும், விழிப்புணர்வுடன் கூடிய இளைய தலைமுறையினரும் முனைப்புடன் தவறுகளைத் தட்டிக்கேட்க முற்படுகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. அவர்களுக்கு இருக்கும் அதே முனைப்பும், துடிப்பும் கூடுதல் பொறுப்புள்ள உயர் பதவியில் இருப்போருக்கும், நடுத்தர வயதினருக்கும்கூட உண்டு. அவர்களும் சற்று பொதுநலச் சிந்தனையுடன் செயல்பட்டால், இதுபோன்ற தவறுகளைக் கணிசமாகக் குறைத்துவிட முடியும்.
பள்ளி, கோயிலுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் மனு கொடுப்பதைப் போல, இத்தகைய அனுமதி பெற்ற அல்லது அனுமதி பெறாத ஜெலட்டின் விற்பனைக் கடையை உணவகத்துக்கு அருகிலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட அந்நகர மக்கள் முன்வைக்கவில்லை என்றால், இந்தக் கோர விபத்தை அவர்களாகவே தேடிக் கொண்டனர் என்றுதான் பொருள்.
தீபாவளி நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்காக பட்டாசுகள் வாங்கும் பெற்றோர் அவற்றைப் பேருந்தில், ரயிலில் எடுத்துச் சென்றால் வெடிமருந்துத் தடைச் சட்டம் பாயும். பெற்றோர் தம் வீட்டுக்கு நடந்தா செல்ல முடியும்? அதிகாரிகளுக்கு கவலையில்லை. சாதாரண மக்களிடம் கறாராகச் சீறும் அதிகாரிகள், நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காத பட்டாசு வியாபாரிகளிடம் "பெட்டி'ப் பாம்பாக அடங்கிவிடுகிறார்கள்.
கிணறு வெட்ட ஜெலட்டின் கொண்டு செல்லும் விவசாயிகள் மீது சட்டம் பாயும். அனுமதி வாங்கினாயா என்று கேட்கும். ஆனால், ஜெலட்டின் பதுக்கி வைத்திருப்போரிடம் எதையும் கேட்காது. ஏனென்றால், அவர்கள் "கொடுத்து' வைத்தவர்கள்.
இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி, தவறுகளை வெளிச்சம்போட்டுக் காட்ட நாம் தயாராக வேண்டும். சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். சட்டத்தையும், சட்டம் நமக்குத் தரும் உரிமைகளையும் பயன்படுத்த வேண்டும். பெட்லவாட் வெடி விபத்து தவிர்த்திருக்க முடியாதது அல்ல, தடுக்கப்படாதது!

திரையில் ஒளிர்ந்த தெய்வீகம்!

Return to frontpage





By வினுபவித்ரா

எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு தொடக்கம் செப்டம்பர் 16

வாய்க்குள் வீணையை வைத்திருப்பவள் என்று போற்றப்பட்ட அந்தச் சிறுமியின் தொண்டையைத் தடவி ஹெலன் கெல்லர் சொல்லிய வார்த்தைகள் இவை. “நீ தேவதையைப் போல பாடுகிறாய்”. அந்தச் சிறுமியின் குரல்தான் எழுபது ஆண்டுகளாக நான்கு தலைமுறைகளைக் கடந்து இன்றும் நம்மை மயக்கத்தில் வைத்திருக்கிறது. அதுதான் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் குரல் நிகழ்த்திய மாயம். காதலும் பக்தியும் குழைந்து உறைந்திருக்கும் அவரது நூற்றாண்டு தொடங்குகிறது.

மக்கள் நினைவில் நீங்காத பாடகர், தேசபக்தர், தேசிய அடையாளம் என எல்லாவற்றையும் தாண்டி அவர் விரும்பி அணியும் பட்டுப் புடவையின் ஊதா நிறத்துக்கே ‘எம்.எஸ் ப்ளூ’ என்று பெயர் வரும் அளவுக்கு மக்கள் நினைவுகளில் ஓவியமாய்ப் பதிந்த வர். பாரம்பரிய இசையுலகுக்கு எம்.எஸ். வழங்கிச் சென்றிருக்கும் பங்களிப்பு காலத்தால் கரைக்க முடியாத பொக்கிஷம்.

திரையுலகுக்கு மிகக் குறைந்த பங்களிப்பே செய்திருந்தாலும் சில படங்களின் மூலமே தனிப்பெரும் நட்சத்திரமாக ஆகி தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையும் வசீகரித்தார். திரைப்படங்களில் நடித்து அவற்றில் அவர் பாடிய பாடல்கள், இசையில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் பிரியமான பிம்பமாக எம்.எஸ்-ஸை உயர்த்திப் பிடித்தன.

வசீகரமான பெரிய கண்கள், குங்குமத் திலகம், மினுங்கும் வைரத்தோடு, மூக்கின் இருபுறமும் துலங்கும் மூக்குத்திகள், தலையில் எப்போதும் தவழும் ஜாதி மல்லிப்பூ என வாழ்நாள் முழுவதும் ஒரு இலச்சினையைப் போல வலம் வந்தவர்.

11 வயதில் தனது முதல் மேடை நிகழ்ச்சியில் பாடத் தொடங்கி, புகழைத் தன்னை நோக்கி ஈர்த்த சுப்புலட்சுமி தனது 21 வயதில் தமிழ் சினிமாவின் தந்தை கே. சுப்ரமணியத்தால் ‘சேவாசதனம்’ தேசபக்தி திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால், சுப்புலட்சுமியின் திரைப் புகழை உலகறியச் செய்தவர்கள் இருவர். ஒருவர் அவரது கணவர் டி.சதாசிவம். இன்னொருவர் அவரை சினிமாவுக்கு அறிமுகம் செய்த எல்லிஸ் ஆர். டங்கன். அவர் ஹாலிவுட்டிலிருந்து ஒளிப்பதிவில் பயிற்சி பெற்று, 1935-ல் தனது நண்பர் மணிலால் டாண்டனின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். மணிலால் டாண்டனுக்கு உதவியாகப் பணிபுரிந்த படம் நின்றுபோனது. அடுத்து, தமிழிலும் இந்தியிலும் வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்த டங்கன் தமிழிலும் இந்தியிலும் 17 திரைப்படங்களை இயக்கினார்.

