Thursday, September 10, 2015

எதிர்கொள்வது எப்படி?


Dinamani


By ஆசிரியர்

First Published : 10 September 2015 01:25 AM IST


தேசிய குற்ற ஆவணப் பதிவுகளின்படி இந்தியா முழுவதிலும் 2014-ஆம் ஆண்டு 9,622 சைபர் கிரைம் என்கிற தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் தொடர்பாகப் புகார்கள் பெறப்பட்டு, 5,752 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகார்கள், கைதுகள் வரிசையில் மகாராஷ்டிரம் (1879/942), உத்தரப் பிரதேசம் (1737/1223), கர்நாடகம் (1020/372), தெலங்கானா (703/429), ராஜஸ்தான் (697/248) ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. காரணம், இந்த மாநிலங்களின் தலைநகரங்கள், பெருநகரங்கள் என்பதால்தான். மும்பை, லக்னெü, தில்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டா, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள்தான் அதிக தகவல் தொழில்நுட்பக் குற்றங்களைக் கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பக் குற்றப் புகார்கள் 172 மட்டுமே. இதில் கைதானோர் எண்ணிக்கை 120. நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் 69% அதிகரித்திருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் இவ்வாறு பின்தங்கியிருக்கக் காரணம், தகவல் தொழில்நுட்பக் குற்றப் புகார்களை தமிழ்நாடு காவல் துறை பதிவு செய்வதில்லை. முதல் தகவல் அறிக்கையைத் தவிர்க்கும்விதமாக புகார்களைப் பதிவு செய்யாமல், புகார்களைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீது மட்டுமே வழங்குகிறது என்று தேசிய மனித உரிமை ஆணையம் வெளிப்படையாகக் குறை கூறியுள்ளது.
எல்லா பெருநகரங்கள் போலவே சென்னையில் தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் அதிகம்தான். அவை குற்றப் பதிவு பெறாமல், வெறும் புகார் கடிதமாகப் போவதற்குக் காரணம் காவல் துறை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களும்தான். இந்தக் குற்றங்களில் பெரும்பாலானவை தனிநபர் அந்தரங்கத்தில் ஊடுருவிப் பார்த்தல் அல்லது அதைக் கொண்டு மிரட்டல் ஆகியவையே. இதில் பாதிக்கப்படுவோர் புகார் பதிவாகாமலேயே தொடர்புடையவர் தண்டிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். புகாரைப் பதிவு செய்யாமல் தண்டிப்பது கட்டப்பஞ்சாயத்தில் மட்டுமே சாத்தியம்.
பொதுவாக, அடுத்தவர் வங்கிக் கணக்கில் நுழைந்து பணம் எடுத்தல், அடுத்தவர் பணஅட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுத்தல், மென்பொருள் திருட்டு, சமூக வலைதளத்தில் தவறாக அல்லது ஆபாசமாகச் சித்திரித்தல் அல்லது மனம் புண்படும் விதமாக விமர்சனம் செய்தல் ஆகியவை மட்டுமே தகவல் தொழில்நுட்பக் குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன.
நமக்குத் தெரியாமலேயே நிறைய தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன. நமக்கு வரும் "ஸ்பேம்' அஞ்சல்கள் அனைத்தும் அத்துமீறலே, தகவல் தொழில்நுட்பக் குற்றம்தான். உங்கள் இ-மெயில் முகவரிக்கு நிறைய வைரஸ் அஞ்சல்களை அனுப்பி, அதைத் திறந்தால் உங்கள் கணினி பழுதாகச் செய்வதும் வெறும் விளையாட்டு அல்ல. அதுவும் தகவல் தொழில்நுட்பக் குற்றம்தான்.
ஒரு குறிப்பிட்ட இணைய முகவரிக்கு ஆயிரக்கணக்கான போலி இ-மெயில்கள் அனுப்பி, சர்வரை ஸ்தம்பிக்கச் செய்வதும் (இ-மெயில் குண்டு மழை) தகவல் தொழில்நுட்பக் குற்றம். உங்கள் நண்பரின் இ-மெயில் முகவரியை ஆபாச இணையதளத்துக்குத் தந்து, அதன்மூலம் தொடர்ந்து உங்களுக்கு இ-மெயில் தொல்லை வரச் செய்வதும்கூட தகவல் தொழில்நுட்பக் குற்றம்.
கட்செவி அஞ்சலில் வரும் ஒரு காட்சியை, வெறுமனே பார்த்ததோடு நிற்காமல், அதைத் தனது நண்பர்களுக்குப் பகிரும்போது அவரும் குற்றம் புரிந்தவரில் ஒருவராகச் சேர்ந்து விடுகிறார் என்பது தெரியாமலேயே விளையாட்டாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். "இது எனக்கு வந்தது, அதை அனுப்பினேன்' என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்க இயலாது; அதற்கு சட்டம் இடம் தராது என்பது இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால், இத்தகைய பகிர்வுகளுக்காக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.
முகநூலில் சில காட்சித் தொகுப்புகளைத் திறக்க முற்பட்டால், "இதைப் பகிர்ந்து கொண்டால் மட்டுமே இதைப் பார்க்க முடியும்' என்ற வாசகம் திரையில் தோன்றும். இது ஒரு முகநூல் அங்கத்தினரை அவருக்கே தெரியாத குற்றத்தில் மாட்டிவிடக் கூடியது. அந்தக் காட்சித் தொகுப்பு எதைக் குறித்தது என்பதே தெரியாமல், முன்னதாகவே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை ஏன் உருவாக்குகிறார்கள் என்பதை இளைஞர்கள் சிந்திப்பதே இல்லை.
ஆபாசக் காட்சி மட்டுமல்ல, மனதைப் பீதிக்குள்ளாக்கும் வன்முறைக் காட்சிகளைப் பகிர்வதும்கூட குற்றம். அண்மையில், வேலூரில் ரௌடி மகா, வீதியில் கல்லால் தாக்கி கொல்லப்பட்ட பயங்கரக் காட்சிகள் முகநூலிலும், கட்செவி அஞ்சலிலும் எந்தக் கட்டுப்பாடும் சுய தணிக்கையும் இல்லாமல் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஜிகாதி ஒருவர் பேசுவதாக ஒரு காட்சி கட்செவி அஞ்சல் மூலம் பரப்பப்பட்டு மத வெறுப்புணர்வை ஊக்குவித்தது.
வகுப்பறையில் மாணவர் அல்லது மாணவி செல்லிடப்பேசியில் ஆபாசக் காட்சிகளை ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தால் அது ஒழுங்கீனமா அல்லது பள்ளியை விட்டே நீக்கத்தக்க தகவல் தொழில்நுட்பக் குற்றமா என்பது கல்வித் துறையில் இப்போது விவாதிக்கப்பட்டு வருகிற பெரிய தலைவலியான விவகாரம். ஒரு மாணவர் தான் மட்டும் ஆபாசப் படம் பார்த்தால் அது ஒழுங்கீனம். ஆனால், பல மாணவர்களையும் அழைத்துக் காட்டுவதும் அவர்களது செல்லிடப்பேசிக்கு அதைப் பகிர்வதும் தகவல் தொழில்நுட்பக் குற்றம் என்கிறார் ஒரு தலைமையாசிரியர்.
குற்றம் என்று சொல்லாமலேயே நம்மை குற்றவாளியாக்கிக் கொண்டிருக்கிறது தகவல் தொழில்நுட்பம்!

ஒரே பதவி; ஒரே பென்ஷன்

logo


மத்திய அரசாங்க பணியில் இப்போது 48 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், ஓய்வுபெற்ற பிறகு பென்ஷன் பெறுகிறவர்களின் எண்ணிக்கை 55 லட்சம் ஆகும். இதேபோல, ராணுவத்தில் இப்போது 13 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், 24 லட்சத்து 25 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரும், 6 லட்சம் போர் விதவைகளும் பென்ஷன் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு கடந்த 42 ஆண்டுகளாக பெரிய மனக்குறை இருந்தது. பொதுவாக மத்திய அரசாங்க ஊழியர்கள் 60 வயதுவரை பணியாற்றிய பிறகுதான், பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்கள். ஆனால், ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றுபவர்கள் 35 வயதில் இருந்து 37 வயதுக்குள் ஓய்வுபெற்றுவிடுகிறார்கள். அவர்களில் கமிஷன் பதிவு பெறாத அதிகாரிகளாக அல்லது இளநிலை கமிஷன் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுபவர்கள் மட்டும் 40 வயது முதல் 45 வயதுவரை பணியாற்றமுடியும். ஆனால், 10 சதவீத சிப்பாய்களால்தான் இந்த பதவி உயர்வை பெறமுடியும். இதற்குமேல் உள்ள பதவியில் உள்ளவர்களும் 50 வயது முடிந்து ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். தலைமை பதவிக்கு செல்பவர்களால் மட்டுமே 60 வயதுவரை பணியாற்ற முடியும்.

இப்படி குறைவான காலமே பணியாற்றுவதால் அவர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்காமல், அதன் தொடர்ச்சியாக சம்பளத்தைக் கணக்கிட்டு வழங்கப்படும் பென்ஷனும் குறைவாகவே இருக்கிறது. இதுதவிர, மற்றொரு குறையும் அவர்களுக்கு இருந்தது. 1973–ம் ஆண்டுவரை ராணுவத்தினருக்கு அவர்கள் கடைசியில் வாங்கிய சம்பளத்தில் 70 சதவீதம் பென்ஷனாக கிடைத்தது. பிறகு 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதுபோல, பல்வேறு மாற்றங்கள், சம்பள மாற்றங்கள் போன்றவற்றால் ஒரே பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர்களின் பென்ஷன், அவர்கள் ஓய்வுபெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் ஒருவர் கூடுதலாகவும், அதே பதவியில் இருந்த மற்றவர் குறைவாகவும் பெற்றனர். இந்த பாகுபாட்டை நீக்கும் வகையில், இப்போது கொள்கை அளவில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். அதாவது, ஒரே பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள், அவர்கள் எந்த ஆண்டில் ஓய்வுபெற்றிருந்தாலும், ஒரே பென்ஷன் தொகையை இனி பெறுவார்கள். ஆனால், ஏற்கனவே ஆண்டுக்கு 74 ஆயிரத்து 896 கோடி ரூபாயை பென்ஷன் வழங்குவதற்காக செலவழிக்கும் மத்திய அரசாங்கம், இப்போது ராணுவத்தினர் பென்ஷன் சீரமைப்புக்காக கூடுதலாக 8 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை செலவழிக்க வேண்டியது இருக்கும். நிச்சயமாக இது நிதி பற்றாக்குறையில் இன்னும் விரிசலை ஏற்படுத்தும்.

இதுமட்டுமல்லாமல், எல்லை பாதுகாப்பு படை போன்ற அமைப்புகளும், மத்திய–மாநில அரசு ஊழியர்களும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தினால் நிச்சயமாக கூடுதல் நிதி தேவைப்படும். அந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இந்த நிலையில், நேற்று மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் 7–வது சம்பள கமிஷன் பரிந்துரை வரஇருக்கிறது. அதிலும், 16 சதவீத சம்பள உயர்வு, பென்ஷன் உயர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசுக்கு ஆகும் கூடுதல் செலவுகளை புதிதாக வரிகளை உயர்த்தி மக்கள் தலையில் சுமத்தாமல், நிதி திரட்ட வேறு செலவுகளை குறைத்தோ, வேறு வழிகளில் நிதியை உருவாக்கவோ முயற்சி எடுக்கவேண்டும்.

Tuesday, September 8, 2015

Meat lovers get more than their pound of flesh...TOI CHENNAI

The way many people in Madurai and its surroundings see it, if a person can eat half a kilogram of mutton during a meal, it is a sign of good health.

So much is the city's love for meat that sellers venture out to do business even on the days when it is banned, like Gandhi Jayanthi and Mahavir Jayanthi. Madurai has its own meat delicacies, like the famed kari dosa, in which generous amounts of nicely minced meat are spread on a traditional dosa, besides other dishes like mutton chukka and chicken chukka.

The high demand for meat has also driven up competition among the sellers, who have begun to adopt novel ways to promote their business. Posters advertising meat stalls can be found in different parts of the city. Nagamalai, a seller, offers four free eggs for every kg of mutton purchased from the stall. Others offer masala packets, spices or extra meat like half kg of chicken for every kg of mutton.

Some meat sellers offer vegetables that could be used while cooking non-vegetarian items. As onions have become less affordable, some stalls give away onions free of cost along with meat to attract customers. During festivals like Diwali, lucky draws are organised in meat stalls. Lucky buyers can even get free home appliances.

Not just posters, after the advent of local channels on cable television, some of the meat sellers have begun to advertise on television as well. For instance, Krishnan Mutton & Broilers in Nelpettai gives regular advertisements in local channels. "Meat is always in demand in the city. I have modernised my stall with all facilities and felt like advertising about it," said S Muthukrishnan who has been running the stall for last 23 years. He sells at least 1000kg of mutton on Sundays and spends Rs 1 lakh per month on advertisements.

On Sunday, there was a serpentine queue in front of his stall because the meat is of good quality, Nelpettai residents said. "Mutton and Madurai appears to be interconnected. People here prefer to relish on meat items. Some youngsters also gorge on meat to tone up their muscles," commented S Anand, a resident of Virattipathu.

The city consumes nearly 7 lakh kg of chicken on weekends, and nearly half as much mutton because the latter is expensive. "Of late, even vegetables have become costlier. It is cheaper to buy half kg of chicken and cook it than to prepare a good vegetarian platter," said L Kaliswari, a homemaker.

The food habit of the region is associated with land and culture, said eminent author Tho Paramasivan. In an arid landscape where vegetables are scarce, meat from livestock and poultry becomes a staple diet for people.

"There is nothing surprising with the food pattern of Madurai, which has evolved over the period. The most recent introduction is the fast food meat items, which have been introduced by corporate food giants," he said.

Paramasivan also commented that a region like Madurai was quick to accept changes in food habit. For instance, country chicken has become popular recently in place of broiler chicken because the former is healthier, he said.

செல்போன் பேச்சு தடைபடுவதா?

logo


ஒரு காலத்தில் ஆடம்பர சாதனமாக இருந்த டெலிபோன், இன்று செல்போன் என்ற பெயரில் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு என்ற வரிசையில், கையில் செல்போன் என்பதும் சேர்ந்துவிட்டது. பணக்காரர்கள் முதல், ஏழை தொழிலாளிவரை செல்போன் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்றநிலை உருவாகிவிட்டது. உலகம் உங்கள் கையில் என்ற நிலையை செல்போன் ஏற்படுத்திவிட்டது என்றால் மிகையாகாது. அரசாங்கமும் இப்போது அனைத்து சேவைகளையும் செல்போன் மூலமாகவே மேற்கொள்ளும் நிலையில், இப்போது ரெயில் டிக்கெட் எடுப்பது என்றாலும் சரி, வங்கி சேவை என்றாலும் சரி, செல்போன்தான் அதற்கு வழி. 125 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில், தற்போது 98 கோடி செல்போன்கள் மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் முதல் 70 லட்சம்வரை புதிய செல்போன் இணைப்புகள் கூடிக்கொண்டேபோகிறது. உலகில் செல்போன் மார்க்கெட் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், சமீபகாலங்களாக செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய குறை என்னவென்றால் பேசிக்கொண்டே இருக்கும்போது, இடையில் கால் தடைபட்டுவிடுகிறது. ஒரு நம்பரை போட்டு பேசிக்கொண்டிருக்கும்போது இடையிடையே அந்த கால் தடைபட்டுப்போய்விடுவதால், மீண்டும் மீண்டும் போனில் அந்த இணைப்புக்காக அந்த நம்பரை போடவேண்டியது இருக்கிறது. இதைத்தான் ‘கால் டிராப்’ என்கிறார்கள். இதனால், தேவையில்லாமல் கூடுதலாக கால் செய்வதால் கூடுதலாக செலவு ஒருபுறம், நேரம் விரயம், ஒரு தடவை பேசுவதற்கு 2 அல்லது 3 முறை போன் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் என பல சிரமங்கள் ஏற்படுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டில் உள்ள செல்போன் இணைப்புகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்திய பிரதமர், சாதாரண மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், செல்போன் கம்பெனிகள் தங்கள் பொறுப்பில் இருந்து நழுவக்கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளது, பொதுமக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த பிரச்சினையைத் தீர்க்க பிரதமர் 45 நாட்கள் காலக்கெடு கொடுத்துள்ளார். இந்த ‘கால் டிராப்’ அதாவது இடையில் பேச்சு தடைபடுவதற்கு காரணம் போதிய அளவு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வழங்கப்படாதது, போதிய அளவு செல்போன் டவர்கள் அமைக்கப்படாதது என்று கூறப்படுகின்றன.

