Monday, February 1, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 16: இளைஞர்களையும் விட்டுவைக்காத மன அழுத்தம்


Return to frontpage

டாக்டர் ஆ. காட்சன்


“உன்னால் முடியும் தம்பி, நாங்க எல்லாரும் இருக்கோம் உன்னை நம்பி” என்ற அறிவுரைகள் யாருக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினருக்கு இலவசமாகவே கிடைக்கும்.

“உன்னைப் பெத்ததுக்கு ஒரு தென்னைமரத்த நட்டு வச்சிருந்தா இளநீராவது கிடைக்கும். இப்படித் தண்டமா உட்கார்ந்திருக்கியே” எனப் பல நேரங்களில் வளரிளம் பருவத்தினருக்கு அர்ச்சனைகள் கிடைக்கும். அவர்களின் நடவடிக்கைகளும் சில நேரங்களில், அப்படித்தான் அமைந்துவிடும். ஆனால் மன அழுத்த நோயாலும் இது போன்ற மாற்றங்கள் வரும் என்பதை மறந்துவிடக்கூடாது.

மன அழுத்தம் ஒரு நோயா?

‘நான் இன்னைக்கு டிப்ரஸ்டா இருக்கேன்’ என்று எல்லோரும் சாதாரணமாகக் கூறுவது வேறு, மன அழுத்தம் அல்லது டிப்ரஷன் நோய் (Depressive disorder) என்பது வேறு. சுமார் 10 - 15% வரையிலான வளரிளம் பருவத்தினரை இது பாதிக்கிறது. ஏதாவது மோசமான வாழ்க்கைச் சூழலாலும் இது ஏற்படலாம், எந்தப் பிரச்சினையும் இல்லாத நிலையில் தானாகவும்கூட ஏற்படலாம். பெற்றோர்களிடமிருந்துகூட மன அழுத்த நோய் ஏற்படுத்தும் மரபணுக்கள் குழந்தைகளுக்குக் கடத்தப்படும்போது வளரிளம் பருவத்தில் மன அழுத்தம் ஏற்படலாம்.

படிப்பில் உள்ள பிரச்சினைகளால் மன அழுத்தம் ஏற்படலாம். அதேநேரம், மன அழுத்த நோய் ஏற்படுவதால் படிப்பில் மந்தத்தன்மை ஏற்படலாம். காரணம் எதுவாக இருந்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது மூளை நரம்புகளில் காணப்படும் ‘செரடோனின்’ என்ற ரசாயனப் பொருள்தான். இதுதான் ஒருவரின் மன உற்சாகத்தைத் தீர்மானிக்கும் வேதிப்பொருள். எனவே, மன அழுத்தம் யாரையும் பாதிக்க வாய்ப்புண்டு.

மருத்துவக் காரணங்கள்

வாழ்க்கைச் சூழ்நிலைகள், மரபணுக்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் உடல்ரீதியான நோய்கள்கூட மன அழுத்த நோயை உண்டு பண்ணும். உதாரணமாக, தைராய்டு என்ற ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால்கூட மூளை நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால் 50% பேர்வரை மன அழுத்த அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் எல்லோரும், தாங்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்வதில்லை.

குறிப்பாக வளரிளம் பருவத்தினருக்கு நாள்பட்ட தலைவலி, திடீரென ஏற்படும் மயக்கம் அல்லது வலிப்பு போன்ற உடல் அறிகுறிகள்கூட மன அழுத்த நோயின் அறிகுறியாக வெளிப்படலாம். பள்ளி செல்வதைப் புறக்கணித்தல், பள்ளி செல்லும் நேரம் வந்ததும் ஏற்படும் வயிற்றுவலி, வாந்திகூட இதன் அறிகுறியாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட நோய்க்கான எல்லாப் பரிசோதனைகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டால், மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

அறிகுறிகள்

கீழே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் காணப்பட்டால் அது மன அழுத்த நோயாக இருக்கலாம்.

# வழக்கத்துக்கு மாறான மந்தத்தன்மை.

# சுறுசுறுப்பு இல்லாமல் அதிகச் சோர்வுடன் காணப்படுவது.

# முன்பு ஆர்வமாக இருந்த எந்த விஷயத்திலும், தற்போது ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியிருப்பது.

# தூக்கமின்மை அல்லது எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது.

# பசியின்மை மற்றும் உடல் எடை குறைவு

# காரணமே இல்லாமல் தற்கொலைக்கு முயற்சி செய்யும் எண்ணங்கள் ஏற்படுவது.

# தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்.

# தான் எதற்கும் உதவாதவன், வாழத் தகுதியற்றவன் என்ற எண்ணம்.

# அதீதக் குற்ற உணர்ச்சி.

# எரிச்சல் தன்மை, கோபம்.

# படிப்பில் பின்தங்குதல், பள்ளியைப் புறக்கணித்தல்.

# காரணமில்லாமல் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது.

# புதிதாக ஏற்படும் போதைப்பழக்கம்.

# அதிகக் கவனக் குறைவு, ஞாபக மறதி.

தடுப்பும் சிகிச்சையும்

# தினமும் மிதமான உடற்பயிற்சி, நண்பர்களுடன் திறந்தவெளியில் விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது.

# குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், மனப் பாரங்களைப் பகிர்வது அவசியம்.

# புத்தகங்கள் வாசிப்பது, இசைக் கருவிகளை வாசிக்கப் பயிற்சி எடுக்கலாம்.

# நேரத்தைப் பகிர்ந்து செலவிடக் கற்றுக்கொள்வது பலன் தரும் (Time management)

# வேலைகளைப் பட்டியலிட்டு முக்கிய வேலைகளுக்கு முதலிடம் கொடுப்பது. மற்றும் பெரிய வேலைகளைப் பகுதிப் பகுதியாகப் பிரித்துச் செய்வதற்குப் பழகலாம்.

# பிரச்சினைகள் எப்போதுமே நிரந்தரமானவை அல்ல, பிரச்சினைகளுக்குத் தற்கொலை ஒரு தீர்வு அல்ல என்பதை எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும்.

# பதற்றமான நேரங்களில் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்துப் பிடித்து, சில நொடிகளுக்குப் பிறகு மெதுவாக வெளிவிடலாம். அவ்வாறு செய்யும்போது கைகால், உடல் பாகங்களை இறுக்கமாக வைக்காமல் தளர்ச்சியாக விட வேண்டும்.

# பெரும்பாலான நேரங்களில் ஆலோசனைகளுடன் மாத்திரைகளின் உதவியும் தேவைப்படும்.

# தீவிரமான மன அழுத்தம் மற்றும் அதிகமான தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு மின் அதிர்வு சிகிச்சை (Electroconvulsive therapy) உடனடியாகப் பலனைத் தரும். இது பாதுகாப்பான முறை மட்டுமல்லாது மாத்திரைகளின் தேவையையும் குறைக்கும்.

(அடுத்த வாரம்: வேண்டாம் விபரீத விளையாட்டு)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

பதின் பருவம் புதிர் பருவமா? 17: தற்கொலை எண்ணம் வருவது ஏன்? டாக்டர் ஆ. காட்சன்

Return to frontpage

நல்ல திடகாத்திரமான பயில்வானுக்கு வயிற்று வலி வந்தால் ‘ அவனுக்குத் தைரியம் இல்லை’ என்றோ, ‘நீ நினைச்சா வயிற்று வலியை நிறுத்திவிடலாம், முயற்சி செய்’ என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், அது ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதைப்போல் மன அழுத்தமும் ஒரு நோய்தான். இது ஒரு நோய் நிலை என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், காலம் தாழ்த்துவதும் வளரிளம் பருவத்தினரை மேலும் பாதிப்பதுடன், தற்கொலைவரை இட்டுச் சென்றுவிடுகிறது.

சில நேரங்களில் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றிய பின்னர்தான் இவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதே தெரியவரும். அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லாத ஒரு புறக்கணிக்கப்பட்ட பிரச்சினையாகத்தான் இன்னமும் இது உள்ளது. எனவே, ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போதே மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. தேவைப்பட்டால் மருந்துகளை உட்கொள்வது பிரச்சினையைத் தீர்க்க உதவும்.

தற்கொலையின் தூதன்

அப்பா திட்டியது முதல் காதல் தோல்வி வரை வளரிளம் பருவத்தில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மன நோய்களைப் பொறுத்தவரை முதல் காரணம், மன அழுத்த நோய்தான். மன அழுத்தம் தீவிரமடையும்போது சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளும்படி யாரோ காதில் பேசுவதுபோலக் குரல்களும் கேட்கும். இந்த மாயக் குரலுக்கு ‘ஹாலுசினேசன்’ (Hallucination) என்று பெயர்.

மன அழுத்த பாதிப்புகள் மட்டும் இருந்தால்கூடச் சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் இளசுகள், இப்படி ஒரு குரல் பேசுவதாகச் சொல்லிவிட்டால் பேயோட்டக் கண்டிப்பாகக் கூட்டிச் சென்றுவிடுவார்கள். ஆனால், மன அழுத்தம் மோசமடையும்போது குரல் பேசுவது போன்ற பிரச்சினை ஏற்படலாம். அதேநேரம் மருந்துகள் உட்கொண்ட ஓரிரு நாட்களில் தற்கொலை எண்ணங்கள் மறைந்து, இவர்கள் பழைய மனநிலைக்கு மாறுவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

தாழ்வு மனப்பான்மையா?

பல நேரம் மன அழுத்தம் என்பது, தாழ்வு மனப்பான்மைக்கு ஈடான ஒன்றாகத் தவறாகக் கருதப்படுவதும் சிகிச்சை பெறாமல் காலம் தாழ்த்துவதற்கு முக்கியக் காரணமாகிறது. தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு தனிப்பட்ட நபரின் குணாதிசயம்தான். ஆனால், மன அழுத்தம் என்பது ஒரு நோய். தாழ்வு மனப்பான்மை என்பது மன அழுத்த நோயின் மற்ற அறிகுறிகளுடன் ஒரு அறிகுறியாக வர வாய்ப்பு இருக்கிறதே தவிர, இரண்டும் ஒன்றல்ல.

இதனால் பெரும்பாலான நேரங்களில் மன அழுத்த நோயால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினர் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதாகப் பெற்றோரால் கருதப்பட்டுப் பல அறிவுரைகளுக்கும், மதநம்பிக்கைகளின் அடிப்படையிலான சிகிச்சைகளுக்கும், சிலவேளைகளில் தண்டனைகளுக்கும் ஆளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதுதான்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் ஒருவன் தற்கொலை முயற்சி செய்ததற்குச் சொன்ன காரணம் வித்தியாசமானது. “அட்வைஸ், அட்வைஸ். ஸ்கூல் போனா டீச்சர் அட்வைஸ், வீட்டுக்கு வந்தா அப்பா அட்வைஸ், வெளியே போனா சொந்தக்காரங்க அட்வைஸ். என் மனநிலையை யாரும் புரிந்து கொள்ளவில்லை” என்பதுதான், தற்கொலை முயற்சிக்கு அவன் சொன்ன காரணம்.

