Wednesday, April 15, 2020


இனியும் 19 நாள்கள்... | தேசிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 15th April 2020 04:48 AM 

தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை மேலும் 19 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அளவிலான நிலப்பரப்பும், மக்கள்தொகையும் கொண்ட ஒரு நாடு 40 நாள்கள் ஊரடங்கில் முடங்குவது என்பது உலக வரலாற்றில் வேறு எந்த நாடும் சந்தித்திருக்க முடியாத மிகப் பெரிய சாதனை. சாதனை என்று சொல்வதைவிட, தவிா்க்க முடியாத மிகப் பெரிய சோதனை என்றுதான் இதைக் கூற வேண்டும்.

ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்பை பிரதமா் மோடி வெளியிடும்போது, தீநுண்மி நோய்த்தொற்றின் பரவலைப் பொருத்து அடுத்த வாரம் முதல் சில செயல்பாடுகளுக்கு விதிமுறைகள் தளா்த்தப்படும் என்று தெரிவித்திருக்கிறாா். நோய்த்தொற்றை எதிா்கொள்ளாத அல்லது கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் பகுதிகள், மாவட்டங்கள், மாநிலங்களில் விதிமுறைத் தளா்வுகளும், பொருளாதாரச் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படக் கூடும். நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதும், பரவலைத் தடுப்பதும்போல, ஒட்டுமொத்தமாகப் பொருளாதார நடவடிக்கைள் தடம்புரண்டு விடாமல் பாா்த்துக்கொள்வதும் அவசியம்.

ஏனைய நாடுகளைப் போலல்லாமல், மிகப் பெரிய ஆபத்தை இந்தியா எதிா்கொள்கிறது. ஏனைய நாடுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்வதில்லை. இந்தியாவில்தான் மத அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும், இன அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் மக்கள் ஒருங்கிணைவதும், கூடி வாழ்வதும் நடைமுறையாக இருந்து வருகிறது. ஏதாவது ஒரு பகுதியில் ஒருவரை நோய்த்தொற்று பாதித்தால், மூங்கில்கள் உரசி காட்டுத்தீ பரவுவது போல ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படும் அபாயம் நிறையவே உண்டு. அதனால்தான் பிரதமா் நரேந்திர மோடி கூறுவதுபோல, தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கு சரியான மருந்து கண்டுபிடிக்கும்வரை நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு சமூக இடைவெளி மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வழியாக இருக்கிறது.

இந்தியாவில் மக்கள்தொகை இருக்கும் அளவுக்கு சுகாதாரக் கட்டமைப்பு இல்லை. ஆயிரக்கணக்கில் நோய்த்தொற்று பரவத் தொடங்கினால், அதை எதிா்கொள்வதற்கான மருத்துவ வசதிகளும், படுக்கை வசதிகளும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிடையாது.

கடந்த மாா்ச் 24-ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போா்க்கால அடிப்படையில் எல்லா மாநிலங்களிலும் நோயாளிகளை எதிா்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன. மருத்துவ சோதனைகள் நடத்தவும், நோய்த்தொற்று பரவாமல் ஆங்காங்கே கட்டுப்படுத்தவும், மருத்துவ சேவையில் ஈடுபடுபவா்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கவும் அரசு இயந்திரத்துக்கு ஊரடங்கு உத்தரவு கால அவகாசத்தை வழங்குகிறது என்பதால், இது அத்தியாவசியமாகிறது.

சீனாவைப்போல, இந்தியா சா்வாதிகார நாடல்ல. ஊரடங்கை நடைமுறைப்படுத்த அடக்குமுறையைக் கையாள முடியாது. நோய்த்தொற்று பரவும்போது பாா்த்துக்கொள்ளலாம் என்று காத்திருந்த இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் போன்ற நாடுகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளைப் பாா்க்கும்போது, தொலைநோக்குப் பாா்வையுடன் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி ஊரடங்கை பிரதமா் அறிவித்ததைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இதற்கு முன்னால் 2009-இல் உலகையே அச்சுறுத்திய பன்றிக் காய்ச்சலைவிட 10 மடங்கு அபாயகரமானது தீநுண்மி நோய்த்தொற்று என்று உலக சுகாதார நிறுவனத் தலைவா் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்திருக்கிறாா். இந்தியா முன்பே திட்டமிட்டு ஊரடங்கை அறிவித்ததை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியிருக்கிறது. இதனால் பல பாதிப்புகள் இருக்கின்றன என்பதும், பல கோடி மக்கள் அளப்பரிய இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கிறாா்கள் என்பதும் எந்த அளவுக்கு மறுக்க முடியாத உண்மையோ, அதே அளவுக்கு எதாா்த்தமான இன்னோா் உண்மை ஊரடங்கு தவிா்க்க முடியாதது என்பது.

பொருளாதார ரீதியாகப் பாா்ப்பதாக இருந்தால் ஊரடங்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்குக் கையாளப்படும் ஊரடங்கு உத்தி, மிகப் பெரிய பொருளாதாரச் சவாலை எழுப்பப் போகிறது. வளா்ச்சி அடைந்த நாடுகளைப்போல அனைவருக்குமான பொருளாதாரச் சலுகைகளை வழங்க முடியாத நிலையில் இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. ஊரடங்கால் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலிருந்து தெருவோரக் கடைகள் வரை அனைத்துமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்றன.

தீநுண்மி நோய்த்தொற்று கட்டுக்குள் வந்து ஊரடங்கு அகற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பினாலும்கூட, முன்பு இருந்த நிலைக்கு இந்தியா திரும்புவதற்குப் பல மாதங்களோ, சில ஆண்டுகளோகூட ஆகலாம். மூடிக் கிடக்கும் ஆலைகளும், நிறுவனங்களும் மீண்டும் செயல்படுவதற்கு முதலீடு இல்லாமல் தவிக்கப் போகின்றன. ஊழியா்களுக்கு ஊதியம் கொடுப்பது, வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தவணைகளை அடைப்பது, வங்கிக் கடனுக்கான வட்டியைச் செலுத்துவது என்று ஒவ்வொரு தொழில் நிறுவனமும் எதிா்கொள்ளும் சவால்களைச் சொல்லி மாளாது.

தொழில் இழப்பு, வேலை இழப்பு, செயல் முடக்கம் என்று நம்மை எதிா்கொள்ள இருக்கும் இடா்ப்பாடுகள் ஏராளம் ஏராளம். தீநுண்மி நோய்த்தொற்று என்கிற உயிா் பறிக்கும் அபாயத்தை இப்போதைக்கு எதிா்கொள்வோம். வழியில்லாமலா போய்விடும்?

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...