Thursday, October 8, 2015

விருதுக்கு அவமரியாதை!

Dinamani


By ஆசிரியர்

First Published : 08 October 2015 01:57 AM IST


உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி அருகே பசுவின் கறியை உண்டதற்காக ஒரு முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனது எதிர்ப்பைக் காட்டும் விதமாக சாகித்ய அகாதெமி விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார் பண்டித நேருவின் சகோதரி மகள் நயன்தாரா ஷகல். அவரைத் தொடர்ந்து அசோக் வாஜ்பாயும் விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதேபோன்று, இரு மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்ட, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய எழுத்தாளர் கலபுர்கி கொலையில் தீவிர விசாரணையை வலியுறுத்தி, அவருடன் ஒரே மேடையில் கர்நாடக சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்ற ஆறு பேர் தங்கள் விருதுகளைத் திருப்பித் தந்தார்கள். தமிழகத்தைச் சேர்ந்த சாகித்ய அகாதெமி விருது பெற்ற இடதுசாரி சிந்தனை எழுத்தாளர்கள் தங்களது விருதையும் பரிசுப் பணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்றுகூடக் கோரிக்கைகள் எழுகின்றன.
சாகித்ய அகாதெமி விருது அரசியல் கட்சிகளின் பரிந்துரையால் வழங்கப்படுபவை அல்ல என்பதை நாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். ஓர் எழுத்தாளன் ஏதாவது ஓர் அரசியல் கட்சியையோ, சித்தாந்தத்தையோ சார்ந்தவராக இருக்கலாம். ஆனால், விருது வழங்கப்படுவது அவரது படைப்புக்காகத்தானே தவிர, அவரது அரசியல் தொடர்புக்காக அல்ல.
சில நேரங்களில் சில எழுத்தாளர்களின் அரிய நூல்களுக்கு விருது அளிக்கப்படாமல், அவர் எழுதிய சாதாரண புத்தகத்துக்கு விருது அளிக்கப்படும்போதும்கூட, விருதுக்கான நிபந்தனைக்காக அப்படி அமைந்து விடுகிறது என்பதே உண்மை. ஆயினும்கூட, அந்த எழுத்தாளரின் ஒட்டுமொத்த படைப்பாக்கத்துக்கான விருதாகவே, கௌரவமாகவே அது கருதப்படுகிறது.
இந்தியாவில் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, கிலாபத் விவகாரத்தில் பிரிட்டிஷ் அரசின் அநீதியான போக்கைக் கண்டித்து, அன்றைய பிரிட்டிஷ் அரசால் தனக்கு போயர் போர், ஜூலு போர், தென் அமெரிக்காவில் சமூக சேவை ஆகியவற்றுக்காக அளிக்கப்பட்டிருந்த விருதுகளைத் திருப்பித் தந்தார். அன்றைய காலகட்டத்தில், மகாத்மா காந்தியைப் பின்பற்றி, பலரும் தங்கள் விருதுகளை பிரிட்டிஷ் அரசுக்குத் திருப்பிக் கொடுத்தார்கள். ராவ் பகதூர் பட்டங்களைத் துறந்தவர்களும் நிறையப் பேர். ஆனால், அது ஓர் அரசியல் போராட்டம். பிரிட்டிஷார் ஆட்சிக்கு எதிரான அந்தப் போராட்டத்தில் விருதுகளைத் தூக்கியெறிவதும்கூட, எதிரியின் மீது வீசப்படும் ஆயுதம்தான்.
ஆனால், இப்போது இந்தியாவில் நடப்பது மன்னராட்சி இல்லை. மக்களாட்சி. எல்லாரும் இந்நாட்டு மன்னர். இந்நிலையில் விருதைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் எந்த அரசை, அல்லது எந்த அரசியல் கட்சியை, எந்த அரசியல் தலைவரை ஓர் எழுத்தாளர் அவமானப்படுத்துவதாகக் கருத முடியும்?
ஓர் அரசியல்வாதி தனக்கு அளிக்கப்பட்ட பதவியை, கொடுக்கப்பட்ட விருதைத் தூக்கி எறிவதில் அர்த்தமுள்ளது. ஆனால், ஒரு படைப்பாளி தனக்கான விருதைத் திருப்பிக் கொடுத்த பிறகு, அவர் படைப்பாளி அல்ல என்றாகி விடுவாரா? அல்லது விருது பெற்ற அவரது படைப்பு இலக்கியஅங்கீகாரத்தை இழந்துவிடுமா?
ஓர் இலக்கியவாதியின் கடமை தொடர்ந்து எழுதுவதுதான். படைப்பாளிக்கு எழுத்து மட்டுமே ஆயுதம். சமூகத்தின் ஏற்றத்தாழ்வு, அரசியல் அநீதிகளை இன்னும் படு தீவிரமாக, காத்திரமான எழுத்தில் முன்வைக்க வேண்டும். விருதுகளைத் திருப்பித் தருவதைக் காட்டிலும், இத்தகைய எழுத்துதான் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தரும்.
எந்தவொரு நாடும், சர்வாதிகார நாடு உள்பட, எழுத்தாளனின் காத்திரமான எழுத்துகளைத்தான் சகித்துக்கொள்ள முடியாமல் திணறும். அதை ஒடுக்க நினைக்கும். உலக வரலாற்றில் கவிகளும், படைப்பாளிகளும் கொல்லப்பட்டும், நாடு கடத்தப்பட்டும் இருக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்கள் எழுத்தும் படைப்பும்தான் காரணம்.
அரசினால் எதிர்கொள்ள முடியாத ஆயுதம் எழுத்துதான். மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில், ஓர் ஆளும் கட்சி அநீதியை நிகழ்த்துமானால், ஒரு படைப்பாளி அதைத் தன் எழுத்தாலும் படைப்பாலும் எதிர்ப்பதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும். விருதுகளைத் திருப்பித் தருவதால் அரசுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. மாறாக, அந்த விருது வேறொரு கட்சியின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டிருந்தால், அரசு அதை மகிழ்ச்சியுடன் வேடிக்கையாகவே பார்க்கும்.
தாத்ரி அருகே நடந்திருக்கும் சம்பவம் கண்டனத்துக்குரியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும்கூட காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் இதேபோன்ற வன்முறைகள் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நடந்து வந்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும்கூட இந்தியாவில் இத்தகைய தாக்குதல்கள் நடக்கவே செய்யும். இதற்காக இலக்கியவாதிகள் அனைவரும் எல்லா விருதுகளையும் திருப்பித் தருவது என்பது விருதை அவமதிப்பதாக இருக்குமே தவிர, அரசை எதிர்ப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ இருக்காது.
மத்தியில் ஆளும் கட்சி மதவாத அரசியலுக்கு ஆதரவாக நிற்பதால்தான் தாத்ரி கொலை அல்லது கலபுர்கி கொலை என்று படைப்புலகம் கருதுமேயானால், அவர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை எழுத்தின் மூலம்தான் நடத்த வேண்டும். ஒரு படைப்பாளிக்கு எழுத்துதான் கூரிய வாள். விருது, வெறும் தாள்.

Tuesday, October 6, 2015

ஆதலினால் அன்பு செய்வீர்!


By அ. கோவிந்தராஜூ

First Published : 06 October 2015 01:27 AM IST


அன்பு ஆற்றல் மிக்கது. ஒரு குழந்தையின் அன்பால் பிளவுபட்ட குடும்பம் ஒன்று சேர்வது உண்டு. காதலனுக்கு மண்ணில் மாமலையும் ஒரு சிறு கடுகாய் தோன்றக் காரணம், காதலி காட்டும் அன்பின் வலிமைதான்.
மனைவி காட்டும் தன்னலமற்ற அன்பு, நெறி கெட்டுச் செல்லும் கணவனை நல்வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கது.
இன்றளவும் குடும்பம் என்னும் கட்டுக்கோப்பு குலையாமல் இருப்பதற்குக் காரணம், அன்னை பொழியும் அன்பின் வலிமைதான். குடும்பத் தலைவனாய் விளங்கும் தந்தை ஓய்வின்றி உழைப்பதும் ஆழ்மனதில் கிடக்கும் அன்பின் பேராற்றலால்தான்.
சாதி, மதம், இனம் பாராமல் அன்பு காட்ட வேண்டும். மற்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பைப் பொழிய வேண்டும். பகைவரையும் மன்னித்து அன்பு செய்ய வேண்டும்.
இந்த அன்பு நெறியைத்தான் நின்னோடு ஐவரானோம் என்று குகனையும், நின்னோடு அறுவரானோம் என்று அனுமனையும், நின்னோடு எழுவரானோம் என்று விபீடணனையும் இராமன் தம்பியராக்கிக் கொள்வதாய் கம்பன் படைத்துக் காட்டுகிறான்.
இவ்வன்பு நெறி தழைக்குமாயின் உலகமாந்தர் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழலாம்.
அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சே. இக்கூற்று அன்புக்கும் பொருந்தும். தாயும் தந்தையும் தம் குழந்தைகளிடத்து அளவுக்கு அதிகமான அன்பைச் செலுத்தி, அதாவது செல்லம் கொடுத்து, குழந்தையின் போக்குக்கு விட்டு, பின்னர் துன்பப்படுவதுண்டு.
கண்மூடித்தனமான அன்பு என்று ஒரு வகையும் உண்டு. இது மிகவும் ஆபத்தானது. இது காலப்போக்கில் வெறியாக மாறிவிடும்.
மொழியின் மீது அன்பு இருக்க வேண்டும். மொழி வெறியாக மாறக் கூடாது. மதத்தின் மீது அன்பு இருக்க வேண்டும். ஒரு போதும் மதவெறியாக மாறுதல் கூடாது.
நம் நாட்டில் இல்லறம் என்பது வற்றாத அன்பின் அடிப்படையில் அமைவது. ஆயினும், அவ்வற்றாத ஊற்று வரதட்சணைச் சிக்கல்களால் வறண்டு போவதைப் பார்க்கிறோம்.
செல்வ மகளையும் கொடுத்து, செல்வத்தையும் கொடுக்க ஏழைத் தந்தையால் இயலுமா? பாரதியார் கண்ணம்மாவை நோக்கி, "அன்பொழுக செல்லமடி நீ எனக்கு சேமநிதி நானுனக்கு' என்று கூறுவதைப்போல, அன்பு காட்டி மணம் புரியும் இளைஞர் கூட்டம் பெருக வேண்டும்.
வள்ளுவர் கூறுவது போல், அன்பு பண்பாகவும், அறம் பயனாகவும் உள்ள இல்லங்கள் பெருகின், நாட்டில் நலம் பெருகும், அமைதி நிலவும்.
கிணற்று நீர் இறைக்க இறைக்கத்தான் ஊறும். அதுபோல், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டினால் அன்பு பெருகும்.
பிற உயிர்களிடத்து அன்பு காட்டி, அதனால் கிடைக்கும் இன்பத்தைச் சுவைக்க வேண்டும். இவ்வின்பத்தைச் சுவைத்தவர் தாயுமானவர். "அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே' என்று கூறுகிறார்.
காக்கை குருவிகள் எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று அஃறிணைப் பொருள்களிடத்தும் அன்பு காட்டியவர் பாரதியார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்பின் மிகுதியால் நெஞ்சு நெக்குருகப் பாடியவர் வள்ளலார்.
ஒரு முறை காந்தியடிகளின் சீடர்கள் சிலர், இரவு நேரத்தில் பசுந் தழையைக் கொத்துக் கொத்தாகப் பறித்து வந்தனர். அதைக் கண்ட காந்தியடிகள், மரங்களும் நம்மைப்போல் உயிருடையன. நம்மைப்போலவே வளர்கின்றன, முகர்கின்றன, உண்கின்றன, பருகுகின்றன, உறங்குகின்றன; அவை இரவில் ஓய்வு பெற்று உறங்கும்போது தழைகளைப் பறித்தல் தவறு என்று கூறினார்.
முன்னர் ஒருசமயம், அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ மத மாநாட்டில் சுவாமி விவேகானந்தர், சகோதர அன்போடு, "அமெரிக்க நாட்டுச் சகோதரர்களே, சகோதரிகளே' என்று தொடங்கி உரையாற்றியபோது, அங்கிருந்தோர் தம் மெய்மறந்து செவிமடுத்தார்கள்.
நாடு, மொழி, இனம் கடந்து எல்லா நாட்டினரும் நம் உடன் பிறந்தார் என ஒவ்வொருவரும் எண்ணி வாழத் தொடங்கினால், உலகில் போர் ஏது, பூசல் ஏது?
அண்மைக் காலமாக மனித மனங்கள் பாலைவனங்களாக மாறி வருகின்றன. இறைவன் அன்பு மயமானவன் என எல்லா மதங்களும் போதிக்கின்றன.
மனித நேயமும் அன்பும் மீண்டும் பெருக்கெடுக்க வேண்டும், அதற்கான வழிகளைச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது உள்ளோம்.
கண்மூடித்தனமான அன்பு என்று ஒரு வகை உண்டு. இது மிகவும் ஆபத்தானது. மொழியின் மீது அன்பு இருக்க வேண்டும். மொழி வெறியாக மாறக் கூடாது.

கையறு நிலை!


