Friday, September 23, 2016

இது அவசரம்!

By ஆசிரியர்  |   Last Updated on : 22nd September 2016 02:37 AM  |

அடுத்த நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதனால் அவ்வாறே அமைக்கப்படும் என்பது உறுதி. அப்படி அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியம் நடுநிலையுடன், விவசாயிகளின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றுவதாக இருக்கும் என்பதை தமிழகம் உறுதிப்படுத்தியாக வேண்டும்.
மத்திய நீர்வளத்துறையின் கீழ் அமையும் காவிரி மேலாண்மை வாரியத்தில் மொத்தம் ஒன்பது பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். தலைவரையும், இரு நிரந்தர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்கும். தலைவராக நியமிக்கப்படுபவர் பாசன மேலாண்மையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். நிரந்தர உறுப்பினர்களில் ஒருவர் பாசன மேலாண்மையில்
15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவும், மற்றோர் உறுப்பினர் வேளாண் பொருளாதாரத்தில் வல்லுநராகவும், வேளாண்மையில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராகவும் இருத்தல்
வேண்டும்.
தலைமைப் பொறியாளர் பதவியில் இருப்போரில் இரண்டு பேர் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளாக நியமிக்கப்
படுவர். இது தவிர, கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளாக அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளர் நியமிக்கப்படுவார். ஒன்பது உறுப்
பினர்கள் கொண்ட இந்த வாரியத்தின் முடிவுகளுக்கு ஆறு பேரின் ஆதரவு இன்றியமையாதது.
பற்றாக்குறை காலங்களில், அந்தந்த மாநிலங்களுக்கு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் எவ்வளவு நீர் அளவு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறதோ அதே விகிதத்தில், இருக்கின்ற நீரை பகிர்ந்து அளிக்கும் பொறுப்பு மேலாண்மை வாரியத்துக்கு உண்டு என்று அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. காவிரியுடன் தொடர்புடைய அனைத்து அணைகளிலும் நீர் வெளியேற்றும் அளவை 10 நாள்
களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கும் அதிகாரமும் மேலாண்மைக் குழுவுக்கு இருக்கிறது.
அதேசமயம், பற்றாக்குறை காலங்களில் அதற்கான விகிதத்தின்படி நீர் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், அதில் குறைபாடு காணப்பட்டால் மத்திய அரசு உதவியுடன் அல்லது தானே அதை நடைமுறைபடுத்துவதற்கான அதிகாரமும் மேலாண்மை வாரியத்துக்கு தரப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு இந்த ஒன்பது உறுப்பினர்கள் யார் யாராக இருக்க வேண்டும் என்பதில் இப்போதே கவனம் செலுத்தாவிட்டால், தமிழகத்திற்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய முடியாமல் போய்விடும். ஆகவே, மேலாண்மை வாரியத்தின் தலைவர் தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அப்பாற்பட்ட நபராக இருக்க வேண்டும் என்பதை இப்போதே தமிழகம் வலியுறுத்தியாக வேண்டும்.
அதேபோல நிரந்தர உறுப்பினர்களும் அமைய வேண்டும். குறைந்தபட்சம் ஓர் உறுப்பினர் தமிழகத்தைச் சேர்ந்தவராகவும், ஓர் உறுப்பினர் கர்நாடகத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பது இன்றியமையாதது. அதேபோன்று, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இருவரில் ஒருவர் கேரளத்தை சேர்ந்தவராகவும், ஒருவர் புதுச்சேரியைச் சேர்ந்தவராகவும் இருப்பதில் தவறில்லை.
மேலாண்மை வாரியம் இவ்வாறாக அமைவதுதான் நடுநிலையையும், காவிரிக்கு கீழ்ப்பகுதியில் அமைந்து, கர்நாடகத்திடம் நீரை எதிர்நோக்கும் மாநிலங்களுக்கும் நியாயம் கிடைப்பதை உறுதி செய்யும். இல்லாவிட்டால், வாரியத்தின் ஒன்பது உறுப்பினர்களில் ஆறு பேர் ஆதரவே இறுதி முடிவைத் தீர்மானிக்கும் என்கிற நிலையில், இப்போதே நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் தமிழகம் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
மேலே குறிப்பிட்ட வகையில்தான் உறுப்பினர்கள் அமைய வேண்டும் என்று இப்போதே நாம் உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும். எல்லா தரப்பினருக்கும் பொதுவான உறுப்
பினர்கள் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படி செய்யாமல் போனால் வருங்காலத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படலாம். ஆகவே இப்போதே நாம் கவனமாக செயல்பட்டாக வேண்டும்.
காவிரி பிரச்னை என்பது பொதுவாக கர்நாடகம், தமிழ்நாடு இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள தொடர் பிரச்னையாக இருப்பதால், மேலாண்மை வாரியத்தின் அலுவலகம், இரு மாநில அணைகளையும் கண்காணிக்க ஏதுவாகவும், இரு மாநிலத்திலும் இல்லாமலும் இருக்க வேண்டும். இதன் தலைமை அலுவலகம் எங்கோ இருக்கும் தில்லியில் அமைவதைவிட ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்தால், சிறப்பாக இருக்கும். முற்றுகை போராட்டம் நடப்பதையும் தவிர்க்கலாம்.
மேலாண்மை வாரியத்தின் தலைவர் விரும்பினால், மத்திய நீர் ஆணையம், தேசிய நீரியல் துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், வேளாண் கல்லூரிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை, வாரியத்தின் கூட்ட நிகழ்வில் பங்கேற்க அழைக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இது விருப்புரிமையாக இல்லாமல் கட்டாயமாக்கப்பட வேண்டும். பல்வேறு வேளாண் துறை வல்லுநர்கள், பொறியாளர்கள் இந்தக் கூட்டத்தின் பார்வையாளர்களாக இருக்கும்போது, இந்தக் குழு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தகுதி வாய்ந்தவர்களால் கவனிக்கப்படுகிறது என்ற எண்ணம், இவர்களை நீதி
யிலிருந்து விலகாமல் இருக்கச் செய்யும்.
தமிழ்நாடு இப்போதே இந்த விவகாரங்களில் ஆர்வம் செலுத்த வேண்டும். வாரியம் அமைக்கப்பட்ட பின்னர் ஆட்சேபணை தெரிவித்துப் பயனில்லை!

