Wednesday, August 17, 2016

4ஜி எனும் மாயவலை



கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல இருக்கிறது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 4ஜி சேவைக்கான மார்க்கெட்டிங் உத்திகள். எந்த நிறுவனம், எந்தத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பங்கள் எல்லாம் இல்லை.

அவை எல்லாமே குழப்பமாகத்தான் இருக்கிறது. கடந்த வாரம் இருந்த கட்டணம் இந்த வாரம் இல்லை. இந்த வாரத்தில் இருக்கும் சேவை அடுத்த வாரம் இருக்குமா தெரியவில்லை.

2ஜி சேவையே பலருக்கும் கிடைக் காத இந்தியாவில் 4ஜி-க்கான போட்டி யில் இறங்கிவிட்டன நிறுவனங்கள். இந்த 4 ஜி மாய வலையில் வாடிக்கையாளர்கள் சிக்க வைக்கப்படுகின்றனர். ‘மொபைல் டேட்டா’ மோகத்தால் நுகர்வோரின் கையிலிருக்கும் சொற்ப சில்லரைகளையும் நிறுவனங்கள் சுரண்டி வருகின்றன. நாம் பேச்சு வழக்கிற்காகத்தான் சில்லரைகளைச் சுரண்டுகின்றன என குறிப்பிடுகிறோம். ஆனால் உண்மையிலேயே 4ஜி என்கிற தொழில்நுட்பத்தை வைத்து இந்த நிறுவனங்கள் ஆடுவதோ மிக பெரிய சதுரங்க ஆட்டம்.

சந்தையில் முன்னணி நிறுவனமாக யார் இருப்பது என்பதில் தொடங்கும் ஆட்டத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு விதமாக தங்களைத் தாங்களே மீறிக் கொள்கின்றன. ஆனால் எல்லா சுமைகளும் விழுவது என்னவோ வாடிக்கையாளர் தலையில்தான்.

பேஸ்புக்கின் இலவச இணையம், ஏர்டெல்லின் முன்னுரிமை இணைய தொடர்பு என இணைய வாய்ப்புக்கு எதிரான போக்குகள் குறித்த விவகாரங்கள் சற்றே ஓய்ந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை சுற்றி புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் வர்த்தக ரீதியான தொலைத் தொடர்பு சேவையின் தொடக்க நிலை யிலேயே தனது 15 லட்சம் வாடிக்கை யாளர்களுக்கு 3 மாதங்களுக்கான இலவச ‘டேட்டா’, குரல் வழி சேவைகளை அளிக்க உள்ளது. இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன இதர தொலைத் தொடர்பு நிறுவனங்கள். சோதனை அடிப்படையிலான சேவை யில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு இலவச ‘டேட்டா', குரல்வழி சேவைகளை வழங்கக் கூடாது என்கிற தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறையை ஆர் ஜியோ மீறுவதாக செயலகத்துக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஓஏஐ) புகார் அளித்துள்ளது.

ஆர் ஜியோ நிறுவனம் வர்த்தக ரீதி யான சேவையில் விதிமுறை மீறுகிறது என கவலைப்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு, தங்களது உறுப்பு நிறுவனங்களின் சேவை தரம் குறித்து கவலைப்பட்டிருக்கிறதா என்றால் கிடையாது. இத்தனைக்கும் ஆர் ஜியோ-வும் இதில் உறுப்பினராகத்தான் உள்ளது.

இந்த சேவையை இலவசமாக வழங்குவதில் ஆர் ஜியோ-வுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. எதிர்ப்பதற்கு இதர நிறுவனங்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் 3ஜி,4ஜி வாடிக்கையாளர்களிடம் கட்டணக் கொள்ளை அடிப்பதில் மட்டும் எல்லா நிறுவனங்களுமே கைகோர்த்துவிடுகின்றன.

சமீபத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (R COM) நிறுவனத் தில் வைஃபை பேட் வாங்கிய நண்பரொருவரின் புலம்பல் இது: ``ரூ.1,500 விலையிலான அந்த கருவியை வாங்கும்போதே 4ஜி சேவை வந்தால், அதை மேம்படுத்திக் கொள்ளலாம் என உறுதி கொடுத்தார்கள்.

இரண்டு மாதங்களாக பயன்படுத்தி வந்த நிலையில் திடுதிப்பென கடந்த வாரத்தில் 3ஜி சேவையை நிறுத்திவிட்டனர். வாடிக்கையாளர் சேவை மையம் சென்று விசாரித்தால் 3ஜி சேவையை நிறுத்திவிட்டோம் 4ஜி சேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்கின்றனராம்.

தற்போது 3ஜி சேவையே போதும், 4ஜி-க்கு தேவைக்கேற்ப மாறிக்கொள்கிறேன் என்ற போதிலும் முன்பு வழங்கிய வைஃபை இணைப்புக் கருவியில் இனிமேல் சேவை கிடைக்காது என்றும், 4ஜி-க்கு என்று தனியாக வைஃபை பேட் வாங்க வேண்டும் அல்லது 4ஜி சிம்கார்டு, 4ஜி போன் வாங்கிக் கொள்ளுங்கள் அப்போதுதான் எங்களது சேவையை தொடர முடியும் என்றனராம். ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால் வழக்கு தொடருங்கள், இல்லையெனில் புதிய கருவியை 10 சத விலைக்குறைப்பு செய்து தருகிறோம் அதை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறினார்களாம்.

ஒரு தொழில்நுட்பத்தை மேம்படுத்து வது நிறுவனத்தின் தேவையாக இருக்கலாம். ஆனால் அதை ஏன் வாடிக்கையாளர்களின் தலையில் வம்படியாக திணிக்க வேண்டும். பழைய தொழில்நுட்ப சேவைகளையே படிப்படியாக குறைத்து பயன்பாடு இல்லாத போது குறைப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அல்லது ஏற்கெனவே வழங்கப்பட்ட கருவியை திரும்பப் பெற்று புதிதாக மாற்றித் தருவதுதானே சரியானதாக இருக்கும் என எந்த கேள்விக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் பதில் சொல்லவில்லை.

புதிதாக 4ஜி சேவையை அளிக்கும் கருவியின் விலையோ ரூ.3,200 என நிர்ணயித்துள்ளனர். புது 4ஜி சிம் கார்டு வாங்கி அதை 4ஜி அலைவரிசையை ஏற்கும் ஸ்மார்ட்போனில் பயன்படுத்த வேண்டும். அதாவது ஏற்கெனவே இருக்கும் ஸ்மார்ட்போன் 4ஜி அலைவரிசையை ஏற்காது என்றால் நீங்கள் புது ஸ்மார்ட்போன்தான் வாங்க வேண்டும். அதாவது 4 ஜி சேவையை பயன்படுத்த கிட்டத்தட்ட புதிதாக சில ஆயிரங்களை செலவு செய்ய வேண்டும்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மட்டும் இப்படி வாடிக் கையாளர்களை ஏமாற்றும் வேலையை செய்யவில்லை கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே இப்படியான நெருக்கடிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றன. ஆறு மாதங்களுக்கு முன்பு சில ஆயிரங்கள் செலவழித்து வாங்கிய ஒரு ஸ்மார்ட்போன் இப்போது பழைய தொழில்நுட்பமாக மாறி விடுகிறது.

பொதுவாக 4ஜி சேவையை வழங்கும் ஏர்டெல், ஐடியா அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுமே குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் மட்டுமே தங்களது 4ஜி சேவை கிடைக்கும் என அறிவிக்கின்றன. சந்தையில் ஒரு உத்தியாக ஒவ்வொரு காலகட்டங்களிலும் இது மாதிரியான கூட்டுகளை வைத்துக் கொண்டாலும் 4ஜி சேவையை அளிப்பதில் முன்பை விட அதிகமாக வாடிக்கையாளர்களை சுரண்டி வருகின்றன என்பதுதான் உண்மை.

உதாரணமாக ஐடியா நெட்வொர்க் கில் 4ஜி வேண்டுமென்றால் 6,000 ரூபாய் விலையுள்ள ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். ஆறு மாதத்துக்கு முன்பு இதே விலையில் 3ஜி போன் வாங்கியவர் மீண்டும் இதே அளவு தொகையை செலவு செய்வது சாத்தியமற்றது. இதனால் கடும் நெருக்கடிகளுக்கு இடையில் புது போன் வாங்க தள்ளப்படும் சூழலை நிறுவனங்கள் உருவாக்குகின்றன.

4ஜி தொழில்நுட்பம் சர்வதேச அளவில் ஏற்கெனவே பல நாடு களில் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்தியாவிலும் அந்த தொழில்நுட்பத்துக் கான சந்தை இருக்கிறது என்பது நிறுவனங்களுக்கும் தெரிந்ததுதான். தவிர இந்தியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு தொழில்நுட்பமும் கடைக்கோடி குடிமகனுக்கும் சென்று சேர சில ஆண்டுகளாவது ஆகிறது. ஏனென்றால் நமது கட்டமைப்பு இன்னும் மேம்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சந்தைப் போட்டியில் இதுவெல்லாம் நிறுவனங்களுக்கு தேவையில்லாத சமாச்சாரங்களாகிவிடுகிறது. முதன்மை யான நோக்கம் பயன்படுத்தும் குறிப்பிட்ட சதவீதத்தினரிடமிருந்து அதிக பட்சமாக கறந்துவிட வேண்டும் என்கிற முனைப்புதான் உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான் என்றாலும் நிறுவனங் களின் லாப உத்திரவாதத்துக்கு பயனாளிகள் ஒவ்வொரு முறையும் இப்படி சில ஆயிரங்களை கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா? அரசும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் இந்த வேட்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்குமா?

Tuesday, August 16, 2016

மாயக் காடும் முத்துக்குமார் எனும் வேட்டைக்காரனும்!





தமிழ்த் திரைப் பாடல்களில் நவீன வாழ்க்கையை, நவீன கவிதை ஆக்க முறையைப் பயன்படுத்தியவன்

ரொம்ப வளத்தியான முத்துக்குமார் உறங்கிக்கொண்டிருக்கிறான். யார் வந்தார்கள், யார் போனார்கள் என்று எதையும் சட்டைசெய்யாமல். அகிரா குரோசோவாவின் ‘ராஷோமோன்’படத்தைப் பல முறை பார்த்த அவனுக்கு தன்னைப் பார்த்துச் செல்லும் ஒவ்வொருவரும் தன்னுடைய இனி கலையவே முடியாத உறக்கம் குறித்து ஒவ்வொரு கதை சொல்வார்கள் என்பது தெரிந்துதான் இருக்கும். தெரிந்தவர், தெரியாதவர் எனப் பலர் அவனுக்காக இரங்குவர் என்பதும் அவனை முன்வைத்து மற்ற காரியங்களைச் சொல்வர் என்பதும் அவனுக்கு உறுதியாகத் தெரிந்திருக்கும். ஏனெனில், அவன் இருக்கும்போதே அவனைக் குறித்த கதைகளைக் கேட்டுச் சிரித்திருக்கிறான். அவன் இறந்ததாய் தவறுதலாய் செய்திகள் முன்பு வந்தபோது, இறப்புக்குப் பிறகு என்ன பேசுவர் என்பதைக் கேட்டும் பார்த்தும் இருக்கிறான்.

முத்துக்குமார் அவனுடைய சமகால அகக் கதையை, மன உளைச்சலை, சிக்கலை, வலியை, வருத்தத்தை நேரடியாக எழுத்தில் முன்வைத்தது இல்லை. தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு அவன் எளிதில் அடைய முடியாத ஒரு மலை உச்சியில் நின்றுகொண்டிருந்ததாகவே தோன்றியிருக்கும். இரண்டு தேசிய விருதுகள், 1500-க்கும் மேற்பட்ட பாடல்கள், 12 வருடங்களாக தமிழ்த் திரைப்படப் பாடல் உலகின் சூப்பர் ஸ்டார், பத்திரிகைகளில் தொடர்கள், எழுத்தாளர்கள் - பத்திரிகை ஜாம்பவான்கள் - அரசியல்வாதிகள் - அரசாங்க உயர் அதிகாரிகள் எல்லோரிடமும் முரண் இல்லா உறவு என அனைத்தும் ஆனது அந்த மலை உச்சி. ஏனையோர் அதிசயிக்கிற மலை உச்சி. ஆனால், அம்மலை உச்சியில் அந்த ஒற்றை மனிதன் சுழற்றி அடிக்கும் காற்றில் தலை மறைக்கும் புற்களுக்கு நடுவே நின்றுகொண்டிருந்தான். அங்கு இரவில் குளிரும் அதிகம், பகலில் வெப்பமும் அதிகம். மழை பெய்யாது கொட்டும், அப்புறம் அந்த உச்சி ஆபத்தானது. எந்த நொடியும் வழுக்கி விழ நேரலாம் என்பதும் அவனுக்கும் திரைத் துறைக்கும் தெரிந்த உண்மை.

பனியில் தெரியும் மலை

உச்சியிலிருந்து வழுக்கி விழாமல் 12 வருடம் தன்னைத் தானே தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தான் முத்துக்குமார். அவன் பாட்டெழுதாத நாள் இல்லை. வீடு, பாட்டு இவை இரண்டும் இன்றி, அவன் வாழ்வில் இந்த 12 வருடங்களில் அவன் அவனுக்காகச் செலவழித்த நேரம் வெகு சொற்பம். பயணங்களில் தீரா விருப்பம் கொண்ட அவன், பயணம் செய்தது வெகு சொற்பம். ஆள் கூட்டத்தில் ஒரு தனி ஆள். சினிமா என்கிற மாயக் காட்டில் அயராது வேட்டைக்குச் சென்ற வேட்டைக்காரன். அந்த மாயக் காடு விருந்துகளும் சிற்றின்பங்களும் கேளிக்கைகளும் நிறைந்த இருட்டு உலகம் என்றே பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. அந்த மாயக் காடு ஒழுக்க விதிகளுக்குப் புறம்பானது என்றே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆனால், வேட்டைக்குச் செல்பவனுக்குத்தான் தெரியும், காடு எத்தகையது என்று. ஆபத்துகளும், காயங்களும், அச்சுறுத்தும் பெரும் தனிமையும், வெகு சொற்ப இரை விலங்குகளும், போட்டிகளும் விரோதங்களும் நிறைந்தது அந்தக் காடு. இரை விலங்குகள் அகப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அவனுக்கு அகப்பட்டது, இறுதியில் இயற்கையின் விதிப்படி இரைக்கு இரையானான்.

அவன் பெருமலைதான். ஆனால், என்றும் அவன் தன்னை அப்படி உணர்ந்தது இல்லை. மனிதர்களை அவர்களின் சம உயரத்திலேயே சந்தித்தான், பழகினான், பாராட்டினான். அவன் வரியில் சொல்ல வேண்டும் என்றால், சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையாகத்தான் தன்னை வைத்துக்கொண்டான். ஒரு சாதனையாளன், கவிஞன் கைக்கொள்கிற எந்த உடல்மொழியையும் அவன் உருவாக்கிக்கொள்ளவில்லை. உடைகளில் எந்த வடிவமைப்பையும் பொருத்திக்கொள்ளவில்லை. ஒரு ஓட்டை சைக்கிளில் அசோகமித்திரனின் உடல்வாகுடன் கோடம்பாக்கத்துத் தெருக்களில் முதல் வாய்ப்புக்காக சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் எப்படி இருந்தானோ அதே மனநிலையில் இறுதி நாள் வரை இருந்தவன்.

வீட்டையும் காட்டையும் விரும்பியவன்

தமிழ்த் திரைப் பாடல்களில் நவீன வாழ்க்கையை, நவீன கவிதை ஆக்க முறையைப் பயன்படுத்தியவன் முத்துக்குமார். புதுப் புது உத்திகளை முன்வைத்தவன். ஹாஸ்யத்தையும் கொச்சைப்படுத்தாமல் செய்தவன். அவன் தமிழ்த் திரைப்படப் பாடல்களை அதுவரை இருந்த இடத்திலிருந்து மாற்றி வேறு ஒரு செறிவான தளத்துக்கு நகர்த்தியவன்.

அவன் தன் அரசியலைச் சொல்லவும் இல்லை. மறைக் கவும் இல்லை. தான் யாருக்காக எழுதுகிறோம், ஏன் இக்காரியத்தைச் செய்கிறோம் என்று தெரிந்தே அவன் செய்தான். எந்த இயக்கத்துக்குப் பாட்டு எழுதினான் என்பதை அவனும் சொல்லவில்லை, இயக்கமும் சொல்ல வில்லை. அவன் எழுதிய பாட்டு என்று தெரியாத அந்தச் சில பாடல்கள் இன்னும் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அம்மா இல்லாமல் வாழ்வைத் தொடங்கிய அவனுக்கு, உறவுகள் மீது தீராக் காதல். மகனாக, அண்ணனாக, தம்பியாக, பேரனாக, அப்பாவாக, கணவனாக அவன் அனைவருக்கும் தன்னால் இயன்றவரை தன் சக்திக்கு உட்பட்டு, பிரியத்தையும் ஆதரவையும் முழுமையாகக் கொடுத்தவன். வீடும் வீடு குறித்த எண்ணமுமே அவனுடைய வாழ்க்கை. வீடே அவன் சொர்க்கம்.

