Sunday, December 25, 2016

‘சாணி என்றவர் சரண்டர் ஆன கதை!

vikatan.com

இதே டிசம்பர் மாதத்தில்தான் ஒரு பிரளயம் அரங்கேறியது. 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சசிகலாவையும் அவரது உறவுகளையும் கட்சியைவிட்டு கட்டம் கட்டினார் ஜெயலலிதா. அடுத்து சில நாட்களிலேயே கட்சியின் பொதுக்குழு கூடியது. சசிகலாவை விமர்சித்துப் பேசலாமா, கூடாதா? என்று குழப்பத்தில் இருந்தார்கள் நிர்வாகிகள். ‘அம்மாவின் முடிவில் மாற்றம் இருக்காது. இனி சசிகலா அவ்வளவுதான்’ என நினைத்து பொதுக்குழுவில் படபடப்போடு பேச ஆரம்பித்தார் அப்போது அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி. ஜெயலலிதா முன்பு அவர் பேசிய பேச்சு அப்போது சூட்டைக் கிளப்பியது. அப்படி என்ன பேசினார்?



“சாணத்தைப் பிடித்து அதைப் பிள்ளையாராக மாற்றுபவர் அம்மா. அதற்காகச் சாணம் தன்னையே கடவுளாக நினைத்துக்கொண்டால் எப்படி? அது வெறும் சாணம்தான் என்று புரிய வைக்க, ஒரேயடியாக அதை அம்மா வழித்துப் போட்டுவிடுவார். அம்மா அருகில் இருப்பவர்கள், ‘நாங்களும் பிள்ளையார் பிடிக்கிறோம்’ என்று முயன்றால்... அதுவும் நடக்காது. அப்படி நினைக்கிறவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். ஒன்றுக்கும் பயன்படாத பொருளாகி விடுவார்கள்’’ என்று சசிகலாவை மறைமுகமாக விளாசித்தள்ளிவிட்டார் கே.பி.முனுசாமி. பிறகு மூன்றே மாதங்களில் சசிகலா மீண்டும் கார்டனுக்குள் வந்ததால் பதவியை இழந்தார் கே.பி.முனுசாமி.

அப்போது, கே.பி.முனுசாமி உள்ளாட்சித் துறை அமைச்சர், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் என ஜெயலலிதாவுக்கு அடுத்துள்ள தலைவர்களில் ஒருவராக ஜொலித்திருந்தார். ‘‘மன்னிப்பே கிடையாது’’ என பொதுக்குழுவில் சசிகலாவை மறைமுகமாக எச்சரித்த ஜெயலலிதா, மூன்றே மாதங்களில் சசிகலாவை மன்னித்து சேர்த்துக்கொண்டார். முனுசாமியோ ஆடிப்போய்விட்டார். அதற்குப் பிறகு என்ன நடந்தது?

முனுசாமியின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். “அன்று அம்மாவின் நிலைப்பாடு சசிகலாவுக்கு எதிராக இருந்ததால் அண்ணன் அப்படி பேசிவிட்டார். தலைமைக்கு விசுவாசமாக இருந்தது ஒரு தவறா? ஆனால், சசிகலா நேரம் பார்த்துப் பழிவாங்கிவிட்டார். அதற்கு அண்ணனால் வளர்த்துவிடப்பட்ட பழனியப்பனையே பயன்படுத்திக்கொண்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததற்கு தர்மபுரியைச் சேர்ந்த பழனியப்பனின் அமைச்சர் பதவிதான் நியாயப்படி பறிபோயிருக்க வேண்டும். ஆனால், முனுசாமியை காலி செய்வதுதான் சசிகலாவின் கணக்கு. ‘அன்புமணி வன்னியர் என்பதால், அவருக்கு ஆதரவாக வன்னியரான கே.பி. முனுசாமி செயல்பட்டார். என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை’னு ஜெயலலிதா காலில் விழுந்தார் பழனியப்பன். இதை கச்சிதமாக ரூட் போட்டுக்கொடுத்தது சசிகலா தரப்பு.



பழனியப்பனுக்கு பதவி முக்கியமாச்சே... பக்காவாக அதை செய்து முடித்தார். அதற்குமேல் சொல்ல வேண்டியதை அண்ணனை எதிர்க்கும் தம்பிதுரை மூலம் சசிகலா சொல்லவைத்தார். அவ்வளவுதான்... ஒரே நாளில் அடுத்தடுத்து அண்ணனிடம் இருந்த அத்தனை பதவிகளையும் பறித்துவிட்டார்கள். செல்வாக்காக வலம் வந்தவர் டம்மியாக்கப்பட்டார். அடுத்தடுத்து அவர் மீது புகார்களை அடுக்கியபோது கடந்த சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதிக்கு அம்மா சீட் கொடுத்தார்கள். கிருஷ்ணகிரியில் வென்று கே.பி.முனுசாமி மீண்டும் பவருக்கு வந்துவிடுவார் என நினைத்த சசிகலாவும், தம்பித்துரையும் கிருஷ்ணகிரியிலிருந்து வேப்பனக்ஹள்ளிக்கு அண்ணனை மாற்றினார்கள். அங்கும் வெற்றிபெற்றுவிடுவார் என்று ரிப்போர்ட் போனது. ‘நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணியை ஜெயிக்க வெச்சாருல்ல... இப்போ சட்டமன்றத் தேர்தல்ல அன்புமணியை எதிர்த்து பென்னாகரத்தில் நிற்கச் சொல்லுவோம்’ என்று ஜெயலலிதாவிடம் சொன்னார் சசிகலா. அதன்படியே அண்ணனை பென்னாகரத்தில் நிறுத்தி திட்டமிட்டு தோற்கடிக்கச் செய்துவிட்டார்’’ என்றார்கள்.

அன்றைக்கு சாணமாக இருந்த சசிகலா இன்று சாமியாகிவிட்டார். ஆமாம், கே.பி.முனுசாமியும் இப்போது சசிகலாவிடம் சரண்டர் ஆகிவிட்டார். கே.பி.முனுசாமி அதிருப்தியில் இருக்கிறார் என்பதை அறிந்த சசிகலா, ‘இந்த சூழலில் இது நல்லதல்ல. கட்சியின் சீனியர்கள் யாரும் நமக்கு எதிராக பேசவிடக்கூடாது. அவரை வரச்சொல்லுங்கள்’ என்று கே.பி.முனுசாமிக்கு நெருக்கமான திவாகரன் மூலமாக தூது அனுப்பினார். உடனே கடந்த 20-ம் தேதி அவருக்கான அப்பாயின்ட்மென்ட் தரப்பட்டது. சசிகலாவைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ‘‘அன்றைக்கு அம்மா திடீர்னு என்னைப் பேசச் சொல்லுவாங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லம்மா. என்ன பேசுறதுனு தெரியாம அப்படி பேசிட்டேன் மன்னிச்சிடுங்
கம்மா’’ என்று சொல்லியிருக்கிறார். ‘‘உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. உங்களுக்குத் தேவையானது உங்களைத் தேடிவரும் பழையபடி உற்சாகமாக கட்சிப்பணியைப் பாருங்கள்’’ என்று சொல்லி அனுப்பினாராம்.பார்ப்போம்!

- எம்.புண்ணியமூர்த்தி

சவுகார்பேட்டையில் சிக்கிய பண சுரங்கம்... ஐ.டி.ரெய்டால் அலறும் காக்கிகள்!

vikatan.com

வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடத்திவரும் கறுப்புப் பண வேட்டையில், சேகர் ரெட்டியிடம் முடிந்தவரை விசாரித்து முடித்துவிட்டனர். இனி சீரியல்படி ஆட்களை தூக்க வேண்டியது மட்டுமே மிச்சம் என்கிற அளவுக்கு நிலைமை போக ஆரம்பித்துவிட்டது. சென்னை தி.நகர், மாம்பலம் உள்ளிட்ட நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் தங்களுடைய கண்காணிப்பை தொடர்ந்து தீவிரப் படுத்தி வருகின்றனர். சென்னையில் புரசைவாக்கம், மண்ணடி, பாரிமுனை, சவுகார்பேட்டை போன்ற இடங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் பட்டியலில் இல்லாததால் அவைகள் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை.

அளவுக்கு அதிகமான புதிய ரூபாய் நோட்டுகள், கணக்கில் வராத பணம், நகைகள் என்று அடுத்தடுத்த ரெய்டுகளில் தாராளமாக சிக்குவதால் வருமான வரித்துறை அதிகாரிகள் முழு தெம்பில் சுழன்று சுழன்று வேலை பார்க்கிறார்கள்.வருமான வரித்துறையினரின் ரெய்டில் சிக்கிய சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம், அடுத்தடுத்த ஆட்களை அடையாளம் காட்டத் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம், புதுக்கோட்டை எம்.ஆர். என்கிற ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வரையில் அந்த வாக்குமூலத்தின் நீளம் போய்க்கொண்டே இருக்கிறது.

சென்னை சவுகார்பேட்டை மீது கவனம் திரும்பவும், ரெட்டி அன்ட் கோ கொடுத்த வாக்குமூலம்தான் காரணம் என்கின்றனர். இதுவரையில் நடந்த ரெய்டுகளில் இதுவும் முக்கியமான ஒன்று. நான்கு நாட்கள் ஆனபின்னும், இன்னும் இங்கே ரெய்டு முழுமையாக முடிந்ததா, இல்லையா என்றே தெரியாத அளவுக்கு சவுகார்பேட்டை ரெய்டு போய்க் கொண்டே இருக்கிறது. சவுகார்பேட்டையில், பெருமாள் தெருவில் இருக்கிறது, தீபக் டிரேடர்ஸ். தங்கமுலாம் பூசும் கவரிங் நகைக்கடை மற்றும் ஃபேன்சி பொருட்கள் விற்கும் கடை. ஆனால், கடையின் உள்ளே சுரங்கம் அமைத்து கோடிக்கணக்கான கள்ளப் பணத்தை பதுக்கியிருக்கிறார் இதன் உரிமையாளர் தீபக். சென்னை வேப்பேரியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். 'தீபக் டிரேடர்ஸ்' என்ற ஒரு பெயர்ப் பலகை, வெளியில் சாதாரணமாகத் தொங்க, அங்கே நடப்பதோ மிரட்டலான பணப் பரிமாற்றங்கள் என்கிறார்கள்.

சேகர் ரெட்டியின் நூல் பிடித்த தொடர்புகளில் சவுகார் பேட்டை தீபக்கும் இருக்கவேதான், அதிகாரிகள் இங்கும் நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர்.தீபக்கின் சுரங்கம் போன்ற பிரமாண்ட நிறுவனத்தில் நடந்த மூன்று மணி நேர சோதனையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், பழைய ரூபாய் நோட்டுகளும் கட்டுக் கட்டாக பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. முதல் நாள் மீட்பு பணத்தின் மதிப்பு மட்டுமே 10 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். வேப்பேரியில் உள்ள தீபக்கின் வீட்டில் நடந்த சோதனையும் அதிகாரிகளை ஏமாற்றவில்லை. கணக்கில் வராத 6 கிலோ தங்கம், மற்றும் முக்கியமான சில ஆவணங்கள் அங்கேயும் சிக்கியுள்ளன. தீபக் வீடு மற்றும் கடையில் ரெய்டு போய்க் கொண்டிருந்த போதே வருமான வரித் துறையினரின் அடுத்த ரெய்டு 'இரானி' நகைக்கடையில் ஆரம்பித்தது.

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள 'இரானி' நகைக்கடை மற்றும் கடையின் உரிமையாளர் வீடுகளிலும் அடுத்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து பெறப்பட்டது, தங்கத்தில் முதலீடு செய்வதற்காக கொண்டுவரப் பட்டவையா? போன்ற விசாரணை நடவடிக்கைகள் போய்க்கொண்டு இருக்கிறது.ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட தரகர்கள், தீபக் வசிக்கும் குடியிருப்பில்தான் முன்னர் சிக்கினர் என்பதால் ரெய்டில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் விசாரணை உத்தியையும், அடுத்தக்கட்ட ரெய்டு நடவடிக்கையையும் இதனால் முற்றிலும் மாற்றி உள்ளனர்.