தேவை ராஜதந்திரம், சூத்திரமல்ல!

By ஆசிரியர்  |   Last Updated on : 23rd September 2016 05:52 AM  |

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்டிருக்கும் உரி ராணுவத் தலைமை முகாம் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் ஒட்டுமொத்த இந்தியாவே கொதித்துப் போய் இருக்கிறது. இந்திய எல்லைக்குள் நுழைந்து கடந்த ஞாயிறன்று அதிகாலையில் ராணுவ வீரர்களை பலி வாங்கிய பயங்கரவாதத் தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பது ஆறுதலல்ல. அவர்களால் தாக்குதல் நடத்த முடிந்திருக்கிறதே என்பது அவமானம்.
கடந்த ஒன்பது மாதங்களில் ஜம்மு - காஷ்மீரத்திலுள்ள இந்திய ராணுவ முகாம்களில் நடத்தப்பட்டிருக்கும் ஆறாவது பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இந்த உரி ராணுவ முகாம் சம்பவம். அந்த அளவுக்கு நாம் விழிப்புடன் இல்லாமல் இருக்கிறோம். இதற்கு முந்தைய தாக்குதல்களிலிருந்து நாம் எந்தவிதப் பாடமும் படிக்கவில்லை என்பதையும், நமது பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதையும், நமது ராணுவ முகாம்களின் அமைப்பும், செயல்பாடுகளும் எதிரிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதையும் உரி தாக்குதல் மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதான்கோட் விமானதளத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பின்பற்றப்பட்ட அதே வழிமுறையைத்தான் பயங்கரவாதிகள், இப்போது வடக்கு காஷ்மீரத்தில் உள்ள உரி ராணுவத் தளத் தாக்குதலிலும் பின்பற்றியிருக்கிறார்கள் என்பது முந்தைய தாக்குதலுக்குப் பிறகும்கூட நமது ராணுவ தளங்களின் பாதுகாப்பைத் தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு நாம் பலப்படுத்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
இந்தத் தாக்குதலிலும் இரண்டு இடங்களில், நமது பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பையும் மீறி ஊடுருவல் நடந்திருக்கிறது. முதலாவதாக, பயங்கரவாதிகள் நான்கு பேரும் எல்லையைக் கடந்திருக்கிறார்கள். அடுத்தபடியாக, ராணுவத் தளத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். தொடர்ந்து பயங்கரவாதிகள் நமது பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று தெரிந்தும்கூட, அவர்கள் ஊடுருவ முடியாத அளவுக்கு நமதுபாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதும், அப்படியே இருந்தாலும் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் தெளிவாகிறது.
கொஞ்சம்கூட தயக்கம் இல்லாமல், "இந்தத் தாக்குதலைக் காரணம் காட்டிக் காஷ்மீர் விவகாரத்தை இந்தியா திசை திருப்பப் பார்க்கிறது' என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு ஆலோசகத் துறை செயலர் அறிக்கை வெளியிடுகிறார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 18 ராணுவ வீரர்களின் உயிரைப் பலிவாங்கிய உரி ராணுவ தலைமை முகாம் மீதான பயங்கரவாதத் தாக்குதல், பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் நடத்தப்பட்டிருப்பதை பயங்கரவாதிகள் நான்கு பேரும் வைத்திருந்த ஆயுதங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படையினர் நான்கு பேரும் ஜெய்ஷ் - ஏ - முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.