ஸ்பெக்ட்ரம் வழங்கவேண்டியது அரசின் கடமை. விரைவில் இதற்கான ஏலத்தை நடத்தி மத்திய அரசாங்கம் வழங்கவேண்டும். செல்போன் டவர்களால் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்று இப்போது சொல்கிறார்கள். எனவே, அரசு கட்டிடங்களில் அமைக்கவேண்டும். இதற்கிடையில், ‘டிராய்’ என்று அழைக்கப்படும் இந்திய தொலைதொடர்பு ஆணையம் அளித்துள்ள பரிந்துரை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகும். செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே 5 வினாடிக்குள் கால் தடைபட்டால் அந்த காலுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது, 5 வினாடிகளுக்குமேல் என்றால் கடைசி பல்ஸ் ரேட்டுக்கான கட்டணத்தை வசூலிக்கக்கூடாது, கால் தடையை ஈடுசெய்யும் வகையில் கூடுதலாக இலவச நேரத்தை ஒதுக்கவேண்டும் அல்லது அதற்கான கட்டணத்தை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்பதுபோல பல பரிந்துரைகளை செய்துள்ளது. எல்லாவற்றையும் விட, ‘கால் டிராப்’ ஆகாத சூழ்நிலையை உருவாக்குவதுதான் சாலச்சிறந்தது. ‘கால் டிராப்’ தொடர்பான ஆய்வு டில்லி, மும்பையில் நடப்பதுபோல, ஒவ்வொரு ஊரிலும் நடத்தி, இந்த குறையே இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

Monday, September 7, 2015

பெண் எனும் பகடைக்காய்: பெருகும் பொம்மைக் கல்யாணங்கள்

Return to frontpage


கட்டுரையாளர்:  பா.ஜீவசுந்தரி

ஒரு சமுதாயத்தைப் பிடித்து இழுத்து வைத்திருக்கும் பத்தாம் பசலித்தனமான பழக்க வழக்கங்களை ஒழிக்க நாற்பது ஐம்பது ஆண்டுகள்கூட ஆகின்றன. அப்படியும் தீண்டாமை போன்ற பழக்கங்களை இன்னமும் நம்மால் ஒழிக்க முடியவில்லை. ஆனால், பெரும் பாடுபட்டு உருவாக்கிய சில முன்னேற்றங்கள் அற்பமான செயல்களால் சிதைக்கப்படும்போது ஒரு தலைமுறை வாழ்க்கையே பின்னுக்கு இழுக்கப்படுகிறது.

தீண்டாமை ஒழிப்பு, விதவை விவாகம், பெண் கல்வி, பால்ய விவாகங்களைத் தடுத்து நிறுத்துதல் என நூறாண்டுகளாகப் போராடி உருவாக்கப்பட்ட சீர்திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்படுகின்றனவோ என்ற அச்சம் அடி வயிற்றைக் கலக்குகிறது.

உதாரணமாக, சமீப காலங்களில் சிறு நகரங்களிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நடக்கும் ஒரு கூத்து இது. 14 வயது தொடங்கி 16 வயதுக்குள்ளேயே சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவதைக் கேள்விப்படுகிறோம். சட்டப்படி இது குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். என்றாலும், சட்ட மீறல்கள் சர்வ சாதாரணமாக நிறைவேறுகின்றன. பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும் சிறுமிகளை அவர்களின் படிப்பை பாதியில் நிறுத்தி ஏன் இப்படி குடும்பச் சங்கிலிக்குள் பிணைத்துக் கட்டுகிறார்கள்?

குடும்பத்தின் கவுரவ சின்னம்?

ஒட்டுமொத்தக் குடும்பத்தின் கவுரவமும் பெண் குழந்தையின் மீதுதான் எழுதப்பட்டுள்ளதாக ஒரு பிம்பம் கட்டப்படுகிறது. ஆண் குடிக்கலாம்; கூத்தடிக்கலாம்; அதனால் குடும்ப கவுரவம் காற்றில் பறந்து விடாது. ஆனால் பெண் கல்வி கற்றால், நாலு எழுத்து படித்தால், சமூகத்தில் பொறுப்புகளைச் சுமந்தால் கவுரவம் காற்றில் பறந்துவிடுமாம். “நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். கழுதையைக் காலாகாலத்தில் கட்டி வைத்துவிட்டால் நம்ம பொறுப்பு கழிந்தது” என்ற எண்ணம் இன்றைக்கும் பெற்றோரிடம் நிலவுவது வியப்பளிக்கிறது.

பள்ளியில் படிக்கும்போதே திருமணம் செய்து வைக்க முயலுகிறார்கள். இத்தகைய திருமணம் காதும் காதும் வைத்தவாறு நடப்பதாகக் கூறப்படுகிறது. பெற்றோரே நடத்தி வைக்கும் ரகசியத் திருமணங்களாகத்தான் இவை நடைபெறுகின்றன. இதை மீறிச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டுத் தடுக்கப்படும் குழந்தைத் திருமணங்களே செய்தியாகி நமக்குத் தெரியவருகின்றன. இதைவிட அதிகமான திருமணங்கள் வெளியுலகம் அறியாமலேயே நடந்து முடிகின்றன.

இவ்வளவுக்கும் திருமணம் நடைபெறும் கோயில்கள், திருமண மண்டபங்கள் இங்கெல்லாம் திருமணம் நடத்துவதற்காக இடத்தை உறுதி செய்ய வரும்போதே மணப்பெண்ணின் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டும் என்பது தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது. இவை அல்லாமல் கிராமங்களில், சின்னச் சின்னக் கோயில்களில் வைத்துத் தாலி கட்டப்படும் திருமணங்கள்தான் சட்ட மீறலாக நடைபெறுகின்றன. உள்ளூர் அளவில் உறவினர்கள் மத்தியில் நடைபெறும்போது யாரும் இதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

தங்கள் வசதிக்கேற்ப மணமகனைத் தேர்ந்தெடுத்துத் திருமணத்தையும் முடிக்கிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் என்றால் அவர்கள் அனைவரின் பாடும் பெரும்பாடுதான். அதிலும் மூத்த பெண் மிகவும் பாவப்பட்டவள். அந்தப் பெண் பிரசவத்திலோ வேறு காரணங்களாலோ மரணமடைந்தால், இரண்டாவது பெண்ணையும் அந்த நபருக்கே மனைவியாக்குவதும் அடுத்த கட்ட நடைமுறை. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்ற சென்டிமென்ட் முலாம் அதற்குப் பூசப்பட்டுவிடும்.

இளவயது காதல்

இன்றைய நவீன தகவல் தொழில்நுட்பங்கள் பள்ளிப் பருவத்திலேயே காதலையும் நர்சரிப் பள்ளிகள் போல வளர்த்துக்கொண்டிருக்கின்றன. பற்றாக்குறைக்கு நம் திரைப்படங்களும் அதற்குத் தீனி போடுகின்றன. இதனால் பதின் பருவக் காதல் இங்கு தவிர்க்க முடியாத அம்சமாகிறது. இந்த வயதுக்கே உரிய இனக்கவர்ச்சிதான் இது என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களை நெறிப்படுத்துபவர்களாகப் பெற்றோர் இருந்துவிட்டால் இந்த நிலையிலிருந்து அவர்களை மீட்டுவிட முடியும். அல்லது ‘நல்ல’ ஆசிரியர்களால் இந்தக் காரியத்தைச் செயல்படுத்த முடியும். இல்லையெனில் அந்தக் குழந்தைகள் எந்த விபரீத முடிவையும் நோக்கி நகர்த்தப்படுவார்கள். நாலு பேர் கொண்ட சமூகமே அதை வெற்றிகரமாக நகர்த்தி செயல்படுத்திக் காட்டும்.

இப்போது இன்னொரு ஆபத்து பெரும் பூதமெனக் கிளம்பியிருக்கிறது. சாதி விட்டு சாதி காதலித்துவிட்டால், ‘கவுரவமாக’இருவரில் ஒருவர் காணாமல் போய்விடும் துரதிர்ஷ்டமும் இதில் அடங்கியிருக்கிறது. இதனாலேயே ‘கவுரவம்’ பாதுகாக்கப்பட வேண்டும் என்று தங்கள் மகள்களின் இளம் பருவக் கனவுகளைச் சிதைக்கும் ஆயுதமாகத் திருமணத்தைக் கையிலெடுக்கிறார்கள். பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை பள்ளிப் பருவம் என்பது எத்தனை சிக்கல் நிறைந்ததாக இப்போது மாறிப் போயிருக்கிறது?

இந்தச் சூழலில் சில ஆசிரியர்கள் ஆபத்பாந்தவர்களாக இருந்து அவர்களைக் காத்திருக்கிறார்கள். தங்கள் மாணவிகள் யாருக்காவது திருமணம் என்று கேள்விப்பட்டால் உடனடியாகத் தலையிட்டு அதை நிறுத்திவிடுகிறார்கள். சில நேரங்களில் சட்டத்தின் உதவியை நாடவும் அவர்கள் தயங்குவதில்லை.

உரிய வயதை எட்டாத மைனர் பெண் குழந்தைகளுக்குத் திருமணங்களை நடத்துவதில் வழக்கமாக தர்மபுரி மாவட்டம் பேர் பெற்றது. இப்போது அது தென் மாவட்டங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிக்கொண்டிருப்பது மாபெரும் அச்சுறுத்தல். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த மாதம் ஐந்து சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

இந்த மாவட்டத்தில் மைனர் பெண்களின் திருமணம் குறித்த புள்ளி விவரக் கணக்கு பகீரென்கிறது. கடந்த 2013-ம் ஆண்டில் 80 திருமணங்களும் 2014-ல் 93 திருமணங்களும் முழுமை பெறாத இந்த 2015-ம் ஆண்டின் எட்டு மாதங்களில் இது வரை 70 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அப்படியானால் சட்டத்தின் பார்வைக்கு வராத, வந்தும் கண்டுகொள்ளப்படாத திருமணங்கள் இதில் எத்தனை?

சென்னை அரசு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் தோழி ஒருவருடன் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்ததில் மருத்துவ ரீதியாக அவர் அளித்த தகவல்களும் அதிர்ச்சிகரமானவை. உடலளவில் முழு வளர்ச்சி பெறாத இந்தச் சிறுமிகள் கர்ப்பம் தாங்கவோ, பிள்ளை பெறவோ இயலாதவர்கள். அதை மீறி அவர்கள் குழந்தைகளைப் பிரசவிக்கும்போது அதன் பின் விளைவுகளையும் சேர்த்தே அவர்கள் பெற்றெடுக்கிறார்கள் என்றார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

வாசகர் வாசல்: பெண் என்னும் பெரும் சக்தி!..கட்டுரையாளர் தனசீலி திவ்யநாதன்

Return to frontpage

அரை நூற்றாண்டுக்கு முன்னால் பெண்ணுக்குக் கல்வி வாய்ப்பு அத்தனை எளிதல்ல. ‘பேதைமை’ (அறிவின்மை) பெண்ணுக்கு அழகு என கருதப்பட்டது. மெல்ல மெல்ல பால் கணக்கு, கடிதம் எழுதத் தெரிந்தால் நல்லது என்று ஆரம்பக் கல்வி பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்டது. பெண் பருவம் அடையும்வரை படிக்க அனுப்புவது, உள்ளூரில் உள்ள பள்ளியில் எந்த வகுப்புவரை உள்ளதோ அதுவரை படிக்க அனுப்புவது என்ற நிலை மாறி சில சேவைத் துறைசார் படிப்புகளுக்குப் பெண்கள் கல்லூரிகளுக்கு அனுப்பபட்டனர். பெரும்பாலும் ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சி போன்றவையே பெண்களுக்கான படிப்புகளாக இருந்தன. தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல், பாதுகாப்புத் துறைகள் அவர்களுக்கு மிக அன்னியமான துறைகள். பெண்களின் அதிகபட்ச லட்சியம் ஆசிரியர் அல்லது செவிலியர் ஆவது.

ஏற்றம் தந்ததா கல்வி?

கடந்த இருபது ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் பெண்களின் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. இதில் கல்வி பெரும்பங்கை வகிக்கிறது. குழந்தைத் திருமணம் தீவிரமாகத் தடைசெய்யப்பட்டதால், குறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்புவரை வந்த பெண்கள், பின்னர் கல்லூரிகளில் நுழைந்தனர். இதன் விளைவாகப் பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுத் துறைகளில் நுழைந்தனர். கலைக் கல்லூரிகளைக் காட்டிலும் அதிகமாகத் திறக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள், பெண்கள் தொழில்நுட்ப அறிவு பெற வழிசெய்தன. கனவுகளோடு, லட்சியத்தோடு கல்வி கற்று அதிக மதிப்பெண் பெற்ற பெண்களில் பலர் திருமணம், குடும்பம் என செட்டிலாகிவிட்டனர். பலர் இதனால் கனவு காண்பதே இல்லை.

பெண் வாழ்வின் இலக்கு என்ன?

என்ன கல்வி பயின்றாலும், அது திருமண நோக்குடனேயே பயிலப்படுகிறது. ஒரு காலத்தில் பெண்ணைப் படிக்கவைத்துவிட்டால், படித்த மாப்பிள்ளை பார்க்க வேண்டும். ஒன்று படித்த மாப்பிள்ளை அல்லது அதிக சீர்செய்ய வேண்டும் என்ற கவலை பெண் கல்விக்குத் தடையாக இருந்தது. காலப்போக்கில், படித்த மாப்பிள்ளைகள், படித்த பெண்களைத் தேடுகின்றனர் என்பதால் பெண்ணுக்குக் கல்வி தரப்பட்டது. பிறகு வேலைக்குப் போகும் பெண்களுக்கே திருமணச் சந்தைகளில் மதிப்பிருக்கிறது என்பதால் பெண் வேலைக்குப் போகும் சுதந்திரம் பெற்றாள். கனவுகளோடு கல்லூரி முடித்து தேர்வுகள், நேர்காணல்கள் என எல்லாவற்றையும் கடந்து வேலையில் சேர்ந்து தன் சொந்தக் காலில் பெண் நின்றாள். வேலை தந்த மதிப்பு, சுயசார்பு, சுதந்திரம் என்பவற்றை அவள் அனுபவிக்கும் முன்பே, ஐயோ வயதாகிவிட்டதே, திருமணம் செய்துவைக்க வேண்டுமே என்ற கடமை பெற்றோர் கண்முன்னே வந்துவிடுகிறது. திருமணத்தின் முதல் நிபந்தனையே பெண் வேலையை விட்டுவிட்டுக் கணவன் வீட்டுக்கு வருவது அல்லது கணவன் இருக்கும் ஊருக்கு மாற்றலாகி வருவது. பெண்களில் பெரும்பாலானவர்களின் பதவி உயர்வு, தலைமைக் கனவுகள், லட்சியங்கள் போன்றவை திருமணம், குடும்பம், தாய்மை ஆகியவற்றில் கரைந்து காணமல் போகின்றன.

லட்சியத்தை அடைய வழி என்ன?

திருமணம் ஆண்-பெண் என இரு பாலருக்கிடையே நிகழும் செயல் என்றாலும், ஏன் பெண்களின் கனவுகளும் லட்சியங்களுமே கலைக்கப்படுகின்றன? காரணம், நம் குடும்ப அமைப்பு பெண்ணையே ‘இல்லத்து அரசி’யாகப் பார்க்கிறது. குடும்ப வாழ்வு பெண்ணுக்கு உரியதாகவும், பொதுவாழ்வு ஆணுக்கு உரியதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். சோறு பொங்கி, பரிமாறி, கணவன், குழந்தைகளைப் பேணுவதோடு பெண்கள் வாழ்வு முடிந்து போவது நியாயமில்லை. பல்வேறு காரியங்களில் மேலைநாடுகளைப் பின்பற்றும் நாம், பெண்களின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவரச் சில மாற்றங்களையாவது செய்ய வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற நம்பிக்கையை உருவாக்குவது, அனைத்துப் பணிகளிலும் இருவருக்கும் சம வாய்ப்புகளைச் சாத்தியப்படுத்துவது, பெண்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பது, வீட்டு வேலைகளிலிருந்து அவர்களை விடுதலை செய்வது, அல்லது பகிர்ந்துகொள்வது, குழந்தை வளர்ப்பைக் கணவன்-மனைவி இருவருக்கும் பொதுவாக்குவது, நமது குடும்ப அமைப்புகளை ஆண் அதிகாரம் மையம் கொண்ட நிலையிலிருந்து இருவரும் சுதந்திரமும் பொறுப்பும் கொண்ட அமைப்புகளாக மாற்றுவது, பள்ளிக் கல்வி மட்டுமே சாத்தியப்படும் பெண்களுக்கு பள்ளிகளிலேயே திறன் மேம்பாட்டை, தொழில் கல்வியைத் தருவது, பெண்கள் அதிகம் ஈடுபடும் விவசாயம், சிறுதொழில்கள், நெசவு போன்றவற்றில் அரசு அதிக கவனம் செலுத்துவது, பெண்களுக்கு ஏற்ற, வசதிப்பட்ட நேரங்களில் பெண்களுக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்வது, பெண்கள் தொழில் செய்யும் இடங்களிலேயே குழந்தைகள் காப்பகங்களை அமைப்பது, பள்ளிகளில் பள்ளி நேரத்துக்குப் பிறகு பெற்றோர் வேலை முடிந்து வரும்வரை குழந்தைகளைப் பாதுகாக்க ஏற்பாடுகளைச் செய்வது என்று பெண்களின் வாழ்வில் மாற்றத்தை விதைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.