Dinamani


By ஆசிரியர்

First Published : 06 October 2015 01:24 AM IST


நாடு முழுவதும் காய்கனி, உணவு தானியங்கள், பால் உள்ளிட்ட இருபதாயிரம் மாதிரிகளை மத்திய வேளாண் துறை ஆய்வு செய்ததில், அவற்றில் 18.7% மாதிரிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளில் 2.6% காய்கனி, பால், தானியங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருப்பது தெரிய வந்திருக்கிறது. 12.5% மாதிரிகளில் இருந்த பூச்சிக்கொல்லி எச்சம், இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட பூச்சி மருந்துகளைச் சார்ந்தது என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல்.
இந்தப் பூச்சிக்கொல்லி எச்சம் அங்கக வேளாண்மையில் விளைந்த பொருள்களிலும் இருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. காரணம், மண் முழுவதும் ரசாயன உப்பாகிக் கிடக்கிறது. புதிதாக உரம் போடவில்லை என்றாலும், நிலம் தன்னில் விளைவிக்கப்படும் பயிரின் மூலம்தான் ஏற்கெனவே கொட்டப்பட்ட உப்பை வெளியேற்ற முடியும். ஆகவே, அங்கக வேளாண்மையிலும் பூச்சிக்கொல்லி நச்சை அப்புறப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் யதார்த்த நிலைமை.
கடந்த பிப்ரவரி மாதம் தில்லி நீதிமன்றத்தில் தாக்கலான பொதுநல வழக்கில் மத்திய வேளாண் துறை அமைச்சகம் அளித்த அறிக்கை போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. நீதிமன்றம் அமைத்திருந்த குழுவானது, தில்லி நகரச் சந்தைகளில் பெற்ற உணவுப் பொருள், காய் கனிகளின் மாதிரிகளைத் தனியாக ஆய்வு செய்து, அனைத்திலும் பூச்சிக்கொல்லி எச்சம் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்திருந்தது.
சென்ற ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அல்போன்சா மாம்பழம் அனுப்ப முடியாமல் போனது. காரணம், அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி எச்சம். பல நாடுகளுக்கு நமது கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய் ஏற்றுமதி செய்யப்பட முடியாத நிலை இருக்கிறது. சவூதி அரேபியாவுக்கு நமது பச்சை மிளகாய் ஏற்பில்லை. காரத்தைவிட பூச்சிக்கொல்லி எச்சம் அதிகம்.
அண்மையில், கேரள வேளாண் பல்கலைக்கழக ஆய்வுக்கூடம் மேற்கொண்ட பரிசோதனைகளில் பல்வேறு காய், கனிகளில் பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதைப் பட்டியலிட்டது. கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் காய் கனிகள் அனுப்புவது தமிழ்நாடு என்பதால், தமிழ்நாட்டு காய் கனிகளில் அதிக பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தியா முழுவதும் இதே நிலைமைதான் என்பது தெளிவாகியிருக்கிறது.
பசுமைப் புரட்சியின்போது அதிக அளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிப் பயன்பாடு இந்திய வேளாண்மையில் இல்லாத அளவுக்குப் புகுத்தப்பட்டது. அதன் விளைவாக, தானிய உற்பத்தி பெருகியது. நாளும் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஈடுகொடுக்கவும், உர உற்பத்தியில் இந்தியா அன்னிய நாடுகளை எதிர்பார்க்காமல் தன்னிறைவு பெறவும் அன்றைய இந்திரா காந்தி அரசு எடுத்த பசுமைப் புரட்சி நடவடிக்கையைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை.
பசுமைப் புரட்சியின் விளைவாக இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற பிறகு ரசாயன உரத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு, பாரம்பரிய விவசாயத்துக்கு நாம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. பாரம்பரிய வேளாண்மையில் அதிக விளைச்சல் கிடைக்காது என்ற ஒரு வாதம் மட்டுமே தொடர்ந்து 40 ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தொடர்ந்து உர மானியம் வழங்கப்பட்டு உர நிறுவனங்கள் பலனடைகின்றன என்பது மட்டுமல்லாமல், மண்ணும் முழுமையாகப் பாழ்பட்டுக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
பூச்சிக்கொல்லி ரசாயன உரங்களால் உண்ணும் உணவு விஷமாகி, உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் கல்லீரல், சிறுநீரகக் கோளாறுகள், புற்றுநோய், மலட்டுத்தனம் எல்லாமும் அதிகரித்த நிலைமை. உரத்தையும் பூச்சிக்கொல்லி மருந்தையும் குறைக்க நாம் முயற்சிக்கவில்லை என்பது மட்டுமல்ல, முடியவுமில்லை.
மாறாக, சிறுநீரக சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. சிறுநீரகத் திருட்டு ஒரு வணிகமாயிற்று. புற்றுநோய் மருத்துவமனைகள், புற்றுநோய் அறியும் பயாப்ஸி சோதனைக்கான ஆய்வகங்கள் புற்றீசலாக உருவாகியிருக்கின்றன. மலட்டுத் தனத்தைப் போக்கவும், செயற்கை கருவூட்டு வழங்கவும் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் நடக்கிறது. தம்பதிக்கு குழந்தைப்பேறு வழங்கும் செயற்கை கருவூட்டு மையங்கள் எல்லாமும் ஒவ்வொரு நகர்ப் பகுதியிலும் இரண்டு மூன்று உருவாகி, போட்டிப்போட்டு வியாபாரம் நடத்தின. இந்த நோய்களுக்கு அடிப்படைக் காரணமான ரசாயன உரம், பூச்சிக்கொல்லியை தவிர்ப்பதை அரசோ, வேளாண் துறையோ யோசிக்கக்கூட தயாராக இல்லை.
கடந்த 40 ஆண்டுகளாகவே பாரம்பரிய வேளாண்மையில் அக்கறையுள்ள அமைப்புகள் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிக்கு எதிராகக் குரல் கொடுத்து அதன் தீமையை மக்களிடம் எடுத்துச் சென்றன. ஆனால், பரந்துபட்ட அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியவில்லை. இப்போது ஊடகங்களின் ஆதரவு சில ஆண்டுகளாகத்தான் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இயற்கை சாகுபடி, மாடித்தோட்டத்தில் காய்கனி உற்பத்தி, அங்கக வேளாண்மையில் ஈடுபடும் தகவல்கள், பேட்டிகள் என்று காட்சி ஊடகம், பத்திரிகைகள் என எல்லாவற்றிலும் இயற்கை வேளாண்மை குறித்த குரல் கேட்கிறது.
நமக்கு பாரம்பரிய வேளாண்மையின் நன்மை புரிகிறது. ஆனால், நமது மண் பாழ்பட்டுக்கிடக்கிறதே, என்ன செய்ய?

எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, இது தேவையில்லையே

logo


மத்திய அரசாங்கம் திடீரென இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உருவம் பொறித்த தபால் தலைகளை வெளியிடுவதில்லை என்று எடுத்த முடிவு, நாட்டில் பொதுவாக இந்த வீண் சர்ச்சை எதற்கு?, இது தேவையில்லையே? என்ற உணர்வுகளைத்தான் ஏற்படுத்துகிறது. ஆதிகாலத்தில் இருந்து மனிதனுக்கு தகவல் தொடர்பு மிக முக்கியமாக இருந்தது. தபால் மூலம் கடிதம் அனுப்பும் சீரியமுறை மனிதனின் தகவல் தொடர்பை வலுப்படுத்துவதற்காக வந்தது. அதன்பிறகு, டெலிபோன், தந்தி என்று எத்தனையோ வந்தாலும், சாதாரண மனிதனுக்கு தகவல் தொடர்பில் ஆபத்பாந்தவனாக தபால்தான் விளங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், முதல் தபால் தலை 1947–ம் ஆண்டு நவம்பர் 21–ந் தேதி வெளியிடப்பட்டது. இப்படி நீண்டநெடிய வரலாறு கொண்ட தபால் தலைகளில், தொடர்ந்து பல தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் அவர்களின் உருவம் பொறித்த தபால் தலைகள் இப்போது வெளியிடப்பட்டுகொண்டு வருகிறது. சிலருக்கு ஒருமுறை மட்டும் அச்சடிக்கும் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும். சிலருக்கு தொடர்ந்து அவர்கள் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுவரும்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மத்திய தகவல் தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத், ‘‘இத்தகைய சிறப்பு தபால் தலையில் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உருவம் பொறித்த அஞ்சல் தலைகள் இனி நிறுத்தப்படும். தபால் தலைகள் பற்றி முடிவெடுப்பதற்காக ஒரு ஆலோசனை குழு இருக்கிறது. அதில் பலதரப்பட்ட நிபுணர்கள் இருப்பார்கள். அந்த குழுதான் இந்த முடிவை எடுத்துள்ளது’’ என்று கூறியுள்ளார். தபால்தலை மட்டுமல்லாமல், இன்லேன்ட் கடிதத்தில் இந்திராகாந்தியின் உருவத்திற்கு பதிலாக இனி யோகா படம் இருக்கப்போகிறதாம். இந்த ஆலோசனைக்குழு இனி 24 தலைவர்களின் உருவம் பொறித்த தபால் தலைகள்தான் வெளியிடப்படும் என்று பட்டியலிட்டுள்ளது. அதில், ஏற்கனவே இருந்த பட்டியலில் உள்ள மகாத்மா காந்தி, ஜவஹர்லால்நேரு, டாக்டர் அம்பேத்கர், அன்னை தெரசா படங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் என்று அறிவித்துள்ளது. மற்ற தலைவர்களை பொறுத்தமட்டில், இந்த புதுப்பட்டியலில் சர்தார் வல்லபாய்படேல், மவுலானா ஆசாத், சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ராஜேந்திரபிரசாத், ஜெயபிரகாஷ் நாராயண், பகத்சிங், தீனதயாள் உபாத்யாயா, ஷியாமா பிரசாத் முகர்ஜி, ராம் மனோகர் லோகியா, விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், பாலகங்காதர திலகர், மகாராணா பிரசாத், சிவாஜி போன்றோர் படங்கள் இடம்பெற்றிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு குடும்பமே இடம்பெற வேண்டுமா? என்று கேட்கிறார்கள். நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், இந்திராகாந்தியும், ராஜீவ்காந்தியும் பிரதமர்களாக இருந்தவர்கள். என்னதான் கருத்துவேறுபாடு இருந்தாலும், அவர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும், இப்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தில் யாரும் தபாலை பெரிதாக பயன்படுத்துவதில்லை. மிகக்குறைந்தபட்ச பயன்பாடுதான் இருக்கிறது. அப்படியிருக்க, இதை எடுப்பதில் என்ன வந்துவிடப்போகிறது. இருந்துவிட்டு போகட்டுமே என்று நினைப்பதே நல்லது. நாட்டில் தொழில்வளர்ச்சி போன்ற எத்தனையோ முன்னேற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசாங்கம், இதைப்போன்ற சிறிய விஷயங்களை ஒரு பொருட்டாக நினைக்கவேண்டாமே. மேலும், இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற பெரும்பங்காற்றிய தலைவர்களின் பெயர்கள் விட்டுப்போய்விட்டதே, அதையும் இந்த பட்டியலில் சேர்க்கலாமே என்ற உணர்வுதான் மக்களிடம் இருக்கிறது.

Monday, October 5, 2015

Four years into international services, Trichy airport still looks wistfully at Gulf..TOI

TRICHY: As Trichy International Airport enters the fourth year of its international operations from Sunday, the non-inclusion of the airport in the BASA (Bilateral Air Services Agreement) continues to prevent foreign carriers from starting operations from the city to the Gulf countries.

While passenger traffic is increasing year on year with more services towards south east Asian countries, people from southern states still demand direct carriers to the Gulf. The overseas passenger traffic is set to cross 13 lakh this year.

BASA is an agreement between two countries which allows international commercial air transport between their territories. A senior official of the aviation department at the airport said every year, the agreement is revised based on capacity addition and the requirement of carriers. Several prominent Gulf carriers asked for seat allocation for Trichy, but it was never awarded.

According to data obtained from the Trichy International Airport and the directorate general of civil aviation, passengers have been increasing over the years and overseas passengers contribute majorly to this growth. The airport receives at least 1,000 passengers every day.

Trichy Airport, which has a 70-year-old history, handles about five major international flights, most of them flying to south east Asian countries and only one of them flying to gulf countries directly. Though Indians have been travelling to Gulf countries for work in huge numbers for several decades, Trichy still has just one Indian carrier flying to Dubai with a full capacity load.

"A large chunk of the population in the southern districts migrate to the Gulf to work as labourers. Trichy remains one of their connecting points and on a daily basis, at least 350 of them travel to and from Trichy to several places in the Gulf," said Khaleel Bhaqvi, secretary of the Kuwait- Tamil Islamic Community in Kuwait.

He added that prior to the awarding of 'international' status to the Trichy airport, Indian Airlines used to operate flights to Kuwait and Sharjah. But this was later dropped citing several reasons. Several representations have been sent to the ministry of civil aviation to revive the services.

A senior official from the airport said, "The runway needs to be at least 10,000 feet long to allow wide-bodies aircraft to land at the airport. For now, the airport only takes in narrow-bodies aircraft. Concerns about the danger of short runways have increased after the Mangalore air crash of 2010," they said.

இயற்கை வளங்களைக் காப்போம்!


Dinamani

By சா. ஷேக் அப்துல் காதர்

First Published : 05 October 2015 01:23 AM IST


இன்றைய சூழலில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை. சுத்தமான நீரைப் பருக முடியாத நிலை உள்ளது. நீர், நிலம் இவ்விரண்டுமே தனது தன்மையை இழந்து வருகிறது. நீர் நிலைகள் அழிந்தும், வன வளங்கள் அருகியும் வருவதால் நாம் இதுபோன்ற பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
÷25 ஆண்டுகளில் நாம் அனுபவித்து வந்த இயற்கை வளங்கள், இன்று அருகி வருவதைக் காண்கிறோம். நீர், மணல், வனங்கள், வன உயிர்கள், புல்வெளிகள், தாதுக்கள் என எண்ணற்ற இயற்கை வளங்களை நாம் பெற்றுள்ளோம். மனித இனத்தின் பெருங்கொடை இயற்கை வளங்கள்தான். மனிதன் இயற்கையை சார்ந்தே வாழ்ந்து வருகிறான். எனவேதான், இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம் முன்னோர்கள் அவற்றை தெய்வமாக வழிபட்டனர்.
÷இயற்கைக்கு மாறாக அதிகரித்து வரும் நகரமயமாதல், தொழில்மயமாதல், மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற காரணங்களால் மாசுபட்ட நீர் நிலைகள், வறண்ட நீர் நிலைகள் என இயற்கை வளங்கள் அருகி வருகின்றன.
÷தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உற்பத்தியாகும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரவருணி போன்ற நதிகள் நாட்டின் உணவு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகப் பகுதிகளில் பாய்ந்து கடலில் கலக்கும் தாமிரவருணி நதி, ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகளால் மாசுபட்டு வருகிறது. பெருமளவில் மணல் அள்ளப்பட்டதால், தாமிரவருணி நதியில் பாறைகள் மட்டுமே மிஞ்சி
இருக்கின்றன. மணல் வளம் குறைந்ததால் நீரின் சுவையும் நாளுக்கு நாள் மாறி வருகிறது.
÷தாமிரவருணி நதியின் போக்கு மாறியதால் பல இடங்களில் ஓடையாக காட்சியளிக்கிறது. நீர் நிலைகளில் மணல் எடுத்தல், வனங்களில் மரங்களை வெட்டுதல், காடுகளை விளைநிலங்களாக ஆக்கிரமித்தல் போன்ற மனிதனின் நடவடிக்கையினால் இயற்கை வளங்களின் பரப்பளவு குறைந்து வருவது உண்மை.
÷மனித உயிரினம் மட்டும் பெருகி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பிற விலங்கினங்கள், தாவர வகைகள் குறைந்தும், அரிதாகியும் வருகின்றன. பல உயிரினங்கள் அவை இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியும் முன்பே அழிந்துவிடும் அபாய நிலையில் இருப்பதை உணர முடிகிறது.
÷சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மொத்த வனங்களின் பரப்பளவு 70,000 லட்சம் ஹெக்டேர். இந்தியாவில் ஆண்டுதோறும் 15 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி குறைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. நாட்டின் வளங்களில் மூன்றில் ஒரு பங்கு வன வளம் இருக்க வேண்டும். அதாவது 30 சதவீதம் இருக்க வேண்டிய வனங்கள், தற்போது 19 சதவீதமாக உள்ளன. தமிழகத்தில் 13 சதவீதக் காடுகள்தான் இருக்கின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தி, சீதோஷ்ண நிலையைச் சமன் செய்கின்றன.
÷பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்து வருவதற்கு தட்பவெப்ப நிலை மாற்றம்தான் காரணம். அதிகரித்து வரும் வெப்பத்தால் உயிர்த் தாவரங்கள் அழியும் அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
÷அதிகரித்து விட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, இயற்கைப் பாசன முறையிலிருந்து விலகிச் சென்றதன் விளைவு, நிலப் பயன்பாட்டின் மாற்றம், காற்றை மாசுபடுத்தும் எரிபொருள்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கலந்த புகை, பெருமளவில் வெளியேற்றப்படும் கழிவு நீர் போன்றவை புவி மண்டலத்தை வெப்பமடையச் செய்கின்றன.
புவி வெப்பம் அதிகரிப்பதால் அதிக வெள்ளப் பெருக்கு, அதேநிலையில் கடும் வறட்சியையும் தருகிறது. தட்பவெப்ப நிலையில் உருவான மாற்றத்தால், போதிய நீர்வளம் இன்றி நீர்வரத்து குறைந்து மிகவும் பாதிப்பைத் தருகிறது. மழை வளம் குறைந்து விட்டது.
நதிகள் இன்றைய சூழலில் கழிவுகளைத் தாங்கும் பள்ளமாக மாறி வருவதுதான் வேதனையானது. பெருநகரங்களில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளில்
இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நீர் நிலைகளில் கலப்பதால், பிராணவாயு குறைந்து நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழியும் சூழல் உள்ளது.
÷நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் அந்நகரங்களை அடுத்துள்ள கிராமங்களில் பெருமளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், மரங்களில் கூடுகட்டி வாழும் பறவையினங்கள், நிழலில் ஒதுங்கும் விலங்கினங்கள் தங்க இடமின்றி அழிந்துபோகின்றன.
÷மரங்கள் குறைந்ததால் வெப்பம் அதிகரித்து உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதால் இன்று அளவுக்கு அதிகமான வெப்பத்தை உணருகிறோம்.
÷இயற்கை வளங்கள், மனிதன் உயிர் வாழ பல அற்புதங்களை நமக்கு அளித்து வருகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருள்களையும் இயற்கை தருகிறது.
இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று.
÷எனவே, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை அழிவதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, October 4, 2015