தேவை விழிப்புணர்வு

புள்ளிவிவரங்களின்படி மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்குச் சமம் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி மட்டுமல்ல, கவனத்துக்குரியதும்கூட. ஆனால், நிஜத்தில் சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெற வருபவர்களுடன் ஒப்பிடும்போது, மன அழுத்தத்துக்குச் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அப்படியே வருபவர்களில் பலரும் பல மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்துச் சிகிச்சைக்கு வரும் அளவுக்கு விழிப்புணர்வு குறைவாக இருப்பது வேதனைக்குரியது.

சில நேரம், மற்றப் பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்கள்கூட இதை ஒரு நோய்நிலையாக பார்க்காமல் காலம் தாழ்த்துவது மருத்துவக் கல்வி திட்டத்தில் மனநல மருத்துவத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை அதிகரிக்கவேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.

சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தான் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து மீண்டு வந்ததை வெளிப்படையாகக் கூறியது நல்ல எடுத்துக்காட்டு. உலகில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவதில் தற்போது முதலிடத்தில் உள்ள இதய நோயைப் பின்தள்ளிவிட்டு, 2020-ம் ஆண்டு முதல் முதலிடத்தை ஆக்கிரமிக்கப்போவது மன அழுத்த நோய் என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பது அதற்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

தவறான எண்ணங்கள், ‘தவறான நம்பிக்கைகள்’

# இவர்கள் சோம்பேறிகள், பிரச்சினை களை எதிர்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள்.

# தாழ்வு மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள்.

# மனதளவில் பலவீனமானவர்கள், அவர்கள் மனதை உற்சாகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

# படிப்பில் ஆர்வம் இல்லாததால், வேண்டு மென்றே இப்படிச் செய்கிறார்கள்.

# பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதற் கான ஒரு வழியாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.

# அவர்களுடைய குணம் சரியில்லை, மன அழுத்தத்திலிருந்து அவர் களாக முன்வந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும்.

# மன அழுத்தத்துக்குச் சிகிச்சை இல்லை.

# மாத்திரைகள் சாப்பிட்டால் காலம் முழுக்க அதற்கு அடிமையாகி விடுவார்கள்.

மேற்கண்ட தவறான கருத்துகளைப் போல மனநல மருத்துவரிடம் சென்றால் தூங்க வைப்பதற்குத்தான் மாத்திரைகள் கொடுப்பார்கள் என்பதும் தவறான எண்ணமே. இதற்கான மாத்திரைகள் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, செரடோனின் என்ற வேதியல் பொருளைச் சமநிலைப்படுத்தவே கொடுக்கப் படுகிறது.

(அடுத்த வாரம்: இந்தப் பிரச்சினையும் வருமா?)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

ஆண்களிடம் பெண்கள் முதலில் கவனிப்பது என்ன?......தம்பி

Return to frontpage

ஆதாம் காலத்தில் ஆரம்பித்து ஐபேட் காலம்வரை நீடிக்கும் புதிர்களுள் ஒன்று பெண்களுக்கு ஆண்களிடம் என்ன பிடிக்கும், ஆண்களிடம் அவர்கள் எதையெல்லாம் கவனிப்பார்கள் என்பதுதான். இதில் பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய முயன்று தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். எது எப்படியோ ஆணுக்குப் பெண் புதிர்தான். அந்தப் புதிரைக் கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொள்ள உதவும் விதத்தில் சமீபத்தில் ‘sortedd.com’ என்ற இணையதளத்தில் ஒரு வீடியோ போட்டிருக்கிறார்கள்.

ஒரு ஆணை முதன்முதலில் பார்க்கும்போது அவரிடம் எதைக் கவனிப்பீர்கள், அவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் எதிர்பார்ப்பீர்கள் என்று நவநாகரிக மங்கையரிடம் கேட்டு அதை வீடியோ ஆக்கியிருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்கள் சொன்ன பதில்களைக் கேட்டால் கொஞ்சமல்ல ரொம்பவே ‘ஜெர்க்’ஆகிவிடுவீர்கள்.

நிறைய பெண்கள் ஆண்களின் காலணிகளை, ஷூக்களைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். பாலிஷ் செய்த ஷூக்களைப் போட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரே ஜோடி சாக்ஸை ஒரு வாரம் போடுபவரா நீங்கள்? என்றால் பெண்களிடமிருந்து பல கிலோ மீட்டர் விலகிச் செல்லுங்கள். ஆம், நாற்றமடிக்காத சாக்ஸை அணிந்திருக்க வேண்டும் என்று பெண்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள். மால், பப் போன்ற இடங்களுக்குச் சாதாரண காலணிகளைப் போட்டு வரும் ஆண்களையும் அவர்களுக்குப் பிடிப்பதில்லையாம். பளபளா இடங்களில் பளபளா ஷூக்கள்தான் போட்டுவர வேண்டுமாம்.

அது மட்டுமா, உடல் துர்நாற்றம், வேர்வை நாற்றம், வாய் துர்நாற்றம் என்றாலே முகம் சுளிக்கிறார்கள். பாவம், பேருந்துகளில் எவ்வளவு அவஸ்தைப் பட்டிருப்பார்கள். இருந்தாலும் பெண்களுக்கு மோப்ப சக்தி அதிகம்தான், இல்லையா. ரொம்பவும் வேர்த்து வடியக் கூடாது, வேர்வையைத் துடைப்பதற்குக் கையில் எப்போதும் கர்ச்சீஃப் வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கால்களைப் போலவே கைகளையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் பெண்கள். குறிப்பாக, அழுக்கு மியூசியமாக இருக்கும் நகங்களென்றாலே அவர்களுக்கு ரொம்பவும் அலர்ஜி.

இங்கிதமில்லாமல் ஆண்கள் செய்யும் அட்டூழியங்கள் எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ரோட்டில் எச்சில் துப்புவது, எக்குத்தப்பான இடங்களில் சொறிந்துகொள்வது போன்றவற்றையும் கவனித்து ஒதுக்குகிறார்கள்.

இப்படியாக சுத்தம் தொடர்பான விஷயங்கள் மட்டுமல்ல, ஆண்கள் நடந்துகொள்ளும் விதம், பாடி லாங்குவேஜ் போன்றவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். ஹோட்டல்களில் வெயிட்டர்களிடம் எப்படிப் பேசுகிறீர்கள், மற்றவர்களிடமும் எப்படிப் பேசுகிறீர்கள் என்பதையும் கவனிக்கிறார்கள். தெருவில் போகிற வருகிற பெண்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பவரா நீங்கள், எல்லாப் பெண்களையும் பார்த்து அசடுவழிபவரா நீங்கள்? அப்படியென்றால், கடைசிவரை நீங்கள் அதையேதான் செய்துகொண்டிருக்க வேண்டும்.உங்களிடம் எந்தப் பெண்ணும் ஃப்ரெண்ட் ஆக மாட்டார்.

இங்கிதமில்லாமல் பேசினால் பிடிக்காது, பயமுறுத்தும்படி பேசினால் பிடிக்காது, ரொம்பவும் நேர்மையாக, வெளிப்படையாகக் காட்டிக்கொண்டால் பிடிக்காது, ரொம்ப நல்லவனாக இருந்தாலும் பிடிக்காது, கெட்டவனாக இருந்தாலும் பிடிக்காது, தப்புத்தப்பாக இங்கிலீஷ் பேசினால் பிடிக்காது, மோசமான ரசனைக்கும் நோ, ஆர்வக் கோளாறுக்கும் நோ, ஓவர் தன்னம்பிக்கைக்கும் நோ, ராமராஜன்மாதிரி கலர் காம்பினேஷன் டிரெஸ் போட்டாலும் நோ, முகத்தைப் பார்த்து, கண்களைப் பார்த்துப் பேச வேண்டும், கண்கள் வேறு எங்கேயும் அலைந்தால் ‘நோ’!

அப்பப்பா, மூச்சு முட்டுகிறதா?! அப்புறம் என்னதான் செய்ய வேண்டும் பாஸ் என்று பெருமூச்சுடன் கேட்கிறீர்களா? ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் இயல்புடன் இருங்கள், போதும்! இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதுதான் ஊத்திக் கொள்கிறது. கூடவே, சுத்தபத்தமாக இருங்கள். அப்போதுதான் அட்லீஸ்ட் பார்க்கவாவது செய்வார்கள்.

பெண்களெல்லாம் நம்மை அதிகம் பார்க்கவே மாட்டார்கள் என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன், இவ்வளவு தூரம் கவனித்திருக் கிறார்களே என்ற கேள்வி உங்களுக்கு வருகிறதா? பாவம் சார் நீங்கள், இன்னும் ஒரு மில்லினியம் ஆனாலும் பெண்களை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஆண்கள் எல்லாவற்றையும் பார்ப்பவர்கள், அதனால் எல்லாவற்றையும் தவறவிடுகிறார்கள். பெண்களோ குறிப்பாகப் பார்ப்பவர்கள், தேவையானவற்றை மட்டும் பார்ப்பவர்கள், பார்க்காததுபோல் பார்ப்பவர்கள்.

ஆகவே, அவர்களால் துல்லியமாக இருக்க முடிகிறது. ஆனாலும், இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு ‘ஆகா, பெண்களைப் புரிந்துகொண்டுவிட்டேன்’ என்று துள்ளிக் குதித்துவிட்டு ‘ஹோம் ஒர்க்’ செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களைப் பார்த்து ‘என்னா இது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு’ என்றுதான் சொல்ல வேண்டும். அப்புறம் என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா? போங்க ப்ரோ, நீங்கள் நீங்களாகவே இருங்க ப்ரோ!

கொசுறாகச் சில கேள்விகள்: இதே கேள்வியைக் கிராமத்துப் பெண்களிடம் கேட்டால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? அவர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்?

வீடியோவுக்கான இணைப்பு: https://goo.gl/SKMzvw

வேண்டாமே தற்கொலைகள்!

Return to frontpage

தி.ஆனந்த்

சமீப காலங்களாக இயற்கை மரணங்களுக்கு நிகராகத் தற்கொலை மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன‌ என்பது அனைவரும் அறிந்ததே. தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களில் மூன்றில் ஒரு ப‌ங்கினர், வளரிளம் பருவத்தினர் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

புள்ளி விவரங்களின்படி தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதில் ஆண்களும், தற்கொலை முயற்சியில் பெண்களும் முதலிடம் பெறுகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி, மற்ற மாணவர்களைப் போல‌ ஆங்கிலப் புலமை இல்லாததால் அங்கு சொல்லித் தரும் பாடங்கள் புரியவில்லை என்பதால் தற்கொலை என்ற செய்தி தொடங்கி, ஆந்திராவில் சாதியப் பாகுபாட்டால் ஒரு தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்டது, அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் பயின்ற மூன்று நர்சிங் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதுவரை செய்திகள் சொல்லும் யதார்த்தம் இதுதான்... மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து கொண்டே வருகின்றன!

ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள் என உலக நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதாவது ஒவ்வொரு 40 நொடிகளுக்கும், ஒரு தற்கொலை நடக்கிறது. அதில் 12.5 சதவீத தற்கொலைகள் தமிழகத்தில் நடக்கின்றன.

படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகம், தற்கொலையில் முதல் இடத்திலிருப்பது கவலை தரும் செய்தி. பொதுவாகக் குடும்பப் பிரச்சினை, நோய், வரதட்சிணை, தேர்வில் தோல்வி, காதல் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தற்கொலை முடிவுக்குக் காரணமாக இருக்கும். சமீப காலமாக தந்தை அடித்தார், ஆசிரியர் வகுப்பறையில் சக மாணவர்கள் இருக்கும் போது திட்டினார் என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து இக்கால வளரிளம் பருவ மாணவர்களின் மனப்போக்கை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது.

வளரிளம் பருவத்தினரின் தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் மன அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மன அழுத்தத்தின் முக்கிய அறிகுறி, காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் உருவாவதுதான். ஆனால், ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கும்வரை இந்த மன அழுத்தம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதே உண்மை. தற்கொலை முயற்சி மனநோயின் முதல் அறிகுறியாகக்கூட இருக்கலாம் அல்லது மனநோய் பாதிப்பாலும் நிகழலாம்.

தற்கொலை எண்ணங்களைக் கையாள்வதற்கு அளவுக்கு அதிகமான மன தைரியம் தேவைப்படும். இக்கால இளம் பருவதினருக்கு மன தைரியம், சகிப்புத் தன்மை, கூடி வாழ்தல் போன்றவற்றை கற்றுத் தர‌ எந்தப் பெற்றோருக்கும் நேரமும் இல்லை நாட்டமும் இல்லை. இதனால் அவர்கள் சிறு வயதில் இருந்தே மேற்கண்ட நற்குணங்களைப் பெறாமல் ஒரு பொம்மைக் குழந்தைகளைப் போலத்தான் சமுதாயத்தில் வலம் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு சிறு பிரச்சினை ஏற்படும்போது மன உளைச்சல் ஏற்பட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்குத் தயாராகிறார்கள்.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் தற்கொலைதான் தீர்வு என்ற முடிவைத் தற்கால இளைஞர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. எந்தப் பிரச்சினையையும் மன தைரியத்துடன் போராடினால் எளிதில் அப்பிரச்சனை தீர்ந்து விடும் என்பதை இவர்களுக்கு யார் புரியவைப்பது?

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் போனால் படிப்பு, படிப்பு... விளையாட்டு வகுப்புகள் என்பது பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்பு அட்டவனைகளில் மட்டுமே இருக்கும் என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு. மேலும் பள்ளிகளில் 'வாழ்க்கைக் கல்வி முறைகள்' என்ற உளவியல் சார்ந்த வகுப்புகள் பழைய பாடத்திட்டத்தில் இருந்தது. இது போன்ற உளவியல் சார்ந்த வாழ்க்கை முறை கல்வியைக் கற்கும்போது மாணவர்கள் மன அளவில் புத்துணர்ச்சி பெற்று, தவறான முடிவுகளை எடுக்காத வண்ணம் மன தைரியத்துடன் இருப்பர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் போனால் படிப்பு, படிப்பு... விளையாட்டு வகுப்புகள் என்பது பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்பு அட்டவனைகளில் மட்டுமே இருக்கும் என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு. மேலும் பள்ளிகளில் 'வாழ்க்கைக் கல்வி முறைகள்' என்ற உளவியல் சார்ந்த வகுப்புகள் பழைய பாடத்திட்டத்தில் இருந்தது. இது போன்ற உளவியல் சார்ந்த வாழ்க்கை முறை கல்வியைக் கற்கும்போது மாணவர்கள் மன அளவில் புத்துணர்ச்சி பெற்று, தவறான முடிவுகளை எடுக்காத வண்ணம் மன தைரியத்துடன் இருப்பர்.

மேலும் முறையான உணவு, மன இறுக்கத்தைப் போக்கும் உடற்பயிற்சி, மனப் பயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சி முறைகள் வாழ்க்கையை வளமாக்கும். இயந்திரத்தனமாக வாழும் வளரிளம் பருவத்தினரும், குழந்தைகளும் வாரத்திற்கு ஒரு முறையாவது அதில் இருந்து விலகி, குடும்பத்தினரோடு கடற்கரைப் பகுதி, பூங்கா அல்லது உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் நிலை இன்னும் மோசம். சாதி, மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடுகளும் மாணவர்களின் மனதில் புகுந்து விடாமல் ஒருவருடன் ஒருவர் நன்றாகப் பழகி சமூகத்தில் சிறந்த குடிமக்களாக வர வேண்டும் என்பதுதான் உறைவிடப் பள்ளிகளின் அடிப்படையாக இருக்க வேண்டும்.

ஆனால், இங்கும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின்படி தனி அறைகள் ஒதுக்கப்படுகின்றன. நன்றாகப் பேசிப் பழகுவதற்கு வாய்ப்புள்ள விடுதிகளிலும் தனித்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். தற்கொலைகளுக்குத் தனிமையும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

சரி, கூட்டாக இருந்தால் பிரச்சினை இல்லையா என்று கேட்டால், அதிலும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் பிரச்சினைகளை மீறி நண்பர்களின் ஆதரவு, ஆறுதல், அரவணைப்பு, பொழுதுபோக்கு, கலந்துரையாடலுக்கான வாய்ப்பு என நிறைய நன்மைகள் இருக்கின்றன.

தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களை உடைய நூலகத்தை ஏற்படுத்துவது, ரசனையை மேம்படுத்தும் உலகத் திரைப்படங்களைத் திரையிடுவது, சக மனிதர்களின் மீதான நேசத்தை வளர்க்கும் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வது, எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக்கொள்வதற்கு வழிகாட்டும் பல்வேறு துறை நிபுணர்களை அழைத்து வந்து பேச வைப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் விடுதிகளில் ஒரு புதிய சூழலை உருவாக்க முடியும். அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும். பாதுகாப்பானதாகவும் இருக்கும்!

- கட்டுரையாளர், திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி எனும் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தற்கொலைகள் அதிகமாக நடைபெற்று வந்த அந்த கிராமத்தில் பல விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டவர் இவர்.

தொடர்புக்கு: anandt.tanand@gmail.com

ஆ'வலை' வீசுவோம் 17 - ஆங்கில அகராதிகளின் 'கூகுள்'!

சைபர்சிம்மன்

இணைய தேடலின் ஆற்றலையும் வீச்சையும் உணர்த்தும் அருமையான ஆங்கில அகராதி தேடியந்திரம்.

இணைய அகராதிகளை தேடியந்திரமாக கொள்ள முடியுமா? வார்த்தைகளுக்கான பொருள் தேட உதவும் தன்மை காரணமாக இவற்றை தேடியந்திரமாக கருதலாம் என்றாலும், அகராதிகளின் இணைய வடிவம் என்பதால், இவற்றை தேடியந்திரம் கீழ் வகைப்படுத்த வேண்டுமா என்றும் யோசிக்கலாம்.

அச்சு வடிவிலான அகராதிகளில் இருந்து இணைய அகராதிகள் பெரும் பாய்ச்சலாக இருப்பதை 'தி ஃபிரி டிக்‌ஷ்னரி' அல்லது 'யுவர் டிக்‌ஷனரி' அளிக்கும் விரிவான தேடல் வசதிகளில் இருந்தே புரிந்துகொள்ளலாம். பாரம்பரிய ஆங்கில அகராதிகளான ஆக்ஸ்போர்டு, மேக்மில்லன் போன்றவற்றின் இணைய அகராதிகளும் கூட காகித பக்கங்களின் வரம்பில் இருந்து விடுபட்டு டிஜிட்டல் பரப்பில் புதிய பரிமாணம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

எனவே, அகராதிகளை வார்த்தைகளுக்கான தேடியந்திரமாக கொள்ளலாம். அப்படியே இதில் இலக்கண சிக்கல் இருப்பதாக தோன்றினாலும் கூட, 'ஒன்லுக்' அகராதியை நிச்சயம் தேடியந்திரமாக கருத வேண்டும். ஏனெனில் ஒன்லுக் அகராதிகளின் அகாரதி - இணையத்தின் பேரகராதி. இணையவாசிகளுக்கு எளிதில் புரியக்கூடிய மொழியில் சொல்ல வேண்டும் என்றால் இது அகராதிகளின் கூகுள்!

எளிமைக்கு பின்னால்...

ஒன்லுக் முகப்பு பக்கத்தில் இருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். கூகுளின் முகப்பு பக்கம் போலவே இதன் முகப்பு பக்கமும் எளிமையாக இருப்பது தற்செயலானது அல்ல; அந்த எளிமை தான் தேடியந்திரங்களுக்கான முக்கிய அம்சமும் கூட!

தி ஃபிரி டிக்‌ஷனரி அகராதியை பயன்படுத்தியிருக்கிறீர்களா? அது அகராதி போலவே இருக்காது. மாறாக, ஒரு வலைவாசலின் தோற்றத்துடன் அது வரவேற்கும். வார்த்தைகளுக்கான தேடல் கட்டம் மேல் பகுதியில் இருக்க மற்ற முகப்புப் பக்கம் முழுவதும் எண்ணற்ற அம்சங்களாக நிறைந்திருக்கும். மற்றொரு மிகச் சிறந்த இணைய அகராதியான யுவர் டிக்‌ஷனரியும் இதே ரகத்தை சேர்ந்தது தான். ஆனால் இதன் முகப்பு பக்கம் இப்போது சீரமைக்கப்பட்டு நவீன வடிவமைப்புடன் மேம்பட்டிருக்கிறது. தெளிவாக, குழப்பமில்லாத வகையிலான அகராதி எனும் வர்ணனையுடன் இதன் தேடல் கட்டம் நடுநாயகமாக அமைந்திருக்கிறது என்றாலும் கூட, இதிலும் கூட, வார்த்தை பட்டியல், மேற்கோள்கள், உதாரணங்கள், வார்த்தை தேடல் என கூடுதல் அம்சங்கள் அநேகம் இருக்கின்றன.