‘கல்கி’ பத்திரிகையைத் தொடங்குவதற்கான நிதி உதவிக்காக எம்.எஸ் ஏற்கெனவே ‘சாவித்ரி’ திரைப்படத்தில் கணவர் சதாசிவத்தின் வலியுறுத்தலால் நாயகியாக நடித்திருந்தார். டங்கனும் ஆனந்த விகடனில் தொடராக வந்திருந்த சதி லீலாவதியைத் தமிழில் எடுத்துத் தனது திரைப் பயணத்தைத் தமிழில் தொடங்கியிருந்தார். விகடன் பத்திரிகை வழியாக சதாசிவத்தை சந்தித்த எல்லீஸ் ஆர்.டங்கன், ‘சகுந்தலை’ மற்றும் மீரா’ ஆகிய திரைப்படங்களில் எம்.எஸ்-ஐ ஒப்பந்தம் செய்தார். சகுந்தலையும் மீராவும்தான் அவருக்கு பக்திப் பாடகர் என்ற தெய்வீக பிம்பத்தை நிலைப்படுத்திய படங்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தெய்வீக அழகை அடையாளம் கண்டு திரையில் சரியாக வெளிப் படுத்திய பெருமை டங்கனையே சேரும். எம்.எஸ்-ன் முகத்துக்கு பிளாஸ்டர் வார்ப்பெடுத்து, நுட்பமாக அவதானித்து அவர் முகத்துக்கு வெவ்வேறு கோணங்களில் பொருத்தமான ஒளி யமைப்பை உருவாக்கியவர் அவர்.

1940-ல் எடுக்கப்பட்ட சகுந்தலை படத்தின் 70% காட்சிகள் வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவை. தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தில் பவன் ராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியாக இருக்கும் இடத்தில்தான் அக்காலகட்டத்தில் நியூடோன் ஸ்டுடியோ இருந்தது. அதன் பின்புறம்தான் மீராவும் சகுந்தலையும் படம்பிடிக்கப்பட்டன என்கிறார் மோகன் வி.ராமன்.

மீராவில் எம்.எஸ் ஏற்ற கதாபாத்திரம் தனித்தன்மையும் உறுதியும் கொண்ட ஆளுமையாக வெளிப்பட்டிருப்பதைப் படம்பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்கிறார் திரைப்படத் திறனாய்வாளரான கே.ஹரிஹரன்.

தமிழ் சினிமாவில் அர்த்த பூர்வமான ‘க்ளோஸ் அப்’ காட்சிகளை அறிமுகப்படுத்திய எல்லிஸ் ஆர். டங்கனின் சிறந்த படம் மீரா என்கிறார்கள் விமர்சகர்கள். மீராவின் படப்பிடிப்பில் நடந்த அரிய நிகழ்வுகளில் ஒன்றைத் தனது சுயசரிதையில் பதிவுசெய்துள்ளார் எல்லிஸ் ஆர்.டங்கன்.

“மீரா படத்தின் ஒரு காட்சி குறித்து எனக்கு இப்போதும் பெருமிதம் உண்டு. எம்.எஸ்-ஸுக்கு அழகிய பெரிய கண்கள். அவர் பங்கேற்கும் பாடல் ஒன்றில் அந்த அழகிய கண்களை மட்டும் படம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்திருந்த சிறப்பு ஒளிச்சாதனத்தைப் பயன்படுத்தி அவரது கண்களைப் படம் பிடித்தேன். கண்களுக்கு மேலும் கீழும் டிப்ஃயூசன் திரையை அமைத்துப் படம்பிடித்தேன். ஃபைனல் கட்டில் அவரது கண்களின் க்ளோசப் மட்டுமே தெரியும். அது திரையை நிறைப்பதாக இருக்கும். அற்புதமான ஓவியம் போன்ற விளைவு அது” என்கிறார்.

மீரா படப்பிடிப்பின் ஆரம்பத்தில் ஆங்கிலம் பேசத் திணறிய எம்.எஸ், மீரா படப்பிடிப்பின் முடிவில் சரளமாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டுவிட்டார் என்பதைக் குறிப்பிடும் எல்லிஸ் ஆர்.டங்கன், ஒரு முழுமையான திரைநட்சத்திரமாக தன் திறன்களை பரிபூரணமாக்கிக்கொண்டவர் எம்.எஸ் என்கிறார்.

மீரா திரைப்படத்தில் கிட்டத்தட்ட அனைத்துப் பாடல்களையும் எம்.எஸ்தான் பாடினார். அவற்றில் ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடல் இன்றைக்குக் கேட்பவர்களையும் உறைய வைத்துவிடும் அனுபவமாக இருக்கிறது. மீராவில் அவர் பாடிய பாடல்கள்தான் ‘இந்தியாவின் குயில்’ என்ற பட்டத்தை சரோஜினி நாயுடுவிடம் அவருக்குப் பெற்றுத்தந்தது.