கனவுகள் மெய்ப்படும் காலம்

திருமணம் என்ற இலக்கைக் கடந்து பெண்கள் தங்களுக்கான கனவுகளைக் காண வேண்டும். அதை நோக்கிய திட்டமிடலும் தொடர் பயணமும் வேண்டும். சாதனைப் பெண்களை முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டும். தன்னை அலங்கரித்து, தொலைக்காட்சியில் தொலைத்து, லட்சியமின்றி வாழும் வாழ்வுக்கு முடிவு காண வேண்டும். இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் சரிப்பாதி இனமான பெண்ணினம் முடங்கிக் கிடந்தால், நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படவே செய்யும். பெண்களின் முன்னேற்றம், பெண்ணை உயர்த்துவதோடு, ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை நிச்சயம் உயர்த்தும். பெண்களே, உங்களுக்கான கனவுகளை நீங்களே காணுங்கள், அது மெய்ப்படப் பயணம் செய்யுங்கள்!

கூலிப்படையை விரட்டிப் பிடித்த ஈரோடு போலீஸ்...பரபரப்பு தகவல்கள்!

vikatan.comகூலிப்படையை விரட்டிப் பிடித்த ஈரோடு போலீஸ்...பரபரப்பு தகவல்கள்!
நான்கு மணி நேர ஆப்ரேஷனில் இதை நிரூபித்துக்காட்டியிருக்கிறது ஈரோடு காவல்துறை. அதுவும் சினிமா பாணியில் கார், பைக், ரன்னிங் சேஸிங் செய்து ஒரு உயிரை மீட்டிருக்கிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரோடு நகர காவல்நிலையத்திற்கு அழுதபடி வருகிறார் பாக்கியம் என்கிற பெண்மணி. டூட்டியில் இருந்த இன்ஸ்பெக்டர் என்ன ஏதென விசாரிக்க அவர் சொன்ன தகவல் பகீர் ரகம்.

கருங்கல் பாளையம் பகுதியைச்  சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அதே பகுதியைச்  சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதில் செந்தில்குமாரின் ஆட்கள் ஆறுமுகத்தை அடித்துவிட அதற்குப்  பதிலாக செந்தில்குமாரை போட்டுத்தள்ள முடிவெடுத்திருக்கிறார் ஆறுமுகம். 

உடனே இதுகுறித்து ஈரோட்டைச்  சேர்ந்த தனது நண்பர் சின்னத்தம்பியை நாடியிருக்கிறார். சின்னத்தம்பி பெருந்துறையைச்  சேர்ந்த முத்து என்பவரை நாட முடிவில் திருநெல்வேலியிலிருந்து கூலிப்படை வரவழைக்கப்பட்டிருக்கிறது. பத்து லட்சம் ரூபாய் ரேட்டும் பேசப்பட்டிருக்கிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் இரண்டு நாட்கள் ஈரோட்டில் முகாமிட்டிருந்த கூலிப்படை செந்தில்குமார் வாக்கிங் போகும் போது போட்டுத்தள்ள முயற்சித்திருக்கிறது. அதில் செந்தில்குமார் தப்பித்துவிடுகிறார். 

கூலிப்படையிடம் பணம் இல்லாததால் சின்னத்தம்பியிடம் அட்வான்ஸாக இரண்டு லட்சம் கேட்டிருக்கிறது. அதற்கு ஆறுமுகத்திடம் வாங்கித்தருகிறேன் என போக்குக் காட்டியிருக்கிறார் சின்னத்தம்பி. இதில் கோபமான கூலிப்படை சின்னத்தம்பியைக்  கடத்திக்கொண்டுபோய் வைத்துக் கொண்டு அவரின்  மனைவியிடம் 2 லட்சம் தந்தால் தான் உன் கணவரை உயிரோடு விடுவோம் என மிரட்டியிருக்கிறது. உடனே ஆறுமுகத்தை தொடர்புகொண்டு பேசிய சின்னத்தம்பியின் மனைவிக்கு இருபதாயிரம் மட்டுமே கொடுத்திருக்கிறார் ஆறுமுகம். 

கூலிப்படை கேட்டபடி பணம் தராவிட்டால் தனது கணவரை கொன்றுவிடுவார்களோ என பயந்த பாக்கியம் கடைசியில் நாடியது காவல்துறையை. அதன்பிறகு தான் நாம் மேலே சொன்ன சேஸிங் நடந்திருக்கிறது.

என்ன நடந்தது என ஏ.டி.எஸ்.பி பாலாஜி சரவணனிடம் கேட்டோம். அவர் கூறியது சினிமா காட்சிகளை மிஞ்சும் ரகம்.

நேரம் காலை 9.30
 மணிக்கு எஸ்.பி சிபிசக்கரவர்த்தி சார் எங்களை அழைத்தார். வந்தோம்திருநெல்வேலியை சேர்ந்த ஒரு கூலிப்படை ஒருவரை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கொண்டுவந்தால் தான் உயிரோடு விடுவோம் என மிரட்டியிருக்கிறது. அந்த நபரை காப்பாற்றுவதோடு கூலிப்படையையும் பிடித்தாக வேண்டும் என்றதோடு அதற்கான டீமையும் ரெடி செய்தார். 

நேரம் காலை 10 மணி. 
அரை மணி நேரத்தில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.  எஸ்பி  சிபிசக்கரவர்த்தி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பிக்கள். ஆறு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறையைச்  சேர்ந்த 20 பேர் தான் அந்த தனிப்படை.

சின்னத்தம்பியின் மனைவி பாக்கியத்திற்கு காவல்துறையே ஒரு லட்சம் ரூபாயை ரெடி செய்து கொடுத்து அவரயும் அவரது சகோதரரையும் ஒரு டூவீலரில் அனுப்பிவிட்டு, பின்னாலேயே 20 பேர் கொண்ட 6 தனிப்படையும் கார் பைக் என்று வாகனங்களில் விரைந்தோம். அனைவருமே சாதாரண உடை போட்டிருந்தோம். குறிப்பாக எங்கள் எஸ்பி தனி ஆளாக பைக்கில் ஹெல்மெட் போட்டபடி பின்தொடர்ந்தார்.

நேரம் காலை 11.30.
 முதலில் கூலிப்படை சொன்ன பெருந்துறைக்குச்  சென்றோம். உடனே அவன் தொடர்பு கொண்டு நந்தா கல்லூரி அருகில் வர சொன்னான். அங்கும் சென்றோம். மறுபடியும் தொடர்புகொண்டவன் வாய்க்கால்மேடு பகுதிக்குப்  பணத்துடன் வர சொன்னான். அங்கு சென்றோம். 

நேரம் 12 மணி. 
அப்போது டூவீலரில் வந்த ஒருவன் பணப்பையை வாங்கியதும் மடக்கினோம். ஆனாலும் அவன் தப்பித்து தனது டூவீலரை விரட்ட தொடங்கினான். அப்போது எதிரே வந்த எஸ்.பி. ஓங்கி உதைத்தார். அதிலும் லாவகமாகத்  தப்பித்து மீண்டும் பைக்கில் விரைந்தான். நாங்களும் பின்தொடர்ந்து சுமார் 200  மீட்டர் தூரம் கார் மற்றும் பைக்குகளில் விரட்டிச் சென்றோம். எங்களது வேகத்திற்கு ஈடுகொடுக்க  முடியாத கொலையாளி டூவீலரை போட்டுவிட்டு வாய்க்கால் பகுதிக்குள் ஓட தொடங்கினான். நாங்கள் அவனை விடாமல் துரத்திப்பிடித்தோம். இந்த சம்பவம் அனைத்துமே மெயின் ரோட்டிலேயே நடந்ததாலும், நாங்கள் யாரென்று தெரியாததாலும் அங்கிருந்த பொதுமக்கள் பயந்து அலறத்தொடங்கிவிட்டார்கள். கொலையாளியை மடக்கிப்பிடிக்கும் வரை நாங்கள் யாரென்றே சொல்லவில்லை.

நேரம் 12.15 
.மற்றவர்கள் எங்கே என அவனிடம் கேட்டதற்கு எங்களைத்  திசைதிருப்பி வேறு இடத்தைச்  சொன்னான். ஆனாலும் அவனை மடக்கிய இடத்திலிருந்த குளத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அதில் ஒருவன் நடவடிக்கைகள் மட்டும் வித்தியாசமாகப்பட அவனை மடக்கினோம். அவன்தான் உண்மையான இடத்தை சொன்னான். 

அவன் சொன்ன இடத்தை அடைய வயல்வெளிக்குள் செல்ல வேண்டியிருந்தது. எங்கள் அனைவருக்குமே பயம் விலகவில்லை. காரணம் கொலையாளி டைம் குறித்து வைத்து, அதற்குள் வராவிட்டால் கடத்தி வைத்திருப்பவரைக்  கொலை செய்ய சொல்லியிருந்தால் என்ன செய்வது என்கிற யோசனை.
வயல்வெளியில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று பார்த்தால் ஒரு பாறையின் அடியில் இருந்த புதருக்குள் மறைந்திருந்தது கொலைகார கும்பல்.

நேரம் 12.30. நாங்கள் அந்த இடத்திற்கு விரைந்து ஓடினோம். எங்களைப்  பார்த்ததும் ஒருவர் மட்டும் எங்களை நோக்கி வந்தார். அவரை விசாரித்தால் நான்தான் சின்னத்தம்பி என்னைக்  காப்பாற்றுங்கள் என்று கதறினார். அவரை அந்த இடத்திலேயே அமர வைத்துவிட்டு அவருக்குப்  பாதுகாப்பாக 2 பேரை நிற்க வைத்தோம். 

இதற்குள் அங்கிருந்த மற்ற மூவரும் வயல்வெளியில் ஓட தொடங்கினார்கள். நாங்களும் விடாமல் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்தி அவர்களைக்  களைப்படைய வைத்தோம். கடைசியில் ஓடமுடியாமல் 2 பேர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்கள்.


நேரம் மதியம் 1 மணி. 
அனைவரையும் பிடித்துவிட்டோம் என்பதைக் காட்டிலும் கடத்தப்பட்டவரை உயிரோடு மீட்டுவிட்டோம் என்கிற திருப்தியோடு ஈரோட்டிற்கு விரைந்தோம் என்றவர் குற்றவாளிகளின் விபரத்தை சொன்னார்.

விபரத்தை கேட்ட நாம் எஸ்பி சிபி சக்கரவர்த்தியைச்  சந்தித்தோம். 

" இதில் கலந்துகொண்ட அனைவருமே ஹெட்போனை பயன்படுத்தினோம். இதனால் ஒவ்வொருவரும் தகவல்களைப்  பரிமாற வசதியாக இருந்தது. அடுத்து எங்களது ஒரே குறி கடத்தப்பட்டவரை உயிரோடு மீட்பதோடு குற்றவாளிகளையும் பிடிக்க வேண்டும் என்பது தான். இதில் ஏதேனும் சிறிய தொய்வு ஏற்பட்டாலும் கஷ்டப்பட்டது வீணாகி விடும். எனவே நேரத்தை மிகவும் கவனமாக கையாண்டோம். பிடிபட்ட திருநெல்வேலி கூலிப்படையை சேர்ந்தவர்கள் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. இப்போது குற்றவாளிகள் அனைவருமே ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் என்னுடைய பங்கு மட்டுமல்ல என்னுடன் பணியாற்றிய அனைவருமே மிகச் சரியாகச்  செயல்பட்டதால் தான் எங்களால் இந்த ஆபரேஷனை சக்ஸசாக முடிக்க முடிந்தது. கடத்தப்பட்டவர் மீதும் புகார் இருந்ததால் அவரும் ரிமான்ட் செய்யப்பட்டிருக்கிறார்"  என்றார். 

சபாஷ் போடவைத்தது இவர்களின் நடவடிக்கை. காவல்துறையை நம்பினோர் கைவிடப்படார்.
                                      

 வீ.மாணிக்கவாசகம்.
 படங்கள் ரமேஷ் கந்தசாமி.

Sunday, September 6, 2015

காற்றில் கலந்த இசை 20 - கடந்த காலத்திலிருந்து ஒலிக்கும் குரல்

உள்படம்: பாடகி ஜென்ஸி

சில படங்களின் தலைப்பே அற்புதமான மனச்சித்திரத்தை உருவாக்கக்கூடியதாக அமைந்துவிடும். ‘நிறம் மாறாத பூக்கள்’ (1979) ஓர் உதாரணம். சுதாகர், ராதிகா, விஜயன், ரதி நடித்த இப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இரண்டு காதல் ஜோடிகள்; காதலில் பிரிவு; புதிய உறவு என்று செல்லும் இப்படத்தில் நுட்பமான உணர்விழைப் பின்னல்களைக் கொண்ட பாடல்களை உருவாக்கியிருந்தார் இளையராஜா.

இழந்த காதலின் வசந்தகால நிலப்பரப்புக்குச் சென்று, வருடிச் செல்லும் காற்றில் மனத்தின் ரணங்களைக் காயவைத்துக் கொள்ளும் உணர்வை ஏற்படுத்தும் பாடல்களில் ஒன்று ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’. ஜென்ஸி, எஸ்.பி. ஷைலஜா, மலேசியா வாசுதேவன் என்று மூன்று அற்புதக் குரல்களின் சங்கமம் இப்பாடல்.

வெறும் இசைக் கருவிகளின் தொகுப்பாக மட்டும் இல்லாமல், மனித உணர்வுகளின் மெல்லிழைகளால் இழைக்கப்பட்ட பாடல் இது. கடந்த காலத்திலிருந்து ஒலிக்கும் குரலாக ஜென்ஸியின் ஹம்மிங், சருகுகளை அள்ளிக்கொண்டு வரும் காற்றைப் போல மனதின் பல்வேறு உணர்வுகளைத் திரட்டிக்கொண்டே பரவிச் செல்லும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் ஏதுமற்ற, சிறிய பூச்செடிகள் நிறைந்த பரந்த நிலத்தில் நம்மை அள்ளிச் சென்று நிறுத்திவிடும் அந்த ஹம்மிங். முற்றிலும் சோகமயமாக்கிவிடாமல், கைவிட்டுப்போன காதலின் இனிமையான தருணங்களும், துயரம் தோய்ந்த நிகழ்காலமும் இனம் பிரிக்க முடியாதபடி கலக்கும் சுகானுபவத்தை இசைக் குறிப்புகளால் எழுதியிருப்பார் இளையராஜா.

நிரவல் இசைக் கோவைகளும், கேட்பவரின் கற்பனை மொழியும் தெளிவற்ற உருவகங்களைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வதை இப்பாடல் முழுதும் உணர முடியும். முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் புல்லாங்குழல், சிறிய மேடுகளில் மலர்ந்திருக்கும் சிறு பூக்களை வருடியபடி திசைகளற்று படர்ந்து செல்லும் தென்றலை உணர வைக்கும். குரல் சென்றடைய முடியாத தொலைவின் சாலையில் செல்லும் தன் அன்புக்குரியவரை அழைக்க முடியாமல் பரிதவிக்கும் மனதின் விசும்பலாகவும் அது ஒலிக்கும்.

’மனதில் உள்ள கவிதைக் கோடு மாறுமோ’ எனும் கண்ணதாசனின் வரிகள், சோக நாடகத்தின் ஆன்மாவை வலியுடன் பதிவுசெய்திருக்கும். பிரிவின் வலிகளால் முதிர்ச்சியடைந்திருக்கும் இளம் மனதின் வெளிப்பாடாக உணர்வுபூர்வமாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. ‘என் பாட்டும் உன் பாட்டும்’ எனும் வார்த்தைகளைத் தொடர்ந்து, மிகக் குறுகிய இடைவெளிக்குப் பின் ‘ஒன்றல்லவோ’ என்று ஜென்ஸி பாடும்போது அவரது குரலில் சிறிய தேம்பல் தொனிக்கும். பாடலின் இரண்டாவது சரணத்தைத் தொடரும் எஸ்.பி. ஷைலஜா தனது வழக்கமான துல்லியத்துடன் பாடியிருப்பார். மேகத்தை நோக்கி எறியப்பட்ட குரலோ என்று தோன்றும்.

