Tuesday, September 1, 2015

கூகுளில் தகவல்கள் மட்டுமில்லை; இனி வேலையும் கிடைக்கும்!...vikatan emegazine

கூகுளில் தேடினால் தகவல்கள் கிடைக்கும் என்பதுதான் இதுவரை நமக்கு தெரியும். ஆனால் கூகுள் தேடலில், இப்போது வேலை வாய்ப்பும் கிடைக்கிறது என்பது தெரியுமா? 

மேக்ஸ் ரோசெட் என்பவர் பொழுதுபோக வில்லை என்று கூகுளை அலசிக்கொண்டிருந்தபோதுதான் வேலை கிடைத்திருக்கிறது. அதிலும் கூகுள் நிறுவனத்திலேயே, என்பது இன்னும் இன்ப அதிர்ச்சி தரும் தகவல்.

உங்களுக்கும் கூட இணையத்தில் தேடும் போது இத்தகைய வாய்ப்பு கிடைக்கலாம்.ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள நீங்கள் புரோமிராமிங் புலியாக இருக்க வேண்டும். இப்படி புரோகிராமிங்கில் கில்லாடியாக இருப்பவர்கள் கூகுளில் வேலை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூட இல்லை, இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது ஏதாவது ஒருவிதத்தில் புரோகிராமிங் மற்றும் கோடிங்கில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினால் கூட போதும் கூகுளிடமிருந்துஅழைப்பு வரும். 

ஆனால் இந்த அழைப்பு ரகசியமானதாக, புதிர்த்தன்மையுடன் குழப்பக்கூடியதாக இருக்கும்.
மேக்ஸ் ரொசெட்டும் இத்தகைய குழப்பத்திற்கு தான் முதலில் இலக்கானார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் கணித பட்டம் பெற்றவரான மேக்ஸ் நிர்வாகவியல் துறையில் வேலை பார்த்து வெறுத்துப்போய், பின்னர் ஸ்டார்ட்டப் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பிறகு கம்ப்யூட்டர் துறையில் பணியாற்ற விரும்பியவர், இணையம் வழியாக புரோகிராமிங் கற்றுக்கொண்டிருந்தார். 

தன்னுடைய புரோகிராமிங் அறிவை பட்டை தீட்டிக்கொள்வதற்காக மேக்ஸ் சில மாதங்களுக்கு முன், கூகுள் தேடியந்திரத்தில் புரோகிராமிங் சந்தேகம் தொடர்பான தகவலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது வழக்கம் போல நீல நிற இணைப்புகளின் பட்டியலுக்கு நடுவே தனக்கு தேவையான தகவலை அடையாளம் காண முற்பட்ட போது, நடுவே ஒரு புதிரான இணைப்பு அவரது கவனத்தை ஈர்த்தது.

” நீங்கள் எங்கள் மொழி பேசுகிறீர்கள், ஒரு சவாலுக்கு தயாரா?” என்று அந்த இணைப்பு அழைப்பு விடுத்தது. கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் வியப்புடன் அந்த இணைப்பை கிளிக் செய்தபோது புதிய இணைய பக்கம் தோன்றியது. 

அந்த இணைய பக்கம் அவருக்கு அடுக்கடுக்காக புரோகிராமிங் சோதனைகளை வைத்தது. ஒரு ஆர்வத்தில் அந்த புரோகிராம் புதிர்களை எல்லாம் விடுவித்து காத்திருந்தால் ஆச்சர்யப்படும் வகையில் கூகுளில் இருந்து வேலை வாய்ப்பிற்கான அழைப்பு வந்தது.

மேக்ஸ் மகிழ்ச்சியுடன் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். இப்போது அவர் கூகுள் ஊழியர். கூகுளில் பணியாற்ற வேண்டும் என்பது தனது கனவாக இருந்தாலும் அதற்கு இன்னும் தயாராகவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த போது கூகுள் தன்னை தேடல் குறிப்பு மூலம் அடையாளம் கண்டு அழைப்பு விடுத்ததாக மேக்ஸ் இந்த எதிர்பாராத வாய்ப்பு பற்றி உற்சாகமாக குறிப்பிடுகிறார்.

கூகுள் வேலைவாய்ப்புக்கு பொருத்தமான நபர்களை கண்டறிவதற்காக பல புதுமையான உத்திகளை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. வேலைவாய்ப்புக்கான தேர்வு என்று தெரியாத வகையில் நூதனமான முறையில் புரோகிராமிங் சோதனைகளில் பங்கேற்க வைத்து திறமையானவர்களை கூகுள் அடையாளம் காணும் விதம் பற்றி பல சுவாரஸ்யாமான கதைகள் தொழில்நுட்ப உலகின் இருக்கின்றன. 

மேக்சிற்கும் இத்தகைய ரகசிய வழி ஒன்றில் தான் கூகுளில் வேலை கிடைத்திருக்கிறது.

கூகுளில் வேலை கிடைத்த அனுபவம் பற்றிய மேக்ஸ் எழுதியுள்ள பகிர்வு:http://thehustle.co/the-secret-google-interview-that-landed-me-a-job

- சைபர்சிம்மன் 

Monday, August 31, 2015

கைவிட்ட பிள்ளைகள்... வற்றாத காதல்... கணவரை இடுப்பில் சுமந்து வாழ்க்கை நடத்தும் மனைவி!..vikatan

ராமேஸ்வரம்: தெலங்கானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது விஹாராபாத். இந்த ஊரை சேர்ந்த ஜெகன்நாத் (56) பிறவியிலேயே ஊனமாக பிறந்தவர். இரண்டு கைகள் மற்றும் கால்கள் வளர்ச்சி பெறாத நிலையில் உடல் பகுதி மட்டும் வயதுக்கு ஏற்றவாறு வளர்ச்சி அடைந்தது. முழுமையான ஊனத்துடன் வளர்ந்த ஜெகன்நாத் வாழ்க்கை நடத்த எந்த வழியும் இல்லாத நிலையில் பிறரின் உதவியை எதிர்பார்த்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இவர் மீது இரக்கம் கொண்ட சங்கரம்மா என்பவர் ஜெகன்நாத்தை மணம் முடித்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் பிறந்தது. ஜெகன்நாத்தும், சங்கரம்மாவும் ஊர் ஊராக சென்று பிச்சை எடுப்பதுடன், ஊனமுற்ற காலின் விரலை கொண்டு கீ போர்டு எனும் இசை கருவியையும் வாசிக்கிறார். இதன் மூலம் தங்கள் குழந்தைகளை இந்த தம்பதியினர் வளர்த்தனர்.

அப்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் மூவரும் பருவ வயதை அடைந்ததும் தங்கள் தாய்- தந்தையை கவனிக்க தவறினர். இதனால் ஊனமுற்ற கணவருடன் திருப்பதி, காளஹஸ்தி, சென்னை, மதுரை, ராமேஸ்வரம் என ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார் சங்கரம்மா. தான் செல்லும் ஊருக்கு எல்லாம் தனது ஊனமுற்ற கணவனை ஒரு குழந்தையை போல் இடுப்பில் தூக்கி வைத்து கொண்டே செல்லும் சங்கரம்மாவின் நிலையை எண்ணி வருந்தும் பொதுமக்கள் அவருக்கு தங்களால் இயன்ற உதவியை கொடுத்து வருகிறார்கள். பிறரிடம் பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் தொகையுடன் இரவு நேரங்களில் இவர்கள் பொது வெளிகளில் தங்கியிருக்கும் போது அந்த காசையும் கயவர்கள் களவாடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது மட்டுமில்லாமல் கோயில் தலங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றில் இவர்களை அனுமதிக்க மறுப்பதுடன் அங்கிருந்து விரட்டியடிக்கப்படுவதாகவும் இவர்கள் வருந்துகின்றனர்.
கை, கால் நல்ல நிலையில் இருப்பவர்களே அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்கும் இந்த உலகில் கை, கால் முற்றிலும் வளர்ச்சியற்ற நிலையில் ஜெகநாத் போன்றவர்களும் நேர்மையுடன் வாழத்தான் செய்கிறார்கள். அதைவிட பெருமை ஊனத்தை ஒரு பொருட்டாக கருதாமல் ஜெகநாத்தை வாழ்க்கை துணையாக ஏற்று கொண்டதுடன் அவரை தான் செல்லும் ஊருக்கு எல்லாம் இடுப்பில் தூக்கி செல்லும் சங்கரம்மாவின் அன்பிற்கு இல்லை அளவு கோல்.

ஊனத்தை ஊனமாக கருதாமல் தனக்கு தெரிந்த கலையை பிறருக்கு வாசித்து காண்பித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு கஷ்ட ஜீவணம் நடத்தி வரும் ஜெகநாத்தை ஊர் ஊராக அழைத்து செல்ல தள்ளுவண்டி ஒன்று கொடுத்து உதவினால் நன்றியோடு இருப்போம் என்கிறார் சங்கரம்மா. உதவும் நினைக்கும் நல்ல உள்ளங்கள் 9989871585 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

-இரா.மோகன்

படங்கள்: 
உ.பாண்டி
 

காரோட்டிக்கு பாராட்டுவிழா எடுத்த கலைமேதை என்.எஸ்.கிருஷ்ணன்!..vikatan

950 களின் மத்தியில் பிரம்மாண்டமாக நடந்தது அந்த விழா. விழாவில் பங்குபெற்றோர் அந்நாளைய பிரபல நட்சத்திரங்கள். அந்த விழாவை எடுத்து நடத்தியதும், அந்நாளில் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நட்சத்திரம்தான். ஆனால் இத்தனை அம்சங்களுடன் நடந்த அந்த விழாவின் நாயகன், பிரபல நட்சத்திரமோ, பிரபலமான பிரமுகரோ அல்ல: ஒரு சாதாரண கார் ஓட்டுநர். 
தனக்கு கார் ஓட்டிய ஒரு ஊழியருக்கு பாராட்டு விழா எடுத்த அந்த மனிதர் வேறு யாருமல்ல; “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர்தான்” என மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட  என்.எஸ். கிருஷ்ணன்தான் அது!
அவரது நினைவுநாள் இன்று...

நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில், 1908 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை, தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!

வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணர் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்தினார். பிறகு, நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம். பின்னாளில் நாடகங்களில் நடித்துவந்தார். ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் எஸ்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம். ஆனால், 'சதிலீலாவதி'யை முந்திக்கொண்டு  அவரது 2 வது படமான 'மேனகா' வெளிவந்தது. 

மேனகாவின் வெற்றியால், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவை மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களான பி.யு சின்னப்பா, தியாகராஜபாகவதர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரையுலகில் புகழடைந்தபின், தானே சொந்தமாக தனது பாத்திரத்தன்மையை வடித்து, அதை படங்களில் பயன்படுத்தினார் கலைவாணர்.
திரைப்படத் துறையில் பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வெறுமனே சிரிக்க மட்டுமின்றி, சிந்திக்க வைக்கக்கூடியதாகவும், மேதமையாக இருந்தது அவரது நகைச்சுவை
காட்சிகள். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு, ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறவிடவே, வழிச் செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசியை தீர்த்தார் கலைவாணர். அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதல் பூத்தது. மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். கலைவாணர்- மதுரம் ஜோடி திரையுலகில் பெரிதும் பேசப்பட்ட ஜோடி.
நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல், அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. 

என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே,  'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம், சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவரது மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார். 

ஒருமுறை என்.எஸ்.கே  ரஷ்யப் பயணம் மேற்கொண்டார். அதுபற்றி நிருபர்கள் கேட்க, ' ரஷ்யாவில் அக்ரஹாரமும் இல்லை...சேரியும் இல்லை' என்று நறுக் என்று பதில் அளித்தார்.
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். தனது படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என அவர் நகைச்சுவையாகவும், அதே சமயம் தீர்க்க சிந்தனையோடும் காட்சிகளை அமைத்தார். ஆச்சர்யமாக அத்தனையும் நடந்தேறியது. கலைவாணரின் தீர்க்க சிந்தனையை மக்கள் போற்றினர். 

திமுக மீதும், அதன் தலைவர்கள் மீதும் அன்பு கொண்டவராக இருந்தாலும் எக்காலத்திலும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்குரியவராக கலைவாணர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. எல்லா கட்சியிலும் அவரது அன்புக்குரியவர் இருந்தார்கள். “கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன். அவன் மக்களின் ரசிகன்” என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி, அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பைப் பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்.
கலைவாணர் புகழின் உச்சியில் இருந்தபோது அவரது வாழ்க்கையை முடக்கிப்போட்டது ஒரு வழக்கு. 
'இந்து நேசன்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும்         தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாக கூறி இருவரும் கைதானார்கள். பல்வேறு மாதங்களுக்கு பின், லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப்பின்னும் விடுவிடுவென படங்களில் நடிக்கத் துவங்கினார் கலைவாணர்.