ஃபேஸ்புக்கை முந்தியது வாட்ஸ் அப்

nanayam.vikatan.com

இளைஞர்களின் இப்போதைய மிக அவசரமான வேலை என்று பார்த்தால் ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். லைவ் சாட்டிங்கில் இவை இரண்டும் தான் இந்தியாவைப் பொறுத்தவரை முதன்மையானவை.


ஆனால் வீடியோ வசதிகளில் ஃபேஸ்புக்கை பின்னுக்கு தள்ளி வாட்ஸ் அப் முன்னிலை வகிக்கிறது. 2004இல் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் இளைஞர்களின் இந்திரபுரியாக இருந்து வந்தது. இதன் மூலம் தொலைந்தவர்களைக் கூட கண்டுபிடிக்கலாம் என்ற அளவில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனாலும் வீடியோக்களுக்கு அவ்வளவு எளிதான வாய்ப்புகள் இதில் இல்லை.


அதற்குப் பின் சமீபத்தில் சந்தைக்கு வந்த வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கைக் காட்டிலும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தனிநபர் சாட்டிங்கில் ஆரம்பித்து, இன்று குழு சாட்டிங் வரை வளர்ந்துள்ள வாட்ஸ் அப், வேகமான வீடியோ மற்றும் புகைப்பட பகிர்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இந்த வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ பகர்தலில் ஃபேஸ்புக்கை முந்தியது வாட்ஸ் அப்.

பெண் எனும் பகடைக்காய்: மகள்கள் என்றும் மகள்களே!



மகள்களுக்கான தினம் என்று கடந்த வாரம் ஒரு தினம் வந்து போனது. எனக்கு மகள்கள் யாருமில்லை என்று சொல்ல மாட்டேன். அன்புடன் அம்மா என்றழைக்கும் பல அருமை மகள்கள் ஊரெங்கும் உண்டு. அவர்களில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்ற செய்தி என் காதுக்கு வந்தாலே பதறித் துடித்து விடுவேன். என்னாலான உதவிகளையோ, தொலைவில் இருக்கிறார்கள் என்றால் அன்பு மொழிகளையோ ஆறுதல் வார்த்தைகளையோ ஆலோசனைகளையோ வழங்குவதுண்டு. பெரும்பாலானவர்களின் இயல்பும் இதுவாகத்தான் இருக்கும்; இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

கடந்த சில ஆண்டுகளில் பிரியா, கோகிலா, காவேரி, நந்தினி, ரோஸி, விமலா, வைதேகி, தற்போது ரமணி தேவி இவர்கள் அனைவரும் தங்கள் ரத்த உறவுகளாலேயே ரத்த விளாறாக்கப்பட்டுக் காணாமல் போக்கடிக்கப்பட்டவர்கள். இந்த மகள்கள் அனைவரும் அவர்களின் பெற்றோருக்கு ஏன் எதிரியாகிப் போனார்கள்? அல்லது அப்படி அவர்களை குரூரத் தன்மையுடன் அந்நியமாக்கியது எது? சாதி என்ற கண்ணுக்குத் தெரியாத சனியன்தானே? பெற்று வளர்த்த குழந்தைகளைவிட அது மேலானதா?

“நாலு பேருக்கு மத்தியில் வாழும்போது மற்றவர்களை அனுசரித்துத்தான் வாழணும்; அதுவும் சுத்தி வர சாதி சனமா இருக்கும்போது அவங்களுக்கு மத்தியில மானம் மரியாதையோட வாழணும்” இப்படி ஒரு பெண் கூறுகிறார்.

தங்கள் பிள்ளைகளின் ஆசை, விருப்பு, கனவு, எதிர்காலம் அனைத்தையும்விட இவர்கள் சொல்லும் ‘மானமும் மரியாதை’யும் அதிக மதிப்புடையவையா? சரி, பிள்ளைகளைக் கொன்று புதைத்தாயிற்று. விஷயமும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. கைது, தண்டனை, சிறைவாசம் இவையெல்லாம் மிக மிக மரியாதைக்குரியவையா என்று நமக்குள் எழும் கேள்வி, அவர்களுக்குள் எழாதா? இல்லை, அவர்களே குறிப்பிட்டதுபோல அந்த சாதி சனம் வந்து காப்பாற்றுவார்களா?

சமீப காலமாகப் பெற்றவர்களா லேயே பெண் பிள்ளைகள் கொல்லப்படும் குரூரம் மனதைப் பதற வைக்கிறது. சாதித் தூய்மை தங்கள் பெண் பிள்ளைகளின் வழியாகத்தான் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பது என்ன மாதிரியான சிந்தனை? தங்கள் வழியாக வந்தவர்கள் என்பதைத் தாண்டி, தங்களின் உடைமைப் பொருளாகப் பிள்ளைகளைப் பார்ப்பதுதானே இங்கு பிரச்சினை. தங்கள் விருப்பம் எதுவோ அதை அவர்களின் மீது திணிக்க முயல்வதும் அவர்கள் மீறும்போது அவர்களை இல்லாமலே ஆக்குவதும் இப்போது தொடர்கதையாகிவருவது மிகுந்த கவலைக்குரியது.

இந்தியா முழுவதுமே காதல் திருமணங்கள் அல்லது சாதி மறுப்புத் திருமணங்கள் ஐந்து சதவீதம்கூட நடைபெறுவதில்லை. வடக்கே மிகுந்த கட்டுப்பாடுகளும் கட்டுப்பெட்டித்தனமும் நிறைந்திருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் கிட்டத்தட்ட 98 சதவீதத் திருமணங்கள் ஏற்பாட்டுத் திருமணங்கள்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில்கூட சாதி மறுப்புத் திருமணங்கள் ஐந்து சதவீதத்தைத் தாண்டவில்லை.

பிற்போக்காளர்களால் இதைக்கூடத் தாங்க முடியவில்லை. வட மாநிலங் களில் கிராமத்துக்குக் கிராமம் ‘காப்’ பஞ்சாயத்துகள் முளைத்தன. சாதி மீறும் பெண்களைத் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து கொலை செய்கிறார்கள். இதற்கு ‘கவுரவக் கொலை’ என்று பெயர் வேறு. இதில் முதலிடம் பிடிக்க உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்கள் போட்டி போடுகின்றன. இப்போது தமிழகமும் இதில் சேரத் துடிக்கிறது போலும்!

கிராமங்களிலிருந்து கல்வியின் பொருட்டு வெளியேறும் மிகக் குறைந்த என்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே உடன் படிப்பவர்களுடனோ அல்லது பணியாற்றுபவர்களுடனோ காதல் வசப்படும் நிலை. கல்வி, நவீன சிந்தனைகள் உருவானதன் விளைவாகவே பெண் தனது இணையைத் தானே தேடும் முயற்சியில் இறங்கினாள். அவர்களிலும் திருமணம் என்ற பந்தத்தை நோக்கி நகர்பவர்கள் மிக மிகக் குறைவு. அதிலும் மாற்று சாதி நபர்களைக் காதலிப்பவர்கள் எண்ணிக்கை இன்னும் குறைவு. இந்தக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களாலேயே தங்கள் சாதித்தூய்மை கெட்டுப்போய் விட்டதாகக் கூப்பாடு போடுகிறார்கள்.

தடியெடுத்தவன் தண்டல்காரனா?

இது காலங்காலமாக நீடிப்பதுதான். நமது நாட்டார் தெய்வங்களில் பலர் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள். சாதித் தூய்மையைக் காப்பாற்றுவதற்காகக் கொன்றுவிட்டு பின் அவர்களைத் தெய்வமாக்கிவிடுகிறார்கள். இப்போதும், தங்கள் வீம்புக்கும் வெறுப்புக்கும் கொல்வதும் பின் தெய்வமாக்குவதும் தொடரலாமா? தமது ஆணவத்துக்காகக் கொன்றுவிட்டு அவளைத் தெய்வமாக்கினால், அவள் தெய்வமாகி தங்கள் சந்ததிகளைக் காப்பாற்றுவாள் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

தற்போது சம்பந்தப்பட்ட ஆண் தாழ்த்தப்பட்ட சாதி என்றால், அவனைக் கொன்று போடுவதும் நடைமுறையாக உள்ளது. தங்கள் மகள்களையே கொன்று புதைக்கும் கூட்டம், அன்னியர் வீட்டுப் பிள்ளைகளைக் கொல்வதற்கு யாரைக் கேட்க வேண்டும்?

மகளும் மனிதப் பிறவியே

பெண் சக்தி, தெய்வம் என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் அப்படியெல்லாம் சொல்ல வரவில்லை. அவள் ரத்தமும் சதையும் உள்ள ஓர் உயிர். ஆண்களுக்குப் படைக்கப்பட்ட மூளைதான் அவளுக்கும் படைக்கப்பட்டுள்ளது. அதனால் சிந்திக்கும் திறனும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனும் அவளுக்கும் உண்டு என்பதைப் பெற்றோர் புரிந்துகொண்டாலே போதும். மகள் இல்லாமல் வாழும் வாழ்க்கையை, மகள்களின் மனம் நிறைந்த சிரிப்பைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அத்துடன் சக மனிதர்களும் அவ்வாறானவர்களே என்று எண்ணினால் கோழியைப் போல அவர்களின் கழுத்தை அறுக்கும் எண்ணம் தோன்றாது.

கொசுறு: காட்டுமன்னார்கோயிலை அடுத்த கிராமம் ஒன்றில், காதலனுடன் போனில் பேசிக் கொண்டிருந்தாள் என்பதற்காக, அரிவாளை எடுத்து தன் பேத்தி ரமணி தேவியின் கழுத்தை வெட்டித் தள்ளி விட்டார் அவளின் ‘பாசக்கார தாத்தா’.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com


http://tamil.thehindu.com/society/women/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/article7720956.ece

ரூ.20 லட்சம் மோசடி: 'ஃப்லிப்கார்ட்' நிறுவனத்தை விழி பிதுங்க வைத்த வீராச்சாமி!

ரூ.20 லட்சம் மோசடி: 'ஃப்லிப்கார்ட்' நிறுவனத்தை விழி பிதுங்க வைத்த வீராச்சாமி!

ஹை
தராபாத்திலுள்ள வனஸ்தலிபுரம்  காவல்துறையினர் விசாரித்து வரும் புகார் சற்று நூதனமானது. இந்த வழக்கு இணையவழி வர்த்தகம் செய்யும் நிறுவனமான ’ஃப்லிப்கார்ட்’, தனது வாடிக்கையாளர் ஒருவரின் மீது  அளித்ததாகும். ஹைதராபத்தைச் சேர்ந்த, 32 வயது மதிக்கத்தக்க, வீராச்சாமி ரெட்டி என்பவரே இந்தப் புகாரில் குற்றம் சாட்டபட்டவர்.
இவர் ‘ஃப்லிப்கார்ட்’ இணையதளத்தின் மூலமாகப் பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார். வாங்கிய பொருட்கள் பிடிக்கவில்லை என்றால் அவற்றைத் திருப்பி அளித்துவிட்டு அதற்கான  தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி ‘ஃப்லிப்கார்ட்’டில் உள்ளது. இந்த வசதியின் மூலம் தான் வாங்கிய பொருட்களை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு, தொகையைத் திருப்பிச் செலுத்திவிடுமாறு ‘ஃப்லிப்கார்ட்’ டிடிம் விண்ணப்பித்திருக்கிறார்   வீராச்சாமி. நிறுவனமும் அவ்வாறேசெய்தது.

அப்படி திருப்பி அளிக்கப்பட்ட பொருட்களைச் சோதித்த போது தான் புரிந்தது, அவை எல்லாம் போலியானவை என்று. இதையே வழக்கமாக வைத்திருந்திருந்த வீராச்சாமி, ஒரு பொருளை இணையதளத்தில் ‘ஆர்டர்’ செய்வது. அது வீட்டிற்கு வந்தவுடன் அதைப் பிரித்து, அதற்கு பதிலாகப் போலியான ஒரு பொருளை உள்ளே வைத்து அட்டைப்பெட்டியை மூடி விடுவது. மீண்டும் ‘ஃப்லிப்கார்ட்’ டைத் தொடர்பு கொண்டு பொருளைத் திரும்பப் பெற்றுக் கொண்டுத் தொகையைச் செலுத்த விண்ணப்பிப்பது என வீராச்சாமி செம பிசியாக இருந்தார். 