‘எழுதிச் செல்லும் விதியின் கைகள்’ எனும் கவிதை வரியில், வார்த்தைகளுக்கு வெளியே ஒரு புனைவுச் சித்திரத்தை வரைந்திருப்பார் கண்ணதாசன்.

தொடர் ஓட்டத்தைப் போல், ஷைலஜாவிடமிருந்து சோகத்தை வாங்கிக்கொண்டு பாடலைத் தொடர்வார் மலேசியா வாசுதேவன். மூன்றாவது நிரவல் இசையின் முடிவில் ஒலிக்கும் கிட்டார், ஆணின் மனதுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் துயரம் வெளியேறத் தவிப்பதைப் பிரதியெடுத்திருக்கும். ‘மலையின் மீது ரதி உலாவும் நேரமே’ எனும் வார்த்தைகள் உருவாக்கும் கற்பனை வார்த்தையில் அடங்காதது. பூமிக்கும் மேகத்துக்கும் இடையில், அந்தரத்தில், வானுலகத்தின் தேவதை நடந்து செல்வதாக மங்கலான சித்திரம் தோன்றி மறையும். காதல் அனுபவமே இல்லாதவர்கள் கேட்டால்கூடக் கண்களின் ஓரம் நீர் துளிர்க்க வைக்கும் பாடல் இது.

‘இரு பறவைகள் மலை முழுவதும்’ பாடல் ஜென்ஸியின் மென் குரலும் இளையராஜாவின் இன்னிசையும் சரிவிகிதத்தில் வெளிப்பட்ட படைப்பு. கரு நீல வானின் பின்னணியில் கரும்பச்சை நிறத் தாவரங்கள் போர்த்திய மலைகளைக் கடந்து பறந்துசெல்லும் பறவைகளைக் காட்சிப்படுத்தும் இசையமைப்பை உருவாக்கியிருப்பார் இளையராஜா. ‘இது கண்கள் சொல்லும் ரகசியம்’ எனும் வரியில் ‘ரகசியம்’ எனும் வார்த்தையை ஜென்ஸி உச்சரிக்கும் விதம், ஒரு பாடகியின் குரலாக அல்லாமல், மனதுக்குப் பிடித்த தோழியின் பேச்சுக் குரலின் இயல்பான கீற்றலாகவே வெளிப்பட்டிருக்கும்.

முதல் நிரவல் இசையில், இயற்கையின் அனைத்து வனப்புகளும் நிறைந்த பிரதேசத்தின் இரண்டு மலைகளுக்கு இடையில் வயலின் தந்திக் கம்பிகளைப் பொருத்தி இசைப்பது போன்ற இனிமையுடன் ஒற்றை வயலின் ஒலிக்கும். இரண்டாவது நிரவல் இசையில், பொன்னிறக் கம்பிகள் பொருத்தப்பட்ட கிட்டாரிலிருந்து வெளிப்படும் ஒலிக்கீற்றுகளைப் போன்ற இசையை உருவாக்கியிருப்பார் இளையராஜா.

‘எங்கெங்கு அவர் போல நான் காண்கி(ர்)றேன்’ என்று பாடும்போது ஜென்ஸியின் குரலில் ஒரு அன்யோன்யம் கரைந்திருப்பதை உணர முடியும். பலரது மனதில் வெவ்வேறு முக வடிவங்களாக ஜென்ஸியின் குரல் நிலைத்திருப்பதின் ரகசியம் இதுதான்.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

அந்தநாள் ஞாபகம்: மீண்டும் மீண்டும் துரத்திய கதைகள்!

Return to frontpage

பிரதீப் மாதவன்


‘நீ’ ஜெயலலிதா - ‘கலங்கரை விளக்கம்’ சரோஜாதேவி

வாழ்க்கையின் அடுத்தடுத்த கணங்களில் என்ன ஒளிந்திருக்கிறது என்பதை அறிய முடியாது. திரைப்படத்தில் நாம் காணும் கதாபாத்திரங்களுக்கு அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பான சஸ்பென்ஸ் உணர்வைத் தந்தால் அதுவே ‘சக்ஸஸ் திரைக்கதை’யாகிவிடுகிறது. இந்த வெற்றிச் சூத்திரம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் வகைப் படங்களுக்கு மட்டுமல்ல; எல்லா வகைப் படங்களுக்குமே பொருந்தக் கூடியதுதான்.

அதனால்தான் தமிழ் சினிமாவின் முதல் சமூகப் படம் வெளியாகும் (மேனகா 1935) முன்பே முதல் திகில் படம் வெளியாகிவிட்டது. பி.எஸ்.வி ஐயர் இயக்கத்தில் 1934-ல் வெளியான ‘கவுசல்யா’ அந்த அந்தஸ்தை எடுத்துக்கொள்கிறது என்றாலும் ‘நல்லதங்காள்’ படத்தில் தன் குழந்தைகளைக் கிணற்றில் தூக்கிப் போட்டுக் கொல்லும் காட்சியைப் பார்த்து பயந்து தியேட்டரை விட்டு வெளியே ஓடியவர்கள்தான் முப்பதுகளின் தமிழ் சினிமா ரசிகர்கள். பின்னாளில் தமிழின் திகில் மற்றும் சஸ்பென்ஸ் வகை சினிமாவைத் தட்டி எழுப்புவதற்கு வடுவூர் துரைசாமி ஐயங்காரின் கதைகள் உதவின.

சிவாஜி வாங்கிய அடியும் காரும்

ஆனால் கதைப்போக்கில் திடீர் அதிர்ச்சியை அளித்த முதன்மைக் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் கே.பாலச்சந்தர், சி.வி. ஸ்ரீதர் ஆகியோரின் வருகைக்குப் பிறகு 50-களில் அறிமுகமாகத் தொடங்கின. சி.வி. ஸ்ரீதரை மிகச் சிறந்த திரைக்கதாசிரியராக அறிமுகப்படுத்திய படம் 1954-ல் வெளியான ‘எதிர்பாராதது’ திரைப்படம். சி.எச்.நாராயணமூர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா சிவாஜியின் தந்தை. மனைவியை இழந்தவர்.

இரண்டாம் தாரமாக பத்மினியை மணந்துகொள்கிறார். இப்போது சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னை யாகிவிடுகிறார். நாகையா திடீரென இறந்துபோக, ஒருநாள் சிவாஜி, பத்மினியைத் தொடுகிறார். அப்போது அதிர்ச்சியடையும் பத்மினி சிவாஜியை வெறிகொண்டு அடிப்பார். இந்தக் காட்சி ரசிகர்களை உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். ரசிகர்களை “கலிகாலம்...!” என்று சொல்லவைத்தது.

இந்தக் காட்சி படமானபோது பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை நிஜமாகவே அடித்த அடியில் அவருடைய கன்னம் வீங்கி விட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் கிளம்பிப்போன சிவாஜி இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கே வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியைப் பார்க்க பத்மினி அவரது வீட்டுக்குப் போனார். சிவாஜியை சமாதானம் செய்து அவருக்கு புத்தம் புது ஃபியட் கார் ஒன்றை வாங்கிப் பரிசாக அளித்தார். அதுதான் சிவாஜியின் முதல் கார். படத்தின் கதை மட்டுமல்ல படப்பிடிப்பில் நடந்த சம்பவமும், சிவாஜிக்கு முதல் கார் கிடைத்ததும் கூட எதிர்பாராமல் நடந்ததுதான்.

ஆனால் ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பாராத முழுநீள சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் திரைப்படங்கள் பயமுறுத்த ஆரம்பித்தது அறுபதுகளுக்குப் பிறகுதான்.

ஒரே கதை மூன்று படங்கள்

ஆச்சரியகரமாக 1965-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மூன்று சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் ஒரே கதையமைப்புடன் வெளியாகி, அந்த மூன்று படங்களுமே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. ‘வெண்ணிற ஆடை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஜெயலலிதா அறிமுகமாகி சில மாதங்களே ஆகியிருந்த நிலையில் அவரைக் கனவுக் கன்னியாக மாற்றியது ‘ஆயிரத்தில் ஒருவன்’.

அந்தப் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில் வெளியான படம்தான் ‘நீ’. இதில் இரட்டை வேடங்களை முதல்முறையாக ஏற்றிருந்தார் ஜெயலலிதா. ஜெய்சங்கர்தான் கதாநாயகன். கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதை என்பதால் ஜெயலலிதா ஜெய்சங்கர் என்று ஒரு கார்டில் சரிசமமாக டைட்டில் போடப்பட்டது. சக்தி கிருஷ்ணசாமி கதை, வசனத்தில், கனக சண்முகம் இயக்க, டைரக்‌ஷன் மேற்பார்வை செய்தவர் ராமண்ணா.

இந்தப் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து வெளியானது கே.ஆர். விஜயா இரட்டை வேடத்தில் நடித்திருந்த ‘இதயக் கமலம்’. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரான இந்தப் படத்தை இயக்கியவர்  காந்த். 1964-ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘பாத்லாக்’(Paatlag) என்ற மராத்தி மொழிப் படத்தை தழுவியது இந்தப் படத்தின் கதை. ‘மேரா சாயா’ என்ற தலைப்பில் பாத்லாக் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் சுனில் தத்தும் சாதனாவும் நடித்துக்கொண்டிருக்கும்போதே, பாத்லாக் தமிழில் மூன்று வெவ்வேறு படங்களாக ஒரே மாதத்தில் வெளிவந்துவிட்டது. இவற்றில் ‘நீ’ முந்திக்கொண்டது.

நீ படத்தில் ஜெயலலிதாவின் வசீகரம் பெரிதும் ரசிக்கப்பட்டது. ஆனால் ‘இதயக் கமலம்’படத்தில் கமலா, விமலா ஆகிய இரண்டு வேடங்களில் வந்த கே. ஆர். விஜயாவின் மாறுபட்ட நடிப்புக்காக அவருக்குப் பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தன.

இதே கதையைக் கொஞ்சம் வரலாற்றுப் பூச்சுடன் தீற்றிக்கொண்டு வெளியான அந்த மூன்றாவது படம் ‘கலங்கரை விளக்கம்’. புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்த எம்.ஜி.ஆர். சரோஜாதேவி நடித்த அந்தப் படத்தை இயக்கியவர் கே. சங்கர். கதாநாயகிக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்று தெரிந்தும் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தது ஆச்சரியமான விதிவிலக்கு.

இந்த மூன்று வெற்றிப் படங்களிலும் ‘இதயக் கமலம்’ படத்தின் திரைக்கதையும் வசனமும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தமைக்கு ஆரூர்தாஸின் திறமை முக்கிய காரணமாக அமைந்தது.

நோய்வாய்ப்பட்டு இறந்துவிடும் காதல் மனைவி கே.ஆர். விஜயாவைத் தகனம் செய்து, ஈமக்கடன்களை முடித்துவிட்டு ஒடிந்த மனதுடன் வீட்டுக்குள் நுழைந்து அமரும் கதாநாயகன் ரவிச்சந்திரன் முன்னால் வந்து நின்று “நான்தான் உங்கள் மனைவி” என கே.ஆர். விஜயா சொல்ல, படத்தின் சஸ்பென்ஸ் நொடிகள் ஆரம்பமாகிவிடும். கே.ஆர். விஜயாவுடன் கடுமையான வாக்குவாதங்கள் செய்யும் ரவிச்சந்திரன், உண்மையை அறியத் துடிக்க, முடிச்சுகள் வரிசையாக அவிழத் தொடங்கும். இப்படியாக, ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்திய படம் இது. எது உண்மை எது பொய் என ரசிகர்களைத் தெளிவாகக் குழப்பித் தெளிய வைத்த படம்.

இந்த மூன்று படங்களுமே சஸ்பென்ஸ் த்ரில்லர்களாக இருந்தாலும் இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், கதையையும் கதாநாயகனின் இக்கட்டான சூழ்நிலையும் தூக்கிப்பிடித்து ரசிகர்களின் வயிற்றைப் பிசையும் த்ரில்லர் அவஸ்தையையும் சேர்த்துப் பரிமாறியவை. ‘இதயக் கமலம்’ படத்தில் ‘நீ போகுமிடமெலாம் நானும் வருவேன் போ போ போ...’, ‘மலர்கள் நனைந்தன பனியாலே...’, ‘என்னதான் ரகசியமோ இதயத்திலே...’, ‘ தோள் கண்டேன் தோளே கண்டேன்...’. ‘ உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...’ ஆகிய பாடல்கள் கே.வி. மகாதேவன் இசையில் ரசிகர்களைக் கட்டிப் போட்டன.

இந்த மூன்று படங்களும் வெளியான 1965-ன் இறுதியில் வெளியாகி வெற்றிபெற்ற சஸ்பென்ஸ் த்ரில்லர், பி.எஸ். மூர்த்தி இயக்கத்தில் வெளியான ‘ஒரு விரல்’. பண்டரிநாத், தங்கம் என்று முன்னணியில் இல்லாத நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் வெற்றியைக் ருசித்த இந்தப் படத்துக்கு நடுங்க வைக்கும் பின்னணி இசையைத் தந்தவர் வேதா. சஸ்பென்ஸ் படம் என்றாலே வேதாவின் இசைதான் என்ற முத்திரை விழக் காரணமாக அமைந்த படம் அது.

ஜெய்சங்கர் ஜெயலலிதா இணைந்து நடித்த ‘நீ’ பட வெற்றியின் பாதிப்பில் அடுத்த ஆண்டே ‘யார் நீ?’ என்ற படத்தைத் தயாரித்தார் நடிகர் பி.எஸ். வீரப்பா. இந்தப் படத்திலும் ஜெயலலிதாவும் ஜெய்சங்கரும் மீண்டும் ஜோடி சேர, இதுவும் வெற்றிப் படங்களின் வரிசையில் சேர்ந்த சஸ்பென்ஸ் த்ரில்லர்.

துரத்திய பறவை

ஆனால் இந்த மூன்று படங்களுக்கும் முன்னோடியான த்ரில்லர் படமென்றால் அது சிவாஜி முதன்முதலாகத் தயாரித்த ‘புதிய பறவை, 1964-ல் வெளியான இந்தப் படம் சிவாஜி, சரோஜா தேவி மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்தது. பணமிருந்தும் நிம்மதி இன்றி ஒருவித ஏக்கத்தில் சுற்றி வருவார் நாயகன் சிவாஜி. தான் விரும்பும் சரோஜாதேவியிடம் தனக்கு ஏற்கெனவே மணமானதைச் சொல்லி முதல் மனைவி இறந்துவிட்டதாகக் கூறுவார்.

மகிழ்ச்சியாகப் போகும் அந்தப் புதிய காதலின் நாட்களில், இறந்ததாகச் சொன்ன அவரின் முதல் மனைவி மீண்டும் வந்து கண் முன்னே நிற்க, அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் அடிவயிற்றைப் பதம்பார்க்கும் அதிர்ச்சியைப் பாய்ச்சிய படம். இன்று இந்தப் படத்தைப் புதிதாகப் பார்க்கும் இளைய தலைமுறை ரசிகர்களைக் கூட நிமிர்ந்து உட்கார வைக்கக்கூடிய படம். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ…’, ‘எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி’ உள்ளிட்ட பாடல்களாலும் கதை சொன்ன படம் ‘புதிய பறவை’.

நீங்கள் வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லையா?

மாத சம்பளதாரர்கள், வரிவிதிப்பு ஆண்டு 2015-16-க்கான வருமானவரி ரிட்டர்னை தாக்கல் செய்ய கடைசிநாள் ஆகஸ்டு 31-ந் தேதி என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை. என்ன செய்யலாம்?

வருமானவரித்துறையினர் பிடித்து விடுவார்களோ? அபராதம் விதிப்பார்களோ? வழக்கு போடுவார்களோ? என்ற அச்சம் பிறக்கிறதா?. நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் தாக்கல் செய்யத்தவறிய உங்கள் வருமான வரி ரிட்டர்னை தாமதமாகவும் செலுத்தலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

தாமதமான ரிட்டர்ன்:

நீங்கள் வாங்கும் சம்பளத்திலேயே உங்களுக்கு வரிபிடித்தம் செய்யப்பட்டிருந்தால் (Tax Deducted at SourceTDS) அல்லது உங்கள் வருமானத்திற்கேற்ற வரியை நீங்கள் முன்னதாகவே செலுத்தியிருந்தால் (Advance Tax) இன்னும் கூட நீங்கள் உங்கள் வருமானவரி ரிட்டர்னை தாக்கல் செய்யலாம். இதுபோன்று ஆகஸ்டு 31-க்குப் பிறகு தாக்கல் செய்யும் ரிட்டர்னுக்கு தாமதமான ரிட்டர்ன் (belated return) என்று பெயர். இவ்வகையில், அடுத்த வரி விதிப்பு ஆண்டு முடியும் வரையில் அதாவது 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையிலும் நீங்கள் உங்களுடைய வரிவிதிப்பு ஆண்டு 2015-16-க் கான வருமானவரி ரிட்டர்னை தாக்கல் செய்யலாம்.