அதிக அளவு புரதச் சத்துள்ள சாக்லேட்களின் 26 உறைகள், ஆறு ரெட்புல் பானத்தின் கேன்கள், பாகிஸ்தான் தயாரிப்பு முத்திரையுடன் கூடிய மருந்துகள் அடங்கிய மூன்று பொட்டலங்கள் ஆகியவை பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், எல்லையிலிருந்து ஆறு கி.மீ. தொலைவிலுள்ள முசாபர்பாத் நகரத்திலிருந்து ராணுவ முகாமுக்கு வழிகாட்டுகின்ற "ஜி.பி.எஸ்.' வழிகாட்டியும் கிடைத்திருக்கிறது. ஜி.பி.எஸ். இயந்திரம் மிகத்தெளிவாக இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்துதான் வந்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக ராணுவம் தனது நடைமுறைகளைத் தளர்த்திக் கொண்டதால் ஏற்பட்ட இடைவெளியும்கூட இத்தாக்குதலுக்குக் காரணம். ராணுவம் தனது தாக்குதலை மீண்டும் கடுமையாக்கி அதனால் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்பட்டதாக மேலும் இந்திய ஊடகங்களையும், எதிர்க்கட்சிகளையும் வைத்தே இந்தியாவைப் பரிகாசத்துக்கு ஆளாக்க வேண்டும் என்பதுகூட இந்தத் தாக்குதலின் நோக்கமாக இருந்தாலும் வியப்படையத் தேவையில்லை.
தனது அரசின் தோல்விகளையும், பலவீனங்களையும் மறைப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு காஷ்மீர் பிரச்னையும், அதன் தொடர்பாக இந்தியாவுடன் போர் மூளும் சூழலும் தேவைப்படுகிறது. சீனா தனக்குத் துணை நிற்கும் என்கிற பாகிஸ்தானின் தைரியத்தை, இந்தியா அமெரிக்காவுடன் செய்து கொண்ட ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் தகர்த்திருக்கிறது என்றாலும்கூட, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம், இந்தியாவின் பொறுமையை சோதித்து எரிச்சலடைய வைப்பதில் பாகிஸ்தான் முனைப்புக்காட்டுகிறது. காஷ்மீரில் அமைதி திரும்பாமல் பார்த்துக் கொள்வது என்பதுதான் பாகிஸ்தானின் குறிக்கோளாக இருக்கிறது.
இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இருப்பது உறுதியாகி விட்டிருக்கும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை "பயங்கரவாத நாடு' என்று அறிவிக்க வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கை வலுப்பெறுகிறது.
இது போருக்கு உகந்த நேரம் அல்ல. அதே நேரத்தில், சர்வதேச அளவில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தத் தகுந்த தருணம். இந்த பிரச்னையை நிதானமாகவும் அரசியல் ராஜதந்திரத்தின் அடிப்படையிலும் அணுகுவது என்று பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அந்த அணுகுமுறை பாராட்டுக்குரியது!

நில், கவனி, செல்!