சேகர் ரெட்டியை மடக்கி, அடுத்தடுத்த அரசியல் காய்களை வெட்டலாம் என்று சின்னதாக கோடாரி தூக்கியவர்களுக்கு, ஐ.பி.எல் சூதாட்ட தரகர்களுடன் தொடர்புடைய ஆட்களை நெருங்கிவிட்ட உணர்வு இப்போது ஏற்பட்டிருக்கிறது.
சென்னை சவுகார்பேட்டை மற்றும் பாரிமுனை பகுதிகளில், அடித்த ரெய்டில் ஐ.டி.அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல்கள் நிறையவே கிடைத்துள்ளன. "என்.எஸ்.சி போஸ் சாலை (பாரிமுனை), சவுகார்பேட்டை, யானைக்கவுனி போன்ற இடங்களில் நகை வியாபாரிகளுடன் நெருக்கமான உறவில் இருக்கும் சில காக்கிகளின் தொடர்பை உறுதிப்படுத்தும் டைரி, ஐ.டி அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ளது.

வருமான வரித்துறையினரின் ரெய்டின் போது ராம மோகனராவிடமும் இதே போன்று ஒரு டைரி கிடைத்ததாக தகவல் உண்டு. ரெய்டின்போது, உள்ளூர் போலீசாரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற விவரத்தையும் ரகசியக்குழுவினர் கண்காணிப்பதால் 'போன் போட்டு தகவல்' கொடுக்கும் கறுப்பாடுகள் கலங்கிப் போயுள்ளனர். காவல்துறையில் தனிப்படை (ஸ்பெஷல் டீம்) என்ற பெயரில் இயங்கும் சிலர் 'ஸ்பெஷலாக' அடிக்கடி நகைக் கடைகள், இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான ஆட்களிடம் ரெய்டு அடித்து, சொத்துகளை குவித்து வைத்துள்ளனர். சிலர் அவர்களின் தொழில் நுட்பங்களைக் கூட இருந்தே கற்று நகைக்கடை, கந்து வட்டி என்று பெரிதாக வளர்ந்து விட்டனர். 'எங்களுக்கு எதற்கு இனி கவர்ன்மென்ட் வேலை, இருக்கறதை வைத்து காப்பாற்றிக் கொண்டால் அது போதும்' என்ற குரலே அங்கு கேட்கிறது.



ஸ்பெஷல் டீம்களை இயக்கும் மேலதிகாரிகளின் சொத்துப் பட்டியல் அதை விட பல மடங்கு எகிறிப் போய் இருப்பது, வருமானவரி புலனாய்வுத்துறையின் சோதனை டீமையே, சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது."இவ்வளவு நாட்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட பர்சன்டேஜைக் கொடுத்து விட்டுத்தான் தொழில் செய்தோம், அதே போல் நீங்களும் வாங்கிக் கொண்டு எங்களை வாழவிடுங்கள்" என்று ரெய்டின்போது விபரம் புரியாமல் சில வியாபாரிகள் கதறியுள்ளனர். கூடவே, காக்கிகளுக்கு வருடம் தவறாமல் கலெக்‌ஷன் கொடுத்த ஆதாரங்களையும் பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளனர். அவர்களிடம் பக்குவமாகப் பேசி ' ஸ்பெஷல் போலீஸ் டீம்' குறித்த விபரங்களை ஐ.டி. அதிகாரிகள் வாங்கிக் கொண்டுள்ளனர். ஐ.டி.அதிகாரிகளின் பிடியில் 'ஸ்பெஷல் ரெய்டு காக்கிகள்' சிக்கிக் கொண்டாலும் வியப்பில்லை.

Saturday, December 24, 2016

எம் ஜி ஆர்

கல்கியின் நாவலும் கலைந்துபோன எம்.ஜி.ஆரின் கனவும்...! எம்.ஜி.ஆர் நினைவு தினச் சிறப்புப் பகிர்வு


நினைத்ததை முடித்தவன் நான்... நான்... நான்... என திரைப்படம் ஒன்றில் பெருமிதத்தோடும் கர்வத்தோடும் பாடி ஆடியிருப்பார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்கு முன்னும் பின்னும் திரையுலகில் வெற்றிக்கோட்டை தொட்டவர்கள் உண்டு. ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு உச்சத்தை தொட்டவர்கள் அரிதினும் அரிது. அந்த அரிதானவர்களிலும் எம்.ஜி.ஆர் தனித்து நிற்பவர். காரணம் இயக்கம், ஒளிப்பதிவு, ஸ்டண்ட், நடனம், எடிட்டிங், என திரையுலகின் அத்தனை துறைகளும் அவருக்கு இருந்த ஞானம். அவரது சினிமா தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் அவர் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னனும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்கள் அந்த திறமைக்கு கட்டியம் கூறுபவை. இன்றைக்கும் அவை எம்.ஜி.ஆரின் மாஸ்டர் பீஸ் எனலாம். குறிப்பாக நாடோடி மன்னன் திரைப்படம் அவரது வாழ்வில் குறிப்பிடத்தக்க படம். இந்த படத்திற்காக அதுவரை தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் அவர் அடகுவைக்கவேண்டியதானது. இந்த இரு படங்களின் தயாரிப்பை விட அவற்றை வெளியிடுவதில் அவர் சந்தித்த சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; ஒரு நாவலுக்குரிய பகீர் திருப்பங்கள் கொண்டவை. நாடோடி மன்னன் இறுதிகட்டப்படப்பிடிப்பின்போது ஒருசமயம்,“படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி" என்று நெருங்கிய நண்பர்களிடம் சோகம் இழையோடச் சொல்லியிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக என்று சொல்லமுடியாது; உழைப்பின் பலனாக, நாடோடி மன்னன் அமோக வெற்றிபெற்றது. அடுத்த 20 வருடங்களுக்கு அவரை திரையுலகின் மன்னனாக்கியது. ராஜாராணி படங்கள் என்றால் எம்.ஜி.ஆரைவிட்டால் அதில் சோபிக்க வேறு ஆள் கிடையாது என அடித்துச்சொல்லும் அளவு அந்த வேடங்களில் அசத்திய எம்.ஜி.ஆரை நாடோடி மன்னன் வெற்றி புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதற்குப்பின் அப்படி ஒரு வெற்றியை அவரது வாழ்வில் பார்த்திருக்கமுடியாது. மொத்த தமிழகமும் கொண்டாடியது அந்த படத்தை. நாடோடி மன்னன் தந்த வெற்றி அவருக்கு தொடர்ந்து இம்மாதிரி படங்களை தரவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. அப்படி அவரது ஆசையில் உதித்த எண்ணம்தான் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கவேண்டும் என்பது.

கல்கியின் ஆகச்சிறந்த புதினங்களில் ஒன்றான 'பொன்னியி்ன் செல்வன்' வாசகர்களிடையெ பெற்றிருந்த வரவேற்பு எம்ஜி.ஆரை பெரிதும் ஈர்த்தது. கல்கியின் உரைநடை வீச்சும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளும் அதன் வர்ணனைகளும் நிரம்பி காணப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் 50களில் புராண இதிகாச கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர் என்று கருதப்பட்ட எம்.ஜி. ஆருக்கு பெரும் ஆசையை மனதில் வித்திட்டதில் ஆச்சரியமில்லை. இதற்கென கல்கியின் குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெறப்பட்டது. நாடோடி மன்னன் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற சில மாதங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி. ஆர். தனது வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு பொன்னியின் செல்வன் வெளிவரும் என செல்லும் இடங்களில் எல்லாம் பெருமிதமாக சொன்னார். பொன்னியின் செல்வன் படமானால் அது தனக்கு நாடோடி மன்னனுக்கு ஈடான நிரந்தர புகழை ஈட்டித்தரும் என்பதில் ஐயமின்றி இருந்த எம்.ஜி. ஆர், 'நாடோடி மன்னன்' வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே, 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பு 'பொன்னியின் செல்வன்' என்று தான் பொறுப்பாசிரியராக இருந்த 'நடிகன் குரல்' (1959 டிசம்பர் மாத இதழில் ) இதுபற்றிய தகவலை வெளியிட்டார். அறிவிப்பை தொடர்ந்து படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகள் தேர்வும் நடந்தது. சிறுசிறு கதாபாத்திரத்திற்கும் கூட தேர்ந்த நடிகர் நடிகைகளை தேர்வு செய்தார். வழக்கமான தனது படங்களில் பயன்படுத்துபவர்களை தவிர்த்து புதிய கலைஞர்களை இதில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டார். 'பொன்னியின் செல்வன்' கதையில் இருவேடங்களில் எம்.ஜி.ஆரே ஏற்று நடிக்க முடிவெடுத்தார். நாவலின் முக்கிய கதாநாயகி கதாபாத்திரத்திற்கு அவர் தேர்ந்தெடுத்தது தமது குடும்பநண்பரும் பழம்பெரும் இயக்குனருமான கே. சுப்ரமணியம் அவர்களின் மகள் பத்மா சுப்ரமணியத்தை. நடனக்கலைஞரான அவர் நடித்தால் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக பேசப்படும் என்பது எம். ஜி. ஆரின் எண்ணம். பகீரத முயற்சியில் இதற்கான அனுமதியை அவரது தந்தையிடம் இருந்து பெற்ற எம்.ஜி. ஆரால் அவரது மகளிடம் திட்டம் பலிக்கவில்லை. திரைப்படத்தில் நடிப்பதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் எம். ஜி. ஆரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதேசமயம் நாடோடிமன்னன் வெற்றியினால் தொடர்ந்து படங்களில் புக் ஆகி இடைவிடாமல் நடித்துக்கொண்டிருந்ததால் எம்.ஜி.ஆரின் கவனமும் பொன்னியின் செல்வனிலிருந்து விலகியது. என்றாலும் தனது மனதில் கதாபாத்திரங்ளையும் காட்சியமைப்புகளையும் செதுக்கியவாறு இருந்தார். மற்ற படங்களின் அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது பொன்னியின் செல்வனுக்கும் லோகேஷன்களை பார்த்து குறித்துக்கொண்டார். இருப்பினும் அது காகித வடிவிலேயே இருந்தது. '1964 ல் ஆகஸ்ட் 2ந்தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் “படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கின்றன. அதை கலரில் எடுக்கப் போகிறேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதும்படி கேட்கப் போகிறேன்!” எனகூறியிருந்தார். அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தயாரிப்புக்கு குறிப்பிட்ட சில வருடங்களாவது தேவைப்படும் என்ற நிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துவந்த எம்.ஜி.ஆரால் படத் தயாரிப்பில் ஈடுபடமுடியவில்லை.
பொன்னியின் செல்வன் கதையில் ஏராளமான கதாபாத்திரங்களும், சம்பவங்களும் உள்ளன. எனவே, படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. 'அடிமைப் பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களை எடுத்து முடித்த பின்னரும், பொன்னியின் செல்வன் படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்படவில்லை.எம். ஜி. ஆரைப்பற்றி அவ்வப்போது நிலவி வந்த சில தகவல்களும் இந்த படத்தினை தள்ளிப்போட்டது என்பார்கள்.