பாதிப்புகள் என்னென்ன?

இவ்வாறு வருமானவரி ரிட்டர்னை தாமதமாக தாக்கல் செய்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

1. வருமானவரி ரிட்டர்னில் ஏதேனும் நஷ்டம் (loss) இருக்குமானால் அந்த நஷ்டத்தை அடுத்த ஆண்டுகளில் ஈடு செய்ய இயலாது.

2. முதலில் தாக்கல் செய்த வருமானவரி ரிட்டர்னில் ஏதேனும் தவறு இருப்பின் அதை சரி செய்ய இயலாது. பொதுவாக, கெடு தேதிக்கு முன்னால் தாக்கல் செய்திருந்த ரிட்டர்னில் ஏதேனும் பிழை இருந்தால், பிழையை சரிசெய்து மீண்டும் ஒரு ரிட்டர்ன் தாக்கல் (revised return) செய்ய இயலும். ஆனால், இம்மாதிரி தாமதமாக தாக்கல் செய்வதில் சரிசெய்யும் வாய்ப்பு பறிபோய்விடுகிறது.

வட்டி:

3. இவை தவிர, நீங்கள் வரிபிடித்தம், முன்னதாக வரி செலுத்தியது ஆகியவற்றைக் கழித்தது போக, மேலும் வரி செலுத்தவேண்டியிருக்கும் பட்சத்தில், அந்த வரியை வட்டியுடன் செலுத்தவேண்டும்.

இவ்வகையில் இருவிதமான வட்டியினை நீங்கள் செலுத்தவேண்டும். ஒன்று தாமதமாக வரி செலுத்துவதற்கான வட்டி. அதாவது, நீங்கள் முன்னதாக செலுத்தவேண்டிய வரி பத்தாயிரம் ரூபாயை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதிலும் நீங்கள் 90 சதவீதத்தை விட குறைவாகவே செலுத்தியிருக்கிறீர்கள் எனில் இந்த வட்டியினை நீங்கள் செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்தவேண்டிய தொகையில் மாதம் ஒரு சதவீதம் என்று ஏப்ரல் மாதம் முதல் நீங்கள் செலுத்தும் தேதி வரையில் கணக்கிட்டு இதை செலுத்தவேண்டும்.

இரண்டும் தாமதமாக வருமானவரி ரிட்டர்னில் தாக்கல் செய்வதற்கான வட்டி. நீங்கள் செலுத்தவேண்டிய தொகையில் மாதம் ஒரு சதவீதம் என்று செப்டம்பர் மாதம் முதல் (அதாவது கெடு தேதிக்கு அடுத்த நாளிலிருந்து) நீங்கள் வருமானவரி ரிட்டர்னைத் தாக்கல் செய்யும் தேதி வரையில் கணக்கிட்டு இதை செலுத்தவேண்டும்.

குறிப்பு: இவ்விரண்டு வட்டிகளுமே, மார்ச் மாதம் 31-க்குப் பிறகும் நீங்கள் வரி செலுத்தவேண்டியிருந்தால் மட்டுமே செலுத்தவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நோட்டீஸ்:

ஒருவேளை வருமானவரித்துறையிடமிருந்து நீங்கள் வருமானவரி ரிட்டர்னைத் தாக்கல் செய்யவில்லை என்று நோட்டீஸ் வரும் பட்சத்தில், அதைப் பெற்ற உடனேயே நீங்கள் உங்களின் ரிட்டர்னைத் தாக்கல் செய்து விடுவது நல்லது.

logo


ஆசிரியர் கல்வியின் தரம்!

ஆசிரியர்கள்தான் சமுதாயத்தில் மிக அதிகமான பொறுப்புவாய்ந்த முக்கியமான அங்கம் வகிப்பவர்கள். ஏனெனில், அவர்களின் தொழில் ரீதியான முயற்சிகள் பூமியின் தலைவிதியிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார், ஆஸ்திரேலிய நாட்டு பெண் எழுத்தாளரான மருத்துவர் ஹெலன் கால்டிகாட். அந்த வகையில், நாளைய சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் இருக்கிறது. சமீபத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஜனாதிபதி பதவியைவிட ஆசிரியராக பணியாற்றத்தான் விரும்பினார். அவர் எழுதிய ‘தூண்டப்பட்ட மனங்கள்’ என்ற ஆங்கில நூலில்கூட, ‘ஒரு குழந்தையின் கற்றலுக்கும், அறிவாற்றலுக்கும் ஆசிரியர்தான் ஜன்னல் போன்றவர். அந்த குழந்தையின் படைப்புத்திறனை உருவாக்குவதில் அவர்தான் முன்மாதிரியாக திகழவேண்டும்’ என்ற அற்புதமான தத்துவத்தை உலகிற்கு படைத்துவிட்டு சென்றார்.

இன்றைய காலக்கட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரம் மிக உயர்வாக இருந்தால்தான், போட்டி மிகுந்த உலகில் அவர்களால் வெற்றிகாணமுடியும். அதற்கு ஆசிரியர்களின் கல்வித்தரமும் மிகவும் உச்சத்தில் இருக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அத்தகைய அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேவை என்பதால்தான், கட்டாய கல்வி சட்டத்தில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்கள்தான், வரும் காலங்களில் பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை பார்க்கும்போதுதான், ஆசிரியர் கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய நிலைமை தெளிவாகிறது. மத்திய அரசாங்கத்தின் கல்வித்திட்டத்தின்கீழ் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றுவதற்கு மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத்தேர்வில் வெற்றிபெறுபவர்கள்தான் இத்தகைய பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பு முதல் 8–வது வகுப்புவரை நாடு முழுவதிலும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றமுடியும். 722 ஆசிரியர் பட்டப்படிப்புக்கான கல்லூரிகளையும், 1,018 ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கூடங்களையும் கொண்டுள்ள தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வை எழுதிய ஆசிரியர்களில் 40 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள் என்றால், இந்த தேர்வை எழுத முடியாத அளவில்தான் நமது ஆசிரியர் கல்வித்தரம் இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை தமிழக கல்வித்துறையும், சமுதாயமும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

பல ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள், துணிவில்லாமல் இந்தத்தேர்வை எழுதவே இல்லை. தற்போது, தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங் களில், கடந்த ஜூன் மாதம் 30–ந்தேதி நிலவரப்படி
2 லட்சத்து 29 ஆயிரத்து 400 இடைநிலை ஆசிரியர்களும், 3 லட்சத்து 92 ஆயிரத்து 383 பட்டதாரி ஆசிரியர்களும், 2 லட்சத்து 70 ஆயிரத்து 912 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால், தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்விலும், மத்திய கல்வி திட்டத்துக்காக நாடு முழுவதிலும் வேலைவாய்ப்பு பெறக்கூடிய மத்திய ஆசிரியர் தகுதித்தேர்விலும் வெற்றிபெற்றால்தான் முடியும். இவர்கள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து வெளியேவரும் ஆசிரியர்களும் இனி வேலை வாய்ப்பு பெறவேண்டும் என்றாலும் சரி, திறமைமிக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றாலும் சரி, அவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப ஆசிரியர்களுக்கு வீடியோ கான்பரன்சிங், ஆன்–லைன், இண்டர்நெட் மூலம் கல்வி கற்றுக்கொடுக்க பயிற்சி அளிக்கவேண்டும். அறிவாற்றல்மிக்க ஆசிரியர் களால்தான் ஒளிமிகுந்த மாணவர் சமுதாயத்தை படைக்கமுடியும்.

Saturday, September 5, 2015

நல்லாசிரியர் யார்?

Dinamani



By பா. நாகலட்சுமி

First Published : 05 September 2015 01:41 AM IST


"மாதா பிதா குரு தெய்வம்' என்ற மந்திர மொழி நமது பண்பாட்டை உணர்த்தும் உன்னத மொழியாகும். கற்றுக் கொடுக்கும் ஆசிரியரை உயர்வாக மதிக்கிறோம்; தெய்வமாகத் துதிக்கிறோம். திறமையாக, அன்பாக, அக்கறையாகக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு மாணாக்கர் மனத்தில் தனியாசனம் உண்டு.
"கற்பித்தல்' என்பது வேலையன்று; அது ஓர் உன்னதமான பணி; தொண்டு; சேவை. இதனை உணர்ந்து ஆசிரியப் பெருமக்கள் தம் பணியை ஆற்ற வேண்டும். மாணவச் செல்வங்களைத் தம் சொந்தக் குழந்தைகளாகக் கருதுகின்ற தாய்மை உள்ளம் ஆசிரியர்களுக்கு வேண்டும்.
ஆசிரியன் என்ற சொல் ஆசு + இரியன் எனப் பிரிந்து பொருள் தரும். "ஆசு' என்பதன் பொருள் குற்றம் என்பதாகும். "இரியன்' என்பதன் பொருள் கெடச் செய்பவர் என்பதாகும். மாணவரது குற்றம், குறைகளைக் கெடச் செய்யும் ஆசிரியர்கள், தாம் குற்றங்குறைகட்கு அப்பாற்பட்டவராய் இருத்தல் வேண்டும். மாணாக்கர் என்ற சொல் மாண் + ஆக்கர் எனப் பிரிந்து நின்று மாண்பினை ஆக்கிக் கொள்பவர் என்ற பொருள் தரும்.
கற்றுக் கொடுக்கும் பாடத்தில் ஆழங்காற்பட்ட அறிவு ஆசிரியருக்குத் தேவை. அப்போதுதான் மாணாக்கர் முன் தன்னம்பிக்கையோடு, கம்பீரமாக நின்று கற்பிக்க முடியும். நல்லாசிரியருக்கு உரிய தன்மைகளைக் கூறும் நன்னூல் என்ற இலக்கண நூல் "கலை பயில் தெளிவு' என்று இதனைக் கூறுகிறது.
உலகில் துறைதோறும் புதுமைகள் மலர்கின்றன; நாள்தோறும் புதுமைகள் வளர்கின்றன. அவற்றைக் கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆசிரியர்களது கற்பித்தல் பணி முழுமை பெறும்; அப்பொழுது மட்டுமே முழுமை பெறும்; செம்மை பெறும். கற்ற விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் சொல்வன்மை ஆசிரியர்களின் அடிப்படை இயல்பாக அமைதல் வேண்டும். "கட்டுரை வன்மை' என இதனை நன்னூல் குறிப்பிடுகின்றது.
மாணவர் மனம் கொள்ளும் வகையில் பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்தல் வேண்டும். மாணவர்கள் பல தரத்தினர்; பல நிலையினர். சிலருக்குக் கற்பூர புத்தி இருக்கும். சிலருக்கு மீண்டும் மீண்டும் சொல்லித்தர வேண்டியிருக்கும்.
மற்றுமொரு முக்கியமான விஷயத்தை ஆசிரியர்கள் மனங்கொள்ள வேண்டும். அவர்கள் பேரறிஞர்களாக இருக்கலாம். ஆனால், கற்பிக்கும்போது, மாணவர்கள் நிலைக்குத் தம்மைத் தாழ்த்தி அவர்களது அறிவுக்கு எட்டும்படி கற்பிக்க வேண்டும்.
யாருடைய பிறந்த நாளை நாம் ஆசிரியர் தினமாகக் (செப்டம்பர் 5) கொண்டாடுகிறோமோ அந்த மாபெரும் ஆசிரியரும், தத்துவ மேதையுமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் கூறுகிறார்: 'A good teacher must himself be a fellow traveller in exciting pursuit of knowledge' ("நல்ல ஆசிரியர் என்பவர் அறிவுத் தேடலில் மாணவனுடன் சக பயணியாகப் பயணிக்க வேண்டும்').
'The true teacher is he who can immatiately come down to the level of the student and transfer his soul to the student's soul' ("மாணவர் நிலைக்கு இறங்கி வந்து தமது ஆன்மாவையே மாணவனிடத்து மாற்றியமைக்கும் வல்லமை பொருந்தியவரே உண்மையான ஆசிரியர்') என்று சுவாமி விவேகானந்தர் கூறுவதை மறத்தலாகாது.
கற்பித்தல் என்பது ஒரு வழிப் பாதை அன்று. மாணவரும் அதில் பங்கு பெற வேண்டும். வினாக்களைக் கேட்டுப் பதில் கூறத் தூண்டி அதன் மூலம் அவர்களைச் சிந்திக்க வைப்பதும், சிந்தனையைத் தூண்டி அவர்களை வினாக்கள் கேட்க வைப்பதும் கற்பித்தலின் முக்கியமான கூறுகள். கற்பிக்கும் முறையில் புதுமைகளைப் புகுத்துதல் வேண்டும்.
பாடத்தோடு, வாழ்க்கைப் பாடமும் நடத்த வேண்டிய கடப்பாடு உடையவர்கள் ஆசிரியர்கள். நேர்மை, வாய்மை, ஒழுக்கம், மனிதாபிமானம், சமுதாய அக்கறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புணர்வு ஆகியனவும் ஆசிரியர் கற்றுத்தர வேண்டிய பாடங்கள். இவைதவிர, அன்றாட நாட்டு, உலக நடப்புப் பற்றியும் மாணவர்கள் அறியுமாறு செய்தல் வேண்டும்.
ஆசிரியரிடத்து கற்பித்தல் கலைக்குத் துணை போகும் நல்லியல்புகள் இருத்தல் வேண்டும். அவற்றுள் தலையாயது பொறுமை. இன்றைய அறிவியல், தொழில்நுட்ப உலகில் மாணவர் சிந்தனையைத் திசை திருப்பும் விஷயங்கள் பல உள்ளன. அந்த மாய வலையில் மாணவர்கள் சிக்காத வண்ணம் தடுப்பதற்கும், சிக்கிய மாணவர்களைப் பத்திரமாக மீட்டெடுப்பதற்கும் பொறுமை என்னும் ஆயுதம் ஆசிரியர்க்குத் தேவைப்படுகிறது.
"எந்த நாட்டில் ஆசிரியர்கள் மகிழ்ச்சியாகக் கற்பிக்கிறார்களோ அந்த நாடு முன்னேறும். ஆசிரியர்கள்தான் அச்சாணிகள். அவர்கள் முகமலர்ச்சியுடன் கற்பிக்க வேண்டும்' என்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளரும், "ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' இதழின் ஆசிரியருமான சுவாமி விமூர்த்தானந்த மஹராஜ் அண்மையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொறுமையும், அருளும் கொண்ட ஆசிரியப் பெருமக்கள் மாணவர்கள் திசை மாறிச் செல்லும்போதும், தீயவற்றைச் செய்யும்போதும் அவர்களை வருத்த நினைக்க மாட்டார்கள்; திருத்தவே முற்படுவர். தமது "மனக்குகைச் சித்திரங்கள்' என்ற நூலில், ஆத்மார்த்தி, தமது பள்ளித் தலைமை ஆசிரியரைப் பற்றிக் கூறியுள்ள கருத்தும் ஒரு நிகழ்வும் சுட்டத்தக்கன.
1993-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. இரவு படிக்கும்போது "ஒலியும் ஒளியும்' பார்க்க வேண்டும் என்ற மோகத்தில் வகுப்பறை பல்பில் நாலணா காசை வைத்து, ஸ்விட்ச் போட்டு மின் தடை ஏற்படுத்தினர் மாணவர்கள்; பின்னர் கூப்பாடு போட்டு அனைவரும் வீடு திரும்பினர்.
மறுநாள் தலைமை ஆசிரியர் நடன குருநாதன், மாணவர்களைப் பள்ளி மைதானத்துக்கு அழைத்து விசாரித்தார். தவறு செய்தவர்கள் உண்மையை ஒப்புக்கொள்ளும் வரை தாம் வெயிலில் நின்றார்; மாணவரை வகுப்புக்கு அனுப்பினார்.
"எனக்கு வழங்கப்பட்ட 12 ஆண்டு கற்றல் வாய்ப்புகளில் நான் மனம் கசிந்து உருகிக் கலைந்து வேறொருவனாக மாறியது அன்றுதான். எங்களை அடித்து இருந்தால் அதுவும் ஒரு நிகழ்வென்று போயிருக்கும். ஆனால் அவரது அஹிம்சை, அவரை வருத்திக் கொண்ட விதம் எனக்குள் பல கசடுகளை அறுத்தது.
அதன்பின் வியர்வைத் தெப்பத்தில் வெகு நேரம் அமர்ந்திருந்த நடன குருநாதன், தவறை ஒப்புக் கொண்ட மூன்று மாணவர்களையும் கடுமையாகத் தண்டிக்காமல் மன்னித்துப் பள்ளியில் மீண்டும் அனுமதித்தார்' என்கிறார் ஆத்மார்த்தி.
கோடிக்கணக்கான மாணவர்களுக்கு உந்துசக்தியாக இப்போதும் விளங்கிவரும், அண்மையில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தனது ஆசிரியர் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
"எனது ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் முழு ஈடுபாட்டுடன் மனப்பூர்வமாக பாடம் நடத்துவார். அவர் பாடம் சொல்லிக் கொடுப்பதை ஒரு கடமையாகக் கருதாமல் அதை ஒரு லட்சியமாகவே நினைத்துப் பாடம் நடத்துவார்.
அந்த ஆசிரியரின் பழக்க வழக்கங்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எங்களுக்கு ஓர் ஆசிரியராக மட்டுமல்ல; ஒரு வாழ்க்கை வழிகாட்டியாகவே வாழ்ந்து காட்டினார். மாணவர்களுக்குப் பாடம் புரியவில்லை என்று சொன்னால் ஒருபோதும் கோபப்பட மாட்டார்'.
ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் கோடிட்டு காட்டுகிறார் கலாம்: "ஒவ்வோர் ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் வாழ்க்கையையும் செம்மைப்படுத்த வேண்டும். லட்சியம் உருவாக அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். மாணவர்களுக்குப் புரியும் வரை பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர் பணியை கடமையாகக் கருதாமல் பாக்கியமாகக் கருத வேண்டும்'.
கலாம் தன் வாழ்நாள் முழுக்க நினைவு கூர்ந்த பெயர் லடிஸ்லாஸ் சின்னத்துரை. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் விண்வெளி இயற்பியல் பாடம் போதித்த ஆசிரியர். தனது மரணத்துக்கு 9 நாள்களுக்கு முன்புகூட திண்டுக்கல் வந்த கலாம், தனது ஆசிரியர் சின்னத்துரையை சந்தித்து, கெüரவித்து நினைவுகளில் மூழ்கினார்.
91 வயதாகும் சின்னத்துரை, கலாம் பற்றி பெருமிதம் ததும்பப் பேசுகிறார்: 1952-54இல் கலாம் என்னிடம் படித்தார். விண்வெளி இயற்பியலில் அவருக்கு கூடுதல் ஆர்வம். நிறைய சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டே இருப்பார்.
மூன்று மணி நேரம் பாடம் நடத்தி, பாடத்தை முக்கால் பாகத்தோடு நிறுத்தி விடுவேன். நிறைவுப் பகுதியை நூலகம் சென்று படித்துத் தெரிந்துகொண்டு வந்து நாளை சொல்ல வேண்டும் என்று கூறிவிடுவேன். கலாம் ஆர்வமாக நூலகத்தில் படித்துவிட்டு வந்து சரியாக விளக்கம் சொல்லி சபாஷ் பெற்றுவிடுவார்.
தென் மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் என்னை அவர் சந்திக்காமல் சென்றதே இல்லை. 60 ஆண்டுகள் கடந்தும் ஆசிரியரை மதித்து ஒரு மாணவர் ஆசிபெற்றுச் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று கூறும்போது சின்னத்துரை முகத்தில் கண்ணீர் வழிந்தோடுகிறது.
கலாமுக்கு சிவசுப்பிரமணிய அய்யர், சின்னத்துரை போல, ஹெலன் கெல்லருக்கு ஓர் ஆசிரியர் அருமையாக வாய்த்தார். அவர் ஆன் சல்லிவன் மேரி; விவேகானந்தருக்கு அருமையாக வாய்த்த ஆசிரியர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். நம்மில் பலருக்கும் அருமையான ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நிச்சயம் கிடைத்திருக்கும்.
அர்ப்பணிப்புதான் ஆசிரியர் பணியின் அடையாளம். ஒரு மாணவன் சமூகத்தின் மிக உயரிய பொறுப்புக்குப் போகலாம். ஆனால், ஆசிரியர் கடைசிவரை ஆசிரியராகவே இருப்பார். அந்த மாணவன், என் வளர்ச்சிக்குக் காரணம் இந்த ஆசிரியர்தான் என்று கைகூப்பும்போதுதான் ஆசிரியரின் மனம் நிறைவடைகிறது.
விருட்சமாக வளர்ந்து நிற்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஓர் ஆசிரியர் வித்தாகப் புதைந்து கிடக்கிறார் என்பதே உண்மை.