அவனுக்குக் கதைகள் பிடிக்கும்

அவனை நான் முதன்முதலாகச் சந்தித்தபோது, நாங்கள் இருவரும் 20 வயதுகளின் பெரும் கனவில் சுற்றிக்கொண்டிருந்தோம். ‘சில்க் சிட்டி’ (Silk City) என்று ஒரு ஆங்கில நாவலை எழுதிக்கொண்டிருந்தான் முத்து அப்போது. இந்திய ஆங்கில இலக்கியத்தில் தனக்கென ஒரு தடம் பதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. போட்ட உடையோடு பயணம் கிளம்பிப்போகிற குணங்களால் நாங்கள் இருவரும் பெரிதும் ஈர்க்கப்பட்டோம். தாம்பரம் கிறித்துவக் கல்லூரி ஏரியில் அமர்ந்து பேசுகிற ராப்பேச்சு சூரிய உதயத்தில்தான் நிற்கும்.

எனக்கு சென்னையைப் பரிச்சயப்படுத்தியது அவன் தான். கோடம்பாக்கத்துத் தெருக்களுக்கு என்னை அழைத்துப்போனவன், அறிவுமதி அண்ணனின் அலுவலகத்தைக் காட்டிக்கொடுத்தவன். பால் சுகந்தி மேன்ஷனில் இருந்த அன்பான அஜயன் பாலாவை அறிமுகப்படுத்தியவன். இயக்குநர், குரு பாலுமகேந்தி ராவின் அவ்வளவு எளிதாகத் திறந்துவிட முடியாத அலுவலகக் கதவை எனக்காகத் திறந்துவிட்டவன், யுவன் ஷங்கர் ராஜாவை அறிமுகப்படுத்தியவன், என் குழந்தைகளின் மாமா, என்னை நானாகவே ஏற்றுக்கொண்ட நண்பன் என முத்து இந்த 20 வருட வாழ்க்கை முழுக்க என் உடனேயே இருந்தான்.

ஆகஸ்ட் 14 காலை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த முதல் மாரடைப்பே அவனை எடுத்துக்கொண்டது. 15 நிமிடம் முன்பு வந்திருந்தால் அவன் இருந்திருப்பான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ‘இறந்துபோனதை அறிந்த பிறகுதான் இறக்க வேண்டும் நான்’என்று எழுதியவன், எதுவும் அறியாமலே இறந்துபோனான். மாயக் காடு அவனை எடுத்துக்கொண்டது. அந்தக் காட்டைப் பற்றியும் அதன் வேட்டைக்காரர்களைப் பற்றியும் கதை சொல்பவர்கள் கதை சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அவனுக்குக் கதைகள் பிடிக்கும்.

முத்து, நீ கேட்டுக்கொண்டிருப்பாய்தானே?

- ராம், ‘தங்க மீன்கள்’ திரைப்பட இயக்குநர், தொடர்புக்கு: thangameenkal@gmail.com

குறள் இனிது: வெற்றிக்கு மேல்வெற்றி!


ரியோ ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறதா, மலைப்பாக இருக்கிறதா?

உலகிலேயே அதிக வேகமாக ஓடுபவர் யார் தெரியுமா? 9.58 விநாடிகளில் 100 மீட்டர்களை ஜமைக்கா நாட்டின் உசைன் போல்ட் கடந்ததுதான் இதுவரை முறியடிக்கப்படாத உலக சாதனை!

`மின்னல் போல்ட்' எனும் செல்லப் பெயருடைய இவருக்கு இரண்டாவதாய் வருபவர்கள் மிகவும் பின்னால் இருப்பதையும் பார்த்து ரசியுங்கள்!

இவர் ஒரு காலத்தில் செருப்பை மாற்றி மாட்டிக் கொண்டு ஓடியவர் தான்! ஆனால் இப்பொழுது? 2008, 2012 இரண்டு ஒலிம்பிக்கிலும் 100மீ, 200 மீ இரண்டிலும் முதலில் வருவது என்றால் சும்மாவா?

இவரைப் போல வேறு சிலரும் 6'5”உயரம் இருக்கலாம்.ஆனால் இவர் மட்டும் இவ்வளவு சாதித்தது எப்படி? சிறிதும் சிதறாத கவனக் குவிப்பினால் தானே! கொஞ்சம் அசந்தாலும் அடுத்த ஆள் முன்னாடி ஓடிப் போய் விடுவானே!

சரி, இதுவரை ஒலிம்பிக்கில் மிக அதிக பதக்கங்களை வென்றவர் யாரென்று சொல்லுங்கள் பார்ப்போம். மைக்கேல் பெல்ப்ஸ் எனும் அமெரிக்க நீச்சல் வீரர்தான் 21 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் வாங்கியுள்ளார்! அவர் வாங்கியுள்ள மொத்த ஒலிம்பிக் பதக்கங்கள் 25!

அதிகபட்ச ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் என்றால் சும்மா இல்லைங்க.இவருக்கு அடுத்துள்ளவர் இவர் வாங்கியதில் பாதியைக் கூட வாங்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

விடமாட்டேன் என்று தண்ணீரில் குதித்தவர் தான்!

'பறக்கும் மீன் 'எனக் கூறப்படும் அளவிற்கு வேகமாக நீந்தினார், நீந்தினார்,யாரும் எட்டமுடியாத இடத்திற்கு நீந்தியே வந்து விட்டார்!

7 வயதிலேயே சகோதரிகள் கொடுத்த உத்வேகம்தான் அவரது உற்சாகத்தை ஒருமுகப்படுத்தி உயர்த்தி விட்டது!

சரி, நம்ம திபா கர்மாகர் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டாரே! திரிபுரா பெண்ணான இவர் ஆங்கிலத்திற்குப் பதிலாக ஜிம்னாஸ்டிக்ஸ் படிக்கப் போனவராம்!

திபாவின் ஒருமித்த கவனம் இறுதிப் போட்டி வரை விளையாட்டில் இருப்பதற்காகவும், அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாதென்பதற்காகவும், அவரது பயிற்சியாளர் பிஷ்பேஷ்பர் நந்தி அவரை ‘வீட்டுச் சிறையில்' வைத்து விட்டாராம்! பெற்றோர் தவிர யாருக்கும் அவரிடம் பேச அனுமதி இல்லை!

இக்கட்டுரையை நீங்கள் படிக்கும் பொழுது 'பறக்கும் பாவை'யான திபாவின் சாகஸங்களையும் உசைன் மற்றும் பெல்ப்ஸின் புதுப்புது சாதனைகளையும் பார்த்து ரசித்திருப்பீர்கள்!

பணியில் அர்ப்பணிப்பு என்பது ஒருவரை அவரது இலக்குடன் ஒட்ட வைக்கும் பசை என்பார் ஜில் கோனெக்!

விளையாட்டோ, வணிகமோ வெற்றி பெறத் தேவை ஒருமித்த கவனம்!

அலட்சியமின்மை எனும் கருவியைக் கொண்டு கருத்துடன் செயலாற்றினால், முடிக்க முடியாத செயல் எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்!

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின் (குறள்: 537)

somaiah.veerappan@gmail.com

Monday, August 15, 2016

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்! By முனைவர். அ. பிச்சை


இந்திய தேசத்தின் 70-ஆவது சுதந்திர தினம் இன்று. 69 ஆண்டுகளுக்கு முன்னால், முதல் சுதந்திர தினத்தை - 15.08.1947-அன்று கொண்டாடியதும், குதூகலித்து மகிழ்ந்ததும் உலக வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வுகள்.

ஆங்கிலேயர் இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு வெளியேற முடிவு செய்தபோது. 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாளை ஆட்சி மாற்றத்துக்குத் தேர்வு செய்தனர். அது இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு தினம்.

"போரில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி தருவதை விட, போரில்லாமல் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது எங்களுக்கு அதிக மகிழ்ச்சி தரும் நாளாகக் கருதுகிறோம். ஆகவே தான் ஆகஸ்ட் 15-ஆம் நாளை நாங்கள் தேர்வு செய்கிறோம்' என்றார்கள். அவர்களின் உணர்வை மதித்து, ஆகஸ்ட் 15 நம் தேசத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆகஸ்ட் 14 முன் இரவு முதல், விழாவுக்கான முன்னேற்பாடுகளும், சம்பிரதாயச் சடங்குகளும் தொடங்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் சட்ட ஆலோசனை மன்றத்தில்தான் (அதுதான் இந்திய அரசியல் நிர்ணய சபையின் கூட்ட அரங்கமாக பின்னால் மாறியது) விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

அந்த அரங்கை அலங்கரித்த முன்னாள் வைஸ்ராய்களின் புகைப்படங்கள் மலர்களால் மறைக்கபட்டன. வண்ண வண்ண மாலைகளாலும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஒளிவிளக்குகளால் பிரகாசித்து அந்த அரங்கம்.

அந்த மண்டபத்தில் அவைத் தலைவரின் இருக்கைக்கு மேல் ஒரு அழகிய பெரிய கடிகாரம் இருந்தது. கடிகாரத்தில் இரு முட்களும் 12-ஐ தொட்டு இணைந்தது.

மணி 12 முறை கணீர் கணீரென்று ஒலித்து ஓய்ந்தது. அதன்பின் ஒரு ஒலி, ஒரு நாதம் எழுந்தது. அது மேல் மாடத்திலிருந்து பயிற்சி பெற்ற ஒருவரால் எழுச்சியோடு இசைக்கப்பட்ட சங்கநாத முழக்கம். இதுவே புதிய தேசம் பிறந்து விட்டது என்பதற்கான அறிவிப்பு.

அரங்கிலுள்ள அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றார்கள். கையொலி எழுப்பி புதிய தேசத்தின் உதயத்தை புத்துணர்வோடு வரவேற்றார்கள். "வந்தே மாதரம்' என்ற கீதத்தை எல்லோரும் இணைந்து பாடினார்கள்.

"இந்திய தேசத்திற்காகவும் இந்திய மக்கள் நலனுக்காகவும் ஓயாது உழைப்போம், உளப்பூர்வமாக சேவை செய்வோம் என சபதம் ஏற்கிறோம்' என்ற உறுதி மொழியை நேருஜி சொல்ல, அதனை அனைவரும் அப்படியே திரும்பச் சொன்னார்கள்.

அதனைத் தொடர்ந்து மறைந்த தலைவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம், இரண்டு நிமிட அமைதி கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

உணர்ச்சிகரமான, மகிழ்ச்சிகரமான அந்த இனிய இரவில், முதல் நிகழ்ச்சியாக மூன்று முக்கியமான பெருமக்கள் உரை நிகழ்த்தினார்கள். முதலாவதாக, இந்திய இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் சார்பாக சௌத்ரி காலிக் உஸ் - ஸமான் பேசினார். அடுத்து சிறந்த சிந்தனையாளர், தத்துவ மேதை டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேசினார்.

அடுத்ததாக, முக்கியமான நிகழ்வாக தேசத்தின் முதல் பிரதமர் பண்டித நேருஜி பேசினார். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த உரையில், "உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்தியா விழித் தெழுகிறது. புதிய விடியலை நோக்கி நம்பிக்கையோடு நாம் நமது பயணத்தைத் தொடங்குகிறோம்' - என முழங்கினார்.

ஆனால், விடுதலை வாங்கித் தந்த தேசப்பிதா காந்திஜியோ அந்தேரத்தில் கல்கத்தா பெலிய கட்டா சாலையில் உள்ள பாழடைந்த மாளிகையின் ஒரு பகுதியில் நெஞ்சில் கனத்த சுமையோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

அன்று படுக்கைக்குப் போகும் முன்பு காந்திஜி தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் "நான் இருட்டில் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன், இந்த தேசத்தை நான் தவறாக வழிநடத்தி விட்டேனோ' என்று வருந்தி எழுதியிருக்கிறார்.

ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை நகரங்கள், கிராமங்கள், குடிசைப் பகுதிகள் - அனைத்திலும் கொண்டாட்டங்கள் தான். "தேசமெங்கும் புதிய தீபாவளியாக, புதிய ஈத் பண்டிகையாக, புதிய கிறிஸ்துமஸ் தினமாகத் தெரிகிறது' என்றார் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை நிருபர்.

அன்றைய முதல் நிகழ்ச்சியாக சுதந்திர இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரலாக மௌண்ட் பேட்டன் பதவி ஏற்று அவருக்கான இருக்கையில் அமர்ந்தார். அருகில் எட்வினா மவுண்ட் பேட்டன் அமர்ந்தார். அவர்களுக்கு இடப்பக்கத்திலும் வலப் பக்கத்திலும் இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் அமர்ந்திருந்தனர்.

பண்டித நேரு பருத்தியாலான ஜோத்பூர் உடைகளுக்கு மேல், லினன் துணியாலான கோட் அணிந்திருந்தார். அவரது கோட் பை-க்கு வெளியே அழகிய சிவப்பு ரோஜா சிரித்துக் கொண்டிருந்தது.

கதர் வேட்டி, கதர் சட்டை அணிந்த சர்தார் படேல், வெள்ளை நிற வேட்டியை மேலே போர்த்தி, ரோமப் பேரரசர் போலக் காட்சி அளித்தார்.

அடுத்து, சுதந்திர இந்தியாவின் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள். பிரதமர் நேருஜி உட்பட மொத்தம் பொறுப்பேற்றவர்கள் 14 பேர் மட்டுமே. "சுதந்திரம் தேசத்திற்குக் கிடைத்திருக்கிறது. காங்கிரஸýக்கு அல்ல. ஆகவே அனைவரையும் இணைத்துச் செயல்படுங்கள்' - என்பது அண்ணல் காந்தியின் அறிவுரை.

அதன்படி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் - ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம், பார்சி - என ஐந்து மதத்தினரும் இடம் பெற்றிருந்தார்கள். ஏன் நாத்திகர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.

காங்கிரசை காலமெல்லாம் எதிர்த்த ஆர்.கே. சண்முகம் செட்டி, அண்ணல் அம்பேத்கர், இந்து மகா சபையைச் சேர்ந்த சியாம் பிரசாத் முகர்ஜி - ஆகியோரும் அப்பட்டியலில் இடம் பெற்றவர்கள்.

பாபு ஜகஜீவன் ராமைச் சேர்த்து, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இருவருக்கு பிரிதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.

தியாகி, தேசபக்தர், கல்வியாளர், ஒன்றுபட்ட இந்தியாவே என் இலட்சியம் எனச் சொன்ன அபுல்கலாம் ஆசாத், ஜான் மத்தாய், (கிறிஸ்தவர்) சி.எச். பாபா (பார்சி - விஞ்ஞானி), சர்தார் பல் தேவ்சிங் (சீக்கியர்) ராஜ்குமார் அமிர்த கௌர் (மகளிர் பிரதிநிதி) - என்று அனைத்துப் பிரிவினரும் பங்கேற்கும் வகையில் அமைச்சரவை அமைந்திருந்தது.

அரசியல் அமைப்பு சபையில் காலை 10-30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. டில்லி மாநகரத்தில் 1000-த்துக்கும் அதிகமான இடங்களில் கொடி ஏற்றப்பட்டதாம்.

மாலை கூட்டத்தில் வெளிநாட்டுத் தூதர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், ஒரு எளிய மனிதர் உட்காரப் போனாராம். "அழைப்பிதழ் எங்கே' எனக் கேட்டபோது, "அழைப்பிதழா அது ஏன் பெற வேண்டும். நாங்கள்தான் சுதந்திரப் பிரஜைகளாயிற்றே' எனச் சொன்னாராம் அவர்.

பேருந்துகளில் ஏறிய கிராமத்து மக்கள் சுதந்திர தேசத்தில் நாங்கள் ஏன் கட்டணம் தர வேண்டும் எனக் கேட்டார்களாம்.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாகாண பிரதமர் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் தேசியக் கொடியை ஏற்றினார். மக்கள் காலை முதல் இரவு வரை சாரி சாரியாக வந்து, கொடிக்கு வணக்கம் செலுத்தினார்கள்; கோட்டையைக் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார்கள். கிராமப் பகுதிகளில் கரகாட்டத்தில் மக்கள் ஈடுப்பட்டார்கள்.

இவ்வாறு தேசமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால், அதே நேரத்தில் சில பகுதிகளில் சில மக்கள் சஞ்சலத்திலும், சந்தேகத்திலும், அவநம்பிக்கையிலும், கவலையிலும் மூழ்கிக் கிடந்தார்கள்.

மேற்கு பஞ்சாபில் பாதிக்கப்பட்ட 20,000 அகதிகளுக்கு சிகிச்சையும், பாதுகாப்பும் வழங்கும் பொறுப்பு சுசிலா நய்யாருக்கு காந்திஜியால் வழங்கப்பட்டது.

பம்பாயில் கொலாசியா நகர்ப் பகுதியில் வாழும் ஒரு பெண், தன் வீட்டு பால்கனியில் இந்தியக் கொடியையும் ஏற்றி, பாகிஸ்தான் கொடியையும் ஏற்றினார். அவர்தான் ஜின்னாவின் ஒரே மகளான டினா.