'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்த அன்று காருக்கு பெட்ரோல் போட்டதுக் கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார். - கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போதெல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பாராம்.  

சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில்தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே.சம்பந்தம் முதலியார்.
மேதைமையான அவரது நகைச்சுவையால் கலைவாணர், தென்னாட்டு சார்லி சாப்ளின் என அழைக்கப் பட்டார். ஆனால் இதற்கு கலைவாணரின் கருத்து என்ன தெரியுமா? "என்னைச் சிலர் தமிழ்நாடு சார்லி சாப்ளின்னு சொல்றாங்க. சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!" என்றார் என்.எஸ்.கே.தன்னடக்கமாக. 

தன்னைத் தேடி வருபவர்களின் துயரங்களை  கேட்டு, அவர்களுக்கு உதவுவதில் அக்கறை காட்டும் மனிதாபிமானி என்.எஸ். கே. ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது இறுதிநாட்களில், அவரிடம் வேலை செய்த ஒருவர், 'தன் மகளுக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது ஒரு விலையுயர்ந்த வெள்ளி கூஜா. அதை எடுத்துக்கொடுத்து, 'என்னிடம் பணமாக கொடுக்க எதுவும் இல்லை. இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார். கண்ணீர் பீறிட்டது அந்த ஊழியரிடம் இருந்து. 

தன் மனைவி மதுரத்திடம், “எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்று கூறும் நிலை வந்தால், நான் உயிரோடு இருக்கக் கூடாது!' என்று அடிக்கடி கூறுவாராம். 

இவரால் சினிமாவில் அடையாளம் காணப்பட்டவர்கள் பலர். குமரி மாவட்டம் இப்போதைய கேரளாவோடு இருக்கும் போது,  தமிழர்கள் தாய் தமிழகத்தோடு இணைய வேண்டும் என போராடிய தமிழ் உணர்வாளர்களுக்கு ஆதரவாக நின்றவர்.
தினமும் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம்.  ஏதோதோ காரணம் சொல்லி பணம் கேட்க, இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுகிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, ' ஏமாத்தி அவன் என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத் தானே சாப்பிடப் போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம். அத்தனை மனிதாபிமானி என்.எஸ்.கே

காந்தியை மிகவும் நேசித்த கலைவாணர்,  நாகர்கோவில் நகராட்சி பூங்காவில்  தனது  சொந்த செலவில் காந்தி நினைவுத் தூணை எழுப்பி அதில் கவிமணியின் கவிதைகளை இடம்பெறச் செய்தார். இது இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான கலைவாணர், அதற்காக தன் சொந்த நிலத்தையும் வழங்கியவர். 

சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா. கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின. நகைச்சுவை மேதையான அவர், அதையும் தன் பாணியில்,  'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே!" என்றாராம்.
ஒரு கட்டத்தில் கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார் என்.எஸ்.கே. ஆனால் தொடர்ந்து உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 49-வது வயதில் காலமானார். தன் நகைச்சுவையால் தமிழகத்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை மேதை தமிழர்களை ஒரே முறை தன் இறப்பின் மூலம் அழவைத்தார்.

உலகிலேயே  நகைச்சுவை நடிகர்களில் இருவருக்கு மட்டும்தான் சிலை அமைக்கப்பட்ட பெருமை உண்டு. ஒருவர் சார்லின் சாப்ளின், மற்றொருவர்  கலைவாணர். 

- த.ராம்
படங்கள் உதவி: என்.எஸ். கே. நல்லதம்பி

ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் ஒரு அதிசய மனிதர்!

ற்போதையை விலைவாசி உயர்வினால் ஹோட்டலில் சென்று சாப்பிட்டால் பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகாத நிலையில், ஈரோட்டில் இன்னமும் ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு போடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகே ஏ.எம்.வி வீட்டு சாப்பாடு மெஸ் செயல்பட்டு வருகிறது. இந்த மெஸ்சினை வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வருகிறார். அரசு மருத்துவமனை அருகே மெஸ் இருப்பதால் பெரும்பாலும் நோயாளிகளின் உறவினர்கள் இங்கு சாப்பாடு வாங்க வருவார்கள். கடந்த 2007ஆம் ஆண்டு இந்த மெஸ்சுக்கு தோசை வாங்க பெண் ஒருவர் வந்துள்ளார். 10  ரூபாய்க்கு  வெங்கட்ராமன் 3 தோசை கொடுத்துள்ளார். 

அப்போது அந்த பெண்,  இந்த 3 தோசையைதான் தானும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரும் பங்கிட்டு சாப்பிட வேண்டுமென்று வெங்கட்ராமனிடம் கூறியிருக்கிறார். இதனால் மனம் இளகி போன  வெங்கட்ராமன் மேலும் 3 தோசைகளை கட்டி அவரிடம் கொடுத்துள்ளார். அந்த பெண்ணின் வார்த்தைகள் வெங்கட்ராமனின் மனதை உறுத்தியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் படும் அவஸ்தைகளை நேரில் கண்டு மனம் கலங்கியுள்ளார் வெங்கட்ராமன்.  அங்கு பணி புரியும் செவிலியர்கள், பெரும்பாலான நோயாளிகள் இங்கு இட்லி, தோசை வாங்கி சாப்பிட பணம் இல்லாமல் பன், டீ-யுடன் பசியாற்றி கொள்வதாகவும் அவரிடம் கூறியுள்ளனர்.  அந்த சமயத்தில் வெங்கட்ராமன் எடுத்த முடிவுதான் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் இந்த திட்டம்.
முதலில் தினமும்  10 நோயாளிகளுக்கு ஒரு ரூபாயில் மதிய உணவு வழங்கி வந்தார்.  மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் டோக்கன் அளிக்கப்பட்டு கஷ்டப்படும் நோயாளிகள் அடையாளம் கண்டு அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனை கொண்டு வந்து வெங்கட்ராமன் மெஸ்சில் அவர்கள் உணவு பெற்றுக் கொள்ளலாம். மருத்துவமனைக்கு சென்று பங்கிட்டு சாப்பிட்டு கொள்ள வேண்டும். தற்போது  இதுவே தினமும்  70 டோக்கன்களாக உயர்ந்துள்ளது.  

இது குறித்து வெங்கட்ராமன் கூறுகையில், ''கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மூன்று வேளையும் நோயாளிகளுக்கு ஒரு ரூபாயில் உணவு வழங்குகிறேன். காலையில் 10 டோக்கன் அளிப்பேன். ஒரு டோக்கனுக்கு 3 தோசைகளும் 2 இட்லிகளும் வழங்கப்படும். அதே போல் மதியம் 40 டோக்கன்கள் வழங்குவேன். இதில் முழு மதிய உணவு அவர்கள் திருப்தியாக சாப்பிடும் வகையில் கட்டி கொடுத்து விடுவோம். அதே போல் இரவு 20 டோக்கன்கள் வழங்குகிறேன். இரவு நேரத்தில் 3 தோசை 2 சப்பாத்தி இருக்கும். வருங்காலங்களில் இதனை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
இதே மெஸ்சில் பொதுமக்களுக்கு 50 ரூபாயில் உணவு வழங்கப்படுகிறது. இவரது மெஸ்சில் 8 பேர் வேலை பார்த்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இந்த உணவகம் செயல்படுவதில்லை. நஷ்டம் ஏற்பட்டாலும் சேவை மனப்பான்மையுடன் வெங்கட்ராமனும், அவரது மனைவியும் இந்த பணியை செய்து வருகின்றனர்.
முதலில் இலவசமாகவே நோயாளிகளுக்கு உணவு வழங்கலாம் என்று வெங்கட்ராமன் முடிவு செய்திருந்தாராம். ஆனால் உணவுப் பொருட்களின் அத்தியாவசியத்தை உணர்ந்து கொள்ள 
வேண்டும்,வீணாக்கி விடக் கூடாது என்பதற்காகவே பின்னர் ஒரு ரூபாய் வாங்க முடிவு செய்திருக்கிறார். 

சாப்பாடு வாங்க வரும் ஒவ்வொருவரிடமும் வெங்கட்ராமன் சொல்லும் ஒரே வார்த்தை ... உணவை வீணடிச்சுடாதீங்க  என்பதுதான்!

Sunday, August 30, 2015

வெங்காய தட்டுப்பாடு மேலும் ஒரு மாதம் நீடிக்கும்!'

சென்னை: தற்போது நிலவி வரும் பெரிய வெங்காயத்தின் தட்டுப்பாடு இன்னும் ஒருமாதம் நீடிக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் சந்தைகளில் வெங்காயம் கிடைப்பதிலும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100க்கும், இன்னும் பல இடங்களில் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னைக்கு ஆந்திராவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு நிலவவில்லை என்றபோதிலும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 என்ற அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், இந்த விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் சின்ன வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது.

''இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் மழை குறைவு என்பதால் மகாராஷ்ட்ரா உள்பட பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விளைச்சல் குறைவாக உள்ளது. எனவே, மற்ற இடங்களுக்கு வரும் வெங்காயத்தின் அளவும் குறைந்திருக்கிறது. இதனால், பல மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

வழக்கமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு 70 லாரிகளில் வெங்காயம் வரும். தற்போது 50 லாரிகளில் மட்டுமே வருகிறது. இந்த வெங்காய தட்டுப்பாடு இன்னும் ஒரு மாதம் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்கின்றனர் வெங்காய மொத்த வியாபாரிகள்.

சிரிப்பு மருத்துவர் கலைவாணர் என்.எஸ்.கே நினைவு தின சிறப்பு பகிர்வு!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவுநாள் இன்று (ஆகஸ்ட் 30). நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்
டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.
நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்
திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.
அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.
என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நாடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .
என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்
என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.
அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் .
” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு
ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டு தான் இறந்து போனார்
- பூ.கொ.சரவணன்

vikatan emegazine

விஜயகாந்துதான் அடுத்த முதல்வர்: அடித்து சொல்லும் பிரேமலதா!

திருச்சி: "எத்தனை பேர் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தாலும் விஜயகாந்துதான் அடுத்த முதல்வர். அவர் முதல்வர் பதவியில் அமரும் வரை ஓயமாட்டார்" என்று பிரேமலதா விஜயகாந்த் உறுதிபட கூறினார்.
'மக்களுக்காக மக்கள் பணி' என அறிவித்து அந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
இந்நிலையில்  விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, கரூரை அடுத்த தரகம்பட்டியில் 'மக்களுக்காக மக்கள் பணி' திட்டத்தின் கீழ் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தே.மு.தி.க. 10 ஆண்டு கட்சி என்று சொல்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர் மன்றமாக உருவாகி, தற்போது தே.மு.தி.க. தமிழகம் முழுவதும் ஆலவிருட்சமாக உருவாகி உள்ளது. தமிழக அரசியல் கட்சிகளில் சாப்பாடு, அரிசி, குவார்ட்டர் பாட்டில் கொடுக்காமல் ஒரு கட்சி கூட கூட்டம் கூட்ட முடியாது. ஆனால் இங்கு மக்கள், மாநாடு கூட்டம் போல் அமர்ந்து உள்ளனர்.

கேப்டன் விஜயகாந்த்  மக்களை பற்றி சிந்திக்கிறார். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 50 ஆண்டுகள் கொள்ளையடித்து போதாதா? தமிழக மக்களுக்கு என்ன தேவை என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, அடுத்த தேர்தலை பற்றிதான் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சிந்தித்து வருகின்றனர். 50 ஆண்டுகளாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழகத்தை சீரழித்துவிட்டது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. பிடியில் இருந்து தமிழகத்தை மீட்பது நமது கடமை.
 

இன்று வளர்ச்சியில் பீகார் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு கடைசியில் இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க.வை குறைசொல்லிதான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில்லை. தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்கும் வரை எங்கள் மக்கள் பணி ஓயாது. தி.மு.க.வினர் ஒரு மடங்கு மணல் கொள்ளையடித்தால் அ.தி.மு.க.வினர் 10 மடங்கு மணல் கொள்ளையடித்து உள்ளனர். 
மதுவினால் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறி இருக்கிறது என புள்ளி விபரம் கூறுகிறது. இதற்கு மதுதான் காரணம். திமுக ஆட்சியில் போட்ட திட்டங்களை அதிமுக முடக்குகிறது. இதேபோல், அதிமுக போடும் திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முடக்குகிறது. ஆனால், தி.மு.க.வால் கொண்டு வரப்பட்ட மதுக்கடையை மட்டும் இரு அரசுகளும் முடக்குவதில்லை. காரணம், தமிழகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மது ஆலைகள், இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பினாமிகள் பெயரால்தான் நடத்தப்படுகிறது. 