கட்டுரையாளர்:
பேராசிரியை (ஓய்வு).

மறதி - சோர்ந்த மனத்தின் நழுவும் நினைவுகள்!

Dinamani




பொழுது விடிஞ்சுது! பெட் ரூம் டீபாய்ல, பாத்ரூம் சிங்குல, டைனிங் டேபிள் மேல, ஜன்னல் கட்டைல - எங்கேயும் இல்ல! எங்க கழட்டி வெச்சேன்? மூக்குக் கண்ணாடிய தேடறதே வேலையாப் போச்சு. 'என்ன தேடறீங்க?' என்று கேட்ட மகளிடம், 'மூக்குக் கண்ணாடி' என்றேன். சிரித்துவிட்டு, என்னைத் தள்ளிக்கொண்டுபோய் நிலைக் கண்ணாடி முன் நிறுத்தினாள். என் மூக்கின் மேலேயே கண்ணாடி இருந்தது!

இது ஒரு வகை மறதி. வயதாகும் எல்லோருக்கும் வருவது.

காலையில், முதலில் என்னைச் சந்திக்க வந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை. கலைந்த தலைமுடி, முகம் முழுக்க கவலையின் ரேகைகள், கண்ணில் ஓர் அச்சம் கலந்த எதிர்பார்ப்பு - மெள்ள உள்ளே வந்து, என் எதிரில் அமர்ந்தார்.

‘கொஞ்ச நாளா எல்லாம் எனக்கு மறந்துடுது டாக்டர். காலைல ஏதோ யோசிச்சிக்கிட்டே கடைக்குப் போய்ட்டு வந்தேன் - பேப்பர் வாங்க மறந்துட்டேன். சில சமயங்கள்ல, போற கடையையோ, வீட்டையோ தாண்டி, கொஞ்ச தூரம்கூட மறந்தா மாதிரி போயிருக்கேன் டாக்டர். இது அல்சைமர்ஸ் டிமென்ஷியாவா டாக்டர்?’ என்றார், கவலையுடன்.

இது தேவையற்ற கவலை. மறதி நம்முடன் பிறந்தது. இறுதிவரை உடன் வருவது! நாமும் பேனா, பர்ஸ், வாட்ச் என ஏதாவது ஒன்றை மறதியாக எங்கேயாவது வைத்துவிட்டு, இல்லாத இடத்தில் தேடி அல்லாடுவது தினமும் நம் வீடுகளில் நடப்பதுதான்!

அதுபோலவே வழியில் பார்த்து, முகம் மலர்ந்து, ‘பார்த்து ரொம்ப நாளாச்சு, செளக்கியம்தானே?’ என்று இரண்டு மூன்று நிமிடங்கள் வம்படித்துப் பிரிந்த பிறகு, ‘அவர் யார்?’ என்று வெகுநேரம் நினைவுக் குப்பையில் தேடுவதும் உண்டு!

சில நாட்கள், சில நிகழ்வுகள், சில சந்திப்புகள், சிறு தகவல்கள் என அவ்வப்போது நாம் மறப்பது சகஜம்தான் – அதுவும், ஏராளமான விவரங்களை மூளையில் ஏற்றிவைக்கும்போது, அவற்றில் சில இப்படி நினைவிலிருந்து நழுவி நம்மை சங்கடப்படுத்தும்!

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறதியால் தொலைத்த நல்ல தருணங்கள் - நல்லதொரு வாக்கியம், நல்ல இசை, நண்பனின் சந்திப்பு என ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கும். அதுபோலவே, தீய அல்லது தேவையற்ற ஒரு நிகழ்விலிருந்து, மறதியினால் தப்பித்த அனுபவமும் ஒரு சிலருக்கு இருக்கும்!

ஐம்பது வயதுக்கு மேல், நமக்கு மிகவும் நெருங்கிய சிலரின் பெயர்கள்கூட மறந்துவிடும். முகத்திலிருக்கும் மச்சம், பேசிய பேச்சு, அணிந்திருந்த உடை, சந்தித்த இடம், சந்தர்ப்பம் என அனைத்தும் நினைவில் இருக்கும் - பெயர் மட்டும் ‘சட்’டென்று நினைவுக்கு வராது! சிறிது நேரம் அல்லது சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று ‘அந்த’ப் பெயர் நினைவுக்கு வரும்! இது, மூளையின் தாற்காலிக மறதி சார்ந்த குறைபாடு - யாருக்கும் வரலாம்!

காலச்சக்கரம் சுழலும்போது, மிகப் பழைய நினைவுகள் தொலை தூரம் சென்று, சிறியதாகி, மங்கி, நம்மைவிட்டு மறைந்து விடும் - இது ஒருவகை நிரந்தர மறதி. குழந்தைப் பருவத்து பல நிகழ்வுகள், பிறர் சொல்லக் கேட்கும்போது, நமக்குப் புதியதாகத் தோன்றுவது, இவ்வகை மறதியினால்தான்!

நாமே விருப்பப்பட்டு, ஒட்டுமொத்தமாக ஒன்றை மறத்தல் என்பது நம் வாழ்வில் முடியாது. மறக்க நினைப்பதை, மறக்கவே முடியாது! மருந்து குடிக்கும்போது குரங்கை நினைக்கக்கூடாது என்று டாக்டர் சொல்ல, அந்த மருந்தைப் பார்க்கும்போதெல்லாம் குரங்கை மறக்க முடியாமல் அவதிப்படும் நோயாளியைப் பற்றிய கதை கற்பனையே என்றாலும், உண்மையில் மனம் விரும்பினாலும், ஒன்றை மறக்கமுடியாதுதான்!

ஏதோ ஒன்று, ஆழ்மனத்தில் இருந்து நினைவுகளை மீட்டெடுக்கும் – இங்கே, மறதி தாற்காலிகமானது! நான் மறந்து விட்டேன் என்று கூறுவது உண்மையில் மறதியல்ல - மறக்க விரும்புகிறேன் என்பதே அதன் பொருள்! எனவே, தன்னிச்சையாக மறக்க முயலாதீர்கள், தோற்றுப்போவீர்கள்!

புராணங்களில், மறதி ஒரு சாபமாகவே கருதப்படுகிறது! தான் ஒரு சத்ரியன் என்பதை கர்ணன் மறைத்ததால், முனிவர் பரசுராமரால் ‘பிரம்மாஸ்திர மந்திரத்தை முக்கியமான தருணத்தில் மறந்துவிடுவாய்’ என சாபமிடப்படுகிறான் – அதுவே, அவன் போரில் அர்ச்சுனனிடம் தோற்பதற்கு ஒரு காரணமாகிப்போகிறது.

காதலில் தன்னை மறந்துகிடந்த சகுந்தலை, துர்வாச முனிவரால் சபிக்கப்படுகிறாள் – அந்தச் சாபத்தினால், துஷ்யந்தன் தான் கொடுத்த அடையாள மோதிரத்துடன், சகுந்தலையையும் மறந்துவிடுகிறான்! காதலில் தன்னை மறந்ததால், காதலனால் மறக்கப்படுகிறாள் சகுந்தலை!

திரைக்கதையில் சுவாரசியம் கூட்டுவதற்காக, திரைப்படங்களில் மறதி பல வகைகளில் உபயோகப்படுகிறது! சட்டை, டை எல்லாம் அணிந்து, பேண்ட் போட மறந்து சாலையில் நடப்பது; வாயில் மறதியாக சிகரெட்டுக்குப் பதில் வெடியை வைத்துப் பற்றவைப்பது, சாலை விபத்துகளில் வாழ்வின் ஒரு பகுதியையே மறந்துபோவது போன்ற கற்பனைகள் எப்போதும் உண்டு.

சமீபத்தில் வெளிவந்த, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படம்கூட, தாற்காலிக மறதியின் விரிவாக்கம்தான்! ஆனாலும், நிஜ வாழ்க்கையில் நீண்ட கால மறதியும், பின்னர் நினைவு திரும்புவதும் நிகழ்வது மிக அரிதான ஒன்றே!

வள்ளுவரும், யாரிடத்தும் சினம் கொள்ளாமல் மறந்துவிட வேண்டும் என்கிறார்! ‘மறந்தும் பிறன்கேடு சூழற்க - இது மறதி அல்ல; தவறியும் என்று கொள்ளலாம்; அல்லது மறந்த நிலையில், ஒருவகை ‘அம்னீஷியாவில்’ உள்ளபோதும், பிறன்கேடு சூழற்க எனக் கொள்ளலாம். காதலனை மறப்பதால் வரும் துயரம், பிரிவுத் துயரத்துடன் கொடுமையானது - ‘மறப்பின் எவன் ஆவன் மன்கொல்? என்பதில், பிரிவதைவிட மறப்பது மோசமானது என்றாகிறது!

மருத்துவத்தில் மறதி

மறதி தாற்காலிகமானதாகவோ அல்லது நிரந்தரமானதாகவோ இருக்கமுடியும். நினைவுகளைத் தேக்கி வைத்திருக்கும் மூளையின் சில பகுதிகள், முதுமை அல்லது சில நோய்களால் பாதிக்கப்படும்போது, ‘மறதி’ ஏற்படுகிறது.

மறதியினால், புதிய விவரங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போகலாம்; அல்லது ஏற்கெனவே அறிந்திருந்த விவரங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியாமலும் போகலாம்!

காலையில் சாப்பிட்ட இட்லியை மறந்துவிடும் சிலர், ஹிட்லர் போர் புரிந்த இடம், வருடம் போன்ற விவரங்களை நன்கு நினைவில் வைத்திருப்பர்!

தலைக் காயம் பட்டவர்களுக்கு, மறதி (அம்னீஷியா) வரும் வாய்ப்புகள் அதிகம். அடிபடுவதற்கு முன்போ அல்லது அடிபட்ட பின்போ, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் நடந்தவற்றை மறந்துபோகின்ற அபாயம் உண்டு. காக்காய் வலிப்பு வந்த பிறகு, சிறிது நேரத்துக்கு நடந்தது எதுவும் நினைவில் நிற்பதில்லை!

முதுமையில் தவிர்க்க முடியாதது மறதி!

பொருட்களை இடம் மாறித் தேடுவது, நாள், கிழமை மற்றும் மிகச் சிறிய நிகழ்வுகள் நினைவுகளில் இருந்து நழுவுவது, முதுமையில் நாம் அன்றாடம் காண்பதுதான்.

மூளையின் டெம்போரல், ஃப்ரான்டல் பகுதிகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் மறதி, அல்சைமர்ஸ் போன்ற வியாதிகளைக் குறிக்கக்கூடும் (பிறந்தது முதல் நாம் கற்றவை, அறிந்தவை கொஞ்சம் கொஞ்சமாக நினைவிலிருந்து தொலைவது, டிமென்ஷியா எனப்படும்).

அன்றாட ஏற்படும் சின்னச் சின்ன மறதிகளை, இந்த வியாதிகளுடன் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. சோர்ந்து, தளர்ந்த மனது எதையும் மறந்துவிடும் தன்மையுடையது! மனதுக்குப் பிடிக்காதது, எளிதில் நினைவிலிருந்து நழுவிவிடும்.

தாற்காலிக மறதி பற்றி ஏதோ எழுத வந்தேன் - மறந்துவிட்டேன். மீண்டும் எழுதுகிறேன், நினைவுக்கு வந்தால்…



டாக்டர். ஜெ.பாஸ்கரன்,
அலைபேசி - 098410 57047

Friday, September 4, 2015

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் வரை நீட்டிப்பு

logo

சென்னை,

தமிழகத்தில் 84 சதவீதம் பேரிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு எந்த திட்டத்திற்கும் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் ஆதார் அட்டை பெறுவது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சிலர் ஆதார் அட்டை விண்ணப்பத்தை எங்கு வாங்குவது?, எப்படி ஆதார் அட்டை வாங்குவது? போன்ற தகவல்கள் தெரியாமல் உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

5.26 கோடி பேர்

தமிழகம் முழுவதும் ஆதார் அட்டை வழங்கும் பணி 2010-ம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது. மொத்த மக்கள் தொகை 6 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேரில், கடந்த 1-ந் தேதி நிலவரப்படி 5 கோடியே 26 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 39 லட்சம் பேருக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு, மற்ற விவரங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதன்படி 84 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்துடன் இந்த பணியை நிறைவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியது.

