Tuesday, December 29, 2015

உங்களைத் தேர்ந்தெடுத்த தவறுக்கான தண்டனையா?

Return to frontpage

சர்ச்சைக்குரிய பேச்சுகள், நடத்தைகளை தன்னுடைய அரசியல் கலாச்சாரமாகவே மாற்றிக்கொண்டிருக்கும் தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், இம்முறை ஒருபடி மேலே போய் ஊடகச் சந்திப்பின்போது செய்தியாளர்களைப் பார்த்துத் துப்பியிருக்கிறார். மேலும், தன்னை நோக்கிக் கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து, “இதே கேள்வியை முதல்வர் ஜெயலலிதாவிடம் போய் கேட்க முடியுமா? பத்திரிகையாளர்களா நீங்கள்” என்றும் கேட்டிருக்கிறார். அதிர்ச்சியையும் அவமானத்தையும் தரும் நிகழ்வு இது.

பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொள்வது விஜயகாந்துக்குப் புதிதல்ல. பொது நிகழ்ச்சிகளில் தன்னுடைய கட்சி நிர்வாகியைப் பொதுமக்கள் முன்னிலையில் அவர் அறைந்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தன் கட்சி வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில் அவர் அடித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் ஒருமுறை செய்தியாளரை, “நாய்” என்று திட்டியிருக்கிறார். டெல்லி செய்தியாளர் சந்திப்பில் “தூக்கி அடித்துவிடுவேன் பார்த்துக்கோ” என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் பல முறை கடுமையாகப் பாய்ந்திருக்கிறார். குறிப்பிட வேண்டிய விஷயம், ஊடகவியலாளர்களை அவர் அணுகும்விதமே பேச்சில் மட்டும் அல்ல; உடல்மொழியிலும் கீழ்த்தரமானது என்பதுதான்.

ஊடகத் துறையும் ஊடகவியலாளர்களும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. எல்லாத் துறைகளிலும் போதாமைகளும் குறைகளும் தவறுகளும் கலந்திருப்பதுபோலவே நிச்சயம் ஊடகத் துறையிலும் போதாமைகளும் குறைகளும் தவறுகளும் கலந்திருக்கின்றன. ஆனால், அடிப்படையில் ஊடகத் துறையையும் ஊடகவியலாளர்களையும் எது இயக்குகிறது என்பது முக்கியம். ஊடகவியலாளர்கள் என்பவர்கள் அடிப்படையில் வெறுமனே ஒரு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அல்ல; மக்களின் பிரதிநிதிகள். மக்களுடைய குரல், மக்களுடைய கேள்விகளே ஊடகவியலாளர்கள் குரலாகவும் கேள்விகளாகவும் வெளியே வருகின்றன; அப்படித்தான் அவை வெளிவர வேண்டும். ஆகையால், ஊடகவியலாளர்களின் குரலை மக்களின் குரலாகவே பாவிக்க வேண்டும். குறிப்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது அவர்களுடைய அடிப்படை ஜனநாயகக் கடமைகளில் ஒன்று.

முதல்வர் ஜெயலலிதா இந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று, அடிக்கடிச் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்பது. ஆனால், செய்தியாளர்களை அவர் சந்திப்பதே இல்லை. அமைச்சர்களும் மிக மிக அரிதாகவே ஊடகவியலாளர்களைச் சந்திக்கிறார்கள். இத்தகைய சூழலில், ஊடகவியலாளர்கள் செய்யக்கூடிய காரியம் ஒன்றுதான், அரசுக்கு மக்கள் தரப்பிலிருந்து செல்ல வேண்டிய கருத்துகளையும் விமர்சனங்களையும் தம் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிப்பது. தம்மாலான அளவில் ஊடகங்கள் அதைச் செய்துகொண்டே இருக்கின்றன. இடையில் பல காலம் இதே விஜயகாந்தும்கூட செய்தியாளர்கள் சந்திப்பை முற்றிலும் தவிர்த்தார். அப்போது ஊடகவியலாளர்கள் செய்ய முடிந்ததென்ன? அரசியல் தலைவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான உறவு என்பது ஒற்றைத்தன்மை கொண்டதல்ல. துரதிருஷ்டவசமாக தமிழ்நாட்டின் சமகால அரசியல்வாதிகள் ஊடகங்களிலிருந்து விலகியிருப்பது/தமக்கேற்ற ஊதுகுழலாக ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது ஜனநாயக இழுக்கு.

சட்டசபையில் சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் தொடர்பான ஆளுங்கட்சியினருடனான வாக்குவாதத்தின் உச்சத்தில், நாக்கைத் துருத்தியபடியும், கையை நீட்டியும், கோபமாகப் பேசினார் விஜயகாந்த். அதோடு, எதிர்க்கட்சிகளுக்குச் சட்டசபையில் உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை என்று சொல்லி சட்டசபை செல்வதையே நிறுத்திக்கொண்டுவிட்டார். ஆளுங்கட்சி மட்டும் அல்ல; ஆக்கபூர்வமான, உயிர்த்துடிப்பான எதிர்க்கட்சிகளும் சேர்ந்துதான் ஒரு அரசை உந்தித்தள்ளுகின்றன. செயல்படாமை தொடர்பாக ஒரு விவாதம் நடந்தால், அதில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் தன்னையும் விடுவித்துக்கொள்ள முடியாது. தமிழகம் கொந்தளிப்பான பிரச்சினைகள் பலவற்றை எதிர்கொண்டபோது எதிர்க்கட்சித் தலைவர் என்னவானார் என்பதே தெரியாமல் இருந்ததை மறந்துவிட முடியாது.

வரலாறு காணாத பெருவெள்ளத்தில் மக்கள் சிக்கியிருக்கும் சூழலில்கூட ஊடகங்கள் வழியே மக்களைச் சந்திக்காமல், ‘வாட்ஸ்அப் உரை’ நிகழ்த்தும் ஒரு முதல்வர், கேள்வி கேட்கும் ஊடகங்களை நோக்கி ‘தூ’ என்று வெறுப்பை உமிழும் எதிர்க்கட்சித் தலைவர் என்று தமிழகத்தின் சமகாலத் தலைவர்களை நினைத்துப்பார்க்கையில் வேதனையே எஞ்சுகிறது. இருவரும் ஒன்றுசேர்ந்துதானே கடந்த தேர்தலில் மக்களைச் சந்தித்தீர்கள், வாக்குக் கேட்டீர்கள், நல்லாட்சி கொடுப்போம் என்றீர்கள். மக்கள் செய்த தவறென்ன; வாக்களித்ததா? ஊடகங்களிடமிருந்து விலகுபவர்கள், மக்களிடமிருந்தும் விலகுகிறார்கள் என்பதே வரலாற்று உண்மை!

ராஜேஷ் கன்னா 10 ......t ராஜலட்சுமி சிவலிங்கம்



பிரபல இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா (Rajesh Khanna) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் (1942) பிறந்தார். இயற்பெயர் ஜதின் கன்னா. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, மாமாவுக்கு தத்து கொடுக்கப்பட்டு பம்பாயில் வளர்ந்தார். 10 வயது முதல், நாடகங்களில் நடித்தார். புனே வாடியா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

l அகில இந்திய அளவில் 1965-ல் நடத்தப்பட்ட யுனைடெட் புரொட்யூசர்ஸ் நடிப்புத் திறன் போட்டியில் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அதில் முதல் பரிசு வென்ற இவருக்கு 1966-ல் ‘ஆக்ரி கத்’ என்ற திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்தார்.

l ‘ஆராதனா’ (1969) திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 தொடர் வெற்றிப் படங்களை தந்து ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்து பெற்றார்.

l இந்தியத் திரையுலகிலேயே மிகச் சிறந்த பாடல்களை வழங்கியது ராஜேஷ் கன்னா கிஷோர் குமார் ஜோடி என்பார்கள். ‘கிஷோர் குமார் எனது ஆன்மா. நான் அவரது உடல்’ என்பார் ராஜேஷ் கன்னா. இவரது படங்களில் இடம் பெற்ற ‘மேரே சப்னோங் கே ரானி’, ‘கோரா காகஸ் கா யே மன் மேரா’, ‘ரூப் தேரா மஸ்தானா’, ‘குன் குனா ரஹே ஹை பௌரே’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டன.

l தென் இந்திய ரசிகர்களை 1969-1991 காலகட்டத்தில் ராஜேஷ் கன்னா அளவுக்கு கவர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றார் சரோஜாதேவி. தென்னிந்திய திரையுலகினர் இவரை ‘இந்தித் திரையுலகின் சிவாஜி’ என்றனர். ராஜீவ் காந்தி இவரது ரசிகராக இருந்து பின்னர் நண்பரானார்.

l அடுத்தவர்களின் தேவை அறிந்து, தானே ஓடிச்சென்று உதவும் மனம் படைத்தவர். 1973-ல் இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவை மணந்தார். இவர்களது மகள்களான ட்விங்கிள் கன்னா, ரிங்கி கன்னாவும் நடிகைகள்.

l மொத்தம் 180 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட். ‘ஆராதனா’, ‘அமர்பிரேம்’, ‘ஆனந்த்’, ‘கடீ பதங்’, ‘ராஸ்’, ‘சச்சா ஜூட்டா’, ‘ராஜா ராணி’ குறிப்பிடத்தக்கவை. 1980-களில் ‘ஸ்வர்க்’, ‘அவதார்’ போன்ற திரைப்படங்களில் தன் வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்தார்.

l தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல பிறமொழி இயக்குநர்கள் இவரை வைத்து தங்கள் மொழி ஹிட் படங்களை இந்தியில் ரீமேக் செய்தனர். இதில் கே.பாலசந்தர், தர், கே.ராகவேந்திரா, ஐ.வி.சசி குறிப்பிடத்தக்கவர்கள்.

l தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்துள்ளார். 3 முறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். 2005-ல் ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

l சினிமாவைவிட்டு 1990-களில் விலகியவர், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினரானார். ஷீர்டி பாபாவின் பக்தர். இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா 70-வது வயதில் (2012) மறைந்தார். மறைவுக்குப் பிறகு, பத்மபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

Monday, December 28, 2015

3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

Dinamani

சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கும் விதமாக, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த, கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணி செய்தவர்களும், 2016 மே 31-ஆம் தேதியோடு 3 ஆண்டுகளை நிறைவு செய்வோரையும் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. இந்த அதிகாரிகளை அறிவதற்காக ஆணையம் வழங்கும் கட்-ஆஃப் தேதிகளைப் பின்பற்ற வேண்டும்.
இதுதொடர்பாக உடனடியாக விரிவான ஆய்வு நடத்த வேண்டும். அதே மாவட்டங்களில் பதவி உயர்வு பெற்று பணியாற்றிக் கொண்டிருந்தாலும், 3 ஆண்டு காலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும். மாநிலத் தலைமை அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இந்த அறிவுரைகள் பொருந்தாது.
விதிவிலக்கு யாருக்கு? குறிப்பிட்ட பகுதியை நன்கு அறிந்த பகுதி அலுவலர்கள், அங்கு பணியாற்றினால்தான் தேர்தல் பணிகளைச் சிறப்பாக செய்ய முடியும் என்றால் அவர்கள் பணியாற்றலாம்.
யார், யாருக்கு பொருந்தும்?: மாவட்ட தேர்தல் அதிகாரிகள், துணைத் தேர்தல் அதிகாரிகள், கூடுதல் மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள், உதவிக் கோட்ட அதிகாரிகள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்ற அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
போலீஸ் அதிகாரிகள்: காவல் துறையில் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், ஆயுதப் படை அணித் தலைவர்கள், சிறப்பு எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்கள், கூடுதல் எஸ்.பி.க்கள், உதவிக் கோட்ட அதிகாரிகள், ஆய்வாளர்கள் அல்லது அதற்கு இணையான அதிகாரிகளுக்கும் பொருந்தும். கணினிமயமாக்கல், சிறப்புப் பிரிவு, பயிற்சிப் பிரிவு போன்றவற்றில் பணியாற்றுவோருக்கு இந்த உத்தரவு பொருந்தும். தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய உதவி ஆய்வாளர்களை சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்தே பணியிட மாற்றம் செய்ய வேண்டும். சொந்த தொகுதியிலும் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.
பணியில் யாரை ஈடுபடுத்தக் கூடாது? கடந்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள், கவனக்குறைவாக இருந்தவர்களுக்கு தேர்தல் பணி வழங்கக் கூடாது. குற்ற வழக்கு நிலுவையில் இருப்போரையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
இடமாற்ற நகல் அனுப்ப வேண்டும்: இடமாறுதல் செய்யப்படுவோர் விடுப்பில் சென்றாலோ அல்லது மாவட்டங்களை விட்டு வெளியேற மறுத்தாலோ புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் பணிகளில் மறைமுகமாகத் தொடர்புள்ள அதிகாரிகளும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவதாக அடிப்படை முகாந்திரத்துடன் புகார்கள் வந்தால் அந்தப் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
இடமாற்றம் செய்யப்பட்டோருக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படும்போது, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் ஆலோசிக்க வேண்டும். இடமாற்றல் உத்தரவின் நகல்கள் தலைமைத் தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோரை, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகே இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பின்மையும், பசிக் கொடுமையும்