அற்புதமான இசைத்திறன், பேரழகு, புகழ் ஏறாத தெய்வீக ஆளுமை என எல்லாப் பொக்கிஷங்களும் இணைந்த எம்.எஸ்ஸை அவர் வாழ்ந்த காலத்தில் புகழாதவர்கள் குறைவு எனலாம். பாரத் ரத்னாவாக அங்கீகரிக்கப்பட்ட எம்.எஸ்-ஸுக்கு ஆந்திர மாநிலத்தின் கோயில் நகரமான திருப்பதியின் மையப் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் சிலையும் மும்பை சண்முகாநந்தா சபாவில் அவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் சிலையும் எல்லைகளைக் கடந்த இசைச் சொரூபம் எம். எஸ். சுப்புலட்சுமி என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

பெரியாரை சங்கடத்திற்குள்ளாக்கிய அண்ணா; அறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

vikatan.com
தனி திராவிடநாடு கேட்டு போராடியது அந்தகட்சி. "அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு!" என்ற எதுகைமோனையாக மேடைகளில்  முழங்கிய அக்கட்சியின் முக்கிய தலைவரான அண்ணாவின் பேச்சினால் “நான்சென்ஸ்” என்று எரிச்சலானார் பிரதமர் நேரு.
நாடு சந்தித்த பெரும் பிரச்னையின் எதிரொலியாக அந்த கோரிக்கையை கண்ணியமாக சற்று தள்ளிவைத்தார் அந்த தலைவர். அவர் அண்ணா என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட அண்ணாதுரை.

பெரியாரின் அணுக்க தொண்டரான அண்ணாவுக்கு, பெரியாரின் திடீர் திருமணம் மற்றும் இந்திய விடுதலையின் மீதான பார்வை இவை பெரியாரின் மீது முரண்பாடு கொள்ளவைத்தது. விளைவு, 
கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் 1949 ல் திமுக என்ற கட்சி உதயமானது. அண்ணா அண்ணா என்று கொண்டாடப்பட்டார் அண்ணா.

கட்சியின் பெயர் வேறானாலும் அடிப்படையில் சிற் சில மாற்றங்களுடன் திராவிடர் கழகத்தை ஒட்டியே செயல்பட்டது.  தேர்தல் அரசியலில் ஆர்வம் கொண்ட திமுக, பங்கெடுத்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 13 இடங்களை கைப்பற்றியது. அண்ணாவின் அனல்தெறிக்கும் பேச்சால் ஈர்க்கப்பட்ட இளைஞர் பட்டாளத்தின் தளபதியானார் அண்ணா. பெரியார் என்ற  போர்க்குணம் கொண்ட தலைவரை பகைத்துக்கொண்டாலும், கட்சியின் தலைவர் பதவி பெரியாருக்கானது என  அதை நிரப்பாமல் விட்டுவைத்தார். 

கண்ணீர்த்துளிகள் என பெரியாரால் காயப்படுத்தப்பட்டாலும், கண்ணியம் குறைவான வார்த்தைகளால் என்றும் பெரியாரை பேசியதில்லை அண்ணா. அந்த கண்ணியம்தான் அண்ணா.
1967 தேர்தலில்  அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது. திமுக. பதவி ஏற்பதற்கு முன்தினம், வெற்றி பெற்ற மற்ற தலைவர்கள் பதவியேற்பு விழாவில், தாங்கள் எந்த சூட் அணிவது, அதற்கு  எந்த ரக  சென்ட்  பயன்படுத்துவது என “ஆழ்ந்த” சிந்தனையில் இருந்தபோது, தனது  நுங்கம்பாக்கம் வீட்டில் கவலையோடு இருந்தார் அண்ணா.

“தவறு செய்துவிட்டோம். இவ்வளவு சீக்கிரம் நாம் பொறுப்புக்கு வந்திருக்கக்கூடாது.இன்னும் சில காலம் நாம் பொறுத்திருந்திருக்கவேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரசையே நம்மை நம்பி துார எறிந்துவிட்டு நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர் மக்கள்.  நம்மிடம் அவர்கள் எதிர்பார்ப்பதை எப்படி நிறைவேற்றுவது ” என தன்னை வாழ்த்த வந்த கட்சியின் 2 ம் கட்ட தலைவர்களிடம் புலம்பினார். ஆனாலும் அடுத்தடுத்து அண்ணா, ஆட்சி நிர்வாகத்திலும் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்து வதிலும் தேர்ந்தவரானார்.

67 ல் வீழ்த்தப்பட்ட காங்கிரஸ், ஆட்சிக்கட்டிலுக்கு இன்றுவரை அந்நியமாகிப்போனதற்கு அண்ணாவே காரணம். இன்றும் அவர் வழி வந்த தலைவர்களின்  அலங்காரமாகவே தமிழகம் இருப்பதே இதன் சாட்சி. அண்ணாவின் பேச்சுக்கு யாரும் அவ்வளவு எளிதில் மறுத்துப்பேசிவிடமுடியாது. வலுவான வாதங்களை வைப்பதில் சமர்த்தர் அவர்.  ஒருமுறை பெரியாரை காண சுதேச கிருபளானி வந்தார். அந்த வார  “ரிவோல்ட்” இதழில் கதர் கட்டுவது மூடநம்பிக்கை என பொருள்படும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் பெரியார்.
இதை குறிப்பிட்ட கிருபாளினி," நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக இருந்து தெருத் தெருவாக கதரை சுமந்து விற்று கட்சியை வளர்த்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது இப்படி எழுதுவது தவறு!" என்றார்.  அதற்கு பதில் கூற முயன்ற பெரியாரின் பேச்சை மறுதலித்து, தொடர்ந்து கிருபளானி ஆவேசத்துடன் பேசவே,  குறுக்கே புகுந்த அண்ணா, " 'விபூதி அணிந்தவன் சிவபக்தன். நாமம் போட்டவன்தான் வைணவன்!' என்று சொல்லும் நம்பிக்கை போன்றதுதான் கதர் கட்டுபவன்தான் தேசபக்தன் என்பது" என்று ஒரே போடாக போட, அமைதியானார் கிருபளானி. அதுதான் அண்ணாவின் நாவன்மை.