By என்.எஸ். சுகுமார் 

அண்மையில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் ரயில் பாதையில் நடந்து சென்ற வட மாநில தொழிலாளர்கள் நான்கு பேர் மீது மின்சார ரயில் மோதியதில் நால்வரும் உயிரிழந்தனர். இந்தாண்டு மட்டும் சென்னையில் ரயில் மோதியதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என ரயில்வே போலீஸாரின் அறிக்கை தெரிவிக்கிறது.
ரயில் பாதையில் நடந்து செல்வோர், ரயில் பாதையைக் கடக்க முயல்வோர், ஆளில்லா கடவுப் பாதையைக் கடப்போர் உள்ளிட்ட தரப்பினர் ரயில் மோதி விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே ரயில் பாதையைக் கடப்பதாலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
ரயில் நிலையங்களிலேயே ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு நடைமேம்பாலம் மூலமாக செல்லாமல், தண்டவாளத்தின் வழியாகச் செல்வோர் அதிகம்.
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால் சிலர் தண்டவாளத்தைக் கடக்க அதற்குரிய மேம்பாலத்தையோ, சுரங்கப்பாதையையோ பயன்படுத்தாமல் நேரடியாகவே தண்டவாளங்களைக் கடப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுபோன்ற கவனக் குறைவால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள், அருகில் உள்ள தங்கள் பகுதியைச் சென்றடைய தண்டவாளப் பாதைகளையே பயன்படுத்துகின்றனர்.
இதற்குக் காரணம் சாலை வழியாகச் சுற்றிச் செல்வதைக் காட்டிலும், விரைந்து சென்று நடை பயணத்தைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.
மேலும், ரயில் வரும்போது ஒலி எழுப்பப்படும். அதனை உணர்ந்து எச்சரிக்கையாகி விடலாம் என்ற நம்பிக்கையிலும் அவர்கள் இவ்வாறு செல்கின்றனர். ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தை விளைவித்து விடுகிறது.
ரயில் வரும் நேரத்தில் பேருந்து பாதையின் கேட் மூடப்படுவது வழக்கம். ஆனால் கேட் மூடப்பட்ட பின்னரும், இரு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கேட்டில் குனிந்து தண்டவாளங்களைக் கடந்து செல்கின்றனர். இது ஆபத்தான முறை என்பதை தெரிந்தே பலர் இவ்வாறு கடந்து செல்கின்றனர்.
பலர் செல்லிடப்பேசியில் பேசியபடியே கடந்து செல்கின்றனர். அப்போது ரயில் வருவதை கவனிக்காமல் விபத்தில் சிக்குகின்றனர். இதன் காரணமாக கேட்களை திறந்து மூடும் பணியில் ஈடுபடும் கேட் கீப்பர்கள் நாள்தோறும் பெரும் சவால்களை சந்திக்கும் நிலை உள்ளது.
தண்டவாளங்கள் ரயில்களுக்கான பாதை, பொதுமக்களுக்கான பாதையல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். இதுகுறித்து ரயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே துறை விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகள், விழிப்புணர்வு பதாகைகள் உள்ளிட்டவற்றை வைப்பது, விளம்பரங்கள் மூலம் அறிவுறுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
தன்னார்வ நிறுவனங்களும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்வதைப்போல் ரயில் பாதைகளில் செல்ல வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
அதேசமயம் ரயில் வரும் நேரங்களில் கடவுப் பாதையைக் கடக்க வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அதிக நேரத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு காலவிரயமும் ஏற்படுகிறது.
சில சமயங்களில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்வே கேட் பகுதியிலேயே ரயில்கள் நிறுத்தப்பட்டு விடுகிறது.
இதனால் கேட் திறக்கப்படும் நிலை இருந்தாலும் வாகனங்கள் கடந்து செல்ல
முடியாமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதற்கு ஒரே தீர்வு, போக்குவரத்து அதிகளவில் உள்ள ரயில் கடவுப் பாதைகளில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகளை அமைப்பது தான்.
அதுபோல் ஆளில்லா கடவுப் பாதைகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு ரயில் வருவதை அறியச் செய்யும் வகையில், பச்சை, சிவப்பு விளக்குகள் கொண்ட சிக்னல்களை அமைக்கவும் முயற்சிக்கலாம்.
பல ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள் இல்லாததால் பயணிகள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தண்டவாளங்களில் நடந்து செல்வதை குற்றமாகக் கூறி அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், உரிய முறையில் நடைமேம்பாலங்களை அமைக்க வேண்டியதும் ரயில்வே நிர்வாகத்தின் கடமை.
பல சிறிய ரயில் நிலையங்கள் நடைமேடை இல்லாமலே உள்ளன. இதனால் ரயிலில் ஏறுவோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் நடைமேடை இல்லாத ரயில் நிலையங்களில் ரயிலில் ஏறும் போது தவறி கீழே விழும் நிலையும்உள்ளது.
ரயில் நிலையங்களில் சில நேரங்களில் ரயில் வருவது குறித்தும், அது வரும் நடைமேடை குறித்தும் ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே அறிவிப்பு செய்யப்படுகிறது. இதனால் ஒரு நடைமேடையிலிருந்து பிற நடைமேடைக்கு பயணிகள் முண்டியடித்துச் செல்கின்றனர்.
அப்போது பலர் ரயில் தண்டவாளங்களில் இறங்கியும் செல்கின்றனர். இதனைத் தவிர்க்க ரயில் வருவது குறித்து முன்கூட்டியே பயணிகள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஏற்ற முறைகளை ரயில்வே நிதிநிலை அறிக்கையில் வெளியிடவும், செயல்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம்.