தி.மு.க. ஆட்சியில் 90 ஆயிரம் கோடியாக இருந்த தமிழக கடன் தொகை, இன்று ரூ.4½ லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 110 வது விதியின் கீழ் பல திட்டங்களை ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில் எந்த அறிவிப்பும் செயல்திட்டமாக வடிவம் பெறவில்லை. தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு என்றால், அனைத்திலும் முரண்பட்ட ஜெயலலிதா மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்யும், லஞ்சம் இல்லாத, எளிமையான, திமிர் இல்லாத ஆட்சியை விஜயகாந்த் தருவார். அவர் முதல்வர் பதவியில் அமராமல் ஓயமாட்டார். நாங்கள், 'மக்களுக்காக நான்' என்ற திட்டத்தை தொடங்கியவுடன், தி.மு.க.வில் தமக்குத்தாமே என்ற திட்டத்தை ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.
அ.தி.மு.க.வினர் இப்போதே 64 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கத் தொடங்கிவிட்டனர்.
அனைவரும் வரும் 2016 சட்டப்பேரவை  தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிவிட்டனர். எத்தனை பேர் தேர்தலை சந்தித்தாலும் விஜயகாந்துதான் அடுத்த முதல்வர். அவர் முதல்வர் பதவியில் அமரும் வரை ஓயமாட்டார்" என்றார். 

-சி.ஆனந்தகுமார்

சட்டப்பேரவை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி தரத் தயார்: விஜயகாந்த் அதிரடி!

திருச்சி: "சட்டப்பேரவை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி ஆகும் என்கிறார்கள். நான் அந்த பணத்தை தருகிறேன். நிகழ்வை ஒளிபரப்பச் சொல்லுங்கள். அப்போது சட்டசபைக்கு போக தயாராக உள்ளேன்!" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, 'மக்களுக்காக மக்கள் பணி' என அறிவித்து, அந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக திருச்சி, கரூர் மாவட்டங்களில் நடந்த நிகழ்சிகளில் கலந்து கொண்டார் விஜயகாந்த்.

நேற்றிரவு கரூரை அடுத்த தரகம்பட்டியில் 'மக்களுக்காக மக்கள் பணி' திட்டத்தின் கீழ் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கே.வி.தங்கவேல் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில்,  விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், "சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என கடந்த 2001-ல் நான் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோதே கோரிக்கை விடுத்தேன். அதை இப்போது, ஜெயலலிதா 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்றால், ஓட்டுக்காகவே சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அடுத்து அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வர இந்த விஜயகாந்த் விடமாட்டான்.
 
கரூர் மாவட்டம் புகளூரில் தமிழ்நாடு காகித ஆலை உள்ளது. இதில் 800 பேர் அதிகாரிகள் என்றால் 700 பேர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்த தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். தற்போது உங்கள் ஆட்சியில் அந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தீர்களா?. மக்களுக்கு நான் என்றும் துரோகம் செய்ய மாட்டேன். அதிமுக கூட்டணியில் இருந்தபோது பால் விலை, பேருந்து கட்டணம் உயர்ந்ததை தட்டிக்கேட்டேன். அதை பொறுக்காத ஜெயலலிதா, என் மீது அவதூறுகளை பரப்பினார். இதனால்தான் அந்தக் கூட்டணியில் இருந்து விலக நேரிட்டது.

தி.மு.க. என்று ஒரு கட்சி இருக்கக்கூடாது என அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தேன். மக்கள் தகுந்த பாடம் புகட்டினால் இரண்டு கட்சிகளுமே இல்லாமல் போய் விடும். மக்களுக்கு இலவசமாக பொருட்கள் கொடுப்பதாக ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். இலவசமாக கொடுக்கும் அனைத்தும் பொதுமக்களாகிய உங்கள் பணம்.  எத்தனை இலவசங்கள் அறிவித்தாலும் இனி யாரும் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடமாட்டார்கள். மக்களுக்காக விஜயகாந்த் வாழ்ந்தான் என சரித்திரம் பேச வேண்டும். எந்த இடத்திலும் நான் யாரையும் கண்டு பயப்பட மாட்டேன். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான நானும் இல்லை. தி.மு.க.வும் இல்லை. நான் சட்டசபைக்கு போகவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அங்கு நடப்பது என்ன? ஜெயலலிதாவை புகழும் ஒரு இடமாகவே உள்ளது. அதனால்தான் சட்டசபை நிகழ்வுகளை மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்கிறேன்.

சட்டப்பேரவை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி ஆகும் என்கிறார்கள். நான் அந்த பணத்தை தருகிறேன். நிகழ்வை ஒளிபரப்பச் சொல்லுங்கள். அப்போது நான் சட்டசபைக்கு போக தயாராக உள்ளேன். சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 'விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை' என கூறுகிறார்.  ஆனால் ஜெயலலிதா 3 பேர் மட்டும் தற்கொலை செய்ததாக கூறுகிறார். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், நீங்கள் அனைவரும் உத்தமர்தானா?. மக்களுக்கு துரோகம் செய்யும் யாரையும் விடமாட்டேன்.

இடைத்தேர்தலில், ஜெயிக்கபோவது ஆளுங்கட்சியினர்தான். அதனால்தான் நாங்கள் போட்டியிடவில்லை. இன்னும் 6 மாதத்தில் நடக்கபோகும் தேர்தலில் நீங்கள் டெபாசிட் இழக்க போகிறீர்கள். டெபாசிட் இழக்க வைப்பது இளைஞர்களாகிய உங்களின் கடமை.
என் மீது போடப்படும் வழக்குகளை பற்றி பயப்பட மாட்டேன். தேர்தலின்போது மோடியா? லேடியா என பேசினார்கள். இப்போது மோடி வென்றதும் ஜெயலலிதா ஓடோடி செல்கிறார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போலீஸ் நிலையத்துக்கு செல்வதற்கு முன்பாகவே அவரை தாக்குவதற்காக செருப்பு, முட்டைகளை தயாராக வைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் மிலிட்டரி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்கிறார்கள். அவர்களை தூண்டி விடுவதே ஜெயலலிதாதான். இவர்தான் தமிழகமே மதுஒழிக்க போராடியபோது அந்த போராட்டத்தை திசை திருப்பியவர். மதுவை ஒழிக்கப் போராடிய காந்தியவாதி சசிபெருமாளின் சாவில் மர்மம் உள்ளது. அந்த மர்மத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்றார்.

-சி.ஆனந்தகுமார்
 

செல்பி எடுப்பதால் தலையில் பேன் பரவும் அபாயம் புதிய ஆய்வு

லண்டன்,

கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் 'செல்பி' (Selfie) எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் 'செல்பி' எடுக்கப்படுகிறது.

இன்றைக்கு 'செல்பி' ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே அது ஒரு 'டிஜிடல் புற்று நோய்' போல விரைந்து பரவுகிறது.

ஸ்மார்ட் போன்கள் செல்பி ஆசைக்கு எண்ணை வார்க்கிறது, சமூக வலைத்தளங்கள் அதைப் பற்ற வைக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் கண் சிமிட்டும் தனது செல்பிகளுக்குக் கிடைக்கும் 'லைக்'குகளும், பார்வைகளும் இளசு களை செல்பி எனும் புதை குழிக்குள் தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கின்றன.

அதிகமாக செல்பி எடுக்கும் மனநிலை உளவியல் பாதிப்பு என உறுதிப்படுத்துகிறது அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ. (APA).

'செல்பி' எடுப்பதால் தலையில் 'பேன்'கள் பரவும் அபாயம் இருப்ப தாக குழந்தைகள் நல டாக்டர்கள் தெரிவித்துள் ளனர்.தற்போது உலகம் முழு வதும் 'செல்பி' மோகம் அதி கரித்துள்ளது. எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் செல்போனில் 'செல்பி' எடுத்துக் கொள்கின்றனர். அப்போது டீன்ஏஜ் வயதினர் தங்களது தலைகளை ஒரு வருடன் ஒருவர் சாய்த்து போஸ் கொடுக்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு 'பேன்'கள் பரவுகின்றன. இந்த தகவலை குழந்தைகள் நல டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் இது போன்ற 'பேன்' தொல்லை இருப்பதாக கூறுகின்றனர். எனவே 'செல்பி' எடுக்கும் போது போட்டோவுக்கு 'போஸ்' கொடுப்பவர்கள் தலைகளை ஒட்டி வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் சிறுவர்களை விட சிறுமிகளுக்கே பேன் தொல்லை அதிகம் இருப்ப தாகவும் தெரிவித்துள்ள னர்.

நுழைவுத்தேர்வு வேண்டவே வேண்டாம்

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும், மாணவர் சேர்க்கைக்காக ஒரு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. தொழில் கல்லூரிகளில் அதாவது மருத்துவம், பொறியியல் போன்ற கல்லூரிகளில் மாணவர்கள் பிளஸ்–2 முடித்தவுடன் சேர நுழைவுத்தேர்வு நடத்தும் முறை எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் 1984–ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அரசு தொழில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதைத் தடுக்கும் வகையிலும், அறிவாற்றல்மிக்க மாணவர்களுக்கு தானாக இடம்பெறுவதற்குமான வாசலை இந்த நுழைவுத்தேர்வு திறந்துவிட்டது என்று அப்போது பாராட்டப்பட்டது. ஆனால், நாளடைவில் நகர்ப்புறத்தில் படித்த மாணவர்களால்தான் தொழிற்கல்லூரிகளில் சேரமுடியும், ஏழை கிராமப்புற மாணவர்கள் நுழைவுத்தேர்வு முறையால் சேரமுடியவில்லை என்ற மனக்குறை பெரிய அளவில் கிளம்பியதால், 2007–ல் இந்த நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது. ஆனால், மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடக்கமுடியாதபடி பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண்களுக்கு ‘கட் ஆப்’ முறை வந்தது. இப்போது தமிழ்நாட்டிலும், அரியானாவிலும் நுழைவுத்தேர்வு இல்லை. பிளஸ்–2 தேர்வில் பெற்ற ‘கட் ஆப்’ மார்க்குகளின் அடிப்படையில்தான் தொழில் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.

ஆனால், மற்ற மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் ஒவ்வொரு வகையான என்ஜினீயரிங் கல்லூரிக்கும் தனித்தனி நுழைவுத்தேர்வு எழுதும் நிலை இருக்கிறது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் 8 லட்சம் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்க்கை பெற ஒவ்வொருவரும் பல நுழைவுத்தேர்வுகள் எழுத விண்ணப்பங்கள் வாங்கவேண்டியது இருக்கிறது. ஒரு விண்ணப்பத்தின் விலை சராசரியாக 500 ரூபாய் இருக்கும் நிலையில், ஏழை மாணவர்களுக்கு நிச்சயமாக இது பெரும் பொருட்செலவுதான். நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களுக்காக மட்டும் மாணவர்கள் ஆண்டுதோறும் 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கும் ஒரே நுழைவுத்தேர்வை நடத்தும் அறிவிப்பை வெளியிட, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இதை மத்திய அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு இது பொருந்தினாலும், தமிழ்நாட்டுக்கு சரிவராது. நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி நிலையங்கள் புற்றீசல்போல தொடங்கப்பட்டுவிடும். நகர்ப்புற மாணவர்களும், வசதி படைத்தவர்களும் மட்டுமே அதில் சேர்ந்து படித்து என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பை பெறுவார்களே தவிர, கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை–எளிய மாணவர்களுக்கும் இப்போதைய சமூகநீதி நிச்சயமாக மறுக்கப்பட்டுவிடும். மேலும், பிளஸ்–2 தேர்வுக்கே இரவு–பகலாக கஷ்டப்பட்டு படித்த மாணவர்கள், உடனடியாக இந்த நுழைவுத்தேர்வுக்கும் படிக்கும் நிலை ஏற்பட்டால், அவர்களுக்கும் ஒரு சலிப்பு, வீணான சிரமம்தான் ஏற்படும். இப்போதே கிராமப்புறங்களில் இருந்தும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களின் ‘கட் ஆப்’ மார்க்குகள் குறைவாக இருப்பதால் அதை மேம்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்துவரும் சூழ்நிலையில், திடீரென நுழைவுத்தேர்வு வந்தால் இவ்வளவு நாளும் மேற்கொண்ட முயற்சிகள் மணல் கோட்டைபோல சரிந்துவிடும். மேலும், கல்வி பொது பட்டியலில் இருக்கும் நிலையில், மத்திய அரசாங்கம் இந்த முடிவை எடுத்தால் அது மாநில உரிமைகளை பறிப்பது போலாகிவிடும். எனவே, தமிழக அரசின் கல்வித்துறையும், கல்வியாளர்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, நுழைவுத்தேர்வு மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Friday, August 28, 2015

விண்ணைத்தாண்டும் வெங்காய விலை

பொதுவாக சமையல் அறையில் வெங்காயத்தை உரிக்கும்போதுதான் இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆனால், இப்போது வெங்காயத்தின் விலை விண்ணைத்தொட்டதோடு மட்டுமல்லாமல், விண்ணைத்தாண்டியும் செல்வதால் இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்லாமல், குடும்ப தலைவர்களுக்கும் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடுகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்பு இருந்த விலையைவிட, நான்கு மடங்கு விலை உயர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் கூட சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலையும், பெரிய வெங்காயத்தின் விலையும் தினமும் உயர்ந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெங்காய விலை உயரும்போதெல்லாம், நிச்சயமாக நிரந்தர தீர்வுவேண்டும் என்றும், அந்த இலக்கை நோக்கி திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் பெரிதாக பேசப்படும். ஆனால், நிலைமை சரியானவுடன் இந்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றிலே கலந்த கீதங்களாகிவிடும்.