மாநிலங்களவைக்கு தேர்வாகி சென்ற அண்ணாவின் முதல் கன்னிப் பேச்சை கேட்டு “நான்சென்ஸ்’ என்று அண்ணாவை கண்டித்த அதே நேரு, உணர்ச்சிவயப்பட்டு ‘அவரை தொந்தரவு செய்யாதீர்கள்.பேசவிடுங்கள் என சபாநாயரை கேட்டுக்கொண்ட அதிசயம் நடந்தது.
அண்ணா முதல்வராவதற்கு முன்புவரை காஞ்சியில்தான் வசித்தார்.  மேல்தளத்துடன் கூடிய அந்த இல்லத்தில் கால்பதிக்காத திராவிட இயக்க தலைவர்கள் இல்லை. பொது வாழ்க்கையிலும் திரைத்துறையிலும் வேகமெடுத்து அண்ணா இயங்கி வந்த அந்நாளில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன். சிவாஜி, எம்.ஜி.ஆர் , கே.ஆர். ராமசாமி, அரங்கண்ணல், கண்ணதாசன், கருணாநிதி என இன்னும் எத்தனையோ தலைவர்கள் அருகே உள்ள வீட்டு திண்ணைகளில் மொய்த்தபடி இருப்பார்களாம். 

அண்ணா இரவு நெடுநேரம் வரை எழுதியும் பேசிக்கொண்டிருக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால் காலையில் சீக்கிரம் எழமாட்டார். இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருக்காக காலை 5 மணியிலிருந்தே காத்திருப்பர் எதிரே உள்ள அவரது உறவினர் வீட்டில். அச்சமயங்களில் அவரது தொத்தா ராசாமணி வந்திருப்பவர்களிடம் கிண்டலாக ‘பாருங்க, கட்சிக்கு உதயசூரியன் சின்னத்தை வெச்சுட்டு இவன் மட்டும் அதை ஒரு நாளும் பார்க்கமாட்டேன்னு அடம்பிடிக்கிறான் ’ என சொல்ல, அந்த இடமே சிரிப்பொலியால் அலறுமாம். எத்தனை மணிநேரமானாலும வந்தவர்கள் யாரும் அண்ணாவை பாரக்காமல் நகரமாட்டார்களாம். கலைவாணர் போன்ற மேதைகளும் அண்ணாவின் திறமைக்கு மதிப்பளித்து இப்படி காத்திருந்து பார்த்து சென்றிருக்கிறார்கள்.
அமைதியான சூழலில் எழுதுவதையே விரும்பும் அண்ணா, அதற்காக தேர்வு செய்வது இரவு நேரத்தையே. கத்தை கத்தையாக தாள்களை எடுத்துக்கொண்டு மேலே 2வது தளத்தில் இருக்கும் சிறிய கம்பிகள் வேயப்பட்ட அறைக்குள் புகுந்துகொள்வார். ஒவ்வொரு தாளையும் எழுதி முடித்ததும் அதை பத்திர்பபடுத்தும் வழக்கம் அவரிடம் இல்லை. எழுதி முடித்த தாளை அப்படியே மேஜையிலிருந்து நழுவவிட்டுவிடுவார். அவருக்கு உதவியாக இருக்கும் உறவுப்பையன் அதை எடுத்த எண் வாரியாக அடுக்கித்தருவான். 

இப்படி எழுதுவதில் சுவாரஸ்யமான வழக்கம் கொண்டவர். முதல்வரானபின்கூட அந்த வீட்டின் பழமையை அப்படியே தொடரச்செய்தார். சாமான்யனாக பிறந்து சாதனையாளனான அண்ணா இறப்பிலும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.அவரது இறுதிப்பயணம் கின்னஸில் இடம்பெற்றிருக்கிறது. எந்த தலைவரின் இறுதி ஊர்வலத்திலும் இதுவரை இப்படி ஒரு கூட்டம் வந்ததில்லலையாம்.  ஓர் இரவு நாடகத்தின் பவளவிழாவுக்கு தலைமை வகிக்க வந்த புரட்சிக்கவிஞர் பாரதிததாசன் தன் பாராட்டுரையில் அண்ணாவை ‘அறிஞர்”  அண்ணாத்துரை என்று குறிப்பிட, பின்னாளில் அறிஞர் என்றாலே அண்ணா என்றானது.

முதல்வரானபின் எதிர்கட்சியினரும் பாராட்டும்படி அவரது பேச்சும் செயலும் அமைந்தது. ஒரு சமயம் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அண்ணாவிடம், மிருககாட்சி சாலைக்கு நான் தந்த ஆண்புலிக்குட்டி சரியாக கவனிக்கப்படவில்லை.ஆனால் எம்.ஜி.ஆர் தந்த பெண்புலிக்குட்டி மட்டும் நன்கு கவனிக்ப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிப்பேச, உடனே குறுக்கிட்ட அண்ணா ‘சம்பந்திகள் இருவரும் உட்காரந்து பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் உங்கள் பிரச்னையை” என்றதும் சபை சிரிப்பால் நிறைந்தது .
1963 ல் அண்ணா நாடாளுமன்ற உறுப்பினர். அவையில் சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்திடக்கோரும் தீர்மானம் ஒன்றை அண்ணா, நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. எம்.என் லிங்கம் என்ற உறுப்பினர்,"தமிழ்நாடு என பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்துவிடப்போகிறீர்கள்?" என்று கேட்டார் . “நாடாளுமன்றத்திற்கு லோக்சபா என்றும், மக்களவைக்கு ராஜ்யசபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கீறீர்களே. இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்றதும் பதிலேதுமில்லை எதிர்கட்சியிடமிருந்து. இறுதியில் தமிழக முதல்வரானதும் அதை நிறைவேற்றி தன் பிறந்த நாட்டுக்கு பெயர் சூட்டிய பெருமையை பெற்றார் அண்ணா. 