பொதுவாக எம்.ஜி. ஆர் வெளிப்படங்களிலேயே தான் திருப்தியடைந்த பின்னரே அது வெளியாக அனுமதிப்பார். அப்படிப்பட்டவர் தன் சொந்தப்படத்தினை அதுவும் அவரது கனவுப்படத்தை வெளியிட எத்தனை வருடங்கள் எடுத்துக்கொள்வாரோ என்று பிரபல நடிகர்களிடம் ஒரு பேச்சு எழுந்ததாக சொல்வார்கள். பணம் கணிசமாக கிடைக்கும் என்றாலும் ஒரு திரைப்படத்திற்காக நீண்ட நாட்களை செலவிட அவர்கள் தயாரில்லை. முக்கிய கதாபாத்திரத்திற்கு தான் தேர்வு செய்த பத்மா சுப்ரமணியம்தான் நடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த எம். ஜி. ஆர் 70 களில் பத்மா இருந்த ஒரு மேடையில் “பத்மா சம்மதித்து நடித்து கொடுத்தால் ஒரு மாதத்தில் படத்தை வெளியிடுவேன்” என்றும் கூறிப்பார்த்தார். ஆனாலும் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்த பத்மா சுப்ரமணியம் அதற்கு மசியவில்லை. இப்படி பல காரணங்களால் எம். ஜி. ஆர் பொன்னியின் செல்வனை கைவிட வேண்யடிதானதாக திரையுலகில் சொல்வர். ஆனாலும் எம்.ஜி. ஆரின் மனதில் இருந்து பொன்னியின் செல்வனை விலக்க முடியவில்லை. தான் பொது இடங்களில் தான் சந்திக்கும் திறமையான கலைஞர்களிடம்“ என் படத்தில் இந்த கேரக்டரில் நடிக்கறியா என தொடர்ந்து கேட்டபடி இருந்தார். நடிகர் சிவகுமாரின் 100-வது படவிழாவில் (1978ம் ஆண்டு) பேசிய எம்.ஜி.ஆர். 'பொன்னியின் செல்வனை படமாக எடுக்க நான் முயற்சித்தபோது, சோழ இளவரசனாக சிவகுமாரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன்’ என்று பேசினார். இப்படி வந்தியத்தேவன், எம்.ஜி.ஆரை விரட்டிக்கொண்டே இருந்தான். ஆனால், காலம் கைகூடவில்லை! முதல்வரான பின்னும் பொன்னியின் செல்வனை அவர் மனதில் இருந்து கழற்றிஎறிந்திட முடியவில்லை.

அரசியலில் பரபரப்பாகி முதல்வரானபின்னரும் அவ்வப்போது தனக்கு நெருங்கிய ஒரு பத்திரிக்கையாளரிடம் இது குறித்த ஆதங்கத்தை எம்.ஜி. ஆர் வெளிப்படுத்தியிருக்கிறார். 80 களில் கமல்ஹாசனை வைத்து துவங்கும் திட்டமும் அவர் மனதில் இருந்தது. ஆனால் துரதிர்ஸ்டவசமாக காலம் அவருக்கு அந்த கனவை நனவாக்கும் வாய்ப்பை இறுதிவரை வழங்கவில்லை. இதனிடையே குறிப்பிட்ட வருடங்களில் பொன்னியின் செல்வன் மீதான எம்.ஜி. ஆருக்கான உரிமை சட்டப்படி கைவிட்டுப்போன நிலையில் கமலஹாசனும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதுவும் ஈடேறவி்ல்லை.

இப்படி அரசியலிலிலும் திரையுலகிலும் தான் நினைத்ததை முடிப்பதில் வல்லவரான எம்.ஜி.ஆருக்கு“பொன்னியின் செல்வன்” நாவல் அவரது நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாக நிலைத்து நின்றுவிட்டது.

ராம மோகன் ராவ் ‛அட்மிட்'

சென்னை: வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உள்ளான, ராம மோகன் ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கருதி, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஐ.சி.யூ.,வில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக தலைமை செயலாளராக இருந்தவர் ராம மோகன் ராவ். பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும், திருப்பதி தேவஸ்தான அறக்காவலர் குழு உறுப்பினருமான சேகர் ரெட்டி வீடு மற்றும்அலுவலகங்களில், 130 கோடி ரூபாய் ரொக்கம், 171 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இவரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து , டிச.,21 ல் ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது மகன் விவேக் வீடு, அலுவலகங்கள், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட, 12 இடங்களில், துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை சம்மன் :

இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை உருவாக்கியது. தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ராம மோகன் ராவ் நீக்கப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் அவருக்கும், அவரது மகனுக்கும் சம்மன் அனுப்பியதாக, தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், நேற்று இரவு ராம மோகன் ராவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கருதி, சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, ராமமோகன ராவ் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஒரு வதந்தி உலாவி வருகிறது.

11,124 கி.மீ. புல்லட்டில் பயணித்தால் என்ன நடக்கும்? #RoadTrip


"இமாச்சலப் பிரதேசத்தில் உதய்பூர் என்ற ஒரு சின்ன டவுன். இரவு பதினோரு மணியளவில்... நல்ல குளிர். பெளர்ணமி. தனியாக என் தண்டர்பேர்ட் 500-ல் போய்க் கொண்டிருந்தேன். புல்லட் பீட் பின்னணியில் ஒரு கிடார் சத்தம் கேட்டது. வண்டியை நிறுத்திவிட்டு சுற்றிப் பார்த்தேன். ரோட்டின் ஓர் ஓரத்தில் ஒரு பையன் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம் போனேன். அவனிடமிருந்து கிடார் வாங்கி எனக்குத் தெரிந்த சில பாடல்களை பாடி, வாசித்தேன். அதன் பின், அவன்... அவனுடைய விரல்கள் கிடாரில் பெரிய மேஜிக் செய்தன. அந்த இரவை அங்கேயே அப்படியே பாட்டு பாடி கழித்தோம். என் பெயர் அவனுக்குத் தெரியாது, அவன் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால், இருவருக்குமே அது ஒரு அற்புதமான இரவு...இது தான் பயணத்தின் அழகு " என்று தன் பயணக் கதையை கிக் ஸ்டார்ட் செய்கிறார், கோவையைச் சேர்ந்த சாய்க் குமார்.

இவர் சமீபத்தில் இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி டூ வட உச்சி ஜம்மு காஷ்மீர் வரை தனியாக ஒரு பைக் பயணம் போய்வந்திருக்கிறார். மொத்தம் 77 நாட்கள்... 11, 124 கிமீட்டர்கள் என அவர் கடந்து வந்த கதையை புல்லட் வேகத்திலேயே சொல்லத் தொடங்குகிறார்...

எதற்காக இந்தப் பயணம் ?

" பயணம் தொடங்கும் பலரும் சொல்லும் அதே காரணம் தான் என்னுடைய தொடக்கமும். வேலை... ஒரே மாதிரியான வாழ்க்கை முறை... அதை உடைக்க வேண்டும் என்ற ஆர்வம், பயணம் மீதான ஆசை. ஆனால், இதற்கு மேல் ஒரு பயணியாக எனக்கு ஒரு முக்கிய குறிக்கோள் இருந்தது. அது என்னை நான் புரிந்து கொள்வது... அதற்கேற்றார் போல இந்த பயணம் எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது".

தனியாக பயணம் செய்தது எப்படி இருந்தது?

"நான் அடிப்படையிலேயே கொஞ்சம் ரிசர்வ்டான ஆள் தான். எனக்குத் தனியாக இருப்பது பிடிக்கும். அதனால், தனியாக பயணித்தது பெரிய கஷ்டமாக இல்லை. மேலும், தனியாக பயணித்தாலும் இதில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். குஜராத்தின் ரேன் ஆஃப் கட்ச் பகுதியில் இருந்த ஒரு ராணுவ வீரர்... பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் ரொம்ப தனிமையில் இருந்தார். என்னைப் பார்த்ததும் பேச ஆரம்பித்தவர், தொடர்ந்து 4 மணி நேரம் விடாமல் பேசினார், அதே போல், டில்லியில் ஒரு கஷ்மீர் நண்பன் கிடைத்தான்... கஷ்மீரியாக அவன் படும் வேதனைகள், அவன் வாழ்வின் பிரச்சினைகள்... அதே போன்று சில இஸ்ரேலிய ஊர்சுற்றிகளோடு ஒரு வாரம் பயணம் செய்தேன். பயணத்தை தனியாக தொடங்கினாலும், பயணம் தனிமையானதாக இல்லை. பயணத்தில் பார்க்கும் இடங்கள் அழகு என்றால், பழகும் மனிதர்கள் பேரழகு..."

உங்கள் பயண நண்பன் தண்டர்பேர்ட் 500 குறித்து சொல்லுங்களேன் ?

"பொதுவாகவே இந்தியாவில் தொலை தூரப் பயணங்களின் அடையாளமாகப் பார்க்கப்படுவது புல்லட்கள் தான். அதன் அடிப்படையிலேயே தண்டர்பேர்ட் 500யைதேர்ந்தெடுத்தேன். ஆனால், பலரும் அதற்கான சர்வீஸில் பிரச்சினைகள் இருப்பதாக சொன்னார்கள். அதற்கேற்ற மாதிரியே வண்டி எடுத்ததில் இருந்தே பல பிரிச்சினைகள் இருந்தன. வண்டியில் இருந்த பிரச்சினைகளைவிடவும், சர்வீஸ் ஆட்களோடு போராடுவதே பெரிய கஷ்டமாக இருந்தது. ஆனால், எல்லாம் முடிந்து பயணம் தொடங்கிய பிறகு, வண்டியில் பெரிய தொந்தரவுகள் இல்லை. மைலேஜும் 28யில் இருந்து 30 வரை கிடைத்தது."



பயணத்தின் போது ஏதேனும் விபத்துகள்?

"குஜராத்தின் புஜ் பகுதியில் வண்டியை நிறுத்தி வைத்திருந்த போது, ஒரு பையன் ரிக்‌ஷாவில் வந்து மோதிவிட்டான். அதில் சைலன்சர், ஹேண்டில் பார், க்ராஷ் பார் என அனைத்தும் வளைந்துவிட்டன. பின்னர், அதையெல்லாம் சீர் செய்தேன். ரொடாங் பாஸ் ரோடு வழியாக லேவிற்கு சென்று கொண்டிருக்கும் போது, உள்ளூரைச் சேர்ந்த ரெண்டு பேர் எனக்கு முன்னாடி போய்க் கொண்டிருந்தார்கள். சரியாக பிரேக் பிடிக்காமல், ஸ்லிப்பாகி என் கண் முன்னாடியே பல நூறு அடி பள்ளத்தில் விழுந்து இறந்தார்கள். அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது."

பயணத்தின் ஏதாவது ஒரு சமயத்தில் " ஏண்டா... பயணம் கிளம்பினோம்..." என்று வருந்தியது உண்டா?

"நிச்சயமாக இல்லை. நான் ஆபிஸில் ஏசி ரூமில் உட்கார்ந்து பயணம் குறித்து யோசித்ததைவிட, நிஜப் பயணம் கடுமையாக இருந்தது உண்மை தான். ஆனால், அதற்காக நான் எந்த தருணத்திலும் வருத்தப்படவில்லை."

உங்களின் பயண வழி என்னவாக இருந்தது?

"கோவையில் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக மும்பை சென்றடைந்தேன். அங்கிருந்து குஜராத், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு கஷ்மீர்... பின்பு, திரும்பும்போது டெல்லி, ஹைதரபாத், பெங்களூரு, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருச்சூர் கடைசியாக, ஆரம்பித்த கோவையில் வந்து முடித்தேன்."

பயணத்தில் சவாலாக இருந்த பகுதிகள் என்ன?

"உறுதியாக லே டூ மணாலி தான். கடுமையான பாதை. குளிர். ஆங்காங்கே நிலச் சரிவு. கொஞ்சம் ஸ்லிப்பானாலும் கூட, மரணம் நிச்சயம். அதில் ஓட்டியது பெரிய சவால். அதுமட்டுமில்லாம, கிட்டத்தட்ட 18 ஆயிரம் அடி உயரம்... ஆக்சிஜன் அளவு மிக குறைவு. ஒரு கட்டத்தில் ஆல்டிட்யூட் மெடிக்கல் சிக்னஸ் ( ALTITUDE MEDICAL SICKNESS ) வந்துவிட்டது. மயக்க நிலையிலேயே கிடந்தேன். அங்கு நான் தங்கியிருந்த கூடாரத்தின் ஓனர்கள் என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள். என்னோடு பயணித்த சக பயணிகளும், எனக்காக அவங்களோட பயண திட்டத்துல மாற்றம் செய்துட்டு எனக்கு உடல் தேறும் வரை என்னோடு இருந்தாங்க. அந்த நாட்களையும், அந்த மனிதர்களையும் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்."



மொத்த பயணத்துக்கான செலவு எவ்வளவு?