இவ்வளவுக்கும் வெங்காயத்தாலேயே மத்தியிலும், டெல்லியிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட வரலாறுகள் எல்லோருக்கும் தெரியும். 1980–ல் நாடு முழுவதும் அபரிமிதமான வெங்காய விலை உயர்வால், மத்தியில் ஜனதா அரசாங்கம் கீழே இறக்கப்படுவதற்கும், 1998–ல் டெல்லியில் பா.ஜ.க. அரசாங்கம் தோல்வியை சந்தித்து, ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கும் வெங்காயம்தான் காரணம். இவ்வளவுக்கும் உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் வெங்காயம் அதிக விளைச்சலை காண்கிறது. இந்தியாவில் அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், மராட்டிய மாநிலத்தில்தான் அதிகபட்சமாக ஆண்டுக்கு 46 லட்சத்து 60 ஆயிரம் டன் விளைகிறது. இந்த 11 மாநிலங்களில், தமிழ்நாட்டில்தான் வெங்காய விளைச்சல் குறைவு. பெரும்பாலும் சின்ன வெங்காயமே சாகுபடி செய்யப்படும் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 4 லட்சத்து 29 ஆயிரத்து 720 டன்கள்தான் விளைகிறது. இவ்வளவுக்கும் வெங்காயம் ஒரு குறுகியகால சாகுபடி பயிர் ஆகும். எல்லா இடங்களிலும் தாராளமாக சாகுபடி செய்யமுடியும். இந்த ஆண்டு வெங்காய தட்டுப்பாட்டுக்கு சில இடங்களில் சீசன் இல்லாத நேரங்களில் பெய்த பெரு மழையையும், சில இடங்களில் மழை தட்டுப்பாட்டையும் காரணமாக கூறுகிறார்கள்.

தற்போது வெங்காய ஏற்றுமதியை தடுப்பதற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ரூ.425–ல் இருந்து, ரூ.700 ஆக உயர்த்தியிருக்கும் மத்திய அரசாங்கம், இறக்குமதியில் இன்னும் அதிக கவனம் செலுத்தவேண்டும். உடனடியாக லட்சக்கணக்கான டன்கள் வெங்காய தேவை இருக்கும் நிலையில், 10 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்விடப்பட்டு, இன்னும் முடிவாகவில்லை. அரசு உடனடியாக தானோ, அல்லது தனியார் மூலமாகவோ, பாகிஸ்தான், சீனா, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் தடுக்க வெங்காய சாகுபடி பரப்பை உயர்த்தவும், சிறு விவசாயிகள் வெங்காயத்தை சேமித்து வைக்க குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன கிட்டங்கி வசதிகளை ஏற்படுத்தவும், மத்திய–மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வெங்காயத்தை பதுக்கி வைத்தால் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்ற உணர்வில் இப்போதும் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி, அந்த வெங்காயத்தை எல்லாம் வெளியே விற்பனைக்கு கொண்டுவரவேண்டும். பொதுவினியோக கடைகள் மூலம் மாநில அரசுகளே வெங்காயத்தை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Thursday, August 27, 2015

வேளாங்கண்ணி திருவிழா :ஓட்டை, உடைசல் பஸ்கள் ஓரம் கட்டப்படுமா?

வேளாங்கண்ணி திருவிழாவுக்காக இயக்கப்படும் பஸ்கள், மோசமான நிலையில் இருப்பதால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு, ஒரு வாரமாக வேளாங்கண்ணிக்கு பஸ்சில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் முன்பதிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னையில் இருந்து, 30 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பிற பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆனால், அந்த பஸ்கள், பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. கடந்த, 21ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, சென்னை, கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யம் சென்ற அரசு விரைவு பஸ்சில், பெரும்பாலான ஜன்னல் கண்ணாடிகளை திறக்க முடியவில்லை. மேற்கூரையில் ஓட்டை இருந்ததால், பஸ்சுக்குள் மழைநீர் கொட்டியது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். தரங்கம்பாடி அருகே, அந்த பஸ்சின் டயர் பஞ்சர் ஆகி விட்டது. இதனால், மாற்று பஸ்சில், பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனர்.
இதுபோல், வேளாங்கண்ணிக்கு விடப்பட்டுள்ள சிறப்பு பஸ்கள் எல்லாமே மிகமோசமாக உள்ளது என, பயணிகள் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

- நமது நிருபர் -

இன்றைய இன்றியமையாத் தேவை!

இன்று மருத்துவச் செலவு என்பது, தனி ஆலோசனைக்காக மருத்துவரிடம் நேரிடையாகக் கொடுக்கும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.100 முதல் ரூ.200 தவிர்த்து, அவர்கள் எழுதிக் கொடுக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, பயாப்ஸி போன்ற சோதனைகளுக்கும், மெய்யான நோய் தெரியும் முன்பாகவே சாப்பிட்டாக வேண்டிய மருந்து, மாத்திரைகளுக்கும் ரூ.1,500 வரை செலவாகிறது. "ஒரு நோயாளியை வைத்து எல்லாரும் பிழைக்கிறார்கள்; நோயாளியைத் தவிர!'- என்கிற கவிப் புலம்பல்தான் இன்றைய சூழல்.
நடுத்தர வருவாய்ப் பிரிவினரைத் திணறடித்து, சேமிப்பைக் கரைக்கும் இத்தகைய "பரிசோதனை'க் காலத்தில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 4 மருத்துவத் திட்டங்களும் இன்றைய இன்றியமையாத் தேவை.
அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா ஆரோக்கியத் திட்டம் ஆகியன பெண்களுக்கு வரப்பிரசாதம் போன்றவை. இத்திட்டத்தில் இடம்பெறும் தைராய்டு, கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை, மார்பகப் பரிசோதனை, எலும்புத் திறன் அறிதல் ஆகியவை அனைத்துப் பெண்களும், குறிப்பாக மாதவிடாய் நின்றுபோன அனைத்துப் பெண்களும் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்.
கணவர்களின் புறக்கணிப்பாலும், விழிப்புணர்வு இல்லாததாலும், தனியார் மருத்துவமனைகளில் மேற்சொன்ன ஒவ்வொரு பரிசோதனைக்கும் ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் என்பதால் அந்தப் பணத்துக்கு வழியில்லாமலும்தான் பெண்கள் இந்த அடிப்படையான சோதனைகளை செய்து கொள்ளாமல் துன்பத்தை மெüனமாகத் தாங்கிக் கொள்கின்றனர். மற்ற மருத்துவத் திட்டங்களைக் காட்டிலும், மகளிர் முழுஉடல் பரிசோதனைத் திட்டத்துக்கு அதிகபட்சமான அக்கறை கொள்ள வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது.
கர்ப்பிணிகளுக்கான அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டத்தில் சித்த மருத்துவப் பொருள்கள், லேகியம் வழங்கப்பட இருப்பதும் மிகவும் பயனுள்ள, கர்ப்பிணிகளுக்கு உடல்வலு சேர்க்கும் திட்டம்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் மிகக் குறைந்த கட்டணத்தில் தற்போது நடைமுறையில் இருந்தாலும்கூட, அதில் இடம்பெறும் பரிசோதனைகள் மிகச் சிலவே. தற்போது முதல்வர் அறிவித்துள்ள அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தில் எட்டுக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் இடம் பெறுவதோடு, ரத்தத்தில் சர்க்கரையின் மூன்று மாத அளவைக் கணக்கீடு செய்யும் எச்பிஏ1சி பரிசோதனையும் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
385 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரம் இருநாள்கள் இலவச ரத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, சிறுநீர், ரத்தக் கொழுப்பு பரிசோதனை நடத்தப்படும் என்ற அறிவிப்பும் ஊரக மக்களுக்குப் பயன் தருபவை.
இவ்வளவு நல்ல திட்டங்களை முதல்வர் அறிவித்தாலும், இத்தகைய திட்டங்கள் தங்களுக்கு கூடுதல் பணிச்சுமை என்று அறிக்கை விடுவதுதான் அரசு மருத்துவமனை ஊழியர்களின் முதல் எதிர் வினையாக இருக்கும். அடுத்ததாக, இந்த சோதனைகளுக்காக வருவோரை அலைக்கழித்து, இயந்திரம் பழுது என்று பல முறை திருப்பி அனுப்பி, அரசு மருத்துவமனையின் மீது வெறுப்பும் நம்பிக்கை இழப்பும் ஏற்படுத்துவது ஒருசில பொறுப்பில்லாத ஊழியர்களின் வாடிக்கை.
தனியார் மருத்துவமனைகளையும், பரிசோதனைக் கூடங்களையும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் நாடுவதன் காரணம் அவர்களிடம் செலவழிக்கும் சக்தி இருக்கிறது என்பதால் அல்ல, அரசு மருத்துவமனைகளில் இத்தகைய அலைக்கழிப்புகளைத் தவிர்க்கத்தான், வயிறு எரிய, சாபங்களுடன் தனியாரிடம் பணத்தைக் கொடுக்கிறார்கள்.
பல ஊர்களில், கட்டணம் பெறும் தனியார் ரத்தப் பரிசோதனை நிலையங்கள் இந்த ரத்த மாதிரிகளை அரசு மருத்துவமனையில் உள்ள நண்பர் அல்லது ரத்த உறவுகளிடம் கொடுத்து பரிசோதனை முடிவுகளை மட்டும் செல்லிடப்பேசியில் வாங்கி, தங்கள் நிறுவன ரசீதில் எழுதித் தருகிற முறைகேடுகள் நடப்பதாக பரவலாக குற்றச்சாட்டு நிலவுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்று கண்டறிந்து தடுப்பது அரசின் கடமை.
இவ்வளவுக்குப் பிறகும் அரசு மருத்துவமனைகளின் சேவை மக்களுக்கு கிடைப்பதன் காரணம் சில அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இருப்பதுதான். மிக அரிய சிகிச்சைகள் குறித்த பேட்டிகளும், நோயாளிகளின் மனம் நெகிழ்ந்த நன்றிகளும் செய்திகளாக வந்துகொண்டுதான் இருக்கின்றன. அரசின் கண்டிப்பும், கூடுதல் கண்காணிப்பும் இருந்தால் இன்னும் சிறப்பான சேவை, அரசு மருத்துவமனைகளில் சாத்தியமாகும்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வருவோரில் விபத்தில் காயமடைவோர்தான் அதிகமாக இருக்கிறார்கள். விபத்து நடந்த சில நிமிடங்களில் அவசர உதவி வாகனம் வந்துவிடுகிறது என்றாலும், அவை அடிபட்டவரைக் கொண்டு சேர்க்கும் இடம் 90% தனியார் மருத்துவமனையாகவே இருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்த பிறகு கேட்கும் மிகப் பெருந்தொகை, விபத்தில் பிழைத்த நோயாளியை நடைப்பிணமாக்கிவிடுகிறது.
விபத்தில் காயமடையும் அனைவருக்கும் காப்பீடு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இருப்பினும் அத்தகைய திட்டத்தை தமிழக அரசே அறிவித்து முன்னோடி மாநிலமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான சந்தா தொகையை வாகன விற்பனை, வாகன ஓட்டுநர் உரிமக் கட்டணம் ஆகியவற்றில் சேர்த்து வசூலிக்கவும், இந்த வரையறைக்குள் வராதவர்களுக்கு அரசே சந்தா தொகையை செலுத்தவுமான ஒரு திட்டத்தையும் முதல்வர் பரிசீலிக்கலாம்.

கற்பழிப்பு முயற்சியில் பெண் டாக்டர் கொல்லப்பட்டார் போலீசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில் நடந்த பெண் டாக்டர் கொலை வழக்கில் போலீசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர்.கற்பழிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கணவர் சந்தேகம்

சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்த டாக்டர் சத்யா கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.கடந்த 20-ந் தேதி அன்று இந்த படுகொலைச்சம்பவம் நடந்தது.சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலை,கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அறையில் டாக்டர் சத்யா தங்கி இருந்தார்.அவர் தங்கி இருந்த அறையில் இந்த படுகொலைச்சம்பவம் நடந்தது.