கட்சியிலும், மக்கள் மத்தியிலும் அண்ணாவின் புகழ் வளர்ந்துகொண்டிருந்த அதே சமயம் அண்ணாவுக்குள் ளும் ஒன்று சத்தமில்லாமல் வளர்ந்துகொண்டிருந்தது. அது புற்றுநோய். 1968 ல் மருத்துவக்கல்லுரி மாணவர் ஒருவருக்கும், பஸ் நடத்துனர் ஒருவருக்குமான மோதல் பெரிய பிரச்னையானது. இதை கண்டித்து பேருந்து தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் செய்தனர். .

அண்ணா தலையிட்டு அதை வாபஸ் பெற செய்தார். ஆனால் மாணவர்கள் தரப்பு சமாதானம் அடையாமல் பிரச்னையை பெரிதாக்கினர். பேச்சுவார்த்தைக்கு சென்ற அண்ணாவை அவர்கள் அவமதிப்பு செய்தனர். அவர்களிடம் அண்ணா நடத்துனர் சார்பாக மன்னிப்பு கேட்டும், அவர்கள் மனமிரங்கிவரவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவருக்கு வாயிலிருந்து ரத்தம் வந்தது. அதுதான் அவருக்கு கேன்சர் வந்ததற்கான முதல் அறிகுறி. 

நோயின் தாக்கம் கொஞ்சநாளில் அதிகரிக்க, மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா பயணப்பட்டார் அண்ணா.  தற்காலிகமாக நோயிலிருந்து மீண்டு தமிழகம் திரும்பியவர், மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி பொதுக்கூட்டங்கள், கட்சிப்பணி, ஆட்சி என தன்னை பரபரப்பாக்கி கொண்டார்.
சென்னை மாகாணத்தக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டு அது விழாவாக கொண்டாடப் பட்ட அன்று வாந்தியும் மயக்கமுமாக சோர்ந்திருந்தார் அண்ணா. மருத்துவர்கள் அந்த விழாவுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்க, கோபத்துடன், "என் தாய்நாட்டுக்கு பெயர் சூட்டும் இந்த நாளில் போகாமல் உயிருடன் இருபபதை காட்டிலும் இறப்பதே மேல்!" என்றார் எரிச்சலாக. நோயின் கடுமையிலும் கலந்துகொண்டு பேசினார் விழாவில். தொடரந்து சிகிச்சையளித்தும் பலனின்றி அவரது அரசியல் பயணத்திற்கு அவரது உடல் இடம் கொடுக்காமல்  1969 பிப்ரவரி 3 ல் இயற்கை எய்தினார் அண்ணா.

அண்ணாவின் மீது அளப்பரிய காதல் கொண்டிருந்த எம். ஜி. ஆர்.,  அண்ணா வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை 1980 ம் ஆண்டு   நினைவு இல்லமாக்கினார். திறப்பு விழாவில் கலந்துகொண்ட அன்றைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி, ”இந்த எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர் பின்னாளில் ஒரு மாநிலத்துக்கு முதல்வரானது என்பது ஜனநாயகம் இங்கு தழைப்பதையே காட்டுகிறது. நான் அண்ணா அளவுக்கு படித்தவனல்ல என்றாலும் சாமான்யனாகிய நானும் குடியரசு தலைவராக ஆனதற்கு நமது ஜனநாயக அமைப்பே காரணம்" என்றார்.

அநேகமாக  மாநில முதல்வராக இருந்த ஒருவரின் நினைவு இல்லத்தை  குடியரசு தலைவர் திறந்து வைத்தது என்பது இதுவே முதல்முறை. ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி பேசுகையில்,  "திராவிட இயக்க அரசியல்வாதியாக அண்ணாவை பார்த்தாலும் அவர் ஒரு காந்தியவாதியாக இருந்தவர் எதையும் யாருக்கும் புரியும் வகையில் சொல்வதில் அவர் கெட்டிக்காரர். குடும்பக் கட்டுப்பாட்டை பற்றி பேசும்போது பாமரர்களுக்கு புரியும்படி “பெருமாளுக்கு 2 பிள்ளைகள்” எனக் கூறினார். தீவிர நாத்திகவாதியான அவர், மக்களுக்கு புரிய வேண்டுமென்பதற்காக தன் கொள்கைளை தள்ளிவைத்து கடவுளை துணைக்கு அழைக்கவும் தயங்கவில்லை.  அவர் ஒரு ஜென்டில்மேன்" என்றார்.
நினைவு இல்லத்தை அலங்கரிக்கும் புகைப்பட அணிவகுப்பு நம்மை அண்ணா காலத்துக்கே அழைத்துச் செல்கிறது. அண்ணாவின் திருமண பத்திரிக்கை, அரும்பு மீசை முளைத்த இளவயது சம்பத்துடன் அளவளாவும் அண்ணா, சட்ட எரிப்பு போராட்டதில் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்படும் அண்ணா, திருச்சி மத்திய சிறையிலிருந்தபோது அவர்  பயன்படுத்திய தட்டு டம்ளர் மற்றும் அவரது அழகிய கையெழுத்திலான டைரிகள், அவரது சில கடிதங்கள் அவரது பெல்ட் ,அண்ணாவின் புகழ்பெற்ற மூக்குபொடி டப்பா ,கண்ணாடி, புகழ்பெற்ற அவரது படைப்புகளை தாளில் வடித்த அவரது மரப் பேனாக்கள் என அதிசயிக்கவைக்கிறது.