"பயணத்தோட மொத்த செலவு 1.3 லட்சம். இதில் பெரும்பாலான பணம் பெட்ரோலுக்குத் தான் செலவானது. வண்டியோட டேங்க் கெபாசிட்டி 20 லிட்டர். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் டேங்கை நிரப்பினேன். தோராயமாக ஒரு நாளைக்கு 300 கிமீட்டர் பயணித்தேன். "

பயணத்திற்குப் பின் உங்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்?

"மனிதர்களை பொதுவாக அவர்களின் உடைகள், நடவடிக்கைகள் வைத்து ஜட்ஜ் செய்வதை முழுமையாக நிறுத்தியுள்ளேன். இவர் நம்மை ஏமாற்றிவிடுவாரோ என்ற பயத்திலேயே பிறரிடம் பழகும் எண்ணம் மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்தப் பயணத்தில் நான் சந்தித்த அத்தனை மனிதர்களும் அவ்வளவு அழகானவர்கள். எல்லாவற்றிருக்கும் மேலாக, என்னுடைய தன்னம்பிக்கை அதிகமாகியிருக்கிறது."

இப்படி ஒரு பயணத்தை முடித்துவிட்டு, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குள் போவது சாத்தியமா?

"கஷ்டம் தான் . ஆனால், வேறு வழியில்லை. வாழ்க்கைக்குப் பணம் அவசியமாகிறதே... இந்த பயணங்களின் நினைவுகளோடு, அடுத்த பயணத்திற்குத் தயாராக பணம் சேர்க்க தொடங்கியுள்ளேன். வேலை போரடிக்கிறது... வாழ்க்கைப் பிடிக்கவில்லை என்ற காரணங்களைக் காட்டி பயணம் கிளம்புபவர்களுக்கு ஒரேயொரு விஷயம்... பயணம் ஒரு " எஸ்கேபிசம்" கிடையாது. இதிலிருந்த தப்ப, பயணத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. பயணம் எவ்வளவு அழகானதோ, அதே அளவிற்கு கடினமானதும் கூட..." என்று சொல்லி முடிக்கிறார் சாய்க் குமார். அவர் இருக்கும் திசையில் தலைசாய்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது அந்த நீல நிற தண்டர் பேர்ட்...

- இரா. கலைச் செல்வன்.
Posted Date : 15:04 (23/12/2016)
Last updated : 15:05 (23/12/2016)


அரிதினும் அரிதான அரசியல் தலைவர்... கக்கன் நினைவு தின பகிர்வு !





1980-ம் ஆண்டு. தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த கால கட்டம் அது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுரை முத்துவை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றார் எம்.ஜி.ஆர். அப்போது காளிமுத்து சொன்ன தகவலால் பதறி போனார் எம்.ஜி.ஆர். உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சாதாரண வார்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரை கண்ட உடன் கலங்கினார். உடனடியாக அவரை சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார். அப்போது சிகிச்சை பெற்று வந்தவர் எம்.ஜி.ஆரிடம் வேண்டாம் என்றார். 'எல்லோருக்குமான சிகிச்சை பிரிவே எனக்கு போதும். நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி' என்றார் அவர்.

எம்.ஜி.ஆர். அங்கிருந்த மருத்துவ பொறுப்பாளர்களை அழைத்து, "இவர் யார் எனத் தெரியுமா? இவர் போன்றவர் பெற்றுத் தந்த சுதந்திரத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருக்கு தனி அறை வசதியும் உயர்ந்த மருத்துவமும் அளியுங்கள்" என உத்தரவிட்டுச் சென்றார். எம்.ஜி.ஆரை கலங்க வைத்த... 'இவரில்லாவிட்டால் நாம் இல்லை' என பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நபர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் முக்கியமானவரான கக்கன். சென்னை சென்ற உடன் முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்து பயணம் போன்றவற்றிற்கு உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர். அத்தோடு கக்கனுக்கு ஓய்வூதியமும் கிடைக்க வழியேற்படுத்தினார்.

ஆனால் படிப்படியாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாளில் நினைவிழந்த கக்கன், நினைவு திரும்பாமலேயே 1981 டிசம்பர் 23-ம் நாள் இறந்தார். அவரின் நினைவு தினம் இன்று. உயிரே போகும் சூழலிலும் எளிமையாய் வாழ்ந்தவர் கக்கன். அவரது உடலை காமராசர் நினைவிடம் அருகே புதைக்கவேண்டும் என்பது அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் விருப்பமாக இருந்தது. அதை அரசின் காதுகளுக்கும் கொண்டு சென்றனர். ஆனால் கடைசி வரை அந்த குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவன் 1981ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார். எளிமைக்கு உதாரணமாக திகழ்ந்த கக்கன் நினைவு தினம் இன்று.



பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எளிய வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ள வேண்டுமென்று வாழ்ந்து காட்டி தமிழ்நாட்டு மக்களின் மனதில் நிலைத்துவிட்ட கக்கன் பிறந்த ஊர் மேலூரிலிருந்து கொட்டாம்பட்டி செல்லும் வழியிலுள்ள தும்பைப்பட்டி. சமகால அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களை பார்த்துப்பழகிப்போன நமக்கு கக்கன் போன்ற தலைவர்களின் வரலாறு கண்ணீர் சிந்த வைக்கிறது.

காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைத்து அமைச்சர்களும் இவரைப்போன்று இருந்தார்களா என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், முதல்வராக இருந்த காமராஜரும், அமைச்சர் கக்கனும் சாகும் வரையில் எளிமையாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தார்கள் என்று அடித்து சொல்லலாம். இவர்களின் அரசியல் எதிரிகள் கூட இதை மறுக்கமாட்டார்கள்.

மேலூர்காரரான கக்கனுக்கு சென்னை திருவற்றியூர் தாங்கலில் மன்றம் வைத்து இன்றும் அவரைக் கொண்டாடுகிறார்களென்றால் அவருக்கு புகழ் எதனால் வந்தது என்பதை அறிய முடியும். இன்று மதுரை மாவட்டத்தில் நிலைத்து நிற்கும் பல நல்ல திட்டங்கள், பாசனக்கால்வாய்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமணைகள் என வருவதற்கு கக்கன் தான் காரணம். இருந்தாலும் அவர் விரும்பிய சாதீய சமநிலை மட்டும் மதுரை மாவட்டத்தில் இன்னும் வரவில்லை என்பதும் உண்மை.

இப்பவே அப்படியென்றால் அவர் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இங்கு எவ்வளவு கீழ் நிலையில் இருந்திருப்பார்கள் என்பதை எண்ணி பார்க்கவே வேதனையாக உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.யில் ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தவுடன், எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் அப்போது அவர் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்ட மகாத்மா காந்தி, காமராஜர் வழியில் செல்ல முடிவு செய்தார் கக்கன். பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை ஒன்றை மட்டும் எதிர்பார்த்து மற்றவர்கள் போராடியதற்கும் கக்கனின் போராட்டத்திற்கும் வேறுபாடு உண்டு. தான் பிறந்த சமூகத்தின் விடுதலைக்கும், நாட்டு விடுதலைக்கும் இணைந்து போராட வேண்டிய நிலையில் இருந்தார்.



தீண்டாமை கொடுமையை களைவதற்குமுன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அவசியம் என்பதில் குறியாக இருந்தார். அதனால்தான் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட அரிஜன சேவா சங்கத்தில் ஒரு வாலண்டியராக இணைந்து மேலூர் வட்டாரத்தில் தொடங்கப்பட்ட அரிஜனப்பள்ளியின் விடுதி பொறுப்பாளராக இருந்து சேவையாற்றினார்.

பகலில் விடுதலைபோராட்டம். இரவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்விப்பணி. தும்பைபட்டியில் அமைந்திருந்த ஊருணியில் ஒடுக்கப்பட்ட மக்களை தவிர மற்ற சாதியினர் அனைவரும் நீரெடுக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களோ ஊருக்கு வெளியிலிருந்த குளத்தை மட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த அசுத்தமான குளத்துக்கு ஊர்க்காரர்கள் வைத்த பெயர் பீக்குளம்.

மேலூர் தாலுகா காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கனுக்கு இந்த கொடுமையை பார்த்து மனம் சகிக்கவில்லை. அதற்காக உடனே களத்தில் இறங்கி போராடவும் அவர் நினைக்கவில்லை. இந்த கொடுமையை தன்னோடு கட்சிப் பணியாற்றும் மற்ற காங்கிரஸ் காரர்களிடம் சொல்லியும் பலனில்லை. காரணம் அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் சாதிக்கட்டமைப்பையும், தீண்டாமயையும் ஆதரிப்பவர்களே அதிகம் அங்கம் வகித்தனர்.

கக்கனின் வேதனையை புரிந்துகொண்ட தும்பைபட்டி அம்பலம் ஒருவரும் செட்டியார் ஒருவரும் ஊர் பஞ்சாயத்தை கூட்டி தாழ்த்தப்பட்ட மக்களையும் ஊர் பொதுக்குளத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று பேசினார்கள். பொங்கி எழுந்த ஆதிக்க சாதி கூட்டம், இந்த இரண்டு பேரையும் தாக்க முற்பட்டனர். வாக்கு வாதத்துக்கு பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள், குளத்தின் இன்னொரு கரையை பயன்படுத்திக்கொள்ள ஒத்துக்கொண்டனர்.



இது ஒரு அரைகுறை தீர்வென்றாலும் அந்த காலகட்டத்தில் ஆதிக்க சாதியினர் இந்தளவுக்கு இறங்கி வந்ததே பெரிய சாதனைதான். காமாரஜருக்கு அடுத்து கக்கனுக்கு மிகவும் பிடித்தவர் யாரென்றால் அமைதி வழியில் போராடும் குணத்தை உருவாக்கிய வைத்தியநாதய்யர். அரிஜன மக்களின் முன்னேற்றத்தில் எந்தவொரு பாசாங்குமில்லாமல் உழைத்தவர் வைத்தியநாதய்யர்.

இதற்காக அவர் இழந்தது ஏராளம். மீனாட்சியம்மன் கோயில் ஆலய நுழைவுப்போராட்டத்தை கக்கனோடு சேர்ந்துதான நடத்தினார். அதற்கு பின்பும் கக்கனுக்கு பல வகையிலும் உதவியாக இருந்தார். அதனால்தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது 1955 ம் ஆண்டு வைத்தியநாதய்யர் இறந்தார். தகவலறிந்து உடனே மதுரை கிளம்பினார் கக்கன்.

இறுதிச்சடங்கு செய்யும் நேரத்தில் வைத்தியநாதய்யரின் பிள்ளைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்க தயாரானார். இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். வைத்தியநாதய்யரின் பிள்ளைகளோ, நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது என்றனர். இதைக் கேட்ட ஐயரின் உறவினர்கள் அதிர்ந்து போனார்கள். சிலர் கோவித்துக்கொண்டு இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் கிளம்பி சென்றார்கள்.

காங்கிரசை கடுமையாக எதிர்த்தாலும் அரியலூர், மேலூர் சட்டமன்றத்தொகுதியில் கக்கன் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை திமுக. கக்கன் மீது தனி மரியாதை வைத்திருந்தது. 1967ல் காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்ட நிலையில்தான் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினார்கள். காங்கிரசின் படுதோல்விக்கு பிறகு மிகவும் கஷ்டமான நிலைக்கு கக்கன் குடும்பம் சென்றுவிட்டது. நிறைய கடன் வேறு. அதை தெரிந்துகொண்ட பழ.நெடுமாறன் மதுரையில் கக்கனுக்கு மணிவிழா எடுத்து நிதி வசூல் செய்து 21 ஆயிரம் வழங்கினார். அதை வங்கியில் டெபாசிட் செய்ய மறுத்த கக்கன், நாவினிபட்டி பண்ணையார் போன்றவர்கள் தேர்தல் செலவுக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை கடனாக எழுதி வைத்திருந்தார். நெடுமாறன் வழங்கிய நிதியின் மூலம் இக்கடன்களை அவர்கள் கேட்காமலே அடைத்தார்.