லாகூரைச் சேர்ந்த குஷ்வந்த் சிங் "என் பஞ்சாபைப் பிரித்து சிதைத்து சீரழித்துவிட்டார்ளே. நான் அனைத்தையும் இழந்துவிட்டேனே. நான் மகிழ்ச்சி அடையவில்லை. சுதந்திர தினம் எனக்கு ஒரு சோக நாள்' - எனச் சொன்னார்.

இவ்வாறு தேசத்தின் பெரும் பகுதியில் பெருமகிழ்ச்சி. சிலர் மனங்களில் கலக்கமும் கவலையும்.

அன்று காலையில் அண்ணல் காந்திஜியின் ஆசியும், சுதந்திரதினப் பரிசும் கேட்டு நேருவும் பட்டேலும் எழுதிய கடிதத்தை, ஒரு தூதுவன் கல்கத்தாவில் மரத்தடியில் நின்றுகொண்டிருந்த காந்திஜியிடம் கொடுக்கிறார்.

கடிதத்தைப் படித்துப் பார்த்த மகாத்மா "நானோ பரம ஏழை, அவர்களோ அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள். அவர்களுக்கு நான் என்ன தந்து விட முடியும்' எனச் சொல்கிறார், அப்பொழுது சிறிது காற்றடிக்கிறது. கிளைகள் அசைகின்றன ஒரு இலை காந்தியின் கையில் விழுகிறது. அந்த இலையை தூதுவனின் கையில் கொடுக்கிறார் காந்திஜி.

இலையைப் பெற்றுக் கொண்ட தூதுவன் கண்ணீர் வடிக்கிறான். அக்கண்ணீரால் இலை ஈரமாகிறது.

"கடவுள் கருணை நிறைந்தவர். வறண்ட இலையை நேரு, பட்டேலுக்கு பரிசாகக் கொடுக்க இறைவன் விரும்பவில்லை. ஆகவே தான் அதனை ஈரமாக்கிக் கொடுக்கிறார். இந்த இலை உங்கள் கண்ணீரால் பிரகாசிக்கிறது. அதே போல் இந்தியாவும் பிரகாசிக்கும். இது தான் என் சுதந்திர தினப் பரிசு' எனச் சொல்லுகிறார்.

இந்தியா பிரகாசிக்கும் என்பது அண்ணலின் நம்பிக்கை: அவர் வழி நடந்தால், அவர் நம்பியது நடக்கும்! நினைத்தது நிறைவேறும்!

"மதிப்பெண் பெரிதென நினைக்கும் பெற்றோர் அமைதியை இழக்கின்றனர்'

மதிப்பெண்ணை பெரிதாக நினைக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் குடும்ப அமைதியை இழக்கும் நிலை ஏற்படுகிறது என்றார் புதுகை மனநல மைய ஒருங்கிணைப்பாளர் கே. மோகன்ராஜ்.
புதுக்கோட்டை அருகே வல்லத்திராக்கோட்டை ராமசாமி தெய்வானையம்மாள் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளியும், புதுக்கோட்டை மனநல மையம் இணைந்து அண்மையில் நடத்திய விழிப்புணர்வு முகாமில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
இன்றைய சூழலில் தங்கள் குழந்தைகள் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றால் மட்டும் போதுமானது என பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கின்றனர்.
இதனால், அன்பு, அறம், அமைதி என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளாமல், பிடிவாதமும், தன்னலமுமே வாழ்வின் முக்கிய இலக்குகளாகக் கொள்ளும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.
அவ்வாறு வளரும் குழந்தைகள், அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறுசிறு ஏமாற்றங்களைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத மனநிலை கொண்டவர்களாக உள்ளனர். சிந்தனை மழுங்கி 12 வயதிலேயே போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கி, நாளடைவில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் சென்று விடுகின்றனர்.
சில நேரங்களில் பாலியல் வன்முறையாளராகவும், சிலர் மனநோயாளிகளாகவும் மாறுகின்றனர். பலர் கல்வியில் பின்தங்கி படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.
 இவர்களால் குடும்பம் அமைதியை இழந்து, சமூகப் பொருளாதாரச் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பல பெற்றோர் மனமுடைந்து விடுகின்றனர். சிலர் மனநோயாளிகளாக மாறி, விபத்துக்களில் சிக்குகின்றனர்.
இந்த நிலை மாறவேண்டுமெனில், நல்லவர்களிடம் நட்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். சினம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அன்பாகப் பேச வேண்டும்.
எதிலும் வெளிப்படையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கையை ஆக்கப்பூர்வமானதாக மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற வேண்டும். தனியாக இருப்பதை விட்டு, நல்ல நண்பர்களின் துணையுடன் நல்ல விஷயங்களைக் கலந்து பேச வேண்டும். நம்முடைய எதிர்காலம் நம் கைகளில்தான் உள்ளது என்றார்.
முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வு கையேடுகளை மோகன்ராஜ் வழங்கினார். தலைமையாசிரியர் வி.சேகர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஆசிரியர் பி. ஜெயமதி வரவேற்றார். ஆசிரியர் பி. ரகு நன்றி கூறினார்.

கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள் By - பா.ராஜா

நாட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இது மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் சவாலாக உள்ளது.
கள்ள ரூபாய் நோட்டுப் புழக்கம் பிரச்னை தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் மையம் (ஐ.எஸ்.ஐ.) தேசிய புலனாய்வு ஏஜென்சியுடன் (என்.ஐ.ஏ.) இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில், நாட்டில் ரூ.400 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.400 கோடி கள்ள நோட்டுப் புழக்கமானது, கட்டுப்படுத்தப்படாமல், கடந்த 4 ஆண்டுகளாக நிலையாக இருந்து வருவதாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். கள்ள ரூபாய் நோட்டுப் பிரச்னைக்கு முடிவு கட்ட மத்திய நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தன் கையில் இருக்கும் ரூபாய் நோட்டு நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்பதைக் கண்டறிய முடியாமல் கலங்கி நிற்கின்றார். அதாவது, 10 லட்சம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்குமானால், அவற்றில் 250 நோட்டுகள் கள்ள ரூபாய் நோட்டுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வப்போது, சந்தைகளில், உணவகங்களில், பேருந்துகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள வளாகங்கள் ஆகிய இடங்களில் கள்ள நோட்டுகளை மாற்றும்போது பலர் கைது செய்யப்படுகின்றனர். கள்ள கரன்சி நோட்டை புழக்கத்தில் விடுபவர்கள், குழுவாக இணைந்து செயல்படுகின்றனர். நாட்டில் பல நகரங்களில் காவல் துறையினரால் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளில் உத்தர பிரதேசம் மற்றும் தில்லியில் பறிமுதல் செய்யப்பட்டவை மொத்தத்தில் 43% எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டறிய அனைத்து வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் கருவிகள் பயன்படுத்தப்பட்டாலும், கள்ள கரன்சி புழக்கத்தை முற்றிலும் தடுக்க முடியவில்லை. வங்கிகளின் ஏ.டி.எம்.களிலேயே கள்ள ரூபாய் நோட்டுகள் உள்ளன. மேலும், சில தனியார் வங்கிகள் சுமார் 80% அளவிலான கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டறிந்துள்ளன. பொதுவாக, 100 ரூபாய், 500 ரூபாய், 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளே புழக்கத்தில் விடப்படுகின்றன. இவற்றை அச்சிட்டால்தான் லாபம் எனக் கூறப்படுகிறது. இவற்றில் 500 ரூபாய் நோட்டுகளே அதிக அளவில் பிடிபடுகின்றன. மொத்த கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் 1,000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை 50% எனக் கண்டறியப்பட்டுள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டறிய போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில், பாகிஸ்தானில் இருந்து அதிக அளவு கள்ள ரூபாய் நோட்டுகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றன. இவை நேரடியாக இந்தியாவுக்கு வராமல், வங்கதேசம் அனுப்பப்பட்டு, அங்கிருந்து இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுகிறது. அதைத் தடுக்க, இந்திய-வங்கதேச அரசுகள் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளன.
கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தைத் தடுக்க, கரன்சி டிசைனில் சில மாற்றங்களைச் செய்யலாம், வரிசை எண்களில் மாற்றங்களைச் செய்யலாம் என இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. தற்போதைய வடிவிலான ரூபாய் நோட்டுகள் அப்படியே தொடர்ந்தால், இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது.
சராசரியாக ஆண்டுக்கு ரூ.70 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. இவற்றில் மூன்றில் ஒரு பகுதியே பறிமுதல் செய்யப்படுகின்றன என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், தற்போது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், புழக்கம் குறைந்துள்ளது. இதை முனைப்புடன் செயல்படுத்தினால், ஆண்டுக்கு 20% என்ற அளவில் புழக்கத்தைக் குறைக்கலாம் என்று இந்திய புள்ளியியல் மையம் தெரிவித்துள்ளது.
2013-14ஆம் நிதியாண்டில், தில்லியில் 2,15,092 கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.10,35,86,240. 2015-16ஆம் நிதியாண்டில் இது ரூ.9,31,13,960 ஆக இருந்தது. தமிழ்நாட்டில் 2013-14ஆம் நிதியாண்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.3,78,15,110. இது, 2015-16ஆம் நிதியாண்டில் ரூ.2,19,50,450 கோடி எனத் தெரியவந்துள்ளது.
இந் நிலையில், 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு கள்ள ரூபாய் நோட்டுப் புழக்கம் சற்று குறைந்துள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டில் 6.32 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.30.43 கோடியாகும். அதற்கு பின் ஓராண்டில் இதன் புழக்கம் 10% வரை குறைந்துள்ளது.
2015-ஆம் ஆண்டில் பணம் கடத்தல் மற்றும் கள்ள ரூபாய் நோட்டு வைத்திருந்ததாக 788 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 816 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு கள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது. கள்ளநோட்டுப் புழக்கத்தைத் தடுக்க சட்டங்களைக் கடுமையாக வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவு அமைப்புகள் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த அமைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை கிடைக்கிறது என்று இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. அதாவது, 100 ரூபாய் கள்ளநோட்டு ஒன்று புழக்கத்துக்கு வந்தால், ஐ.எஸ்.ஐ.க்கு ரூ.40 வரை கிடைக்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.
எதிலும் "ஒரிஜினல்' இல்லை என்பது இதன்மூலம் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

Saturday, August 13, 2016

என்.மகேஷ்குமார்....திருமலை திருப்பதி லட்டு உருவானது எப்படி? - இனிப்பான அரிய தகவல்கள்



திருமலை திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. இந்த லட்டு பிரசாத விநியோகம் தற்போது 76-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. ஏழுமலையானின் அதிவிருப்ப பிரசாதமான இந்த லட்டு குறித்த சில இனிய தகவல்கள்.

பல்லவர்கள் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் விநியோகிக் கும் முறை முதன்முறையாக அமல்படுத்தப்பட்டதாக கல் வெட்டு தகவல்கள் தெரிவிக் கின்றன. இதேபோல், 2-ம் தேவராயுலு அரசர் காலத்தி லும் பல வகையான பிரசாதங் கள் பக்தர்களுக்காக விநி யோகிக்கப்பட்டன.

இக்காலத்தில் அமைச்சராக இருந்த சேகர மல்லண்ணா என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்கென்றே தனியாக பல தானங்களை செய்துள்ளார்.

பல மைல் தூரத்தில் இருந்து திருமலைக்கு தரிசனத் திற்காக வரும் பக்தர்களுக்கு அன்னதானத்துக்கு பதிலாக பிரசாதங்களே விநியோகிக் கப்பட்டன. இந்த பிரசாதங்கள் ‘திருபொங்கம்’ என அழைக் கப்பட்டது. இக்காலகட்டத்தில் பக்தர்களுக்கு வெல்ல பணியாரம், அப்பம், வடை, அதிரசம் என்று ‘மனோஹரபடி’ எனும் பெயரில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் வடை தவிர மற்ற பிரசாதங்கள் அதிக நாட்கள் தாக்குபிடிக்காமல் விரைவில் கெட்டு விடும் தன்மையில் இருந்தன.

இதனால் வடை பிரசாதத்திற்கு அதிக மவுசு இருந்தது. இதை கவனித்த அப்போதைய மதராஸ் அரசு, 1803-லிருந்து பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறையை தொடங்கியது. அதன் பிறகே இனிப்பு பிரசாதமாக பூந்தி விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1940 முதல் பூந்தி லட்டு பிரசாதமாக உருமாறியது.

லட்டு பிரசாதத்தின் அளவு

லட்டு பிரசாதம் தயாரிக்கும் அளவை ‘திட்டம்’ என அழைக்கின்றனர். லட்டு தயாரிக்க பயன்படும் 51 பொருட்களை ஒரு ‘படி’ என்கின்றனர்.

இதன்மூலம் ஒரு படிக்கு 5,100 லட்டுகள் தயாரிக்கலாம். ஒரு படிக்கு பசு நெய் 185 கிலோ, கடலை மாவு 200 கிலோ, சர்க்கரை 400 கிலோ, முந்திரி 35 கிலோ, உலர்ந்த திராட்சை 17.5 கிலோ, கற்கண்டு 10 கிலோ, ஏலக்காய் 5 கிலோ உபயோகப்படுத்தப்படுகிறது.

அதாவது, 5,100 லட்டு தயாரிக்க 852கிலோ எடையுள்ள பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. லட்டு பிரசாதங்கள் ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு என 3 வகையாக தயாராகின்றன. இதில் ஆஸ்தான லட்டு முக்கிய விழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்யாண உற்சவ லட்டு 750 கிராம் எடை கொண்டது. ரூ. 100க்கு இந்த லட்டுகள் கிடைக்கின்றன. தவிர கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, புரோக்தம் லட்டு. இது 175கிராம் எடை கொண்டது. இந்த வகை லட்டுகள் தான் ரூ.25க்கு பக்தர்களுக்கு விற்கப்படுகிறது.

தாய் ருசி பார்த்த பிறகே

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலின் ஆக்னேய மூலையில் ‘போட்டு’ எனப்படும் பிரசாதங்கள் தயாரிக் கும் இடம் உள்ளது. இங்குதான் அனைத்து பிரசாதங்களும் தயாரிக்கப்படுகிறது. இவை தயாரிக்கப்பட்ட பின்னர், ஏழு மலையானின் தாயாரான வகுல மாதாவிற்கு முதலில் படைக்கப் படுகிறது. அதன் பின்னரே மூலவருக்கு நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.

1940-களில் விநியோகம் செய்யப்பட்ட லட்டு பிரசாதங்கள் கல்யாண உற்சவ லட்டு போன்று பெரிய அளவில் இருந்தன. அந்த காலகட்டத்தில் இவை 8 அணாவிற்கு விற்கப்பட்டன. பின்னர் இவை படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இன்று ரூ.25க்கு பக்தர்கள் கைகளில் மகாபிரசாதமாக கிடைக்கிறது.

விலை உயர்ந்தாலும் தரம் உயராமல் குறைந்து கொண்டு வருவது பக்தர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. நவீன கால எரிவாயு அடுப்பில் பிரசாதங்கள் தயாரிக்கப்படுவதே ருசியும், தரமும் குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

எது எப்படி இருப்பினும், லட்டு பிரசாதத்துக்கு இருக்கும் மவுசு இன்று வரையிலும் குறையவில்லை. இதன் காரண மாகவே கடந்த 2009-ல் திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப் பட்டது குறிப்பிடத்தக்கது.

சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்: ரயில் சென்னை வந்த பிறகே ரூ.5.75 கோடி கொள்ளை?

பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பெட்டியின் மேற்கூரையில் ஆய்வு நடத்தும் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் | உள்படம்: கொள்ளையடிக்க வசதியாக ஆள் நுழையும் அளவுக்கு ரயில் பெட்டியின் மேற்கூரையில் வெட்டப்பட்ட பகுதி.

ஓடும் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை நடந்த வழக்கு சிபி சிஐடி போலீஸ் வசம் ஒப்படைக் கப்பட்டதையடுத்து விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ரயில் சென்னை வந்த பிறகே இந்த கொள்ளை சம்பவம் நடந் திருக்கலாம் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்த பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றினர். இப்படி வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணத்தில் ரூ.342 கோடியே 75 லட்சம் சேலம் விரைவு ரயிலில் தனி சரக்குப் பெட்டியில் ஏற்றப்பட்டு அந்த ரயில் கடந்த 8-ம் தேதி சேலத்திலிருந்து புறப்பட்டு 9-ம் தேதி அதிகாலையில் எழும்பூர் ரயில் நிலையம் வந்தது. பின்னர், பணம் இருந்த சரக்கு பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு எழும்பூரில் உள்ள பார்சல் சர்வீஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

பின்னர், சென்னை ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் நடராஜன் ரயில் பெட்டியின் சீலிடப்பட்ட பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிடப்பட்டு ரூ.5 கோடியே 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த வழக்கு தமிழக சிபிசிஐடி வசம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைக்கப்பட்டது. நேற்று காலையில் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி கரன்சின்கா எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு கொள்ளை நடந்த ரயில் பெட்டியை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்து சேத்துப் பட்டில் உள்ள பணிமனைக்கு சக அதிகாரிகளுடன் நடந்து சென்று ஆய்வு மேற்கொண் டார். அங்கு பணியில் இருந்த பணிமனை ஊழியர்களிடமும் கொள்ளை எப்படி நடந்திருக்கும் எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த ஊழியர்கள், “ரயில் பெட்டியை பற்றி நன்றாக தெரிந்த வர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும்” என்று தெரிவித்தனர்.