ஆனால், ஒன்லுக் முகப்பு பக்கம் மிக எளிமையாக தேடல் கட்டத்துடன் காட்சி அளிக்கிறது. அதன் கீழ் வழிகாட்டுவதற்கான தேடல் உதாரணங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. ஆனால், தோற்றத்தை கண்டு ஏமாந்துவிடக் கூடாது. இதன் தேடல் கட்டத்தில் பொருள் தெரிய வேண்டிய வார்த்தையைக் குறிப்பிட்டு தேட முற்படும்போதுதான் இதன் அற்புதமே தெரியவரும். அல்லது தேடல் உதாரணங்களை கிளிக் செய்து பார்த்தாலும் இதன் தேடல் விஸ்வரூபம் எடுப்பதை பார்க்கலாம்.

தேடல் விஸ்வரூபம்

ஒரு குடிசையின் கதவை திறந்து உள்ளே சென்றால் மாடமாளிகை அறைகளுக்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய பிரமிப்பை இதில் தேடும்போது உணரலாம்.

உதாரணத்துக்கு, இதில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளுபேர்ட் எனும் வார்த்தையை கிளிக் செய்து பார்த்தால் அடுத்து தோன்றும் பக்கத்தில், 33 அகராதிகளில் இந்த வார்த்தைக்கான பொருள் இருக்கிறது என தகவலுக்கு கீழே வரிசையாக ஒவ்வொரு அகராதியில் தோன்றும் பொருளுக்கான இணைப்பு இடம்பெற்றிருக்கும்.

அதாவது, ஒன்லுக் நாம் தேடும் வார்த்தையை இணையத்தில் உள்ள அகராதிகள் அனைத்திலும் தேடிப் பார்த்து சலித்தெடுத்து, எந்த எந்த அகராதிகளில் எல்லாம் அந்த வார்த்தைக்கான அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளதோ அவற்றை எல்லாம் பட்டியலிடுகிறது. எந்த அகராதி தேவையோ அதை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். தேவை எனில் ஒன்றுக்கும் மேற்பட்ட அகராதி விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

பரவலாக அறியப்பட்ட ஆக்ஸ்போர்டு, மெரியம் வெப்ஸ்டர்ஸ், மேக்மில்லன் போன்ற அகராதிகள் தவிர வேறு பல அகராதிகளும் இந்தப் பட்டியலில் இருப்பதை பார்க்கலாம். இப்படி எல்லாம் கூடவா அகராதிகள் இருக்கின்றனவா? என வியப்பை ஏற்படுத்தும் வகையில் பல புதுமையான இணைய அகராதிகளையும் இதில் பார்க்கலாம். தேடும் வார்த்தையின் தன்மைக்கேற்ப அகராதிகளின் பட்டியல் மாறும் - பல புதிய அகராதிகள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு இணைப்புடனும் அதற்கான விவரங்கள் மற்றும் மூல தளத்திற்கான சுட்டி இடம்பெற்றிருக்கும்.

அகராதி பட்டியல்

இந்தப் பட்டியலில் பொதுவான நோக்கிலான பொருள்களும், அதன் கீழ் குறிப்பிட்ட துறை சார்ந்த விளக்கத்தையும் பார்க்கலாம். மொழி ஆர்வம் கொண்டவர்களுக்கு சரியான வேட்டையாக அமையும். இல்லை, குறிப்பிட்ட பொருள் தான் தேவை எனில், இந்தப் பட்டியலை பார்ப்பதற்கு முன்னரே பொதுப் பிரிவில் அர்த்தம் தேவையா அல்லது அறிவியல், மருத்துவம், கணிணி போன்ற துறை சார்ந்த விளக்கம் தேவையா என தீர்மானித்து அதற்கேற்ப தேடிக்கொள்ளலாம்.

உதாரணமாக ஜாவா எனும் வார்த்தையை தேடும்போது, கணினி சார் விளக்கம் தேவை எனில் நேரடியாக 19 தொழில்நுட்ப அகராதிகளில் தேடிக்கொள்ளலாம். அதே போல ஆர்சனிக் எனும் சொல்லுக்கு மருத்துவத்தின் கீழ் ஆறு அகராதிகளை காணலாம்.

இவை தவிர வழக்கமான பெயர்ச்சொல், வினைச்சொல் போன்ற விளக்கங்களையும் அருகே பெட்டியாக பார்க்கலாம். அது மட்டும் குறிப்பிட்ட வார்த்தை தோன்றிய வரலாறு, அதன் பயன்பாடு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். கொச்சை வழக்கிலான பயன்பாடு, சொற்றொடர்களின் பயன்பாடு என்றும் கூடுதல் விவரங்கள் சிறகு விரிக்க காத்திருக்கின்றன.

தலைகீழ் தேடல்

இணையத்தில் மொத்தம் எத்தனை அகராதி இருக்கிறது என்ற விவரம் யாருக்கும் தெரியாது. இவ்வளவு ஏன்... பெரும்பாலானோருக்கு குறிப்பிட்ட துறை சார்ந்த இணைய அகராதிகள் இருப்பது கூட தெரியாது. அதனால் என்ன, ஒன்லுக்கை பயன்படுத்துவது மூலம் அவை அனைத்திலும் தேடலாம்.

இந்தத் தேடலில் அநேகமாக ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தரிசனமோ அல்லது சின்ன கண்டுபிடிப்போ சாத்தியமாகலாம். சும்மா இல்லை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய அகராதிகளில் இருந்து தேடித் தருகிறது அல்லவா!

தேவை எனில் அகராதிகளின் பட்டியலையும் பார்க்கலாம். பொது அகராதிகள் மற்றும் துறை சார்ந்த அகராதிகள் என பட்டியல் விருகிறது. எந்த ஒரு வார்த்தைக்கும் குறிப்பிட்ட ஓர் அகராதியில் பொருள் தேடும் வசதியும் இருக்கிறது. நேரடியாக நமக்கு தேவையான வகையிலும் தேடலை கட்டமைத்துக்கொள்ளலாம்.

இவை தவிர, தலைகிழ் தேடலும் சாத்தியம். அதாவது ஏதேனும் விளக்கத்தை சமர்பித்து அதற்கு பொருத்தமான வார்த்தையும் தேடலாம்.

இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்ன என்றால் ஒன்லுக் அகராதி தேடியந்திரம் 1996-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதுதான். துவக்கத்தில் ராபர்ட் வேர் என்பவர் இதை நடத்தியிருக்கிறார். அதன் பிறகு டபிபீபர்மேன் இதற்கு பொறுப்பேற்று இதன் தற்போதைய வடிவை கொண்டு வந்தார். டேட்டாமியூஸ் நிறுவனம் இதை பராமரித்து வருகிறது.

ஒன்லுக் தேடியந்திர முகவரி: http://www.onelook.com

சிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் 'லைக்' பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம்

Return to frontpage

கோபம், வருத்தம், ஆச்சரியம், சிரிப்பு, அழைப்பு, அன்பு உள்ளிட்ட ஆறு புதிய உணர்ச்சிகள், ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைய உள்ளன.

மக்களின் உணர்ச்சிகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாலேயே, ஃபேஸ்புக் 160 கோடி மக்களைப் பெற்று, உலகத்தின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

அமெரிக்காவுக்கு வெளியே நடந்த 4 மாதப் பரிசோதனைக்குப் பிறகு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஆறு புதிய உணர்ச்சிகள் ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

கடந்த புதன்கிழமை ஃபேஸ்புக்கின் காலாண்டு வருமான அறிக்கையை வெளியிட்ட மார்க், இந்த தகவலை அறிவித்திருக்கிறார். ஆனால் எப்போது இம்முயற்சிகள் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் அதில் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து மார்க், "ஃபேஸ்புக்கின் பிரத்தியேக அடையாளமான கையை உயர்த்தும் சின்னம், லைக் பொத்தானாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு விஷயத்தை மக்கள் பார்க்கும்போது, உணர்ச்சிகளை வெளிப்படுத்த லைக் பொத்தான் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அனைத்து விதமான உணர்வுகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இதன் மூலம் மக்கள் இப்போது இருப்பதை விட, இன்னும் அதிக நேரம் உணர்வுப்பூர்வமாக சமூக ஊடகங்களில் செலவிடுவார்கள் என்று நம்புகிறோம். உலகம் முழுக்க இவற்றை அறிமுகப்படுத்தும் முன், எங்கள் பொறியாளார்கள் மேலும் சில உணர்ச்சிகளை உருவாக்க வேண்டும்" என்று பேசினார்.

உணர்ச்சிகள் அடங்கிய ஃபேஸ்புக்கின் புது முயற்சிகள் சிலி, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், கொலம்பியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் பெறலாம்: விதிகளை தளர்த்தியது மத்திய அரசு

Return to frontpage

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்களாக இருந்தது. 2014-ல் 42 நாட்களாகவும் 2015-ல் 21 நாட்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதற்கான நோட்டரி அபிடவிட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் எண் அட்டை ஆகிய 4 ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பாஸ்போர்ட் பெறலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் வழங்கிய பிறகு வழக்கமான போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய நடைமுறை குறித்து சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராகேஷ் அகர்வால் கூறியபோது, இனிமேல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். ஒருவேளை ஆதார்- வாக்காளர்- பான் அடையாள அட்டைகள் இல்லை என்றால் வழக்கமான போலீஸ் விசாரணை நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.

பணி நிரந்தரம் செய்வதாக உறுதி: ஒப்பந்த செவிலியர் உண்ணாவிரதம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடு

Return to frontpage

பணி நிரந்தரம் செய்வதாக அதிகாரிகள் அளித்த உறுதி யின்பேரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஒப்பந்த செவிலியர்கள் அறிவித்தனர்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்கள் 3,447 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டம் அறிவிக்கப் பட்டது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று முன்தினம் போராட்டம் தொடங்கியது. தமி ழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் இதில் பங்கேற்றனர்.

உண்ணாவிரதம் இருந்தவர் களில் 8 பேர் நேற்று முன்தினம் மாலை மயங்கி விழுந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர். இதையடுத்து, அன்றிரவே தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அது தோல்வி அடைந்ததால், பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக செவிலியர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், 2-ம் நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. நேற்றும் 4 செவிலியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களும் ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை டிஎம்எஸ் வளா கத்தில் நேற்று நடந்தது.

இதில், முதல் கட்டமாக 806 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாகவும், மீதமுள்ளவர்களை இன்னும் 10 நாட்களில் பணி நிரந்தரம் செய்வதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து ஒப்பந்த செவிலியர்கள் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.

10-ம் தேதிக்குள்..

10-ம் தேதிக்குள் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் 11-ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடருவோம் என்று ஒப்பந்த செவிலியர்கள் தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் சலசலக்க வைத்த ராபின் மெயின் வழக்கு

Return to frontpage

டி.சுரேஷ்குமார்

ராபின் மெயின் மோசடி வழக்கு. இது, அரசியல் பெரும்புள்ளி ஒருவரும் சம்பந்தப்பட்ட வழக்கு. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 32 காலங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜனவரி 29) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு என்ற இக்காரணத்தை தவிர வேறு சில காரணங்களுக்காகவும் இந்த வழக்கை சற்று பின்னோக்கிப் பார்க்கலாம்.