இப்படி போலி மெயில்  கணக்குகள்,  போலி விலாசங்கள், போலி வங்கிக் கணக்குகள் என, 200 க்கும் மேற்பட்ட இத்தகைய பரிவர்த்தனைகளில், சுமார் 20 இலட்சம் ரூபாய்க்கு மேல் வீராச்சாமி பிளிப்கார்ட் நிறுவனத்தை ஏமாற்றியிருக்கிறார். நாளடைவில், இந்தப் பின்னணியை கண்டறிந்த அந்த நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்தது.

எத்தனைத் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மனித மனம் தவறான நோக்குடனேயே அதைக் கையாள்கிறது. ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கு வீராச்சாமியும் ஒரு உதாரணம்.
- ச.அருண்

http://www.vikatan.com/news/article.php?aid=53246

Saturday, October 3, 2015

புலி'க்கு வரிச்சலுகை மறுப்பு ஏன்?- அதிகாரிகள் கூறும் காரணங்கள்

Return to frontpage

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'புலி' படத்துக்கு வரிச்சலுகை மறுப்பு ஏன் என்பதற்கான காரணங்களை அதிகாரிகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'புலி'. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு வரிச்சலுகை அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். அதற்கான காரணம் என்ன என்பது வெளியாகாமல் இருந்தது.

'புலி' படத்துக்கான வரிச்சலுகைக்கான காட்சியை சி.பழனி, ம.சி.தியாகராஜன், முனைவர் கா.மு.சேகர், டி.ஐ.மகாராஜன், ஏ.ஐ.ராகவன் மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் பார்த்திருக்கிறார்கள். ஏன் வரிச்சலுகை அளிக்கவில்லை என்பதற்காக அவர்கள் கூறியிருக்கும் காரணங்கள்.

* திரைப்படத்தில் மூட நம்பிக்கைகளை உண்மையாக காட்டப்படும் காட்சிகள் தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் உள்ளன.

* படத்தின் பாடல் காட்சியில் மகளிரின் ஆடைகள் ஆபாச காட்சிகளாக சில இடங்களில் அமைந்துள்ளன.

* படத்தில் குழந்தையின் கழுத்து அறுபடுவது, சண்டைக் காட்சியில் வன்முறை, கொலைக்காட்சிகள் நேரிடையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

* மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கவில்லை. குழந்தைகளையும், பெண்களையும் வெட்டிக் கொல்லுவது ஏற்புடையதாக இல்லை. அதிகமான வன்முறை காட்சிகள் உள்ளது.

* திரைப்படம் முழுக்க வன்முறை அதிகரித்துள்ளது. ஆரம்பித்திலே இரட்டை அர்த்த வசனங்கள், 12 வயது குழந்தை கழுத்து வெட்டப்படுவதாக காட்டப்படுகிறது. மேலும், படம் முழுவதும் மூட நம்பிக்கைக்கு உயிர் ஊட்ட முளைத்திருப்பதால் வரி விலக்கிற்கு தகுதியானது அல்ல.

இவ்வாறு வரிச்சலுகை அதிகாரிகள் அனைவருமே ஆபாசம் மற்றும் வன்முறைக் காட்சிகளை மேற்கோள்காட்டி படத்துக்கு வரிவிலக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Passenger lights up on flight from Muscat...times of india

MUMBAI: When seated in economy class, there are many things a passenger does to get a tad comfortable. Some twist and turn in their cramped seats. A passenger onboard a flight from the Middle East to India had a better idea. He coolly fished out a pack of cigarettes and, to the surprise of his co-passengers, out came a lighter. But just after the twain had met, onlookers reported him to the cabin crew and his plans to enjoy a cigarette in the sky went up in smoke.

It is not possible to fly on board a passenger aircraft without encountering a good number of no-smoking signs, apart from literature on the ban in lighting up. All of that seems to have escaped the notice of the passenger on Jet Airways Muscat-Mumbai flight 9W591 on Tuesday. "The said passenger, a Bangladeshi national, was in his seat when he casually took out a cigarette and a lighter and had just lighted it when cabin crew, who were alerted by co-passengers, had it extinguished," said an airline official.

The crew did not have any problems dealing with the passenger. "They warned the passenger, who by then realised that smoking was banned in an aircraft," the official added. But the passenger was not unruly and kept apologising through the flight.

A Jet Airways spokesperson confirmed the incident. "He tried to light a cigarette during the flight. The cabin crew took prompt action in line with Jet Airways safety regulations and prevented the passenger from smoking. On landing in Mumbai the passenger was met by security personnel for further action," said the airline response. It was learnt that the passenger was let off after a warning.

But the question that remains is how did the passenger manage to sneak in a lighter on board the aircraft. "It seems to be a lapse on part of security personnel at Bahrain airport. A lighter is one of the items banned in flights. It should have been confiscated at the airport itself," said an aviation security official.

In India, smoking in aircraft was banned sometime in the 1990s. Before that, there were smoking sections in aircraft flown in India and abroad. Smoking was identified as a flight safety hazard after it contributed to inflight fires and accidents (see box).

அரசு விளம்பரங்களில் ‘முதல்–அமைச்சர்’ படம்

logo

இந்திய ஜனநாயகத்தில், மத்திய அரசாங்கம் பிரதமர் தலைமையிலும், மாநில அரசுகள் முதல்–அமைச்சர் தலைமையிலும் இயங்குகின்றன. மாநில அரசில் முதல்–அமைச்சர் என்பவர் அந்த மாநிலத்தின் முகமாக கருதப்படுகிறார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சியே அதன் முதல்–அமைச்சரை பொருத்துத்தான் இருக்கிறது. பொதுவாக அரசின் சாதனைகள் என்றாலும் சரி, திட்டங்கள் என்றாலும் சரி, கொள்கைகள் என்றாலும் சரி, சமூகநலப்பணிகள் என்றாலும் சரி, வளர்ச்சி பணிகள் என்றாலும் சரி, அரசு செயல்படுத்துவது மக்களுக்குப்போய் சேர்ந்தால்தான் மக்கள் அதை நன்றாக தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு, அறிந்துகொண்டு அதன்பலனை அனுபவிக்க முடியும். என்னதான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டாலும், நிச்சயமாக எந்த பத்திரிகையாலும் இந்த தகவல்களை முழுமையாக கொண்டுபோய் சேர்க்கமுடியாது. இதற்கு கைகொடுப்பது பத்திரிகைகளில் அரசு வெளியிடும் விளம்பரம்தான். இதுபோன்ற திட்டங்களுக்கு மக்களின் கவனம் ஒரு விளம்பரத்தில் அதிகமாக செல்ல வேண்டும் என்றால் வெறுமனே வாசகங்கள் இருந்தால் போதாது. அந்த விளம்பரங்களில் படங்கள் நிச்சயமாக இருக்கவேண்டும். மறைந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், ‘‘பத்திரிகையில் ஒரு பக்கத்தில் படம் இல்லாமல் வெறும் செய்தி மட்டும் இருந்தால், அந்த பக்கம் பாலைவனம்போல இருக்கிறது’’ என்று கூறுவார். நிச்சயமாக விளம்பரத்துக்கும் அது பொருந்தும். அந்த திட்டத்தை செயல்படுத்தும் முதல்–அமைச்சர் படம் இருந்தால் நிச்சயமாக அதைப்பார்க்க தூண்டும் ஆர்வத்தை மக்களுக்கு ஏற்படுத்தும்.

ஆனால், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முதல்– அமைச்சர்களின் படம் அரசு விளம்பரங்களில் இடம்பெறக்கூடாது என்ற வகையில், ஒரு வழக்கை பதிவு செய்தனர். இதையொட்டி, வழிமுறைகளை வகுக்க உச்சநீதிமன்றம் ஒரு மூவர் கமிட்டியை அமைத்தது. அந்த மூவரும் பத்திரிகை துறைக்கே சம்பந்தம் இல்லாதவர்கள். அவர்கள் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி படங்களை தவிர, வேறு யார் படங்களும் அரசு விளம்பரங்களில் இருக்கக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அப்போதே இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அரசு விளம்பரங்களில் முதல்–அமைச்சர் படங்களை மறைப்பதால் என்ன பயன் வந்துவிடப்போகிறது?, அதே விளம்பரத்தை கட்சி சார்பில் கொடுத்து அதில் முதல்–அமைச்சர் படத்தை வைத்தால் யார் தடை செய்ய முடியும்?, இப்படி ஏட்டிக்கு போட்டி விளம்பரங்கள் வந்தால் உச்சநீதிமன்றத்தின் எந்த நோக்கம் நிறைவேறும்? என்றெல்லாம் விமர்சனங்கள் கூறப்பட்டன.

இந்த நிலையில், கர்நாடகம், மேற்கு வங்காளம், அசாம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த தீர்ப்பின் மீதான மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, மத்திய அரசாங்கத்துக்கு ஒரு நோட்டீசை அனுப்பியுள்ளது. இதுபோல, உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. மத்திய அரசாங்கம் இப்போது ஒரு நல்ல முடிவை எடுத்து, மாநில அரசுகள் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் மாநில முதல்–அமைச்சர்கள் படங்கள் இருப்பதில் தவறில்லை என்பதை தங்கள் நிலையாகவும், அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தங்கள் பதில் மனுவில் தெரிவிக்கலாம். பிரதமர் படம் அரசு விளம்பரங்களில் இடம்பெறலாம் என்றால், கண்டிப்பாக மாநிலங்களிலும் முதல்–அமைச்சர் படங்கள் இடம்பெறவேண்டும். அதுதான் கூட்டாட்சியின் தார்ப்பரியம்.

Friday, October 2, 2015

விமானம் பறக்கட்டும்... விமான நிலைய மேற்கூரையும் பறக்க வேண்டுமா?...vikatan



சுமார் 2,300 கோடி ரூபாய் செலவில் புதிதாக (?) கட்டப்பட்ட சென்னை விமான நிலைய வளாகத்தில், அவ்வப்போது மேற்கூரை மற்றும் கண்ணாடி தடுப்புகள் உடைந்து விழுவது அன்றாடச் செய்திகளில் ஒன்றாகி விட்டது. விமானம் பறக்கும் முன்பே மேற்கூரையும், சத்தம் போட்டு பேசினால் உடையும் கண்ணாடி தடுப்புகளும் சென்னை விமான நிலையத்தின் அடையாளங்கள்.

கடந்த 2013ஆம் ஆண்டு இந்த புதிய விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இங்கு கண்ணாடி மேற்கூரைகள், தானியங்கி கண்ணாடி கதவுகள், தடுப்பு கண்ணாடிகள், விளக்கு கண்ணாடிகள் உடைந்து, நொறுங்கி விழும் சம்பவங்கள் இதுவரை 54 முறை நிகழ்ந்துள்ளன. கிரிக்கெட் வீர்களைப் போல தலைக்கவசம், கை, கால் மூட்டு கவசம் அணிந்து செல்லும் அளவிற்கு, எது எப்போது பறக்கும் என்பது தெரியாமல் ஒரு வித பயத்தில் 'பறக்கும் தட்டு' உலகத்தில் நடப்பது போன்ற அனுபவத்தை பயணிகள் பெற்றுள்ளனர்.

நம் பணத்தில் விமானத்தில் பறக்க கூட பல முறை சோதனை செய்வதும், உள்ளே வரக் கூட பணம் கட்டினால்தான் விமானத்தை கண்ணில் காண்பிக்கும் அரசு அதிகாரிகள், இப்படி ரூ.2300 கோடிகள் செலவழித்து கட்டப்பட்ட விமான நிலைய தரத்தை பரிசோதிக்காமல் விட்டு விட்டார்களா, இல்லை மறந்து விட்டார்களா? சி.பி.ஐ அதிகாரிகள் படை, கட்டாயம் விமான நிலைய ஒப்பந்ததாரர்களை நெருங்குவார்களா என்று கேள்வி கேட்கும் நிலையில் கூட, மேலும் பல பொருள்கள் உடைந்து சென்னை விமான நிலையம் 'சாதனையை' நோக்கி நடை போட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றிற்கு சுமார் 342 விமானங்கள் இயக்கப்படுகின்றன. பல லட்சம் பேர் வந்து செல்லும் விமான நிலையத்தின் தரம் மற்றும் வெளிநாட்டினர் மத்தியில் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள் பற்றிய மதிப்பு போன்றவைகள் கேலிக்குரியதாக்கி உள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பதை பற்றி மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை.

அரசு அனுமதி பெறாத கட்டடத்தை இடிக்கச் சொல்லும் நீதிமன்றம் அரசு ஆதரவு பெற்ற லஞ்ச ஊழல் ஒப்பந்ததாரர்களால் போடப்படும் மோசமான சாலைகள், கட்டப்படும் கட்டுமானங்கள், விமான நிலைய பராமரிப்பு பணியை கேள்வி கூட கேட்காத மர்மம் என்ன? சாலை, பாலம், கட்டடம் திறப்பு விழா என கட்சி விழாவாக கொண்டாடும் கட்சிகள், அடுத்த சில மாதங்களிலேயே பல்லைக் காட்டும் பாதாள குழிச் சாலைகள், பலவீனமான பாலங்களின் அவல நிலைக்கும் பொறுப்பேற்றுக் கொள்வார்களா?

கவனக் குறைவால் பணம் போட மறந்த காசோலை வழக்கிற்கு கூட கடுமை காட்டும் நீதிமன்றம், கோடிக்கணக்கில் கணக்கில்லாத பணத்தை வாரிச் சுருட்டும் அரசு ஒப்பந்த வேலைகள் பற்றி கடுமை காட்டாதது ஏன்? நூறு ரூபாய் திருடிய ஆண், பெண்ணை புகைப்படத்துடன் வெளியிடும் காவல் துறை, பல கோடி ஏப்பமிட்ட அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஒப்பந்த வேலை செய்த ஊழல்வாதிகளின் படங்களைப் போட முடியுமா?



அரசு ஒப்பந்தப் பணியில் உள்ள லஞ்சத்தை ஒழித்தாலே நாட்டின் கடனை அடைத்து விட முடியும். ப்ளெக்ஸ் போர்டு வைத்து, பொதுப்பணித் துறையை சேர்ந்த லஞ்ச அதிகாரிகளை அடையாளம் காட்டியும் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறை தானாகவே வழக்கை விசாரிக்காமல், கண்டுகொள்ளாமல் போனது லஞ்சத்தின் பலம், நேர்மையானவர்களை விட அதிகம் என்பதை படம் போட்டு காட்டி விட்டது.