டிசம்பர் வரை நீட்டிப்பு

ஆனால் எஞ்சிய 1 கோடியே 48 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேருக்கு இன்னும் ஆதார் அட்டைகள் வழங்க வேண்டியுள்ளது. எனவே டிசம்பர் மாதம் வரை காலஅவகாசம் அளித்து அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும். இதற்காக பொதுமக்கள் அவசரப்பட்டு அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டியதில்லை.

வசிக்கும் வீடுகள் அருகிலேயே உள்ள ஆதார் அட்டை வழங்கும் முகாம்களுக்கு சென்று முறைப்படி விண்ணப்பித்து பெறலாம். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 78 மையங்கள்

தமிழகம் முழுவதும் 522 மையங்களில் இந்த பணி தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்தப்பணியை தீவிரப்படுத்த கூடுதலாக 120 மையங்கள் அமைக்கப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் 640 மையங்களில் இந்தப்பணி நடந்து வருகிறது.

சென்னையில் மண்டல அலுவலகங்களில் உள்ள 10 நிரந்தர மையங்கள் உள்பட 78 மையங்கள் செயல்படுகிறது.

ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உள்ளிட்ட அரசு சார்பில் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மையத்துக்கு எடுத்துச் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த பணி முடிவடைந்து 2 மாதங்களுக்கு பிறகு அவரவர் வீடுகளுக்கு பதிவு தபாலில் ஆதார் அட்டை அனுப்பப்படும்.

ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கி தொலைந்து போனாலோ அல்லது பெயர் மற்றும் முகவரி தவறாக இருந்தாலோ அவற்றையும் ஆன்-லைனில் திருத்திக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் மரணம்; பிரமுகர்கள்-வியாபாரிகள் அஞ்சலி


சென்னை,

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர்

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

அவரது உடல் தியாகராயநகர் ராமநாதன் தெருவில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், முன்னாள் மத்திய மந்திரி ராதிகா செல்வி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பிரமுகர்கள்-வியாபாரிகள்

தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அவரது மகன் பா.சிவந்தி ஆதித்தன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க நிர்வாகி அலிமா சம்சுகனி மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் வியாபாரிகள், உறவினர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

யோக ரத்னத்தின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் பணிக்க நாடார் குடியிருப்பு. இவர் 1969-ம் ஆண்டு சென்னை ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர் கடையை தொடங்கினார். இவர்களது சகோதரர்கள் ராஜரத்னம், நவரத்னம், செல்வரத்னம். இவர்களின் அயராத உழைப்பினால் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சென்னையில் புகழ்பெற தொடங்கியது.

தகனம்

யோகரத்னத்தின் சகோதரர்கள் செல்வரத்னம், நவரத்னம் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பே மரணம் அடைந்து விட்டனர். யோகரத்னத்துக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும், பல்லாக்கு துரை, சண்முகதுரை, பொன்துரை, சிவா அருள்துரை ஆகிய 4 மகன்களும் உள்ளனர்.

யோகரத்னம் மரணம் அடைந்ததால் ரங்கநாதன் தெருவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று பிற்பகல் 3 மணிக்கு யோக ரத்னம் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

சரத்குமார் இரங்கல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் யோகரத்தினம் மறைவு மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. மிகவும் வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்து சிறிய அளவிலிருந்து வணிகம் தொடங்கி இன்று நுகர்வோர் பொருட்களின் விற்பனை உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியிருக்கும் அளவிற்கு உய்ர்ந்திருக்கும் மாமனிதர் அவர். கடின உழைப்பும், உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்ததோடு, வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் அளவிற்கு வரலாறும் படைத்திருக்கக்கூடிய சாதனையாளரும் ஆவார்.

அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்கள் மற்றும் அவரது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தூக்குதண்டனை வேண்டாமே

logo

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஏ.பி.ஷா, தற்போது சட்டஆணைய தலைவராக இருக்கிறார். இந்த சட்டஆணையம் 9 உறுப்பினர்களைக்கொண்டது. இதில், தலைவரைத்தவிர, மூன்று முழுநேர உறுப்பினர்கள், 2 முன்னாள் அரசு அதிகாரிகள், 3 பகுதிநேர உறுப்பினர்கள் உள்ளனர். சமீபத்தில் இந்த சட்டஆணையம் தனது 262–வது அறிக்கையில் வழங்கிய பரிந்துரை, நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. முழுமையான தூக்குதண்டனை ஒழிப்புதான் இலக்கு என்ற நோக்கில் தற்போது தீவிரவாத குற்றங்கள் மற்றும் தேசவிரோத கொடுஞ்செயல்களைத்தவிர, மற்ற குற்றங்களுக்கு தூக்குதண்டனையை ரத்து செய்துவிடலாம் என்று சட்டஆணையம் பரிந்துரை செய்துள்ளது. முழுநேர உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதிபதி உஷா மெஹ்ரா, சட்ட அமைச்சகத்துக்குட்பட்ட சட்டமன்றத்துறை செயலாளர் சஞ்சய் சிங், சட்டத்துறை செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா ஆகியோர் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பாக தூக்குதண்டனை வேண்டும் என்ற கருத்தை பிரதிபலித்து இருக்கிறார்கள்.

தூக்குதண்டனை ரத்து என்பது காலம்காலமாக பலரால் பேசப்பட்டுவந்த கோரிக்கையாகும். எந்த உயிரையும் எடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. செய்த குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதுதான் நீதி, அந்த தண்டனை உயிரைபோக்கும் வகையில் இருப்பது இயற்கைக்கு மாறானது. உயிரை பறித்தான் என்பதற்காக, அதை கொடுங்குற்றம் என்று கருதி சட்டத்தைக்கொண்டு அவனுக்கு தூக்குதண்டனை விதித்து உயிரைப்பறிப்பது எந்த வகையில் சரியாகும்? என்றும் கருத்துக்கள் கூறப்படுகின்றன. நீதிமன்றத்தின் நீண்டபடிக்கட்டுகளில் ஏறி, பல கட்டங்களைக் கடந்து தூக்குதண்டனை பெற்றவர்களில் இறுதியாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி, தூக்குக்கயிற்றில் இருந்து தப்பியவர்கள்தான் ஏராளம். முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திரபிரசாத் காலத்தில் இருந்து தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்கள் இதுவரை அனுப்பிய கருணை மனுக்களில் 306 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தூக்குக்கயிற்றில் இருந்து தப்பி ஆயுள் தண்டனை கைதியாகியிருக்கிறார்கள். 131 பேர்களின் மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிலும், கடந்த 11 ஆண்டுகளில் 3 பேர்கள்தான் தூக்கிலிடப்பட்டுள்ளனர். உலகில் பெரும்பாலான நாடுகளில் இப்போது தூக்குதண்டனை கிடையாது என்ற நிலையில், இந்தியாவிலும் தூக்குதண்டனைக்கு டாட்டா காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்திய அரசியல் சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டங்களில் பொதுவாக எல்லாகுற்றங்களுக்கும் தகுந்த சிறைத்தண்டனை வகுக்கப்பட்டுள்ளது. அந்தந்த தண்டனையை அனுபவித்து புதுமனிதர்களாக மீண்டுவரவைப்பதே சிறந்தது. மேலும், ஒரு குற்றத்துக்காக தண்டனை விதிக்கும்போது, அந்த குற்றத்தை மீண்டும் செய்யக்கூடாது என்ற உணர்வை அவருக்குள் உருவாக்கி வெளியே கொண்டுவருவதுதான், அந்த தண்டனையின் சிறந்த நோக்கமாக இருக்கவேண்டும். அதனால்தான் சிறைச்சாலை என்பது சீர்திருத்தக்கூடமாக இருக்கவேண்டுமே தவிர, தண்டனைக்கூடமாகவோ, சித்திரவதைக்கூடமாகவோ இருக்கக்கூடாது என்பதுதான் ஆன்றோர்களின் கருத்தாகும். எனவே, எந்தவொரு குற்றத்துக்கும் சிறைதான் சிறந்த தண்டனையாக இருக்குமே தவிர, தூக்குதண்டனை விதித்து உயிரை பறித்துக்கொள்வதால் எந்த பயனும் விளையப்போவதில்லை.

இதையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்டால், தூக்குதண்டனையை ரத்து செய்யவேண்டியது மிகமிக அவசியமாகும். இந்த நிலையில், சட்டஆணையத்தின் பரிந்துரை மிகமிக வரவேற்புக்குரியது என்றாலும், இதில் பாகுபாடு தேவையில்லை. தீவிரவாத குற்றங்கள், மற்ற குற்றங்கள் என்று பிரித்துவைத்து தூக்குதண்டனை ரத்து என்ற பரிந்துரைக்கு பதிலாக, முழுமையாக ரத்து செய்திருந்தால் மிகவும் சிறப்புக்குரியதாக இருந்திருக்கும். என்றாலும், பாராளுமன்றம் இந்த பரிந்துரை தொடர்பான விவாதத்தை எடுத்துக்கொள்ளும்போது முழுமையான தூக்குதண்டனை ரத்து என்ற வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும்.

Thursday, September 3, 2015

ஆசிரியர்களைக் கொண்டாடுவோம்


ஆசிரியர் தினம்: செப்டம்பர் 5

நம் நாட்டில் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்' எனப் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்குத்தான் வழங்கி இருக்கிறார்கள் இல்லையா? இறைவனுக்குக்கூட ஆசிரியருக்கு அடுத்த இடம்தான். அறிவு விதையை நமக்குள் விதைக்கும் ஆசிரியர்களை ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்றும், ‘ஏற்றி விடும் ஏணி’ என்றும் பெருமையாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் போற்றும் நாளான ஆசிரியர் தினம் எப்படி வந்தது?

1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதிதான் நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தார். அவரது பிறந்த தினத்தைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடிவருகிறோம். இவர் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு துணைத் தலைவரும்கூட.

இவர் எங்கே பிறந்தார் தெரியுமா? அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்குட்பட்ட திருத்தணி அருகே உள்ள சர்வப்பள்ளி என்ற கிராமத்தில்தான் பிறந்தார். இவர் தொடக்கக் கல்வியைத் திருத்தணியில்தான் படித்தார். உயர் நிலைக் கல்வியைப் படிப்பதற்காகத் திருப்பதிக்குப் போனார். ராதாகிருஷ்ணின் சிறு வயது காலம் திருத்தணி, திருப்பதியிலேயே கழிந்தது. பள்ளிப் படிப்பை முடிந்ததும் கல்லூரிக்குப் போக வேண்டுமில்லையா?

அதற்காக அப்போது வேலூருக்குப் போனார். அங்குள்ள ஊரிஸ் கல்லூரியில்தான் ராதாகிருஷ்ணன் படித்தார். 17 வயதாகும்போது சென்னைக்கு வந்து மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்குதான் தத்துவப் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் மேலும் பல உயர் படிப்புகளைப் படித்தார். இப்படி அவர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய படித்தார்.

அப்படி அவர் படித்ததற்குப் பலனும் கிடைத்தது. தனது திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும், இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றும் அளவுக்கு உயர்ந்தார் ராதாகிருஷ்ணன். பின்னர் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் உயர்ந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

இளம் வயதிலேயே ராதாகிருஷ்ணன் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் நிறைய சிறப்புரைகள் ஆற்றியிருக்கிறார். அவையெல்லாம் அவருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பெருமை சேர்த்தன. பல நாடுகளிலும் அவரைக் கவுரவிக்கும் வகையில் கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை மட்டும் எவ்வளவு தெரியுமா? 133 டாக்டர் பட்டங்கள்! இவை எல்லாமே கல்வியால் அவர் கண்ட பலன்கள்.

கல்வியில் சிறந்த விளங்கிய ராதாகிருஷ்ணன் ஆசிரியர்கள் என்றால் மிகவும் மதிப்பு கொடுப்பார். இவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது, சில மாணவர்களும், நண்பர்களும் அவரிடம் போய், அவரது பிறந்த தினத்தைக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அப்போது அவர் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக அன்றைய தினத்தில் ஆசிரியர்களைப் போற்றும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அதனால், 1962-ம் ஆண்டு முதல் இந்தத் தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இத்தனைக்கும் இவர் பள்ளி ஆசிரியர்கூட இல்லை. கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர். இருந்தாலும் பள்ளி, கல்லூரி என்று பேதம் இல்லாமல் எல்லாருமே ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

கல்வி கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்வார்கள். அப்படிச் சிறப்பு பெறக் கல்வியைப் புகட்டும் உங்கள் ஆசிரியர்களைக் கொண்டாடத் தயாராகிவிட்டீர்களா?

சினிமா எடுத்துப் பார் 24- உதய சூரியனின் பார்வையிலே எம்.ஜி.ஆர்!..by எஸ்பி.முத்துராமன்





‘அன்பே வா’ படத்தில் குன்றின் உச்சியில் எம்.ஜி.ஆர்.


‘அன்பே வா’ படத் தில் எம்.ஜி.ஆர் பெரிய பணக் காரர். வெவ்வேறு நாடு களுக்குப் பயணித்துக் கொண்டே இருப்பது என்று பிஸியாகவே இருப்பார். தொடர்ந்து வேலை செய்து களைத்துப்போனதால் சிம்லாவில் ஜே.பி. பங்களா என்கிற பெயரில் இருக்கும் தனது பங்களாவுக்கு ஓய்வு எடுக்கச் செல்வார். அந்த பங்களாவில் வேலை பார்க்கும் நாகேஷ், அவரது மனைவி மனோரமா, மாமனார் பி.டி.சம்பந்தத்துடன் சேர்ந்து அந்த பங்களாவை டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, சரோஜாதேவிக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள்.

இந்த விஷயம் எம்.ஜிஆருக்குத் தெரிய வரும். எம்.ஜி.ஆரின் காலில் மனோரமா விழுந்து, ‘‘முதலாளி மன்னிச்சிருங்க’’ என்று மன்னிப்பு கேட்பார். ‘‘சரி, நான்தான் இந்த பங்களாவுக்கு முதலாளி என்று யாரிடமும் சொல்லக் கூடாது’’ என்று மனோரமாவிடம் சத்தியம் வாங்கிக்கொள்வதுடன், நாகேஷிடம் பணத்தைக் கொடுத்து தானும் அங்கே தங்குவதற்கு சம்மதம் வாங்கியிருப்பார் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி மேல் எம்.ஜி.ஆருக்கு ஒரு கண் விழுந்ததுதான் இதற்குக் காரணம். எம்.ஜி.ஆரும் நாகேஷும் சந்தித்துப் பேசும்போதெல்லாம் மனோரமா பதறு வார். அந்தப் படத்தில் நகைச்சுவை காட்சி அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இடையில் ‘சண்டையில்தான்’ காதல் பூக்கும். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்’ பாடலின்போது மூன்று, நான்கு லவ் பேர்ட்ஸ் களைக் கூண்டில் வைத்து ஷூட் செய்தோம். அந்தப் பாட்டுக்கு சரோஜாதேவி ஆடும்போது எம்.ஜி.ஆர் மறைந்திருந்து கேலி செய்து அபிநயித்து ஆடுவார். அந்த ஷூட்டிங் சமயத்தில் மூர் மார்க்கெட்டுக்குச் சென்று லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதற்கு அண்ணாமலை என்ற உதவியாளரை நியமித்திருந்தோம். அவருடைய வேலையே லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதுதான். அதனால் அவர் பெயரே ‘லவ் பேர்ட்ஸ்’ அண்ணாமலை என்றாகிவிட்டது.

சரோஜாதேவிக்கு அப்பாவாக நடித்த டி.ஆர்.ராமசந்திரன் நிஜத்தில் சைவக் காரர். ஒரு காட்சியில் சிக்கன் ரோஸ்ட் சாப்பிடுவதுபோல காட்சி எடுக்க வேண் டும். சிக்கனை பார்த்தாலே அவருக்கு வாந்தி வந்தது. இந்த செய்தி ஏவி.எம் செட்டியாருடைய காதுக்குப் போயிற்று. அதற்கு அவர் ‘‘பேக்கரியில் சிக்கன் மாதிரி கேக் செய்யச் சொல்லி, அதை சாப்பிட வைத்து எடுக்கலாமே?’’ என்றார். சிக்கன்ரோஸ்ட் போலவே கேக் செய்து அவரை சாப்பிட வைத்தோம்.

எம்.ஜி.ஆர். அவர்கள் சிம்லாவைப் பார்த்து ரசித்து பாடும் விதமாக உரு வானதுதான் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல். இந்தப் பாட்டில் கவிஞர் வாலி, ‘உதய சூரியனின் பார்வையிலே…’ என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்த செட்டியார், ‘‘சென்சாரில் வெட்டி விடுவார்களே?’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பாடினால்தான் கைதட் டல் விழும்’’ என்று சமாதானம் செய்தார் வாலி. அப்படியே படமாக்கப்பட்டது.