அவ்வாறு சற்றே காலச்சக்கரத்தை பின்னோக்கிச் செலுத்தினால், எம்.ஜி.ஆர். தலைமையிலான அப்போதைய ஆட்சியில் ராபின் மெயின் வழக்கு ஏற்படுத்திய சலசலப்பும், அதிமுகவில் ஜெயலலிதா, காளிமுத்து உள்ளிட்ட பலரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் தெரியவரும்.

1985 அக்டோபர் மாதம். அப்போதுதான் ராபின் மெயின் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். அவர் மீதான கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அவர் அன்றைய வேளாண் அமைச்சர் காளிமுத்துவின் நண்பர்.

நண்பர் மீதான கைது நடவடிக்கையையும், அந்த வழக்கில் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் சற்றும் எதிர்பாராத காளிமுத்து, ஜெயலலிதா மீது விமர்சனங்களை குவித்தார்.

அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை எம்ஜிஆர் மீண்டும் நியமித்ததற்கு கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காளிமுத்து தெரிவித்த எதிர்ப்பே மிகக் கடுமையானது. ஜெயலலிதாவை ஏன் கொள்கை பரப்புச் செயலராக நியமித்தீர்கள் என எம்.ஜி.ஆரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் திராவிட கட்சியின் அதிகாரத்தை முடிவு கட்ட ஜெயலலிதா சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

ராபின் மெயின் வழக்கில் வேண்டுமென்றே தன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். சிபிஐ தன் மீது அவ்வாறாக குற்றம் சுமத்த ஜெயலலிதாவே முழுமுதற் காரணமாக இருந்தார் எனவும் கூறினார்.

மேலும் ராபின் மெயின் வழக்கு தொடர்பாக தனது உதவியாளர் மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரி ஒருவர், மூன்று மாதங்களில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற இந்திரா காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவை தமிழக முதல்வராக்கவும் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார்.

காளிமுத்து - ஜெயலலிதா காரசார வாக்குவாதம்

இந்தக் குற்றசாட்டுகளையெல்லாம் திட்டமிட்டு மறுத்த ஜெயலலிதா, கற்பனை அடிப்படையில் காளிமுத்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் என்றார். இல்லை, நான் அவரது (ஜெயலலிதாவின்) அரசியல் எதிர்காலத்துக்கு சவாலாக இருப்பேன் என்பதற்காகவே என் மீது போலி குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா சுமத்துகிறார் என்ற பதில் வாதத்தை முன்வைத்தார் காளிமுத்து. இந்த வார்த்தைப் போர் ஓயவில்லை, "யாரோ ஒருவர் செய்த குற்றத்துக்கு நான் பலிகடா ஆக முடியாது" என்றார் ஜெயலலிதா. இவ்வாறாக பதிலுக்கு பதில் தொடர்ந்து கொண்டே இருந்தது.

எம்.ஜி.ஆர். வைத்த முற்றுப்புள்ளி:

தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 1985 அக்டோபர் 28-ம் தேதி எம்.ஜி.ஆர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை தாக்கல் செய்தனர். இந்த அதிரடி அறிவிப்பால், சலசலப்புகள் சற்று ஒய்ந்தன.

அந்த வேளையில்தான், சிபிஐ தனக்கு எதிராக ராபின் மெயினிடம் வாக்குமூலம் பெற சிபிஐ முயற்சிப்பதாக எம்.ஜி.ஆரிடம் முறையிட்டார் காளிமுத்து. இதனையடுத்து எம்.ஜி.ஆரும், சட்ட அமைச்சர் பொன்னையனும் காவல்நிலைய லாக்-அப் நிலவரம் அறிவதாக கூறி அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். எழும்பூர் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்குதான் ராபின் மெயின் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியே சலசலப்பும், பரஸ்பர குற்றச்சாட்டுகளும் அவ்வப்போதும் எழுந்தும், மறைந்தும் இரண்டு ஆண்டுகள் உருண்டோடின.

1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்தார். அவருக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதுவரை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவந்த காளிமுத்து, ஜெயலலிதா தரப்பில் ஐக்கியமானார். பின்னர் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.ஆனார். ஆனால், எல்லாம் அப்படியே சுமுகமாக செல்லவில்லை. திடீரென காளிமுத்து திமுகவுக்கு திரும்பினார். அங்கும் அவர் வெகு காலம் நீடிக்கவில்லை. மீண்டும் அதிமுகவுக்கே வந்தார்.

2001-ல் காளிமுத்துவை சட்டப்பேரவை சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா. 4 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் 2005-ல் ராபின் மெயின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அப்போது, காளிமுத்து பதவி விலக வேண்டும் என வலுவான எதிர்ப்புக் குரல் உருவானது. ஆனால், சபாநாயகர் பதவியை காளிமுத்து ராஜினாமா செய்யத் தேவையில்லை என ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக காளிமுத்து மாரடைப்பில் இறந்தார்.

ராபின் மெயின் வழக்கில் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த காளிமுத்து உட்பட 16 பேர் வழக்கு நடத்து கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டனர்.

ஆனால், ராபின் மெயின் வழக்கு அதிமுகவில் ஏற்படுத்திய சர்ச்சைகளையும் சமரசங்களையும் யாரும் மறக்க முடியாது.

Wednesday, January 27, 2016

சுயநிதிக் கல்லூரியும், செட்டப் ஆஸ்பத்திரியும்... ....கே. மகேஷ்

Return to frontpage

முன்னாடி எல்லாம் கடை வாசல்ல உட்கார்ந்து நாலஞ்சி பெருசுக பேப்பரை படிச்ச மாணிக்கே இருப்பாங்க. ஒரு புள்ளி விடாம வாசிச்சிருவாங்க. அதுவும் சட்டசபை செய்தின்னா கேட்கவே வேணாம்.

“கேட்டாம் பாரு கேள்வி”ன்னு செல்லையா தாத்தா சொல்வாரு. “பதில் அதவிட பிரமாதம்யா”ம்பாரு இளந்தாடி தாத்தா. “எல்லாம் தப்புய்யா. அது மரபு கெடையாது” அப்பிடிம்பாரு தங்கய்யா தாத்தா.

ஒரு தடவை நான் கடைக்குப் போயி அப்பாகிட்ட, “யப்போ, அம்மை உங்கள சாப்பிட கூப்டாவ”ன்னேன். பேப்பர் படிச்சிக்கிட்டு இருந்த தங்கய்யா தாத்தாவுக்கு கோவம் வந்திருச்சி. என் காதை பிடிச்சித் திருகி, “அப்பாவாமுல்லா, அப்பா. அதுக்கு, ‘ஏலெ பிச்சக்கனி கஞ்சி குடிக்கவாலே’ன்னு கூப்பிட்டிருக்கலாம்ல. பெத்த தகப்பன, ‘அய்யா இங்க வாரும், போரும்’ மரியாதையா கூப்பிடத் தெரியல. நீயெல்லாம் பள்ளிக்கூடம் படிச்சி என்னாத்துக்கு?”ன்னு குமுறிட்டாரு.

ஏன்னா அவருக்கு எல்லாமே மரபுப்படி நடக்கணும். நல்லவேள இப்ப அவரு உசுரோட இல்லை. இருந்திருந்தா சட்டசபை செய்தியப் படிச்சிட்டு ரொம்பப் புலம்பியிருப்பாரு.

எனக்கு சட்டசபை மரபெல்லாம் தெரியாது. இருந்தாலும் இந்த தடவை பெருத்த ஏமாத்தம். நாலரை வருஷமா சட்டசபை கூட்டத்தொடர் ஒரு மாதிரியா நடந்திருந்தாலும், கடைசி கூட்டத்தொடர்லயாவது பூராப் பேரும் அநியாயத்துக்கு ‘பெர்பார்ம்’ பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தேன். வழக்கம் போல ஏமாத்திட்டாங்க. பாவம், சட்டசபையில பேசுறதுக்கு மேட்டரே இல்ல பாருங்க.

நம்ம கல்வித்தரத்தப் பத்தியும், கல்வி நிறுவனங்களப் பத்தியும் பேசுறதா இருந்தாலே ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு நாள் வேணும். அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, சுய நிதிக் கல்லூரி, பேராசிரியர் பணி நியமனம், துணை வேந்தர் தேர்வுன்னு விலாவாரியா பேசுனா ‘புரட்சித் தலைவி அம்மா’ சொன்ன மாதிரி, 36 நாளு பேச வேண்டியது இருக்கும். ஆனா யாரும் பேசல. எதிர்க்கட்சிகளப் பேச விடலைன்னா, உங்க பாணியில மக்கள் மன்றத்துலயாவது பேசலாம்ல? பேச மாட்டாங்க. ஏன்னா, நம்ம அரசியல்வாதிகளுக்கும், அவங்களோட புரவலர்களுக்கும் கல்வி வியாபாரம்தான் மெயின் பிஸினஸே... செய்யும் தொழிலே தெய்வம். அதைப் பத்தி பேசுனா சாமி குத்தமாகிடாதா?

மருத்துவக் கல்லூரிகள்

கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரியில தற்கொலை பண்ணுன மாணவிக எழுதிவெச்சிருந்த கடிதாசிய பேப்பர்ல படிச்சிருப்பீங்க. ‘அடிப்படை வசதி இல்ல, கெட்ன பீசுக்கு ரசீது தர்றதில்ல, மாணவர்கள கிரிமினல்னு திட்டுறாங்க, செத்த பிறகு கூட நடத்தை சரியில்லைன்னு சொல்லிருவாங்களோன்னு பயமா இருக்கு’ன்னு அந்தப் புள்ளைக எழுதியிருக்குதுக. நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க இந்தப் பிரச்சன, அந்த காலேஜ்ல மட்டும்தாம் இருக்குன்னு? தமிழ்நாட்ல இருக்க பூரா சுய நிதிக்கல்லூரிகள்லேயும் இதே பிரச்சனை இருக்கு. இது கல்வித்துறை அதிகாரிகள்ல இருந்து அரசாங்கம் வரைக்கும் தெரிஞ்ச விஷயம்தாம். எஸ்விஎஸ் கல்லூரியப் பத்தி கலெக்டர்ல இருந்து மருத்துவ கல்வி இயக்குநரகம் வரைக்கும் மாணவர்கள் புகார் பண்ணியிருக்காங்க. ஆனா நடவடிக்கை எடுக்கல. 3 பிள்ளைக செத்தப் பிறகு, ‘சினிமா போலீஸ்’ மாதிரி கிளைமாக்ஸ்ல வந்திருக்காங்க அதிகாரிங்க. கல்லூரிகள்ல மாணவர்கள் இறந்தது புதுசும் இல்ல, உடனே இது நிற்கப் போறதும் இல்ல.

