Thursday, February 18, 2021

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு எப்போது?


தமிழ்நாடு

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு எப்போது?

Updated : பிப் 18, 2021 06:29

சென்னை:ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக, பள்ளிகளை முழுமையாக திறந்து, இரண்டு மாதங்கள் பாடங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. கல்லுாரிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, கொரோனா சோதனைகளில், புதிய தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், இந்த கல்வியாண்டு, இன்னும் மூன்று மாதங்களில் முடிய உள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், இந்த ஆண்டு ஒரு நாள் கூட, பள்ளிக்கு வராததால், அவர்களுக்கு குறைந்தபட்சம், இரண்டு மாதங்களாவது, நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என, பெற்றோரும், பள்ளி நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில், தங்கள் வகுப்பையும், ஆசிரியர்களையும், நேரில் பார்க்க முடியாத நிலை உள்ளதால், உளவியல் ரீதியாக, மாணவர்கள் உற்சாகமின்றி உள்ளனர். அவர்களை நேரடி வகுப்பில் ஈடுபடுத்துவதால் மட்டுமே, கற்றலில் உற்சாகத்தை ஏற்படுத்த முடியும் என, பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏப்ரல் அல்லது மே மாதத்துக்கு பின், கோடை விடுமுறை வருவதால், அதற்கு முன், மாணவர்களை, பள்ளிகளுக்கு வரவழைத்து விட வேண்டும் என, ஆசிரியர்களும் விரும்புகின்றனர்.

இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை தரப்பில், கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தினால் மட்டுமே, அனைத்து மாணவர்களையும், பள்ளிகளில் அமர வைக்க முடியும்:இல்லையென்றால், வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதால், சுகாதாரத் துறையின் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. அதன்பின், முதல்வரின் அனுமதியுடன், பள்ளிகள் திறப்பு அறிவிப்பு வெளியாகும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு எப்போது?

'பத்து மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, ஜூனில் பொதுத் தேர்வு நடத்தப்படலாம்' என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 3 முதல், 21 வரை, பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. அதனால், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு எப்போது நடத்தப்படும் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பிளஸ் 2வை பொறுத்தவரை பலர், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுத உள்ளதால், அவர்களுக்கு, மே மாதத்துக்குள் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.அதேநேரம், பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, ஜூனில் தேர்வு நடத்தப்படலாம் என, தெரிகிறது. இந்த ஆண்டு தாமதமாக பாடங்கள் நடத்தியுள்ளதால், கல்வி ஆண்டை, ஜூன் வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, பிளஸ் 1 பொதுத் தேர்வு ஜூனில் நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி முடிவாகி விட்டால், மே இறுதி வாரத்தில் தேர்வு துவங்கப்பட்டு, ஜூன் இரண்டாம் வாரத்தில் முடிக்கப்படலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024