சென்னையை சிங்கப்பூராக்குவேன், கூவத்தை கோபுரமாக்குவேன், கடலை கடைந்து குடிநீர் தயாரிப்பேன் என பல கோடிகள் கொட்டி திட்டம் தீட்டி, இவர்களே ஊழலுக்கு வழி செய்து விட்டு, பின் கருப்பு பண மீட்பு அறிவிப்பும், வருமான வரித்துறை சோதனையும் செய்வது வேடிக்கையாக உள்ளது.

அரசு ஒப்பந்த வேலை தரம் உயர...

மத்திய, மாநில அரசு ஒப்பந்த வேலைகளை கண்காணிக்க, அதி நவீன குழுக்களை நீதிமன்றம் நியமிக்க வேண்டும். ஒப்பந்த வேலைக்கு தரச்சான்று, ஆயுள் உத்தரவாதம் அளிக்க சட்டம் வேண்டும். சான்று தவறாக அளிக்கும் பட்சத்தில், தவறும் பட்சத்தில் பணப்பட்டுவாடா நிறுத்தம், சொத்துக்கள் பறிமுதல், வாரிசுகள் அரசு வேலையில் சேரத் தடை வேண்டும்.

பொதுவாகவே அரசு ஒப்பந்த வேலைகளில் பல கட்டங்களில் பணம் கை மாறுவதாக செய்திகள் வருகின்றன. தேவை இல்லாமல் பணத்தைக் கொட்டி வேலை செய்வது, திட்ட மதிப்பீட்டு தொகையை அதிகமாக காண்பித்து 

பணத்தை கொள்ளை அடிப்பது, ஒப்பந்தம் போடுவதில் ஊழல், வேலையில் பயன்படுத்தப்படும் தரமற்ற பொருள்களின் பயன்பாடு, வேலையை கண்காணிக்காத அரசு அதிகாரிகள், பணம் பெறுவதில் என பலவகையான ஊழல் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட விஷயங்களையும் லஞ்ச ஒழிப்பு, மத்திய புலானய்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு குழு கண்டறிந்தால் பெரும்பாலான அரசு வேலைகள் தரத்துடன் நடக்கும்.

ஒருவர் வாங்கும் லஞ்சப்பணம் பணத்தோடு, அவரோடு தொலைவதில்லை. தரமற்ற ஒப்பந்த வேலையால் பல கோடிபேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பும், தரமற்ற விமான நிலைய பராமரிப்பால் நம் அரசைப்பற்றிய 'மானமும்' சேர்ந்தே பறக்கிறது.

லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்காத வரையில் ஸ்மார்ட் சிட்டி, தொழில் முனையம் எனப் பல பெயர்களில் பணத்தைக் கொட்டினாலும், விமான நிலையக் கூரை மற்றும் கண்ணாடி சிதைந்து உடைவதுபோல பணம் சிதறி ஓடும் என்பது உறுதி.

-எஸ்.அசோக்

இனியும் தயக்கம் வேண்டாம்!..dinamani


By ஆசிரியர்

First Published : 02 October 2015 12:58 AM IST


இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற சட்டம் ஏற்கெனவே உள்ளது. அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்கள் அனைவரும் தலைக்கவசம் வாங்குவதில் ஆர்வம் காட்டியபோது, இந்தத் தீர்ப்புக்கு வழக்குரைஞர்களில் சிலர் தலைவணங்க மறுத்தனர். மதுரையில் தலைக்கவசத்தைத் தீயிட்டுக் கொளுத்தித் தீர்ப்பை விமர்சனம் செய்தனர். பிரச்னை தலைக்கவசத்தில் தொடங்கியது என்றாலும், உண்மையான காரணம் அதுவல்ல.
ஏற்பில்லாத தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டிய வழக்குரைஞர்களே, தீர்ப்பை விமர்சனம் செய்வதை, போராட்டம் நடத்துவதை நீதிமன்றம் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? மதுரை வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஏ.கே.ராமசாமி, தர்மராஜ் இருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் மேற்கொண்டது.
இதைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம், உயர்நீதிமன்றத்தைக் கண்டிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, மதுரை வழக்குரைஞர்கள் 14 பேரை அகில இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கும் உத்தரவிட்டது. இதனிடையே, நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குரைஞர் சங்கம் செயல்படும் உரிமை ரத்து செய்யப்பட்டது.
இதற்கெல்லாம் காரணம், சில வழக்குரைஞர்களின் செயல்பாடுகள் பொறுக்க முடியாத அளவுக்குப் போனதும், வழக்குரைஞர்கள் சங்கமே போராட்டத்தில் இறங்கியதும்தான். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால் சென்ற ஆண்டு தனது விடையனுப்பு விழாவில் வழக்குரைஞர்களின் செயல்பாடுகள் குறித்து மனம் வெதும்பி சில கருத்துகளை வெளியிட்டார். "எனது 37 ஆண்டு கால நீதித் துறை அனுபவத்தில் சந்திக்காததையும், கேள்விப்படாததையும் இங்கு எதிர்கொண்டேன். வழக்குரைஞர்கள் ஜாதியரீதியாக நீதிபதிகளைக் கொச்சைப்படுத்திப் பேசும் போக்கினால், சக நீதிபதிகள் என்னை அணுகி வேறு உயர்நீதிமன்றங்களுக்கு இடமாறுதல் கேட்டனர். வெளி மாநிலங்களில் உள்ள சக நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வர மறுத்தனர்' என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
"போராட்டம் நடத்துவது, நீதிமன்ற விசாரணை அரங்கினுள்ளும், நீதிபதி அறைக்குள்ளும் அத்துமீறி நுழைவது, எதிர்ப்புக்குரல் எழுப்புவது என்று செயல்படுபவர்கள் வழங்குரைஞர்கள்தானா? இதையெல்லாம் சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் ஏன் மௌனமாக வேடிக்கை பார்க்கிறது?' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செப்டம்பர் 21-ஆம் தேதி கேள்வி எழுப்பினர். அதுநாள்வரை மெüனம் காத்த தமிழ்நாடு பார் கவுன்சில், அடுத்த நாளே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 2,495 வழக்குரைஞர்கள் செயல்படத் தடை விதித்தது. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தமிழ்நாடு பார் கவுன்சில் இத்தனைக் காலம் தாமதித்ததுதான், தமிழ்நாட்டில் நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கே அடிப்படைக் காரணம்.
சட்டப் படிப்பில் இணையான தகுதி இல்லாதவர்கள், பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வு எழுதாதவர்கள் உள்ளிட்ட பலர் வழக்குரைஞர் தொழிலை முறையாகச் செய்யாமலும், சட்ட நுணுக்கம் தெரியாமலும், வாதத்திறமை இல்லாமலும், நீதித் தரகு வேலைகளில் ஈடுபட்டதால்தான் நீதிமன்றங்கள் அன்றாடப் போராட்டக் களங்களாக மாறத் தொடங்கின. தங்களுக்கு இசைவாக இல்லாத நீதிபதிகளை நீதிமன்ற வளாகத்தில் விமர்சிக்கும் போக்கு இவர்களால்தான் அதிகரித்தது. புதுப்புதுக் காரணங்களைக் கண்டுபிடித்து நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர். தங்களை அனுசரிக்காவிட்டால் நீதிமன்றமே நடக்காது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் போக்கு தொடங்கியது. அதன் உச்சக்காட்சிதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு பார் கவுன்சில் 2,495 வழக்குரைஞர்களை செயல்படத் தடை விதித்ததன் விளைவு வெளிப்படையாகவே தெரிகிறது. வழக்குரைஞர்கள் சங்கங்கள் செப்டம்பர் 28-ஆம் தேதி அழைப்பு விடுத்திருந்த நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் வெற்றி பெறவில்லை. 60% வழக்கு விசாரணைகள் நடந்தன. இதிலிருந்து பிரச்னைகளுக்கு யார் காரணம் என்பது தெளிவாகி இருக்கிறது.
நீதிமன்ற வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை, வழக்குரைஞர் விசாரணைக்கு ஆஜராகாவிடில், வழக்குத் தொடுத்தவர் இழப்பீடு கோரலாம் என்று தற்போது உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை, பல ஆண்டுகளுக்கு முன்பே தயக்கமின்றிப் பிறப்பித்திருந்தால், இத்தகைய களங்கமான சூழல் நீதித் துறைக்கு வந்திருக்குமா? வழக்குரைஞர்கள் இந்த அளவுக்கு இறங்கிப் போராடுகிறார்கள் என்றால், சில உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மறைமுக ஆதரவும்தான் அதற்குக் காரணம் என்கிற கசப்பான உண்மையையும் மறுக்க முடியுமா?
நீதிமன்றத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், "சில காலத்துக்கு சென்னையில் வழக்குகளைப் பதிவு செய்யலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை தாற்காலிகமாக சட்டப்படி மூடலாம்' என்றும் பரிந்துரைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. இதற்குக் காரணம், வழக்குரைஞர்கள் சிலர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆதிக்கம் செலுத்தி, சில வழக்குகளைப் பதிவு செய்ய வற்புறுத்துகிறார்கள், மறுத்தால் வேறு காரணங்களை முன்வைத்து பிரச்னை செய்கிறார்கள் என்பதுதான்.
தவறு செய்கிற, தகுதியில்லாத வழக்குரைஞர்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் எடுக்கும் நடவடிக்கைகள்தான் நீதித் துறை களங்கத்தைப் போக்கும்.

முதுமையில் இயலாமையின்றி வாழ...


Dinamani


By வ.செ. நடராசன்

First Published : 01 October 2015 01:17 AM IST


முதுமையில் மிகவும் கொடியது என்ன தெரியுமா? அதுதான் முதுமையில் ஏற்படும் இயலாமை. அதாவது, வயதான காலத்தில் தனது தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது.
உதாரணம்: குளிப்பதற்கு, உடை உடுத்துவதற்கு, சாப்பிடுவதற்கு, நடப்பதற்கு இப்படி தன்னுடைய ஒவ்வொறு தேவைகளுக்கும் மற்றவர்களைச் சார்ந்திருப்பது தான் மிகவும் கொடுமையானது.
இந்த இயலாமையைத் தடுத்து, தன் சொந்தக் காலிலேயே நிற்க ஏதாவது வழிகள் உண்டா?
உடல் நோய்கள்: பக்கவாதம், உதறுவாதம் (பார்க்கின்சன்ஸ்), மூட்டு வலி, உடல் பருமன், கண் பார்வைக் குறைவு, காது கேளாமை, ஆஸ்துமா.
மனநோய்கள்: மனச்சோர்வு, மறதி நோய் எனும் டிமென்சியா.
குடும்பம், நிதி சார்ந்தவைகள்: நிதி வசதியின்மை, மனைவி இழந்தவர்கள், விதவைகள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள்.
முதுமையில் எந்த உபாதையும் தராமல், எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போல பல நோய்கள் தொல்லையின்றி மறைந்திருக்கும்.
ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதின் மூலம் மறைந்திருக்கும் பல நோய்களைக் கண்டுகொள்ள முடியும் மற்றும் அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க முடியும்.
இயலாமை இன்றி வாழ, வருமுன் காக்க, கால முறைப்படி பரிசோதனை செய்ய வேண்டும்.
முதியவர்கள் இறப்பிற்கு முக்கியக் காரணம் நுரையீரல் சார்ந்த நோய்களாகும். இதைத் தவிர்க்க தடுப்பூசிகள் உள்ளன.
உ.ம். நிமோனியாவுக்கு ஒரே ஒரு தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஆயுள் முழுவதும் இந்நோயிலிருந்து விடுபடலாம். முதியவர்கள் அடிக்கடி கீழே விழ வாய்ப்புகள் அதிகம் இருப்பதினால், டெட்டனஸ் தடுப்பூசி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டுக் கொள்வது நல்லது.
குளிர்காலத்தில் வரும் ப்ளூ காய்ச்சலைத் தடுக்க ஆண்டுக்கு ஒரு முறை ப்ளூ தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
முதுமைப் பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி உடற்பயிற்சிக்கு உண்டு. வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
நாள்தோறும் மூன்றிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவு நடப்பது நல்லது அல்லது 30 முதல் 45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிதறி ஓடும் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்துவதே தியானம். தியானத்தால் மனம் அமைதி அடைகிறது.
தெளிவான சிந்தனை கிடைக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தி, நாம் நினைத்ததைச் சாதிக்கக்கூடிய தெளிவு பிறக்கிறது.
சமீப காலமாக நமது உணவுப் பழக்கத்தில் பழைமையை நோக்கிப் புறப்பட வேண்டியதாயிற்று. அதுதான் மில்லட்ஸ் என்னும் சிறுதானியங்கள் அடங்கிய உணவுகள்.
முதுமைக் காலத்திற்கு வேண்டிய எல்லா வகையான சத்துகளும் சிறுதானியங்களில் இருப்பதால், அதை முடிந்தவரையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரிசி மற்றும் உணவில் உப்பைக் குறைக்க வேண்டும், நீரை அதிகம் அருந்த வேண்டும்.
எவ்வளவு வயதானாலும் குழந்தை மனநிலையில் இருக்கவே பலரும் விரும்புவார்கள். நம்மை மற்றவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும். அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், நீங்கள் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாய நிலையே உருவாகும்.
அதனால், உங்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பும் வந்துவிடும். எந்தவொரு சின்ன வேலையாக இருந்தாலும் அதை யாருடைய துணையும் இல்லாமல் நீங்களாகவே செய்யப் பழகுங்கள்.
முதுமைக் காலத்தை நிம்மதியாக நகர்த்துவதற்கு பணம் மிக மிக அவசியம். வேகமான வாழ்க்கைமுறை மாற்றங்களைக் கண்டுவரும் இன்றைய உலகில் உண்மையான அன்பிற்கோ, பாசத்திற்கோ மதிப்பு இல்லை. முதுமையில் ஏற்படும் இயலாமையைத் தடுக்க, நடுத்தர வயதிலிருந்தே முயற்சியைத் தொடங்க வேண்டும்.
கால முறைப்படி பரிசோதனை, தினமும் செய்யும் உடற்பயிற்சி, சிறுதானியங்கள் அடங்கிய உணவுப் பழக்கம், தடுப்பூசி போட்டுக் கொள்வது, தினமும் தியானம் செய்வது, முடிந்தளவிற்கு சொந்தக்காலில் நிற்பது அவசியம்.
இத்துடன் தேவையான நிதி வசதியை வைத்துக் கொண்டால், முதுமையில் ஏற்படும் இயலாமை எனும் அரக்கனை கண்டிப்பாக விரட்ட முடியும்.
பிறர் உதவியின்றி சொந்தக்காலில் நிற்க முடியும்.

இன்று உலக முதியோர் நாள்.