Dinamani


By மாலன்

First Published : 28 December 2015 01:20 AM IST


இரவு விடியத் தொடங்கிய நேரத்தில் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியது. வானத்தில் சூரியன் வரவில்லை என்றாலும் மழை ஓய்ந்திருந்தது. இழந்தது என்ன, இருப்பது என்ன, இழந்ததை எப்படி மீட்பது, இருப்பதை எப்படிக் காப்பது என்று கவலைகள் மனதை மொய்க்க, அடைக்கலம் புகுந்திருந்த அண்டை வீட்டு மாடியிலிருந்து, சொந்த வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார் அவர்.
அப்போது வந்த ஒரு தகவல் அவர் இதயத்தைப் பதறச் செய்தது. செம்பரம்பாக்கம் உடையப்போகிறது என்றது செய்தி. செய்தி அல்ல தகவல்.
யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு அனுப்பிய வாட்ஸ் அப் வதந்தியை அந்த யாரோ ஒருவர் மற்றொருவருக்கு அனுப்ப, அவர் பிறிதொருவருக்கு அனுப்ப, அவர் வேறொருவருக்கு அனுப்ப, அவர் இன்னொருவருக்கு அனுப்ப, அவர் எதிர்வீட்டுக்காரரின் நண்பரிடம் சொல்ல, நண்பர் சகலைக்குச் சொல்ல, சகலை சகாவிற்குச் சொல்ல, சகா மனைவிக்குச் சொல்ல, மனைவி தோழிக்குச் சொல்ல, தோழி தன் கணவனுக்குச் சொல்ல, கணவன் பாஸுக்குச் சொல்ல, பாஸ் பக்கத்து வீட்டுக்காரரிடம் பகிர்ந்து கொள்ள, இனி ஒரு நிமிடம் கூடத் தாமதியாதீர்கள். உடனே புறப்படுங்கள் என்று அவர் எச்சரிக்க, உள்ளம் கொந்தளித்தது. உயிராசை உந்தித் தள்ளியது.
இனி ஒரு வெள்ளமா? என மனம் மருண்டது. இருக்காது! இருக்காது! என்று இன்னொரு மனம் சொன்னது, உயிரென்று நம்பி உடன் வந்த மனைவியைக் காப்பாற்றுவதா, மழலைகளைக் காப்பாற்றுவதா, ஓடி ஓடி உழைத்து ஒரு குருவியைப் போலச் சேகரித்த செல்வத்தில் மிஞ்சி நிற்பதைக் காப்பாற்றுவதா? மூளை குழம்பியது. தப்பித்துப் போகும் தருணத்தில் வெள்ளம் எதிர்வந்து அடித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்று அச்சம் மேலிட்டது.
இறப்போ, மீட்சியோ இருக்கிற இடத்திலேயே இருந்து விடலாமா என்று ஓர் எண்ணம் ஓடியது. இதுதான் விதி என்றால் இனி நாம் என்ன செய்ய? என்று ஒரு விரக்தி பிறந்தது. இருப்பதுதான் பிரச்னை, இறப்பதில் என்ன பிரச்னை என்றொரு வெள்ள வேதாந்தம் உள்ளத்தை ஒரு கணம் கடந்தது.
உண்மையா என உறுதி செய்து கொள்ள உள்ளம் தவித்தது. அக்கம் பக்கம் தொலைபேசி வேலை செய்யவில்லை. மின்சாரம் போன காரணத்தால் சக்தி இழந்து செல்லிடப்பேசி காலமாகி விட்டிருந்தது. இரு சக்கர வாகனம் இயங்க மறுத்தது. முழங்காலளவு நீரில் முக்கால் கிலோ மீட்டர் நடந்து, திறந்திருந்த கடைகள் நான்கைந்தில் விசாரித்து, உயிரோடு இருந்த ஒரு தொலைபேசியைக் கண்டுபிடித்து என்னை அழைத்தார் அவர்.
அர்ஜெண்ட் சார் என்று ஆரம்பித்தார். பதற்றத்தில் குரல் நடுங்கியது. ஆறுதல் சொல்ல ஆசைதான். ஆனால், அதற்கெல்லாம் அவகாசமில்லை. காரணம், அவரது அவசரம். சொல்லுங்க என்றேன் சுருக்கமாக. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து விட்டது என்று சொல்கிறார்களே உண்மையா என்றார்.
யார் சொன்னது?
வாட்ஸ் அப்பில் வந்ததாம்.
அது புரளி. அது உண்மையாக இருந்தால் நண்பரே நீங்களும் நானும் இப்போது உரையாடிக் கொண்டிருக்க முடியாது. வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்போம். உண்மையில்லைதானே சார்? நிஜத்தை சொல்லுங்க. உண்மை இல்லைதானே? மனைவியையும் குழந்தைகளையும் தனியா விட்டு வந்திருக்கேன்.
"உண்மை இல்லை'.
நன்றி என்று கூடச் சொல்லாமல் நண்பர் தொலைபேசியை வைத்து விட்டார். அந்தக் கணத்தில் அவரை நிமிர வைத்த நிம்மதியை என்னால் நினைத்துப் பார்க்க முடிந்தது.
அதேபோல, அந்த மிரட்சியும் என் நெஞ்சில் நெடுநேரம் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான பேரை குலைநடுங்கச் செய்யும் ஆதாரமற்ற செய்திகளை ஆரம்பித்து வைப்பது யார்? ஏற்கெனவே, பேரிடரில் பீதி வசப்பட்டு இருப்பவர்களை மிரளச் செய்வதில் அவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்? அவர்கள் மனிதர்கள்தானா? அடுத்தவரை அழ வைத்து அதில் ஆனந்தம் காண்கிற கல்நெஞ்சர்களா? அவர்களுக்குள் மனம் என்ற ஒன்று இயங்குகிறதா? வக்கிரமே வாழ்க்கை லட்சியமா?
கண்டுபிடிக்க முடியாது. காரணம்? வாட்ஸ் அப்பிற்கு வாய் உண்டு, முகம் இல்லை. தகவல் அனுப்புபவரின் எண் அதில் இருக்கும் என்பதென்னவோ உண்மைதான். அந்த எண்ணுக்குரியவரின் எண்ணமாகத்தான் அந்தத் தகவல் இருக்க வேண்டும் என்பதில்லை. வந்ததைப் பந்தியில் வைப்பவர்கள்தான் வாட்ஸ் அப்பில் அதிகம். சுருக்கமாகச் சொன்னால் ஒரு காலத்தில் செய்திகளுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தோம். இப்போது எதிர்வினைகளுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம், வாட்ஸ் அப் வழியாக.
வாட்ஸ் அப் என்பது ஓர் ஊடகம். ஊடகத்தில் இயங்குகிறவர்கள், ஊடகத்தை இயக்குகிறவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம் ஓடியிருக்கும். பீப் பிரச்னையை ஊடகங்கள் ஒளி பரப்பிக் கொண்டிருந்தன. கடந்த மாதம் முழுவதும் அவர்கள் கடைவாயில் பீஃப் (பசு இறைச்சி) மாட்டிக் கொண்டிருந்தது. இப்போது பீப். இது பெண்களின் தசைகள் பற்றிய கவிச்சி.
இணையத்தில் பரப்பியது நானல்ல என்று இப்போது பிரச்னை பெரிதான பின் சம்பந்தப்பட்டவர்கள் கையை உயர்த்திச் சரணம் பாடுகிறார்கள். கரணம் போடுகிறார்கள். அது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், எழுதியதும் இசைத்ததும் யார்? அந்த எழுத்திற்குப் பின்னால் இருக்கும் மனம் எத்தகையது? மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையில் திளைக்குமோ ஒரு கவி மனம்?
அந்தரங்க உபயோகத்திற்கு என்றாலும்கூட அதற்குள் புரையோடிக் கிடக்கும் வக்கிரம் அவர்களை மனநோயாளிகள் என்று அடையாளம் காட்டவில்லையா?
இந்த வக்கிரம் பற்றிக் கருத்துக் கேட்டு இளையராஜாவிடம் ஒலிவாங்கியை நீட்டுகிறார் ஒரு செய்தியாளர். இளையராஜாவிடம் கேள்வி கேட்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால், இடம், பொருள், ஏவல், இங்கிதம், இடக்கர் அடக்கல் எனச் சில இலக்கணங்கள் இதழியலிலும் உண்டு.
தண்ணீரில் தத்தளித்தவர்களுக்குத் தங்களின் சிரமம் பாராது, உதவிய தன்னார்வலர்களைப் பாராட்டும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் இளையராஜா. மனிதர்களின் மாண்பை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் சமூகத்தைச் செப்பம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது. அந்த இடத்திலா விடலைகளின் ஆபாசத்திற்கு விளக்கம் கேட்க வேண்டும்
அந்தச் செய்தியாளரின் நோக்கம் பீப் பாடலுக்குக் கண்டனம் பெறுவதல்ல. ஒரு இசைஞானிக்கும் இளம்தலைமுறை இரைச்சல் ஞானிக்குமிடையே சிண்டு முடிந்துவிட ஏதேனும் கயிறு கிடைக்குமா என்று நூல்விட்டுப் பார்ப்பது. எரிகிற கொள்ளியில் இரண்டைப் பிடுங்கி இன்னும் எதையேனும் பற்ற வைக்க முடியுமா எனப் பார்ப்பது.
அந்தத் தவிப்பிற்கு என்ன காரணம்? ஊடகங்கள் இன்று பகாசுரப் பசியோடு அலைகின்றன. இருபத்திநான்கு மணி நேரமும் எதையாவது மென்று துப்ப அவர்களுக்கு ஏதாவது செய்தி வேண்டியிருக்கிறது. உள்ளதை உள்ளவாறு சொல்லிவிட்டுப் போவதில் ஒன்றும் சுவாரஸ்யமில்லை என்று அவர்கள் நம்புவதால், நாட்டு நடப்புகளுக்குள் நாடகத்தைப் புகுத்த வேண்டிய கடமை அவர்களைக் கண்சிமிட்டி அழைக்கிறது.
அதன் இன்னொரு வெளிப்பாடுதான் இப்போது நாம் காணும் இரவு நேர விவாதக் காட்சிகள். அவற்றில் விவரம் அறிந்து பேசுவோர், அறிந்ததைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்களை அதிகம் காண முடிவதில்லை. விஷயங்களை விளம்பச் சொல்லும் வித்தகர்களையோ, சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சூட்சமம் அறிந்த வல்லுநர்களையோ அடிக்கடி பார்க்க முடிவதில்லை.
எதிராளியைப் பேச விடாமல் இரைவது, எல்லோரும் ஏக காலத்தில் கூச்சல் போட்டு எவர் பேசுவதையும் புரிந்து கொள்ள முடியாமல் செய்வது, அரை உண்மைகளை அவிழ்த்து விடுவது, முழுப் பூசணியை மூடி மறைப்பது, கண்மூடித்தனமான கட்சி விசுவாசத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற எல்லாவிதமான அமர்க்களத்தோடும் அறுபது நிமிடங்கள் கடந்து மறைகின்றன. மார்கழியில் மட்டும்தான் சென்னையில் இசைவிழா. ஆனால் திங்கள் முதல் வெள்ளிவரை தினம் தினம் டிவியில் இரவு நேர இரைச்சல் விழா.
சமூகப் பொறுப்பென்பது சிறிதும் இல்லாதவர்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் ஒரு புறம்; ஊடகங்களுக்கு உருவாகியிருக்கும் பயங்கரப் பசி இன்னொரு புறம். சாறு பிழியும் சக்கரங்களுக்கு இடையில் அகப்பட்ட கரும்பைப் போல இரண்டிற்கும் இடையில் மாட்டிக் கொண்டவன் தமிழன். பாரதி எழுதியது போல், ஒட்டகத்திற்கு ஓர் இடத்திலா கோணல்? தமிழனுக்கு ஒரு விதத்திலா துன்பம்?
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் சென்னை வந்த நாள்களில் என்னைத் திகைக்க வைத்த காட்சிகளில் ஒன்று காகிதம் தின்னும் காளைகள். திருவல்லிக்கேணி ஜாம்பஜார் அருகே, சுவரொட்டிகளைச் சுவைத்துத் தின்கிற காளைமாடுகளை அநேகமாகத் தினமும் கண்டிருக்கிறேன். புல் தின்னாத புலிகளையும், காகிதம் தின்னும் கழுதைகளையும் பற்றிப் புத்தகங்களில் படித்திருக்கிறேன்.
ஆனால், காகிதம் தின்னும் காளைகளை சென்னையில்தான் கண்டேன். யோசித்துப் பார்த்த போது ஒன்று புரிந்தது, காளைகள் கண்டதையும் தின்னக் காரணம் பசி. அடிவயிற்றில் எரியும் அகோரப்பசி. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா?
சமகாலச் சமூகத்தில் மாடுகள் மனிதர்களைப் போல மாறுவதும், மனிதர்கள் மாடுகளைப் போல ஆவதும் ஆச்சரியத்திற்கு மட்டுமல்ல, அனுதாபத்திற்கும் உரியதுதான்.

இது ஓர் "அரசியல் ஜல்லிக்கட்டு'!

Dinamani

By ப. இசக்கி

First Published : 28 December 2015 01:21 AM IST


தைமாதப் பொங்கலுக்கு தமிழர்கள் தயாராகிறார்களோ இல்லையோ, அதனையொட்டி நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தென் மாவட்ட இளைஞர்கள் தயாராகி விடுவார்கள். பொங்கலுக்குப் பிறகு தொடர்ச்சியாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு, 1,500 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் வீர விளையாட்டு. இந்த வீர விளையாட்டை நடத்த சமீபகாலமாக கடும் அக்கப்போர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பயன்படுத்தப்படும் காளை மாடுகள் சித்ரவதை செய்யப்படுவதாக பிராணிகள் நல சங்கத்தினர் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த 2014, மே 7-ஆம் தேதி இதற்குத் தடை விதித்தது. இதனால் கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இதனால், ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட தென் மாவட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகை களையிழந்தது. மக்கள் மனதில் பெரும் சோகம்.
ஜல்லிக்கட்டை ஒரு தெய்வ வழிபாடாக கருதும் கிராம மக்கள், ""இந்த ஆண்டு பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை, தேனி மாவட்டங்களில் மட்டும் போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படாததுதான் இதற்குக் காரணம். இது தெய்வக் குற்றம்'' என்கின்றனர்.
வீரமும், பக்தியும் கொண்ட இந்த ஜல்லிக்கட்டை இந்த ஆண்டாவது நடத்திவிட வேண்டும் என கிராம மக்கள் தவமாய் தவமிருக்கிறார்கள்.
தடை விதிக்கப்பட்டு 18 மாதங்கள் வரை அதை நீக்குவதற்கு எந்த அரசியல் கட்சியும் தீவிரம் காட்டவில்லை. இப்போது ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என அடம் பிடிப்பது ஓர் "அரசியல் ஜல்லிக்கட்டு' என்பதே உள்ளூர் மக்களின் கருத்து.
தமிழ்நாட்டுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்திருந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ""ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சட்டம் கொண்டு வரப்படும்'' என்றார்.
தடைக்குப் பிறகு, இந்த ஆண்டு இதுவரையில், மூன்று முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவில்லை. ஆளுங்கட்சிக்காரர் சொன்னால் காரியம் விரைவாக நடக்கும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த ஆர்வலர்களுக்கு இதுவரையில் ஏமாற்றமே.
அடுத்து, மதுரை வரும் அரசியல் தலைவர்கள் எல்லாம், போகிற போக்கில் "ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்' சொல்லிச் சென்றார்களே தவிர, அதற்கான ஆக்கப்பூர்வமான காரியங்கள் எதையாவது செய்தார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இப்போது, தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குகிறது. வாக்கு வங்கி அரசியல் ஜல்லிக்கட்டை நோக்கி இழுக்கிறது. அதனால், எல்லோரும் இப்போது ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொடி பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஒருபடி மேலே போய், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி அலங்காநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார். இப்போது அது கைவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என மத்திய அமைச்சர் அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
ஒரு காரியம் திட்டமாக நடைபெறப் போகிறது என்பது தெரிந்து விட்டால் அதற்காக முன்கூட்டியே ஒரு போராட்டம் நடத்தி அதில் பெயரை தட்டிச் செல்வதில் எப்போதும் திமுக முந்திக் கொள்ளும். இப்போது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக திமுக அறிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எதிர்க்கட்சிக்காரர் உண்ணாவிரதம் இருந்தால் ஆளுங்கட்சிக்காரர்கள் சும்மா இருப்பார்களா. அவர்கள் முந்திக் கொண்டு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கடந்த திங்கள்கிழமை (டிச.21) அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு சாமிக்கு பொங்கல் வைத்து, ஜல்லிக்கட்டு காளைகளையும் கொண்டு வந்து வழிபாடு நடத்தி கடவுளிடம் வேண்டுதல் செய்துள்ளனர்.
""நாங்கள் ஆளுங்கட்சி. போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்த முடியுமா? அதுதான், தடைநீங்கி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் முறையிட்டு பொங்கல் வைத்துள்ளோம்'' என்கிறார் அதிமுக தொண்டர் ஒருவர்.
மத்தியில் ஆளும் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேசியச் செயலர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் தென் மாவட்டங்களுக்கு வரும்போதெல்லாம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்படும் என சொல்லிச்...சொல்லி...வாய் வலித்திருக்கும். இதுவரையில் ஒன்றும் ஆகவில்லை.
பாமக, மதிமுக, வி.சி., இடதுசாரிகள் என ஒருவர் கூட பாக்கி இல்லாமல் எல்லோரும் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வேண்டும் என சொல்லியாகிவிட்டது. போராட்டங்களும் தொடர்கின்றன.
ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒன்று சேர்ந்து சொன்ன பிறகும், எதிர்ப்பே இல்லாத நிலையிலும் தடை நீங்கியபாடில்லை. தடை ஒன்றும் அரசு விதித்தது அல்ல. அரசியல் நெருக்கடியால் நீக்கிவிட. உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க சட்டப் போராட்டம்தான் தீர்வு என்பதை அனைவரும் அறிவர். அதை ஆளும் அதிமுக செய்துள்ளது. அதிலும் இதுவரையில் முடிவு தெரியவில்லை.
இப்போது, ""மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும்'' என மற்றொரு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார். இப்போது எல்லோரும், அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கின்றனர். தமிழக முதல்வரும், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பொங்கலுக்கு இன்னும் 18 நாள்களே உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு காளைகளும், அவற்றை அடக்க காளையர்களும் தயாராக உள்ளனர். ஆனால், இந்த குறுகிய கால இடைவெளியில் அவசரச் சட்டம் சாத்தியமாகுமா?
தமிழ்நாட்டின், அதுவும் தென் மாவட்டத்தில் மட்டுமே பிரபலமாக திகழும் ஒரு நிகழ்வுக்காக, தினம் ஒரு பிரச்னையில் சிக்கித் திணறும் மத்திய அரசும், அதன் அமைச்சரும், அதிகாரிகளும் மெனக்கெடுவார்களா? மந்திரத்தில் மாங்காய் காய்க்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Reliance Jio 4G service for employees to start on Dec 28

PTI

Mumbai, Dec 27 (PTI) Telecom arm of RIL, Reliance Jio, today announced the launch of 4G service for its employees under Jio brand name which will be available from tomorrow.