வலப்புறம் அவரால் எழுதப்பெற்ற படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதையொட்டிய அறையில் அண்ணா பயன்படுத்திய நுலக அறை உள்ளது. அவர் அமர்ந்து படிக்க பயன்படுத்திய சேர்கள் . செருப்புகள் என நினைவுகளை பின்னோக்கி இழுத்து செல்கிறது அந்த அறை. டைரி ஒன்றில் அண்ணா, மணிமணியான கையெழுத்தில் எழுதிய ஜோக் ஒன்று வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.

ஹோட்டலில் சாப்பிட வந்தவர் "ஏம்பா.. வடை இவ்வளவு மோசமாகவும் இருக்கு...சின்னதாவும் இருக்கே?" என்கிறார்.  அதற்கு சர்வர்,"பின்னே என்னங்க...மோசமாகவும் இருந்து பெரியதாகவும் இருந்தா திண்ணமுடியாதுங்களே? அதான்!" என்கிறார்.

பரபரப்பான அரசியலின் நடுவே தன் தனிமையை ஓவியங்கள் வரையவும் நகைச்சுவை எழுதவும் பயன்படுத்த அண்ணா போன்ற அறிவாளிகளால் மட்டுமே முடியும் என்பதை சொல்லாமல் சொல்கின்றன. அவர் வரைந்த இந்த அழகிய படைப்புகள். அண்ணாவை நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது காட்சிக்கு வைக்கப்பட்ட அவரது மாதிரி உடை.  அந்நாள் முதல்வாரன அண்ணாவுடன் இந்நாள் முதல்வர் ஜெயலலிதா பரிசு பெறும் அரிய புகைப்படம் ஒன்றும் உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து அறைகளிலும் புகைப்படங்கள் மிரட்டுகின்றன.

சந்திரோதயம் சந்திரமோகன் போன்ற அவரது நாடகங்களில் அவரே ஏற்று நடித்த பாத்திரங்களின் காட்சிப்பதிவுகளும் அரியன. கட்சி பேதமின்றி ராஜாஜி, காமராசர், இந்திரா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுடன் அண்ணா காட்சி தரும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அந்நாளைய வரலாற்று சம்பவங்களுக்கு அரிய சாட்சிகள். தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற அண்ணா  ஈரோட்டுக்கு சென்று அந்த வெற்றியை பெரியாருக்கு காணிக்கையாக்கிய அரிய நிகழ்விற்கும் காட்சிப்பதிவும் இங்கு உண்டு. கண்ணீர்த்துளிகள் என தம்மால் விமர்சிக்கப்பட்ட அண்ணாவின் இந்தச்செயல் தன்னை சங்கடத்திற்குள்ளாக்கிவிட்டதாக பின்னாளில் பெரியாரே பதிவு செய்திருக்கிறார்.
புற்றுநோய்க்கு ஆட்பட்டு அமெரிக்க சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மனதை பிழிகிறது நமக்கு. அமெரிக்காவிலிருந்து இங்கு தம் தொண்டர்களுக்கு  தலைவர்களுக்கும் அண்ணா எழுதிய கடிதங்களில் தமிழகத்தின் மீது அந்த தலைவனுக்கு இருந்த அன்பை வெளிப்படுத்துகிறது அந்த கடிதங்கள். நண்பர்களுடன் ஓய்வான ஒரு தருணத்தில் டெல்லி சுற்றுலா சென்றபோது, ஒரு குழந்தையைப்போல குதூகலத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மேதைகள் குழந்தைத்தன்மை உடையவர்கள் என்பதை உறுதி செய்கிறது.

மேல் மாடியில், புகழ்பெற்ற அவரது படைப்புகளை அவர் அமர்ந்து எழுதிய மேடை இன்றும் அதே கர்வத்துடன் இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த இடத்தில் சில சமயங்களில் நேரம்போவதே தெரியாமல் விடியற்காலை வரை கூட எழுதிக்கொண்டிருப்பாராம் அண்ணா. மேடையின் இடப்புறம் தான் வளர்த்த நாய், புறா, மான் இவைகளுக்கான கூண்டு அறை, அண்ணாவின் நினைவுகளை சுமந்து மட்டும் இருக்கிறது இப்போது.
 
அருகிலுள்ள புகைப்படத்தில் ஓர் அரிய காட்சி. அண்ணாவின் படத்தை திறந்து வைத்ததுதான் கலை வாணரின் இறுதி நிகழ்ச்சி. அதே போல் நோய்வாய்ப்பட்ட நிலையில் கலைவாணரின் சிலை திறந்ததுதான் அண்ணாவின் இறுதி நிகழ்ச்சியானது. இந்த அற்புத ஒற்றுமை இந்த 2 தலைவர்களுக்கு இடையேயான நட்பை காட்டுகிறதெனலாம். அமெரிக்கா சென்று வந்த பின் நடக்க சிரமப்பட்ட அண்ணா, சக்கர நாற்காலியை பயன்படுத்தியிருக்கிறார் அதுவும் இந்த நினைவு இல்லத்தை உயிரோட்டத்தோடு வைக்கும் ஒரு அற்புத அடையாளம்.
-எஸ்.கிருபாகரன்