கட்டுரையாளர்:
முதியோர் நல மருத்துவர்.
முதுமைப் பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி உடற்பயிற்சிக்கு உண்டு. வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

Thursday, October 1, 2015

பணியின்போது உயிரிழக்கும் அரசு அலுவலர் குடும்பத்துக்கு முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்வு



பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர் குடும்பத்தின் உடனடி தேவைக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நேற்று நிதித்துறை, பொதுத்துறை, ஓய் வூதியங்கள் உள்ளிட்ட துறை களின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகள்:

பணியின்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளர் குடும்பத்துக்கு உடனடி தேவைக்காக வழங்கப் படும் முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த் தப்படும். முன்னாள் படைவீரர் களுக்கு தொழில் சார்ந்த செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க ரூ.1 கோடி வழங்கப்படும்.

முப்படைகளில் பரம்வீர்சக்ரா, அசோக சக்ரா, மகாவீர் சக்ரா உள்ளிட்ட விருதுகள் மற்றும் பதக்கங்கள் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசு மற்றும் ஆண்டு உதவித்தொகைகள் உயர்த்தி வழங்கப்படும். இரண்டாம் உலகப்போரின்போது பணிபுரிந்த தமிழக முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்படும்.

டேராடூன் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளாவில் இருந்த பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு 1956-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்பின் பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் 23 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திருச்சி மாவட்டம், திருச்சி பெரும்பிடுகு முத்தரையர், கரூர் தீரன் சின்னமலை, பெரம்பலூர் திருவள்ளுவர் என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதே ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் செயல்படத் தொடங்கின. இதனால் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. 1997-ம் ஆண்டு முதல் அந்தந்த மாவட்ட தலைநகரங்களின் பெயரிலேயே மாவட்டங்கள் அழைக்கப்படத் தொடங்கியபோது இவை திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களாயின. கரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது முதலில் மணப்பாறையும், அதன்பின் முசிறியும் கரூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. அதன்பின் அவை மீண்டும் திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. கரூர் மாவட்டம் 2895.57 ச.கி.மீட்டர் கொண்டது. மக்கள் தொகை 10,76,588 (2011). மாவட்ட பிரிவினையின்போது எட்டரை லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு பிறகு மீண்டும் 2002-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 2007-ம் ஆண்டு மீண்டும் அரியலூர் மாவட்டம் செயல்படத் தொடங்கியது. தமிழகத்தில் மத்திய மண்டலத்தில்தான் அதிக மாவட்டங்களும், குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களும் அதிகளவில் உள்ளன. குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் முதலிடத்திலும், அரியலூர் 3-வது இடத்திலும் அதனைத் தொடர்ந்து கரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களும் உள்ளன.

Return to frontpage
க.ராதாகிருஷ்ணன்

கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.

தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளாவில் இருந்த பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு 1956-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்பின் பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழகத்தில் 23 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திருச்சி மாவட்டம், திருச்சி பெரும்பிடுகு முத்தரையர், கரூர் தீரன் சின்னமலை, பெரம்பலூர் திருவள்ளுவர் என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அதே ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் செயல்படத் தொடங்கின. இதனால் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. 1997-ம் ஆண்டு முதல் அந்தந்த மாவட்ட தலைநகரங்களின் பெயரிலேயே மாவட்டங்கள் அழைக்கப்படத் தொடங்கியபோது இவை திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களாயின.

கரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது முதலில் மணப்பாறையும், அதன்பின் முசிறியும் கரூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. அதன்பின் அவை மீண்டும் திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. கரூர் மாவட்டம் 2895.57 ச.கி.மீட்டர் கொண்டது. மக்கள் தொகை 10,76,588 (2011). மாவட்ட பிரிவினையின்போது எட்டரை லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு பிறகு மீண்டும் 2002-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 2007-ம் ஆண்டு மீண்டும் அரியலூர் மாவட்டம் செயல்படத் தொடங்கியது. தமிழகத்தில் மத்திய மண்டலத்தில்தான் அதிக மாவட்டங்களும், குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களும் அதிகளவில் உள்ளன.

குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் முதலிடத்திலும், அரியலூர் 3-வது இடத்திலும் அதனைத் தொடர்ந்து கரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களும் உள்ளன.

ரயில் டிக்கெட் வித்தவுட்!

Return to frontpage


சிந்தனைக் களம் » சிறப்புக் கட்டுரைகள்

பத்ரி சேஷாத்ரி


சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. கிண்டி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் என்னைப் பிடித்துவிட்டார். என்னிடம் சரியான டிக்கெட் இல்லை என்றும் நான் அபராதம் கட்ட வேண்டும் என்றும் சொன்னார்.

என்னிடம் கோவில்பட்டியிலிருந்து சென்னை எழும்பூர் செல்வதற்கான டிக்கெட் இருந்தது. நான் தாம்பரத்தில் இறங்கி, புறநகர் மின்சார ரயிலில் ஏறி, கிண்டி ரயில்நிலையம் வந்து இறங்கியிருந்தேன். என் டிக்கெட் எப்படிச் செல்லுபடியாகாது என்று கேட்டேன். அவர் விதிப் புத்தகத்தை எடுத்துக் காட்டினார். பக்கம் 281-ல், விதி எண் 20-ல் நான் செய்தது தவறு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரயில் பயணத்தில், ஒரு குறிப்பிட்ட ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் அந்த ரயிலைத் தவிர வேறு எதிலும் பயணம் செய்யக் கூடாது; முக்கியமாகப் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை என்று அந்த விதியில் போடப்பட்டிருந்தது.

இதே நீங்கள் டிக்கெட் கவுண்டரில் மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் என்று சொல்லி டிக்கெட் வாங்கிக்கொண்டு, பதிவு செய்யப்படாத கம்பார்ட் மெண்டில் ஏறி, தாம்பரம் வந்து இறங்கி, புறநகர் மின் ரயிலில் ஏறி கிண்டி வந்தால் நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையாம். ஆனால், முன்பதிவு செய்துவிட்டால் போச்சு. நீங்கள் தனியாக புறநகர் மின்ரயிலுக்கான டிக்கெட் வாங்க வேண்டும்.

எனவே, என் தவறுக்காக, ரூ. 250 அபராதமும், தாம்பரத்திலிருந்து கிண்டி வருவதற்காக ரூ. 5-ம் சேர்த்து ரூ. 255 கட்டினேன். (ரசீதைப் பெற்றுக்கொண்டேன்.) அதேபோல எழும்பூரிலிருந்து மதுரைக்கோ, திருச்சிக்கோ நீங்கள் முன்பதிவு டிக்கெட் வாங்கியிருந்தால், நீங்கள் கிண்டியில் அல்லது பரங்கிமலையில் வசித்தால், தாம்பரம் சென்று ஏறிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தால், கிண்டி-தாம்பரம் தனியாக டிக்கெட் வாங்கிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்றது அந்த விதி.

ஆனால், இது மிகவும் அபத்தமான விதி என்று தோன்றியது; இதைப் பற்றி ரயில்வே அமைச்சகத்துக்கு எழுதப்போகிறேன் என்று சொன்னேன். இதுதொடர்பாக வலைதளத்தில் எழுதியபோது பலரும் கேலி செய்தனர் என்பது வேறு விஷயம்! என்னைப் போலவே ஏகப்பட்ட பேர் புகார் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

30.7.2015 அன்று ரயில்வே நிர்வாகம் விதியை மாற்றியுள்ளது. இப்போது நீங்கள் திருச்சியிலிருந்து எழும்பூர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயிலில் ஏறி மாம்பலம், கோடம்பாக்கம், கிண்டி என்று எழும்பூருக்கு முன்னதாக இருக்கும் எந்த நிலையத்திலும் சட்டபூர்வமாகவே இறங்கிக்கொள்ளலாம். வேறு எந்த டிக்கெட்டும் வாங்க வேண்டியதில்லை.

தகவல் உரிமச் சட்டம் மூலம் தகவல் பெற்றுத்தந்த பாலாஜிக்கு நன்றி. இதுகுறித்து ஃபேஸ்புக்கில் எழுதி என் கவனத்தை ஈர்த்த வலைப்பதிவர் ‘பிச்சைக்காரன்’ அவர்களுக்கும் நன்றி!

9-ம் வகுப்பு வரை விடைத்தாள் மதிப்பிட உதவும் வலைதளங்கள் S.தாமோதரன்

Return to frontpage

மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வுகள் முடிந்துவிட்டன. தேர்வை எழுதி முடித்த திருப்தியோடு மாணவர்கள், விடுமுறையைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஆசிரியர்களுக்கு இப்போதுதான் வேலையே தொடங்கி இருக்கிறது. விடுமுறையில்தான் எல்லா ஆசிரியர்களுக்கும் விடைத்தாள்களைத் திருத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் ரேங்க் / கிரேடுகளைப் போடும் வேலை இருக்கும். இணைய யுகத்தில் எல்லாமே எளிதாகிவிட்ட நிலையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் எளிதான வழிமுறைகள் வந்துவிட்டன.

1 முதல் 8- ஆம் வகுப்பு வரையிலான மதிப்பெண்கள் மதிப்பீடு

www.way2cce.com என்ற இணையதளத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய முடியும். உங்கள் பள்ளியின் பெயர், மாவட்டத்தின் பெயர், பின்கோடு, மதிப்பெண் ஆகியவற்றைப் பதிவு செய்தாலே போதுமானது. கடவுச் சொல்லை உருவாக்கி நமது ஐடியைப் பதிவு செய்த உடனே FA, SA, Total Grade ஆகிய எல்லாவற்றையும் அதுவாகவே செய்து சமர்ப்பித்து விடுகிறது. இதை ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்தமுடியும்.

9-ம் வகுப்புக்குப் பயன்படும் மதிப்பீட்டுக் கருவி

ஒன்பதாம் வகுப்பிற்குப் பயன்படும் இந்த மதிப்பீட்டுக் கருவி மைக்ரோசாஃப்ட் எக்ஸல்ஷீட்டில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. http://www.kalvisolai.info/2012/08/kalvisolai-cce.html என்ற இணைப்புக்குச் சென்று இதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய முடியும்.

அதில் மாணவர்களைப் பற்றிய விவரம், மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்தால், மிக எளிதாகவும் விரைவாகவும் மதிப்பீட்டு விவரங்களைப் பெற முடியும். அப்படியே பிரிண்ட் எடுத்து சமர்ப்பித்து விடலாம். இது அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்துவதற்கு இணையம் தேவையில்லை; கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஒரு முறை இதனை உங்கள் கணினியில் நிறுவினால் போதும். அப்படியே பயன்படுத்தலாம்.

பொதுவான செயலி

'சிசிஇ கிரேடு கால்குலேட்டர்' என்கிற ஆன்ட்ராய்ட் செயலியைப் பயன்படுத்தியும் கிரேடைக் கண்டுபிடிக்கலாம். இதுவும் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியரின் கண்டுபிடிப்பே. உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

இதைப் பயன்படுத்த https://play.google.com/store/apps/details?id=com.cce.perumalraj.layout1&hl=en என்ற இணைப்பைச் சொடுக்கவும். இந்த செயலி மூலம் மதிப்பெண்களை வைத்து, FA, SA, Total Grade மற்றும் மொத்த மதிப்பெண்களைக் கண்டறிய முடியும்.

அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், மெலட்டூர்.

பதுக்கியவர்கள் தானாகவே செலுத்தினர்: ரூ.3 ஆயிரத்து 777 கோடி கறுப்புப் பணம் வசூல்!

vikatan.com
பதுக்கியவர்கள் தானாகவே செலுத்தினர்: ரூ.3 ஆயிரத்து 777 கோடி கறுப்புப் பணம் வசூல்!

புதுடெல்லி: 
கறுப்புப் பணம் குறித்து அதை பதுக்கியவர்கள் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் ரூ.3,770 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஜூலை மாதம், கறுப்புப் பண சட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது. மேலும் வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை எப்படி மதிப்பீடு என்பது குறித்த விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. அசையா சொத்துகள், நகைகள், மதிப்பு மிக்க கற்கள், ஓவியங்கள், பங்குகள் ஆகியவற்றை தற்போதைய சந்தை விலையில் அதற்கான மதிப்பு கணக்கிடப்படும் என்று மத்திய வரி ஆணையம் (சிபிடிடீ)  கூறிஇருந்தது.  
வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை தாமாக முன்வந்து ஒப்படைப்பதற்காக 90 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் தெரிவிக்கும்போது, வரி மற்றும் அபராதம் என 60 சதவீதம் மட்டுமே செலுத்தி பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்துவிடலாம். மேலும், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிப்பவரிடம் எவ்வித விசாரணையும் நடத்தப்பட மாட்டாது. அவர்கள் அளிக்கும் தகவல் அப்படியே ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், கடந்த 3 மாதங்களாக 638 பேர் தாமாக முன்வந்து தாக்கல் செய்துள்ளதன் அடிப்படையில், அரசு ரூ.3,770 கோடி வசூலித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரையில் தாமாக முன்வந்து கறுப்புப் பண விவரங்களை அளித்தவர்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை.

இதுவரை ரூ.3770 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாலும், இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புலி படம் எப்படி?

cinema.vikatan.com
வேதாளங்கள் மனிதகுலத்தை ஆட்சி செய்கின்றன. கொடுங்கோலாட்சி. அந்தக் கொடிய ஆட்சியை வென்று மக்களைக் காக்கிறார் விஜய். இந்த ஒற்றைவரிக்கதையை    வேதாளமனிதர்கள், அரக்கர்கள், சித்திரக்குள்ளர்கள், பேசும்பறவைகள் மந்திரதந்திரங்கள் ஆகியனவற்றைக் கலந்து பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள்.
வேதாளர்கள் 56 கிராமங்களை ஆட்சி செய்கிறார்கள். அவற்றில் ஒரு கிராமத்தின் தலைவராக இருக்கும் பிரபு, வேதாளவீரர்கள் மக்களைக்கொடுமைப்படுத்தி அவர்களிடமிருப்பவற்றையெல்லாம் பிடுங்கிக்கொள்கிறார்கள் என்று ஊர்மக்களைக் கூட்டிக்கொண்டு வேதாளராணியிடம் முறையிடப்போகிறார். போகிற இடத்தில் தளபதி, ஊர்மக்களைக் கொல்வதோடு பிரபுவை மட்டும் கையை வெட்டி அனுப்புகிறார். கைவெட்டப்பட்ட பிரபுவுக்கு ஆற்றில் அடித்துவரப்படும் ஒரு குழந்தை கிடைக்கிறது. அந்தக்குழந்தையே விஜய். 