பின்னர், அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே போலீஸார் இதுவரை சேகரித்து வைத்திருந்த அனைத்து தகவல் களையும் கரன்சின்கா பெற்றுக் கொண்டார். முதல் கட்டமாக ரயில் பாதுகாப்பு பணிக்காக சென்ற ஆயுதப் பிரிவு உதவி கமிஷனர் நாகராஜன் உள்ளிட்ட 9 பேரின் பெயர், முகவரி, செல்போன் எண் அடங்கிய பட்டியலை பெற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து சேலம் மற்றும் சென்னையில் உள்ள வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பெயர் பட்டியல், அவர்களின் முகவரியை பெற்றுக் கொண்டார்.

கொள்ளை நடந்தது எங்கே?

பணம் கொண்டு வரப்பட்ட ரயில் சேலத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் நுழை யும்போது அங்கிருந்த கண்கா ணிப்பு கேமராவில் பணம் வைக் கப்பட்டிருந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளை எதுவும் இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே சரக்கு ரயில் சென்னைக்கு கொண்டு வரப்பபட்ட பிறகே இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரிலும் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இது கு றித்து கூறியதாவது:

ரயில் கொள்ளை குறித்து முதலில் விசாரணையை தொடங் கியது ரயில்வே பாதுகாப்பு படையினர்தான். அவர்கள் முழுக்க முழுக்க ரயிலில் பாதுகாப்பு பணியை மட்டுமே செய்வார்கள். எனவே அவர்களிடம் புலனறியும் தன்மை அவ்வளவாக இருக்காது.

இதனால், இந்த வழக்கு அவர்களிடம் இருந்து எழும்பூர் ரயில்வே போலீஸாருக்கு மாற்றப் பட்டது. 2 மாதங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் சுவாதி என்ற ஐ.டி. பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கையும் அவர்கள்தான் முதலில் விசாரித்தார்கள். ஆனால், அவர் களால் துரிதமாக செயல்பட முடியவில்லை. காரணம் பாது காப்பு பணி உள்ளிட்ட பல்வேறு இதர பணிகள் அவர்களுக்கு இருந்தது. மேலும், செல்போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்கும் கருவி உள்ளிட்ட முக்கியமான கருவிகள் அவர் களிடம் இல்லை. எனவே, இந்த கொள்ளை வழக்கை ரயில்வே போலீஸார் விசாரித்தால் கொள்ளையர்களை விரைவாக நெருங்க முடியாது என நினைத்த டிஜிபி அசோக்குமார் உடனடியாக நேற்று முன்தினம் இரவோடு இரவாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

சிபிசிஐடி போலீஸாருக்கு பாதுகாப்பு பணி போன்ற எந்த பணியும் கிடையாது. அவர்களிடம் சிறப்பாக புலன் விசாரணை செய்யக் கூடிய அதிகாரிகளும் உள்ளனர். மேலும் சைபர் கிரைம் பிரிவும் தனியாக உள்ளதால் தான் வழக்கு உடனடியாக மாற்றப் பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தோல்வியிலிருந்தே வாழ்க்கையைக் கற்றுக்கொள்வோம்!



அரவிந்தன் சிவகுமார்

கல்விக் கடன் வசூலிக்க வந்த கார்ப்பரேட் ஈட்டிக்காரர்களின் நெருக்கடி, மிரட்டல் ஆகியவற்றுக்குத் தூக்கில் தொங்கி பதில் சொன்ன பொறியியல் பட்டதாரி மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த லெனின்...

பி.எஸ்.ஜி மருத்துவமனை மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்ட‌ மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவி லட்சுமி....

ஃபேஸ்புக்கில் தன்னை ஆபாசமாய்ச் சித்தரித்ததைத் தடுக்க முயன்று, காவல்துறையினரால் அலைக்கழிக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியா...

வாழத் தொடங்கும் முன்னரே மரணத்தின் வாசலைத் தட்டிய இளம்வயதினரின் சமீபத்திய‌ தற்கொலை நிகழ்வுகள், அதிவேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திர நகரத்தை உலுக்கிச் சற்றே கவனத்தைத் திசைத் திருப்புகிற நிகழ்வாய் அமைந்திருக்கின்றன‌.

2014-ல் பல்கலைகழக மானியக் குழு உதவியோடு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் (96 கல்லூரிகள், 4646 மாணவர்கள்) 12.20 சதவீத மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், 15.45 சதவீதத்தினர் தங்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் இருப்பதாகக் கூறியதும் பதிவாகியுள்ளது.

இவ்வாறான‌ தற்கொலைகள் நடக்கும்போதெல்லாம், பிரச்சினைகளைக் கையாளும் திறன் இல்லாமல் போவது, அதீத மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தற்கொலைகள் நிகழ்கின்றன என்று பூசி மெழுகப்படுகிறது. ஆனால் அது உண்மைதானா?

உயிர்- உள்ளம்- சமூகம் ஆகிய மூன்று கோணங்களிலிருந்து நாம் ஆய்வு செய்தால் மட்டுமே தற்கொலைகள் பற்றிய சரியான புரிதலும், அதைத் தடுப்பதற்குச் சரியான‌ வழிமுறையும் கிடைக்கும்.

தற்கொலை எண்ணம் ஏன்?

நெருக்கடிகளின் தாக்கத்தினால் தற்கொலைக்கு முயற்சிப்ப‌வருக்கு ஒருவித ‘உளவியல் வலி' ஏற்படுகிறது. அந்த வலி மேலோங்கி அதைக் குறைப்பதற்கான வழிதேடும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவார்கள். அப்போது அவர்களின் சிந்தனை முறையில் பல மாற்றங்கள் நிகழும்.

அதாவது, ஒரு பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வுகள் இல்லவே இல்லை என்கிற எண்ணம் தோன்றுவது, இம்மியளவுகூட பிரச்சினை குறையாது என்கிற பயம் உள்ளிட்டவை எனக்குள்ள பிரச்சினைகள் இன்றே, இப்போதே முழுமையாய்த் தீர வேண்டும் அல்லது நான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற முடிவை நோக்கி ஒருவரைத் தள்ளுகின்றன.

சூழலே காரணம்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவை தனிநபர் மனநிலையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றன‌. பள்ளி, கல்லூரிகளில் தனிநபர்த்தன்மை அதாவது 'இன்டிவிஜுவலிஸம்' முன்னிறுத்தப்படுகிறது. தவிர ‘டீம் ஸ்பிரிட்' எனும் குணம் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. ‘நீ ஜெயிக்கப் பிறந்தவன்/ள்' என்கிற மந்திரம் மட்டும்தான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

பட்டம் பெற்று வேலை தேடும் படலத்தில், அந்த வறட்டுத் தன்னம்பிக்கை மந்திரங்கள் மீண்டும் மீண்டும் மனதில் ஒலிக்கும். இந்த நிலையில்,நெருக்கடிகள் வ‌ரும்போது, பிரச்சினைக்கு வெளியிலிருந்து அவற்றை அணுகாமல், பிரச்சினையின் முழுத் தன்மையையும் புரிந்துகொள்ளாமல், பிரச்சினைக்குள்ளிருந்தே அணுகுவதால், ‘உளவியல் வலி' ஏற்படும். அது தற்கொலைக்கு வழிவகுக்கும்.

ஆக, தற்கொலைகளுக்குக் காரணம் மூளையில் ஏற்படும் வேதி மாற்றங்கள் மட்டுமே அல்ல. நாம் சார்ந்திருக்கும் சமூகச் சூழலும் மிக முக்கியக் காரணம்! இதைத்தான் ‘இயற்கைக்கு முரணாகத் தற்கொலைகள் தோற்றமளித்தாலும், தற்கொலைகளை உற்பத்தி செய்வது சமூகத்தின் இயற்கை குணமாகவுள்ளது' என்கிறார் மார்க்ஸ்.

எப்படி மீள்வது?

தினக் கூலிகளாய், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் எப்படி அந்தப் பூக்காரம்மாவால் சிரிக்க முடிகிறது? எப்படி இடுப்பொடிய‌ வீட்டு வேலை செய்யும் அந்தப் பெண்ணால் அமைதியாகப் பேச முடிகிறது? மாற்றுத் திறனாளிகளால் எப்படி நம்பிக்கையுடன் உலவ முடிகிறது? அவர்கள் எப்படி நெருக்கடிகளைக் கையாளுகிறார்கள்? எந்தப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முனைவர் பட்டம் பெற்றார்கள்?

இன்றைய பொழுது என் கையில், இன்றைய சூழலில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம். அதை மகிழ்ச்சியோடும் உறுதியோடும் செய்யலாம். தோல்விகளைப் பிரச்சினைகளாகப் பார்க்காமல் எல்லாவற்றையும் அனுபவங்களாய்ப் பார்க்கலாம். இதுவே நமது வாழ்க்கைத் தத்துவமாக இருக்கட்டும்.

‘நீ நூலகத்துக்கு போ!

நான் தெருவில் இறங்கப் போகிறேன்.

வாழ்க்கையை நான்

வாழ்க்கையிலிருந்தே கற்றுக்கொண்டேன்'

என்ற பாப்லோ நெருடாவின்

கவிதை வரிகள்தான், மருத்துவர்களின் ‘ப்ரிஸ்கிரிப்ஷனை' விட‌ இன்று முக்கியத் தேவையாய் இருக்கின்றன‌.



கட்டுரையாளர், கீழ்ப்பாக்கம் அரசு மனநலக்காப்பகத்தில் மனநல மருத்துவர்.

தொடர்புக்கு: spartacus1475@gmail.com

பஞ்சு அருணாசலம்: துணிச்சலான பரிசோதனைகளின் மன்னன்



சுமார் அறுபதாண்டுகளாகத் தமிழ்த் திரையுலகுக்காக உழைத்த பஞ்சுஅருணாசலம், தன் சிந்தனையை நிறுத்திக்கொண்டார். தம் கடைசி மூச்சுவரை அவர் திரைப்படங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார் என்பது வியப்புக்குரிய செய்தி.

அவர் இதுவரை 99 படங்களுக்குக் கதை வசனகர்த்தாகப் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூறாவது படத்துக்கான திரைக்கதை எழுதப்பட்டுத் தயாராக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

கண்ணதாசனுக்கு உதவியாளராகத் தொடங்கிய அவருடைய உழைப்பு, கவுதம் கார்த்திக் வரை தொடர்ந்திருக்கிறது. கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்துக்காக 21 ஆண்டுகளுக்குப் பின்னால் இளையராஜா இசையில் பாடல்கள் எழுதிவிட்டுத்தான் மூச்சை நிறுத்தியிருக்கிறார்.

அவர் திரைத் துறைக்குள் வந்ததும் ஏற்கெனவே யாரோ போட்டு வைத்த பாதையில் பாதுகாப்பாகப் பயணித்துவிடவில்லை. எல்லோரும் நினைக்கக்கூடப் பயந்து ஒதுங்குகிற செயல்களைத் துணிச்சலுடன் செய்து வெற்றி பெற்றுக் காட்டியிருக்கிறார்.

இளையராஜாவை அறிமுகம் செய்தார். அது சாதாரணமாக நடந்துவிடவில்லை. அப்போது உச்சத்தில் இருக்கும் எம்எஸ்.விஸ்வநாதனையே இசையமைப்பாளராகப் போடலாம் என்று அவருடைய குடும்ப உறுப்பினர்களே வற்புறுத்தியபோதும், இளையராஜா முதன்முதலில் பாடல் பதிவு தொடங்குகிற நேரத்தில் மின்சாரம் தடைபட்டதை எல்லோரும் அபசகுனமாகக் கருதியபோதும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றிருக்கிறார் பஞ்சுஅருணாசலம்.

பரிசோதனை முயற்சிகள்

அவர் கதை வசனம் எழுதிய படங்களில் அதுவரை யாரும் செய்யாத பரிசோதனை முயற்சிகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். ரஜினிக்குத் திருப்புமுனையாக அமைந்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’. அந்தப் படத்துக்குத் திரைக்கதை வனம் எழுதிய பஞ்சு அருணாசலம், அதுவரை நல்லவராகவே நடித்துவந்த சிவகுமாரைக் கெட்டவராகவும் அதுவரை கெட்டவராக நடித்துவந்த ரஜினியை நல்லவராகவும் எழுதியிருக்கிறார். படக் குழுவினர் எல்லோரும் பயந்தபோதும் அவர்களுக்குத் தைரியம் சொல்லி வேடங்களை மாற்றாமல் அப்படியே வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒரே நேரத்தில் கமலை வைத்து ஒரு படம், ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதை அவர் எதிர்கொண்ட விதம் மிகவும் சுவையான நிகழ்வாகத் திரையுலகில் பேசப்படுகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்த நேரத்தில் இருவரையும் தனித்தனியாக நடிக்கவைத்துப் படமெடுக்க அவர் தயாரானார்.

அப்போதும், அதுவரை வில்லனாகவும் ஸ்டைல் மன்னனாகவும் நடித்து வந்த ரஜினியை குடும்பத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் நல்லவனாக நடிக்க வைத்திருக்கிறார். 25 வயது முதல் 60 வயது வரையிலான பலவிதத் தோற்றங்களில் ரஜினி நடித்தார். இம்மாதிரியான புதுவிதத் தோற்றத்தில் ரஜினியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம் படம் வெளியாகும்வரை எல்லோருக்குமே இருந்ததாம். ரஜினிக்கும் அந்தச் சந்தேகம் இருந்திருக்கிறது. அவர் திருப்தியில்லாமல் இருந்திருக்கிறார். அப்போது பஞ்சு அருணாசலம், ஐந்தாயிரம் அடிவரை படத்தை எடுத்து அவருக்குப் போட்டுக் காட்டுவோம், அப்போதும் அவருக்குத் திருப்தியில்லை யென்றால் படத்தை நிறுத்திவிடலாம் என்று சொல்லி எடுத்தாராம்.

எடுத்தவரை போட்டுப் பார்த்து ரஜினி திருப்தியடைந்தாராம். அந்தப் படம் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’. அப்படம் பெரிய வெற்றி பெற்றதுடன், அந்த ஆண்டின் சிறந்த படமாக சினிமா ரசிகர் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை ரஜினிக்கும் சிறந்த இயக்குநருக்கான விருதை இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கும் அந்தப் படம் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

மாறுபட்ட திரைக்கதைகள்

1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று வெளியான இரண்டு படங்களுக்கும் பஞ்சுதான் கதை வசனகர்த்தா. ஒன்று ‘எங்கேயோ கேட்ட குரல்’, இன்னொன்று ‘சகலகலா வல்லவன்’. கொஞ்சம் யோசித்தாலே ரஜினி நடிக்க வேண்டிய கதையில் கமல் நடித்திருக்கிறார் என்பதும் கமல் நடிக்க வேண்டிய கதையில் ரஜினி நடித்திருக்கிறர் என்பதும் புரிந்துவிடும்.

‘சகலகலா வல்லவன்’ படமாகும் நேரத்தில் இந்தக் கதை எனக்கு செட்டாகுமா என்று கமல் மிகவும் பயந்துகொண்டேயிருந்தார் என்று சொல்லப்படுகிறது. ‘வாழ்வே மாயம்’, ‘மூன்றாம் பிறை’, ‘சிம்லா ஸ்பெஷல்’ மாதிரியான படங்களிலேயே தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தால் கமர்ஷியலாக உங்களுக்குப் பின்னடைவு ஏற்படும்; அவ்வப்போது இப்படிப்பட்ட படங்களிலும் நடிப்பதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்லி நடிக்கவைத்திருக்கிறார். அதே நேரம் கமலுக்குத் திருப்தி ஏற்பட வேண்டும் என்பதோடு அவருடைய நடனத் திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்ததும் அவர் நடனக்காரராகிவிடுகிறார் என்று மையக்கதைக்குப் பாதிப்பில்லாமல் திரைக்கதையை மாற்றினாராம் பஞ்சு. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘விஷ் யூ ஹேப்பி நியூஇயர்’ பாடல் இன்றுவரை பிரபலமாகவே இருக்கிறது. சில்க் ஸ்மிதாவுடனான ‘நேத்து ராத்திரி யம்ம்மா’ பாடலும் கமல் பாணி என்பதற்காகவே வைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ‘போக்கிரி ராஜா’, ‘தனிக்காட்டு ராஜா’, ‘ரங்கா’ போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினியை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கவைத்திருந்தார். இப்படி யாரும் எதிர்பாராத விஷயங்களைப் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்து சாதனைகளாக்கியிருக்கிறார்.

