Monday, March 4, 2019

ஒடிசாவில் 108 மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் காணவில்லை: துணை ஆட்சியர் நேரில் ஆய்வு

Published : 03 Mar 2019 20:06 IST

மால்காங்கிரி (ஒடிசா)


ஒடிசாவில் மெட்ரிகுலேஷன் தேர்வெழுதிய 108 மாணவர்களின் விடைத்தாள்கள் திடீரென காணாமல் போனதை அடுத்து துணை ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் தேர்வு மையத்திற்கு விரைந்துள்ளனர்.

ஒடிசாவில் மால்காங்கிரி மாவட்டத்தின் தேர்வு மையம் ஒன்றில் மாணவர்களின் விடைத்தாள்கள் காணாமல் போன சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.

இச்சம்பவம் பாட்டியா எஸ்எஸ்டி உயர்நிலைப் பள்ளி அதிகாரிகள் பாட்டியா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து மால்காங்கிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெக்மோகன் மீனா தெரிவித்ததாவது:

''மால்காங்கிரி மாவட்டத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி யொன்றில் இன்று காலை மெட்ரிகுலேஷன் பொதுத் தேர்வில் கணித பாடப்பிரிவில மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்த பிறகு கிட்டத்தட்ட 108 மாணவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாள்கள் பள்ளி வளாகத்திலிருந்து காணாமல் போயுள்ளன.

விடைத்தாள்கள் திடீரென காணாமல் போயுள்ளதால் தேர்வாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விடைத்தாள்கள் காணாமல் போன சூழ்நிலையில் இது குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்துவதற்காக காவல் உதவி கண்காணிப்பாளர் யு.சி. நாயக் தலைமையிலான குழு ஒன்று பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கும் மாநில மெட்ரிகுலேஷன் தேர்வு நடத்தும் மாநில பள்ளிக் கல்வித்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக மாவட்ட துணை ஆட்சியர் ராமேஸ்வர் பிரதான் உள்ளிட்ட உயரதிகாரிகள் தற்போது பள்ளிக்குச் சென்றுள்ளனர்''.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

காலகண்டி மாவட்டத்தில் கணித கேள்வித்தாள்களின் போட்டோ நகல்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் மூன்று ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒரு நாள் கடந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக, ஒடியா, இந்தி மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்காக கேள்வித்தாள்களும் சமூக வலைதளத்தில் வைரலாகியதால் தேர்வுக்கூட பொறுப்பில் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் மாநில பள்ளிக் கல்வித்துறை ஒடிசாவில் கடும் பாதுகாப்போடு தேர்வுகளை நடத்தி வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024