ஆனால். செட்டியார் சொன்னது போலவே சென்சாரில் அந்த வரியை நீக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு ‘உதய சூரியனின் பார்வை யிலே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று வார்த்தையை மாற்றினோம். படத்தில் மட்டும் ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் இருக்கும். ஆடியோவில்தான் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று இருக்கும். இதெல்லாம் சென்சார் லீலைகள்.

‘‘உதய சூரியன் என்று வரும் இடத்தில் எம்.ஜி.ஆரை குன்றின் உச்சியில் ஏறி நிற்க வைத்து சூரியனையும் எம்.ஜி.ஆரை யும் இணைத்து ஷாட் எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்று இயக்குநர் திருலோக சந்தர், பி.என்.சுந்தரத்திடம் சொல்ல, ‘‘எம்.ஜி.ஆரால் ஏற முடியுமா?’’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் ‘‘டைரக்டர் சார்..!’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தோம். குன்று உச்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். படக் குழுவே அவரைப் பார்த்து திகைக்க ‘‘மலை மேல என்னால ஏற முடியுமான்னு நீங்க பேசிட்டிருந்தீங்க… நான் ஏறியே வந்துட்டேன்’’ என்றார் எம்.ஜி.ஆர் புன் சிரிப்போடு. அதுதான் எம்.ஜி.ஆர்!

இயக்குநர் நினைத்தது போலவே அந்தக் காட்சியை படமாக்கினோம். துள்ளல் இசையாக அமைந்த அந்தப் பாடல் முழுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார். டி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவில் சிம்லாவின் அந்த அழகும், அந்த மனிதர்களும், அந்தக் குழந்தைகளும் அந்த பாட்டில் வலம் வருவார்கள்.

‘புதிய வானம் புதிய பூமி…. எங்கும் பனி மழை பொழிகிறது’என்ற வரிகள் வரும் இடத்தில் பனி மழையோடு காட்சி எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படி ஒரு தருணம் வாய்க்க இரண்டு நாட்கள் காத்திருந்தோம். பனி மழை பெய்யவே இல்லை. சிம்லாவில் இருந்து டெல்லி வந்து விமானத்தில் சென்னைக் குப் புறப்பட்டோம்.

விமானம் பறந்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் அங்கு கொடுக்கப் பட்ட ஆங்கில செய்தித்தாளை படித்து விட்டு, ‘‘மிஸ் பண்ணிட்டோம். ஸ்நோ பால்ஸ் இன் சிம்லானு செய்தி வந் திருக்கு’’ என்று பத்திரிகையைக் காட்டி யவர், ‘‘டெல்லியில் விமானம் ஏறுவதற்கு முன்பு இந்த நாளிதழ் கையில் கிடைத் திருந்தால், சிம்லாவுக்குத் திரும்பிப் போய் பனி மழையில் அந்தப் பாட்டை எடுத்திருக்கலாம்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஆர்வமும், ஆதங்கமும் அதில் தெரிந்தது.

படத்தில் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி ‘காதல் சண்டை’ உச்ச கட்டத்தை எட்டும். சரோஜாதேவி அங்கு வந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்துக் கொண்டு எம்.ஜி.ஆரை கேலி செய்து நடனம் ஆடுவார். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். சரோஜாதேவியின் மாணவக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் நடன இயக்குநர் சோப்ராவின் உதவியாளர் ரத்தன்குமார். அவர் நடனம் ஆடுவதில் புலி. அந்த ‘புலி’ ஆட்டத்துக்கு சவால்விட்டு எம்.ஜி.ஆரால் எப்படி ஆட முடிந்தது?

- இன்னும் படம் பார்ப்போம்.

document source: hindu tamil

25 ரூபாய் நோட்டு: பிரதமர் மோடியின் கருத்தை நிராகரித்த மத்திய நிதி அமைச்சகம்

ஐந்து ரூபாய் நாணயத்தின் தட்டுப்பாட்டை சமாளிக்க, இருபத்தி ஐந்து ரூபாய் நோட்டை வெளியிடலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்பு வானொலியில் ‘மனதோடு பேசுகிறேன்’ நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார்.

இதன் மீது தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்வியில் பிரதமரின் இந்த கருத்தை மத்திய அரசின் நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது.

இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் ரூபாய் மற்றும் நாணயப் பிரிவிடம் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு கடந்த 14.08.2015 அன்று கிடைத்த பதில் கடிதத்தில் இருபத்தி ஐந்து ரூபாய் நோட்டு வெளியிடும் உத்தேசம் எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை ஆர்வலரான அகர்வால், கடந்த 17.01.2015 அன்று இந்த கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கான பதிலில், பிரதமரின் இந்த ஆலோசனை 1957 ஆம் ஆண்டு இந்திய அரசு அறிமுகப்படுத்திய மெட்ரிக் அளவு முறைக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

‛இ-பைலிங்’ மூலம் வருமான வரித் தாக்கல்: 7-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு



ஆன்-லைன்’ மூலம் ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2014-15-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதியாகும். எனினும், வருமான வரித் தாக்கல் செய்பவர்களின் நலன் கருதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் 5 நாட்களுக்கு சிறப்புக் கவுன்டர்கள் திறக்கப்பட்டன. இதில், மாத சம்பளக்காரர்கள், மூத்தக் குடிமக்கள், ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் நேரடியாக வந்து தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தனர். ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், ரீபண்ட் பெறுபவர்கள் ‛ஆன்-லைன்’ மூலம் ‛இ-பைலிங்’ முறையில் மட்டுமே வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛ வருமான வரித்தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியான கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ‛ஆன்-லைன்’ மூலம் வரித் தாக்கல் செய்தவர்கள் கணினி சர்வர் பிரச்சினையால் மிகவும் சிரமப்பட்டதாகவும், இதனால் பலர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் போனதால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 2, 2015

இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்: வங்கிப் பணிகள் பாதிக்கும்; லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது; பேருந்துகள் இயங்கும்

மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் புதன்கிழமை (செப். 2) லாரிகள், ஆட்டோக்கள், வேன்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், போக்குவரத்துக்கழகத்தைச் சேர்ந்த சில தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் தமிழகம் முழுவதும் பேருந்துகளின் இயக்கம் பாதிக்கப்படும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதுபோல வங்கி ஊழியர் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் வங்கி சேவைகளும் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், மோட்டார் வாகனச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 11 தொழிற்சங்கங்கள் புதன்கிழமையன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகம் முழுவதும் லாரிகள் இயங்காது என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சுகுமார் தெரிவித்தார்.
வேலை நிறுத்தம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் (ஏஐடியுசி) சங்க நிர்வாகி ஷேசசைனம் கூறுகையில், அறிவித்தபடி தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் புதன்கிழமை இயக்கப்படாது. மேலும், கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
போக்குவரத்துக்கழக தொமுச தொழிற்சங்க பொதுச் செயலாளர் சண்முகம், மாநகரப் போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளன (சிஐடியு) தலைவர் சேகர் ஆகியோர் கூறியதாவது:
மோட்டார் வாகனச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நடத்தப்பட உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கத்தைத் தவிர தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, தேமுதிக உள்ளிட்ட பிற அனைத்து தொழிற்சங்களும் பங்கேற்க உள்ளன.
இதனால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பல்லவன் இல்லச் சாலையில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் புதன்கிழமை நடத்தப்படும் என்றனர்.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன. எனவே புதன்கிழமை நாடெங்கும் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை நடைபெறாது என்று ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

60-ஆவது ஆண்டில் எல்.ஐ.சி.



By சு. சங்கரநாராயணன்

First Published : 01 September 2015 01:28 AM IST


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனது வெற்றிகரமான 59 ஆண்டு கால சேவைப் பயணத்தை முடித்து 60-ஆவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.
1980-க்குப் பின்பு, நமது அரசுகள் பின்பற்றி வருகிற தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் சூறாவளிகள் சுற்றி சுழன்றடித்து அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் பலவற்றைக் கபளீகரம் செய்த நிலையில், இரும்புக் கோட்டையாகத் திகழ்கிறது எல்.ஐ.சி.
முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவின் அரசு, ஆயுள் காப்பீட்டுத் தொழிலை தேசியமயமாக்கும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் 19.1.1956-இல் தாக்கல் செய்தது.
அப்போது செயல்பட்டு வந்த 245 இந்திய, வெளிநாட்டுத் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்டு இந்திய காப்பீட்டுத் தொழிலில் முற்றுரிமை பெற்ற நிறுவனமாக 1.9.1956 முதல் எல்.ஐ.சி. செயல்படத் தொடங்கியது.
1956-க்கு முன்னர் செயல்பட்டு வந்த காப்பீட்டு நிறுவனங்களில் 25 திவால் என அறிவித்திருந்தன. 25 நிறுவனங்கள் நிதிப் பிரச்னைகளினால் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. 75 நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு ஒரு பைசா கூட போனஸ் அறிவித்திருக்கவில்லை.
66 நிறுவனங்களில் கணக்கே இல்லை. 23 நிறுவனங்கள் இறுதிக் கணக்கு சமர்ப்பித்திருக்கவில்லை. 11 நிறுவனங்களின் நிர்வாகம் நீதிமன்றங்களில். நான்கு நிறுவனங்களின் சொத்துகளையும், நிர்வாக இயக்குநர்களையும் காணவில்லை. இந்த நிலைகளுக்கு மாற்றாகப் பிறந்ததுதான் எல்.ஐ.சி.
எல்.ஐ.சி. தோன்றிய முதல் ஆண்டில் (1957) விற்பனை செய்யப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை 9.42 லட்சம் மட்டுமே. கடந்த நிதியாண்டில் விற்கப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை 2.01 கோடி ஆகும்.
1957-இல் 56.86 லட்சம் பாலிசிதாரர்களுக்கு சேவை செய்த எல்.ஐ.சி. இன்று குழுக் காப்பீட்டுத் திட்டங்களிலும் சேர்த்து 40 கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்களுக்கு சேவை செய்து வருகிறது.
1957-இல் மொத்த பிரீமியம் வருவாய் ரூ.88.65 கோடி. இது கடந்த நிதியாண்டில் ரூ.2,39,482 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் முதல் ஆண்டு பிரீமியம் வருவாய் ரூ.78,302 கோடி ஆகும். கடந்த ஓராண்டின் மொத்த வருமானம் ரூ.4,07,546 கோடி ஆகும்.
1956-இல் மத்திய அரசு வெறும் ஐந்து கோடி ரூபாய் முதலீடு இட்டு ஆரம்பித்த இந்த நிறுவனத்தில் 31.3.2015-இல் நிதிக் குவியல் என்பது ரூ.18,24,194 கோடி ஆகும். 31.3.2015-இல் எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பு ரூ.20,31,116 கோடி ஆகும். மத்திய அரசுக்கு இதுவரை லாபப் பங்கீடாக கொடுத்தது மட்டுமே ரூ.7,000 கோடிக்கும் மேல் ஆகும்.
ஏனைய எல்லாத் துறைகளிலும் அரசு, பொதுத் துறை நிறுவனங்களுக்குப் போட்டியாக தனியார், வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் அரசு நிறுவனங்கள் செயலிழந்து போவதுதான் வாடிக்கை.
ஆனால், இதற்கு மாற்றாக ஆயுள் காப்பீட்டுத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட தனியார், வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைந்து 15 ஆண்டுகள் ஆனபிறகும், கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி நிறுவனத்தின் சந்தைப் பங்கு பாலிசி எண்ணிக்கையில் 77.85 சதவீதம் என்பதும், முதல் ஆண்டு பிரீமியம் வருவாயில் 69.21 சதவீதம் என்பதுவும் சாதனை ஆகும்.
பாலிசிதாரர் சேவையிலும் எல்.ஐ.சி உலக சாதனை நிகழ்த்தி வருகிறது. ஓர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சேவைத் திறன் என்பது அந்நிறுவனம் உரிமம் வழங்குவதைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. 1956-க்கு முன்னர் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்தபட்சம் 36.48% முதல் அதிகபட்சம் 74.70% வரை உரிமங்களை வழங்காமல் நிலுவையில் நிறுத்தி வைத்திருந்தன.
ஆனால், 31.3.2015-இல் எல்.ஐ.சி. நிறுவனத்தில் வழங்கப்படாமலிருந்த நிலுவை உரிமம் என்பது முதிர்வு உரிமத்தில் 0.22%, இறப்பு உரிமத்தில் 0.49% மட்டுமே. உலகின் பல்வேறு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் சராசரியாக 20% முதல் 40% வரை வழங்கப்படாத நிலுவை உரிமம் வைத்துள்ளன.
இந்தியப் பொருளாதார இறையாண்மையைப் பாதுகாப்பதில் முன்னணிப் பங்கினை வகித்து வருவது எல்.ஐ.சி. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு (1956-61) ரூ.184 கோடியில் தொடங்கிய அதன் பங்களிப்பு ஒவ்வொரு முறையும் அதிகரித்து பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு 31.3.2015 முடிய மூன்றே ஆண்டுகளில் ரூ.7,52,633 கோடியாக உயர்ந்தது.
ஓரிரு மாதங்களுக்கு முன்பு இந்திய ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.1,50,000 கோடி வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.7,50,000 கோடி நிதி வழங்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மக்கள் நலன் சார்ந்த சமூக நலத் திட்டங்களான வீட்டு வசதி மேம்பாடு, மின்சார வசதி, குடிநீர் வடிகால் நீர்ப்பாசன திட்டம், சாலை, ரயில்வே, பாலங்கள், துறைமுக மேம்பாடு உள்ளிட்டவற்றில் எல்.ஐ.சி.யின் முதலீடு 31.3.2015-இல் மொத்தம் ரூ.16,84,690 கோடி ஆகும்.
2006-இல் தனது பொன்விழா ஆண் டைக் கொண்டாடிய நேரத்தில் பொன் விழா அறக்கட்டளை நிதி ஒன்றை உருவாக்கியது. இந்நிதியிலிருந்து இந்தியா முழுவதும் இதுவரை 325 திட்டங்களுக்கு உதவி வழங்கப்பட்டிருக்கிறது.
பிஜி, மோரீஷஸ், பிரிட்டன், பஹ்ரைன், நேபாளம், இலங்கை, கென்யா, சவூதி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் சேவையாற்றி வருகிறது. எல்.ஐ.சி. சார்பில் ஏழு துணை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டுமே குடியரசுத் தலைவர் வழங்கிய இந்திரா காந்தி விருது உள்ளிட்ட 40}க்கும் மேற்பட்ட விருதுகளை எல்.ஐ.சி. வென்றிருக்கிறது.
இந்த விருதுகளை எல்லாம்விட சிறந்தது எதுவென்றால், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் கூறும் வார்த்தைதான். எல்.ஐ.சி.ன்னா தைரியமா பணம் கட்டலாம் என்பதுதான் அது.

Tuesday, September 1, 2015

Annamalai Univ distance edu to go on


CHENNAI: The Madras high court has stayed an UGC order directing Annamalai University not to admit students in its distance education programme for the academic year 2015-2016. The university was told to suspend admissions for not adhering to the rule that it cannot open distance learning centres outside Tamil Nadu. The university challenged the rule saying when foreign universities can enroll students in India, how can it be stopped from admitting students in the other states. Granting an interim stay, Justice MM Sundresh on Monday posted the petition after eight weeks for further proceedings.

In the petition, registrar of Annamalai University said it decided to introduce 162 new courses in 2007. The Distance Education Council, in a letter dated August 21, 2012, accorded permission for offering the courses subject to certain conditions. One of the stipulations said the territorial jurisdiction of a university (for opening distance education centres) would not be beyond the state where it is located.

The university then moved the high court, which in its order in August 2012 allowed it to offer distance education courses without any territorial limit. When it applied for recognition for the next year, the UGC said grant of recognition would be according to the policy on territorial jurisdiction.

As the matter had already been decided by the HC, the university admitted students for the academic year 2013-14. The UGC asked the university to submit an affidavit saying it will abide by all stipulations. The university submitted an affidavit saying it will abide by the conditions except that of territorial jurisdiction.

Meanwhile, the UGC filed an appeal in the HC against its earlier order. The court in its interim order said the issue of territorial jurisdiction would be subject to the outcome of the appeal. Even as the matter was pending, the UGC in its order dated August 14, 2015, directed the university not to admit any student for open distance learning courses for the academic year 2015-2016.

The order was "illegal, unlawful, arbitrary and unjustifiable," said the university. While foreign universities are enrolling students in India, it is unfair to disallow an Indian university from enrolling students in other states and countries, it said.

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...