அப்போது மதுரை மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர் பின்னாளில் புதுவை பலகலைகழக வேந்தராக பதவி வகித்த வேங்கடசுப்ரமணியன். இவரிடம் மதுரை மாவட்ட தலித் மக்களின் நிலையை எடுத்து சொல்லி விடுதிகளுடன் கூடிய பள்ளிகளை அதிகம் திறக்க வைத்தார். அதில் பிற்பட்ட சாதி மாணவர்களுக்கும் அதிக விடுதிகள் கட்ட ஏற்பாடு செய்தார். ஓராசிரியர் பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டது.

காவல்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். அவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். லஞ்ச ஒழிப்பு துறையை உருவாக்கியதும் இவர்தான். சாதி கலவரங்களுக்கு அடிப்படையாக உள்ள பிரச்னைகளை கண்டறிய தனி பிரிவை காவல்துறையில் ஏற்படுத்தினார். என்னதான் காவல்துறையை அவர் கண்ட்ரோலில் வைத்திருந்தாலும், கலவரங்களில் உயர்சாதி வெறியோடு செயல்படும் காவலர்களை, அதிகாரிகளை தடுக்கவோ தண்டிக்கவோ அவரால் முடியவில்லை. வெளியே சொல்ல முடியாத இந்த வேதனை அவரிடம் இருந்துள்ளது.

கக்கனிடம் நீண்டகாலம் தனிச்செயலாளராகப் பணியாற்றிய கே.ஆர். நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் சொல்லும்போது, "விடுதலை வேள்வியில் சவுக்கடிகளின் தழும்புகளைப் பரிசாகப்பெற்றவர். சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளானவர். அரசியல் உலகில் பிழைக்கத்தெரியாதவர் என்ற பட்டப்பெயருக்குச் சொந்தக்காரர். இன்றைக்கு அவரை யார் நினைக்கிறார்கள். அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்தது தான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்கிற வர்ணாசிரம அகராதியில் அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். தமிழகத்தில் இதுவரை கக்கன்ஜியைவிட உயர்ந்தவர்கள் எவரும் இல்லை. இனியும் பிறக்கப்போவதும் இல்லை. இது சத்தியம்.." என்றிருந்தார்....அது உண்மையிலும் உண்மைதான்.

மூத்தவர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலகி கட்சிப்பணிகளை செய்ய வேண்டுமென்று அறிவித்து அதற்கு தானே முன்னுதராணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகிய காமராஜர், அடுத்த முதல்வராக கக்கனை முன்மொழிய நினைத்தார். இதை தெரிந்துகொண்ட கக்கனோ, தன்னைவிட சீனியரான பக்தவச்சலத்தை முன்மொழிந்தார். காமராஜரின் ஆசை நிறைவேறாமல் போனது.

கக்கன்ஜியின் அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கையை பற்றி நிறைய சம்பவங்களை கூறலாம். அது ஓரளவு நமக்கு தெரிந்த விஷயங்கள்தான். ஊழலிலும் குற்றங்களிலும் புழுத்துப்போன சமகால அரசியலை அவதானித்துவரும் இன்றைய செல்பி தலைமுறையினருக்கு மீண்டும் மீண்டும் இவைகளை நினைவு படுத்த வேண்டியது அவசியம்.....

வேளாண்மைத் துறை அமைச்சராக கக்கன் இருந்தபோது அவரை மலேஷிய நாட்டின் வேளாண்மைத் துறை அமைச்சர் சந்திக்க வந்திருந்தார். அவர் கக்கனுக்கு ஒரு பேனா பரிசளித்தார். கக்கன் அந்த பேனாவை ஆச்சரியமாக பார்த்தார். அதற்கு மலேஷிய அமைச்சர், இது தங்கப்பேனா என்றார். அப்படியானால் இதை வைத்துக்கொள்ளும் தகுதி எனக்கில்லை. நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.. என்றார் கக்கன்.

மலேஷிய அமைச்சரோ இது நட்பிற்கான அடையாளம். எனது பரிசு என்றார். உடனே கக்கன், தன் உதவியாளரை அழைத்து, பதிவு புத்தகத்தில் இந்த பேனா வந்தது குறித்து பதிவு செய்து எடுத்து வாருங்கள் என்றார். மலேஷிய அமைச்சர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை பதிவு செய்யாமல் வாங்கிக்கொள்ள கக்கன் உடன்படவில்லை. கடுப்பான மலேஷிய அமைச்சர் அந்த பேனாவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

கக்கனின் தம்பி விஸ்வநாதன், சிறந்த ஓட்டப்பந்தய வீரர். இவருக்கு போலீஸ் வேலையில் சேர ஆர்டர் வந்தது. இந்த விஷயத்தை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அண்ணன் கக்கனிடம் விஸ்வநாதன் சொல்ல, வேண்டாம், நீ போலீஸ் வேலையில் சேரக்கூடாது. அந்த துறை என் பொறுப்பில் உள்ளது. நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், என் சிபாரிசில் வந்ததாகச் சொல்வார்கள் என்று அவரை போலீசில் சேர கக்கன் அனுமதிக்கவில்லை.
உடனே அப்போது ஐ.ஜியாக இருந்த அருளைக் கூப்பிட்டு, விஸ்வநாதனின் விரல்கள் சரியாக செயல்படாது. துப்பாக்கியை கையாளுவதெல்லாம் சிரமம். பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறவர்கள் முழுத் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும் என்று சொன்னதோடு அவருக்கு வழங்க இருந்த பணி ஆணையையும் நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

ஆனால் உண்மை என்னவென்றால், விஸ்வநாதன் இளவயதில் விளையாடும்போது தவறிவிழுந்ததால் அவரது வலது முழங்கையின் மேல்புறத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் சுண்டு விரலும் மோதிர விரலும் சற்று வளைந்திருந்தது இதை விஸ்வநாதன் அருளிடம் தெரிவிக்க.. இதற்காகவா அமைச்சர் அப்படி கூறினார், என போலிஸ் அதிகாரி அருள் ரொம்பவும் கவலைப்பட்டுள்ளார்.

இப்படி தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏகப்பட்ட சம்பவங்களை நாம் கற்றுக்கொள்ள பாடமாக வைத்துவிட்டு சென்றுள்ள கக்கனை இன்று மட்டுமல்ல எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் கக்கன் அரிதினும் அரிதான அரசியல் தலைவர் கக்கன்.

'வர்தா' துயர் துடைக்க வந்தவர்களை அடித்து துரத்திய அ.தி.மு.க.வினர்


தருமபுரி : வர்தா புயலால் சிக்கி சின்னாப்பின்னமான நகரை சீர்படுத்த வந்த துப்புரவு தொழிலாளர்களை அ.தி.மு.க.வினர் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை மையப்படுத்தி அடித்த வர்தா புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருந்தது. லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்களும் புயல் காற்றில் சாய்ந்து விழுந்தன. இதனால் மின்சாரம், குடிநீர், போக்குவரத்து வசதிகள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகின. சாலைகள் தோறும் மரங்கள் வீழ்ந்து கிடக்க... மரங்களை அகற்ற... மின் வினியோகத்தை சீர்படுத்த தமிழகம் முழுவதும் இருந்து ஆதரவுக்கரம் நீட்டியது அரசு பணியாளர்கள் தான்.
அனைத்து மாவட்டங்களில் இருந்து துப்புரது தொழிலாளர்கள், மின்வாரிய தொழிலாளர்கள், வனத்துறையினர் உள்ளிட்டோர் சென்னை வந்து, மரங்களை அகற்றுவது, துப்புரவு பணிகள், மின் வினியோக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இப்படி பணியாற்ற வந்த இடத்தில் துப்புரவு பணியாளர்களை அடித்து கொடுமைப்படுத்திய நிகழ்வு அரங்கேறி இருப்பது தான் வேதனை.

வர்தா புயலால் சென்னையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில். சேலம் மாவட்டத்திலிருந்து 119 ஆண் துப்புரவு பணிளர்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர். வேளச்சேரி பகுதியில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தியும், சாலைகளை தூய்மைபடுத்தும் வேலைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று விஜயா நகரில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர்களை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பாலன், மாது,ராவி,ராமக்கிருஷ்ணன் ஆகிய நால்வருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னைக்கு சென்றிருக்கும் சேலம் துப்புரவு பணியாளர்களிடம் பேசினோம், “நேற்று மதியம் ஒரு மணி இருக்கும் நாங்க ஒரு பத்துபேர் விஜயா நகர் பகுதியில் சுத்தம் பண்ணிகிட்டு இருந்தோம். அப்ப அந்த பகுதியோட வட்டச்செயலாளர் சம்பத்ங்கறவர் எங்க கிட்ட வந்து, கபாலி நகருக்கு சுத்தம் பண்ண வரச்சொன்னார். ஆனா, விஜயா நகரில் இன்னும் வேலை முடிக்கலை. அவர் பேச்சையும் தட்ட முடியாதுங்குறதுக்காக ஒரு நாலுபேர முதல்ல கபாலிநகருக்கு போக சொல்லிட்டு. மத்தவங்க விஜயா நகர்ல இருக்கும் வேலைய முடிச்சிட்டு அங்க போகலாம்னு நினைச்சு வேக வேகமா வேலை பாத்துகிட்டு இருந்தோம்.

அப்ப, அவர் என்ன நினச்சாரோ தெரியல. நான் கூப்பிட்டா நீங்க எல்லாரும் வர மாட்டீங்களாடானு, கெட்டவார்த்தையில் திட்டினாரு. அதை பொறுத்துகிட்டு தான் நாங்க நின்னோம். திடீர்னு ஓரமாக கிடந்த மரக் கட்டையை எடுத்து அடிக்க ஆரம்பிச்சார். இதுல பாலன், மாது, ரவி, ராமகிருஷ்ணன் ஆகிய நாலு பேருக்கு அடி விழுந்துச்சு. அவர் கூட வந்த இன்னொருத்தரும் தன் பங்குக்கு ஒரு குச்சிய எடுத்து அடிச்சார். எல்லோருக்கும் பலமான அடி வலி தாங்கல..

உடனே மாநகராட்சி கமிஷனருக்கு தகவல் கொடுத்தோம்.. அவர் அமைச்சர் வரைக்கும் பேசியிருக்கிறார். ராத்திரி 7 மணிக்கு சரவணன்னு ஒருத்தர் வந்தார் வேளச்சேரி அ.தி.மு.க பகுதி செயலாளர்னு சொன்னாங்க. “நடந்தது மிகப்பெரிய தப்புதான் மன்னிச்சிடுங்க. விஷயத்தை பெருசு பண்ணாதிங்க நான் மேல பேசிடுறேன்.. நீங்க எல்லாரும் நாளைக்கு வேலைய முடிச்சிட்டு கிளம்பிடுங்க, மன்னிச்சுடுங்கனு கையெடுத்து கும்பிட்டார். வேலை இன்னும் இருந்துச்சு. நாங்க இருந்தா விஷயம் பெருசாகிடும்ங்குறதால எங்களை உடனே ரிலீவ் பண்ணி அனுப்பிட்டாங்க," என்றனர்.

அழுக்கு உடை அணிந்து 'சேவை' செய்தவர்களை, 'வெள்ளை' உடை அணிந்தவர்கள் அடித்து விரட்டியிருக்கிறார்கள்.



VIEW COMMENTSPOST COMMENT

செல்லாக்காசு : 50 நாட்களை நெருங்குகிறோம்... நிலைமை சரியானதா? #Demonetisation

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளுக்குத் தடை கொண்டு வரப்பட்டு இன்றோடு (23.12 2016) 45 நாட்கள் ஆகிறது. அப்பாவி மக்கள் வங்கிகள் மற்றும் ஏ. டி. எம்-களில் வரிசையில் நிற்கும் நிலை மாறவில்லை. முதலில் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்றார்கள். ஒரு வாரம் என்றார்கள், கடைசியாக 50 நாட்களில் சரியாகி விடும் என்று கூறினார்கள். தற்போது 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இன்னும் நிலைமை சரியான பாடில்லை. பணம் இருக்கும் ஏ.டி.எம்-களைத் தேடி மக்கள் அலைகின்றனர். அதே போன்று வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை கிரடிட் ஆகாமல் பவுன்ஸ் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. 500,1000 ரூபாய் மட்டும் செல்லாக்காசு ஆக மாறவில்லை. சாதாரண மனிதர்களின் வாழ்கையும் தான். இது குறித்து வங்கியிலும் ஏ.டி.எம் - களிலும் நின்றிருந்த மக்களிடம் பேசினோம்.