ஏன்னா, சுயநிதிக் கல்லூரிகள்ல டிசிப்பிளின்ங்கிற பேர்ல பசங்க அடிமை மாரி நடத்துறாங்க. மாணவர்களுக்குப் பிரச்சனைன்னா, ஆசிரியர்கள்தாம் நிர்வாகத்துகிட்ட பேசணும். ஆனா தனியார் சுயநிதிக் கல்லூரிகள்ல ஆசிரியர்கள் நிலைமையே கவலைக்கிடமா இருக்கு. ஒரிஜினல் சர்ட்டிபிகேட்டை கையில குடுத்துட்டு, தங்களோட பிரச்சினையையே பேச முடியாத வாயில்லாப் பூச்சிகளா இருக்கவங்க, மாணவர்களுக்காகப் பேச முடியுமா? அப்பிடிப் பேசி பிரச்சனையானா, எத்தனை மீடியாக்கள் அவங்களுக்காக செய்தி வெளியிடும்-? அவங்களும் தாம் காலேஜ் நடத்துறாங்களே!

செட்டப் மருத்துவமனை

மதுரையில எங்க வீட்டுப் பக்கம் ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரி இருக்கு. அடிக்கடி பிரச்சனை வந்தாலும் ‘தெறமையா’ சமாளிச்சிடுவாங்க. போன வருஷம் அரசு அனுமதியில்லாமலேயே கூடுதலா மாணவர்களைச் சேத்திட்டாங்கன்னு பிரச்சினை. பல லட்சம் டொனேஷன் குடுத்து சேர்ந்த பசங்களுக்கு, பரீட்சை நேரத்துல ஹால் டிக்கெட் வராமப் போயிருச்சி. அவங்களுக்கு எல்லாம் ஹால்டிக்கெட் வராதுன்னு நிர்வாகத்துக்கு ஏற்கெனவே தெரியும். எப்பிடியும் பரீட்சைக்கு முன்னால கூடுதல் சீட்டுக்கு அனுமதி வாங்கிடலாம்னு நினைச்சிருந்தாங்க. ‘வாங்க’ முடியாததால பிரச்சினை வெளிய வந்திடுச்சி. அப்புறம் என்ன மாணவர்களைத் திருப்திப்படுத்துறதுக்காக மருத்துவ பல்கலைக்கழத்து மேல பேருக்கு ஒரு கேஸைப் போட்டுட்டு ஜாலியா இருக்காங்க.

அதே கல்லூரியில இந்த வருஷம் வேறொரு பிரச்சனை. மூச்சுத்திணறல் வந்து மயங்கி விழுந்த ஒரு பையன், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் முன்னாடியே இறந்திட்டாம். அங்கயிருந்த டாக்டர்க ‘ஏன்யா மெடிக்கல் காலேஜ்ல இருந்து தான வர்றீங்க? அங்க பர்ஸ்ட் எய்ட் குடுக்கணும்ங்கிற அறிவு கூடவா இல்ல’ன்னு திட்டியிருக்காங்க. ‘அய்யோ சார், எங்க காலேஜ்ல டாக்டர் மட்டுமில்ல, ஆக்ஸிஜன் சிலிண்டரும் கெடையாது’ன்னு சொல்லிப் புலம்பியிருக்காங்க பசங்க. விதிப்படி எந்த மருத்துவக் கல்லூரி நடத்தினாலும் அதாடு சேர்ந்து ஆஸ்பத்திரியும் இருக்கணும். ஆனா, எத்தனை காலேஜ்ல அப்படி இருக்கு-? அதிகாரிங்க ஆய்வுக்கு வரும்போது மட்டும், ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்துல வர்ற மாதிரி வேகவேகமா ஒரு ‘ஆஸ்பத்திரி செட்’ போட்டுச் சமாளிக்கிறாங்க.

ஏழை படும் பாடு

மருத்துவ, பொறியியல் கல்லூரிகளாவது ஓரளவு வசதியா னவங்ககிட்ட கொள்ளையடிக்குது. ஆனா, நர்சிங், ஐடிஐ, லேப் டெக்னீஷியன்னு சொல்லி கோர்ஸ் ஆரம்பிக்கிறாங்க பாருங்க. அவங்களோட இலக்கு முழுக்க ஏழைங்க. அதுவும் பாவப்பட்ட கிராமப்புற ஏழைங்க.

ஏப்ரல், மே மாசம் வந்திட்டா போதும், தேர்தல் வௌம்பரம் கணக்கா ஊரெல்லாம் “நர்சிங், நர்சிங் அசிஸ்டெண்ட், லேப் டெக்னீஷியன், கேட்டரிங், ஆசிரியர் பயிற்சி! குறைந்த கட்டணம்! உடனடி வேலைவாய்ப்பு!”ன்னு எழுதித் தள்ளிருவாங்க. கண்ணைப் பறிக்கிற கலர்ல பிளக்ஸ் வௌம்பரம் வேற.

கடன்வாங்கி பிள்ளைகளச் சேப்பாங்க ஏழைங்க. டுட்டோரியல் காலேஜ் மாதிரி ஏதாவது மொட்டை மாடியில கூரை போட்டு வகுப்பு நடக்கும். ஒரு வழியா அந்தப் புள்ளைகளும் படிச்சி(-?) பாசும் ஆகிடுங்க. அப்புறம்தாம் தெரியும் இந்த சர்ட்டிபிகேட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்துல கூட பதிய மாட்டாங்கன்னு. இதுல வெளிநாட்டுப் பல்கலைக்கழங்கள் தொல்ல வேற.

அரசாங்கத்தையும், கல்வி வியாபாரிகளையும் மட்டும் குத்தம் சொல்லிப் பிரயோசனம் இல்ல. நம்மோட தனியார் மோகம்தாம் எல்லாத்துக்கும் மூல காரணம். நான் குடியிருக்கிற ஊரு அரசாங்க பள்ளிக்கூடத்துல என்ன குறைன்னாலும் புகார் பண்ணுற அதிகாரம் சலூன் கடை வெச்சிருக்கிற மதியழகனுக்கு இருக்குது. ஏன்னா அவரோட பிள்ளை அங்க படிக்கதால அவர கல்விக்குழு உறுப்பினரா போட்டிருக்காங்க. எல்கேஜிக்கு 1 லட்சம் நன்கொடை கொடுத்து பிள்ளைய நர்சரி ஸ்கூல்ல சேத்த நம்மால, ‘என்ன சார் ஸ்கூல் 3 மணிக்கே முடிஞ்சிடுச்சி. பையன் 5 மணிக்குத்தான் வீட்டுக்கு வாரான். ஒரு பஸ்தாம் வெச்சிருக்கீங்கள்லா-?ன்னு துணிஞ்சி கேள்வி கேட்க முடியுமா? பிள்ளைய பழி வாங்கிடுவாங்களோன்னு பயப்படுறோம். இதே பயம் மெட்ரிக் ஸ்கூல், காலேஜ்ன்னு தொடர்ந்துக்கிட்டே இருக்குது. பெத்தவங்களும் பயப்படுறோம், பசங்களும் பயந்து பயந்தே சாவுறாங்க.

வாழ்க்கைய வாழ்றதுக்கு கல்வியா? எப்பிடியாவது பயந்து நடுங்கி செத்துப் பிழைச்சாவது, பிழைக்க வழிதேடுறது கல்வியா? முதல்ல யோசிக்க வேண்டியது நாமதாம்!

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

Tuesday, January 26, 2016

48 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு

logo

புதுடெல்லி,

கடந்த டிசம்பர் 14-ந்தேதி மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியதன் அடிப்படையில் 48 வளர்ச்சி குன்றிய நாடுகளில் இருந்து பிஸினஸ் மற்றும் எம்ப்ளாய்மண்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டணத்தை தள்ளுபடி செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. எனினும், அவுட்சோர்சிங் நிறுவனத்தின் சேவைக் கட்டணம் மற்றும் இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபேர் பண்டு கட்டணம் ஆகியவை வழக்கம்போல் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ள 48 வளர்ச்சி குன்றிய நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள சில முக்கிய நாடுகள் பின்வருமாறு:-


ஆப்கானிஸ்தான்
அங்கோலா
வங்காளதேசம்
பெனின்
பூட்டான்
புருண்டி
புர்கினா பாசோ
கம்போடியா
மத்திய ஆப்பிரிக்க குடியரசு
சாட்
கோமோரோஸ்
கொங்கோ குடியரசு
திஜிபோதி
ஈகுவேடிரியர் குனியா
எரிடீரியா
எத்தியோபியா
காம்பியா
கினியா
ஹைதி
லாவோஸ்
லெசாதோ
லைபீரியா
நேபாளம்
மடகாஸ்கர்
மலாவி
மாலி
மொசாம்பிக்
மியான்மர்
நைஜர்
ருவாண்டா
செனேகல்
சாலமோன் தீவு
சோமாலியா
தெற்கு சூடான்
டோகோ
உகாண்டா
தான்சானியா
ஏமன்
சாம்பியா
கினியா-பிசாவோ
கிரிபாதி
மவுரிதானியா
சாவோ தோம்