"Today, on the eve of the 83rd birthday of Dhirubhai, my father, it is my proud privilege to invite all our Reliance families and friends to be the first to experience Jio's services starting tomorrow and in coming weeks.

"While you enjoy Jio Digital Life, I am also counting on you, as part of my family, to be part of co-creating the best experience for all our customers," Reliance Industries Limited Chairman and Managing Director Mukesh Ambani said at the event.

The company is offering Jio mobile service for free to its over 1 lakh employees as of now which will start tomorrow.

"I want all of you to take 5 things back: digital life, connected intelligence, Jio life, Jio together and Why Jio? Because life is going digital. Let me now welcome Jio," he said at the event.

The company, in a presentation at the event, claimed that Jio 4G will deliver 10 times higher download speed and 4 times better upload speed compared to others.

Airtel, Idea Cellular, Vodafone and Aircel have already launched commercial 4G services in the market.

Brand Ambassador of Jio, Shah Rukh Khan, said, "Our service providers for everything say its 4G, but it is neither 4G nor 3G. If God is kind, you can get 2G on it. On Jio you will always find 4G."

He said there are 150 handsets available in the country which support 4G of Jio and mobile phones with 3G and 2G network support only can access Jio Wi-Fi.

The company is also offering 25 per cent discount on its 'LYF' brand 4G smartphones to its employees.

Jio is expected to roll out 4G service commercially around March-April next year.

The launch marks the re-entry of Mukesh Ambani in the mobile service business.

In 2003, he had launched Reliance's CDMA mobile business as Reliance Infocomm on the same day as the birth anniversary of RIL group founder and his father Dhirubhai with the tag line 'Kar Lo Duniya Mutthi Mein'.

The business is now Reliance Communications and is being handled by brother Anil, who was also present at the event.

The two brothers have already come together for the sharing of mobile airwaves or spectrum as well as infrastructure like mobile towers and masts. .

நல்லுறவுக்கு வாசலைத் திறக்கும் நட்பு பயணம்!

logo
தெற்காசிய நாடுகளில் முக்கியமான நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் சுதந்திரத்திற்குப்பிறகு முக்கோணங்களாகவே இருந்தன. இந்த 3 நாடுகளும் ஒரே நேர்கோட்டில் இருந்தால், இந்த பிராந்தியமே பெரும் முன்னேற்றத்தை காணமுடியும் என்று எல்லோர் உள்ளத்திலும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அத்தகைய சூழ்நிலை இதுவரையில் நிலவாமல் இருந்தது. பாகிஸ்தானுக்கு, காங்கிரஸ் ஆட்சியில் ஜவஹர்லால் நேரு, ராஜீவ்காந்தி ஆகியோர் சென்றிருக்கிறார்கள். வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரத்தில் 1999–ம் ஆண்டு முதலில், டெல்லி–லாகூர் இடையே பஸ் போக்குவரத்தை தொடங்கிவைத்து, முதல் பஸ்சில் அவரே பயணம் செய்தார். அதன்பிறகு, 2004–ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த சார்க் மாநாட்டில் வாஜ்பாய் கலந்துகொண்டார்.

இடையில் மன்மோகன்சிங் இரண்டு முறை பிரதமராக இருந்தபோதும், அவர் பாகிஸ்தானுக்கு சென்றதில்லை. ஆனால், அவர் ஒரு கனவை தெரிவித்தார். இந்தியாவில் அமிர்தசரஸ் நகரில் காலை உணவை உண்டுவிட்டு, மதிய சாப்பாட்டை பாகிஸ்தானில் உள்ள லாகூரில் சாப்பிட்டுவிட்டு, இரவு உணவை ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் சாப்பிடவேண்டும் என்பதுதான் அந்த கனவு. அந்த கனவு அவர் காலத்தில் நிறைவேறாவிட்டாலும், அதை நரேந்திரமோடி இப்போது நிறைவேற்றிக்காட்டிவிட்டார். ரஷிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அங்கிருந்து புறப்பட்டு முதலில் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் இறங்கி, அங்கு இந்திய நாட்டின் 974 கோடி ரூபாய் உதவியுடன் வாஜ்பாய் பெயரில் கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை திறந்துவைத்தார். டிசம்பர் 25–ந்தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த பயணம் நடந்தது. அன்றுதான் வாஜ்பாய் பிறந்தநாள். முகமதுஅலி ஜின்னா பிறந்தநாள். தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் பிறந்தநாள். காபூலில் இருந்து நரேந்திரமோடி, நவாஸ்ஷெரீப்பின் பிறந்தநாளுக்கு டெலிபோனில் வாழ்த்து சொன்னார். உடனே நவாஸ்ஷெரீப் ‘‘நான் இப்போது லாகூரில் இல்லை. ராவல்பிண்டியில் என் பேத்தி கல்யாணத்துக்காக வந்திருக்கிறேன். நீங்கள் காபூலில் இருந்து எங்கள் நாட்டுக்கு மேலே பறந்துதானே டெல்லிக்கு செல்ல வேண்டும். நீங்கள் எங்கள் நாட்டுக்கு வந்துவிட்டு செல்லலாமே’’ என்று அழைப்பு விடுத்தவுடன், சற்றும் தாமதிக்காமல் அந்த அழைப்பை ஏற்ற நரேந்திரமோடி உடனடியாக பாகிஸ்தான் சென்றார்.

ஒரு இந்திய பிரதமர் பாகிஸ்தான் செல்வதென்றால் எவ்வளவோ முன்னேற்பாடுகள் செய்யவேண்டும். எவ்வளவோ பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கவேண்டும். ஆனால், அந்த மரபுகளை எல்லாம் மீறி உடனடியாக பாகிஸ்தான் சென்றார். லாகூர் விமான நிலையத்தில் அவரை வரவேற்ற நவாஸ்ஷெரீப், ஒரு ராணுவ ஹெலிகாப்டரில் அவரை அழைத்துக்கொண்டு ராவல்பிண்டி சென்றார். அங்கே நவாஸ்ஷெரீப்பின் தாயாரையும், மணப்பெண் உள்பட அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து ஒரு நெருங்கிய நண்பர் குடும்பத்தில் உரையாடுவதுபோல உரையாடி, இந்திய ஆடைகளை பரிசாக வழங்கிவிட்டு, இரவு 7.30 மணிக்கு டெல்லி திரும்பியிருக்கிறார்.

மோடியின் இந்த பயணத்தை நல்லெண்ண பயணம் என்று பாகிஸ்தான் வர்ணித்து இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனா கூட இந்த பயணத்தை பெரிதும் வரவேற்று இருக்கிறது. இருநாடுகளுக்கும் நல்லுறவு நிலவினால் இந்த பிராந்தியத்துக்கே பெரிதும் பயன் அளிக்கும் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. மோடியின் இந்த சுற்றுப்பயணம் நிச்சயமாக இருநாட்டின் நல்லுறவுக்கு வாசலைத்திறக்கும் நட்பு பயணம்தான். இந்த நட்பு பயணத்தின் உணர்வுகளை எடுத்துக்கொண்டு, அடுத்தகட்டமாக இருநாட்டு வெளிவிவகாரத்துறை செயலாளர்கள் கூட்டம் மனக்கசப்புகளை மாற்றும் மாமருந்தாக அமையவேண்டும். விரைவில் இருநாடுகளுக்கு இடையே நிலவும் நீண்டகால பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு வரவேண்டும் என்பதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

Sunday, December 27, 2015

Etihad Airways statement on Indian Students

Etihad Airways statement on Indian Students

“In recent days a number of Indian nationals have been refused entry to the USA due to visa irregularities identified during checks Jet Etihad Etihad Airways statement on Indian Studentscarried out by the US Customs and Border Protection (CBP). This involves students of Indian nationality travelling on F-1 visas specifically to two universities in the US.
Etihad Airways understands current concerns of those students who have booked travel on Etihad Airways’ flights to the United States. Any student that does not meet the requirements of the US authorities, will be assisted by Etihad Airways with travel arrangements back to their point of origin.
Affected students booked on Etihad Airways who choose not to travel from India to the US can get refunds on cancelled tickets as per their ticketed fare guidelines and policies. Alternatively, they can rebook once at no extra charge in the original class of travel and same fare type subject to availability on flights up to January 31 to enable them to resolve their visa issues with the relevant authorities. Etihad also recommends that any affected students should contact the US consulate at their point of origin to confirm that their documentation is in order.”

மைனர் குழந்தை பாதுகாவலர்: மறுமணம் செய்த தாய்க்கு உரிமை உண்டு'

சென்னை: 'மறுமணம் செய்து கொண்ட தாய், தன் முதல் கணவர் மூலம் பெற்ற குழந்தையின் பாதுகாவலராக இருக்க உரிமை இல்லை எனக் கூறுவது, முறையற்றது; சமூக நீதிக்கு எதிரானது' என, சென்னை உயர்நீதிமன்றம், கருத்து தெரிவித்துள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம், மணல்மேடு பகுதியைச் சேர்ந்த, மேனன்பாபு -- சுபா தம்பதியருக்கு, மூன்றரை வயதில், காவியா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. மதுவுக்கு அடிமையான மேனன்பாபு, 2013ல், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின், தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்த சுபா, சுசீந்திரன் என்பவரை மறுமணம் செய்தார்.இந்நிலையில், மேனன் பாபுவின் தாய் காளியம்மாள், பள்ளி சென்று வீடு திரும்பிய குழந்தை காவியா ஸ்ரீயை கடத்திச் சென்றார். இது சம்பந்தமாக, சுபா அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த மணல்மேடு போலீசார், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, தன் மகளை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, சுபா உயர்நீதி மன்றத்தில், ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், நீதிபதி செல்வம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
'கணவன் இறப்புக்குப் பின், மறுமணம் செய்து கொண்ட சுபாவிடம் குழந்தையை ஒப்படைப்பது, அக்குழந் தையின் நலனுக்கு விரோதமானது' என, காளியம்மாள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது. கணவன் மரணத்துக்குப் பின், சட்டப்படி மறுமணம் செய்து கொள்ள சுபாவுக்கு உரிமை உள்ளது. விதவை மறு மணத்தை ஊக்குவிக்க, தமிழக அரசு கொள்கை முடிவை
எடுத்துள்ளது.மறுமணம் செய்து கொண்டார் என்பதற்காக, அவர், தன் குழந்தையின் பாதுகாவலராக இருக்க தகுதியற்றவராகி விட்டார்; அவருக்கு உரிமையில்லை எனக் கூறுவது சமூக நீதிக்கு விரோதமானது. மேலும், சுபா, குழந்தையின் தாய்; இயற்கை பாதுகாவலர். ஆனால், காளியம்மாள், தந்தை வழி பாட்டி தான்.
எனவே குழந்தையை, காளியம்மாள் உடனடியாக அதன் தாயிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை, நாகப் பட்டினம் போலீசார் வழங்க வேண்டும்.
இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.

கத்தார் விமானத்தில் பயணி கலாட்டா தட்டிக் கேட்டவர்களுக்கு அடி

சென்னை: கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 'கத்தார் ஏர்வேஸ்' விமானம் சென்னை வந்து கொண்டிருந்தது.அதில் பயணித்த, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மாதவன், 24, என்ற நபர் திடீரென்று, விமானத்திற்குள் சத்தம் போட்டபடி ஓடத் துவங்கினார்; தட்டிக் கேட்ட பயணிகளை
தாக்கினார். இதனால், விமானத்தில் பதற்றம் ஏற்பட்டது.பின், விமானம் சென்னையில் தரையிறங்கியவுடன், மத்திய தொழிலக பாதுகாப்பு படை - சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகளிடம், கேப்டன் புகார் அளித்தார். அதன்படி, மாதவன் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், மனநிலை பாதிக்கப்பட்ட அவர், வேலை செய்யும் இடத்திலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிந்தது.

ஆதார் எண் அட்டைஅவகாசம் நீட்டிப்பு

சென்னை :மழை பாதிப்பு காரணமாக, 'ஆதார்' எண் பணிக்கான அவகாசம், 2016 மார்ச் வரை நீட்டிக்கப்படும் என தெரிகிறது.இதுகுறித்து, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஆதார் எண் உருவாக்க, 31ம் தேதி இறுதி நாள். மொத்தம், 6.23 கோடி பேரில், 5.63 கோடி பேருக்கு, விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது.டிசம்பர் வரை, 86.42 சதவீதம் ரேகைகள் சேகரிக்கப்பட்டு, 78.13 சதவீதம் பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கன மழையால், தொடர்ந்து ஆதார் மையங்கள் செயல்பட முடியவில்லை. போதிய கணக்கெடுப்பு ஆட்களும் இல்லை. இதனால், மத்திய அரசு நிர்ணயித்த, டிச., 31க்குள், ஆதார் எண் உருவாக்கும் பணியை, முடிக்க முடியவில்லை. கணக்கெடுப்பு பணியில் உள்ள, 'பெல்' நிறுவனம், போதிய பணியாளர்களை வழங்கி உள்ளது. எனவே, ஆதார் பணி தீவிரம் பெற்றுள்ளது. இந்நிலையில், இறுதி தேதி, 2016 மார்ச் வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவில்களில் 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்'அணிய ஜன., 1 முதல் தடை

தமிழக அறநிலையத்துறை யால் நிர்வகிக்கப்படும் அனைத்து கோவில்களிலும், ஜன., 1 முதல், 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என்ற உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, மதுரை உயர் 
நீதிமன்ற கிளை வழங்கி உள்ள தீர்ப்பை தொடர்ந்து, அறநிலையத்துறை, அனைத்து கோவில்களுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், 'கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும். 'ஆண்கள் வேட்டி, சட்டை, பைஜாமா குர்தா; பெண்கள் புடவை, ரவிக்கை, சுடிதார், ஷால், தாவணி போன்ற உடலை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். 'ஷார்ட்ஸ், மிடி, குட்டை பாவாடை, ஜீன்ஸ், லெக்கிங்ஸ்'போன்ற ஆடை அணிந்து வருபவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. 'போலீஸ், தீயணைப்பு படையினர் போன்ற சீருடைப் பணியில் ஈடுபடுவோருக்கு இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை' என கூறப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நடைமுறை, ஜன., 1 முதல், அனைத்து இந்து கோவில்களிலும் அமலாகிறது. இதை மீறுபவர்கள் மீது, நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்.
- நமது நிருபர் -

மத்திய அரசு துறை பணியாளர்களில் 50 வயதுக்கு மேல் 9.47 லட்சம் பேர்

மத்திய அரசு துறைகளில் உள்ள, 33 லட்சம் பணியாளர்களில், 9.47 லட்சம் பேர், 50க்கு மேல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்துஉள்ளது. மத்திய அரசில், 56 துறைகள், ஐந்து யூனியன் பிரதேசங்களின் அரசு துறைகள் மற்றும் டில்லி போலீஸ் துறைகளில், 40.48 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில், 33 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். மொத்தம் 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 50 வயதிற்கு மேற்பட்டோர்மேலும், 20- - 30 வயதிற்குள், 7.32 லட்சம் பேர், 30- - 40 வயதிற்குள், 7.34 லட்சம் பேர், 40- - 50 வயதிற்குள், 8.60 லட்சம், 50 - -60 வயதிற்குள், 9.47 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில், 50 வயதிற்கு மேற்பட்டோரே அதிகபட்சமாக உள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துறையில், 1.95 லட்சம் பணியாளர்களில், 80,933 பேர், அதன்கீழ் இயங்கும் தபால்துறையில், 1.89 லட்சம் பணியாளர்களில், 79,295 பேர், 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். அதேபோல் பாதுகாப்புத்துறையில், 3.98 பணியாளர்களில், 1.51 லட்சம் பேர், ரயில்வேயில், 13.15 லட்சம் பணியாளர்களில் 4.93 லட்சம் பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். இதேபோல் பெரும்பாலான துறைகளில், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.
இளைஞர்கள்போலீஸ் துறையில் மட்டும், 9.80 லட்சம் பணியாளர்களில், 3.94 லட்சம் பேர், 30 வயதிற்குட்பட்டோர், 2.59 லட்சம் பேர், 40 வயதிற்குட்பட்டோர் உள்ளனர். இது அதிக இளைஞர்களை கொண்ட துறையாக உள்ளது. இந்த விவரம் 7வது ஊதியக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டோரில் பெரும்பாலானோர், ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுவர். ஏற்கனவே, 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணிச்சுமை அதிகரிக்கரிப்பதோடு, தொய்வும் ஏற்படும். விரைவில் காலியிடங்களை
நிரப்ப வேண்டும் என, மத்திய அரசு ஊழியர்கள் கேட்டு கொண்டனர்.