செக் பவுன்ஞ்ச் அவமானம் ...

எழும்பூரில் இந்தியன் வங்கி வாயிலில் காத்திருந்த ரேணுகாவிடம் பேசினோம். "கடந்த மாதம் 23-ம் தேதி காசோலை டெபாசிட் செய்தேன். இன்னும் என் கணக்கில் கிரெடிட் ஆகவில்லை. நான் மற்றவர்களுக்கு கொடுத்த செக்-கள் பவுன்ஞ்ச் ஆகிவிட்டன.கடன் கொடுக்க வேண்டியவர்கள் முன்பு கூனிக் குறுகி நிற்கின்றேன். மிக வேதனையாக உள்ளது. ஆன்லைன் ஆன்லைன் என்கிறார்கள் இதனால் பாதிக்கப்படப் போவது முதியவர்கள்தான். அவர்களைப் பற்றி யாரும் யோசிக்கவில்லையா?" என்றார்.



ஏ.டி.எம் வாசலில் நின்றிருந்த பாலகிருஷ்ணனிடம் பேசினோம்."பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி எடுத்துக் கொள்வார்கள். ஐந்தும், பத்துமாக குருவி சேர்ப்பது போன்று சேர்த்து வைத்த பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்துச் செலவு செய்யும் நாங்கள், எப்படிப் பணம் எடுக்க முடியும். கார்டில் தேய்த்து செலவு செய்யுங்கள் என்கிறார்கள். கார்டில் பணம் அதிகமாக இருந்தால்தானே தேய்க்க முடியும் பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும்" என்றார்.

என் பணத்திற்கு நானே பிச்சைக்காரன்

"என்னுடைய பணத்துக்கு என்னையே பிச்சைக்காரனாக மாற்றியுள்ளார்கள். அதுதான் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. செய்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு நாள் கணக்கில் வங்கி வாசலில் காத்திருக்கிறேன். அவமானமாக உள்ளது" என்கிறார் அப்துல்காதர்.

சிங்கப்பூரில் இருந்து வந்து தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் காத்திருக்கும் விநோத்திடம் பேசினோம். "ஆயிரம் ரூபாய் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாகத் திண்டாடுகிறேன். இதுவரை பணம் எடுக்க முடியவில்லை. இந்த நிமிடம் வரை பணம் எடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்"என்று கலங்கினார்.

பணம் எடுக்க வந்த செல்வியிடம் பேசினோம்."தெருத் தெருவாக காலையில் இருந்து அலைந்து கொண்டிருக்கிறேன். ஒரு ஏ.டி.எம் கூட திறக்கப்படவில்லை. திறந்துள்ள ஏ.டி .எம்-கள் வேலை செய்யவில்லை. எனது அன்றாடப் பணிகள் எல்லாம் பாதிக்கப்படுகிறது. வேலை பார்ப்பேனா, குடும்பத்தை பார்ப்பேனா, பணத்துக்காக அலைவேனா சொல்லுங்க" என்றார்.

அண்ணாச்சி கடையில் சரக்கு வாங்கும் எனக்கு எதுக்கு ஆன்லைன் !

"பாரிமுனையில் உள்ள நகைக்கடைகளில் 500 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் வங்கிகளில் கிடைக்கவில்லை. மக்களை ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள். ஆன்லைன், ஆன்லைன் என்று சொல்கிறார்கள். அண்ணாச்சி கடையில் சரக்கு வாங்கும் எனக்கு எதுக்கு ஆன்லைன் சொல்லுங்க. முதலில் நாட்டு மக்களை வளரச் செய்துவிட்டு வங்கி கார்டுகளை வழங்குங்கள்" என்றார் வெங்கட்.

ஆன் லைன் ஆன் லைன் என்று சொல்கிறார்கள் படித்தவர்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும். படிக்காத விவசாயிகளும், வேலைக்கார்களும் எப்படிப் பயன்படுத்த முடியும். அவர்கள் எங்கே போவார்கள் அவர்களுக்கு ஏது ஆன்லைன் வசதி, பாஸ்வேர்டு" என்றார் மல்ஹோத்ரா.



20 சதவிகித ஏ.டி.எம்-களே திறந்துள்ளது !

இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச்செயலாளர்.சி பி கிருஷ்ணாவிடம் பேசியபோது,"நாட்டில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் ஏ.டி. எம்-களில் பணம் இல்லை. ஒரு நாளைக்கு நாலாயிரம் கோடி அச்சாகிற பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் உள்ள ஏ.டி.எம்-களில் 80 சதவிகித ஏ.டி.எம் - கள் மூடப்பட்டுள்ளன. 20 சதவிகித ஏ.டி.எம்-கள்தான் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் இரண்டு மூன்று மணி நேரம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

வரும் 30 -தேதி முதல் நிலைமை சரியாகும் என்று ஆர்.பி.ஐ சொல்லியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அது உண்மையா? என்று தெரியவில்லை. ஆனால் வங்கியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களே பணம் இல்லை என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டச்சார்யாவே பணம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

பணப்பற்றாக்குறை வரும் 30-ம் தேதி முதல் சீராக வாய்ப்பில்லை. இந்தியாவில் பணத்தை அச்சடிக்க 4 அச்சகங்கள் மட்டுமே உள்ளது. இந்த அச்சகங்கள் மூலம் தேவையான 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க குறைந்தபட்சம் ஏப்ரல் மாதம் ஆகிவிடும்.

மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் 2,000 ரூபாய் நோட்டை ஏன் தருகிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்கவில்லை. 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற நடைமுறையை ஏன் செயல்படுத்தவில்லை என்று நீதிபதிகளும் கேட்கவில்லை. இப்படி இருக்கிற சூழலில் நிலைமை எங்கே சரியாவது? மத்திய அரசு தனது போக்கை எப்படி மாற்றிக் கொள்ளும்" என்றார்.

50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக எடுக்க முடிவில்லை. 500 மற்றும் 1000 ரூபாய்க்கான தடை அறிவிப்பை திடீரென்று அறிவித்து நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மோடி, அதனை சரிபடுத்தும் நடவடிக்கையை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு !

- கே.புவனேஸ்வரி

ராம மோகன ராவ் திடீரென மருத்துவமனையில் அனுமதி


முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவின் வீடு, தலைமை செயலக அலுவலகம், அவரது மகன் மற்றும் உறவினர்களது வீடு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, ராம மோகன ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, December 23, 2016

' ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் மரியாதை!' -கார்டன் கோரிக்கையை நிராகரித்த பா.ஜ.க. 

vikatan.com

'முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்' என வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்தே தகவல் வெளிவருகிறது. ' அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்படாமல் இருப்பதற்காக கார்டன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

தமிழக அரசின் துறைகளை நோக்கி வருமான வரித்துறையின் பார்வை தீவிரமடைந்து வருகிறது. சேலம், கடலூரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கிகளைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. " ராமமோகன ராவ், அவருடைய மகன் விவேக்
ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள். சேகர் ரெட்டியின் நட்போடு ஆந்திரா, கர்நாடகாவில் தொடங்கப்பட்ட தொழில்கள், பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன. விரைவில் சி.பி.ஐ கஸ்டடிக்கு ராமமோகன ராவ் செல்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன" என விவரித்த தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்,

" சேகர் ரெட்டி வளைக்கப்பட்ட தினத்தில் இருந்தே தூக்கமில்லாமல் தவித்து வந்தார் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ். இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, டெல்லி வரையில் சென்று சில லாபிக்களை செய்து பார்த்தார். அவரிடம் பேசுவதற்குக்கூட டெல்லியில் உள்ள அவருடைய ஐ.ஏ.எஸ் நண்பர்கள் பயந்தார்கள். ' எங்கள் கைகளில் எதுவும் இல்லை. பிரதமர் நேரடியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்' எனப் பதில் சொல்லி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து இருண்ட முகத்தோடுதான் சென்னை வந்தார். 21-ம் தேதி காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வருவதை அறிந்து, கார்டன் வட்டாரத்தின் 'சூத்ரதாரி' எனச் சொல்லப்படுபவரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ' நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்' எனச் சொல்லிவிட்டு, மத்திய இணை அமைச்சர் ஒருவரைத் தொடர்பு கொண்டார் சூத்ரதாரி. போன் எடுத்துப் பேசத் தொடங்கியதுமே, ' ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். நான் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் மரியாதை கொடுக்க முடியும். இந்த மாதிரியான விவகாரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்' எனக் கோபத்துடன் கூறிவிட்டார்.



அடுத்ததாக, பா.ஜ.கவின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் இன்னொரு சூத்ரதாரியைத் தொடர்பு கொண்டு பேசினார். ' நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கறேள். எல்லாம் அவர் பார்த்துண்டு இருக்கார்' எனச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார். இறுதி முயற்சியாக, நிதித்துறை அமைச்சகத்தின் சீனியர் அதிகாரியைத் தொடர்பு கொண்டு பேசினார். ' ரெய்டில் கிடைத்த துல்லியமான தகவல்களைக் கொண்டுதான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நீங்கள் தொடர்பில் வந்தது தெரிந்தாலே, மத்தியில் உள்ளவர்கள் கொந்தளித்துவிடுவார்கள்' எனச் சொல்லிவிட்டார். இதன்பிறகு யாரைத் தொடர்பு கொள்வது என நொந்தபடியே விவாதித்துக் கொண்டிருந்தார் சூத்ரதாரி. 'சென்னையில் இருந்தால் தேவையில்லாமல் தன்னையும் வம்புக்கு இழுப்பார்கள்' என்பதால், நீலாங்கரையில் உள்ள 'கரன்' வீட்டில் அமர்ந்து கொண்டே ஆலோசனைகளைத் தொடர்கிறார். ராமமோகன ராவ் கைது செய்யப்பட்டால், அடுத்த குறி கார்டனை நோக்கித்தான் இருக்கும் எனவும் அச்சத்தில் இருக்கிறார். காங்கிரஸ் முகாமில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டும் அறிவுரைகளைக் கேட்டு வருகிறார். மிக ரகசியமாகவே அனைத்து நடவடிக்கைகளும் இருப்பதால், பிரதமரை எந்த வகையில் சந்திப்பது என்ற ஆலோசனைதான் தீவிரமாக இருக்கிறது" என்றார் விரிவாக.

" சென்னை துறைமுகத்தின் மூலம் மொலாசஸ் ஏற்றுமதியை ராமமோகன ராவுக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்தி வருகிறார்கள். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாகவே கவனித்து வந்தார் தலைமைச் செயலாளர். கரும்பு விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் கரும்பில் இருந்து மொலாசஸ் பிரித்தெடுக்கப்படுகிறது. இதை வாங்கி லண்டனுக்கு விற்பதில் ராமமோகன ராவுக்குக் கிடைக்கும் லாபம், கணக்கில் அடங்காதது. ' புதிதாக வந்த ஒரு கம்பெனிக்கு துறைமுகத்தில் எப்படி இடம் கொடுக்கலாம்' என கப்பல் துறையில் உள்ள முக்கியமானவரிடம், துறைமுக அதிகாரிகள் சண்டைக்குப் போன சம்பவமும் நடந்தது. 'கரும்பு மொலாசஸ் பின்னணியை வருமான வரித்துறை ஆராய வேண்டும்' என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. கார்டனின் அனைத்து பரிவர்த்தனைகளையும் அறிந்தவர் ராமமோகன ராவ். அதை வைத்தே, தனக்கென்று பிரமாண்ட வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். அவர் மீது கைது நடவடிக்கை பாய்வது என்பது சசிகலா வகையறாக்களை நேரடியாக வளைக்கும் முயற்சியாகத்தான் பார்க்கிறார்கள். அதோடு நான்கு அமைச்சர்களின் பரிவர்த்தனைகளையும் தோண்டி எடுத்துவிட்டார்கள். அமைச்சர்கள் பிளஸ் அதிகாரிகள் என கார்டனை நோக்கியே மத்திய அரசின் கரங்கள் நீள்கின்றன" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.