இந்த படுகொலை வழக்கில் கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.டாக்டர் சத்யா கொலை செய்யப்பட்ட அறைக்கு பக்கத்து அறையில் தங்கி இருந்த என்ஜினீயர் அரிந்தம் தேப்நாத்(வயது 22) இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அரிந்தம் தேப்நாத் திரிபுரா மாநிலம் அகர்தலாவைச் சேர்ந்தவர்.டாக்டர் சத்யாவை கொலை செய்து விட்டு,அவரது செல்போனை,என்ஜினீயர் அரிந்தம் தேப்நாத் எடுத்துச் சென்று விட்டார்.செல்போனுக்காக கொலை நடந்தது போன்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால் டாக்டர் சத்யாவின் கணவர் டாக்டர் ஜேசு, செல்போனுக்காக கொலை நடந்தது என்று சொல்வதை நம்ப முடியவில்லை என்றும்,கொலைக்கு வேறு பின்னணி இருக்க வேண்டும் என்றும்,பின்னணியில் இருப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்றும்,பரபரப்பு பேட்டி கொடுத்தார்.இது தொடர்பான புகார் மனு ஒன்றையும்,சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு அனுப்பி வைத்தார்.

உயர் அதிகாரி பதில்

டாக்டர் சத்யாவின் கணவர் எழுப்பி உள்ள சந்தேகங்களுக்கு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று பதில் அளித்தார்.அத்தோடு டாக்டர் சத்யாவின் கொலை வழக்கில் வெளி வராத அதிர்ச்சி தகவல் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.அவர் கூறியதாவது:-

டாக்டர் சத்யாவின் கணவர் புகாராக தெரிவித்துள்ள சந்தேகங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.இந்த வழக்கில் வேறு பின்னணி நபர்கள் யாரும் இல்லை.என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத் தான் கொலையாளி.அதற்கான முழு ஆதாரங்கள் விசாரணையில் கிடைத்துள்ளது.

கொள்ளை அடிக்கப்பட்ட டாக்டர் சத்யாவின் செல்போனை,என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத்,மதுரவாயல் செல்போன் கடையில் விற்றுள்ளார்.செல்போனை விற்கும் போது,அரிந்தம் தேப்நாத்தை,செல்போன் கடைக்காரர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

செல்போனில் படம் எடுக்கப்பட்ட தேதி,நேரம் எல்லாம் செல்போனில் பதிவாகி உள்ளது.கொலை நடந்த 20-ந் தேதி அன்று பகல் 12.30 மணிக்கு செல்போன் படம் எடுக்கப்பட்டுள்ளது.அதாவது அன்றைய தினம் காலையில் சத்யா கொலை செய்யப்படுகிறார்.செல்போன் பகலில் விற்கப்படுகிறது.விற்றவர் கொலையாளி அரிந்தம் தேப்நாத். விற்கப்பட்ட செல்போன் மீட்கப்பட்டுள்ளது.இது முக்கிய தடயம்.

சாவி சிக்கியது

அடுத்து டாக்டர் சத்யாவை கொலை செய்து விட்டு,என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத் அறைக்கதவை வெளியில் பூட்டி விட்டு செல்கிறார்.அந்த சாவியை அரிந்தம்தேப்நாத்திடம் இருந்து கைப்பற்றி உள்ளோம்.

இன்னொரு முக்கிய சந்தேகத்தை டாக்டர் ஜேசு கிளப்பி உள்ளார்.டாக்டர் சத்யாவின் கழுத்து கச்சிதமாக ரத்த நரம்பை பார்த்து அறுக்கப்பட்டுள்ளது.இது கைதேர்ந்த டாக்டர் ஒருவர் சொல்லிக்கொடுத்துதான் செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஒருவர் கொலைக்கு பின்னணியில் இருக்க வேண்டும் என்பது அவரது வாதம்.

அவர் தெரிவித்த சந்தேகம்,டாக்டர் சத்யா மெரிட் அடிப்படையில் மேற்படிப்புக்கு தேர்வாகி உள்ளார்.மேற்படிப்பு சீட்டு ரூ.2 கோடி வரை விற்கப்படுகிறது.எனவே பணத்துக்கு ஆசைப்பட்டு டாக்டர் சத்யா கொலை செய்யப்பட்டுள்ளார்.அவர் கொலை செய்யப்பட்டு விட்டதால்,அவரது மேற்படிப்பு இடம் காலியாகி விட்டது.

அந்த இடத்தில் ரூ.2 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு இன்னொரு நபரை நியமிக்க இந்த கொலை நடந்திருக்க வேண்டும்,என்பது டாக்டர் ஜேசுவின் குற்றச்சாட்டு.

மேற்படிப்பில் சேர்வதற்கான காலக்கெடு கடந்த ஜூன் மாதத்தோடு முடிவடைந்து விட்டது.இனிமேல் டாக்டர் சத்யாவின் காலி இடத்தில் வேறு யாரையும் நியமிக்க முடியாது.எனவே அந்த பின்னணியில் இந்த கொலை நடக்கவில்லை.

கழுத்தில் 4 இடங்களில் குத்து

மேலும் ரத்தம் ஓடும் நரம்பை பார்த்து சத்யாவின் கழுத்தில் கத்திக்குத்து விழுந்துள்ளது என்று,டாக்டர் ஜேசு கூறியுள்ளதும் தவறு.சத்யாவின் கழுத்தில்

தாறுமாறாக 4 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது.ரத்த நரம்பை குறிபார்த்து குத்தவில்லை.

முழுக்க,முழுக்க இந்த வழக்கில் என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத் ஒருவர்தான் குற்றவாளி.கொலை செல்போனுக்காக நடந்தது என்று சொல்வதை நம்ப முடியவில்லை,என்று டாக்டர் ஜேசு சொல்லி இருக்கிறார்.

அது உண்மைதான்.செல்போனுக்காக மட்டும் கொலை நடக்க வில்லை. டாக்டர் சத்யா ஒரு ஒழுக்கமான நல்ல பெண்மணி என்பதால்,சில தகவல்களை நாங்கள் வெளியிட வில்லை.தற்போது அதை வெளியிட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

கற்பழிக்க முயற்சி

என்ஜினீயர் அரிந்தம் தேப்நாத் பெண்சுகத்துக்காக அலைகிறார்.மேலும் அவருக்கு பணத்தேவையும் உள்ளது.தனது சுகத்துக்கும்,பணத்தேவைக்கும் டாக்டர் சத்யாவை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகிறார்.

அதற்காக சத்யாவுக்கு வலை விரிக்கிறார்.அவர் விரித்த விலையில் சத்யா விழவில்லை.சத்யாவிடம் பணம் கறக்கலாம் என்று ரூ.2 ஆயிரம் கேட்கிறார்.சத்யா பணம் கொடுக்கவில்லை.

இதனால் அடுத்த கட்டமாக தனியாக அறையில் இருக்கும் சத்யாவிடம் வலுக்கட்டாயமாக சுகத்தை அனுபவிக்க திட்டமிடுகிறார்.அதிலும் தோல்வி.இதனால் அநியாயமாக சத்யா கொலை செய்யப்படுகிறார்.சத்யாவின் தனிமை,கொலையாளியின் காம வெறி இவை சேர்ந்து ஒரு உயிரை பறித்து விட்டது.

காவலில் எடுத்து விசாரணை

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உண்மை.இதை கொலையாளி வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.கொலையாளியை மேலும் சில நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம்.

அப்போது இந்த கொலைக்கு மேலும் சில ஆதாரங்களை திரட்ட இருக்கிறோம்.அடுத்த கட்டமாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.குற்றவாளிக்கு கோர்ட்டில் உரிய தண்டனை பெற்று தரப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதுதான் உண்மையான ‘ராக்கி பரிசு’

‘மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள், அண்ணன் வாழவைப்பான் என்றே அமைதிகொண்டாள்’’ என்ற திரைப்பாடல், தமிழ்நாட்டிலும், இதுபோன்ற பலமொழிகளில் இருக்கும் பாடல்கள், அந்தந்த மொழிகளைப்பேசும் மக்களுக்கும், சகோதர, சகோதரி உறவுகள், அதாவது அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகளின் மேன்மையை உணர்ச்சிபூர்வமாக நெஞ்சைத் தொடவைக்கின்றன. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகும் முன்பும் சரி, அவளுக்கு திருமணம், அவள் குழந்தைகளுக்கு திருமணம் என்று அனைத்து சமூக சடங்குகளிலும் அண்ணன்–தம்பியின் பங்கு முக்கியமாக இருக்கும். இதுதான் இந்தியாவின் சிறப்பு. ஆண்டுதோறும் ‘ரக்ஷா பந்தன்’ நாளில் கூடப்பிறந்தவர்கள் மட்டுமல்லாமல், ஒரு பெண்ணை சகோதரியாக நினைக்கும் ஆணுக்கும், அதுபோல தன் உடன்பிறந்த சகோதரர்களாக இல்லையென்றாலும், கூடப்பிறக்காத சகோதரராகவே ஒரு ஆணை நினைக்கும் பெண்ணுக்கும் இந்தநாள் தங்கள் பாசப்பிணைப்பை பறைசாற்றும் நன்னாள்.

இந்தநாள் இந்தியாவில் வடநாடுகளில் ஆதிகாலம் முதலே இருந்திருக்கிறது என்பதற்கு சரித்திர சான்றுகள் இருக்கின்றன. இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதர பாசத்தை உறுதிப்படுத்தும் வகையில், சகோதரர்கள், சகோதரர்களாக கருதுபவர்களின் மணிக்கட்டில் ‘ராக்கி கயிறு’ கட்டுவதும், அந்த சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுகள் அளித்து மகிழ்வதும் மரபு. ரஜபுத்திர, மராட்டிய ராணிகள் கூட முகலாய மன்னர்களுக்கு ‘ராக்கி கயிறு’ அனுப்பியதாக கூறப்படுகின்றன. இதுபோல, சித்தூரில் ஆட்சிபுரிந்த ராணியான கணவரை இழந்த பெண் கர்னாவதி, தன் நாட்டை குஜராத் சுல்தான் பகதூர் ஷா படையெடுத்து தாக்கிய நேரத்தில், முகலாய சக்கரவர்த்தி ஹுமாயூனுக்கு ராக்கி கயிறு அனுப்பியதால், மனம் நெகிழ்ந்த ஹுமாயூன் அவருக்கு உதவ தன் படையோடு ஓடோடி வந்தார் என்றும் சரித்திரம் கூறுகிறது.

இந்த ஆண்டு இந்த ரக்ஷா பந்தன் தினம் நாளை மறுநாள் 29–ந் தேதி வருகிறது. இந்த நாளில் அனைவரும் தங்கள் சகோதரிகளுக்கு கொடுக்கும் சிறந்த ராக்கி பரிசு, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டு திட்டங்களில் அவர்களை சேர்ப்பதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராக்கி சகோதரிகள் பட்டியலில் வீடுகளில், வயல்களில் வேலைபார்க்கும் பெண்களையும் சேர்த்துக்கொள்ள கூறியிருக்கிறார். நாட்டில் உள்ள அனைத்து சகோதரிகளும் இந்த திட்டத்தின் பயனை பெறும்வகையில் இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார். ஒரு சகோதரி அதாவது, மம்தா பானர்ஜி முதல்–மந்திரியாக இருக்கும் மேற்குவங்காளத்தில்தான், பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டும் பிரிமியம் கட்டி ரூ.2 லட்சம் பெறும் விபத்து காப்பீடு, ஆண்டு பிரிமியம் ரூ.330 ரூபாயில் ஆயுள் காப்பீடு ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்த ரக்ஷா பந்தன் அன்று சகோதரிகளுக்கு ராக்கி பரிசாக இந்த திட்டங்களில் அவர்களைச் சேர்த்துவிடுங்கள் என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். வேறு இனிப்புகளோ, மலர்களோ கொடுத்தால் அந்த ஒரு நாள்தான் பலனளிக்கும். அதற்கு பதிலாக, இந்த திட்டங்களில் சேர்த்துவிடுவது ஒரு சமூக பாதுகாப்பை அளிக்கும். வடஇந்தியாவில் மட்டுமல்லாமல், சகோதர பாசத்தை மென்மேலும் வளர்க்கும் இந்த ராக்கி கயிறு கட்டும் நாள், இப்போது தென்இந்தியாவிலும் உள்ளே நுழைந்துவிட்டது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டினாலும், கட்டாவிட்டாலும் சகோதரர்கள் அளிக்கும் அன்பு பரிசாக பிரதமர் கூறியபடி, இந்த திட்டங்களையே சகோதரிகளுக்கு அளிக்கலாமே!

Wednesday, August 26, 2015

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

சென்னை: மக்களை வாட்டி வதைக்கும் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இப்போது 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. கடுமையான வறட்சி காரணமாக கர்நாடகம் மற்றும் மராட்டியத்தில் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து விட்டது தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் வெங்காயத்தின் விலை உயர்வைப் பயன்படுத்திக் கொள்வதற்காக சிலர் வெங்காயத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை. அதேபோல் அதிரடி ஆய்வு மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை வெளிக்கொண்டு வருவதற்கு தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல், பருப்பு விலையை கட்டுப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இவற்றின் விலை உயர்வுக்கும் போதிய விளைச்சலின்மை மற்றும் பதுக்கல் தான் முக்கியக் காரணம் ஆகும்.