2–வது திருமணம் செய்துகொண்டாலும் முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு தாய்தான் சட்டப்பூர்வ பாதுகாவலர் ஐகோர்ட்டு உத்தரவு

logo

சென்னை,


இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும், முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு சட்டப்பூர்வமான பாதுகாவலர் தாய்தான் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இரண்டாவது திருமணம்

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபா. இவருக்கும், மேனன்பாபு என்பவருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு காவியாஸ்ரீ என்ற மூன்றரை வயது மகள் உள்ளார். மேனன்பாபு மதுவுக்கு அடிமையாகி, கடந்த 2013–ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பெற்றோர் வீட்டில் மகளுடன், சுபா வசித்து வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு சுசீந்திரன் என்பவருடன் 2–வது திருமணம் நடந்தது. இந்த திருமணம் நடந்து 3–வது நாளில் பள்ளிக்கூடத்துக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த குழந்தை காவியாஸ்ரீயை, முதல் கணவர் மேனன்பாபுவின் தாயார் காளியம்மாள் மற்றும் சிலர் வேனில் கடத்தி சென்றுவிட்டனர்.

ஆட்கொணர்வு மனு

இதுகுறித்து மணல்மேடு போலீசில் சுபா புகார் செய்தார். போலீசார் குழந்தை கடத்தல் வழக்குப்பதிவு செய்தாலும், மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தன் குழந்தையை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் சுபா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காளியம்மாள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

உரிமை உள்ளது

முதல் கணவர் இறந்தபிறகு, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சுபாவுக்கு உரிமை உள்ளது. இதுபோன்ற திருமணம் சட்டவிரோதம் கிடையாது. தமிழக அரசு கூட விதவை மறுமணத்தை ஊக்குவிக்கிறது.

சுபா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், தான் பெற்ற குழந்தைக்கு இயற்கையான பாதுகாவலர் என்ற உரிமை கொண்டாட முடியாது என்று காளியம்மாள் தரப்பில் கூறுவதை ஏற்கமுடியாது. மேலும், சுபாவை திருமணம் செய்துள்ள சுசீந்திரனும், குழந்தையை பொறுப்புள்ள தந்தையாக பார்த்துக் கொள்வதாகவும், அவளுக்கு தேவையான கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுப்பதாக இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒப்படைக்கவேண்டும்

எனவே, மறு திருமணம் செய்துகொண்ட மனுதாரருக்கு, முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை மீது உரிமை கொண்டாட உரிமை உள்ளது. அவர்தான் முழு உரிமை படைத்த இயற்கையான பாதுகாவலர்.

எனவே, குழந்தையை காளியம்மாள் உடனடியாக சுபாவிடம் ஒப்படைக்கவேண்டும். இதற்கு அனைத்து உதவிகளையும் மணல்மேடு போலீசார் செய்து கொடுக்கவேண்டும். இந்த மனுவை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளனர்.

Saturday, December 26, 2015

எங்கள் இழப்புகளுக்கு யார் பொறுப்பு? 3...நீரை.மகேந்திரன்

Return to frontpage

ஓர் இயந்திரத்தின் விலை ஒரு கோடி... அந்த இயந்திரத்தை வாங்கி ஒரு மாதம்தான் ஆகிறது. உற்பத்தியைக் கூட இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் இயந்திரம் தண்ணீரில் மூழ்கினால் மனநிலை என்னவாக இருக்கும். அதுவும் சேமிப்பு கொஞ்சமும், வங்கிக்கடன் மீதியுமாக ரிஸ்க் எடுத்துள்ள ஒரு குறுந் தொழில்முனைவர் என்றால் அவர் எவ்வாறு மீண்டு திரும்பவும் தொழிலுக்கு திரும்புவார்?

கிண்டி - ஈக்காட்டுத்தாங்கலில் நான் சந்தித்த பல தொழில்முனைவோர்களும் தற்கொலைக்குச் சமமான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் ஒரு மதியத்தில் இந்த பகுதிகளுக்குள் சென்று வந்தேன். இன்னும் முழுமையாக சீர் செய்யப் படாத தெருக்கள் ஒவ்வொன்றும் பல லட்சம் இழப்பை சந்தித்துள்ளன என்பதை வெளிச்சம் போடுகின்றன. தொழிலகத்துக்குள் புகுந்த நீரை வெளியேற்றி, இயந்திரங்களை சுத்தம் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல தொழி லகங்களில் பணியாளர்கள் இல்லா ததால் மூடிக் கிடக்கின்றன. ஒலிம் பியா தொழில்நுட்ப பூங்காவில் ராட்சஸ மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.

கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை

சென்னை மாநகரின் மத்தியில் இப்படியொரு தொழிற்பேட்டை இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பட்டுவருகிறது. மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில்கள் பயிற்சி நிறுவனம், மாநில அரசின் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் உள்பட சிறு தொழில் தொடர்பான பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசின் பல தொழிலகங்களும் இங்கு இயங்கி வந்துள்ளன. தற்போது உற்பத்தி சார்ந்த தொழில்கள் குறைந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், சேவைத்துறை நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

கிண்டி தொழிற்பேட்டையை ஒட்டி ஈக்காட்டுத் தாங்கல், அம்பாள் நகர், ஜாபர்கான்பேட்டை, ராமபுரம் பகுதிகளில் சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த நிறுவனங்கள் பலவும் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்திகளை செய்து வருகின்றன. பெரு நிறுவனங்கள் அதிகம் கிடையாது. தங்களது தொழில் அனுபவத்தைக் கொண்டு, வங்கி கடன் உதவியோடு சிறிய அளவில் தொழில் தொடங்கி தொழில்முனைவோர்களாக மாறியவர்கள் பலரும் இந்த பகுதியில் நிறைந்துள்ளனர். அதாவது வரவுக்கும் செலவுக்குமாக தங்களுக்கு தெரிந்த தொழிலை விட்டு வெளியேற வழியில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் தொழில் முனைவோர்கள் நிறைந்த பகுதி இது.

அடையாறு ஆற்றில் செல்ல வேண்டிய வெள்ளம், கரையோரங்களை துவம்சம் செய்தது மட்டுமில்லாமல், இவர்களது வாழ்க்கையிலும் பெரும் சோகத்தை விதைத்துவிட்டுச் சென் றுள்ளது. இந்த வெள்ள பாதிப்பு அவர்களது வாழ்க்கையைச் சூறையாடியுள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. பல தொழில் நிறுவன உரிமையாளர்களை மீளா கடனுக்கும் இந்த வெள்ளம் தள்ளி யுள்ளது, குறு தொழில்களையும், தொழிற்பேட்டை சார்ந்து இயங்கிய தொழிலாளர்களையும்., கடனாளி களாகவும், பிறரது உதவிக்கு ஏங்கும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றி யுள்ளது இந்த மாமழை. அடையாறு வெள்ளத்தினால் அதிக பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதி இதுதான்.

மக்கள் தங்களது உடமைகளை இழந்து தவிப்பது ஒருபக்கம் என்றால் ஒரு தொழில் முனைவோரது வலி அதனினும் அதிகமானது என்றே சொல்ல வேண்டும். அம்பாள் நகரில் பாதிக்கப்பட்ட ஒரு தொழில் முனைவோரிடம் பாதிப்பின் தீவிரம் குறித்து கேட்டேன்.

இங்குள்ள பல நிறுவனங்களும் கார் தயாரிப்புக்கான உதிரிபாகங்களை தயாரித்து கொடுக்கின்றன. தவிர டையிங் லேத் பட்டரைகளும் இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன. கார் உதிரிபாக தயாரிப் புக்கான இயந்திரங்களை பரவலாக அனைத்து தொழில் நிறுவனங்களுமே இறக்குமதி செய்கிறது. இவை எல்லாமே தற்போது நீரில் மூழ்கி வீணாக போயுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து சிறு தொழில் நிறுவனங்களுமே பாதிப் படைந்துள்ளன.

உயிரை காக்கவோ தொழிலைக் காக்கவோ...

எத்தனை மழைகளிலும் தொழி லகத்துக்குள் வெள்ளம் வந்ததில்லை. அதாவது இப்படி ஒரு வெள்ளம், இந்த பகுதிவரை வரும் என்று நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இரவு வேலை முடித்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டோம். காலையில் வெள்ளம் ஏரியாவுக்குள் புகுந்துவிட்டது. நேரம் செல்ல செல்ல தெருவுக்குள் நுழைய முடியாத அளவுக்கு வெள்ளம். மதியத்துக்குள் இடுப்புக்குமேல் வெள்ளம் சூழ்ந்து விட்டது இந்த ஏரியாக்களில். வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் தேடுவதுதான் அப்போதைய நோக்கமாக இருந்தது. இதனால் தொழி லகங்களை குறித்து யோசிக்கவே இல்லை என்கின்றனர்.

அரசு நிறுவன இழப்புகள்

அடையாறு ஆற்று வெள்ளம் கிண்டி ஒலிம்பியா பார்க் பகுதியில் ஆறாக ஓடியதில் ஐடி சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் பல ஐடி நிறுவ னங்களும் உள்ளன. மத்திய அரசின் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமும் (சிப்பெட்) மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களை தயாரித்து வழங்குகிறது. தவிர வெளியிலிருந்து ஆர்டர்கள் பெற்று தயாரித்து வழங்கி வருகின்றனர். இங்குள்ள இயந்திரங்களும் மூழ்கியதில் அரசுக்கும் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு தொழில்நுட்ப பயிற்சி பெறும் மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த கருவிகள் ஒவ்வொன்றும் பல லட்சம் மதிப்பு கொண்டவை. திரும்ப இவற்றை வாங்க வேண்டும் என்றால் அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல், நிதி ஒதுக்கீடு என பல நடைமுறைகள் உள்ளன. இது இப்போதைக்கு சாத்திய மாகுமா என்பது தெரியாது. பழுதுபட்ட இயந்திரங்களை சரிசெய்யவே நாங்கள் பல வருடங்கள் காத்திருக்கும் சூழ் நிலையும் வரலாம் என்கிறார் ஒரு பயிற்சியாளர். மத்திய அரசின் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கான மண்டல பயிற்சி மையமும் இந்த வெள்ளத்துக்கு தப்பவில்லை. பல ஆவணங்களும் சேதமடைந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி சென்னை மண்டலத்தில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றனர்.

அடையாறு ஆறு இந்த பகுதியில் ஏற்படுத்திய பாதிப்பின் மதிப்பு சுமார் ரூ.600 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை இருக்கலாம் என்பதை மதிப்பிட்டுள்ளனர். உறுதியான மதிப்பு தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால் உற்பத்தி இழப்பின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளாக இருக்கும். அதைவிடவும் இங்குள்ள தொழில்முனைவோர்களின் சமூக மதிப்பு நம் கண்முன்னே சிக்கி சீரழியும் என்பதுதான் அதி துயரமாக இருக்கப்போகிறது என்பதும் முக்கியமானது.

மின் இணைப்புகளுக்கு எத்தனை நாளாகும்?

மின் பழுதுகளை நீக்கி சரிசெய்து சில இயந்திரங்களை இயக்க முடியும். ஆனால் இங்குள்ள அனைத்து நிறுவன மின் இணைப்புகளுமே திரும்ப சரி செய்ய வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்டதில் பெரும்பான்மையினர் சிறு தொழில்முனைவோர்கள்தான். இந்த பகுதிகளில் தற்போதுவரை மின் இணைப்பு சரி செய்யப்படவில்லை. திரும்ப மின் இணைப்பை கொண்டுவர எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது தெரியவில்லை என்பதுதான் இப்போதைய கவலை. இதற்கான மீட்டர்கள் மற்றும் மின் இணைப்புகளை சரி செய்வது மாற்றுவதும் இப்போது இயலாத காரியம். நாங்கள் மீண்டு எழுந்தாலும் மின் வாரிய உதவி சரியான நேரத்தில் இருக்குமா என்பதும் தெரியாது. கிட்டத்தட்ட அடுத்த ஆறு மாதங்களுக்கு எங்கள் சோற்றுக்கு என்ன வழி என்பது தெரியவில்லை என்கின்றனர்.

தவிர எங்களது எல்லா இயந்திரங்களிலும் இது சாத்தியமில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இயந்திரங்கள் எல்லாமே கம்ப்யூட்டரைஸ்டு செயல்பாடுகள் கொண்டவை. அதன் போர்டுகள் செயலிழந்துள்ளன. அதை புதிதாக மாற்ற வேண்டும். அவை உடனடியாகவும் கிடைக்காது. பொதுவாக இயந்திரங்களை பிரித்து கோர்த்தாலும், எங்கு நீர் புகுந்துள்ளது என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. அதாவது வாழ்வா சாவா கட்டத்தில் இருக்கிறோம் என்றார்.

’’வங்கிக் கடன் உதவியோடு சமீபத்தில்தான் இயந்திரம் வாங்கினேன். கிட்டதட்ட மொத்த செலவுகளும் ஒரு கோடி ஆனது. இன்னும் உற்பத்தி தொடங்கப்படாத நிலையில் இயந்திரம் மூழ்கிவிட்டது. இந்த நஷ்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. இந்த இயந்திரத்தை இறக்குமதி செய்து என் தொழிலை விரிவுபடுத்த ஆசைப்பட்ட என் கனவுகளும் இதனோடு தகர்ந்து போயுள்ளது என்று நம்பிக்கை உடைந்து பேசினார் ஒருவர்.

இந்த பகுதியில் உள்ள தொழிலகங்கள் ஒவ்வொன்றும் குறு தொழில் வகைகளை சேர்ந்தது. இரண்டு மூன்று தொழிலாளர்களோடு தொழில்முனைவோரும் உடலுழைப்பை செலுத்துபவர்களாக இருக்கின்றனர். வீடுகளும் அருகருகிலேயே இருக்கிறது. அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பொருட்களை பாதுகாப்பதற்கு எந்த வாய்ப்புகளை தரவில்லை.

- maheswaran.p@thehindutamil.co.in

விழாக் காலம்: ஆச்சிக்கு மரியாதை! .............ரசிகா



திரையுலகில் பொக்கிஷமாய், கலையுலக ராணியாய் மங்காத புகழுடன் ஜொலித்தவர் பழம்பெரும் நடிகை ஆச்சி.மனோரமா. கலையுலகின் அனைத்து துறைகளிலும் மின்னிய அவரது ஆற்றலுக்கு மரியாதை செய்யும் ஓர் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியே ‘ஆச்சிக்கு மரியாதை’!

ஆச்சியின் ஐம்பது ஆண்டு காலத் திரைத்துறை சாதனையை ஏற்கெனவே ‘மனோரமா 50’ என்ற வெற்றிகரமான இன்னிசை நிகழ்ச்சியாக நிகழ்த்திக் கொண்டாடிய, 7,500-க்கும் அதிகமான மேடைகள் கண்டு உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்திய சங்கர் ராமின் ‘சாதகப் பறவைகள்’ இசைக்குழுவே தற்போது ஸ்டார் ஈவன்ட் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் ஆச்சியின் ரசிகர்களை மகிழ்விக்க இம்முறை இன்னும் பிரம்மாண்டமாக, நேர்த்தியாகவும் நினைவுகளை கிளறித் தாலாட்டும் விதமாகவும் ‘ஆச்சிக்கு மரியாதை’எனும் மெகா இன்னிசை இரவை நிகழ்த்த இருக்கிறார்கள்

“வா வாத்தியாரே ஊட்டாண்ட”, “தில்லாலங்கடி ஆட்டம் போட்டு”, “முத்துக் குளிக்க வாரீகளா” என தன் வசீகர குரலால் அனைவரையும் கட்டியிழுத்த ஆச்சியின் புகழ்பெற்ற பாடல்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் நடித்த படங்களின் மெட்லிகள், காமெடி கலாட்டா, சின்னத்திரை ஜூனியர் மற்றும் சீனியர் சிங்கர்களின் கலக்கல் ஃபெர்மான்ஸ் என வருகிற ஜனவரி 1, 2016 புதுவருட புத்தாண்டு நாளில் திரையுலக நட்சத்திரங்கள், பிரபலங்கள், முன்னணிக் கலைஞர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஒரு மெகா இன்னிசை இரவாக சென்னை காமராஜர் அரங்கில் மாலை 6 மணிக்கு அரங்கேற்றப் போகிறது. இதில் பங்கேற்று ‘ஆச்சிக்கு மரியாதை’ செய்ய அழைக்கிறது சாதகப் பறவைகள், ஸ்டார் ஈவண்ட் கூட்டணி.