-ஆ.விஜயானந்த்

ரெட்டிக்கு புழல் சிறையில் 'First Class'


முறைகேடாக பணம் பரிவர்த்தனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, அவரது நண்பர் சீனிவாசலு உள்ளிட்ட ஐந்து பேருக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேகர் ரெட்டி சிறையில் முதல் வகுப்பு கேட்டு சென்னை சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் ரெட்டி உட்பட ஐந்து பேரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், புழல் சிறையில் அவர்களுக்கு முதல் வகுப்பு அறையை ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. 
சவூதியில் நர்ஸ் வேலை! இவர்களுக்கு முன்னுரிமை
vikatan.com
சவூதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன்  பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சவூதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு என்ஐசியூ ((NICU), மருத்துவம் & அறுவைசிகிச்சை ((Medical & Surgical)) மற்றும் தீவிரசிகிச்சைப் பிரிவு (ICU) போன்றவற்றில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவத்துடன் 38 வயதிற்குட்பட்ட பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி, 2017 முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. பெண் செவிலியர்கள் 250 படுக்கை வசதி கொண்ட கார்பரேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு துறையில் தொடர்ச்சியாக இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். சவூதி ப்ரோமெட்ரிக் (Saudi pro-metric) தேர்ச்சி மற்றும் IELTS 7 Band மற்றும் TOFEL தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவம் & அறுவைசிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ரூ.41,000 மற்றும் என்ஐசியூ/தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியத்துடன் ரூ.6,300 உணவுப்படியும், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள பெண் செவிலியர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் (அறிவிக்கை எண் (Notification No.037) என தவறாமல் குறிப்பிட்டு கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட், சவூதி புரோமெட்ரிக், IELTS/TOFEL போன்ற சான்றிதழ்களின் நகல்கள்
மற்றும் ஒரு புகைப்படத்துடன் omcleq0037@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களை அறிய 044-22505886/22502267/22500417 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் எண். B-0821/CHENNAI/ CORPN/1000+/ 5/ 308/84 ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.

சேகர் ரெட்டியுடன் திண்டுக்கல் ரத்தினத்துக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி?

:திண்டுக்கல்:

சேகர் ரெட்டியின் கூட்டாளியான திண்டுக்கல் தொழில்அதிபர் ரத்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள முத்துப்பட்டினம். ஆவணத்தான் கோட்டையைச் சேர்ந்த தனது தாய் மாமா தங்கராஜ் ஆதரவில் இருந்து இவர் பூவை மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். பின்னர் சர்வேயராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 1980-ம் ஆண்டு திண்டுக்கல்லுக்கு பணி மாறுதல் பெற்று வந்தார். அப்போது ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது.

எனவே இந்த தொழிலில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது தொழில் பரந்து விரிந்தது. எனவே கடந்த 2005-ம் ஆண்டு சர்வேயர் வேலைக்கு விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு தனது தொழிலை கவனிக்க தொடங்கினார். இதன் விளைவாக வீடுகள் விற்பனை, செங்கல் சூளை, மினரல் வாட்டர், கிரசர் ஆலை என இவரது தொழில் விரிந்தது.

அதன் பின்னர் மணல் குவாரி தொழிலில் இறங்கினார். கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போதுமணல் குவாரி தொழிலில் கொடி கட்டி பறந்த காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் படிக்காசு என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போதைய அமைச்சர்களுடன் ரத்தினம், படிக்காசு ஆகியோருக்கு நெருக்கம் ஏற்பட்டதால் தென் மாவட்ட மணல் குவாரிகள் இவருக்கு கிடைத்தது.

ஆட்சி மாற்றத்துக்கு பிறகு குவாரி தொழில் நட்பு வட்டாரம் மாறியது. கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் முத்துப்பட்டிணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு மணல் குவாரி தொழிலில் கோலோட்சிய சேகர் ரெட்டி வரை விரிந்தது.

சேகர் ரெட்டி மூலம் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் திண்டுக்கல் ரத்தினத்துக்கு சப்-காண்டிராக்ட் கிடைத்தது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் கிராவல் எனப்படும் செம்மண் எடுக்கும் உரிமமும் ரத்தினத்துக் கிடைத்தது. பின்னர் இவர் சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ். மைன்ஸ் நிறுவனத்திலும் இணைந்தார்.

சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது புதிய 2 ஆயிரம் நோட்டுகள் லட்சக்கணக்கில் சிக்கின. இந்த நோட்டுகளை திண்டுக்கல் ரத்தினம் மாற்றிக் கொடுக்க உதவியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ரத்தினம் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் முதன்மை செயல் அலுவலராகவும் உள்ளார். இவை தவிர பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் ரத்தினத்தின் அசுர வளர்ச்சியை கண்டு முக்கிய அரசியல் புள்ளிகளே வியந்து போய் உள்ளனர். பல்வேறு தொழில்களில் கொடி கட்டி பறந்த ரத்தினம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பழைய நோட்டுகளை மாற்ற 6 நாட்களே அவகாசம்


சென்னை:
பழைய நோட்டுகளை மாற்ற 6 நாட்களே அவகாசம்
நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி செல்லாது என்று அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வரும் 30-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே தற்போது டெபாசிட் செய்து புதிய நோட்டு பெற முடியும். அதனால் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யவும் போட்ட பணத்தை எடுக்கவும் கூட்டம் அலை மோதுகிறது.

ஆனால் வங்கிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒவ்வொரு வங்கிகளுக்கும் குறைந்த அளவில் பணம் விநியோகிக்கப்படுவதால் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். தினமும் வங்கிகளில் காத்து நின்றாலும் பணம் கிடைப்பது இல்லை. ரூ.2000, ரூ.4000 என குறைவாக மக்களுக்கு பிரித்து வினியோகிக்கப்படுகிறது.

மேலும் வங்கிகளுக்கு தினமும் பணம் சப்ளை செய்யப்படுவதில்லை. குறைந்த அளவு பணத்தை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பிரித்து கொடுப்பதால் வங்கிகளில் கூட்டம் குறையவில்லை.

பணத்தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் ரூ.500-க்கு மேல் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. ரூ.5000-க்கு மேல் ஒரு முறை மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும். மேலும் அந்த பணம் எந்த வகையில் வந்தது, இதுவரை டெபாசிட் செய்யாமல் இருந்தற்கான காரணம் என்ன என்பதை வங்கி அதிகாரிகள் இருவரிடம் உறுதி மொழியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தது.

ரிசர்வ் வங்கிகளின் இந்த அதிரடி திடீர் உத்தரவு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களிடம் விளக்கம் கேட்டு பெறப்படும் தகவல் எழுத்து பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இந்த நடை முறையால் வங்கி வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டதையடுத்து நேற்று உடனடியாக விலக்கி கொள்ளப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் வரும் 30-ந்தேதிவரை பழைய ரூபாய் நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். அதற்கு எந்த விளக்கமும் கொடுக்க தேவையில்லை என்பதால் வங்கிகளில் மீண்டும் கூட்டம் அலை மோதியது.

பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளது. வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதை தவிர்த்தால் 6 வேலை நாட்கள் இருக்கின்றன. பணத்தை மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நெருங்கி விட்டதால் பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பழைய நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் மீண்டும் நீண்ட வரிசை காணப்படுகிறது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாடக் கூடியவர்கள் பணத் தேவைக்கு வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்படாமல் முடங்கி கிடப்பதால் வங்கிகளை மட்டுமே மக்கள் நம்பி உள்ளனர்.

இதனால் வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில்காத்து நின்று பணம் பெற்று செல்கிறார்கள்.

இந்த நிலையில், அடுத்த வாரம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. டிசம்பர் மாத சம்பளம் வரும் 30-ந்தேதி காலையில் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன் பின்னர் அரசு ஊழியர்கள் ஒய்வூதியதாரர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும். 31-ந்தேதி வங்கிகள் செயல்படும் என்பதால் அன்று முதல் பணப் பிரச்சினை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பண பரிவர்த்தனையை குறைத்து மின்னணு பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மாறினால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மளிகை பொருட்கள் மற்றும் குடும்ப தேவைகளை இனி வரும் காலங்களில் ரூபாய் நோட்டுகள் பரிமாற்றத்தால் சமாளிக்க இயலாது என்பதால் தான் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற பண அட்டைகள் பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

'தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: ஆளுநர், முதல்வருக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை'

முன்னாள் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் தகவல்

தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்கள் சம்பந்தப்பட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவ தற்கு எந்தவித சிறப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆளுநர் உள்ளிட்டவர்களுக்கு முன்கூட் டியே தகவலும் தெரிவிக்க வேண் டியதில்லை என்கிறார் முன்னாள் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் (தமிழ்நாடு) எஸ்.செந்தாமரைக்கண்ணன்.
நேற்று முன்தினம், தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும் அவருக்கு தொடர் புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி நகை, பணம் மற்றும் ஆவ ணங்களை ஏராளமான அளவில் கைப்பற்றினர். இந்த சோதனைகள் குறித்து பல்வேறு விதமாக செய்திகள் வெளியான நிலையில், தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனையிடும் முன்னதாக முதல மைச்சர், ஆளுநர் உள்ளிட்டவர் களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற சர்ச்சை யையும் சிலர் எழுப்புகின்றனர். ஆனால், அப்படி யாரிடமும் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் செந்தாமரைக் கண்ணன்.

அனுமதி தேவையில்லை

“போதிய முகாந்திரம் இருந்தால் வருமான வரித்துறையினர் எந்த இடத்திலும் சோதனை மேற் கொள்ள முடியும். இதில் தனிப் பட்ட முறையில் யாருக்கும் எவ் வித சிறப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை. ஒரு இடத்தில் சோதனைக்கு செல்லும் முன்பாக அதற்கான முகாந்திரங்களை உள்ளடக்கிய திருப்தி குறிப்பு (Satisfaction Note) ஒன்றை வருமான வரித்துறையின் துணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் தயார் செய்வார்.

அந்தக் குறிப்பு வருமானவரித் துறை இயக்குநர் (விசாரணை) பார்வைக்கு வைக்கப்படும். குறிப் பில் உள்ள தகவல்களில் தனக்கு திருப்தி இருந்தால் அதை வரு மான வரித்துறையின் தலைமை இயக்குநருக்கு (விசாரணை) அனுப்புவார் இயக்குநர். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட நபர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்த தலைமை இயக் குநர் வாரண்ட் பிறப்பிப்பார். இதை யடுத்து முறைப்படி சோதனைகள் தொடங்கும்.

மாநில தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்ப வர்களிடம் சோதனைக்கு செல்வ தாக இருந்தால் அதுகுறித்து மத்திய நேர்முக வரிகள் ஆணையத்தின் தலைவர், மத்திய வருவாய்த் துறை செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போது மானது. இவர்கள் மூலமாக இந்தத் தகவல் மத்திய நிதியமைச்சருக்கு தெரிவிக்கப்படும்’’ என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.
சோதனை எப்படி நடத்தப்படும், சோதனையில் கைப்பற்றப்படும் சொத்துகள் எப்படி கையாளப்படும் என்று அவரைக் கேட்டபோது, “மத்திய அரசு அதிகாரிகள் இருவர் முன்னிலையில்தான் சோதனைகள் நடைபெறும். சோதனையில் கைப் பற்றப்படும் பொருட்கள், சோதனை தொடங்கிய நேரம், சோதனை முடிந்த நேரம், சோதனை நடந்த இடத்தில் இருந்தவர்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ‘பஞ்ச்நாமா` (Panchnama) என்ற மகஜரில் எழுதப்படும். சோதனை யின் முடிவில் அந்த மகஜரில் வழக்கு சம்பந்தப்பட்ட நபரிடமும் சாட்சிகளிடமும் கையெழுத்துப் பெறப்படும்
.
சோதனையில் கைப்பற்றப்படும் நகைகள், சம்பந்தப்பட்ட வருமான வரித்துறை அலுவலகத்தின் ‘ஸ்டாராங் ரூமில்’ பாதுகாப்பாக வைக்கப்படும். சொத்துப் பத்திரங் கள் உள்ளிட்ட ஆவணங்கள், வழக்கை விசாரிக்கும் வருமான வரித்துறை அதிகாரியின் பொறுப் பில் இருக்கும்’’ என்றார்.
வழக்கு விசாரணை எப்படி இருக்கும்? இறுதித் தீர்ப்பு எப் போது வரும்? கைப்பற்றப்பட்ட பொருட்களை திரும்பப் பெறமுடி யுமா என்ற கேள்விகளுக்கும் பதிலளித்த செந்தாமரைக்கண் ணன், “கைப்பற்றப்பட்ட ஆவணங் களை சம்பந்தப்பட்ட நபரின் வரு மானத்துடன் ஒப்பீடு செய்து அறிக்கை தயார் செய்வதற்கு 21 மாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும். விசாரணை முடிவில், வருமான வரி கட்ட வேண்டி இருந்தால் அதற் கான தொகை போக மீதியை உரியவரிடம் ஒப்படைப்பார்கள். ஆனால், 90 சதவீத வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்ட நபர்தான் கூடுதலாக வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.