விஜய் வளர்ந்து அந்தக்கிராமத்தைச் சேர்ந்த ஸ்ருதியைக் காதலித்துக் கல்யாணம் செய்கிறார். கல்யாணம் முடிந்ததும் வேதாளர்கள் அவரைக் கடத்திக்கொண்டுபோய்விட, அவரை மீட்கப் விஜய் போகிறார். போகிறஇடத்தில் நடப்பதுதான் கதை.

கிராமமக்கள், வேதாளங்களைக் கண்டு பயப்படுகிற நேரத்தில், ஒரு வேதாளத்தின் காலைப்பிடித்துக்கொண்டு, நீங்க வேதாளம் நாங்க பாதாளம் என்று விஜய் வசனம் பேசுகிறார். உடனே பிரபு, புலி பதுங்குறது பாயுறதுக்குத்தான் என்று உடனே அதைச் சமன்செய்கிறார். 

விஜய் தன் வழக்கமான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் ரசித்து நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் புதுவேகம் காட்டியிருக்கிறார். புலிவேந்தனாக வருகிற காட்சிகளில் ஓர் உண்மையான தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். 

ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இரண்டு நாயகிகளையும் சரிசமமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். முதல்பாதியில் ஸ்ருதிஹாசன் இரண்டாம்பாதியில் ஹன்சிகா என்று கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்கள். கொஞ்சமே நடித்து தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்கிறார்கள். 

ராணியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி, இளமையாகத் தெரிகிறார். நடிக்கவும் செய்திருக்கிறார். எல்லாத்தவறுகளும் உங்கள் மூலமாக நடந்தது ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை என்பார்கள். அதற்கேற்ப நடித்திருக்கிறார். உருண்டுதிரண்ட அவருடைய கண்கள் அவருடைய வேலையில் பாதியைச் செய்துவிடுகின்றன. 

தளபதியாக வருகிற சுதீப், கொடுங்கோலர்களுக்குரிய எல்லாஅம்சங்களுடனும் இருக்கிறார். விஜய் உடன் படம் முழுக்க வருகிற தம்பிராமய்யாவும் சத்யனும் சிரிக்கவைக்கிறார்கள். அவர்களுடன் இமான்அண்ணாச்சி, ரோபோசங்கர், வித்யுராமன் ஆகியோருடைய வேடங்கள் வித்தியாசம். 

முதல்பாதியில் இயற்கைஎழில்சூழ்ந்தஇடங்கள், இரண்டாம்பாதியில் பிரமாண்டஅரண்மனைகள் ஆகியனவற்றை தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் மேலும் பெரிதாக்கியிருக்கிறார் நட்டி. பாடல்களில் அவருடைய வேலை பெரிதாக இருக்கிறது. 

தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் ஜிங்கிலியா, புலி புலி பாடல்கள் ஆட்டம்போடவைக்கும். மெல்லிசைரகமான ஏண்டி ஏண்டி ரசிக்கவைக்கும்.  நீங்க தப்பு பண்ணல உங்களச் சுத்தி இருக்கிறவங்கதான் அப்படிப் பண்றாங்க, நான் ஆளவந்தவன் இல்ல, இந்த மக்களை வாழவைக்க வந்தவன், மக்களுக்காக உயிரையும் கொடுக்கிறவன்தான் தலைவன் போன்ற வசனங்களிலும் கடைசிக்காட்சியிலும் விஜய்யின் அரசியல் எண்ணத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. 

விஜய்யின் வெகுமக்கள் செல்வாக்கையும் தன்னுடைய வழக்கமான பேண்டஸியையும் கலந்து புலியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

கழிவறையில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய்க்கு ரிசார்ஜ்!

vikatan.com
பொது  இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் சென்னையில் கழிவறையில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் ரிசார்ஜ் செய்வோம் என்று அறிவிப்பு வைத்து இருக்கிறார்கள்.
இந்த அறிவிப்பைப் பார்த்தால் வித்தியாசமாக இருக்கத்தான் செய்கிறது..... இது உண்மை தாங்க. அதுவும் நம்ம சென்னையில் தான் இதை அறிமுகப்படுத்தி இருக்காங்க... பிரதமர் மோடியின் 'க்ளீன் இந்தியா' என்ற இயக்கத்துக்கு போட்டியா என்று கூட நீங்கள் நினைக்க கூடும்.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 214 இடுகாடுகள் உள்ளன. இங்கு இறந்தவர்களை இலவசமாக எரிக்கும் வசதியை மாநகராட்சி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனாலும் சில இடங்களில் பணம் வசூலிக்கப்படுவதை தடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும், சென்னையில் உள்ள பெரும்பாலான இடுகாடுகள் பராமரிப்பு இன்றி பாழடைந்து காணப்படுகின்றன. இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம், சில இடுகாடுகளை என்.ஜி.ஓக்களிடம் ஒப்படைத்து அவற்றை செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி முதல் அண்ணாநகர் வேலங்காடு நியூ ஆவடி சாலையில் உள்ள மாநகராட்சி இடுகாடு,  ஐ.சி.டபுள்யூ.ஓ என்ற என்.ஜி.ஓ.விடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக புதர்மண்டி கிடந்த இந்த இடுகாட்டுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. அதோடு இடுகாடு பணிகளில் பெண்களையும் பணிக்கு அமர்த்தி புரட்சியை ஏற்படுத்தியது ஐ.சி.டபுள்யூ.ஓ.

இதுகுறித்து ஐ.சி.டபுள்யூஓ என்ற என்.ஜி.ஓ.வின் நிறுவன செயலாளர் ஹரிகரன் கூறுகையில், "அண்ணாநகர் வேலங்காடு இடுகாடு நான்கரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை எங்களிடம் மாநகராட்சி ஒப்படைத்தவுடன் புனரமைப்பு பணிகளை செய்தோம். இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 4 முதல் 5 பிணங்கள் வரும். மொத்தம் 12 பேர் பணியில் உள்ளனர். அதில் 4 பெண்கள். இவர்களுக்கு அலுவல் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக இடுகாட்டில் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. கழிவறைகள் இருந்தாலும் கூட அதை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும். அனைவரும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி மூலம் அங்கு இருந்த இரண்டு கழிவறைகளை சீரமைத்தோம். அதில் ஆண்களுக்கு ஒன்றும், பெண்களுக்கு ஒன்றும் என பயன்பாட்டுக்கு விட்டோம். தினமும் கழிவறையை பராமரித்து சுத்தமாக வைத்திருந்தாலும் அவற்றை இடுகாட்டுக்கு வருபவர்கள் பயன்படுத்தாமல் பொது இடங்களிலேயே சிறுநீர் கழித்து வந்தனர். இதனால் கழிவறையை பயன்படுத்த மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு பரிசு திட்டத்தை அறிவித்தோம்.

கழிவறைக்கு செல்லும் வழி என்று குறிப்பிட்டு 'தயவு செய்து கழிவறையை பயன்படுத்துங்கள். பயன்படுத்தினால் மாபெரும் பரிசு உங்களுக்கு காத்திருக்கிறது' என்ற அறிவிப்பு பலகையை வைத்தோம். அதன்பிறகு மக்கள் கழிவறையை பயன்படுத்தத் தொடங்கினார்கள். சிலர் கழிவறையைப் பயன்படுத்தி விட்டு எங்களிடம் பரிசையும் மறக்காமல் கேட்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு எல்லாம் பேனாவை பரிசாக கொடுத்தோம். மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பரிசு வாங்குபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தது. இதன்பிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்து பேனாவை வழங்கி வந்தோம்.
அடுத்தப்படியாக அக்டோபர் 1ஆம் தேதி (இன்று) முதல் பரிசு வழங்குவதில் சில மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்தோம். ரோட்டரி கிளப் ஆப் மீனம்பாக்கமும், ஐ.சி.டபுள்யூ.ஓ ஆகியவை இணைந்து மொபைல் போனுக்கு ரிசார்ஜ் செய்யலாம் என்று முடிவு செய்தோம். வேலங்காடு இடுகாட்டில் உள்ள கழிவறையை பயன்படுத்துபவர்களின் செல்போன் நம்பர்கள் பெறப்பட்டு அதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 ரூபாய்க்காக ரிசார்ஜ் செய்ய உள்ளோம். இது இன்று தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும்" என்றார்.

நல்லதொரு முயற்சி!

-எஸ்.மகேஷ்

சிவாஜி கணேசன்: சும்மா கிடைத்துவிடவில்லை புகழும், பெயரும்!

vikatan.com


யாரைக் கேட்கிறாய் வரி! எதற்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி!

எங்களோடு வயலுக்கு வந்தாயா! நாற்று நட்டாயா! களை பறித்தாயா! ஏற்றம் இறைத்து நெடுவயல் பாயக்கண்டாயா!


அல்லது அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா!மாமனா! மச்சானா! மானங்கெட்டவனே!





நண்டு சிண்டுகளும் சர்வ சாதாரணமாக உச்சரிக்கும் வசனம் இது. அந்த அளவிற்கு இவ்வசனம் சென்றடைவதற்கு காரணம் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்.

" மண்ணுலகம் போற்றும் மாபெரும் நடிப்புப் பல்கலைக்கழகம் "
'பட்டைதீட்டப்பட்ட நடிப்பில் இவருக்கு நிகர் இவரே!'
அவ்வாறு புகழ்பெற்ற சிவாஜி கணேசன் தமிழ் திரைப்படத்தின் மாபெரும் சரித்திரக் குறியீடு!.

விழுப்புரம் மாவட்டத்தில் சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணிக்கும் அக்டோபர் 1,1928 ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் சின்னையா பிள்ளை கணேசன்.இவர் திரைப்பட உலகிற்கு வரும் முன் பல மேடை நாடகங்களில் நடித்தார்.

'இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தி்ல் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் திறமையை வியந்து, தந்தை பெரியார் அன்போடு சிவாஜி கணேசன் என அழைக்க, அதுவே அவரது பெயராக நிலைத்தது.




நல்ல குரல் வளம், கணீரென தெளிவான உச்சரிப்பு இவருக்கே உரித்தான அடையாளங்கள். பராசக்தி படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தடம் பதித்தார்.

இவர் அல்லாது ராஜ ராஜ சோழன்,கப்பலோட்டிய தமிழன்,கட்டபொம்மன் இன்னும் பல வீரர்களையும் தேசத்தலைவர்களையும் பாமரத்தமிழன் அறிந்திருப்பானோ? இவர் நடித்த மனோகரா,பாசமலர், வசந்தமாளிகை பந்த பாச உணர்வுகளின் ஊற்று.

இவர் நடித்த படங்கள் 300 க்கு மேல், இவர் தொடாத கதாபாத்திரங்களே இல்லை.

இவருடைய பராசக்தி திரைப்படத்தின்போது அப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.வி.எம் சரவணன், புதுமுகமான இவரை நடிக்க வைக்க நம்பிக்கையில்லாமல் யோசித்தார்.

நேஷனல் பிக்சர்ஸ் பி்.ஏ பெருமாள் மன உறுதியோடு அவரை நடிக்க வைத்தார். அதையெல்லாம் தாண்டி அவரின் நடிப்பின் சிறப்பால் அப்படம் வெற்றி விழா கண்டது. ஊன்றுகோல் கொடுத்த அவரை மறக்காது, இறுதி மூச்சிருக்கும் வரை அவரின் வீட்டிற்கு சென்று சீர் அளித்து, அவரிடம் ஆசி பெற்று சென்றிருக்கிறார்.

விளம்பரம் அல்லாது இயலாதோர்க்கு பல உதவிகளை வழங்கினார்.

சீனப் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு தன் நகைகளை நன்கொடையாக வழங்கினார். நடிப்பிற்காக இவர் மேற்கொண்ட சிரமங்கள் சொல்லி மாளாதவை.



சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் அவர் நடிப்பின் தோரணையை மட்டும் கண்டு களித்தோமே, ஆனால் அதன் பின்னே இருக்கும் வலிகள் பல நாம் அறியாதவை. அச்சமயம் பல மாறுபட்ட வேடங்களில் இரவு பகலாக நடித்ததால் தன் உடலை வருத்திக் கொண்ட அவர், அவ்வசனத்தை பேசிய பின்னர் அவர் வாயிலிருந்து ரத்தம் கசிந்தது. அதனையும் பொருட்படுத்தாது முரசு கொட்டிக் கொண்டே பேசி முடித்தார்.

அதே படத்திற்காக படத்தளத்தில் ஆங்கிலேயருடன் போரிடுவது போன்ற காட்சிக்காக குதிரையின் மீது அமர்ந்து வாள் ஏந்தி சண்டையிட்டார். அப்போது குதிரை திடீரென எதிர்பாராது, துப்பாக்கி சத்தம் கேட்டு தரி கெட்டு ஓட ஆரம்பித்தது,போகக்கூடாது என எச்சரிக்கபட்ட பகுதிக்கு அவரை இழுத்து சென்றது. அவர் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. படக்குழுவினர் அவரை தேடி ஓடினர். அங்கு சென்று பார்த்தபோது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, கை கால்களில் ரத்தம் வழிய வழிய நின்றபடி, "ஷாட் நன்றாக வந்ததா?" என்று கேட்டார் நடிகர் திலகம்.

"இந்த ஷாட் இரண்டாயிரம் பேர் நடித்தது. அது என் ஒருவனால் வீணாகக்கூடாது என்றுதான் இந்த சிரமத்தை மேற்கொண்டேன்" என்றார். இவ்வாறு ரத்தம் சிந்தி நடிப்புக்கே தன்னை அர்பணித்ததற்காக கிடைத்த விருதுகள் இங்கே...

1966- பத்மஸ்ரீ விருது.
1969- தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது.
1984- பத்ம்பூஷன் விருது.
1986-ல் கெளரவ டாக்டர் பட்டம் அண்ணாமலை பல்கலைகழகம் வழங்கியது
இவரின் படம் பதித்த 4ரூபாய் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
1995- செவாலியர் விருது பிரான்சினால் வழங்கப்பட்டது.
1996- ல் குடியரசுத் தலைவர் அளித்த தாதாசாகிப் பால்கே விருது.

அவர் நடித்து வெளிவந்த வெற்றிப்படம் கர்ணன். இப்படம் 48 வருடங்களுக்கு பின்னர் இதனின் முக்கியத்துவம் உணர்ந்து டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

சென்னை மாநகரில் இவரின் பெயரில் அமைந்த சாலை அமைந்துள்ளது.

இவருக்காக சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர் பெயரிலான மணிமண்டபம் கட்ட அரசு நதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அவமானங்கள், பல இன்னல்கள் என கடந்து வரலாற்றினை தன் வசமாக்கிக் கொண்ட அவரின் பிறந்தநாளை, அதே வரலாற்றில் அடையாளம் காண்கிறோம் இன்று..!