மனசு போல வாழ்க்கை 36: நேசித்துப் பெறும் தோல்வி .... டாக்டர். ஆர். கார்த்திகேயன்

Return to frontpage

உலகை இயக்கும் மாபெரும் சக்தி எது என்று என்னைக் கேட்டால் அன்புதான் என்பேன்.

உள் மன அமைதி முதல் உலக அமைதி வரை அனைத்தும் அன்பினால் மட்டுமே சாத்தியம்.

அன்பு குறையும்போது மனதில் வன்மம் வளர்கிறது. அன்பு வற்றிய மனம் தான் பிறர் துயரைப் பார்க்க மறுக்கிறது. அன்பு போதாமைதான் குற்றங்கள் செய்யத் தூண்டுகிறது.

நம் எல்லோரிடத்திலும் அன்பு இருக்கிறது. ஆனால் அது மிகக் குறுகிய வட்டத்தில் பலகீனமாக இயங்குகிறது. அதுவும் நிபந்தனைகளுடன் அளிக்கப்படுகிறது. நம் அன்பு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அது வெறுப்பாக மாறுகிறது. நமக்கு வரும் அன்பு பகிரப்பட்டால் நாம் கொடுக்கும் அன்பு குறைகிறது. ஒரு பக்கம் உள்ள அன்பு இன்னொரு பக்கம் செல்கிறது.

சக்தியின் அடையாளம்

அன்பை நிரூபிக்க மனம் பல விளையாட்டுக்கள் புரிகிறது. அன்பைப் பெறவும் பல வித்தைகள் புரிகிறது. பாதகங்கள் செய்யும்போதெல்லாம் அன்பினால் என்று வசனம் பேச வைக்கிறது. எந்த அன்பு நிஜம் என்று தெரியாமல் பல நேரங்களில் குழம்புகிறது மனம்.

தன்னலம் கருதாமல் பிரதிபலன் எண்ணாமல் பிறர் மீது செலுத்தும் உணர்வுதான் அன்பு. அது பெறுபவரின் தகுதி அல்ல. கொடுப்பவரின் தகுதி. அது கொடுக்கல் வாங்கல் வியாபாரம் அல்ல. அள்ளித் தரும் அளவற்ற சக்தியின் அடையாளம்.

பிள்ளை மீது தாய் உயிரையே வைக்கிறாள். காதலியைக் காதலன் உயிரே என்று அழைக்கிறான். நட்பு தான் உயிரைவிடப் பெரிது என்கிறான். கொள்கைக்கு உயிரைக் கொடுப்பேன் என்று பறைசாற்றுகிறான் தொண்டன். அடிப்படையில் அனைத்தும் அன்பு தானே?

ஆள் பார்த்துதான்

இவ்வளவு சக்தி மிகுந்த அன்பு ஏன் தடைபட்டுப் போகிறது?

இரண்டாம் பிள்ளை வந்தவுடன் முதல் பிள்ளை தனிமையை உணர்கிறது. மகன் மணந்தவுடன் தாய் தனிமைப்படுகிறாள். ஒருதலைக் காதல் என்றால் காதலனோ காதலியோ தனிமையைத் தழுவுகிறார்கள். அன்பைப் பெறும் போராட்டத்தில்தான் வலிகள் ஏற்படுகின்றன.

ஆனால், அன்பைக் கொடுப்பவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை. நம் அன்பு எத்தனை பரந்து விரிந்துள்ளது என்பதில்தான் நம் மன வளம் அடங்கியுள்ளது.

நம் குழந்தை மீது கொண்டுள்ள அதே அன்பை பிற குழந்தைகள் மீது நம்மால் கொள்ள முடிந்தால் அது தான் அளவற்ற அன்பு. இது யதார்த்தத்தில் நடக்குமா? சாலையில் யாரோ ஒரு பெண் அடிபட்டுக் கிடக்கிறாள் என்றால் அதை ஒரு செய்தியாக மட்டும் உள்வாங்குகிறது மனம். ஆனால், அது தன் பெண் என்று தெரிந்தவுடன் பதைபதைக்கிறது. ஏன் என்றால் ஆள் பார்த்துதான் அன்பு வருகிறது!

ஆனால், சாலையில் அடிபட்டிருக்கும் பெண்ணைத் தன் பெண்ணாக நினைக்க முடிந்தால், அங்கு நிபந்தனையில்லா அளவற்ற அன்பு சுரக்கிறது என்று பொருள். நம் பிள்ளை சாப்பிடாமல் படுத்தால் மனம் பதைபதைக்கிறது. ஆனால், நம் தெருவிலேயே எத்தனை பிள்ளைகள் பசியோடு உறங்குகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறதா மனம்? இப்படிப் பிறர் மீது நிஜமான அன்பும் அக்கறையும் கொண்டால் நம்மால் குற்றங்கள் செய்ய இயலாது.

அன்பைத் தின்னும் சுயநலம்

மக்கள் மீது அன்பு கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் பணத்தில் ஊழல் செய்ய மாட்டார்கள். மக்கள் வரிப்பணத்தில் மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள். ரசிகர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் சினிமாக்காரர்கள் தாங்களே தங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாத வன்முறையான ஆபாசமான சினிமாக்கள் எடுக்க மாட்டார்கள். துன்பம் இழைக்கப்பட்டவர் மீது உண்மையான அன்பிருக்கும் ஊடகக்காரர்கள் துன்புறுத்தும் கேள்விகள் கேட்டு, அவற்றை எழுதி, படமாகக் காட்டி பாதிக்கப்பட்டவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள். வாடிக்கையாளர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் வியாபாரிகள் மோசமான பொருட்களை அநியாயமான விலைக்கு விற்க மாட்டார்கள். பிற மனிதர்கள் மீது அன்பிருந்தால் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் வறுமையில் தவிக்கையில் நம்மால் குற்ற உணர்வில்லாமல் மிதமிஞ்சிய சுகபோகங்களை அனுபவிக்க இயலாது.

பிறர் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் செல்வதற்குப் பழகுகையில் அன்பு வற்றத் தொடங்குகிறது. அது அதிக பட்சம் ஓரிருவர்மீதுகூடச் செலுத்த முடியாவண்ணம் பற்றாக்குறை ஆகிறது. சுயநலம் அன்பைத் தின்ன ஆரம்பிக்கிறது. இதுதான் நம்மைச் சமூகத்துக்கு எதிரான மனிதர்களாக மாற்றுகிறது.

‘யாருக்கு என்ன நடந்தாலும் நம் வேலை நடந்தால் சரி’ என்பது பொது விதியாகிறது, பிழைக்கச் சொல்லித்தரும் கல்வி, அன்பைப் போதிக்கத் தவறுகிறது. பிறரை மிதித்துப் பெறும் வெற்றியைவிடப் பிறரை நேசித்துப் பெறும் தோல்வி மகத்தானது என்று அடுத்த தலைமுறைக்காவது சொல்லித் தர வேண்டும்.

அன்பை அள்ளித் தரும் மனம் விரிவடையும். உறுதி பெறும். பொலிவு பெறும்.

அன்பு காட்டுபவர்கள் முகத்தில் உள்ள பரவசக் களிப்பை பாருங்கள். அது ஆயிரம் பாடங்கள் சொல்லும். செடிக்கு நீர் ஊற்றும்போதோ, நாய்க்குச் சோறிடும் போதோ, பிள்ளைக்குப் பாலூட்டும்போதோ, ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதோ, ரசிகர்களுக்காகப் பாடகர் குழைந்து பாடும்போதோ, அன்புடன் கொடுக்கும் எல்லாத் தருணங்களிலும் மனிதர்கள் அழகாய்த் தெரிவார்கள்!

பெரிய அறிவும் சிறிய அன்பும் கொண்ட மனிதர்கள் வாழும் சமூகம் ஆபத்தானது. அன்பு கலக்காத அறிவு, நாசத்தை மட்டுமே நடத்திக் காட்டும்.

எல்லா உயிரும் ஓருயிரே என்று உணர்ந்து அன்பு செலுத்துவதுதான் பேரன்பு. அது தான் பேரறிவு. அழியாத அன்பைத் தர ஆயிரம் வழிகள் உள்ளன!

பேரன்பைப் பொழிவதே பேரானந்தம் என்று உணர்கையில் நம் மனம் சுகம் பெறும். வாழ்க்கை வளம் பெறும்!

(முற்றும்)

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

காற்று வாங்கப் போவோம்.


Dinamani


காற்று வாங்கப் போவோம்...!


By மன்னை. பாஸ்கர்

First Published : 25 December 2015 01:11 AM IST


சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் வணிகம் அமோகமாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே.
இப்போது இயற்கை தந்த மற்றொரு வரப்பிரசாதமான காற்றையும் வியாபாரப் பொருளாக்கி விட்டனர் பன்னாட்டு வணிகர்கள்.
காற்று விற்பனையா? உண்மைதான். தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து விற்கும் தொழிலை வெற்றிகரமாகத் தொடங்கி விட்டது கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம். "விட்டாலிட்டி ஏர்' என்ற அந்த பன்னாட்டு நிறுவனம் கனடாவில் உள்ள பான்ஃப் மலை உச்சி, லூயிஸ் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியிலிருந்து தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து வணிக முத்திரையுடன் விற்பனையைத் தொடங்கி விட்டது.
இப்போதைக்கு மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் அந்நிறுவனத்தின் காற்று விற்பனை கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் காற்று மாசு தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றது. அப்போது சீன நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருவது குறித்து கடுமையான எச்சரிக்கை விடப்பட்டது.
அதை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், வாகன உற்பத்திக் கூடங்கள் போன்றவற்றிலிருந்து பெருமளவு புகை வெளியேற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
குளிர் காய்வதற்காக பெய்ஜிங் நகர வீடுகளில் நிலக்கரித் துண்டுகளை எரிப்பதால் வெளியேறும் அதிக அளவு புகையால் காற்று கடுமையாக மாசடைந்தது. இதனோடு பனிப்புகையும் சேர்ந்து கொண்டதால் மக்கள் பல்வேறு சுவாச நோய் பாதிப்புகளுக்கு உள்ளாயினர். இதனால், கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு பெய்ஜிங்கில் பள்ளிக் கூடங்கள் உள்பட கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டன. மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி கனடாவின் விட்டாலிட்டி ஏர் நிறுவனம் சீனாவில் கால் பதித்து காற்று விற்பனையைத் தொடங்கியது. விற்பனை சூடுபிடிக்க உற்சாகமடைந்த அந்த நிறுவனம், சீனாவின் பல்வேறு நகரங்களிலும் தங்கள் நிறுவனத் தயாரிப்பை விற்க முகவர்களை நியமித்தது. ஒரு புட்டி காற்றின் விலை இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதாவது, சீனாவில் ஒரு தண்ணீர் புட்டியின் விலையை விட 50 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மலைத்தொடரின் உச்சியிலிருந்து அடைக்கப்பட்ட காற்றுப் புட்டிகளுக்கு மவுசும் விலையும் இன்னும் கொஞ்சம் அதிகம். இந்தக் காற்று 10 முதல் 12 மணி நேரம் வரை தூய்மையானதாக இருக்குமாம். இப்போது காற்று விற்பனை சீனாவில் கன ஜோராக நடக்கிறது.
தூய்மையான காற்றுப் புட்டிகளை வாங்கி பயன்படுத்துவதை ஓர் அந்தஸ்தாகவே கருதத் தொடங்கி விட்டனர் மேல்தட்டு மக்கள். குறிப்பாக பெண்களும், தொழில் அதிபர்களும் இந்த காற்றுப் புட்டிகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
எங்கு சென்றாலும் தங்கள் கைப்பைகளில் காற்றுப் புட்டிகளை கையோடு எடுத்துச் செல்கின்றனர். காற்று மாசடைந்த பகுதிகளில் எப்போது தேவையோ அப்போது தேவையான அளவு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கைபேசிகளை எடுத்துச் செல்ல மறந்தாலும் காற்றுப் புட்டிகளை அவர்கள் மறப்பதில்லை. பெய்ஜிங்கில் சீனர்களின் நிலை அந்த அளவுக்கு பரிதாபகரமாகி விட்டது. வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதைப் பார்த்த கனடா நிறுவனம் தற்போது அதைப் பெருக்கும் முயற்சியிலும் இறங்கி விட்டது. தூய்மையான காற்றின் அவசியம், மாசடைந்த காற்றால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளம்பரங்கள் செய்யத் தொடங்கி இருக்கிறது.
தங்கள் நிறுவனம் தூய்மையான காற்றை எப்படிப்பட்ட இடங்களில் இருந்து எடுக்கிறது? புட்டிகளில் எப்படி அடைக்கிறது? என்பதைப் பற்றி தனது இணையதளத்தில் புகைப்படங்களுடன் விரிவாக கூறியிருக்கிறது இந்த நிறுவனம்.
தனது நண்பருடன் சேர்ந்து விளையாட்டாக இந்த நிறுவனத்தை ஆரம்பித்ததாக கூறும் விட்டாலிட்டி ஏர் நிறுவனத்தின் நிறுவனர் மோசஸ் லாம், முதலில் ஒரு பாலிதீன் பையில் பான்ஃப் மலைத்தொடரின் காற்றைப் பிடித்து அடைத்து 50 பென்ஸ் என்ற விலைக்கு விற்றாராம்.
பின்னர், இரண்டாவது முறையாக ஒரு பாலிதீன் பையில் காற்றை விற்றபோது அதை விட மூன்று மடங்கு கூடுதல் விலை, அதாவது 160 பென்ஸ் கிடைத்ததாம். அப்போதுதான் ஏன் இதையே ஒரு தொழிலாக செய்யக் கூடாது என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. உடனடியாக செயல்படத் தொடங்கினார்.
இப்போது விட்டாலிட்டி ஏர் நிறுவனம் பல நாடுகளில் கிளைகளையும் விற்பனை முகவர்களையும் கொண்டு செயல்படத் தொடங்கி விட்டது. உங்கள் ஊரில் நீங்களும் காற்று விற்பனை முகவராகலாம். அதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் விண்ணப்பங்கள் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது இந்த நிறுவனம் காற்று மற்றும் ஆக்ஸிஜன் புட்டிகளை வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தீவிரமாக களமிறக்கியுள்ளது. சீனாவில் கொடி கட்டிப் பறக்கும் காற்று வியாபாரத்திற்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வரவேற்பு இல்லையாம்.
ஆனாலும், தண்ணீர் புட்டிகள் இந்தியாவில் பெருமளவில் விற்பனையாவதால்,காற்றுக்கும் சந்தை கிடைக்கும் என்று காத்திருக்கிறது இந்நிறுவனம்.
அப்படி ஒரு நிலை இந்தியாவில் ஏற்பட்டால் என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டு காற்று மாசு, வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்கால சந்ததியின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
பொருள்களைத் தயாரித்து விற்று வந்த நிலை மாறி, இயற்கையாக கிடைப்பவற்றையும் காசாக்க முயற்சிக்கும் இந்த வணிக உலகத்தின் ஆசைக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. ஓர் அளவுக்கு மேல் அவர்களை அனுமதிப்பதும் தவறுதானே!