‘பாபா’ படத்துக்கு முன்புவரை கிட்டத்தட்ட ரஜினியின் எல்லாப் படங்களிலும் பஞ்சு அருணாசலத்தின் பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருந்திருக்கிறது. இயக்குநர் யாராக இருந்தாலும் திரைக்கதை எப்படியிருந்தாலும் அதற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் குறைந்தது நான்கைந்து இடங்களில் ரஜினி கைதட்டல் வாங்குகிற மாதிரி செய்துவிடுவாராம் பஞ்சு.

ஓய்வற்ற பயணம்

குள்ள மனிதராகக் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சுமார் நான்காயிரம் அடிவரை படமும் எடுக்கப்பட்டுவிட்டதாம். ஆனாலும் கமலுக்குத் திருப்தியில்லையாம். அதன் பின் பஞ்சு அருணாசலத்தை அணுகியிருக்கிறார். அவர் படத்துக்குள் வந்ததும் அதுவரை எடுத்ததை அப்படியே தூக்கி வைத்துவிட்டு, மறுபடியும் முதலிலிருந்து தொடங்கச் சொல்லியிருக்கிறார். அவருடைய திரைக்கதை கமலுக்கு மிகவும் பிடித்துப்போனதால் அவரும் எடுத்ததை அப்படியே விட்டுவிட்டு முதலிலிலிருந்து எடுத்தாராம்.

கையெழுத்து குண்டு குண்டாக அழகாக இருந்த காரணத்தாலேயே கண்ணதாசன் அவரைச் சேர்த்துக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அதோடு மடைதிறந்த வெள்ளம்போல கண்ணதாசனின் உதடுகளிலிருந்து ஒருமுறை மட்டுமே உதிரும் சொற்களை அட்சரம் பிசகாமல் பிடித்துக்கொள்ளும் வேகமும் பஞ்சு அருணாசலத்துக்கு இருந்த காரணத்தால் அவரோடு பல ஆண்டுகள் பயணிக்க முடிந்திருக்கிறது. கையெழுத்து மட்டுமின்றி அவர் எழுதிய எழுத்துகளும் நன்றாக இருந்ததால்தான் கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் அவருடைய பேனா ஓய்வின்றிப் பணியாற்றியிருக்கிறது.

சிறந்த கலைஞர்களிடம் உங்களுடைய ஆசை என்னவென்று கேட்டால், நான் என்னுடைய கலைப் பணியில் இருக்கும்போதே மரணிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

இவருக்கு அப்படியே நடந்திருக்கிறது. ஒரு பக்கம் இப்போது தயாராகிக்கொண்டிருக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதிக்கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் வார இதழ் ஒன்றுக்குத் தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடராக எழுதிக்கொடுத்துக்கொண்டு, மற்றுமொரு பக்கம் புதிய திரைக்கதையை எழுதிவிட்டு மரித்திருக்கிறார்.



கதை எழுதியவரின் மனமும் புண்படாமல் இயக்குநரின் தன்முனைப்பையும் சீண்டிவிடாமல் கதாநாயகர்களுக்குக் கைதட்டல் பெற்றுத் தந்துகொண்டிருந்த அந்தக் கலைஞனின் கைகள் இப்போது ஓய்வெடுக்கின்றன. தமிழ்கூறு நல்லுலகெங்கும் அவருடைய சிறப்புகளை நூற்றுக்கணக்கான கைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன.

குடும்ப உறுப்பினர்களே அவரை வற்புறுத்திய போதும், இளையராஜா முதன்முதலில் பாடல் பதிவு தொடங்குகிற நேரத்தில் மின்சாரம் தடைபட்டதை எல்லோரும் அபசகுனமாகக் கருதியபோதும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றிருக்கிறார்.

தங்க நகைக் கடன்... சுலபமாக அடைக்கும் மூன்று வழிகள்!

ஆத்திர அவசரத்துக்கு இன்றைக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது நகைக் கடன் தான். திடீரென்று அப்பாவுக்கு சுகமில்லை, பையன் காலேஜ் பீஸ் இந்த மாசமே கட்டணுமாம்; பஸ்ல போய் மாளலை; உடனே ஒரு டுவீலர் வாங்கணும்... இப்படி வரும் செலவுகளுக்கு யாரிடமும் கை ஏந்தாமல், நமக்கே நமக்கென இருக்கும் தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற்று, பயன் அடைவதுதான் தங்க நகைக் கடன். நகர்ப்புறத்து மத்திய தர வர்க்க மனிதர்களுக்கு மட்டுமல்ல, கிராமப்புறங்களில் வாழும் பலருக்கும் நகைக் கடன் ஒன்றுதான் உடனடி பணத் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கிறது. நம்மவர்கள் அதிக அளவில் தங்கம் மீது மோகம் கொள்வதற்கும் இது ஒரு முக்கியமான காரணம்.

மற்ற கடன்களுக்கும் இந்த தங்க நகைக் கடனுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம், மற்ற கடன்களை இ.எம்.ஐ. மூலம் ஒவ்வொரு மாதமும் கட்டலாம். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும்போது, இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது, கடன் மூலம் வீடு வாங்கும்போது இ.எம்.ஐ. என்று சொல்லப்படுகிற மாதத் தவணை மூலம் கட்டி, நாம் வாங்கிய பொருளை நமக்கானதாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஆனால், தங்கக் கடன் இதிலிருந்து மாறுபட்டது. அதாவது, தங்கக் கடன் தொகையும் அந்த காலத்துக்கு கொடுக்கும் வட்டியையும் (அசலுக்கும் வட்டிக்கும் சேர்த்து முழு தொகையினை செலுத்திய பின்னரே) சேர்த்து கட்டியபின்னர்தான் தங்கக் கடனிலிருந்து மீள முடியும் அல்லது வருடத்துக்கோ அல்லது ஆறு மாதத்துக்கோ ஒருமுறையோ கடனுக்கு செலுத்தும் வட்டியை மட்டும் செலுத்தி தங்கக் கடனை புதுப்பிக்க முடியும். சில வங்கிகள், கடனையும் வட்டியையும் முழுமையாக கட்டிய பிறகு மறு அடகு வைக்க அனுமதிக்கிறது.

இல்லையெனில் தங்கக் கடன் காலம் முடிந்து மூன்று அல்லது ஆறு மாதம் கழித்து தங்கம் ஏலத்துக்கு சென்றுவிடும். பிறகு ஏலத்துக்கு சென்ற தங்க நகையை ஏல செலவுகளையும் மற்ற இதர செலவுகளையும் சேர்த்து அதற்குண்டான வட்டியையும் செலுத்தித்தான் தங்கக் கடனிலிருந்து மீள முடியும்.

இதனை ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம். நம்மிடம் உள்ள ஆபரண தங்க நகையின் மதிப்பு - ரூ. 1,25,000 என்று வைத்துக் கொள்வோம். தங்கத்தின் மதிப்பிற்கேற்ப 80% கடன் கிடைத்தால் ரூ.1,00,000. கடனுக்கான வட்டி விகிதம் - 10% எனில், ஓராண்டில் தங்க நகைக் கடனுக்கு செலுத்தும் வட்டி மட்டும் ரூ.10,000. ஆக மொத்தம் அசலும் வட்டியும் சேர்த்து வருட முடிவில் செலுத்தும் மொத்த தொகை ரூ.1,10,000.

இந்தப் பெரும் தொகையை ஒருவர் மொத்தமாக செலுத்தி அடைப்பது கடினம்தான். இதையே கடன் தரும் வங்கிகள் மாதத் தவணையாக செலுத்த சொல்லும்பட்சத்தில், அவரால் எளிதாக கடனைத் திரும்பக் கட்டக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. எனவே, தங்க நகைக் கடனை எளிதாக திரும்ப செலுத்துவதற்கு என்ன வழி?

மூன்று வழிகள் உள்ளன. முதலாம் வழி, உங்களால் 1,10,000 தங்க நகைக் கடனை 12 மாதத்தில் திரும்ப செலுத்த வேண்டும் எனில், மாதம் 1,10,000/12= ரூ.9,167 சேமிக்க வேண்டும். இதுவே வங்கி சேமிப்புக் கணக்கில், 4% வட்டி விகிதத்தில் வளரும் திட்டத்தில் மாதம் ரூ.8,999 வீதம் 12 மாதங்களுக்கு சேமிக்கலாம். ஒருவருட கால வங்கி சேமிப்பில் 6.5% என்ற வட்டி விகிதத்தில் ரூ.8896 சேமிக்க வேண்டும். ஆர்டி அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் 8% வருமானத்தில் ரூ.8.835 முதலீடு செய்து வரலாம். இந்த முதிர்வு தொகையை தங்க நகைக் கடனை அடைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து சேமித்து வந்தால், தங்க நகைக் கடனை சிரமம் இல்லாமல் சுலபமாக அடைக்கலாம்.

மாதம் சுமார் ரூபாய் 9,000 சேமிப்பது எங்களால் முடியாது என்று நினைப்பவர்கள் இரண்டாவதுவழியைப் பின்பற்றலாம். அதாவது, நகைக் கடனுக்கான வருட வட்டியை மாத வட்டியாக பிரித்து, அதற்கு மேல் எவ்வளவு கூடுதலாக சேமிக்க முடியுமோ சேமித்து, வருட முடிவில், தாங்கள் சேமித்த தொகையை எடுத்து நகைக் கடனுக்கான வட்டியை செலுத்தி கடன் சுமையை குறைக்கலாம். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

தங்க நகைக் கடனாக வாங்கியது ரூ.1,10,000. ஒருவரால் மாதமொன்றுக்கு கட்ட நினைக்கும் தொகை - ரூ.5,000 என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்துக்கு வட்டி ரூ.10,000 எனில், மாதமொன்றுக்கு வட்டியாக சேமிக்க வேண்டிய தொகை ரூ.833. இந்த வட்டித் தொகையுடன் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக சேமிக்கும் தொகை ரூ.4,167-ஐ ஒரு வருட வங்கி சேமிப்பு திட்டத்திலோ, அஞ்சலகத்திலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ சேமிக்கலாம்.

இந்த வகையிலும் சேமிக்க முடியாது என்பவர் களுக்கு மூன்றாவது வழி உள்ளது. அதாவது, உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பணத்தை சேமித்து இடையிடையே அசலையும் வட்டியையும் கட்டலாம். இப்படி செய்வதினால் வட்டி சுமை குறையும். காரணம், தங்க கடனுக்கான வட்டி அதிகம். அசல் குறைந்தால்தான் வட்டியும் குறையும்.

இன்று தங்க நகைக் கடைக்காரர்கள் சுலப மாதத் தவணை திட்டத்தை வழங்கி வருவதால்தான், குறைந்த வருமானம் உள்ளவர்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து தங்க நகைகளை சேமிக்கிறார்கள். இது மாதிரி தங்க நகைக் கடனுக்கும் மாதத் தவணை பணம் செலுத்தும் முறையைக் கொண்டுவந்தால், வங்கிகளுக்கு திரும்ப வரவேண்டிய பணமும் சரியாக வரும். கடன் வாங்கியவர்களும் பணத்தை திரும்பத் தந்து, நகையை எடுத்துச் செல்வார்கள்.

எந்த ஒரு கடனையும் முழுமையாக ஒரே தவணையில் அடைப்பது கடினமான ஒன்றே. சுலப தவணைத் திட்டத்தின் மூலம் சிறுக சிறுக கடன் தொகையை திரும்ப செலுத்தி அதிலிருந்து மீண்டு வருவதுதான் புத்திசாலித்தனம்.

உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்!

vikatan.com

செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் காதலை சொல்லவே ஆணுக்கும் பெண்ணுக்குமான தயக்கம் நிறைய இருக்கும். பார்வையாலேயே பல நாட்கள் ஓடும். அதன் பிறகு ஒருவழியாக காதலை சொல்லி… அது கல்யாணத்தில் முடிந்தால் அவர்களுக்கு இடையிலான புரிதல் நிறைய இருக்கும். கூட்டுக் குடும்பமாக ஆட்கள் நிறைந்திருக்கும். அங்கே அந்த காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கண்களால் நடக்கும் உரையாடல். அதற்காக அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருந்தது இல்லை. சண்டைகளைத் தாண்டி அவர்களுக்குள் இருந்தது புரிதல்.

இன்று…? பார்த்ததும் ஒரே நாளில் காதலைச் சொல்லி், இரண்டே நாட்களில் எல்லாம் பேசி முடித்து… வாழ்க்கை என்பது சலித்துவிடுகிறது. சீக்கிரத்தில் தொடங்கி சீக்கிரத்தில் முடிந்து விடுகிறது. கணவன் மனைவிக்குள் மட்டுமல்ல…பொதுவாகவே உறவுகளுக்குள் விரிசல் எங்கிருந்து வருகிறது? விரிசலை ஏற்படுத்த காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். எப்படி சுற்றி வளைத்துப் பார்த்தாலும் எல்லா காரணங்களும் பெரும்பாலும், இந்த பத்துக்குள் நிச்சயம் அடங்கிவிடும். அப்படியான பத்து காரணங்களை பார்க்கலாம்.

1. ஈகோ (Ego)

குடும்பத்துக்குள் எட்டிப் பார்க்கக்கூடாத விஷயம் ஈகோ! அந்த வார்த்தைக்குள்ளேயே ‘கோ’ என்பது இருப்பதால், யாராவது ஒருவருக்கு அது வந்துவிட்டால், நிம்மதியை விரட்டிவிடும். நீ பெரியவனா… நான் பெரியவளா என்று போட்டிபோடும் மைதானம் அல்ல, வாழ்க்கை. கணவனுக்கு தெரியாதது மனைவிக்கு தெரிந்திருக்கலாம்; மனைவிக்கு தெரியாதது கணவனுக்கு தெரிந்திருக்கலாம்; எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இன்னொரு பக்கம் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் இந்த ஈகோ அடிக்கடி வந்து போகும். அதனால் ஈகோவை தவிர்த்துவிடுவோம்.

2. தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex)

இது எந்த நேரத்தில் மனிதனுக்குள் எட்டிப்பார்க்கும் என்பது தெரியாது. ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய முடியாமல் போய், அதற்காக வீட்டில் உள்ளவர்கள் சாதாரணமாக கிண்டல் செய்தால் கூட, அது சிலருக்கு தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடும். அது நாளடைவில் அதிகமாகி தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்வார்கள். அந்த வட்டமே விரிசலாக மாறும். சமையல் தொடங்கி படிப்பு வரை இந்த தாழ்வுமனப்பான்மை எதற்காக வேண்டுமானாலும் வரலாம்.

3. தவறான புரிதல் (Misunderstanding)

வாழ்க்கையை அழகாக மாற்றுவதே புரிதல்தான். அது கணவன் மனைவியாக இருந்தாலும் சரி… அப்பா பிள்ளை, அண்ணன் தங்கை என எந்த உறவுகளானாலும் புரிதல் என்பது அவசியம். புரிதல் மட்டும் இருந்தால் வாழ்க்கை வரமாகும். அதுமட்டும் இல்லாமல் போய்விட்டால், தொட்டதற்கெல்லாம் பிரச்னை எழ ஆரம்பித்துவிடும். ‘நான் சொல்றதை யாரும் கேட்க மாட்டேங்குறாங்க…’ என்று எல்லோரிடமும் எரிந்து விழ ஆரம்பித்துவிடுவீர்கள். மற்றவர்கள் எப்படி உங்களை புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களோ அதேபோல வீட்டில் மற்றவர்களின் உணர்வுகளை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

4. பொஸசிவ்னஸ் (Possessiveness)

‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்று என்ற பொஸசிவ்னஸ் நமக்கு இந்நாளில் பழக்கமாகிவிட்டது. அளவு கடந்த அன்புதான் இந்த பொஸசிவ்னஸ். கணவன் வேறு ஒரு பெண்ணிடமோ, மனைவி வேறு ஓர் ஆணிடமோ சாதாரணமாக பேசினால் கூட அதை தாங்கிக்கொள்ள முடியாது. இந்த இடத்தில் அப்படியான ஒன்று நிகழ்ந்தால், ‘ஹேய் லூசு… அவளும் நீயும் ஒண்ணா…’ என அதே இடத்தில் சொல்லி உங்கள் துணையின் முக்கியத்துவத்தை புரியவைத்துவிட வேண்டும். அப்படியே அதை வளரவிட்டால், ஆபத்துதான். இது கல்யாணம் ஆனதும் வரலாம். 40 வயதிலும் வரலாம். எந்த நேரத்திலும் இது என்ட்ரி ஆகலாம்.