Thursday, September 22, 2016

பெண்கள் வாட்ஸ்அப் தொல்லையிலிருந்து தப்பிக்க 5 டிப்ஸ்!

டிபி சூப்பர்’ என்று மெசேஜ் அனுப்புவதில் இருந்து, ‘புளூ டிக் காட்டுது, பதில் ப்ளீஸ்' என ரிப்ளை அனுப்பச்சொல்லிக் கேட்பதுவரை, வாட்ஸ்அப்பில் பெண்களை இம்சிக்கும் தொல்லைகளில் இருந்து விடுபட 5 பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கே....

1. ப்ரொஃபைல் பிக்சர்

நீங்கள் மொபைல் நம்பர் தரவில்லை என்றாலும், காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் குரூப், ரோட்டராக்ட் குரூப், ஆபீஸ் குருப் என்று குரூப்பில் இருந்து உங்கள் எண்ணை எடுத்துக்கொண்டு, 'ஸ்டேட்டஸ் சூப்பர்', 'டிபி க்யூட்' என்று ஆரம்பிக்கிறார்களா? வாட்ஸ்அப் அக்கவுன்ட் செட்டிங்ஸில், ப்ரொஃபைல் பிக்சர், ஸ்டேட்டஸ் அனைத்தும் நீங்கள் அலைபேசியில் பதிந்துவைத்துள்ள தொடர்புகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் 'கான்டாக்ட்ஸ் ஒன்லி' என்று செட்செய்துவிடுங்கள். அந்நியர்கள் அவுட்!

2. லாஸ்ட் சீன்

நீங்கள் கடைசியாக எப்போது வாட்ஸ்அப் பார்த்தீர்கள் என்பதை உலகத்துக்குச் சொல்லும் ‘லாஸ்ட் சீன்’ ஆப்ஷனைப் பார்ப்பதையே முக்கிய வேலையாக வைத்துக்கொண்டு, ‘என்ன இந்தப் பொண்ணு நைட் 12 மணிக்கு ஆன்லைன் வந்திருக்கு’ என்று உங்களை நிழலாகத் தொடரும் கவனிப்பு வளையத்தில் இருந்து விடுபடுங்கள். அதற்கு, 'லாஸ்ட் சீன்'-ஐ யாரும் பார்க்கமுடியாதபடி 'நோபடி(Nobody)' என்று மாற்றிவிடுங்கள். சுதந்திரம் பேக்கப்!

3. புளூ டிக்

இரண்டு புளூ டிக்குகளைப் பார்த்துவிட்டால், இங்கு பலரும் ஏதோ கிரீன் சிக்னலை பார்ப்பதுபோல மூளை பிசகிக்கிடக்கிறார்கள். அவர்களுக்குப் புரியவைப்பதற்கு எல்லாம் உங்களுக்கு நேரமில்லை. எனவே, அதுபோன்ற கான்டாக்ட்கள், தெரியாத எண்களில் இருந்து வரும் தொடர் மெசேஜ்களை ஓபன் செய்யாமல் இருந்துவிடுங்கள். புளூ டிக் பார்க்கவில்லை என்றால் ஆட்டோமெட்டிக்காக அவுட் ஆகிக்கொள்வார்கள் நாகரிகம் தெரிந்தவர்கள். எளிமையான தீர்வு!