டிஜிட்டல் மீட்டர் என்ன ஆச்சு?

logo

இந்திய பொருளாதாரம் இப்போது சீரடைந்து கொண்டுவருவதற்கு காரணம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மளமளவென்று குறைவதுதான். சமீபகாலங்களாக கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்துவருவதால், அரசின் அன்னிய செலாவணியும் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 2008–ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 140 டாலராக இருந்தது. இப்போது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 36.05 டாலராக குறைந்துள்ளது பெருமகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு ஏற்ப, பெட்ரோல்–டீசல் விலை குறையாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏனெனில், பெட்ரோல்–டீசல் மீதான கலால் வரி மற்றும் இதர வரிகள் வருமானம் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, குறைந்துவிடுவதால் அந்த வருமானம் குறையாத அளவில் வரியையும் கூட்டிவிடுகிறார்கள். 1989–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.50 ஆகவும், மண்எண்ணெய் விலை 2.25 ஆகவும், டீசல் விலை 3.50 ஆகவும் இருந்தது. இப்போதும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, அதற்கேற்ப இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துக்கொண்டுதான் வருகின்றன. ஆனால், அதற்கேற்ப ஆட்டோ ரிக்ஷா கட்டணம் குறையவில்லை என்பது மக்களுக்கு பெரும் குறையாக இருக்கிறது.

2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி தமிழ்நாட்டில் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 25 ரூபாய் என்றும், அதன்பிறகு ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கு 12 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 72.25 காசாக இருந்தது. ஆனால், இப்போது ரூ.60.80 காசாக குறைந்துள்ளது. இவ்வளவு குறைந்தபிறகும் ஆட்டோ ரிக்ஷா கட்டணம் குறையவில்லை. இதன்பின்பு, ஐகோர்ட்டு வழங்கிய ஒரு தீர்ப்பில் 8 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதில், முதல் அம்சமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றத்திற்கு ஏற்ப, 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ ரிக்ஷா கட்டணம் மாற்றியமைக்கப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரையில் அப்படி ஒருபோதும் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. பொதுமக்களை பொருத்தமட்டில், கட்டணத்தை மாற்றியமைக்காவிட்டாலும் பரவாயில்லை, மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டினாலே போதும் கட்டணத்தை கொடுக்கத்தயாராக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அனைத்து ஆட்டோ ரிக்ஷாக்களிலும் ஜி.பி.எஸ். உடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் பொருத்துவதற்காக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்கட்டமாக சென்னை பெருநகரில் இயங்கிவரும் ஆட்டோ ரிக்ஷாக்களில் இடத்தை காட்டும் கருவியுடன், அதாவது ஜி.பி.எஸ். உடன் கூடிய, மின்னணு இலக்க அச்சடிக்கும் எந்திரத்துடன் (டிஜிட்டல் மீட்டர்) விலை ஏதும் இல்லாமல் அரசு சார்பில் பொருத்தப்படும் என்றும், இதற்காக அரசுக்கு 80 கோடி ரூபாய் செலவாகும் என்று அறிவிக்கப்பட்டு, அந்த நிதியும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. ஆக, கோர்ட்டும் சொல்லிவிட்டது, அரசும் நிதி ஒதுக்கிவிட்டது. ஆனால், நிறைவேற்றவேண்டிய போக்குவரத்துத்துறை இதற்காக டெண்டர் விடுகிறோம் என்று அறிவித்து, அந்த டெண்டர் விடும் முறையே இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே போகிறது. இந்த குறையை போக்க உடனடியாக மீட்டர் போட்டு கட்டணம் வசூலிக்கும் கட்டாய நடவடிக்கைகளையும், தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவியுடன் இணைந்த டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையையும் போக்குவரத்துத்துறை போர்க்கால அடிப்படையில் எடுக்கவேண்டும்.

Thursday, December 24, 2015

இந்தியாவில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்

logo

புதுடெல்லி,

இந்தியாவில் இணையதளங்களில் நடப்பு ஆண்டில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் பட்டியலை கூகுள் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக டிரெண்டிங்கில் இருப்பதாக கருதப்படும் ஆப்பிளின் ஐபோன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இடம்பெறவில்லை. அதேபோல், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 6 மற்றும் நோட் 5 ஆகியவையும் டாப்-10 பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால், முதல் 3 இடங்களுக்குள் மைக்ரோமேக்ஸ், லெனோவா ஸ்மார்ட்போன்கள் இடம்பிடித்துள்ளன.

2015-ம் ஆண்டு கூகுளில் (இந்தியா) அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் டாப்-10 பட்டியல் பின்வருமாறு:-

1. யூ யுரேகா
2. ஆப்பிள் ஐபோன் 6 எஸ்
3. லெனோவா கே.3 நோட்
4. லெனோவா ஏ 7000
5. மோட்டோ ஜி
6. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர்
7. சாம்சங் கேலக்ஸி ஜே 7
8. மோட்டோ எக்ஸ் பிளே
9. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்
10. லெனோவா ஏ 6000

முதலிடத்தை பிடித்துள்ள யூ யுரேகா ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான யு டெலிவென்சர்ஸின் தயாரிப்பு ஆகும். இந்த துணை நிறுவனம் ஆன்லைனில் மட்டுமே பிராண்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு

logo


மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இருந்த சிறார் நீதிசட்டம் ராஜ்யசபாவில் நிறைவேறிவிட்டது. ஏற்கனவே லோக்சபாவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு இதற்கு பலத்த எதிர்ப்புகள் இருந்தது. இந்தியாவில் எல்லா குற்றங்களும், இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுகிறது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குற்றம்செய்திருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். 18 வயதுக்கு குறைவானவர்கள் ஒரு குற்றத்தை செய்திருந்தால், அவர்களை மற்ற தண்டனை சட்டத்தின்கீழ் விசாரிக்காமல், இப்போதுள்ள சிறார் நீதி சட்டத்தின்கீழ் விசாரித்து, எந்த குற்றம் என்றாலும் அதிகபட்சம் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப் படுகிறது. அந்த தண்டனை காலத்தையும் அவர்கள் சிறையில் கழிக்கவேண்டியது இல்லை. சிறார் சீர்திருத்த இல்லங்களில் வைத்து, திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இப்போது இந்த சட்டத்துக்கான திருத்தம் ராஜ்யசபையிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்தவுடன் நிறைவேறிவிடும். இதன்படி, இனி 16 வயது ஆனவர்களும், கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களை செய்திருந்தால், அவர்கள் மற்றவர்களைப்போல தண்டனை பெறுவார்கள் என்பதுதான் இந்த புதிய சட்டத்தின் சாராம்சம். அதேநேரம், இவர்களுக்கு ஆயுள் தண்டனையோ, தூக்குத்தண்டனையோ விதிக்கப்படமாட்டாது. இந்த சட்டம் நிறைவேறிய பிறகு, இனி எதிர்த்து பயனில்லை என்றாலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்தான் இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்திலேயே மத்திய உள்துறை ராஜாங்கமந்திரி ஹரிபாய் பராதிபாய் சவுத்திரி பேசும்போது, ‘கடந்த ஆண்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறார்களின் கணக்கை பார்த்தால், 55.6 சதவீத சிறார்கள் ஆண்டு வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கு குறைவான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அடுத்த 22.4 சதவீத சிறார்கள் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பத்தை சார்ந்தவர்கள். அடுத்த 14.3 சதவீத சிறார்களை எடுத்தால், அவர்கள் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்’ என்று கூறியிருக்கிறார்.

இவ்வளவு ஏன்? நிர்பயா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சிறுவன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். குற்றம் நடந்த தினத்துக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடியவன், பிளாட்பாரத்தில் பசியும், பட்டினியுமாக அலைந்து இருக்கிறான். அந்த ஒரு சம்பவத்துக்கு முன்பு எந்த குற்றமும் செய்யாதவன். நேற்று முன்தினம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாடு மேய்க்கச் சென்ற 21 வயது திருமணமான பெண்ணை கற்பழித்த வழக்கிலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனும், 16 வயது ஏழை சிறுவன். ஆக, வறுமையால் வாடும் இளம் சிறார்களுக்கு இத்தகைய குற்றங்கள் பெரிதாக தெரியவில்லை. இவர்கள் எல்லாம் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த சட்டத்தை நிறைவேற்ற இவ்வளவு அவசரம் காட்டிய அரசாங்கங்கள், இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும், படிப்பறிவு இல்லாத ஏழை சிறார்களின் வாழ்க்கை பாதுகாப்புக்கு, உணவு வழங்குவதற்கு, கல்வி புகட்டுவதற்கு உண்டான வழிகளை காணவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசங்களையும், மானியங்களையும் வழங்கும் தீவிரத்தைவிட, இதுபோன்றவர்களின் வாழ்க்கை பாதுகாப்பில் காட்டினால்போதும், குற்றங்களை குறைத்துவிடலாம். வாழ்வின் கடைக்கோடியில் உள்ள இளஞ்சிறார்களுக்கு பசி அறியாத வகையில் உணவு வழங்கி, பள்ளிக்கூடங்களுக்கு கொண்டுசென்று கல்வி புகட்டி, அவர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கடமை நிச்சயமாக மத்திய–மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

Wednesday, December 23, 2015

குற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்கப் போகிறானா அந்தச் சிறுவன்? ....மு.அமுதா

Return to frontpage



ஓவியம்: தீபக் ஹரிசந்தன்.


நிர்பயா வழக்கில் இளம் குற்றவாளி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் எதிரொலியாக, தீவிர குற்றங்களில் ஈடுபடும் 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களை, வயது வந்தோராகக் கருதி நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சிறார் நீதிச்சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

'பாப்புலர் சென்டிமென்ட்' என்ற கூறப்படும் மிகப் பிரபலமான ஓர் உணர்ச்சிமிகுதியின் வெளிப்பாடாகவே இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொதுவெளியில் கூறப்படுகிறது.

சிறுவன் விடுதலையும், அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதாவும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

1. விடுதலையான இளம் குற்றவாளி உண்மையிலேயே இனி சுதந்திரமாக இருக்கப் போகிறாரா?

2. சிறுவன் மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பு மையத்தில் இருந்தபோது அவரது சீர்திருத்ததுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன?

3. சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்படும் சிறுவர்களை குற்றத்தை உணரச்செய்து, மனநலத்தைச் சீரமைத்து, மறுவாழ்விற்குத் தயார்ப்படுத்தும் முழுப் பொறுப்பு யாரிடம் இருக்கிறது?

4. ஒரு சிறுவன் பெருங்குற்றம் செய்து அது செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகும் வரை அந்தச் சிறுவன் அக்குற்றத்தை செய்யத் தூண்டிய பின்புலனும் காரணிகளும் கவனத்தில் வராதது ஏன்?

5. இத்தனை விமர்சனங்கள், நெருக்குதல்களுக்குப் பின் விடுதலையாகியுள்ள சிறுவனை இந்தச் சமூகம் எப்படி அணுகும்?

இது போன்ற இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன.

நிர்பயாவின் கொடூரக் கொலை போல இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பெண் என்ற சக உயிரின் மீதே ஆண் என்ற பிம்பம் தாக்குதல் நிகழ்த்துகிறது, நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.

இளஞ்சிறார் சட்டப்படி, பத்து முதல் பதினெட்டு வரை உள்ளவர்கள் குழந்தைகள், அவர்களுக்குத் தண்டனைக் காலம் குற்றங்களின் தன்மையை வைத்து மாறினாலும், பெரும்பாலும் எத்தனை ஆண்டுக் காலம் என்றாலும், அந்தத் தண்டனைக் காலம் என்பது அவர்களின் குற்றத்தை உணரச்செய்து, மனநலத்தைச் சீரமைத்து, மறுவாழ்விற்குத் தயார்ப்படுத்துவது போன்றவையே சட்டத்தின் நோக்கம்.

இந்த எல்லாச் சட்ட நோக்கமும் அப்படியே நிறைவேறினால் இங்கே குற்றங்களின் எண்ணிக்கை, பெருமளவு குறைந்து போகும்.

இந்தக் குழந்தைகள் ஏன் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் அல்லது ஈடுப்படுத்தப்படுகிறார்கள்?

வீட்டில் நிலவும் சூழல், குழந்தைகளுக்கு ஒரு நீதியும் நமக்கொரு நியாயமும் என்று பெரியவர்கள் நடந்துகொள்ளும் முறைகள், அவர்களின் கண்முன்னே நிகழும் குடும்ப வன்முறைகள், தங்கள் வீட்டுப் பெண்களை ஆண்கள் நடத்தும் விதம், அல்லது வீட்டில் உள்ள பெண்கள் நடந்து கொள்ளும் விதம், முறையான அடிப்படைக் கல்வி கிடைக்காத நிலை, வறுமை, இக்கட்டான சூழ்நிலை என்று வீட்டில் உள்ள ஏதோ ஒன்றில் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது, பாதிக்கப்படும் குழந்தையை அரவணைக்கும் யாரோ ஒருவர் இருந்தால் கூட அந்தக் குழந்தைத் தவறு செய்வதில்லை.

வீட்டில் கிடைக்காத அன்பையும் ஆதரவையும் குழந்தைகள் வெளியில் தேடும், தன் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள், குடும்பங்கள் என்று அதன் வெளி வட்டம் பெரிதாகும்போது, அந்த வெளிவட்டத்தில் சமூக விரோதிகளும், குற்றவாளிகளும் இருந்துவிட்டால், அல்லது ஒரு குழந்தையைப் போலவே பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தையும் துணை சேர்ந்தால், தவறுகள் இயல்பாகும்.

இருவேறு சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.

முதல் சம்பவம்:

ஒன்று ஆதரவற்ற இல்லத்தில் நிகழ்ந்தது, அங்கு ஒரு பதினான்கு வயது மாணவனை, மாலை வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஓர் இருபது இருபத்திரண்டு வயது பெண், கையில் ஒரு பிரம்பை வைத்து அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தாள், தடுத்துவிட்டு வந்தபோது, அந்த இல்லத்தின் பொறுப்பில் இருந்தால் மற்றுமொரு ஆசிரியை, அனாதைகளான இந்தச் சிறுவர்களை மிகுந்த கண்டிப்புடன் அடித்து உடைத்து வளர்த்தால்தான் ஒழுங்காய் வளர்வார்கள் என்று சொன்னதைக் கேட்டதும் வேதனைதான் மிஞ்சியது.

இரண்டாவது சம்பவம்:

இரண்டாவது நிகழ்வு நான் பள்ளியில் படிக்கும்போது என் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு குடும்பத்தைப் பற்றியது, கணவன் மனைவி இருவரும் படிக்கவில்லை, அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள், அவர்களின் மூத்த மகனுக்கு இரண்டாவது மகனுக்கும் இரண்டே வயது வித்தியாசம், ஏழு வயது மூத்த மகனை, எல்லாம் தெரிந்தவனாய் இருக்கவேண்டும், தம்பியும் தங்கையும் குறும்பு செய்யலாம், தவறு செய்யலாம், ஆனால் ஏழு வயது கழுதை அதைச் செய்யலாமா என்று பொழுது தவறாமல் ஒரு பிரம்பை வைத்து அவனை அடிப்பார்கள், யார் சொன்னாலும் அந்தப் பெண் கேட்டதேயில்லை, கூடவே அச்சிறுவனின் தகப்பனும், அடி உதை மட்டுமே வாங்கிய மூத்தமகன், யாருடைய அரவணைப்பும் இன்றி, மனநிலைப் பிறழ்ந்து, அவனுடைய இருபத்திரண்டு வயதில் தொலைந்துபோனான், மனநிலைப் பிறழ்ந்த மகனின் ஏக்கத்தில் இருந்த பெற்றோருக்கு, இளையவன் என்று தூக்கி கொண்டாடிய மகன், தகாத நட்பினால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, ஒருநாள் மெரினாவின் கடலலையில் சிக்கி உயிரை விட்டுவிட்டான் என்ற செய்தி அடுத்த இடியாக இறங்கியது.

ஏறக்குறைய மனச்சிதைவுக்கு ஆளாகிவிட்ட பெற்றோர், ஒரே பெண்ணை வெளியில் எங்கும் அனுப்பாமல், எப்படியோ திருமணம் செய்து கொடுத்து அனுப்பி விட்டனர்.

ஆதரவில்லை என்றாலும், பெற்றோர் இருந்தாலும் எல்லாப் பிள்ளைகளுக்கும் அரவணைப்புக் கிடைத்துவிடுவதில்லை, ஒரே குழந்தை என்று மிதமிஞ்சிய அன்பும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் மிதமிஞ்சிய கண்டிப்பும் குழந்தைகளின் ஏதோ ஒரு தவறுக்கு அடித்தளம் அமைக்கிறது, கண்டுகொள்ளப்படாத சிறு தவறுகள் காலப்போக்கில் பெரும் குற்றங்களுக்கு ஏதுவாகிறது.