5. சந்தேகம் (Suspicion)

பொஸசிவ்னஸுக்கும் இதற்கும் மெல்லிய கோடுதான் வித்தியாசம். அதன் அடுத்த கட்டம் இது. வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் வீட்டுக்குள் வரவே கூடாத ஒன்று சந்தேகம். வாழ்க்கையை நரகமாக மாற்றும் சக்தி சந்தேகத்துக்கு உண்டு. பல வீடுகளில் புகுந்த சந்தேகப்பேய், வீட்டையே புரட்டிப்போட்டு, சில இடங்களில் உயிரையும் குடித்திருக்கிறது. அதனால் சந்தேகம் என்ற பேயை மனசுக்குள் விடாதீர்கள். அப்படி உங்களுக்கு எதாவது தோன்றினால் அதை உடனே உங்கள் துணையுடன் கலந்து பேசி தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சந்தேகத்தை வளரவிட்டால் அது வெட்ட முடியாத முள் காடாக வளர்ந்துவிடும்.

6. மனம் விட்டுப் பேசாதது (Not being open about their feelings)

எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டுப் பேசினால் தீர்ந்துவிடும். ஆனால், அப்படி பேசுவதற்குதான் பலர் தயாராக இருப்பதே இல்லை. கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வரும் சண்டைகளை இருவரும் பேசாமல் தள்ளிப்போடுவது தான் விரிசலை விரிவுபடுத்துகிறது. அதேபோல குழந்தைகளாக இருந்தாலும் சரி… பெற்றோராக இருந்தாலும் சரி… அவரவர்களுக்குள் ஒரு எண்ணம் இருக்கும். மற்றவர்கள் அதில் இருந்து மாறுபட்டு இருப்பார்கள். அந்த நேரத்தில் பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். ஆளுக்கொரு விஷயத்தை மனசுக்குள் மட்டுமே நினைத்திருந்தால் அதற்கு தீர்வு கிடைக்காது. அது விரிசலில் மட்டுமே முடியும்.

7. மூன்றாம் நபரின் தலையீடு (The intervention of a third person)

குறிப்பாக இது கணவன- மனைவி கவனிக்க வேண்டிய விஷயம். எந்த பிரச்னை வந்தாலும் அதை எந்த காரணத்துக்காகவும் மூன்றாம் நபரிடம் கொண்டு போகக் கூடாது. அவர்கள் இருவருமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கணவனுக்கு மனைவியைவிடவும், மனைவிக்கு கணவனைவிடவும் வேறு எவரும் நல்லது நினைக்க முடியாது; நல்லது செய்யவும் முடியாது. மூன்றாவது நபர் ஒருவர் உங்கள் பிரச்னைக்குள் வந்தாலே நீங்கள் வேறு ஒரு பிரச்னைக்குள் சிக்க தயாராகி வருகிறீர்கள் என்பதுதான் மறைமுகப் பொருள்.

8. துன்புறுத்தல் (Harassment)

கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் பாசம், குழந்தைகளின் வரவுக்குப்பின் கொஞ்சம் குறைய ஆரம்பிக்கும். அதுவும் 40 வயதைக் கடந்த பெண்கள், குழந்தைகள் மீது அன்பையும் அக்கறையையும் காட்டிக் கொண்டு, கணவனை கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். கணவன் நெருங்கி வந்தாலும் விலகிப் போவார்கள். அந்த நேரத்தில்தான் உங்கள் துணைக்கு அரவணைப்பு முக்கியம். அடிப்பது, சண்டை போடுவது மட்டுமல்ல, விட்டு விலகிப்போவதும் ஒருவகையில் துன்புறுத்தல்தான். அப்படியான ஒன்று நிகழும்போது இருவருக்கும் இடையில் விரிசல் தொடங்கியிருக்கும்.

வீட்டில் இருக்கும் குழந்தைகள் சொல்வதையும் காதுகொடுத்துக் கேளுங்கள். உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது திணித்தால், அவர்களைப் பொருத்தவரையில் அதுவும் ஒருவகையில் துன்புறுத்தல்தான். அந்தத் திணிப்பு நாளடைவில் உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கும்.

9. விட்டுக்கொடுக்காதது (Being Selfish)

குடும்பத்துக்குள் சண்டை வருவது இயல்பு. சண்டைக்குப் பிறகு யார் முதலில் பேசுவது என காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும் இரவு தூங்கப்போவதற்குள் முடிவுக்கு வந்துவிட வேண்டும். இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தாலே போதும்; மற்றவர் தானாக சமாதானம் ஆகிவிடுவார். ‘அடச்சே… இதுக்கா சண்டை போட்டோம்!’ என மறுநாள் உங்களுக்கே தோன்றலாம். அதேபோல குழந்தைகளிடமும் சில விஷயங்களில் பெரியவர்கள் விட்டுக்கொடுத்தே ஆக வேண்டும். ’அவன் என்ன சின்ன குழந்தைதானே… நான் சொன்னால் கேட்க மாட்டானா?’ என்ற எண்ணம் வரவே கூடாது. விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போக மாட்டான் என பெரியவர்கள் சொன்னதில் எவ்வளவு உண்மை அடங்கியிருக்கிறது.

10. சோசியல் மீடியா (Social Media)

இன்று பல குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைக்கும் விரிசலுக்கும் முக்கிய காரணமாக இருப்பது சோஷியல் மீடியாக்கள். பெரும்பாலானோர் அதிக நேரத்தை இங்கேதான் செலவிடுகிறார்கள். வீட்டில் இருப்பவர்களிடம் பேசுவதை விட சோஷியல் மீடியாவுக்குள் முன் பின் தெரியாதவர்களிடம் பேசுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சாப்பிடுவதற்கு, குளிப்பதற்கு, அலுவலகம் செல்வதற்கு என எல்லாவற்றும் தனித்தனியாக நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் நேரம் காலமில்லாமல் சோஷியல் மீடியா நம்மை ஆக்ரமித்துவிடுகிறது.

இதைக் கேட்டால் பிரச்னை தொடங்கிவிடுகிறது. அதேபோல் போன். உங்கள் கட்டுப்பாட்டில் போன் இருக்க வேண்டும். அதன் கட்டுப்பாட்டில் நீங்கள் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும்போது - முக்கியமாக படுக்கையறையில் - எந்தக் காரணத்துக்காகவும் போனை நோண்டிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். அது உங்கள் துணையை எரிச்சல்படுத்தும்.

இந்த பத்து காரணங்களை திரும்ப ஒருமுறை படியுங்கள். நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள் என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதை சரி செய்யுங்கள். வாழ்க்கை வரமாகும்!

Thursday, August 11, 2016

இவரும் மனுஷன்தானா...? Read more at: http://tamil.oneindia.com/news/india/this-man-steals-the-mobile-from-dying-man-260032.html

டெல்லி: டெல்லியில் நேற்று காலை ஒரு விபத்து. 40 வயதான மதிபூல் என்பவர் விபத்தில் சிக்கி அடிபட்டு சாலையில் கிடந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக அவர் விழுந்து கிடந்தும், ரத்தம் கொட்டியும் கூட யாரும் அவரை மீட்க முன்வரவில்லை. அவரவர் வேலையைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தனர்.

 ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் நின்றார். பரவாயில்லையே ஒருவராவது மீட்க வந்தாரே என்று பார்த்தால் அவர் செய்த காரியம்.. சீ.. இவரும் மனிதனா என்று சொல்ல வைத்து விட்டது. விழுந்து கிடந்த மதிபூலுக்கு அருகே கிடந்த அவரது செல்போனை மட்டும் பத்திரமாக எடுத்துக் கொண்டு அந்த நபர் போய் விட்டார். இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி மூலம் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. மேற்கு டெல்லியில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில்தான் இந்த விபத்து நடந்தது. மதிபூல் ஒரு இ ரிக்ஷா டிரைவர் ஆவார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் போலீஸார் "விரைந்து" வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

ஆனால் அவர் இறந்து நெடு நேரமாகி விட்டது என்று டாக்டர்கள் கூறி விட்டனர். நான்கு குழந்தைகளுக்குத் தந்தை மதிபூல். தனது குடும்பத்தைக் காக்க பல வேலைகளைச் செய்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அவர் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஏதோ ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டுச் சென்று விட்டது. தூக்கி எறியப்பட்ட மதிபூல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் விழுந்து கிடந்ததை அந்தப் பக்கமாக சென்ற பலரும் பார்த்துள்ளனர்.

 ஆனால் யாரும் அருகே கூட நெருங்க வரவில்லை. வந்த ஒரே நபரும் அவரது செல்போனை மட்டும் திருடி விட்டுச் சென்ற செயல்தான் அனைவரையும் அதிர வைத்துள்ளது. போலீஸார் நீண்ட தாமதத்திற்குப் பிறகே வந்தனர். ஆனால் அதற்குள் மதிபூலின் உயிர் போய் விட்டது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மதிபூல். பகலில் இ ரிக்ஷா ஓட்டியும், இரவில் வாட்ச்மேன் வேலை பார்த்தும் சம்பாதித்து வந்தார். தற்போது மதிபூல் மீது வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கிய வேன் டிரைவர் மற்றும் மதிபூலின் செல்போனை திருடிய நபர் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/this-man-steals-the-mobile-from-dying-man-260032.html

ககோரிக்கும் சென்னைக்கும் 91 ஆண்டுகால 'பந்தம்'

ஆக.9-ல் அன்றும் இன்றும்: ரயில் கொள்ளையில் ககோரிக்கும் சென்னைக்கும் 91 ஆண்டுகால 'பந்தம்'


தலைப்புச் செய்தியாகி இருக்கிறது கடந்த 9-ம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த ரயில் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடியே 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.

இதுபோல் ஒரு ரயில் கொள்ளை 91 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்துள்ளது. அதுவும் ஆகஸ்ட் 9-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடந்திருக்கிறது. இந்திய வரலாற்று நிகழ்வுகளில் முக்கியமானது அது. 'ககோரி சதி' அப்படித்தான் அந்த நிகழ்வு இந்திய வரலாற்றுப் பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ககோரி எனும் இடத்தில் அந்தக் கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதால் அந்தப் பெயர் வந்தது. பின்னாளில் ககோரி புரட்சி என பெயர் வழங்கப்பட்டது.

கொள்ளை அரங்கேற்றப்பட்டது எப்படி?

1925 ஆகஸ்ட் 9 உத்தரப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் இருந்து லக்னோ நகருக்கு ஒரு பயணிகள் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் பிரிட்டிஷ் கருவூலத்தின் பணம் அடங்கிய பெட்டியும் இருந்தது. அந்தப் பெட்டியில் ரூ.8000 இருந்தது. அதை எப்படியாவது கொள்ளையடித்துவிட வேண்டும் என்பதுதான் திட்டம். இந்துஸ்தான் புரட்சிகர கூட்டமைப்பின் (Hindustan Republican Association) உறுப்பினர்களில் சிலரே அந்தத் திட்டத்தை தீட்டினர். அஸ்பக்குல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மி, சந்திரசேகர ஆசாத் ஆகிய மூன்று இளைஞர்களும் அந்த சதித் திட்டத்தை தீட்டினர்.

அதன்படி பணப் பெட்டியுடன் சென்ற அந்த ரயிலில் ஏறிய புரட்சிப் படையினர் துப்பாக்கி முனையில் ரயில் ஓட்டுநரையும் கார்டையும் சிறைப்பிடித்தனர். ரயிலில் இருந்து ரூ.8000-த்துடனான பணப் பெட்டியையும் மிக நேர்த்தியாக கொள்ளையடித்துச் சென்றனர்.

ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சேலம் - சென்னை ரயில் கொள்ளை சம்பவத்தை ககோரி கொள்ளை சம்பவத்தோடு தொடர்புபடுத்தி நிலைத்தகவல்கள் பதியப்படுவதால் ககோரி புரட்சியை நினைவுகூர்வது அவசியமாகிறது.

ஆனால் இரண்டு கொள்ளை சம்பவங்களின் நோக்கமும் நிச்சயமாக வெவ்வேறு.

தமிழில்: பாரதி ஆனந்த்

புதுக்கோட்டை அருகே காரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 26 ஆண்டுகளாக பணிபுரியும் மருத்துவர்



புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 26 ஆண்டுகளாக பணிபுரியும் மருத்துவர் இம்மாதம் ஓய்வு பெறுகிறார்.

கிராமப்புற அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிவோரின் உயர் கல்விக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுமென மத்திய சுகாதாரத் துறை அறிவித் திருந்தும்கூட பலர் கிராமப் புறங் களில் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதில்லை. இதனால் கிராமப் புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்து வர்களின் காலிப் பணியிடங்கள் அதிகமாகவே உள்ளன.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டி.நவரத்தினசாமி கூறியது:

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் தஞ்சாவூர் அரசு மருத் துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டு கடந்த 1990-ல் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தது முதல் அங்கேயே பணிபுரிந்து வருகிறேன். வேறெந்த மருத்துவமனைக்கும் செல்வில்லை.

பள்ளியில் படிக்கும்போதே மருத்துவராக வேண்டும். ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம் என்பதால் நகர் பகுதிக்கு செல்லவில்லை.

இந்தப் பகுதியில் தொடர்ந்து சேவை செய்துவருவதால் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

தொடக்கத்தில் இங்கு, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் 2 மட்டுமே இருந்தன. அதேபோல, பரிசோதனை கருவிகள் அவ்வளவாக இல்லை. ஆனால், தற்போது 250-க்கும் மேற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் கிடைக்கின்றன.

அதே போல, ஏராளமான பரிசோதனை கருவிகளும் வந்து விட்டன. மருத்துவத் துறையில் வசதிகள் குறைந்த காலத்தி லும், வசதிகள் பெருகிய காலத்திலும் பணியாற்றியதால் ஏராளமான மாற்றங்களை உணர முடிந்துள்ளது.

தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றியதால் தொடர் சிகிச்சையின் மூலம் பலர் குணமடைந்துள்ளனர். மருத்துவருக்கும், மக்களுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.

நோயாளிகள் மருத்துவர் களையும், மருத்துவர்கள் நோயா ளிகளையும் அனுசரித்துச் சென்றால் மட்டுமே மருத்துவ சேவை திருப்திகரமாக இருக்கும். இளம் மருத்துவர்கள் கிராமப்புற மக்களுக்காகச் சேவையாற்ற வேண்டும் என்றார்.

இம்மாத இறுதியில் இம் மருத்துவர் ஓய்வு பெற்றுச் செல்வது இப்பகுதியினருக்கு இழப்புதான் என்கின்றனர் காரையூர் பகுதி மக்கள்.

ஆங்கிலம் அறிவோமே - 122: சிகரத்துக்கு நேரெதிர்...

Return to frontpage

ஒரு திரைப்பட விமர்சனத்தில் Nadir of mediocrity என்று கூறப்பட்டிருந்ததாகக் கூறி இதை விளக்குங்களேன் என்கிறார் ஒரு நண்பர்.

சிகரம் நமக்குத் தெரியும். Peak, zenith. அதற்கு நேரெதிர் nadir. ஒரு சூழலைக் குறித்துக்கூட இப்படிப் பயன்படுத்துவார்கள். “Asking that question was the nadir of my career” என்றால் “அந்தக் கேள்வியால் எனது வேலை அம்பேல்” என்று அர்த்தம்.

அரபு மொழியில் nasir என்றால் நேரெதிர் என்று அர்த்தம். அதாவது உச்சத்துக்கு நேரெதிர். அதிலிருந்து வந்தது nadir.

அடுத்ததாக mediocrity-க்கு வருவோம். (இதை மிடியாக்ரிட்டி என்று உச்சரிப்போம்).

Mediocre ஆக இருக்கும் நிலைதான் mediocrity என்று சொன்னால் உங்களுக்கு வரக்கூடிய கோபம் நியாயம்தான். பின் என்ன, mediocre என்பதை விளக்க வேண்டாமா? சராசரியாக இருப்பது. அதாவது சிறப்பாக இல்லாதது என்று இதற்கு அர்த்தம்.

படம் சுமார் என்பதை இரண்டு அர்த்தத்தில் கொள்ளலாம். பரவாயில்லை என்பது ஒரு ரகம். மோசம் என்பதைவிடக் கொஞ்சூண்டு அதிகம் என்பது இன்னொரு ரகம். இந்த இரண்டாவது ரகம்தான் Nadir of mediocrity.

Dynamic verb என்கிறார்களே அப்படியென்றால் என்ன?

Dynamic என்றால் உற்சாகமான, இயங்குகிற என்று பொருள். ஒரு verb செயல்பாட்டைக் குறித்தால் அது dynamic verb. He ran five miles. They walked eight kilometers. He killed them with arrows. இவற்றிலுள்ள ran, walked, killed ஆகியவை dynamic verbs.

இப்போது இன்னொரு வாக்கியத்தைப் பார்க்கலாம். We believe that you are the best என்பதில் believe என்பது verbதான். ஆனால் இது ஒரு நிலையைக் குறிக்கிறதே தவிர செயலை அல்ல. இதுபோன்ற verbகளை stative verbs என்பார்கள்.

வண்ணங்கள் தொடர்பான சில வார்த்தைகளை சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தோம். இதைக் கவனித்த ஒரு நண்பருக்கு Black humour பற்றி அறிந்துகொள்ள ஆவல்.