பிரின்சிபி
திமோர்-லெஸ்டே
துவாலு
வான்உவாது
சியாரா லியோனே

நுகர்வு கலாசாரமும் கடன் வாங்கும் பழக்கமும்

Dinamani



By இரா. கதிரவன்

First Published : 26 January 2016 01:23 AM IST


"நான் முதன் முதல் வாங்கிய டெரிலின் சட்டை, பதினைந்து வருடம் ஆகியும், கிழியவில்லை, நிறம் மாறவில்லை'.
- இப்படிப் பல பொருள்கள், வெகு காலம் வரை உழைத்தன என்பதை பெருமையாக பலரும் பேசுவதை முன்பெல்லாம் கேட்பதுண்டு. அன்றையப் பொருள்கள் வெகு நாள் உபயோகத்தில் இருப்பது என்பது பெருமையாக கருதப்பட்டது.
ஆனால், இன்றைய நிலை வேறு. இன்றோ, வாடிக்கையாளர்களுக்கு, சந்தையில் ஏராளமான பொருள்கள் குவிக்கப்பட்டு, அவர்களைத் திக்குமுக்காட செய்கின்றன.
பொருள்களை உடனுக்குடன் மாற்றிக் கொள்ளும் - உபயோகித்து விட்டு தூக்கியெறியும் - use and throw, கலாசாரத்துக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம். இப்போது, அவசியத்தின் அடிப்படையில் வாங்குவது என்ற நிலை மாறி, ஆடம்பரத்தின் அடிப்படையில் வாங்குவது என்பதும், அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது என்ற நிலை மாறி, அனாவசியப் பொருள்களையும் வாங்கி, அவற்றை அத்தியாவசியம் என்று கூறிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்த சமயம், இந்த நாட்டு கதவுகள், பிற நாட்டினருக்காக முதலீடுகளுக்கும் - வர்த்தகத்துக்கும் சற்று விசாலாமாக திறந்து விடப்பட்டன. அதன் விளைவுகளில் நல்லவையும் இருந்தன, சில பாதிப்புகளும் ஏற்பட்டன.
சந்தையில் அதிகப் பொருள்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது - மக்கள் அவற்றை வாங்குவது - அதிக வியாபாரம் - அதிக பணச் சுழற்சி - அதிக லாபம் - அதிக முதலீடு - அதிக வேலை வாய்ப்பு - மேலும் வாங்கும் சக்தி - என்ற புதிய சுழற்சியை உண்டு பண்ணியது...
வாடிக்கையாளருக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ, அவரை வாங்க வைக்க வேண்டும் என்பதில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விளம்பர யுக்திகளைக் கையாளுகின்றன. அதிலும் குறிப்பாக, சிறுவர் - சிறுமியரை குறி வைத்து செய்யப்படும் விளம்பரங்கள் ஏராளம்.
இருநூறு ரூபாய் மதிப்பிலான ஓர் ஆரோக்ய பானத்துடன், இரண்டு ரூபாய் பெறுமான ஒரு சிறு பொம்மை இலவசம் என விளம்பரம் செய்யப்படும்பொது, சிறுவர், சிறுமியர் பெற்றோரை,அந்த பானத்தை வாங்க நச்சரிக்கும் சூழலைஉண்டு பண்ணுகிறது.
டீத்தூள் அல்லது சோப்புக் கட்டி வாங்கினால், லண்டனில் நடக்க இருக்கும் கிரிக்கட் பந்தயத்துக்கு குலுக்கல் முறையில் டிக்கட் இலவசம் அல்லது திரைப்பட கதாநாயகனோடு ஒரு வேளை உணவு உண்ணலாம் என்பன போன்ற பிதற்றல்கள், வியாபாரத்தை அதிகப்படுத்த நடைபெறுகின்றன. இவற்றைவிட கொடுமையான விஷயம், நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் கடும் போட்டியும், அதன் விளைவாக ஏற்படும் விளம்பர யுத்தமும் ஆகும்.
இதில் சோகமான உண்மை என்னவென்றால், இந்த விளம்பர யுத்தத்துக்கு அந்த நிறுவனங்கள் செய்யும் பெரும் செலவு முழுதும், வாடிக்கையாளர்களான நமது தலையில்விழுகிறது என்பதுதான்.
இதன் இன்னொரு அம்சம், இத்தகைய விளம்பரங்கள், மனிதனின் - உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவற்றையே மாற்றி விடுகின்றன. வீடுகளில் செய்யப்பட்ட எளிய உணவு வகைகள், நொறுக்குத் தீனிகள் இப்போது மறக்கப்படுகின்றன. உடலுக்கு உபாதைத் தரும் பண்டங்களை வாங்க வேண்டும் என்று குழந்தைகள் நச்சரிக்கும் நிலைதான் எஞ்சுகிறது.
கடன் வாங்கும் பழக்கம்: சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், சாமான்ய மனிதன் நுழைய முடியாது என்று இருந்த வங்கிகள் இன்றைக்கு, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டன. EMI - என்ற ஒரு கோட்பாடு, மாத சம்பளக்காரர்களை, எளிதான தவணை முறையில் பொருள்களை வாங்க, கடன் பெற, வங்கிகள் பெரும் உதவி செய்கின்றன.
ஆனால், சற்று பலகீனமான மன நிலையில் உள்ளவர்கள், இவற்றை சரிவரப் பயன்படுத்தாது, சக்திக்கு மீறி கடன் வாங்கும் பழக்கத்துக்கு ஆளாகி, ஆயுளுக்கும் கடன்காரர்களாக இருக்கின்றனர்.
தங்களது தேவைக்குப் பொருள்களை வாங்குவது போய், தன்னைச் சூழ்ந்து இருப்பவர்கள் வாங்குவதை எல்லாம் தாமும் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு தம்மைத் தாமே தள்ளிக் கொண்டு விடுகின்றனர்.
இதனால், விட்டில் பூச்சிகள் எப்படி விளக்கில் போய் விழுந்து விடுமோ,அப்படி சராசரி மனிதன், கடனில் சிக்கிக் கொள்ளுகிறான். மேலும், கடன் அட்டைகள் (credit cards) உபயோகமும், பலரது நடவடிக்கைகளை மாற்றிவிட்டன.
வங்கிகள், தங்களது நிலையை உயர்த்திக் கொள்ள, கடன் அட்டைகளை தாராளமாக - எளிதாக கிடைக்கும்படி செய்கின்றன. அதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளாமல் கடன் அட்டைகளை வாங்கிப் பின்னர், அதற்கு அடிமையாகி, கடன் - வட்டி - அதிக கடன் - அதிக வட்டி என்ற சுழலில் சிக்கிக் கொண்டு - பலர், ஓடி ஒளிந்து கொண்டும், இருப்பதை இழந்தும் -நிம்மதியை தொலைக்கும் நிலையில் இருப்பதும் கண்கூடு.
நிறுவனங்கள் தமது வியாபாரத்தைப் பெருக்க விளம்பரங்களில் ஈடுபடுகின்றன. வங்கிகள் தங்கள் லாபத்தைப் பெருக்க கடன் கொடுத்தல், கடன் அட்டைகள் ஆகியனவற்றை ஊக்கப்படுத்துகின்றன. அவற்றை குறை கூறுவது நமது நோக்கம் அல்ல, அது அவசியம் அற்றதும் கூட...
ஆனால், எந்த ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னரும், அப்பொருள் அத்தியாவசியமானதா, அதனை வாங்கும் சக்தியும் - அதற்குரிய பணத்தை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் திருப்பிச் செலுத்தும் சக்தியும் உள்ளதா, அதனை வாங்குவதால் வேறு ஏதேனும் இழப்பு ஏற்படுமா, அந்த இழப்பு அவசியம்தானா என்று சிந்தித்து, நமது சக்திக்கு ஏற்பவும் - தேவைக்கு ஏற்பவும் பொருள்களை வாங்குவதை பழக்கமாகக் கொண்டு, கடன் சூழலுக்குள் சிக்காது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

கல்விச் சூழலின் அவலம்!


Dinamani


By ஆசிரியர்

First Published : 26 January 2016 01:19 AM IST


விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவிகள், மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூவரும் சந்தேகத்துக்கு இடமான விதத்தில் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இது தற்கொலையாக இருந்தாலும் அல்லது தற்போது பெற்றோர் சொல்வது போல கொலையாக இருந்தாலும், அதற்கான காரணம் கல்லூரியின் செயல்பாடாகத்தான் இருக்க முடியும்.
2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரிக்கு மத்திய ஹோமியோபதி மருத்துவக் குழுமம் அங்கீகாரம் அளிக்க மறுத்த பின்னரும், அது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கல்லூரிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கிய பிறகும், இந்தக் கல்லூரி செயல்பட்டது என்பதே தமிழகத்தில் இயங்கும் தனியார் கல்லூரிக் கல்விச் சூழலின் அவலத்துக்கு அத்தாட்சி.
இந்தக் கல்லூரி போதுமான வசதிகள் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்துக்காக, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், இதற்கு வழங்கியிருந்த இணைவுத் தகுதியை 2015-லேயே ரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இருந்தும்கூட, இக்கல்லூரி நடைபெற்றுவந்துள்ளது. போதிய வசதிகள் ஏற்படுத்தாமல், மாணவிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இக்கல்லூரி மாணவிகள் பலரும் சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, இந்தக் கல்லூரியைக் குறித்துப் புகார் மனு கொடுத்தனர். ஆனால், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்தத் தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும். தனியார் கல்லூரி சார்ந்த பிரச்னை என்பதால் அதில் தலையிட மாவட்ட ஆட்சியர் தயங்கி இருக்கக் கூடும். இந்த மனுவை ஏற்று, மாவட்ட ஆட்சியர் அந்தக் கல்லூரி வளாகத்துக்கு சென்றிருந்தாலும்கூட, பல உண்மைகள் தெரியவந்திருக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக, மாணவர்கள் தங்கள் பிரச்னைக்குத் தீர்வு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், விடுதியில் உணவு தரமானதாக இல்லை என்றும், சான்றிதழ் கொடுக்க மறுக்கப்படுகிறது என்றும் பல கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகிறார்கள். ஆனால் பல கோரிக்கைகள், பத்திரிகைகளில் புகைப்படம் வருவதோடு முடிந்து போகின்றன. தீர்வு காணப்படுவதே இல்லை.
தற்போது தனியார் கல்லூரிகளில், குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில், கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் முறையற்ற வகையில் கட்டாயப்படுத்தப்படுகின்றன. இவர்களை எதிர்த்துக்கொண்டு, அங்கே படித்துப் பட்டம் பெறுவது இயலாது என்ற மனநிலையில், பெற்றோரும் மாணவர்களும் இதனை சகித்துக்கொண்டு இருக்கின்றனர். சில தனியார் கல்லூரிகளில், பயிற்சி மருத்துவராக பணிபுரியும் காலத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தைக்கூட வழங்குவதே இல்லை. இருப்பிடம், உணவு மட்டும் இலவசம் என்பதுதான் அவர்கள் வழங்கும் சலுகை.
பொறியியல் கல்லூரிகள் பலவற்றிலும் மாணவர்கள் சேர்க்கை குறைந்துபோனதால், மாணவர்களைத் தக்கவைக்கவும், மாணவர்களைச் சேர்க்கவும் கல்விக் கட்டணத்தில் "தள்ளுபடி' அறிவிக்கும் காலம் இது. இருப்பினும், பல பொறியியல் கல்லூரிகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளும் தங்கள் நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க ஓர் உத்தியைக் கையாளுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தை அரசே முழுமையாக ஈடுசெய்யும் (போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்) என்ற அரசாணையைத் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ஒவ்வொரு கல்லூரியிலும் முழுமையாக ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிவரும்.
தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் மட்டுமல்ல, விரிவுரையாளர்கள் கூடத் துயரத்தில் உள்ளனர். பல பொறியியல் கல்லூரிகள் ஆசிரியர்களுக்குச் சம்பளத்தையே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்குவதாக புகார்கள் உள்ளன. மாணவர்கள் குறைவு என்பதால் வருமானம் இல்லை என்கிற நியாயம் முன்வைக்கப்படுகிறது.
தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளைக் காட்டிலும் மிக மோசமான நடைமுறை, அதிகக் கட்டணம் என்பது தனியார் மேனிலைப் பள்ளிகளிலேயே அதிகமாகக் காணப்படுகிறது. பிளஸ் 2 மதிப்பெண்கள்தான் உயர்கல்விக்கான அடிப்படை என்பதால், இதையெல்லாம் பெற்றோர் பொறுத்துக்கொள்கின்றனர்.
இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு கல்விச்சூழல் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். கட்டண முறைகேடு, கற்பித்தல் குறைபாடு, கற்பதற்கான வசதியின்மை, கல்லூரி விடுதியின் அவலநிலை, தரமற்ற உணவு ஆகியன குறித்த புகார்களை உடனடியாக விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றதாக இக்குழு அமைய வேண்டும். இன்றைய இன்றியமையாத் தேவை இது.
இந்தக் குழுவில் கல்வித் துறை அலுவலர்கள் பாதி எண்ணிக்கையிலும், பெற்றோர், மாணவர்கள் பாதி எண்ணிக்கையிலும் இருக்க வேண்டும். எந்தவொரு புகாரையும் குழுவின் அங்கத்தினர் இருவரும், புகாருக்கு இலக்கான கல்லூரி அல்லது மேனிலைப் பள்ளி அமைவிடத்தின் மாவட்ட ஆட்சித் தலைவரால் அனுப்பப்படும் இரு வருவாய்த்துறை அலுவலர்களும் அக்கல்லூரி/ பள்ளிக்குச் சென்று நிர்வாகத்திடம் விசாரணை நடத்துவதுடன் மாணவர்களுடனும் தனிஅறை விசாரணை நடத்த வேண்டும்.
இத்தகைய கண்காணிப்புக் குழுக்களின் வெளிப்படைத் தன்மை, உயர்கல்வியில் நிலவும் பல முறைகேடுகளைப் பெருமளவு போக்கிவிடும். இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தின் கல்விச் சூழலையும், கல்வியின் தரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்!