மாற்றம் என்பது தண்டனையில் வருமா?

குழந்தைகள் ஈடுபடும், அல்லது ஈடுபடுத்தப்படும் குற்றங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு மனநிலைப் பிறழ்வால், சூழ்நிலையால், போதிக்கப்பட்ட எண்ணங்களின் விளைவால், கூடா நட்பினால், சமூகத்தால், பெற்றோர்களின் அலட்சியத்தால் என்று ஏதோ ஒரு காரணத்தினால் நிகழ்ந்துவிடுகிறது.

குற்றவாளிகளை நாம்தான் உருவாக்குகிறோம், நம்முடைய தவறு, ஒரு குழந்தையைக் குற்றவாளியாக்குகிறது, இன்னொரு குழந்தையை அந்தக் குற்றத்திற்கு இரையாக்குகிறது.

பத்திரிகைகளில், விளம்பரங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், திரைப்படங்களில் பெண்ணென்றால் போகப்பொருள், ஆணுக்குப் பெண் அடிமைபட்டவள், ஒழுக்கமும் கற்பும் பெண்ணுக்கே உரியது, ஆடை என்பது பெண்ணுக்கு அரண், இதில் தவறும் எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட வேண்டியவள் என்று கருத்துக்கள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தொனிக்கும் வகையில் தான் சித்தரிக்கப்படுகிறார்கள். இவை நாம் சகித்துக் கொள்கிறோம் அல்லது ரசிக்கிறோம்!

வீட்டில் வெளியில் என்று எதிலும் நாம் மாற்றத்தைக் கொண்டு வராமல், அதற்கான கட்டமைப்பை உருவாக்காமல் சட்டங்களை மட்டுமே மாற்றி என்ன பயன்?

தண்டனை என்பது ஒரு பயமுறுத்தும் காரணியாக இருக்கிறது. தண்டனையை அதிகப்படுத்துவது குற்றங்களைக் குறைக்க உதவுமா அல்லது குற்றத்தை மறைக்கத் தூண்டுமா என்பதை நாம் யோசிக்க வேண்டும், தண்டனைக் கொடுத்துச் சிறையில் தள்ளி, வாழ்க்கையை முடித்துவிட்டால் அது பிறருக்கு பாடமாய் இருக்குமா? இருக்கும் தான், இல்லையென்று சொல்ல முடியாது, அது மட்டுமே போதுமா?

இளஞ்சிறார்களின் தண்டனைக்குரிய குற்றங்களுக்கு வயதைக் குறைத்துக் கொண்டே போவது மட்டுமே தீர்வு ஆகாது. பதினெட்டில் இருந்து பதினாறாக ஆக்கி, பின்பு அதையும் குறைக்கும் காலம் வரலாம்!

தீர்மானம் தீர்வா?

ஒரு நிர்பயாவை கொன்றவர்களில், இளம் குற்றவாளி ஒருவன் பேசும் பேச்சு பாமரச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது, அவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களின் பேச்சுப் படித்த சமூகத்தைப் பிரதிபலிக்கிறது... இந்தச் சமூகத்தைத் தண்டிக்காமல் அல்லது திருத்தாமல் இந்தக் குற்றவாளிகளை மட்டுமே தண்டிப்பதால் மாற்றம் நிகழாது!

மாற்றங்களை நாம் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும், எந்தக் குழந்தைக்கும் நல்ல கல்வியும், நல்ல உணவும், அன்பும் ஆதரவும் தேவை, குறைந்தபட்சத் தேவைகளைச் சமூகம் பூர்த்திச் செய்யாதபோது சட்டங்கள் என்பது குற்றவாளிகளைத் தண்டிக்கக் கால சூழலுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும் அல்லது நாம் மாற்றிக்கொண்டே இருப்போம், குற்றங்கள் மட்டும் குறையாது.

பல்லாயிரக்கான குழந்தைகளை இந்தச் சமூகத்தின் அலட்சியம் அரசியல்வாதிகளின் சுயநலம் குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கிறது, பதைக்க வைக்கும் என்சிஆர்பி புள்ளி விவரத்தின் படி 2014 ஆம் ஆண்டு 36,138 வழக்குகள் இளம் குற்றவாளிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 75 சதவீதம் குற்றங்களைச் செய்தோர் பதினாறில் இருந்து பதினெட்டு வயதுக்கு உட்பட்டோர். இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் பதிவான ஒட்டுமொத்த குற்ற வழக்குகள் 28,51,563. இவற்றில், சிறார் குற்றங்களின் பங்கு வெறும் 1.27 சதவீதம் மட்டுமே. அதாவது, 2 சவீதத்துக்கும் குறைவு.

எண்ணிக்கை வழங்கும் உண்மை நிலவரம் இப்படி இருக்க, இளம் குற்றவாளிக்கான வயது வரம்பு 16 ஆக குறைக்க வகை செய்வது என்பது, எதிர்காலத்தில் வழிதவறும் குழந்தைகளின் வாழ்க்கையை முற்றிலும் சிதைக்கும்படி தண்டனைகள் வழிவகுத்திடுமோ அல்லது பல்வேறு சட்டப் பிரிவுகள் போலவே இதுவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அப்பாவிச் சிறார்களை சிறைவாசம் அனுபவிக்கச் செய்துவிடுமோ என்ற அச்சங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

நம்முடைய இயந்திர வாழ்க்கையின் சுயநல எந்திரங்கள் பழுதடையும்போது நம்முடைய இளைய தலைமுறை மொத்தமும் சிறையில் இருக்க நேரிடலாம்... மாற்றம் அவசியம் மனநிலையிலும் சமூகத்திலும்.

மு.அமுதா - தொடர்புக்கு amudhamanna@gmail.com

சிதறிக் கிடக்கும் நியாயங்கள்…நிர்பயாக்கள்! By உமா ஷக்தி First Published : 23 December 2015 12:39 PM IST

Dinamani

இளம் குற்றவாளி ஒருவரை விடுதலை செய்வது சரி / தவறு. இது ஒரு தவறான முன் உதாரணமாகி விடக் கூடும் என்று இரு தரப்பிலும் வாதங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும். இந்த வேளையில் நம் முன் நிற்கக் கூடிய சில கேள்விகளுக்கு மனசாட்சிக்கு உட்பட்டு பதில் தேடவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி. நாடே வெட்கித் தலைகுனிந்து நின்ற ஓர் கருப்பு தினம். ’லைஃப் ஆஃப் பை’ எனும் திரைப்படத்தை பார்த்துவிட்டு இரவு 9 மணிக்கு இளம் பிசியோதெரப்பி மாணவி நிர்பயா (ஜோதி சிங் பாண்டே) மற்றும் அவளது தோழன் அவிந்ர பிரதாப் பாண்டே இருவரும் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். குறைந்த பயணிகள் கொண்ட அந்தப் பேருந்து அவளுக்கு யமனாக மாறப் போகிறது என்று நிர்பயா அப்போது அறிந்திருக்கவில்லை. அடுத்த நாள் ” ஓடும் பஸ்ஸில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி பலியானார்” என்று செய்தித்தாள்களில் படித்து அதிர்ந்து போகாதவர்களே இருக்கமுடியாது.

இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளும் பிடிபட்டனர். அவர்களில் ராம்சிங் என்பவன் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மற்ற நால்வர்களான முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை கிடைத்தது (ஆனால் 2014 மார்ச் மாதம் அவர்கள் மேல் முறையீடு செய்ததால் தூக்குதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது). அந்தக் கடைசி ஒருவனுக்கு அப்போது 17 வயதே நிரம்பியிருந்ததால் இருந்ததால், அவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அவனுக்கு அதிகபட்ச தண்டையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவனுடைய தண்டனைக் காலம் தற்போது சட்டப்படி முடிந்து விட்டதால் அவன் விடுதலை செய்யப்பட்டான். அந்த ஆறு குற்றவாளிகளில் ராம்சிங்கும் இளம் குற்றவாளியும் தான் தான் மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்டார்கள் என்று காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.

தற்போது அவனுக்கு இருபத்தியோரு வயதாகிவிட்டதால், இதற்கு மேல் சிறுவர் சீர்திருத்தக் காப்பதில் வைத்திருக்க சட்டத்தில் இடமில்லை என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அவனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதால் அவனைப் பற்றிய விபரங்களையோ புகைப்படத்தையோ வெளியிடாமல், ஒரு ரகசிய இடத்தில் அவனை விடுவித்துள்ளனர். தவிர குறிப்பிட்ட காலம் வரை அவனைத் தொடர்ந்து கண்காணிக்கவும் ஆணையிட்டுள்ளது மத்திய அரசு சிறார் காப்பகத்திலிருந்து வெளியேறிய அவனுக்கு ரூ. 10,000 நிதியுதவியும் அளித்துள்ளார்களாம். இதை விடக் கொடுமையான தகவல் இந்த மூன்று வருடங்களில் அவனுடைய மனநிலையில் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை என்பதுதான். குற்றவுணர்வு கூட இல்லாமல் அவன் இனி தில்லி தெருக்களில் சுதந்திரமாக நடமாட முடியும் என்பதே வேதனைக்கும் விவாதத்திற்கும் உரிய விஷயமாகி உள்ளது. அவனுடைய தண்டனை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று, தில்லி பெண்கள் கமிஷன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, விசாரணை நடத்திய நீதிமன்றம், அடுத்த நாளே அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. சிறுவனின் (தற்போதைய வயது 20) தண்டனையை நீட்டிக்க சட்டத்தில் இடமில்லை என உச்சநீதிமன்றம் கூறி விட்டது. சட்டத்தில் இடமில்லாத நிலையில், ஒருவரின் உரிமையை கோர்ட் பறித்துக்கொள்ள முடியாது என்று கோர்ட் அழுத்தம் திருத்தமாக கூறி, பெண்கள் கமிஷன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. நிர்பயா சம்பவத்தை தொர்ந்து, 6 மாதங்கள் முன்பு, சிறுவர்கள் நீதி சட்டத்தில், திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு. இதன்படி கொடும் குற்றங்கள் செய்திருந்தால், 16 வயதாகியிருந்தாலும்கூட, அந்த குற்றவாளி சிறார் என கருதப்படமாட்டார். பிற குற்றவாளியை போலவே கருதப்பட வேண்டும். இந்த சட்ட திருத்தம் ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமளி மற்றும் ஒத்துழைப்பு இன்மையால் 6 மாதங்களாக இச்சட்டம், கிடப்பில் கிடக்கிறது என்பது வேதனை அளிக்கக் கூடிய மற்றொரு விஷயம்.

இது தொடர்பாக அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையிலான 3 பேர் குழு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி லீலாசேத், கோபாலசுப்பிரமணியம் ஆகியோரும் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இது குறித்து நீதிபதி ஜெ.எஸ்.வர்மா செய்தியாளர்களிடம் அப்போது பேசிய போது, நாட்டில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டதாக கூறினார். காவல் நிலையங்களில் 25 சதவீதம் பெண் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், சிறார்களுக்கான வயது உச்சவரம்மை 18 லிருந்து 16 குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளதாக வர்மா கூறினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்ய அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக வர்மா தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு மன்னிப்பு அளிக்க கூடாது என்றபோதிலும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க அரசியல் சட்டம் அனுமதி அளிக்கவில்லை என்பதால் அதற்கு தாங்கள் பரிந்துரைக்க முடியாது என்றும் ஜே,சி வர்மா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பாலியல் பலாத்கார குற்றவாளிகள் போலீசாராக இருந்தாலும், அரசு அதிகாரிகளாக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்திய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்யப்படவேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தம் 630 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை வர்மா கமிஷன் மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது. ஆனால் அதற்கு சரியான வரவேற்பு இல்லை.

லெஸ்லி வுட் இயக்கி பிபிசியில் ஒளிபரப்பான ‘இந்தியாவின் மகள்’ காணொலியை நம் நாட்டில் உடனடியாக தடை செய்துவிட்டார்கள். இளம் குற்றவாளியான அவனுக்கு விடுதலை அளித்ததுடன் அவனுடைய முகத்தை ஊடகங்களில் வெளியிட அனுமதிக்கவில்லை.

என்ன மாதிரியான தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? முழுமையான அகிம்சையும் பின்பற்றாத முழுமையான தண்டனைகளும் கொடுக்க இயலாத ஒரு அரைவேக்காடான அரசியலும் சட்டமும் கொண்ட ஒரு நாடாக நம் நாடு தேங்கிக் கிடப்பதைப் பார்த்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. பெண்களுக்கு எதிராக இத்தகைய கொடூரமான கொலை பாதகச் செயலை செய்பவர்களை வயது வரம்பு பார்த்து விடுவிப்பது என்ன நியாயம்? மதுரையை எரித்த கண்ணகியைப் போல் உயிர்த்தெழுந்து நிர்பயாக்களே தங்களுக்கான நீதியை தேடிக் கொள்ளவேண்டுமா? மக்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளனவா அல்லது பாதுகாப்பற்ற ஒரு மனநிலையில் இந்தியப் பெண்கள் தினமும் படிக்கவும் பிழைக்கவும் உயிரையும் அதைவிட பெரிதான அவரிகள் நினைக்கும் மானத்தையும் பணயம் வைக்க வேண்டுமா? என்று பல விடையற்ற கேள்விகளை மனம் எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

நகம் வெட்டுகையில் தப்பித் தவறி நம் கரங்களாலேயே சதையையும் சேர்த்து வெட்டிக் கொள்கையில் வலியால் எப்படித் துடிக்கிறோம். அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உடல் சிதைந்து கிடந்த நிலையில், இரும்புக் கழியை அவள் உடலுக்குள் செலுத்தி சிறுகுடலை வெளியே எடுத்துள்ளார்கள் என்று தெரிந்த போது நெஞ்சம் பதைத்துத் பதறித் தவித்தது. துடிதுடித்து இறந்து போவதற்கு முன் அவளுக்குள் எத்தனை எத்தனை ஆசைகள் இருந்திருக்கும்? அவளுடைய கனவுகளை களவாடிக் கருகக் செய்ய யாருக்கு உரிமை இருக்க முடியும்? படிப்பு வேலை வாழ்க்கை திருமணம் என்று எல்லோருக்கும் கிடைக்கும் சந்தோஷங்களை சிதைக்க விதி அந்த ஆறு பேரின் சாயலில் வந்து சேர்ந்ததா?

கற்பனையிலும் நினைக்க முடியாத அளவுக்கு கொடூரமான செயலில் ஈடுபட்டவனுக்கு விடுதலைலும் வெளிநாட்டுக்கு அனுப்பி கடைசி கட்ட சிகிச்சையும் பலன் அளிக்காமல் உயிர் இழந்த நிர்பயாவுக்கு மரணம் தண்டனையாகவும் கிடைத்திருப்பது இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்திய சட்டத்தின் அடிப்படைகளை மாற்றாத வரை இது போன்ற தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிகழ்வுகள் தொடரும். நமது குற்றவியல் சட்டங்கள் அந்தந்த வழக்குகளுக்கு ஏற்ற வகையில் விசாரணைகளைச் செய்து அதன் சூழலுக்கேற்ப தீர்ப்பு சொல்லும் அளவுக்கு மாற்றப்படவேண்டும். விரைவு நீதிமன்றங்கள் அதிகரிக்கப்பட்டு நீதித் துறையில் காலத்துக்கு ஏற்ற வகையில் சீர் திருத்தங்கள் செய்ய வேண்டும். இந்த வழக்கைப் பொருத்தவரையில் இக்குற்றத்தை செய்தவன் நிச்சயம் சிறுவனாக இருக்க முடியாது. மனத்தளவில் அவன் ஒரு வக்கிரமான வன்செயலைச் செய்தவன். எனவே அதை முன் நிறுத்தித்தான் குற்றத்தின் அளவை கணிக்க வேண்டும். இனியேனும் வயதை வைத்து குற்றவாளியை வகைப்படுத்தக் கூடாது என சட்டத்தில் அதற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் நிர்ப்பயா என்பது இந்நாட்டின் யாராலும் அழிக்க முடியாத நிரந்தரக் கறையாகி விடும்.