ஆன்லைன் வணிகத்தை பயன்படுத்தி வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை பதுக்கி வைத்து செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாட்டை தடுக்க மாநில அரசால் முடியும். ஆனால், ஏனோ பதுக்கல் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு தயாராக இல்லை. வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது, அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்வது தான் பொது வழங்கல் திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், இவ்விஷயத்தில் தமிழகத்தின் பொதுவழங்கல் துறை முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டது. காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்வதற்காகத் தான் பண்ணை பசுமைக் கடைகள் திறக்கப்பட்டன. அங்கு வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் போதிலும், அது பெயருக்காக மிகக்குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை; வெளிச்சந்தையில் எந்தவித சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

தமிழகஅரசின் இத்தகைய போக்கால் வெங்காயம் பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் போய்விடும்.

எனவே, வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்வதன் மூலமும், பதுக்கலைத் தடுப்பதன் மூலமும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பிளிப்கார்ட், இணையத்தில் ஷாப்பிங் செய்யும் போது, நண்பர்களுடன் சாட்டிங் மூலம் கலந்துரையாடி பொருட்களை வாங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது

மின்வணிக நிறுவனமான பிளிப்கார்ட்,  இணையத்தில் ஷாப்பிங் செய்யும் போது, நண்பர்களுடன் சாட்டிங் மூலம் கலந்துரையாடி பொருட்களை வாங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பிளிப்கார்ட் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி மூலம், வாங்க இருக்கும் பொருட்கள் தொடர்பான ஆலோசனையையும் பெறலாம்.

ஸ்மார்ட்போன் மூலம் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வரும் நிலையில்,  முன்னணி மின்வணிக நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் தனது செயலி வடிவில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் தனது செயலியில், பிங் எனும் பெயரில் புதிய சாட்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேசிஜிங் சேவை போன்ற இந்த வசதி மூலம், வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் செயலியில் ஷாப்பிங் செய்யும்போது, நண்பர்களை தொடர்பு கொண்டு சாட் செய்யலாம்.
பிளிப்கார்ட் செயலியின் ஓரத்தில் இந்த பிங் சாட் ஐகான் வசதியை காணலாம். அதை இயக்கினால் போன் தொடர்பில் உள்ள நண்பர்களுடன் சாட் செய்ய முடியும். வாங்க நினைக்கும் பொருட்களின் புகைப்படம் அல்லது பட்டியலை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். ஷாப்பிங் பக்கத்தையும் அப்படியே அனுப்பு வைத்து ஆலோசனை கேட்கலாம். இருவரும் இணைந்தும் கூட ஷாப்பிங் செய்யலாம். இமோஜிகளையும் அனுப்பி வைக்கலாம்.
இணைய அல்லது மொபைல் ஷாப்பிங் வசதியானதாகவும், பிரபலமானதாகவும் இருந்தாலும், இது தனிமையான அனுபவமாகவே அமைகிறது. நேரில் ஷாப்பிங் செய்வது போல நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் குழுவாக சென்று ஷாப்பிங் செய்வது போன்ற அனுபவத்தை மின் வணிகத்தில் பெற முடிவதில்லை.

இதை ஈடு செய்யும் வகையில், செயலி மூலம் நண்பர்களுடன் கலந்துரையாடியபடி ஷாப்பிங் செய்யக்கூடிய வ்சதியை பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாட் வசதி, அழைப்பின் பேரில் கிடைக்கிறது. அதாவது யாரிடமிருந்தாவது இந்த சேவையை பயன்படுத்த அழைப்பு வந்த பிறகுதான் இதை பயன்படுத்த முடியும். விரும்பினால் பிளிப்கார்ட் செயலியில் இதற்கான அழைப்பை கோரும் வசதியும் இருக்கிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் இந்த வசதி செயல்படுகிறது. 

- சைபர் சிம்மன்

தடைகளை தாண்டிய இளங்கோவனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு!

பிரதமர் மோடி - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து 
தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்தார்.  அதிமுக தொண்டர்கள் இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
இளங்கோவன் மீது கைது நடவடிக்கை பாயும் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளங்கோவனுக்கு எதிராக போராட வேண்டாமென்று கோரிக்கை விடுத்து, அதிமுகவினரின் போராட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைத்தார். 

இதையடுத்து டெல்லியில் இருந்து இளங்கோவன் இன்று காலை சென்னை திரும்பினார். வரம்பு மீறி பேசியுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்து குறித்து விமான நிலையத்தில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சிறுவர்களுக்கு எல்லாம் நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்றார். பின்னர் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனுக்கு  அவர் வருகை தந்தார். 

இளங்கோவன்  சத்தியமூர்த்தி பவன் வருவதையடுத்து காலை முதலே அங்கு பரபரப்பு நிலவியது. காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர். சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த இளங்கோவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண் தொண்டர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். 

Tuesday, August 25, 2015

பிஞ்சுகள் மீது வன்முறை By எஸ். ஸ்ரீதுரை



கேட்கச் சகிக்காத ஓசையும், பார்க்கச் சகிக்காத காட்சியும் எது என்று யாராவது கேட்டால் இப்படி பதில் சொல்லலாம் - குழந்தையின் பிஞ்சு மேனியில் விழுகின்ற அடிச் சப்தமும், அதைத் தொடர்ந்து அந்தக் குழந்தை மலங்க மலங்க விழித்து அழத் தொடங்கும் காட்சியும் என்று.
மக்களில் பலருடைய கோபதாபங்களுக்கும் வடிகால்களாக இருப்பவை குழந்தைகள்தான் என்றால், அது மிகைக் கூற்றாகாது.
சாப்பாடு சரியில்லாதது, எதிர்பாராத நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவது, பிடிக்க வேண்டிய பேருந்தையோ, ரயில் வண்டியையோ தவற விடுவது, பிடித்த தொலைக்காட்சித் தொடரைப் பார்க்க முடியாமல் போவது என்று காரணம் எதுவானாலும் சரி, திட்டுகளையும், அடிகளையும் வாங்குவது அவரவர் வீட்டுக் குழந்தைகள்தான் என்றாகி விட்டது.
ஒரு தனியார் மருத்துவமனையில் கண்ட காட்சி இது. குறும்புத்தனத்துடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு மூன்று வயதுக் குழந்தை மருத்துவர் அறைக்கு வெளியே விடப்பட்டிருந்த காலணிக்குள் தனது கால்களை ஆர்வத்துடன் நுழைத்துப் பார்த்தது.
அடுத்த நொடி, குழந்தையின் முதுகில் அதன் தந்தை ஓர் அறை விட, வலி தாங்காமல் அந்தக் குழந்தை அழுது துடிக்க, சுற்றி இருந்த அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அடுத்தவர் காலணியை அணிந்து கொள்வது சரியில்லை என்று சொல்லிக் கொடுக்கக்கூடப் பொறுமையில்லாத தகப்பனின் ஆத்திரம் அந்தக் குழந்தையின் முதுகைப் பழுக்க வைத்து விட்டது.
மருத்துவமனைதான் என்றில்லை, பேருந்து, ரயில் பயணம், திருக்கோயில்களின் கூட்ட நெரிசல், ரேஷன் கடை அலைக்கழிப்புகள், உறவு வீட்டு நிகழ்வுகள் போன்ற பல சந்தர்ப்பங்களிலும் பெற்றோர்களின் மனக் குமுறல்களுக்கான வடிகால்களாக அமைவது குழந்தைகள்தான்.
பெற்றோர்கள் எதிர்பார்ப்புக்கேற்ப படிக்க வேண்டும், நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும், விளையாடாமல் இருக்க வேண்டும், சொல்லும் வேலைகளைச் செய்ய வேண்டும், இவற்றைச் செய்யத் தவறினால் அடி உதைகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இன்றும் பல குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இருக்கத்தான் செய்கின்றன.
டெஸ்டுல தொண்ணூறு மார்க்குக்கு குறைந்தால் பயலே பின்னி எடுத்துடுவேன் என்று மீசை முறுக்கும் தகப்பன்களையும், என் பெண்ணை இன்னும் கொஞ்ச நேரம் டியூஷன்ல உக்கார வெச்சுக் கையை ஒடிங்க டீச்சர் என்று கான்வென்ட் ஆசிரியையிடம் கோரிக்கை வைக்கும் தாய்மார்களையும் தெருவுக்குத் தெரு பார்க்கத்தான் செய்கிறோம்.
இப்படிப்பட்ட பெற்றோர்களுக்காகவே சில காலம் கடந்த சொலவடைகள் தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொண்டு நடமாடுகின்றன.
"அடியாத மாடு படியாது, அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்' என்பனவற்றைக் கூறியே குழந்தைகளின் மீதான பெற்றோரின் வன்முறைக்கு இங்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது.
மதிப்பெண் என்ற ஒற்றை மந்திரச் சொல்லை வெற்றி கொள்வதற்காக நமது கல்விச் சாலைகளில் வதைபடும் சிறுவர்களின் நிலை சொல்லி முடியாதது.
மாணவர்களை உடல்ரீதியாகத் தண்டிக்கக் கூடாது என்ற வழிகாட்டுதல்கள் பல இருந்தாலும், அவர்கள் தத்தமது ஆசிரியப் பெருமக்களால் தண்டிக்கப்படுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன.
கல்விக் கட்டணத்தைச் செலுத்த இயலாத பெற்றோர்களுடைய இயலாமைக்கு அவர்களின் குழந்தைகளை உடல், மனரீதியாகத் தண்டிக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் இன்று வரை எந்தச் சட்ட, திட்டங்களுக்கும் அடங்குவதாகத் தெரியவில்லை.
அதிகச் செல்லம் கொடுப்பதால் பிடிவாத குணம், அடங்க மறுக்கும் தன்மை கொண்ட குழந்தைகள் ஒருபுறம் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களைச் சமாளிப்பது என்பது பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு பெரும் பிரச்னைதான்.
அதுபோன்ற குழந்தைகளைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்தக் குழந்தைகளையும் அடித்தும், அடக்கியும்தான் வளர்க்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.
"செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்' என்பது திருவள்ளுவரின் அறிவுரையாகும். பெற்றவர்களாயினும் சரி, ஆசிரியர்கள் உள்பட மற்றவர்களாயினும் சரி தத்தமது கோபதாபங்களைத் தங்களைவிட வலியவர்களிடம் காட்ட முடியாதபோது, தங்களை ஒருபோதும் எதிர்க்க முடியாத குழந்தைகளிடம் காட்டுவது எந்தவிதத்தில் சரியாக இருக்க முடியும்.
தங்களை யார் அடித்தாலும் சிறிது நேரத்தில் அதை மறந்துவிட்டு, அடித்தவர்களிடமே மீண்டும் வந்து அவர்கள் காலைக் கட்டிகொண்டு சிரிக்கும் குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற முகங்களை ஒருமுறை நினைத்துப் பார்த்தால், மீண்டும் ஒருமுறை அவர்களை அடிக்கக் கை நீளுமா, மனம்தான் வருமா?
அது மட்டுமன்று, அடி உதைகளுக்குப் பழகிப் போகும் குழந்தைகள் மனதில் நாளடைவில் பயம் விட்டுப் போகும். அடிதானே, வாங்கி விட்டுப் போவோம் என்ற மனோநிலைக்கு அவை வந்துவிடும் சாத்தியம் உண்டு. அவர்களே பிற்காலத்தில் வன்முறையாளர்களாய் மாறுகின்ற அபாயத்துக்கும் சாத்தியம் இருக்கிறது.
நமது சமுதாயத்தில் ஏற்கெனவே வன்முறையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை போதாதா, நாம் வேறு புதிய புதிய வன்முறையாளர்களை உற்பத்தி செய்வானேன்?.
எந்த நியாயமான காரணமானாலும் சரி, குழந்தைகளின் மேல் பெற்றோர்கள் வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம். எந்தப் பிரச்னைக்கும் வன்முறை என்பது தீர்வாகாது.
அதிலும், குழந்தைகளின் மீதான வன்முறை என்பது ஒரு தீர்வு அன்று, அதுவே ஒரு சமுதாயப் பிரச்னையாகும்.

Saturday, August 22, 2015

சினிமா எடுத்துப் பார் 22- எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல்!



ஏவி.எம் எடுக்கத் திட்டமிட்ட அந்த பிரம்மாண்டமான படம் ‘அன்பே வா’. அந்தப் படத்தில் நடித்த பிரபல கதாநாயகர் என்றும் புரட்சி தலைவராக திகழும் எம்.ஜி.ஆர் அவர்கள். திரை உலகம் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் புகழோங்கி முதலமைச் சராக அரசாண்டவர். திரைப்படங்களில் கதையிலும், காட்சியிலும், பாடல்களிலும் மக்களுக்கு நல்ல கருத்துகளை சொன் னவர். பிறருக்கு உதவிகளைச் செய்து மனித நேயத்தோடு வாழ்ந்து காட்டியவர்.