4. சென்டிமென்டல் ஆஃப்

இது பழைய டெக்னிக்தான். பெர்சனல் சாட்டில் வந்து பொறுத்துக்கொள்ள முடியாதபடி தொல்லைகொடுத்தால், அந்த கான்டாக்ட்டும் நீங்களும் இருக்கும் குரூப் சாட்டில், ‘சொல்லுங்க பிரதர்’ என்று அவருக்குத் தட்டுங்கள். பார்ட்டி ஆஃப் ஆகிவிடும். சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபிள்தான்!

5. பிளாக்

‘குட் மார்னிங்’, ‘குட் டே’ என்று டீசன்டாக என்ட்ரிகொடுத்துவிட்டு, பின் மெல்ல மெல்ல எல்லை மீற ஆரம்பித்தால்... யோசிக்காமல் அந்த கான்டாக்ட்டை பிளாக்செய்து விடுங்கள். பிரச்னையை வளரவிட்டு வருந்தாதீர்கள். பார்டர் தாண்டினால் பிளாக்! இந்த எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி ‘என் பணி உன்னை டிஸ்டர்ப் செய்வதே’ என்று மெயின் இன்பாக்ஸ் வருபவர்களை, மைண்டில் இருந்து கன்ட்ரோல்+ஆல்ட்+டெலிட். உங்களுக்கு உருப்படியான வேலைகள் நிறைய உள்ளன!

- நிவேதா சேகர்
சினிமா எல்லாம் சும்மா...! 4 கோடி ரூபாயைக் கொள்ளையடித்த நிஜ போலீஸ்

கோவை : கோவையில் போலீஸ் வேடமிட்டு காருடன் ரூ.4 கோடி கடத்தியதாக சொல்லப்பட்ட வழக்கில், கடத்தியது நிஜ போலீஸ் தான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஹவலா பணத்தை கொள்ளையடித்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறது தமிழக காவல்துறை. சிறையில் ராம்குமார் மர்மமான முறையில் உயிரிழக்க அந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்ததாக இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மதுக்கரை அருகே கடந்த மாதம் 25ம் தேதி அதிகாலை சென்னையிலிருந்து கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி சென்ற காரை காவல்துறையினர் போல் வேடமணிந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர்.தங்களை காவல்துறையினர் என அடையாளப்படுத்திக்கொண்ட அக்கும்பல் காரில் பயணம் செய்தமலப்புரத்தை சேர்ந்த முசீர், முகம்மது, சீதோஷ் மற்றும் அனந்த் ஆகியோரை கீழே இறக்கி விட்டதுடன் காரை சோதனையிடுவது போல் நடித்து காரை கடத்தி சென்றனர்.

கடத்தப்பட்ட காரில் சுமார் 3கோடியே 90 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் இருந்ததாக சொல்லப்ப்பட்டது. ஆனால் அதன் உரிமையாளரான மலப்புரம்பகுதியை சேர்ந்த தங்க நகை கடை உரிமையாளர் அன்வர் சதா, 'காரில் எந்த பொருளும் இல்லை. கார் மட்டும் கடத்தப்பட்டது' என கோவை மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தார்.