சமூகத்தின் பொக்கிஷங்களாக கருத வேண்டிய குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்புச் சட்டங்களை பொறுப்புணர்வுடன் நடைமுறைக்கு சாத்தியமாகும் விதமாக உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கூட்டு வல்லுறவு போன்ற கொடூரமான குற்றங்களை செய்பவர்களை சமூகத்தில் அடையாளப்படுத்த வேண்டும். மனவக்கிரம் முற்றிய அந்த நோயாளிகளை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். வல்லுறவு சம்பவங்கள் நிகழும் காலகட்டத்தில் மட்டும் பொதுமக்களும் ஊடகங்களும் மட்டும் உரக்கப் பேசுவதும் அதன் அரவம் அடங்கியபின் சொந்த விஷயம், அடுத்த செய்தி என்று அவரவர் வேலைகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். கொந்தளிப்பான மனநிலையில் அச்செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக குரல் எழுப்புவதோ உணர்ச்சி வசப்பட்டு போராடுவதோ அந்தந்த நேர வெளிப்பாடுகளே அன்றி வேறு எந்த உருப்படியான தீர்வையும் அளிக்காது. இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

நம் தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா வாச்சாத்தி கிராமத்தில் காவல் துறை மற்றும் வனத்துறையினர் பதினெட்டு பெண்களை இழுத்துச் சென்று நிகழ்த்திய கொடூரச் செயலுக்கு தண்டனை கிடைக்க இருபத்து ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டன. எனவே இது போன்ற கொடிய குற்றங்களுக்கு அவசரச் சட்டத்தில் உடனடியாக தண்டனை கிடைப்பது தான் குற்றங்களைக் குறைக்கும் ஒரே வழி. தாமதிக்கப்ப்டும் ஒவ்வொரு தீர்ப்பும் மறுக்கப்பட்ட நீதியெனவே கொள்ளலாம். தண்டனைகள் மற்றும் குற்றங்களை குறைத்துவிடும் என்றும் சொல்ல முடியாது. சமூகத்தில் பல சீர் திருத்தங்கள் நிகழ்ந்தால் தவிர அதிசயங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாது.

16 வயது கொடூரக் குற்றவாளிகளுக்கும் இனி கடும் தண்டனை என்று சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது என்பது சற்று ஆறுதலான செய்தி. நிலுவையில் இருக்கும் சட்டத்திருத்தங்களை அமல்படுத்தியும், அந்தந்த வழக்குகளுக்கு ஏற்ப புதுச் சட்டங்கள் இயற்றவும் அரசு முன்வர வேண்டும்.

தவிர சமூகத்தில் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ற வகையில் குழந்தைகளை வளர்க்க்க ஒவ்வொரு பெற்றோரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக ஆண் பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களை எப்போது சக உயிராக மதிக்க இச்சமூகம் கற்றுக் கொள்கிறதோ அப்போது தான் பெண்கள் பாதுகாப்புடன் வாழத் தகுந்த இடமாக நாடு மாறும். முழுமையான மாற்றம் ஏற்படவேண்டும் எனில் வீட்டில் சொல்லிக் கொடுக்கும் இப்பழக்கம் பள்ளியிலும் தொடர வேண்டும். அதற்கேற்ற வகையில் நம்முடைய கல்வி பாடத் திட்ட முறைகள் மாற வேண்டும். கேடு கெட்ட செயல்கள் இனி நிகழாமல் இருக்க ஒரு தரமான சமூகத்தை நாம் தான் கட்டமைக்க வேண்டும். அப்போது நிர்பயாக்களின் ஓலம் நிச்சயம் கேட்காது. கேட்க வேண்டாம்.



***

இன்று கொல்லும் தெய்வம்



சொந்த வீட்டில் அக்கம்பக்கத்தில் என

நீளும் அந்தக் கைகளின்

முதல் அத்துமீறல்..

அச்சமும் அருவருப்பும்

புரியாமையும் கலந்து

எங்கள் குழந்தைமையை திருடிக்

கொன்று சுவைத்தீர்கள்!

பிறிதொரு நாளில்

பள்ளியில் கல்லூரியில்

வீதியில் அலுவலகத்தில்

என எங்கெங்கும்

ராட்சச நிழலாக

ஊர்ந்து தொடர்கின்றன

அழுகிப் புழுத்த விரல்கள்…

இது புனிதமான தேசம்

அவர்களை கொல்ல வேண்டாம்

வன்புணரத்தான் செய்வார்கள்

அதனால் என்ன?

காது கேளாத அவர்களிடம்

அகிம்சையை போதியுங்கள்

மனநலம் பிசகியவர்களிடம்

கருணை காட்டி

உங்களை நிருவிக் கொள்ளுங்கள்

உங்கள் கருணையின்

கரங்களின் அன்பெனும் வெப்பம்

அமிலமாகட்டும்.

நியாயங்கள் அப்போது

அறம் சார்ந்தவை ஆகிவிடும்

மன்னிப்புக்களை தண்டனையாகும்

வீணான சட்டங்களை

தீயில் கொளுத்திவிட்டு

அந்த நெருப்பில்

நிர்பயாக்களுக்கு சிறு

வெளிச்சம் காட்டுங்கள்!

சிறியதும் பெரியதுமாக

நாடு முழுவதும்

பெருகி வரும் எங்களில்

சிலர் உடனுக்குடன் இறந்துவிடுகிறோம்

அல்லது கொலை செய்யப்படுகிறோம்

பலர் உயிர் சுமக்கும்

பிரேதங்களாக இருக்கிறோம்..

சிதைக்கப்பட்ட உடல்களில்

மிச்சமிருக்கும் ஆன்ம பலத்தால்

பலி கொடுப்போம்

எம்மைத் தீண்டிய ஒவ்வொரு

கரங்களையும் வேர் அறுப்போம்!

ஆதி காலந்தோறும்

அசுரர்களை வதைக்கவே

இறைவிகள் தோன்றினார்கள்..

எங்கள் சதைப் பிய்த்து உடல் கிழித்த

உங்கள் மண்டையோடுகளும் குடல்களும்

வெப்பமான ரத்தம் மட்டுமே கேட்கும்

காளிகளாக உருபெற்றுவிட்டோம்.

- உமா ஷக்தி

அன்பாசிரியர் 10 - கிருஷ்ணவேணி: அரசுப் பள்ளிக்காக கடன் வாங்கி கல்வி புகட்டும் ஆசிரியை!


Return to frontpage




க.சே. ரமணி பிரபா தேவி

ஆசிரியர் ஒரு நல்ல மாணவரை உருவாக்குகிறார்; அவர் நூறு மாணவர்களை உருவாக்குகிறார்.

1986-ம் ஆண்டு. அரசுப் பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பில் 427 மதிப்பெண்கள் பெற்று, மேலே படிக்காமல் வீட்டில் இருந்தார் மாணவி கிருஷ்ணவேணி. அப்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக அவரின் வீட்டுக்கு வந்தார் ஓர் ஆசிரியர். 'இவ்வளவு மதிப்பெண்கள் பெற்று ஏன் படிக்கவில்லை?' என்று கேட்க, வசதியில்லை என்றார் கிருஷ்ணவேணி. உடனே படிப்பதற்கு பணம் கட்டி, உடைகள் வாங்கிக்கொடுத்து, ஊக்கமும் அளித்தார் அந்த ஆசிரியர்.

இப்போது அந்த மாணவி, நல்லாசிரியர் விருது, மாநில அளவில் சிறந்த நடுநிலைப்பள்ளி விருது, தமிழ்நாடு அறிவியல் இயக்ககத்தின் சிறந்த சாதனை ஆசிரியர் விருது, தனியார் மெட்ரிக் பள்ளியின் அப்துல் கலாம் நினைவு சாதனை ஆசிரியர் விருது உள்ளிட்டவைகளுக்குச் சொந்தக்காரர். பள்ளி தலைமையாசிரியர், இலக்கிய ஆர்வலர், பேச்சாளர் என்று பல முகங்கள் கொண்டவர்.

எப்படி இந்தப் பயணம் சாத்தியமானது? - கிருஷ்ணவேணியே சொல்கிறார்.

"கணக்கெடுப்புக்கு வந்த ஆசிரியர், பலன் எதையும் எதிர்பார்க்காமல் என்னைப் படிக்க வைத்தார். அப்போது பத்தாம் வகுப்பு படித்தாலே ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியர் ஆகலாம் என்ற நிலை இருந்தது. அவரால் மட்டும்தான் இன்று நான் ஆசிரியர் ஆகியிருக்கிறேன். அவர் என்னை உருவாக்கினார்; நான் மேலும் சிலரை உருவாக்குகிறேன்.

எங்களின் சின்னமுத்தூர் பள்ளி, இட வசதி இல்லாத காரணத்தால் அரை கி.மீ. இடைவெளிக்குப் பிரிந்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என தனித்தனியாக இருக்கிறது. இதனால் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி என அரசிடம் என்ன கேட்டாலும் இரண்டிரண்டாகக் கேட்டுப் பெற வேண்டும். முதலிரு வருடங்களில் கோயில் வளாகம், மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட பொது இடங்களில் வகுப்புகள் நடந்திருக்கின்றன. ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்புகள் நடந்த காலமும் உண்டு.

இப்போது, வகுப்பறை முழுக்கப் படங்களால் நிரப்பியிருக்கிறோம். எங்கள் மாணவன் வீட்டில் எப்போதும் கீழேதான் உட்காருகிறான் என்பதால் பள்ளியில் யாரையும் தரையில் உட்கார அனுமதிப்பதில்லை. பெஞ்சுகள் வாங்கியிருக்கிறோம். ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு முழுக்கவும் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கிறது. டைல்ஸ் ஒட்டியிருக்கிறோம்.

பள்ளிக்காக லோன் வாங்கியவர்

இவை அனைத்துக்கும், அதிக நிதி தேவையாக இருந்தது. நன்கொடையாளர்கள் சிலர், தருவதாகக் கூறியிருந்த தொகையைக் கடைசி நேரத்தில் தரவில்லை. மூன்று லட்ச ரூபாய் பற்றாக்குறை காரணமாக வேலை பாதியிலேயே நின்றது. அதனால் வங்கி ஒன்றில் லோன் வாங்கி, கட்டிடத்தைக் கட்டி முடித்தோம். இப்போது தவணை முறையாக மாதாமாதம் 8,000 ரூபாய் கட்டி வருகிறேன். முத்தூரை அடுத்து, உள்ளே 1 1/2 கி.மீ. தாண்டி சின்னமுத்தூரில் இரண்டு பெரிய தனியார் பள்ளிகளுக்கு இடையில் கம்பீரமாக நிற்கிறது எங்கள் அரசுப்பள்ளி.

குஜராத்தில் ஆட்சியராக இருக்கும் நண்பர் மூலமாக, அங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஸ்கைப்பில் உரையாடினோம். மொழி ஒரு தடையாக இருந்தாலும், உணர்வுபூர்வமாக அவர்களை அணுகினோம். உள்கட்டமைப்பு வசதி, தொழில்நுட்பம், சுகாதாரம் ஆகியவற்றில் பின் தங்கியிருக்கிறார்கள் குஜராத் குழந்தைகள்.

ஆரம்பகாலத்துக்கும், இப்போதைக்கும் என்ன வித்தியாசத்தை உணருகிறீர்கள்?

ஆரம்பத்தில் கையைப் பிடித்து, எழுத, படிக்கக் கற்றுக் கொடுப்பதே கல்வி என்று நினைத்தேன். இப்போதோ ஒரு வார்த்தையை சொல்லித்தர நூறு முறைகள் இருக்கின்றன. தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். ஒன்று குறும்பு செய்தால், மற்றொன்று அழும், இன்னொன்று தூங்கும். இப்போது குழந்தைகள் அனைத்தையும் அரவணைக்கும் பாங்கு வந்திருப்பதாக உணர்கிறேன். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யாராக இருந்தாலும், மூன்று மாதங்களில் அவருக்கு தமிழ் எழுத, படிக்கக் கற்றுக்கொடுக்க என்னால் முடியும்.



எங்கள் பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களும் கட்டாயம் ஆங்கிலம் எழுத / பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் எங்களின் ஒவ்வொரு மாணவனுக்கும், குறைந்தபட்சம் ஐந்நூறு ஆங்கிலச் சொற்கள் தெரியும். முதலில் வினைச்சொற்களைக் கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கிறோம். ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் கதை, கவிதைகள் எழுத வேண்டும். இது எழுத்துத் திறனை மேம்படுத்துவதோடு, கற்பனையையும் சேர்த்து வளர்க்கிறது. இதுவரைக்கும் தொகுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள், மலராக வெளியிடப்படக் காத்து நிற்கின்றன.

அருவருப்புக்கு இடமில்லை

உங்கள் பள்ளியில் மட்டும் எப்படி எல்லா ஆசிரியர்களுமே உதவுகிறார்கள் என்று பலர் கேட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்குமே கவுன்சலிங்தான் காரணம். மாதமொரு முறை எங்கள் ஆசிரியர்களிடம் மாணவர்கள் குறித்துப் பேசுவேன். அப்போது, நம் குழந்தைக்கும், அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைக்கும் எந்த வித்தியாசமும் பார்க்கக்கூடாது என்று கூறுவது வழக்கம். 'நம் மகன்/ மகள் என்றால் வேலை செய்ய வைப்போமா, இயலாமையால்தான் பெரும்பாலான ஏழை குழந்தைகள் அரசுப்பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களை வேலை செய்யச்சொல்வது முறையா' என்று யோசிக்கச் சொன்னேன்.

'நம் குழந்தைகளிடம் அருவருப்பு வருவதில்லையே, பிறகெப்படி மற்ற குழந்தைகளிடம் மட்டும் அந்த எண்ணம் வருகிறது' என்று அவர்களும் யோசிக்க ஆரம்பித்தார்கள். இப்போது துப்புரவுப் பணியாளர்களே தேவைப்படாமல் ஆசிரியர்களே எல்லாவற்றையும் சுத்தம் செய்கிறார்கள்.

மாதமொரு முறை பெற்றோர் சந்திப்பும் இங்கே உண்டு. அவர்களிடம் முறையாக எல்லாவற்றையும் எடுத்துச் சொல்கிறோம். இதனால் மாணவர்களின் சுத்தமான உடை, இரட்டை ஜடை, ஒழுங்காக நகம் வெட்டுவது உள்ளிட்டவைகளுக்கு பெற்றோரே பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள்.

பாடம் சொன்ன மாணவர்?

'எல்லா மாணவர்களையும் பாரபட்சமில்லாமல் ஒன்றுபோல் நடத்த வேண்டும்' என்ற பாடத்தைக் கற்றுக்கொடுத்தது ஒரு மாணவன்தான். பொதுவாக நன்றாக படிக்கும் மாணவர்களிடம் ஆசிரியர்களுக்கு ஒரு பிரியம் இருக்கும். படிக்காதவர்கள் மீது அதட்டல், மிரட்டல் தொனி இருக்கும். ஒரு முறை ஆசிரியர்களைப் பற்றிய கருத்துகளை எழுதிக் கொடுக்குமாறு மாணவர்களிடத்தில் கேட்டிருந்தேன்.

அதில் ஒரு மாணவன், 'டீச்சர், ஒரு தடவையாவது நல்லா படிச்சு, உங்ககிட்ட நல்ல பேர் வாங்கணும்; நீங்க என்கிட்ட சிரிச்சுப் பேசணும்னு ஆசைப்பட்டேன்; ஆனா கடைசிவரை என்னால அதைப் பண்ண முடியல!' என்று எழுதியிருந்தான். எனக்கு சுரீரென்றது. அதற்குப் பிறகு அவனிடம் சகஜமாகப் பேசினாலும், நான் இதைப் படிச்சு வாங்கல டீச்சர் என்று படித்து முடித்துப் போகும்வரை சொல்லிக்கொண்டே இருந்தான். அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் எல்லா மாணவர்களுடனும் சமமாகப் பழக ஆரம்பித்தேன்.

எதிர்காலத் திட்டங்கள் பற்றி...

தமிழ்நாட்டின் எல்லாப்பகுதிகளுக்கும், எங்கள் பள்ளியின் பெயர் பரவ வேண்டும் என்ற இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறேன். பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் சீட் வாங்க வரிசையில் நிற்பது போல, அரசுப் பள்ளிகளிலும் வரிசையில் நிற்கும் நிலை வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை!''.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

NEWS TODAY 20.09.2024