இப்படி படங்களில் நடித்ததோடு வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். அதனால் மக்களுக்கு குறிப்பாக பெண் களுக்கு அவர் மீது அன்பும், பாசமும் ஏற்பட்டது. உண்மையாக வாழ்ந்து மக் களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர். அவர் நம்மை விட்டுச் சென்று பல ஆண்டு கள் ஆனாலும், அவர் பெயரைச் சொல் லித்தான் இன்னும் ஓட்டுக் கேட்கிறார் கள். ஏவி.எம் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்க ஒப்பந்தமானது எல்லோ ருக்கும் மிக மகிழ்ச்சியைத் தந்தது.

எம்.ஜிஆரின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் திரு லோகசந்தர். ‘அன்பே வா’ திரைக் கதையை எம்.ஜி.ஆரை மனதில் வைத்து திருலோகசந்தர் எழுதியிருந்தார். திரைத் துறைக்குப் பெருமை சேர்த்த பல படங் களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் இந்தப் படத்தின் வசனகர்த்தா. கதையை எம்.ஜி.ஆரிடம் சொல்வதற்காக அவரு டைய ராமாவரம் தோட்டத்துக்கு ஏவி.எம். சரவணன் சார் தலைமையில் இயக்குநர் திருலோகசந்தரோடு புறப்பட்டோம்.

எங்களைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலில் சாப்பிட்டுட்டு வாங்க பேசலாம்’’ என்றார். அது அவரின் விருந் தோம்பல். உணவு உபசரிப்புக்குப் பிறகு, திருலோகசந்தர் திரைக்கதையைக் கூற எம்.ஜி.ஆர் அவர்கள் ஆர்வமாகக் கேட்டார். ‘‘இதுவரை நான் நடித்து வந்த பார்முலாவுக்குள் இந்தக் கதையை அடக்க முடியாது. வித்தியாசமாக இருக் கிறது. மாறுபட்ட கதைக் களம்.

என்னை யூத்ஃபுல் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறீர்கள். இது வழக்கமான எம்.ஜி.ஆர் படம் அல்ல; இயக்குநர் திருலோகசந்தர் படம்’’ பெருமையோடு சொன்ன எம்.ஜி.ஆர், ’’படத்தை திரு லோகசந்தர் இயக்கும் விதத்தில்தான் இந்தப் படத்தின் வெற்றி அமையும். ஏவி.எம்மின் ‘அன்பே வா’படத்தில் நடிப் பதைப் பெருமையாக கருதுகிறேன்’’ என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டார்.

படத்தின் ஒருங்கிணைப்பு வேலை களை ஏவி.எம்.சரவணன் சார் கவனித்துக்கொண்டார். சரவணன் சார் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் நடிக்கும் படப்பிடிப்புகளுக்குப் போய் எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசுவது அவர் பழக்கம். சரவணன் சாரை அவரது வீட்டில் சரவன் என்றே அழைப்பார்கள். எம்.ஜி.ஆரும் சரவன் என்றே அழைப் பார். ‘அன்பே வா’ படத்தில் நடிக்க வந்ததும் சரவணன் சாரை எம்.ஜி.ஆர் செல்லமாக ‘முதலாளி’ என்றழைக்க ஆரம்பித்தார்.

‘அன்பே வா’ படத்துக்குத் தொடக்க விழா செப்டம்பர் மாதத்தில் நடந்தது. சரவணன் சார் படத்தை பொங்கல் பண்டிகை அன்று வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டார். இதை இயக்குநர் திருலோகசந்தரிடம் கூறியதும், ‘‘கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் முழு ஸ்கிரிப்டாக தயாராக இருக்கிறது. அத னால் படப்பிடிப்பை விரைவாக முடிக் கலாம்’’ என்று நம்பிக்கைக் கொடுத்தார். சரவணன் சார் தன் விருப்பத்தை அப்புச்சியிடம் சொன்னதும் அவருக்கும் ஆர்வம் அதிகமானது. ‘‘ஆனால் எம்.ஜி.ஆர் கால்ஷீட்டை எப்படி நமக்கு மொத்தமாக ஒதுக்கித் தருவார்?’’ என்று கேட்டார். சரவணன் சார், ‘‘எம்.ஜி.ஆர் அவர்களிடமே கேட்டுப் பார்த்துவிடுகிறேன்’’ என்று கூறினார்.

என்னிடம் ராமாவரம் தோட்டத்துக்கு போன் போட்டு, எம்.ஜி.ஆர் அவர் களிடம் ‘தான் அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் எப்போது வரலாம்' என்றும் கேட்கச் சொன்னார் சரவணன் சார். நான் கேட்டேன். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘கால்ஷீட் தேதி விஷயங்கள் என்றால் நீங்கள் மட்டும் வாங்க. வேறு முக்கியமான விஷயம் என்றால் முதலாளியைக் கூட்டிட்டு வாங்க’’ என்றார். தோட்டத்துக்குப் புறப் பட்டோம். சரவணன் சார், எம்.ஜி.ஆரிடம் ‘‘ஒரு முக்கியமான விஷயம். நீங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். அது முடிந் தால் சந்தோஷம். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் வருத்தப்பட மாட்டோம்’’ என்றார்.

‘‘பில்டப் எதுக்கு முதலாளி. என்ன விஷயம்னு சொல்லுங்க’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘‘அன்பே வா படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம்னு ஒரு ஆசை.’’

‘‘அப்படி ஒரு ஆசையா? சத்யா மூவிஸ்ல சாணக்கியா இயக்கத்தில் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் வேலைகள் நடந்துட்டிருக்கு. அதைப் பொங்கலுக்கு வெளியிடலாம்னு திட்டமிட்டிருக்காங்க’’ என்று சொல்லிவிட்டு, ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அழைத்து சரவணன் சாருடைய விருப்பத்தைக் கூறினார். ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் செட்டியார் மீதும், சரவணன் சார் மீதும் தனி பிரியம் கொண்டவர். அதனால் அவருடைய படத்தை தள்ளி வைத்துக்கொள்ள சம் மதித்தார். சரவணன் சார் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு நன்றி கூறினார்.

சரவணன் சார் என்னிடம் ‘‘முத்துராமன் மொத்தமா எவ்வளவு நாட்கள் கால்ஷீட் தேவைப்படும்னு சொல்லுங்க?’’ என்றார். நான் ‘’70 முதல் 80 நாட்கள் தேவைப்படும்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி அதெல்லாம் விடுங்க. உங்க ஆசைப்படி ‘அன்பே வா’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்’’ என்றார். அப்படி சொன்னதோடு மட்டுமின்றி விரைந்து படத்தை முடிக்க பேருதவியாக இருந்தார். எங்கள் பணிகளையும் வேகப்படுத்தினார். இரவு, பகலாக வேலை பார்த்து படத்தின் நிர்வாக இயக்குநராகவே எம்.ஜி.ஆர். மாறிவிட்டார். பட வேலைகளில் அப்படி ஓர் ஈடுபாட்டுடன் உழைத்தார்.

‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, அசோகன், நாகேஷ், மனோரமா டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே பணிபுரிந்தது. ஏவி.எம் ஸ்டுடியோவில் எல்லா அரங்குகளிலும் பெரிய பெரிய செட்டுகள் போடப்பட்டன. அவுட்டோர் ஷூட்டிங் ஊட்டி, சிம்லா என முடிவானது. ஆகமொத்தத்தில் ‘அன்பே வா’ படத்தின் படப்பிடிப்பு நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் சினிமாவில் ஒரு தனி வரலாறு.

- இன்னும் படம் பார்ப்போம்...

ஆங்கிலம் அறிவோமே - 71: ராக்கெட்டும், பாக்கெட்டும்

ஒருவர் போகிற போக்கில் “ராக்கெட்டுக்கும், பாக்கெட்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கூறுங்கள்’’ என்று கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எனக்கும் அதே உணர்வுதான் முதலில் எழுந்தது. பிறகு இதிலும் முக்கிய விஷயம் இருப்பதை உணர முடிந்தது.

Racket, Rocket இடையே வித்தியாசம் உண்டு - எழுத்துகளிலும், அர்த்தங்களிலும்.

அதேபோல் Packet, Pocket இடையேகூட வேறுபாடு உண்டு.

டென்னிஸ் ராக்கெட் என்று நாம் குறிப்பிடும்போது அது Racket. இந்த வார்த்தைக்கு இன்னொரு பொருளும் உண்டு. எக்கச்சக்கமான ஒலியை எழுப்புவதை Racket என்போம். அதாவது நமக்குப் பிடிக்காத ஒலி. The traffic made a terrible racket in the street.

சட்ட மீறல்களை ஒரு குழுவாகச் செய்யும்போது அதையும் racket என்பதுண்டு. The latest weight reducing racket, Emu farm racket என்பதுபோல.

சிலர் Racquet என்ற வார்த்தையையும் Racket என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். Racket கொண்டு ஆடப்படும் விளையாட்டைக் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுகிறது.

Rocket என்பது விண்கலம் தொடர்பானது. அது உயர எழும்பும் பொருள். விண்கலம் ஏவும் இடமான தும்பாவிலும் எழும்பும். தீபாவளியின்போது பட்டாசு வடிவிலும் எழும்பும். விலைவாசி rocket வேகத்தில் எழுவதை நாம் எவ்வளவு முறை பார்த்திருப்போம்!

இப்போது பாக்கெட்டுக்கு வருவோம்.

Packet என்றால் ஒரு பொட்டலம் என்று வைத்துக் கொள்ளலாம். A packet of sweets.

நாம் சட்டைப் பாக்கெட் என்று குறிப்பிடுவது pocket. அதாவது சிறிய பொருள்களை வைத்துக் கொள்வதற் காக உடைகளில் தைக்கப்படுபவை.

சில சமயம் பொதுவான ஒன்றிலிருந்து விலகி நிற்கும் சின்னச் சின்ன ‘அறைகளைக்’ குறிக்கவும் pocket என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது உண்டு. Pockets of resistance. A pocket of poverty in the affluent city.

சாதக பாதகம்

பயிற்சி வகுப்பு ஒன்றில் ‘எதைச் செய்வதற்கு முன்னாலும் அதன் pros and cons என்னவென்று யோசித்துவிட்டுச் செய்ய வேண்டும்.’ என்றேன்.

“ஏன் poetry-ஐ நினைக்கக்கூடாது?’’ என்று ஒருவர் முணுமுணுத்தது கேட்டது. நல்லவேளை காதில் விழுந்தது.

நான் குறிப்பிட்டது அந்த prose அல்ல. இது pros. இதற்கு சாதகங்கள் என்று அர்த்தம். Cons என்றால் பாதகங்கள். ஒரு செயலின் சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகு அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் நான் கூறிய ஆங்கில வாக்கியத்தின் பொருள்.

I wanted to weigh up the pros and cons before accepting the job.

லத்தீன் மொழியில் pro என்றால் ஆதரவாக. Contra என்றால் எதிராக. Contra என்பதுதான் con ஆகிவிட்டது. அந்த மொழியில் pro et contra என்பார்கள். அதாவது for and against எனலாம்.

அருவி

ஒரு வாசக நண்பர் “Cascade, cataract ஆகிய இரண்டுமே அருவியைக் குறிக்கும் சொற்கள்தானே?’’ என்கிறார்.

ஆமாம். ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. Cascade என்பது மிக மெல்லிய அருவி என்று சொல்லலாம். பல தீம் பார்க்குகளில் காணப்படலாம். பாறைகளின் மீது படர்ந்து வரும் அருவி. Cataract என்பது சக்தி மிகுந்த அருவி. கொஞ்சம் பயங்கரமானது, ஆபத்தானது என்றும் சொல்லலாம்.

அருவியில் வேறு சில வகைகளும் உண்டு. Chute எனப்படும் அருவியில் அது சரியும் வழி மிகவும் குறுகலானது. இதன் காரணமாக மிகமிக அதிக வேகத்தோடு அந்தக் குறைவான பகுதியில் அருவி நீர் வெளிப்படும். Frozen Waterfalls என்றால் பனிக்கட்டியாக மாறிவிட்ட அருவி என்று அர்த்தம். இதன்மீது ஏறுவதைக்கூட ஒரு சாகசமாக எண்ணுபவர்கள் உண்டு.

இது தொடர்பான Catadupa என்ற வார்த்தை கூட சுவாரசியமானதுதான். இது பிரம்மாண்டமான அருவிக்கு (பெரும்பாலும் நைல் நதி தொடர்பான அருவிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது) அருகில் வசிக்கும் மக்களைக் குறிக்கிறது. தொடர்ந்து அருவியின் பலத்த ஓசையைக் கேட்டுக் கொண்டிருப்பதால் இவர்கள் பெரும்பாலும் கேட்கும் திறனை இழந்துவிட்டிருப்பார்களாம்.