Black humour என்பதை Black comedy என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். மிகவும் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வை வேறு கோணத்தில் அணுகி மனதை லேசாக்க முயற்சி செய்யும் விஷயம் இது. ஆனால் இந்தக் காரணத்தினாலேயே இந்த வகை நகைச்சுவைக்கு எதிர்ப்புகளும் எழுவதுண்டு. (அதெப்படி அவ்வளவு சீரியஸான விஷயத்தை நகைச்சுவையாக்கலாம்?). சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போமா?

“I said glass of juice. Not gas the jews” என்று ஹிட்லர் கூறுவதாக ஒரு நகைச்சுவை!

மனைவியின் கல்லறைக்குப் பக்கத்தில் அமர்ந்தவாறு, அந்தக் கல்லறையை விசிறியால் வீசிக்கொண்டிருந்தார் அவரது கணவர். நெகிழ்ச்சியுடன் ஒருவர் காரணம் கேட்க, “தன் கல்லறையின் ஈரம் காய்ந்த பிறகுதான் நான் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென என்னுடைய மனைவி என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்தார்” என்றாராம்.

ஜான், டேவிட் ஆகிய இருவரும் மனநல மருத்துவ நோயாளிகள். ஒரு நாள் நீச்சல் குளத்தில் குதித்துவிட்டார் ஜான். டேவிடும் உடனே அந்தக் குளத்தில் குதித்து ஜானைக் காப்பாற்றினார். இவ்வளவு வீரதீரச் செயல் புரிந்தவர் எப்படி மனநோயாளியாக இருக்க முடியும்? டேவிடை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்தார் டாக்டர். “டேவிட் உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. நீ முழுவதும் குணமாகிவிட்டதால் உன்னை டிஸ்சார்ஜ் செய்யப்போகிறேன் என்பது நல்ல செய்தி. நீ கஷ்டப்பட்டுக் காப்பாற்றிய ஜான் குளியல் அறையில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துவிட்டார் என்பது கெட்ட செய்தி” என்றார். அதற்கு டேவிட் இப்படிக் கூறினார். “அவன் தூக்கு மாட்டிக்கொள்ளவில்லை. நான்தான் முழுவதும் நனைந்த அவன் உலர வேண்டும் என்பதற்காகத் தொங்க விட்டிருக்கிறேன்”.



Black humour!

The car purred down the street என்பதில் purred என்பதன் அர்த்தம் என்ன?

பூனை எழுப்பும் மிருதுவான ஒலியை purr என்பார்கள். ஒரு இயக்கதினால் உருவாகும் இதமான ஒலியையும் purr என்பார்கள்.

The car purred down the street என்பது மறைமுகமாக அந்த கார் புதியது, விலை உயர்ந்தது என்பதைக் குறிக்கிறது.

ஒலியை உணர்த்தும் verb அந்த nounனின் தன்மையையும் வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு.

The car rattled down the street என்றால் அந்த கார் மிகப் பழையது என்பதைக் குறிக்கிறது (லொட லொட என்ற சப்தம்).

The car whispered down the street என்றால் அந்த கார் விலை உயர்ந்தது என்று அர்த்தம். ஒருவேளை சீருடை அணிந்த ஓட்டுநர்கூட அதற்கு இருக்கலாம்.

நாவல்களில் காரின் ஒலியையும் அது உயிர் பெறுவதையும் குறிக்கப் பலவித வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் சில

Cranked, Coughed, Hummed, Stuttered, Whined, Buzzed, Rumbled, Grumbled, Growled, Snarled, Zoomed, Vroomed, Screamed, Roared, Thundered, Exploded

OF - OFF

Of off இரண்டும் சந்தேகமில்லாமல் வெவ்வேறு அர்த்தம் கொண்டவைதான்.

Of என்பது preposition. இதற்குப் பொருள் இதிலிருந்து வந்த, இதற்குச் சொந்தமான என்று சொல்லலாம்.

He is the father of Adarsh.

Come out of your sorrow.

Off என்பது adverb. On என்பதற்கான எதிர்ப்பதம். Switch-களை நினைத்தால் அர்த்தம் விளங்கிவிடும். கொஞ்சம் அழுத்தத்தைக் கொடுக்கும் வார்த்தையாகவும் off பயன்படுத்தப்படுகிறது. Push off, clear off, move off.

# சிப்ஸ்

Captain என்பதன் பெண்பால் என்ன?

Captainதான். Friend, Lawyer, Lecturer போன்ற சில வார்த்தைகள் இருபாலருக்கும் பொதுவானவை.

# I ain’t bothered என்றால்?

I am not bothered.

# Britain என்பதற்கும் Briton என்பதற்கும் என்ன வேறுபாடு?

Britain என்பது நாடு. Briton என்பது அந்த நாட்டில் வசிப்பவர்.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

ஆ'வலை' வீசுவோம் 25 - வியத்தகு வோல்பிராம் ஆல்பா தேடியந்திரம்!



தேடல் முடிவுகளை பட்டியலிடாமல் தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் அலசி ஆராய்ந்து புதுமையான முறையில் முன்வைத்து வியப்பில் ஆழ்த்தும் தேடியந்திரம் இது. |

உங்கள் தேடல் அனுபவத்தை மாற்றிக்கொள்ள விருப்பமா? எனில், மாறுபட்ட தேடியந்திரமான வோல்பிராம் ஆல்பாவை பயன்படுத்திப் பாருங்கள்.

வோல்பிராம் ஆல்பா புதிய தேடியந்திரம் அல்ல; ஆனால், புதுமையான தேடியந்திரம். கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமான வேல்பிராம் ஆல்பா தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து தன்னை மேலும் ஆழமாக்கி கொண்டுள்ளது. வெகுஜன தேடியந்திர அந்தஸ்து பெறாவிட்டாலும் மற்ற தேடியந்திரங்களால் முடியாத எண்ணற்ற விஷயங்களை செய்யக்கூடிய சிறப்பு தேடியந்திரமாக இருக்கிறது. ஆனால் ஒன்று... இந்த தேடியந்திரத்திற்கு நீங்கள் முதலில் பழக வேண்டும். ஏனெனில், வோல்பிராம் ஆல்பா வழக்கமான தேடியந்திரம் அல்ல; இது முற்றிலும் மாறுபட்ட தேடியந்திரம்.

கணக்கிடும் அறிவு இயந்திரம் (கம்ப்யூடஷேனல் நாலெட்ஜ் இஞ்சின்) என்றே வோல்பிராம் ஆல்பா அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. இந்த அறிமுகமே பலரை மிரட்சியில் ஆழ்த்தக்கூடும். இந்த தேடியந்திரத்தை முதன் முதலில் பயன்படுத்தும் போதும் மிரட்சியே ஏற்படலாம்.

இதன் முகப்பு பக்கம் எளிமையாகவே இருக்கிறது. அதில் வழக்கமான தேடல் கட்டத்தையும் பார்க்கலாம். ஆனால் மற்ற தேடியந்திரங்களுக்கும், வோல்பிராம் ஆல்பாவிற்குமான பொதுத்தன்மை தேடல் கட்டத்தின் தோற்றத்துடன் முடிந்து விடுகிறது.

உங்கள் குறிச்சொற்களை எல்லாம் கொண்ட வராதீர்கள் என்று சொல்வது போல, வோல்பிராம் ஆல்பா, நீங்கள் எதைக் கணக்கிட அல்லது அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என முகப்புப் பக்கத்தில் கேட்கிறது. அதாவது, குறிச்சொல்லை தட்டச்சு தேடுவதற்கு பதில் எதைப் பற்றி அறிய விரும்புகிறீர்களோ அதைக் கேள்வியாக கேட்கலாம். அல்லது, எதையேனும் கணக்கிடுவதற்கான கேள்வியை கேட்கலாம்.

ஆம், வோல்பிராம் ஆல்பா கேடக்கப்படும் கேள்வியின் தன்மையை புரிந்துகொண்டு அதற்கேற்ற பதிலை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், வோல்பிராம் ஆல்பா கேள்வி - பதில் தேடியந்திரம் மட்டும் அல்ல; கேள்விகளுக்கு அது பதில் அளிக்க முற்படுகிறது. ஆனால் அதற்கு மேல் எண்ணற்ற விஷயங்களையும் செய்கிறது.

கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தேடியந்திரம் இணையத்திற்கு புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆஸ்க் (ஜீவ்ஸ்) தேடியந்திரம் இதைச் செய்ய முயன்றது. அதன்பிறகு வேறு தேடியந்திரங்களும் இந்த நோக்கத்துடன் அறிமுகமாயின. ஆனால் கேள்விகளுக்கு பதில் அளிக்க கம்ப்யூட்டர் சார்ந்த நிரல்களை நம்புவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. மனித மனம் எளிதாக புரிந்துகொள்ளும் சாதாரண கேள்வியை கம்ப்யூட்டர் புரிந்துகொண்டு சரியான பதில் சொல்ல வைப்பது பெரும் சவாலானது. சில நேரங்களின் கேள்வியின் தன்மையை கிரகித்துக்கொண்டு பொருத்தமான பதிலை அளித்தாலும் பல நேரங்களில் கேட்கப்படும் கேள்விக்கு பொருந்தாத பதிலை அளித்து வெறுப்பேற்றப்படும் அனுபவத்தை ஆஸ்க் உள்ளிட்ட கேள்வி பதில் இயந்திரங்கள் அளித்தன.

வரிகளையும் வாசகங்களையும் மனிதர்கள் புரிந்துகொள்ளும் விதத்திலேயே கம்ப்யூட்டர் நிரல்கள் புரிந்துகொள்வது என்பது தொழில்நுட்ப உலகின் பெருங்கனவாக நீடிக்கிறது. எனவே, கேள்விக்கு பதில் அளிப்பதாக எந்தத் தேடியந்திரமும் மார்தட்டிக்கொள்வதில்லை.

இந்தப் பின்னணியில்தான், வோல்பிராம் ஆல்பாவின் செயல்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன் வோல்பிராம் ஆல்பாவின் அடிப்படையான வேறுபாட்டை தெரிந்துகொள்ள வேண்டும்.

கூகுள் உள்ளிட்ட மற்ற தேடியந்திரங்கள் போல குறிச்சொல்லுக்கு ஏற்ப தேடல் முடிவுகளை பட்டியலிட்டு தருவதில்லை. ஏனெனில் இது இணையத்தில் தேடுவதில்லை. எனவே, இது இணையதளங்கள், இணையப் பக்கங்களை கொண்ட பட்டியலை முன்வைப்பதில்லை. மாறாக, தான் திரட்டி வைத்திருக்கும் தகவலை அலசி ஆராய்ந்து கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் விஷயங்களை புரிந்து கொள்வதற்கான புதிய வழியை முன்வைக்கிறது.

கூகுள் போன்ற தேடியந்திரங்களின் செயல்பாட்டை எளிதாக விளக்கி விடலாம். அவை இணையத்தில் வலைவீசி அதில் உள்ள இணையதளங்களை எல்லாம் அட்டவனையாக்கி வைத்திருக்கின்றன. இணையவாசிகள் குறிச்சொல் கொண்டு தேடும்போது அந்த குறிச்சொற்களை கொண்ட இணைய பக்கங்களை எல்லாம் கொண்டுவந்து கொட்டுகின்றன. குறிச்சொற்களை எடை போட்டு அதன் பொருத்தமான தன்மையை புத்திசாலித்தனமாக அளவிடுவதற்கான பிரத்யேக வழியை கூகுள் உருவாக்கி வைத்திருப்பதால் அதன் தேடல் பட்டியல் சிறந்ததாக கருதப்படுகிறது.

வோல்பிராம் ஆல்பா இதைவிட சிக்கலான செயல்முறையை கொண்டிருக்கிறது. எல்லா வகையான தகவல்களையும் திரட்டி வைத்துக்கொண்டு, அவற்றை புரிந்துகொள்ள பயன்படும் எல்லா வகையான மாதிரிகளையும், முறைகளையும், நிரல்களையும் துணையாக கொண்டு எதைப் பற்றியும் என்ன எல்லாம் சாத்தியமோ அதை எல்லாம் கணக்கிட்டு புரிந்துகொள்ளும் வகையில் அளிப்பதே வோல்பிராம் ஆல்பாவின் நோக்கமாக இருக்கிறது.

இதன் பின்னே சிக்கலான கணிதவியல் சமன்பாடுகளும், சிக்கலான நிரல்களும் இருக்கின்றன. இவற்றைக்கொண்டு டன் கணக்கிலான தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களை அலசி பதில்களாக அளிக்கிறது.

சாமானியர்கள் வோல்பிராம் ஆல்பா பின்னே இருக்கும் தேடல் நுட்பத்தை புரிந்துகொள்வது சிக்கலானது. ஆனால் அதில் தேடிப்பார்க்கும் போது, இந்த நுட்பத்தின் பரிமாணத்தை பார்த்து வியக்கலாம். உதாரணத்திற்கு, இதில் ஐசஜ் நியூட்டன் பெயரை தட்டச்சு செய்து பார்த்தால் முன்வைக்கப்படும் தேடல் பக்கம் நியூட்டன் சார்ந்த முக்கிய அமசங்களை திரட்டி தொகுத்து அளிக்கிறது. முதலில் நியூட்டன் என்பதை பெளதீக விஞ்ஞானியாக புரிந்துகொள்வதாக தெரிவிக்கிறது. (நீங்கள் எதிர்பார்ப்பது வேறு நியூட்டன் என்றால் அதனடைப்படையிலும் தேடலாம்).

இந்த அறிமுகத்தின் கீழ் நியூட்டன் பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட அடிப்படையான தகவல்கள் இடம்பெறுகிறது. அதன் கீழ் நியூட்டன் வாழ்க்கையின் கால வரிசை வரைபடம் மற்றும் அவரைப்பற்றிய முக்கிய விவரங்கள் இடம்பெறுகின்றன. நியூட்டனின் உடல் வாகு தொடர்பான தகவல்கள், பூர்வீகம், உறவினர்கள் ஆகிய விவரங்களுடன் கணிதம் ,பெளதீகம் உள்ளிட்ட துறைகளில் அவரது சாதனைகளும் பட்டியலிடப்படுகின்றன. நியூட்டன் பற்றிய விக்கிபீடியா விவரம் கடையில் வருகிறது. இந்த விவரங்கள் ஒவ்வொன்றையும் மேற்கொண்டு விரிவாக்கி அணுகும் வசதியும் இருக்கிறது. வழக்கமாக பார்க்க கூடிய நியூட்டன் பெயரிலான இணைதளங்கள், இணைய பக்கங்கள், கட்டுரைகள் போன்ற எதுவுமே கிடையாது. ஆனால் நியூட்டன் பற்றி கச்சிதமாக அறிந்துகொள்ள இந்த பக்கம் வழி செய்கிறது.

இது ஒரு உதாரணம்தான். நம்மூர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரஜினி காந்த் துவங்கி பலரைப் பற்றிய தகவல்களை இப்படி மாறுபட்ட வகையில் தருகிறது. அதே போல இந்தியா என்று தேடினால் நம் தேசம் பற்றி அடிப்படையான தகவல்களை பல பிரிவுகளில் தொகுத்து அளிக்கிறது. தமிழ் மொழி என தேடினாலும் இதே போல நம் மொழி குறித்த விரிவான புரிதலை ஏற்படுத்த முயல்கிறது. வரைபடங்கள் போன்றவை பொருந்தக்கூடிய தேடல்களில் தான் இதன் உண்மையான பரிமாணத்தை பார்க்க முடியும். கணிதம், பெளதீகம் சார்ந்த தேடல்களில் இதை உணரலாம். குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை தேடும் போது இது அளிக்கும் விரிவான தகவல் சித்திரம் மூலமான பதில் மலைக்க வைக்கும்.

கூகுளின் எளிமைக்கு பழகிய இணைய மனதிற்கு இந்த தேடியந்திரம் முதலில் குழப்பத்தை அளிக்கலாம். ஆனால் இதை பயன்படுத்த துவங்கும் போது பிரம்மிப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக வழக்கமான தேடலில் இருந்து விலகிய தேடலுக்கு பயன்படுத்தும் போது இதன் செழுமையான தேடல் அனுபவம் லயிக்க வைக்கும்.

மற்ற தேடியந்திரங்களில் செய்ய முடியாதது, ஆனால் வோல்பிராம் ஆல்பாவில் சாத்தியமாகக் கூடிய விஷயங்கள் என்பதற்கும் நீளமான பட்டியலும் இருக்கிறது. இரண்டு இடங்களுக்கு இடையிலான தொலைவை கடக்க ஆகும் நேரத்தை கணக்கிடலாம், உறவு முறையை பரம்பரை வரைபடமாக்கி புரிந்து கொள்ளலாம், எந்த இணையதளம் பிரபலமாக இருக்கிறது என ஒப்பிட்டுப்பார்க்கலாம் என பலவகையான பிரத்யேக வசதிகளை இது அளிக்கிறது. கணிதவியல் சமன்பாடுகளுக்கான விடை காணும் வசதியும் இருக்கிறது.

தேடல் கட்டத்தின் கீழே இந்த வசதிகள் எல்லாம் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் வோல்பிராம் உருவாக்கிய வோல்பிராம் ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில் இந்த தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுக்கான செயலி வடிவம் என பல விதங்களில் விரிவாக்கம் பெற்றுள்ளது.

