Wednesday, May 8, 2019

சிங்கப்பூரிலிருந்து பைக்கில் சாகசப் பயணம் மேற்கொண்ட தமிழர்கள்!

By DIN | Published on : 08th May 2019 04:11 AM 



சிங்கப்பூரில் இருந்து அதிநவீன பைக்குகளில் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழர்கள்.

சிங்கப்பூரில் இருந்து பைக் மூலம் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ள மூன்று தமிழர்கள் சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு திங்கள்கிழமை வந்தனர். 

சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தமிழர்களான அருணகிரி, பன்னீர்செல்வம், பாலசந்தர் ஆகிய 3 பேரும் கடந்த மார்ச் 21ஆம் தேதி அதிக திறன் கொண்டு தயாரிக்கப்பட்ட ராட்சத பைக்குகளில் சாலை வழியாக தங்களின் சாகசப் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள் சிங்கப்பூரில் தொடங்கி இலங்கை, மலேசியா, மியான்மர், தாய்லாந்து, நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வந்தனர்.
நம் நாட்டின் 16 மாநிலங்ககளில் நெடுஞ்சாலை வழியாகப் பயணம் மேற்கொண்ட இந்த 3 பேரும் கேரள மாநிலத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு தமிழகத்திற்கு வந்தனர். மாமல்லபுரம் நகருக்கு திங்கள்கிழமை வந்தனர். தங்கள் பயணம் குறித்து அவர்கள் கூறியது:

சிங்கப்பூரில் இருந்து மார்ச் மாதம் 21-ஆம் தேதி எங்களின் சாகசப் பயணத்தைத் தொடங்கினோம். பைக்கில் வரும்போது சில நாடுகளில் கடல் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அந்தந்த நாடுகளில் உரிய அனுமதி பெற்று கப்பலில் சென்று, பின்னர் பைக்கில் பயணம் தொடர்ந்தோம். இதுவரை நாங்கள் 17 ஆயிரம் கி.மீ. தூரத்தை அதிநவீன கருவிகள் பொருத்திய ராட்சத பைக்குகளில் கடந்துள்ளது பெருமிதம் அளிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மூன்று பேரும் மாமல்லபுரம் நகரில் திங்கள்கிழமை முழுவதும் வலம் வந்தனர். ஆங்காங்கே தங்கள் பைக்குகளை நிறுத்திவிட்டு சிற்பங்களைக் கண்டு ரசித்தனர். அப்போது நகரவாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் இந்த மூவரின் பைக்குகளையும் வேடிக்கை பார்த்தனர். 

அதன் பின் மூவரும் செவ்வாய்க்கிழமை காலையில் பயணத்தைத் தொடங்கி சென்னைக்கு புறப்பட்டனர். அங்கு செவ்வாய்க்கிழமை இரவு தங்கி விட்டு மீண்டும் பயணம் தொடங்கவிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...