வருமா,வராதா?

“He did not go” என்பது சரியா? அல்லது “He did not went” என்பது சரியா?”என்று கேட்ட நண்பரிடம் முதல் வாக்கியம்தான் சரியானது என்றேன். அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. Did என்பது past tense. எனவே went என்பதுதானே வர வேண்டும் என்றார்.

இது போன்ற தவறுகளை சில வாசகர்களின் அஞ்சல்களிலும் (Why you did not replied?) காண முடிகிறது. எனவே, இந்தச் சந்தேகம் குறித்து கொஞ்சம் விளக்கமாகவே பார்த்து விடுவோம்.

Auxiliary verb குறித்து இந்தப் பகுதியில் முன்பு குறிப்பிட்டிருக் கிறேன். என்றாலும் அது குறித்து ஒரு சுருக்கமான revision இப்போது நலம் பயக்கும்.

VERB-களில் பலவும் main verbs என்ற பிரிவில் அடங்கிவிடும். stand, runs, forgot, allow என்பவை சில உதாரணங்கள்.

auxliary verb என்பது tense, voice போன்றவற்றைச் சுட்டிக்காட்டி வாக்கியத்தை இலக்கணப்படி அமைக்க உதவுபவை. இவற்றை helping verbs என்றும் கூறுவார்கள். இவை பெரும்பாலும் main verb-உடன் காணப்படுகின்றன. auxliary verbs க்கு சில எடுத்துக்காட்டுகள் - am, has, do, may, are, was, have, does, will, could, is, did.

இந்த இரண்டு வகை VERBS-ஐ கண்டுபிடிக்க குறுக்குவழி ஒன்றும் தோன்றுகிறது.

ஒரு verb அருகிலேயே NOT என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடிந்தால் அது auxiliary verb. இல்லையேல் main verb.

Cannot வரும். Write not வராது. Do not வரும். See not வராது. (கவிதைகளில் எப்படி வேண்டு மானாலும் வரலாம், அதை விடுங்கள்).

பலவித இலக்கணச் சிக்கல்களை நீக்கிவிட்டு எளிமையாகச் சொல்வ தென்றால் Did என்ற auxiliary verb-ஐத் தொடர்வது infinitive ஆகத்தான் இருக்கும். Past tense verb அல்ல.

(go, come, read, write, stand, take, give, run போன்ற அடிப்படையான verbs ஆக நாம் கருதுபவற்றை infinitive என்பார்கள். இவற்றை present tense verb என்று நாம் கருதுவது வழக்கம்).

அதாவது did என்ற வார்த்தையைத் தொடர்ந்து come, go, write, stand போன்றவைதான் வரும். இந்த ஒரே வாக்கியத்தை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டாலும் போதும்.

எனவே Did he go?-தான். Did he went? அல்ல. He did not go-தான். He did not went அல்ல.

He did not write-தான். He did not wrote அல்ல.

I went to the house but did not enter.

எதிரொலி: Due to வின் பயன்பாடு

Due to வை phrase preposition மாதிரிப் பயன்படுத்தக்கூடாது. Due to என்பது predicative adjective. இதை is, was, are, were போன்ற ‘to be’ verb-க்கு பின்னால்தான் பயன்படுத்த வேண்டும்.

Due to rain the match was postponed என்றோ The match was postponed, due to the rain என்றோ சொல்லக்கூடாது. due to க்குப் பதிலாக Owing to பயன்படுத்த வேண்டும். Owing to the rain the match was postponed என்று சொல்ல வேண்டும்.

To be verb-க்குப் பின்னால் due to- வை பயன்படுத்த வேண்டும். Collapse ஐ பயன்படுத்த விரும்பினால் Noun-ஆக பயன்படுத்தி his collapse and death was due to heart attack என்று சொல்ல வேண்டும்.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்

Owing to, Due to ஆகிய இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றே. Part of speechம் ஒன்றே. (Ref: Oxford dictionary).

ரத்தம் என்று நான் எழுதினால் ‘இரத்தம்’ என்று எழுதாதது பெரும்பிழை என்று ஒருவர் காட்டலாம்தான். ஒரு குறிப்பிட்ட நோக்கில் பார்க்கும்போது ‘ரத்தம்’ தவறுதான். சில மொழிப் பயன்பாடுகள் காலப்போக்கில் மாற்றங்கள் கண்டு நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அப்படித்தான் due to பயன்பாடும். Because of என்பது போலவே அது மிகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Keywords: ஆங்கில அறிவு, ஆங்கில இலக்கணம், மொழி அறிவு, ஆங்கிலம் அறிவோமே

சென்னை 376: இளமை மாறா நகரம்


சென்னையில் இளமைக்குப் பஞ்சமே இல்லை. இந்த நகரத்துக்கு வயது 376 ஆண்டுகள் என்று சொன்னால் யாரும் நம்புவார்களா என்பதே சந்தேகம்தான். ஏனெனில் நாளாக நாளாக நகரம் இளமையாகிக்கொண்டேவருகிறது. சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் எப்போதும் ஒரு துடிப்பையும் துள்ளலையும் உணரலாம். இருபத்தி நான்கு மணிநேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருக்கும் இந்த நகரம். இளையவர்களை வாரியணைத்துக்கொள்ளும் நகரமாகவே உள்ளது. அன்று அது பாரதியை அரவணைத்திருக்கிறது; இன்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை வளர்த்தெடுத்திருக்கிறது.

எல்லாப் பெரிய நகரங்களையும் போலவே சென்னையில் இளமையின் கொண்டாட்டத்துக்கான இடங்கள் அதிகம். கொண்டாட்டம் போதுமா? செலவுக்குத் தேவையான வருமானத்தை ஈட்டவும் இங்கே வழிகள் உள்ளன. தினந்தோறும் ரயில்களிலும் பேருந்துகளிலும் வந்திறங்கும் எத்தனையோ பேருக்கு சென்னை தாயுள்ளத்துடன் இடமளிக்கிறது. கனவுகளைச் சுமந்து்வரும் அத்தனை இளைஞர்களுக்கும் ஏதாவது ஒரு வாழ்க்கையை அது தொடர்ந்து அளித்துவருகிறது. அதனால்தான் இந்தப் பெருநகரம் தொடர்ந்து வளர்ந்துகொண்டேயிருக்கிறது.

இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க பெருநகரின் மத்தியில் ஸ்பென்சர் பிளாஸா, ஐநாக்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்கை வாக் போன்ற ஷாப்பிங் மால்கள் காணப்படுகின்றன. நகரில் மட்டுமல்ல புறநகர்ப் பகுதிகளிலும் மாயாஜல், ஃபீனிக்ஸ் போன்ற ஷாப்பிங் மால்கள் இளைஞர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

வார நாட்களில் கடுமையாக உழைக்கும் இந்த இளைஞர்கள் வீக் எண்ட்களில் மால்களையும் தீம் பார்க்குகளையும் சுற்றிவருகிறார்கள். திரைப்படம், நாடகம், விளையாட்டு என இவர்கள் கொண்டாட்டத்துக்கான வழிகள் அநேகம். வெறும் கான்கிரீட் கட்டிடங்களில் என்ன உள்ளது, இயற்கையான இடத்துக்கு ஈடு இணையேது எனக் கேட்பவர்களுக்காகவே நீண்டு கிடக்கிறது சென்னை மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைகள். இவை போதாதென்று சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் பூங்காங்கள் இளைஞர்களுக்கு ஆசுவாசம் தருவதற்காகத் திறந்து கிடக்கின்றன.

சினிமாவில் சேர வேண்டுமா? கவலை இல்லை. ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டுமா? அதற்கும் இங்கே இடமுண்டு. சாப்ட்வேர் துறையில் முன்னேறவும் வழி உண்டு, விளையாட்டு வீரர்களுக்கும் உரிய களம் உண்டு. நேரம் போவது தெரியாமல் வாசித்துக்கொண்டே இருக்கும் இளைஞர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமரா நூலகம் போன்ற எத்தனையோ நூலகங்கள் அவர்கள் வரவை எதிர்பார்த்து நிற்கின்றன.

உணவுப் பிரியரா, உடையில் ஆர்வமா, கலையில் விருப்பமா, விளையாட்டுத் துறையில் ஈடுபாடா - எது உங்களுக்குப் பிடிக்குமோ அதைச் செய்துகொள்ள இந்த நகரத்தில் வாய்ப்பிருக்கிறது. தன்னை நம்பி வந்த யாரையும் இந்த நகரம் கைவிட்டதே இல்லை. அதனால்தான் கல்லூரியில் படிக்கவும் படித்த பின்னர் வேலைக்காகவும் இங்கே இளைஞர்கள் குவிந்துகொண்டே இருக்கிறார்கள். பாரம்பரியப் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் அனுதினமும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதே இந்தப் பெருநகரின் தனித்துவம். அதனாலேயே இது என்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறது.

சென்னை எனும் கலைடாஸ்கோப்

அறிமுகமாகாத‌வரை பெருநகரங்கள் நமக்கு ‘பீட்சா’. பிறகு அவை ஆயா சுட்ட தோசைதான்! ‘மெட்ராஸுக்குப் போற. பார்த்துப்பா, அங்க பிக்பாக்கெட்காரங்க ஜாஸ்தி’ என்பதுதான் எனக்கு வழங்கப்பட்ட முதல் அட்வைஸ். உலகத்துக்கு வேண்டுமானால், அது சென்னை. உள்ளத்தில் இன்னும் மெட்ராஸ்தான்!

முதல்முறை சென்னை வந்தபோது 8 வயது. சுற்றுலாவாகச் சென்னை வந்தோம். இரவு நேரத்தில் அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘தொலைஞ்சு போயிருவோமோ’ என்ற பயத்துடன் மெரினா கடற்கரையைப் பார்த்தது, இன்னும் மனதில் அலையடிக்கிறது.

அதன் பிறகு சுமார் 15 வருடங்கள் கழித்துப் பணி நிமித்தம் வந்தபோது சென்னை வரவேற்றறது. சுனாமிக்குப் பிறகான மெரினாவைப் பார்க்கும்போது கொஞ்சம் பயம்தான். ஆயினும், கைகள் கோத்துக் கதையளந்தபடி செல்லும் காதலர்களைப் பார்த்தால், ‘கடல் இனிது’ எனச் சொல்லத் தோன்றுகிறது.

‘இதயம்’, ‘பூவே உனக்காக’, ‘காதல் தேசம்’ போன்ற பல படங்கள்தான் சென்னையை மனத்தில் சித்திரமாக வரைந்துவைத்ததன. ‘அண்ணா சாலையில் எட்டு வண்ண வானவில்’லை நடிகர் காந்த் மட்டுமா பார்த்தார்?

சினிமாவில் இடம்பெறும் சென்னைக்கும், நிஜத்தில் உள்ள சென்னைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. என்றாலும், இப்போதும், எம்.எம்.சி.யைக் கடக்கும்போது, முரளி கையில் டைரியுடன் உலவிக்கொண்டிருப்பது போலவும், எல்.ஐ.சி.கட்டிடத்தின் மீது சூப்பர் ஸ்டார், காரை ஓட்டிக் கொண்டிருப்பது போலவும் தெரியும். அவ்வளவு வெள்ளந்தியான என்னை, பரங்கிமலை ஜோதி தியேட்டருக்கு வழி சொல்லும் அளவுக்குச் சென்னை வளர்த்தது!

‘ஸ்பென்சர் பிளாசா’வில் இருந்த ‘லேண்ட்மார்க்’ புத்தகக் கடைதான் வாசிப்புக்குத் தீனி போட்டது. நுங்கம்பாக்கம் சாலையில் இருந்த அதன் இன்னொரு கிளை மூடப்பட்டது, சென்னை வரலாற்றில் ஒரு சோகம். வரலாறாய் நிற்கும் இன்னொரு புத்தகக் கடை ‘ஹிக்கின்பாதம்ஸ்’!

சென்னையின் அடையாளங்களாக ஒருபுறம் கட்டிடங்கள் இருக்கின்றன என்றால், இன்னொரு புறம் அதன் மனிதர்கள். ஒண்டுக் குடித்தனம் ஒன்றில் வசித்திருந்தபோது, ‘நைட் 7 மணிக்கு மேல துணி துவைக்காதீங்க’ என்று கன்டிஷன் போட்ட வீட்டுக்காரர், மேன்ஷன்களில் பசியைப் போக்கிக்கொள்வதற்கு இரண்டு பட்டர் பிஸ்கட்டும், ஒரு டீயும் மட்டுமே குடித்து வந்த பக்கத்து அறை நண்பர்கள், இன்னும், இன்னும்... நட்பு, காதல், வேலை, துரோகம், வணிகம், மருத்துவம், கல்வி எனப் பலவற்றுக்கும் ‘ஸ்கோப்’ உள்ள‌ கலைடாஸ்கோப் சென்னை!

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...