Sunday, September 13, 2015

சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் சிகிச்சை நேரத்தில் மருத்துவப் பிரதிநிதிகள் தங்களது நிறுவன மருந்துகளை பரிந்துரை செய்ய வருவதால், நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனை மற்றும் அதிநவீன மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் உள்நோயாளிகள், புறநோயாளிகளை மருத்துவர்கள் தினமும் சந்தித்து, அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இங்கு இருதயம், மூளை, நரம்பியல், எலும்பு, பல், இரைப்பை, குடல், குழந்தைகள் நலப்பிரிவு என பல்வேறு துறை சார்ந்த பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் போல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை சந்திக்க தினமும் மருத்துவப் பிரிதிநிதிகள் வருவது அதிகரித்து வருகிறது என்றும் இவர்கள் மருத்துவர்களை சந்தித்து தங்கள் நிறுவன மருந்துகளை பரிந்துரை செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால், குறிபிட்ட நேரத்தில் நோயாளிகள் மருத்துவர்களை சந்திக்க முடியாமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியது இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
தனி நேரம் ஒதுக்க நடவடிக்கை: டீன்
சேலம் அரசு மருத்துவமனை டீன் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘சேலம் அரசு மருத்துவமனைக்கு டிபிசி (தமிழ்நாடு பர்ச்சஸ் கமிட்டி) சிபிசி (சென்ட்ரல் பர்ச்சஸ் கமிட்டி) மற்றும் டிஎன்எம்சி (தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில்) ஆகியவற்றின் அனுமதியுடன் மருத்துவப் பிரதிநிதிகள் மருத்துவர்களை சந்திக்கின்றனர்.
பிரதிநிதிகள் கூறும் மருந்துகள் வாங்கும்தன்மை இருந்தால், என்னிடம் மருத்துவர்கள் எடுத்துக் கூறுவார்கள். அதன்படி, நாங்கள் தேவையான மருந்துகளை டிஎன்எம்சி ஒப்புதல் பெற்று கொள்முதல் செய்வோம். மருத்துவப் பிரதிநிதிகள் பணி நேரத்தில் வருவதால், நோயாளிகளுக்கு பாதிப்பு என்கிற போது, அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் தனிநேரம் ஒதுக்கப்பட்டு, அப்போது, மட்டுமே மருத்துவர்களை சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், இதுகுறித்து மருத்துவத் துறை பேராசிரியர்கள் கூட்டத்தில் தெரிவித்து, மருத்துவப் பிரதிநிதிகளால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்களில் சிலர் பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர். அந்த வகையில் ஆண்டுக்கு சுமார் 275 பேரின் சடலங்கள் திருச்சி விமான நிலையம் வழியாக கொண்டுவரப்படுகின்றன.

அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் வீடு, நிலங்களை விற்றும், வட்டிக்கு கடன் வாங்கியும் லட்சக் கணக்கில் பணம் செலுத்தியும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா, சவுதி, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடு களுக்கு வேலைக்குச் செல்கின் றனர். இவர்களில் சிலருக்கு மட்டுமே ஏஜென்ட்டுகள் கூறியபடி நல்ல வேலை அமைகிறது.
பெரும்பாலானோர் குறைந்த ஊதியத்திலும், கொத்தடிமைகளாக வும் அங்கு பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பாதியில் திரும்பினால் வாங்கிய கடனைக்கூட அடைக்க முடியாதே என்பதால், நிர்பந்தத்தின் காரணமாக அவர்கள் வெளிநாடுகளில் தொடர்ந்து பணி யாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

குடும்பத்துக்காக இப்படி தன் னையே வருத்தி உழைக்கும் இவர்களில் பலர் வெயில் தாங்கா மலும், விபத்துகளில் சிக்கியும், உடல்நலக்குறைவாலும் அங் கேயே இறப்பை சந்திக்கும் துயர நிகழ்வு அதிகரித்து வருகிறது. பணம் சம்பாதிக்கச் சென்ற மகனோ, கணவரோ சடலமாகத் திரும்பு வதைப் பார்த்து குடும்பத்தினர் கதறித் துடிக்கும் பரிதாபம் திருச்சி விமான நிலையத்தில் ஏறக்குறைய அன்றாட நிகழ்வாகிவிட்டது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை விமானநிலையங் களைவிட பல மடங்கு அதிகமான சடலங்கள் திருச்சி விமான நிலையம் மூலம் கொண்டுவரப்படுகிறது.

இதுபற்றி விமான நிலைய கார்கோ பிரிவு அதிகாரிகள் கூறும் போது, “திருச்சி சர்வதேச விமான நிலையம் ஏற்றுமதியில் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை எண்ணி பெருமைப்படும் அதே வேளையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் சடலங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்து வருவது மிகுந்த வேதனை யாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 275 சடலங்கள் விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. இவர்களில் பெரும் பாலானவர்கள் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 2014-15-ம் நிதியாண் டில் 272 சடலங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட் டுள்ளன. நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் 110 சடலங்கள் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
பல்வேறு காரணங்களால் இறந்தவர்களின் சடலங்களை வெளிநாடுகளிலிருந்து இங்கு கொண்டு வருவதற்கு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கான சுமைக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படு கிறது. சுங்கத் துறையின் தீர்வைக் கட்டணம், சேவைக் கட்டணம், விமான நிலைய ஆணையக் குழுமத்தின் கையாளும் கட்டணம் என எதுவும் வசூலிப்பதில்லை” என்றனர்.

விமான நிலைய மருத்துவ பிரிவி னர் கூறும்போது, “வெளிநாடு களில் இருந்து கொண்டுவரப்படும் சடலத்துடன், இறந்தவர் வேலை பார்த்த நாட்டின் இறப்புச் சான்றிதழ், தூதரக தடையில்லாச் சான்று, உடற்கூறு சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். அதில் பெரும்பாலானவர்களின் மரணத் துக்கு காரணம் உடல்நலக்குறைவு என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சிலரது மரணத்துக்கு விபத்து என காரணம் குறிப்பிடப்பட்டிருக்கும். கொலை செய்யப்பட்டு கொண்டு வருவது மிகக் குறைவு.