ஆனால் காரில் ஹவாலா பணம் ரூ.3.90 கோடி இருந்ததாக எழுந்த தகவல் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது காரில் ஹவாலா பணம் இருந்ததை போலீசார் உறுதி செய்தனர். இது தொடர்பாக 4 தனிப்படை அமைத்து தேடுதல் பணியை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே கடந்த 27ம் தேதி கேரளா மாநிலம், பாலக்காடு அருகே தேசியநெடுஞ்சாலையில் கார் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுதீர்,சபீக்,சுபாஷ் ஆகியமூன்று பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையின் போது போலீஸ் வேடமிட்டு கொள்ளையடித்த நபர்கள் குறித்து போலீசார் கேள்வி எழுப்பினர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நிஜ போலீஸ் தான் என அவர்கள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர் சரவணன், ஏட்டு தர்மேந்திரன் ஆகியோர் தான் இந்த சம்பவத்தில் எங்களோடு ஈடுபட்டதாகவும், அவர்கள் 2 கோடி ரூபாயை எடுத்துக்கொண்டதாகவும், மீதமுள்ள 1.90 கோடியை நாங்கள் எடுத்துக்கொண்டோம் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக விசாரித்த திருச்சி டி.ஐ.ஜி. அருண், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சரவணன், தர்மேந்திரன் ஆகிய மூவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து இவர்களில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை கோவை போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். எஸ்.ஐ. சரவணன், ஏட்டு தர்மேந்திரன் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இன்ஸ்பெக்டரிடம் மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் உள்ள மற்றவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் மூவரும் கைது செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

- ச.ஜெ.ரவி,

இனி க்ரூப் சாட்டில் இருந்து தப்பிக்க முடியாது! #WhatsAppUpdate


வாட்ஸ்அப் பல பேரின் ஃபேவரைட்டாக மாறுவதற்கு காரணமே, அதன் அப்டேட்கள்தான். பயனாளிகளுக்குத் தேவையான அப்டேட்களை அடிக்கடி வழங்கிவரும் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் எப்படி இருக்கிறது?

வாட்ஸ்அப்பின் க்ரூப் சாட் என்பது சிலருக்கு வரம். சிலருக்கு சாபம். வந்துகுவியும் உங்களின் நண்பர்களின் மெசேஜ் நோட்டிஃபிகேஷன்கள் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் எனில் பிரச்னை இல்லை. ஆனால் அதுவே உங்களுக்கு எரிச்சல் அளித்தால் க்ரூப்பை ம்யூட் (Mute)செய்து விடுவீர்கள். ஆனால், இனி ம்யூட் செய்தால் கூட, நோட்டிஃபிகேஷன்களில் இருந்து தப்பிக்க முடியாது.

க்ரூப்சாட் வசதிகளை இந்த அப்டேட்டில் கொஞ்சம் மேம்படுத்தியுள்ளது வாட்ஸ்அப். உதாரணமாக நீங்கள் இருக்கும், ஒரு க்ரூப்பில் இருக்கும் 10 பேர், சேர்ந்து 100 தகவல்களைப் பரிமாறிக் கொண்டால், அதில் ஒன்றோ, இரண்டோதான் உங்களுக்கு தொடர்புடையதாக இருக்கும். ஆனால் உங்களுக்கு சம்பந்தமில்லாத செய்திகள் வந்து குவிவதால், அதனைப் படிக்காமலே கடந்து விடுவீர்கள். அல்லது எல்லா செய்திகளையும் படிக்க வேண்டியது வரும். இனிமேல் அந்தப் பிரச்னை இருக்காது. ஃபேஸ்புக்கில் டேக் (Tag) செய்வது போலவே, வாட்ஸ்அப் க்ரூப்பிலும் Tag செய்ய முடியும். குழுவில் எந்தக் குறிப்பிட்ட நபருக்கு, நீங்கள் செய்தி அனுப்பவேண்டுமோ, அவரை @ குறியீடு கொடுத்து Tag செய்யமுடியும். இதனால் முக்கியமான செய்திகளை யாரும் தவறாமல் படிக்க முடியும். இப்படி Tag செய்யப்படும் நபர், க்ரூப்பை மியூட் செய்து வைத்திருந்தாலும் கூட, நோட்டிஃபிகேஷன் காட்டும்.

அதே போல வாட்ஸ்அப் கேமரா கொண்டு செல்ஃபி எடுத்தால், ஃபிளாஷ் செயல்படும். இது வாட்ஸ்அப் கேமராவிற்கு மட்டும்தான். மொபைல் கேமராவிற்கு கிடையாது. அதேபோல, உங்கள் மொபைலில் முன்பக்க ஃபிளாஷ் இல்லையெனில் இந்த வசதி இருக்காது. அதே போல Tag செய்யும் ஆப்ஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்கு மட்டும்தான். கணினியில் வாட்ஸ்அப் வெப்(WhatsApp Web) பயன்படுத்துபவர்களுக்கும் இந்த வசதி கிடையாது.