தேடியந்திர முகவரி > https://www.wolframalpha.com/

- சைபர்சிம்மன், தொழில்நுட்ப எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

Wednesday, August 10, 2016

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரை கொலையாளி போல நடிக்க வைத்து வீடியோ எடுக்க தடை கோரி மனு: தேதி குறிப்பிடாமல் உத்தரவு தள்ளி வைப்பு


சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள ராம்குமாரை கொலையாளி போல நடிக்க வைத்து வீடியோ பதிவு செய்ய தடை கோரி உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான உத்தரவை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் கைதான இளைஞர் ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். ஏற்கெனவே 3 நாள் போலீ்ஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட ராம்குமாரை, சம்பவம் நடந்தபோது கைப்பற்றப்பட்ட முந்தைய வீடியோ ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக மீண்டும் அதேபோன்று வீடியோ பதிவு செய்ய அனுமதி கோரி போலீஸ் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் ஆகஸ்டு 8-ம் தேதி (நேற்று) வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கியது.

இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது.

அப்போது ராம்குமார் தரப்பு வழக்கறிஞர், ‘‘ராம்குமாரிடம் ஏற்கெனவே 3 நாட்கள் போலீஸார் போதுமான அளவுக்கு விசாரணை நடத்திவிட்டனர். தற்போது அந்த 3 நாளில் போலீஸார் ஜோடித்த ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே, மீண்டும் அவரை கொலையாளி போல நடிக்க வைத்து வீடியோ பதிவு செய்ய வேண்டும் என போலீஸார் அனுமதி கோருகின்றனர். அதற்கு எழும்பூர் நீதிமன்றமும் அனுமதித்துள்ளது. இது சட்டவிரோதமானது. அதுவும் தற்போது சிறைக்குள் வைத்தே வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனக் கோருவதால் சுவாதி கொலையில் எல்லா பழியையும் ராம்குமார் மீது சுமத்த திட்டமிட்டுள்ளனர்’’ என்றார். அரசு தரப்பில், இந்த வீடியோ பதிவு, வழக்குக்கு தேவை யான ஒன்றுதான் என வாதிடப் பட்டது.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

இறந்து போன பெண்ணின் கல்விச்சான்றிதழ்களை கொண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு

இறந்துபோன பெண்ணின் கல்விச்சான்றிதழைக் கொண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற பெண்ணுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த மோசடி வழக்கை போர்க்கால அடிப்படையில் விரைவாக விசாரிக்கவேண்டும் என்றும் குரோம்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாமனார் புகார்

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் அர்ச்சனா என்ற தமிழரசி. இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார். விவாகரத்து தொடர்பான வழக்கும் தாம்பரம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், அர்ச்சனாவின் மாமனார் குரோம்பேட்டை போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘தன் மருமகள், தமிழரசி என்ற எஸ்.சி. சமுதாயத்தை சேர்ந்த பெண்ணின் கல்விச்சான்றிதழ்களை கொடுத்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றுள்ளதாக‘ கூறியிருந்தார்.

இதையடுத்து அர்ச்சனா மீது குரோம்பேட்டை போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அர்ச்சனா மனு தாக்கல் செய்தார்.

கிராம நிர்வாக அதிகாரி

இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, தன் மருமகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று மனுதாரரின் மாமனார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது, அர்ச்சனாவின் தந்தை ராமசந்திரன் கிராம நிர்வாக அதிகாரியாக பணி செய்கிறார். இவரிடம் துலுக்கானம் என்பவர் இறந்துபோன தன் மகள் தமிழரசியின் பெயரில் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இறப்பு சான்றிதழ் கொடுக்க மறுத்த ராமசந்திரன், இறந்துபோன தமிழரசியின் உண்மை கல்விச்சான்றிதழ் கேட்டுள்ளார். அந்த சான்றிதழை துலுக்கானம் கொடுத்ததும், அந்த உண்மை சான்றிதழ்களை கொண்டு, ஆள்மாறாட்டம் செய்து, தன் மகளை மருத்துவ படிப்பில் சேர்த்துள்ளார். அதனால், இந்த வழக்கில் அர்ச்சனாவின் தந்தையை போலீசார் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர் என்ற விவரம் தெரிய வருகின்றன.

இடைநீக்கம்

ஆனால், மனுதாரர் தரப்பு வக்கீல், ‘மருத்துவ படிப்பில் சேரும்போது மனுதாரர் மைனர் பெண். அவர் தந்தைதான் தவறு செய்துள்ளார். அதற்கு மனுதாரர் பொறுப்பாக மாட்டார். வேண்டுமானால் மனுதாரரின் தந்தையை இந்த வழக்கில் போலீசார் கைது செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று வாதிட்டார்.

ஆனால், அர்ச்சனா என்ற பெயரிலும், தமிழரசி என்ற பெயரிலும் இரண்டு மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமங்களை மனுதாரர் பெற்றுள்ளார். தற்போது ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதுசம்பந்தமாக வந்த புகாரின் அடிப்படையில், மனுதாரரை டாக்டர் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

விரைவான விசாரணை

தற்போது, மனுதாரர் அர்ச்சனா, தமிழரசி என்ற பெயரில் போட்ட முகத்திரை துண்டு துண்டாக கிழிந்துவிட்டது. இந்த மோசடி வழக்கில், மனுதாரரை காவலில் வைத்து போலீசார் விசாரித்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும். எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் கொடுக்க முடியாது. மனுதாரர் மீதான குற்றச்சாட்டு சமூகத்தில் மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால், இந்த வழக்கை போர்க்கால அடிப்படையில் குரோம்பேட்டை இன்ஸ்பெக்டர் விரைவாக விசாரிக்கவேண்டும். இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவில் கூறியுள்ளார்.

15k graduates, post-graduates vie for sweepers’ jobs in Agra civic body

TIMES OF INDIA
Agra: As many as 15,000, including graduates, post-graduates and BEd degree holders have applied for posts of 'safai karmachari' (sweeper) on contractual basis in Agra Municipal Corporation.
On August 1, the civic authority issued a notification for filling up 1,778 posts in class IV category. AMC specified that only a literate candidate could apply for the post, but officials have received an overwhelming response from candidates who are very highly qualified, considering the job.

Manoj Prabhat, executive engineer, who is coordinating the hiring process said, "Nearly 30% of applicants applied for posts of contractual sweepers are graduates, post-graduates and BEd degress holders. Wednesday is the last day for the submission of forms. We expect that the percentage of very highly qualified applicants will rise."

Ram Singh Gautam, deputy commissioner of AMC said, "Till now we have received nearly 50,000 applications for the post of sweepers. We expect to receive 30,000 more. When it comes to government jobs, we understand that the youth look for what they consider a safe career, but it is astonishing to see graduates and post-graduates applying for class IV category posts at salaries of nearly Rs 17,000 per month each."
On Monday, a report stated that Kanpur Municipal Corporation received nearly 5 lakh applications for 3,275 posts of 'safai karmachari'. A similar case was reported in January when around 17,000 youths applied for 114 posts of sweepers in Uttar Pradesh's Amroha district. In Bhatinda district of Punjab, as many as 8,500 applications were received for 19 class IV posts. The applicants included MBAs and MCAs.

Government may soon rate medical colleges to guide students

NEW DELHI: The central government plans to unveil a rating system for medical institutions to help students make an informed choice. The system will also serve as a warning for poorly rated institutes to improve standards.
It is also aimed at ending the `inspector raj' that flourished in the medical education sector under the Medical Council of India (MCI).

"The task of periodic rating would be assigned to the proposed National Medical Commission, which will replace the MCI," said an official. The existing inspection regime, the official added, was focused on inputs, with a greater emphasis on infrastructural issues than teaching quality and learning outcomes.
As part of the new system, medical institutions will also have to place all relevant information in the public domain via the electronic medium.

The plan is among a slew of reforms in the medical education sector suggested by a high-powered committee headed by Niti Aayog vice-chairman Arvind Panagariya.

The panel has also suggested separate, common entrance examinations (all-India National Eligibility cum Entrance Test or NEET) for admission to undergraduate and postgraduate courses. The exams must be given "statutory" backing to ensure a transparent admission process based on merit rather than the ability to pay capitation fee, said an official. After completing an undergraduate course, medical professionals will have to appear for a common licentiate examination. The Centre may also prescribe skill tests as part of the exam, which will have statutory backing.

Passing the common licentiate examination will be mandatory for licensees to practise and for registration with the Indian Medical Register.

The committee was not in favour of creating a statutory provision for a common licentiate examination for PG and super-speciality courses. The PG medical education board, which will replace National Board of Examination (NBE), could continue to conduct a voluntary exam with institutions and candidates who are willing to take part.

The fee regulation of private colleges was one of the contentious issues dealt with by the Panagariya panel. The panel tried to address concerns about the high cost of medical education.
The committee suggested that the NMC may be empowered to fix norms for regulating fees for a proportion of seats (not exceeding 40%) in private medical colleges, while for the rest, the management may be given full freedom to charge the fee they deem appropriate.However, medical institutes have to advertise the tuition and other fees upfront on their websites with no other fee permitted. "These provisions are part of the draft National Medical Commission Bill which will replace IMC Act 1956," said an official.

Stay updated on the go with Times of India News App. Click here to download it for your device.

5,451 காலியிடங்களை நிரப்ப நவம்பர் 6-ல் குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3), வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு மட்டும் கூடுதல் தொழில்நுட்பத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை. பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 18 முதல் 32 வரை. எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து வகுப்புகளை சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு 18 முதல் 35 வரை. எனினும் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (ஆதரவற்ற விதவைகள் உட்பட) பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்திருந்தால் வயது உச்சவரம்பு கிடையாது. இத்தேர்வுக்கு செப்டம்பர் 8-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வு முறை, பாடத்திட்டம், விண்ணப்பக் கட்டணம், கட்டணச் சலுகை, தேர்வு மையம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். குரூப்-4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, August 9, 2016

'காவல் நிலையமும் ஏ.டி.எம்மும் எப்படி இயங்குகிறது?' -அசர வைக்கும் சிவகங்கை அரசுப்பள்ளி



ஓர் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் எப்படிச் செயல்பட வேண்டும்' என்பதை விளக்குகிறது பள்ளிக் கல்வித்துறையின் யூ டியூப் வீடியோ காட்சி ஒன்று. ' கள ஆய்வுகள், வாரத் திருவிழா, அதிகாரிகளுடன் கலந்துரையாடல்' என மாதிரிப் பள்ளியை அடையாளம் காட்டுகிறார்கள் அதிகாரிகள்.

தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், புதுமையான கற்றல் வீடியோக்களை யூ ட்யூப்பில் பதிவேற்றியுள்ளனர். இதில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனில், வித்தியாசமான முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஒருபுறம் என்றால், பள்ளியின் தலைமை ஆசிரியர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் விளக்குகிறார்கள். குறிப்பாக, சிவங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,320 பள்ளிகளில் இந்தப் பள்ளி மட்டுமே, கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் யூ டியூப் வீடியோ பதிவுக்காக தேர்வாகியுள்ளது. ' மாணவர்களின் பங்களிப்புடன் வகுப்பறையை சிறப்பானதாக மாற்றும் முயற்சிகள் வெற்றி பெற்றதையும்' முன்வைக்கிறார் இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம். கூடவே, தாங்கள் கற்றுத் தேர்ந்த விஷயங்களைப் பற்றியும் யூ டியூப்பில் பேசுகின்றனர் மாணவர்கள்.

தலைமை ஆசிரியர் சொக்கலிங்கத்திடம் பேசினோம்.

" மாணவர்களை நான்கு சுவர்களுக்குள் பூட்டி வைத்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன். இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் கிராமப்புறப் பின்னணியில் இருந்து படிக்க வருபவர்கள். வகுப்பறை நேரம் போக, மற்ற நேரங்களில் மாணவர்களின் எதிர்காலத்திற்கும் எது தேவையோ, அதைக் கற்றுக் கொடுப்பதில் நேரத்தைச் செலவிடுகிறோம். ஒவ்வொரு வாரமும் பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி என மாணவர்களை உற்சாகப்படுத்துகிறோம். ஒரு வாரம் வெற்றி பெற்ற மாணவர், அடுத்த வாரம் பார்வையாளனாகத்தான் அமர்ந்திருக்க வேண்டும்.

அனைத்து மாணவர்களும் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வகுப்பறைகளில் பேச்சுப் போட்டி நடந்து முடிந்ததும், தேர்வான மாணவர்கள் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் பேச வேண்டும். இதன்பின்னர் நடக்கும் மாதத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறோம். இது ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகிறது. மற்ற நேரங்களில் வங்கிகளுக்கு அழைத்துச் செல்கிறோம். கிரீன் கார்டு என்றால் என்ன? ஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி இயங்குகின்றன? ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்துவது எப்படி? வங்கி செலான்களை எப்படிப் பூர்த்தி செய்வது என வங்கி அதிகாரிகளின் துணையோடு செயல் விளக்கம் அளிக்கிறோம்.

கடந்த வாரம் தேவகோட்டை தாலுகா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். காவல்துறை மீதான பயத்தைப் போக்குவது மட்டுமல்லாமல், ஒரு காவல்நிலையம் எவ்வாறு இயங்குகிறது எனவும் உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மாணவர்களும் அவர்களிடம், ' படத்தில் காட்டுவது போல ஒரு பிஸ்டலை அழுத்தினால் ஐம்பது தடவை சுட முடியுமா' என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். தொடக்கக் கல்வியிலேயே மாணவர்கள் எதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பட்டியலிட்டு, கள ஆய்வுகளுக்கு அழைத்துச் செல்கிறோம்.

தவிர, அரசின் உயர் அதிகாரிகளை அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். அனைத்து மாணவர்களும் கேள்வி கேட்கும் வகையில் தயார்படுத்தியுள்ளோம். இதுவரை எங்கள் பள்ளிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான இறையன்பு, ராஜேந்திரன், ஆல்பி ஜான், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வந்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, களஆய்வு, மாணவர் பங்களிப்பு என அனைத்து நிலைகளிலும் மனதளவில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். எங்களின் முயற்சிக்கு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மிகுந்த உறுதுணையாக இருக்கின்றனர்" என்றார் உற்சாகமாக.

-ஆ.விஜயானந்த்

ரயிலின் மேற்கூரையை உடைத்து வங்கிப் பணம் கொள்ளை..! - அதிர்ச்சி க்ளைமாக்ஸ்

VIKATAN

சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகே இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு காலை 6.35 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்த இரவு 9 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு, அதிகாலை 4.45 மணிக்கு வந்தடைகிறது.

இந்த நிலையில், சேலத்தில் இருந்து நேற்றிரவு 9.45 மணிக்கு இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டுள்ளது. இந்த ரயிலின் பார்சல் பெட்டியில், 228 பெட்டிகளில் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.342 கோடி என்று கூறப்படுகிறது. இந்த ரயில் அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தது. பயணிகள் இறங்கிச் சென்ற பிறகு, துப்புரவு பணியாளர்கள் ரயிலில் ஏறி, ஒவ்வொரு பெட்டிகளையும் சுத்தம் செய்துள்ளனர். ஆனால், பார்சல் பெட்டியை மட்டும் அவர்கள் சுத்தம் செய்யவில்லை என்று தெரிகிறது.

இதனிடையே, நண்பகல் 12 மணி அளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரயில் பெட்டியில் இருந்த பணத்தை ஆய்வு செய்ய சென்றுள்ளனர். அப்போது, ரயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். ரயிலில் 23 டன் ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே ஐ.ஜி ராமசுப்பிரமணியன் நேரில் விசாரணை நடத்தினார்.





கொள்ளை நடந்தது எங்கே ?

சேலம் பகுதிகளில் உள்ள வங்கிகளில் 5 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. சேலம் டிஐஜி நாகராஜ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறார்கள். பார்சல் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் இவர்கள் பயணித்துள்ளனர். கொள்ளையர்கள் ரயிலின் மேற்கூரையை வெல்டிங் மிஷின் மூலம் ஒரு ஆள் செல்லும் அளவுக்கு துளை போட்டுள்ளனர். இந்த சத்தம் அடுத்த பெட்டியில் இருந்து காவல்துறையினருக்கு தெரியவில்லை. சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரயில் டீசல் என்ஜின் மூலமே இயக்கப்பட்டுள்ளது. விருத்தாசலத்தில் ரயிலை நிறுத்தி இன்ஜின் மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து ரயில் இங்கிருந்து புறப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட இடங்களில்தான் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, சேலம், விருத்தாசலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே பாதுகாப்புப்படை பாதுகாப்பு ஆணையர் அஸ்ரா தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இதில் கொள்ளையர்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சி க்ளைமாக்ஸ் ஒன்று உள்ளது. அது, 'கொள்ளையடிக்கப்பட்ட அந்தப் பணம் அனைத்தும் செல்லாதவை’ என்பதுதான்.

இருப்பினும் ரயிலின் மேற்கூரையை உடைத்து வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


-சகாயராஜ்

NEWS TODAY 25.09.2024