ப.பிரதீபா

Govt withdraws certificates of private medical college...times of india

PUDUCHERRY: Puducherry government withdrew essentiality certificates issued to a private medical college and hospital for increasing students' intake from 100 to 150 after the institute failed to provide MBBS seats to the government proportionate to the increase in intake of students for two academic years 2014-15 and 2015-16.

The government sent copies of its withdrawal order to the Union ministry of health and family welfare, Medical council of India and Pondicherry University.

The government issued the certificates (dated May 21, 2013 and October 11, 2013) to Pondicherry Institute of Medical Sciences (PIMS) for increasing the intake of students from 100 to 150 with a condition that the institute must allot seats to the government proportionate to the increase in students' intake.

PIMS, which allots 35% of seats to government, has to allot 18 seats to the government out of the additional intake of 50 seats.

However, the institute did not allot additional seats to the government for the academic year 2014-15.

The institute did not also take any efforts to allot 18 additional seats to the government for the academic year 2015-16 also. The government issued a showcase notice to the institute on September 21.

The institute however maintained that the government has absolutely no power to impose any apportionment of seats upon unaided private professional institutions and fixation of quota could only be possible by consensual agreements between the government and such private educational institutions. The institute further said it did not agree to surrender more than 35 seats.

"The willful failure of Pims to provide seats to Puducherry government against the additional intake of 50 seats during 2014-15 and the conduct and recalcitrant attitude of Pims during 2015-16 with a view to avoid giving seats against additional intake are responsible for Puducherry Centac students' and parents' association calling a bandh on September 22.

This supports that PIMS instead of promoting public interest and public order has by its willful action acted against the public interest and public order," said under-secretary (health) V Jeeva in an order dated September 28.

Various students' and parents' forums charged that the institute admitted 50 students last year and another 50 students this year on its own without following the admission procedure stipulated by the permanent admission committee.

The permanent admission committee chairman and former Madras High Court judge justice A C Arumugaperumal Adityan in February this year declared that the admission and other connected activities carried out by PIMS for academic year 2014-15 as null and void.

IRCTC to launch Delhi-Agra-Jaipur trip from Nov 21..TOI

AGRA: From November 21 onwards, people will be able to go on a whirlwind trip to Agra and Jaipur from Delhi. Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) has launched a two-day, one-night package, dubbed the 'golden triangle', for people wanting to visit the two cities from Delhi.

Under this plan, train tickets of three Shatabdi Express have been linked to offer a comfortable and hassle-free travel schedule for tourists.

The itinerary of IRCTC's 'golden triangle' initiative is as follows: guests will board the Delhi-Habibganj Shatabdi early morning at New Delhi station and de-board at Agra. The package includes sightseeing of the Taj Mahal, the Agra Fort and Idmat-ud-daula, with lunch at a 5-star hotel in the city. After that, they will board the Agra-Jaipur Shatabdi to reach Jaipur, where they are to stay at Nirwana Hometel for the overnight halt.

The following morning, after breakfast, guests would be taken to Amber Fort, the 16th-century palace known for large ramparts, gates and cobbled paths. Lunch will be organized at the hotel. After lunch, they will visit the City Palace museum. After that, the tourists will be transported to the Jaipur railway station to board the Jaipur-New Delhi Shatabdi Express.

All sightseeing will be conducted in air-conditioned vehicles with experienced licensed guides. The package, slated for every Saturday and Sunday, will be begin from November 21. The package is priced at Rs. 9,444 per person on a double occupancy basis, and it excludes the entrance fee to monuments.

Wednesday, September 30, 2015

MCI blacklists 129 doctors, suspension reason not given..TOI

The Medical Council of India has, on its website, put up the names of 129 doctors as being currently blacklisted but without any details of why their licences were suspended. A publicly available list giving names and details of doctors against whom action has been taken is a long pending demand of public health activists.

The 'List of Presently Blacklisted Doctors' is given below the Indian Medical Register list on the MCI website. However, the list seems arbitrary as the website gives no explanation of how the list was arrived at or how or why names might be taken off the list.

The president of the council, Dr Jayshree Mehta, did not respond to queries regarding how the list was compiled or why the list appears to be skewed with doctors from a few states dominating the blacklist. Doctors registered with the medical councils of Maharashtra (43) and Rajasthan (16) comprise 45% of the cases on the black list.




A doctor from Madhya Pradesh was shown to have been suspended for four years from October 2011 till October 2015, but his name has suddenly been removed. No explanation is given for why his name has been removed before the suspension ends.

"You cannot check the reason or the suspension procedure as the minutes of the ethics committee meetings, in which disciplinary action against doctors is decided, has not been put up. Just as MCI maintains the Indian Medical Register with data of doctors registered in all the state medical councils, they ought to maintain a consolidated blacklist of doctors against whom action has been taken by various state medical councils. In the current form, the list is of little use to the public," said Dr M C Gupta, a doctor who is also a lawyer. In the US, for instance, it is easy to find out which doctor has been punished and how many times, pointed out Dr Gupta, adding that a similar list ought to be available to the public here too.

Almost 40% of the cases, 51 out of 129, are marked as "not disposed off" though the date of suspension of the licence is mentioned. More than half of these cases are from 2012, when the current council was not in place. In 2012, MCI was being run by a board of governors nominated by the government. The council was reconstituted in October 2013.

Dr Om Prakash Tiwari from Uttar Pradesh, registered in 1978, has been suspended the longest, for seven years from September 2013 till September 2020. Thirty two doctors have been suspended for five years. Since the reconstituted MCI took over, four doctors have been suspended for five years, and 14 for just one year. In 2015, many doctors were suspended for one month to six months. The system of deciding the quantum of penalty or period of suspension seems arbitrary with no publicly available rules or criteria about how this is decided.

The MCI president also did not respond to questions about whether the MCI had any way of checking if the suspended doctors were continuing their practice or not.

OCI cardholders using Indian passports a concern - The Hindu

Alarmed over the increasing instances of OCI (Overseas Citizen of India) cardholders using Indian passports, despite possessing a passport obtained from other foreign countries, the Ministry of External Affairs (MEA) has lodged complaints with the State police over the issue.

“Despite having passports from other countries, where they have obtained dual citizenship, some were still found to be using Indian passports. We have made complaints to Chennai Police Commissioner,” Regional Passport Officer K. Balamurugan said.

An Indian passport is valid only till the time the passport holder is a citizen of the country and OCIs are to surrender the passport to MEA authorities. “In some cases, they are ignorant of the rule that they cannot use Indian passport after getting dual citizenship from other countries,” he said.

A majority of such cases involved persons from the Union territory of Puducherry (including Karaikal), who obtain dual citizenship from France. “Even after going there, some of them, out of ignorance, come to India using Indian passports,” he said.

Those intending to submit the passports can approach any of the three Passport Seva Kendras (PSKs) and surrender their passports.

According to the Overseas Indian Affairs, a total of 16,91,058 persons have been registered as OCIs as on January 19 this year.

The Overseas Citizenship of India (OCI) Scheme was launched in August 2005 by amending the Citizenship Act, 1955, and become operational in January 2006.

The scheme, presently operated by Home Ministry, provides for registration as OCIs of all persons of Indian origin (PIOs), who were Indian citizens from January 26, 1950 or were eligible to become Indian citizens on that date and who are citizens of other countries, except Pakistan and Bangladesh.

கைகொடுக்கும் "கட்டுச்சோறு'


dinamani


By ஜீவி. சொர்க்கநாதன்

First Published : 25 September 2015 01:07 AM IST


அந்தத் தொலைதூர விரைவுப் பேருந்து, பயண வழி உணவகம் ஒன்றில் மதிய உணவுக்காக நின்றது. பேருந்திலிருந்து இறங்கிய சில பயணிகள் பசியாற உணவகத்துக்குள் புகுந்த சிறிது நேரத்தில் கூச்சல். உணவக உரிமையாளருடன் சிலர் கடும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
பிரச்னை வழக்கமானதுதான், உண்ணத் தகுதியற்ற அந்த உணவுக்கு இரு மடங்கு விலையாம். அதிகாரிகளிடம் புகார் செய்வோம் என கொதித்தனர். அதை லட்சியம் செய்யாத உணவக உரிமையாளர், காசைக் கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் புகார் செய் என்றார்.
கட்டாயத் தேவை, மாற்று வழியின்மை என்ற பயணிகளின் பலவீனமான நிலையே பயண வழி உணவகங்களின் பலமாக மாறிவிட்டிருக்கிறது.
இன்று பெரும்பாலான பிரயாணங்கள் இதுபோன்ற பயண வழி உணவுகளை நம்பியே தொடங்கி சிரமத்தில் முடிகின்றன. அதேவேளையில், அந்த உணவுகளால் அதிக விலையில், வயிற்று உபாதை, மன உளைச்சல் நிச்சயம்.
ஆனால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரயாணங்கள் சுவையான உணவுடன் கூடிய ஒரு சுகானுபவமாக இருந்தது. பிரயாணம் என்றாலே உற்சாகம்தான். காரணம் - கட்டுச்சோறு.
இந்தக் கட்டுச்சோறு இடையில் வந்ததல்ல. பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த முறை அது. சங்க காலத்திலேயே கட்டுச்சோறு பழக்கம் இருந்திருக்க வேண்டும். சிந்தாமணி நிகண்டில் கூட "தோட்கோப்பு' எனும் சொல் கட்டுச்சோறு என்ற அர்த்தத்தில் கையாளப்பட்டுள்ளது.
கட்டமுது, கட்டுச்சாதம், வழிநடை உணவு, வழிச்சோறு, பொதிச்சோறு போன்ற பெயர்களும் இதற்குண்டு. ஆரம்பத்தில் காட்டில் வேட்டையாடுவோர், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்செல்வோர் பசியாற கட்டுச்சோறு கொண்டுச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். நாளடைவில் பிரயாணங்களில் இந்த உணவு பிரதான இடம் பிடித்தது.
நெல்சோறு புழக்கத்துக்கு வரும் வரை கேழ்வரகு, தினை, கம்பு போன்ற சிறுதானிய உணவுகளை பக்குவப்படுத்தி ஈரத் துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி, பிரயாணங்களின்போது தோளில் சுமந்து செல்லப்பட்டது.
நெல்சோறு தாராளப் புழக்கத்துக்கு வந்தபிறகு, கட்டுச்சோறு உணவுகளில் முதலிடம் புளிச்சோறுக்குத்தான். இடிப்பு மசாலா மற்றும் பெருங்காயம் கலந்த புளிக் கரைசலைக் காய்ச்சி சுடுச் சோற்றில் ஊற்றிக் கிளறி, நல்லெண்ணெய்யில் தாளிக்கும் இந்த உணவு, குறைந்த பட்சம் இரு நாளுக்குக் கெடாது.
கட்டுச்சோற்றுக்கு தொட்டுக்கொள்ள காய்கறி பிரட்டல், எள்ளுப்பொடி, துவையல் என ஏதாவதொன்று இருக்கும்.
காடு, கழனி, ஆறு, மலை கடந்து செல்லும் பிரயாணமாக இருந்தால், கட்டுச்சோற்றை தீய ஆவிகள் தீண்டாமல் இருக்க, வாசனையை உள்ளிழுத்துக் கொள்ளும் அடுப்புக் கரித்துண்டையும் அதிலிட்டு கொண்டு செல்வதுண்டு. நடை களைப்பில், நீர் நிலையோரம் மரம் தரும் குளிர் நிழலில் அமர்ந்து உண்ணும் கட்டுச்சோறுக்கு அமுதமும் இணையில்லைதான்.
அதன்பிறகு துணி மூட்டையிலிருந்து பாத்திரங்களுக்கு கட்டுச்சோறு இடம் பெயர்ந்தது. குடும்பத்தினரோடு கோயில் திருவிழா, வெளியூர் பிரயாணம் என்றால் சிறிய அண்டா அல்லது குத்துசட்டியிலிட்டு கட்டுச்சோறு கொண்டு செல்லும் பழக்கம் வழக்கத்துக்கு வந்தது.
கூட்டத்தில் கட்டுச்சோற்றை அவிழ்க்காதே என்று சிலர் சிலேடை மொழியில் சொல்லக் கேட்கலாம். ஆனால், அன்றைய கட்டுச்சோறு கமகமக்கும். ஏனெனில், அப்போதெல்லாம் வீட்டுச் சமையல்கூட கமகமதான்.
ஆனால், இன்று பெரும்பாலான வீடுகளில் சமையல் சுவையை நிர்ணயிப்பது மசாலா நிறுவனங்களாக இருப்பதால், கைப்பக்குவம் என்ற சொல், தானாகவே அர்த்தம் இழக்கத் துவங்கியிருக்கிறது.
பிரயாணத்தின் போது, ஆரோக்கியமான உணவுச் செüகரியங்கள் இராது என்பதால் மட்டுமல்ல, செலவுச் சிக்கனம் கருதியும் கட்டுச்சோறு முறை கடைபிடித்து வந்தனர்.
எனினும், மாட்டு வண்டி, பொட்டி வண்டி, குதிரை வண்டிகளிலிருந்து பேருந்து, ரயில் போன்ற இயந்திர வாகனங்களுக்கு பிரயாணங்கள் இன்று மாறிவிட்டாலும், அதே உணவு அசெüகரியங்கள் தொடர்கின்றன.
பிரயாண வழியில், நியாயமான விலைக்கு ஆரோக்கியமான - தரமான உணவு சாத்தியமில்லை; உடலுக்கு ஊறு செய்யும் என்பது தெரிந்தும், அதுபோன்ற உணவுகளை ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தை, பலரும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
கட்டுச்சோறு உணவைப் பிரயாணங்களில் கொண்டு செல்வதில் பலரிடம் ஒருவித தயக்கம் இருக்கிறது. சிலர் அதனைக் கெüரவக் குறைவாகவும் கருதுகின்றனர். மேலும், ஓரிரு பொழுது உணவுதானே, சமாளித்துக் கொள்ளலாம் என்ற அலட்சிய எண்ணமும் ஒரு காரணம்.
கட்டுச்சோறு என்பது பொட்டலமாகக் கட்டப்படும் புளிச்சோறு, எலுமிச்சைச் சோறு, தயிர்ச்சோறு மட்டுமே ஆகாது. வீட்டில் அக்கறையுடன் தயாரித்து கட்டிக்கொண்டு அல்லது எடுத்துக் கொண்டு செல்லும் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, கொறிக்கும் உணவுகள் உள்ளிட்ட எல்லா உணவுகளுமே கட்டுச்சோறு வகையறாதான். இதுபோன்ற உணவுகளை பிரயாண பொழுதுகளுக்கேற்றபடி தயாரித்துக் கொண்டு செல்லலாம்.
குழந்தைகளுடன் பயணிப்போருக்கு இது உகந்ததாக இருக்கும். பிரயாணப் பொழுதில் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவோருக்கு கட்டுச்சோறுதான் சாலச்சிறந்தது.

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...