உங்களுக்கு தலைவனாகும் ஆசை இருக்கிறதா...?



உங்களுக்கு தலைவனாகும் ஆசை இருக்கிறதா...?

நிதானமாக யோசியுங்கள். யோசித்தீர்களா?

இப்பொழுது இன்னொரு கேள்வி 'எல்லோரையும் விட கடுமையாகத்தான் உழைக்கிறோம். ஆனால் எங்கே தவறு செய்கிறோம்.. எது நம்மிடம் இல்லை?' என்பது போன்ற கேள்விகள் உங்களைத் துரத்தி இருக்கிறதா இதோ இந்த குறிப்புகள் உங்களுக்காகத் தான்.

1. ஒரு தலைவனின் அடிப்படைக் குணமே ஒரு குழுவை எப்போதும் நல்ல முறையில் வழிநடத்திச் செல்வதுதான். அப்படியான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் பொழுது அதை சரியான முறையில் செய்திருக்கிறீர்களா? செய்திருந்தால், ஒரு தலைவன் அங்கேயே வெளிப்பட்டிருப்பான்.

2. உங்கள் அலுவலகத்திலோ அல்லது நண்பர்களில் ஒருவருக்கோ ஏதேனும் அவசரத் தருணத்தில் அவர் திட்டமிட்ட வேலையை சரியாக செய்ய முடியாமல் போகிறது. அந்த வேலையை நீங்களாகவே கேட்டு செய்து கொடுத்து இருக்கிறீர்களா? தலைவனின் பண்பு தலைமை தாங்குவது மட்டும்தான் என்றில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவ்வப்போது உதவி, அவர்களை நல்ல நிலையில் வைத்துக்கொள்வதும் தான். அதே நேரத்தில் அவர்களாகவே செய்து முடியக்கூடிய வேலைகளை, அவர்களைக் கொண்டே செய்ய வைக்க வேண்டும்.

3. உங்கள் குழுவுக்கு தொடர்ந்து தோல்விகள். உங்களிடம் அதற்கான காரணம் கேட்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? காரணங்களைச் அடுக்குவீர்களா, அல்லது அதற்கான தீர்வுகளோடும் செல்வீர்களா? தீர்வுகளோடும் செல்பவராக இருந்தால் நிர்வாகத்தின் முதல் சாய்ஸ் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

4. நீங்கள் அதிகமாக கோபப்படுபவரா? யாரேனும் சிறு தவறு செய்து விட்டால் கூட, அவர்களை கடுமையாகத் திட்டி நல்வழிப்படுத்த வேண்டும் என நினைப்பவரா. அப்படி ஒரு குணம் உங்களிடம் இருந்தால் அதை இப்பொழுதிலிருந்தே மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

5. ஒரு தலைவனுக்கு தன் குழுவை வழிநடத்திச் செல்வதைப்பற்றி தெரிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல உங்கள் இலக்குகளைப் பற்றி தெரிந்து கொண்டிருப்பதும் ரொம்ப முக்கியம். இலக்கில்லாமல் பயணிப்பது தலைவனுக்கு அழகல்ல!

6. "எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே செல்லும்" என்பதைப்போல எப்படியும் வெற்றி கிடைத்து விடும்.. இவ்வளவு பேர் கடினமாக உழைக்கிறோமே என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஒரு தலைவன் சரியாகத் திட்டமிட்டு வேலைகளை பிரித்துக் கொடுப்பவனாக இருக்க வேண்டும்.

7. எப்பொழுதும் தனியாக முடிவெடுப்பவராக அல்லாமல். தன் குழுவினரின் கருத்துகளையும் கேட்டறிந்து நல்ல தீர்வுகளை முன்னெடுப்பவரே நல்ல தலைவனாக உருவெடுக்கிறான். ‘

நீங்கள் தொண்டனா, தலைவனா?’ என்ற கேள்வி உங்களிடம் கேட்கப்படுகிறது. இரண்டு சாய்ஸ்கள் , முடிவு உங்கள் கையில். இந்த இறுதி வரிகளை படிக்கும் முன்பு நீங்கள் முடிவெடுத்திருந்தால்..

யெஸ் பாஸ்...! உங்களுக்குள்ளும் ஒரு தலைவன் இருக்கிறான்!

- க. பாலாஜி

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...