Thursday, August 15, 2019

நான் சொல்லியும் கலெக்டர் கேட்கல; இன்ஸ்பெக்டரை திட்டிக்கிட்டே இருந்தார்!’ - எஸ்.பி சிபிசக்கரவர்த்தி

லோகேஸ்வரன்.கோ

``அத்திவரதர் தரிசனத்தின்போது, ஒட்டுமொத்த காவல்துறையினரை கலெக்டர் திட்டினார். நான் வாய் திறந்தால் பிரச்னை பெரிதாகிவிடுமோ என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன்’’ என்று சம்பவத்தின்போது அருகிலிருந்த திருவண்ணாமலை எஸ்.பி சிபிசக்கரவர்த்தி கூறினார்.


திருவண்ணாமலை எஸ்.பி சிபிசக்கரவர்த்தி

கடந்த 4 நாள்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தின்போது, வி.ஐ.பி-க்கள் வரிசையில் பொதுமக்கள் சிலரை உள்ளே அனுப்பிய இன்ஸ்பெக்டர் ஒருவரை சக காவலர்கள் முன்னிலையில் கலெக்டர் பொன்னையா ஒருமையில் கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு `சஸ்பெண்டு செய்வேன்’ என்று மிரட்டினார்.


இன்ஸ்பெக்டரை கண்டிக்கும் கலெக்டர்

இந்தச் சம்பவத்தின்போது அருகிலேயே திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி சிபிசக்கரவர்த்தி உட்பட காவல்துறை உயரதிகாரிகள் சிலர் நின்றிருந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கலெக்டர் பொன்னையா விமர்சனத்துக்குள்ளானார். காவல்துறையினரும் கொந்தளித்தனர்.

 கலெக்டருக்கு எதிராக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்து `போஸ்டர்’ ஒட்டியது. கலெக்டர் பொன்னையாவிடம் விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. சம்பவத்தை நேரில் பார்த்த திருவண்ணாமலை எஸ்.பி சிபிசக்கரவர்த்தி, அன்று நடந்ததைப் பற்றி நம்மிடம் விரிவாகக் கூறியிருக்கிறார்.

அத்திவரதர்

``கலெக்டரின் செயல்பாடு அன்று `ஹைப்பராக’ இருந்தது. ஒட்டுமொத்த காவல்துறையினரையும் தவறாகத்தான் பேசினார். நான் குறுக்கிட்டு சமாதானம் செய்ய முயன்றேன். எனினும், கலெக்டர் பொன்னையா அமைதியாகவில்லை. நம்மை ஒருவர் மதிக்கவில்லை என்று நினைக்கும்போது நாம் என்ன செய்ய முடியும். பிறகு, அங்கிருந்து நான் தள்ளி வந்துவிட்டேன்.

இரண்டு மூன்று பேர் டிக்கெட் இல்லாமல் இன்ஸ்பெக்டரை முட்டிவிட்டு ஓடிவிட்டனர். குழந்தைகளுடனும், வயதானவர்களுடனும் வரும் பக்தர்கள் கெஞ்சுகிறார்கள், அழுகிறார்கள். காவல்துறையினர் ஒன்றும் மெஷின் கிடையாது. மனிதாபிமான அடிப்படையில் சிலவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டும். கலெக்டர் கேட்கலாம். அவருக்கான அதிகாரம் இருக்கிறது.


திருவண்ணாமலை எஸ்.பி சிபிசக்கரவர்த்தி

ஆனால், கேட்ட விதம் சரியில்லை. இன்ஸ்பெக்டரை கலெக்டர் கண்டிக்கும்போது நான் ஏன் கேட்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டுக் கேட்பதைவிட புத்திசாலித்தனமாகச் செயல்படுவதுதான் சரியாக இருக்கும் என்பதால், நான் அமைதியாக இருந்தேன்’’ என்றார். இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல் கையாண்டதாகக் காவல்துறை உயரதிகாரிகள் எஸ்.பி சிபிசக்கரவர்த்தியை பாராட்டினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.03.2024