இறந்தவர்களில் 35 முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஆண் களே அதிகம். பெண்களின் எண் ணிக்கை மிகக் குறைவு. இப்படி கொண்டுவரப்படும் சடலம், ஆய் வுக்குப்பின், சுங்கம் மற்றும் கார்கோ துறையினர் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தேவைப்படும் நபர்களுக்கு அரசின் இலவச அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்” என்றனர்.



Saturday, September 12, 2015

உலகின் மிகப் பழமையான சைவ உணவகத்தில் ஆவி பறக்கும் சாம்பார் வடை!

vikatan.com

வடை என்பது நம் வாழ்வியலில் பல்வேறு பரிணாமங்களில் கலந்து விட்ட ஒரு உணவு. தெருவோரக் கடைகளில் தேநீருடன் எடுத்துக் கொள்கிற நொறுவையிலிருந்து, பெருவிருந்துகளில் பரிமாறப்பட வேண்டிய முக்கிய அடையாள உணவு என்கிற அந்தஸ்து வரை வடையின் வடிவங்கள் நம் உணவுத் தளத்தில் அதிகம். அதன் பொன் நிறமும், முறுகலான மேனியும், உதிர்க்கப்படும்போது அவிழ்கிற வெண்மையும், இளஞ்சூட்டில் வாயில் இடும் போது அது கரையும் சுகமும் மானிட இனத்தின் சிறு சிறு சுவர்க்கங்களில் ஒன்று.

அத்தகைய வடையின் பெருமை ஸ்விட்சர்லாந்து வரை அறியப்பட்டு அனுபவிக்கப்படுகிறதென்று சொன்னால் அது மிகையல்ல. 

2012 ஆம் வெளியிடப்பட்ட ’கின்னஸ்’ புத்தகத்தில், ‘இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் உலகின் மிகப் பழமையான சைவ உணவகம்’ என்று இடம்பெற்ற உணவகம் தான் ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள, ஜீரிச் நகரில் அமைந்துள்ள ‘ஹாஸ் ஹில்ட்ல்’

சைவ உணவுப் பழக்கத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் உலகெங்கிலுமுள்ள சிறந்த சைவ உணவுகளைத் தயாரித்து வழங்குவதில் நூறாண்டுகளுக்கும் மேலாக சாதனை நிகழ்த்தி வரும் இவ்வுணவகம் இந்திய உணவுகளுக்குத் தனிச்சிறப்பு மிக்க இடமளித்து வருகிறது.


1898 இல் நிர்மாணிக்கப்பட்ட இந்த உணவகம், உலகச் சைவ உணவின் சின்னமாக இன்று திகழ்வதன் பின்னால் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

இந்த உணவகம் திறக்கப்பட்ட காலத்தில், ஐரோப்பாவில் சைவம் மட்டுமே உண்ணுபவர்களை ‘புல்தின்னிகள்’ என்று சொல்லிக் கேலி செய்து கொண்டிருந்த வழக்கம் இருந்தது. அந்நிலையில், போதிய வரவேற்பில்லாமல் தவித்து கொண்டிருந்த இந்த உணவகத்தில் 1903 ஆண்டு ஹில்ட்ல் என்பவர் மேலாளராகப் பதவியேற்றார்.

அதற்கு முன் தையல்காரராக இருந்த ஹில்ட்ல், இனம்புரியாத ஒருவித நோயால் தாக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்களை நாடியும் பயனில்லாது போன நிலையில், ஒரு இயற்கை மருத்துவரைச் சந்தித்திருக்கிறார் ஹில்ட்ல். அன்னார், அசைவ உணவு உட்கொள்வதை நிறுத்தினாலே இந்நிலை குணமாகிவிடும் என்று சொல்ல அங்ஙனமே ஹில்ட்லும் சைவத்துக்கு மாறினார். ஆறே மாதங்களில் குணமடைந்த ஹில்ட்ல் அக்கணம் முதல் தீவிர சைவ உணவாளராகவும், அந்நெறி பரப்புநராகவும் மாறி இருக்கிறார். இவரது வாழ்வில் நடந்த இச்சம்பவத்தின் பின்னால் சைவ உணவு குறித்த பார்வை ஸ்விஸ் மக்களிடையே மெல்ல மாறத் துவங்கியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்குப் பின், அவரது மருமகள் ஒருமுறை இந்தியா வந்தபோது நம் நாட்டில் வழங்கப்படும் சுவைமிக்க சைவ உணவு வகைகளைக் கண்டு அதிசயித்திருக்கிறார். அதன் விளைவாகவே, நம் நாட்டு உணவுகளை அங்கும் அறிமுகப்படுத்தலாமே என்ற எண்ணம் ஏற்பட்டு அவர் ஆரம்பித்த அந்த முயற்சி இன்று உலகம் வியக்கும் வண்ணம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

நம் முன்னாள் பிரதமர் மொரார்ஜீ தேசாய் உண்ட பெருமை இந்த உணவகத்திற்கு உண்டு. அது மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலிருந்தும் வாடிக்கையாளர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஜூரிச் நகரிலுள்ள இந்தியர்களுக்கு இது சொந்த வீட்டுச் சமையலறையாகத் திகழ்கிறது. சாம்பார் வடை, பாலக் பன்னீர், மெட்ராஸ் தாலி (முழு சாப்பாடு), பொறியல்கள், சட்னி என நம் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வண்ணமாக அமைந்திருக்கும் இந்த ஸ்விட்சர்லாந்து உணவகம், உலகை இணைக்கும் உந்துசக்தி உணவு என்ற உண்மையை உணர்த்தும் காலக்குறியீடு.

 ச.அருண்

NEWS TODAY 06.12.2025