முதல்கட்ட தீர்ப்பை எதிர்த்து முதலில் வருமான வரித்துறை (மேல்முறையீடு) ஆணையரிடம் மேல் முறையீடு செய்யலாம். அதுவும் திருப்தி இல்லாவிட்டால் வருமானவரித் துறையின் மேல் முறையீட்டு நடுவர் மன்றத்தை அணுகலாம். இதற்கு அடுத்தபடி யாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரைக்கும் போக முடி யும். எனவே, ராமமோகன ராவ் மாதிரியான அதிகாரிகள் சம்பந்தப் பட்ட வழக்குகளில் இறுதித் தீர்ப்பை எட்டுவதற்கு 10 ஆண்டுகள்கூட ஆகலாம்’’ என்றார்.


சசிகலாவைச் சந்திக்காத ஓ.பி.எஸ்.! -பின்னணி என்ன? 

மிழக அமைச்சர்களின் முகங்களில் இயல்புநிலை திரும்பவில்லை. தலைமைச் செயலாளரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் வீட்டில் சோதனை என வருமான வரித்துறையினர் உறக்கமே இல்லாமல் சோதனை நடத்துகின்றனர். 'ரெய்டின் பின்னணியில் ஓ.பி.எஸ் இருக்கலாம் என கார்டன் தரப்பில் உறுதியாக நம்புகிறார்கள்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

வேலூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை வளையத்திற்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. கடந்த மூன்று நாட்களாக நடக்கும் சோதனையில், அமைச்சர்களுக்கு இணையாக ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக் ஆகியோரிடம் ஆவணங்களும் தங்கமும் பிடிபட்டிருக்கிறது. 'முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கு பிறகே, வருமான வரித்துறை சோதனை வேகமெடுத்தது' என கார்டன் வட்டாரத்தில் உறுதியாக நம்புகிறார்கள். பிரதமரைச் சந்திக்க ஓ.பி.எஸ்ஸுடன் தம்பிதுரையும் உடன் சென்றார். ஆனால், தம்பிதுரை வருவதை பிரதமர் அலுவலகம் விரும்பவில்லை. ஓ.பி.எஸ் மட்டுமே பிரதமரை சந்தித்தார். தமிழகத்தின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தாலும், ஆட்சி அதிகாரத்தில் நடக்கும் இடையூறுகளைப் பற்றித் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, கார்டன் தரப்பில் இருந்து வரும் நெருக்குதல்களையும் விவரித்திருக்கிறார். அதன் விளைவாகவே, ராம மோகன ராவ் உள்பட கார்டன் வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களை வளைத்தது வருமான வரித்துறை" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 
"சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பாக, ஓ.பி.எஸ் உள்பட அ.தி.மு.கவின் ஐவரணியில் இருந்த சிலரது வீடுகளில் கார்டன் டீம் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய உறவினர்கள் ஆகியோரது வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, தி.மு.க தலைவர் கருணாநிதி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டும், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எந்தப் பதிலும் சொல்லவில்லை. இந்த ரெய்டின் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் உள்பட சிலர் இருந்தார்கள். அவர்கள் மூலமாக ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இப்போது மத்திய அரசுக்கு இணக்கமாக இருக்கிறார் ஓ.பி.எஸ். தேர்தல் நேரத்தில் தன்னை பழிவாங்கியவர்களை, இப்போது பழிவாங்கத் தொடங்கிவிட்டார்.

டெல்லிக்குச் சென்றிருந்தபோது, நடக்கப் போகும் விஷயங்களை ராம மோகன ராவ் அறிந்து வைத்திருந்தார். எப்படியாவது ரெய்டு நடவடிக்கையில் இருந்து தப்பிவிட வேண்டும் என சில காரியங்களில் இறங்கினார். எதுவும் பலிக்கவில்லை. தலைமைச் செயலகத்திற்குள் நுழைவதற்கும் ஓ.பி.எஸ் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. சசிகலாவுக்கு நெருக்கமான ராம மோகன ராவ் குறிவைக்கப்படுவதை எதிர்பார்த்தே அவர் காத்திருந்தார். தற்போது பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான இளங்கோவனின் அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. '51 கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும்' தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களுக்குள் ஒருங்கிணைப்பாளராக இருந்து, கார்டன் வட்டாரத்திற்கு பாலமாக இருந்து வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரை வளைப்பதன் மூலம் நேரடியாக மன்னார்குடி உறவுகளின் பரிவர்த்தனைகளை வளைக்க முடியும். அதன் அடிப்படையிலேயே சோதனை தீவிரமாக நடந்து வருகிறது" என்றார் விரிவாக. 

"டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு, தற்போது வரையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை நேரில் சந்திக்கவில்லை. பொதுக்குழு கூட்டத்திற்கு முதலமைச்சர் என்ற முறையில் அவரும் பங்கேற்பார். 'அங்கு தனக்கு எதிராக சிலர் பேசலாம்' என்பதையும் உணர்ந்து வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். இருப்பினும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அரசுப் பணிகளை கவனித்து வருகிறார். மத்திய அரசின் நெருக்குதல்கள் அனைத்தும் கார்டனை மையமிட்டே நடக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், கார்டனின் அதிகார மையங்கள் டெல்லி வட்டாரத்தில் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராம மோகன ராவ் கைது செய்யப்பட்டால், கார்டனின் கணக்கு வழக்குகளை முடக்கிவிடுவார்கள் என்பதால் மன்னார்குடி தரப்பில் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். ஜனாதிபதி மாளிகை வட்டாரம், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சர்கள் என பல தரப்பிலும் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். 'தங்கள் பக்கம் கணக்கு வழக்குகள் சரியாக இருக்கிறது' என தகவலைப் பரப்பி வருகின்றனர். ராம மோகன ராவ் கைது செய்யப்பட்டால், வருமான வரித்துறை அதிகாரிகள் கார்டனுக்குள் நுழைவது உறுதி. அதை எதிர்கொள்வது குறித்துதான் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது" என்கின்றனர் தலைமைக் கழக வட்டாரத்தில். 

வருமான வரித்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அச்சத்தோடு கவனித்து வருகிறார்கள் தமிழக அமைச்சர்கள். 
-ஆ.விஜயானந்த்

ராமமோகன ராவ் - குடும்பத்தினரிடம் அமலாக்கதுறை இன்று விசாரணை


சென்னை, 

தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகன ராவ், தொழில் அதிபர் சேகர்ரெட்டியுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டதை வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் கண்டுபிடித் தனர்.கடந்த 8-ந்தேதி சேகர் ரெட்டியை சுற்றி வளைத்த வருமான வரித்துறையினர், அவரது வீடுகள், அலு வலகங்களில் சோதனை நடத்தி ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கத்தை கைப் பற்றினார்கள். பிறகு சேகர் ரெட்டி கைதானார்.

அதன் தொடர்ச்சியாக முன்னாள் தலைமை செய லாளர் ராமமோகன ராவ் வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை நடத் தினார்கள். அதே நேரத் தில் அவரது மகன் மற்றும் உறவினர்களின் 13 இடங் களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் ராம மோகனராவின் வீட்டில் இருந்து ரூ.5 கோடி தங்கம், ரூ.30 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராம  மோகனராவின் மகன் விவேக் வீட்டில் இருந்து சுமார் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட் டது. இவர்களது வீடுகளில் நேற்றும் 2-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் ஏராள மான சொத்து ஆவணங்களும் சிக்கியுள்ளன.

ராமமோகன ராவ் வீடு, தலைமைச் செயலக அலு வலகம், மகன் விவேக் வீடு, அவரது 6 அலுவலகங்கள், நண்பர் அமலநாதன் வீட்டில் சிக்கிய நகைகள், பணம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் சிக்கிய தங்கம், ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை  அதி காரிகள் மதிப்பிடும் பணியைத் தொடங்கி உள்ள னர். ரொக்கப் பணத்தை வங்கி அதிகாரிகள், பணம் எண் ணும் எந்திரங்கள் உதவியுடன் செய்து வருகிறார்கள்.

அது போல தங்க, வைர நகைகள் அதிக அளவில் மீட்கப்பட்டுள்ளதால் அவற்றை நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் கணக் கிட்டு வருகிறார்கள். 10-க் கும் மேற்பட்ட நகை மதிப் பீட்டாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகை, பணத்தை மதிப்பிடும் பணி இன்று முடிந்து விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

அடுத்த கட்டமாக  இந்த நகைகள், பணம் எப்படி வந்தது? எத்தகைய வருவாய் மூலம் சம்பாதிக்கப்பட்டது? என்ற விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ராமமோகன ராவிட மும் அவரது மகன் விவேக் கிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.அந்த விசாரணை தகவல் கள் மற்றும் உறவினர்களி டம் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு அறிக்கையாக தயாரித் துள்ளனர். அந்த அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) அமலாக்கத் துறையிடம் வருமான வரித்துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.

இதன் காரணமாக ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக் குள் வர உள்ளனர். ராம மோகன ராவும் அவர் குடும் பத்தினரும் முறைகேடான வழிகளில் எப்படி பண பரிமாற்றம் செய்தனர் என்ற விசாரணையை அமாக்கத் துறை அதிகாரிகள் நடத்து வார்கள்.
ராமமோகன ராவின் தொலை பேசி உரையாடல் கள் மிக முக்கியமான ஆதார மாகக் கருதப்படுகிறது. சேகர் ரெட்டியுடன் போனில் அவர் பேசியவை அனைத்திலும் பல நூறு கோடி ரூபாய் பண பரிமாற்ற தகவல்களாக பதிவாகி இருப்பதாக கூறப் படுகிறது. அமலாக்கத் துறைக்கு இது மிகவும் வலு வான ஆதாரமாக கருதப் படுகிறது.

ராமமோகன ராவின் கம்ப்யூட்டரிலும் பல தகவல் கள் கிடைத்துள்ளதாம். மேலும் ரகசிய அறையில் கிடைத்த ஆவணங்களும் மலைக்க வைப்பதாக இருப்ப தாக கூறப்படுகிறது.
எனவே ராமமோகன ராவை நேரில் அழைத்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இன்றே அந்த விசாரணை தொடங்கும் என்று தெரி கிறது. ராமமோகன ராவ் மகனிடமும் விசாரணை நடைபெற உள்ளது.

ராம மோகனராவ், விவேக் ஆகியோர் முறைகேடுகள் செய்திருப்பது உறுதி செய் யப்பட்டால் அவர்கள் மீது அமலாக்கத் துறை அதி காரிகள் நடவடிக்கை எடுப் பார்கள். ராமமோகன ராவ் மீது விசாரணை பிடி இறுகியுள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்த வி.ஐ. பி.க்கள் இன்னும் கலக்கம் தீராமல் உள்ளனர்.
இதற்கிடையே ராமமோ கன ராவ் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 30 லட்சம் புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ராமமோகன ராவுக்கு இவ் வளவு புதிய ரூபாய் நோட்டு கள் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...