Monday, January 25, 2016

பெண் எனும் பகடைக்காய்: அரும்புகளை மலர விடுங்கள்

பெண் எனும் பகடைக்காய்: அரும்புகளை மலர விடுங்கள்

பா. ஜீவசுந்தரி

பூக்களை ரசிக்காதவர்கள் இங்கு யார்? மென்மையான உணர்வும் கலாபூர்வமான ரசனையும் அழகுணர்ச்சியும் கொண்ட யாராக இருப்பினும் பூக்களின் வண்ணங்களையும் நறுமணத்தையும் ரசிக்காமல் கடந்து போய்விட முடியாது. அந்தப் பூக்களே உயிர் கொண்டு நடமாடினால் எப்படி இருக்குமோ, அதன் மறு வடிவம்தான் பெண் குழந்தைகள்.

தங்கள் குடும்பத்தின் தேவதை என்றும் குலவிளக்கு என்றும் கொண்டாடும் பெற்றோர்கள் ஒருபுறம் என்றால், ‘இந்தச் சனியனும் பொட்டையாப் போச்சே….’ என்று புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் மீது வெறுப்பை உமிழ்பவர்கள் மறுபுறம். கிராமப்புறங்களில் பெண் சிசுக்களைக் கள்ளிப்பால் ஊற்றியோ நெல் மணிகளைப் புகட்டியோ கொன்ற நடைமுறைகள் வேண்டுமானால் மாறியிருக்கலாம். மதுரையின் உசிலம்பட்டி பகுதிகளில் அன்றாட நடைமுறையாக இருந்த இந்நிலை இப்போது இல்லை. அதே போல, தர்மபுரி மாவட்டத்திலும் பெண் சிசுக்கொலை வெகு பிரபலம். ஆனால், இந்த நிலை முற்றிலும் மாறியிருக்கிறதா என்றால், இல்லை என்று அழுத்தமாக மிகுந்த மன வருத்தத்துடன் சொல்ல வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

மூன்று வயதேயான தன் பெண் குழந்தையுடன், சென்னைக்குப் பிழைக்க வந்தார் காளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண். 18 வயதுகூட நிரம்பாத காளி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்; கல்வியறிவு இல்லாதவர். இங்கிருந்த உறவினர்களை நம்பியே அப்பெண் வந்திருந்தார். அவர்களும் காளியை ஏமாற்றாமல் பாதுகாப்பளித்து, பிழைப்புக்கு ஒரு வழியையும் காட்டினார்கள். படிக்காத அந்தப் பெண்ணுக்கு சென்னையில் பெரிதாக என்ன வேலை கிடைத்துவிடப் போகிறது? வீடுகளில் பணிப்பெண் வேலை தாராளமாகக் கிடைத்தது. ஒரு நாளைக்கு ஐந்து வீடுகளில் பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல். வீடு பெருக்கித் துடைத்தல் என்று அயராமல் வேலை செய்து, எல்லோரிடமும் நல்ல பெயரையும் வாங்கினார். இதில் எங்கள் வீடும் அடக்கம்.

கையில் வருமானம் கிடைத்த பின் தன்னம்பிக்கையுடன், உறவினர் வீட்டுக்கு அருகிலேயே தனியாக ஒரு குடிசையில் வாடகைக்குக் குடியேறினார் காளி. மகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். நாங்களும் அதற்கான உதவிகளைச் செய்தோம். இப்போது அந்தப் பெண் குழந்தை 10-ம் வகுப்பை நிறைவு செய்து ப்ளஸ் ஒன் படிக்கிறாள்.

தனியாக ஊரை விட்டுக் கிளம்பி சென்னைக்கு வந்து பிழைக்க எவ்வளவு மனதிடம் வேண்டும். அது அந்தக் காளியிடம் ஏராளமாக இருந்தது. அவ்வப்போது நான் பேச்சுக் கொடுக்கும்போது, அப்படி வந்ததற்கான காரணத்தையும் சொன்னபோதுதான் அந்தப் பெண்ணின் வலியை உணர முடிந்தது. பதினைந்து வயதிலேயே, சொந்தத்தில் வாழ்க்கைப்பட்டு, அவசரம் அவசரமாக ஒரு பெண் குழந்தையையும் 16 வயதில் பெற்றுக்கொண்டாயிற்று. ஆனால், பிறந்தது பெண் என்பதால் வீட்டில் பிரளயம் கிளம்பிவிட்டது. பிறந்த பெண் சிசுவைக் கொன்றுவிடச் சொல்லிக் கணவனிடமிருந்து உத்தரவு வந்ததும் ஆடிப் போய் விட்டார். காளி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கணவன் காதில் வாங்கிக்கொள்ளத் தயாராயில்லை. குழந்தையைக் கொல்லாவிட்டால் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலை. ஆனாலும் மிகுந்த மனோதிடத்துடன் குழந்தைக்காக மண வாழ்க்கையைத் துறந்து பிறந்த வீட்டுக்குப் போய் விட்டார் காளி.

சனியன் விட்டதென்ற நிலையில் கணவனும் அடுத்த கல்யாணத்தை முடித்துக்கொள்ள, மனதில் விழுந்த அடியை மீறிய கசப்புணர்வுடனும், எப்படியும் வாழ்ந்தே தீருவேன் என்ற மன உறுதியுடனும் சென்னைக்குப் பயணமானவர்தான் காளி. இப்போது சென்னைவாசியாகவே மாறி மகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது குடும்ப நிகழ்ச்சிகள், திருமணங்கள் என்று ஊருக்கும் போய் வந்துகொண்டிருக்கிறார். மறு கல்யாணம் செய்துகொண்ட கணவன் பற்றி ஒருநாள் காளி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட தகவல், என்னையும் வாய் விட்டுச் சிரிக்க வைத்தது. ஆம்!

பெண் குழந்தை வேண்டாமென்று இரண்டாவது கட்டிக்கொண்டு வந்த மனைவியும் பெண் குழந்தையைத்தான் பெற்றெடுத்திருக்கிறாளாம். மிகக் கொண்டாட்ட மன நிலையில் அதைச் சொன்னார் காளி. பெண் சிசுக்கொலை, மைனர் பெண்ணுக்குத் திருமணம் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் இந்தக் காளியின் வாழ்க்கை.

படிப்பறிவற்ற, கிராமத்துப் பெண் காளிக்கு மட்டும் அந்த நிலை என்பதல்ல; நகரத்தின் நாகரிகப் பெண்களுக்கும் இதே நிலைதான். கால மாற்றத்தின் விளைவு, மருத்துவத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எல்லாம் ஒருங்கிணைந்து இப்போது சிசுக்கொலை என்பதைக் கடந்து கருக்கொலையாக மாறி பூதாகரமாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் ஸ்கேன் செய்து பார்த்த பின், குழந்தையின் பாலினம் பற்றி வெளியில் சொல்லக் கூடாது என்று சட்டம் எச்சரித்தாலும், எல்லாச் சட்டங்களையும் போலவே இதுவும் மீறப்படுகிறது. வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்பதற்கான சங்கேத மொழியும், குறியீடுகளும் உருவாக்கப்பட்டுவிட்டன. இந்தியா முழுமையும் இம்முறை அமலில் இருக்கிறது என்பதை எந்த வார்த்தைகளில் விவரிக்க? அதன் விளைவு ஆண் – பெண் விகிதாசாரம் இப்போது தலைகீழ் விகிதமாகி இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்டு இரண்டாவது குழந்தையும் பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு அரசு சலுகைகளை அளிக்கிறது என்பது கூடுதலான ஒரு ஆறுதல்.

உலகெங்கிலும் நடைபெறும் குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என யுனிசெஃப் நிறுவனம் தெரிவிக்கிறது. ராஜஸ்தான், ஹரியானா, பிஹார், ஒடிஷா எனப் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் நிலை எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்பது வேதனையிலும் ஒரு மன நிறைவு. தமிழகத்தின் மேற்குப் பகுதியான தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை. தமிழகம் முழுவதும் 24% சிறுமிகளுக்கு மணம் செய்விக்கும் நிலை இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மாறவில்லை என்றும் யுனிசெஃப் அறிவிக்கிறது. இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளைத் தீவிரமாக எடுக்காவிட்டால் 2050-ம் ஆண்டுக்குள் இதனால் பாதிக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 100 கோடிகளை எட்டும் எனவும் அது எச்சரிக்கிறது.

ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் மதிப்பு பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படுவதில்லை என்னும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது. பெண் குழந்தைகளைப் பெற்று வேண்டா வெறுப்பாக வளர்ப்பதும், அவர்களைப் பெரும் சுமையாக நினைப்பதும், வீட்டை விட்டுத் தள்ளிவிட்டால் போதும் என நினைத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதும் தொடர்கதையாக இருக்கும் நிலை மாற வேண்டும். ‘பொட்டைக் கோழி கூவியா பொழுது விடியப் போவுது’ என்ற நிலைபாடுகளும், சிந்தனைகளும் மாற்றப்பட வேண்டியவை.

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: asixjeeko@gmail.com

Sunday, January 24, 2016

சத்தியபாமா பல்கலைக்கழக இயக்குநருக்கு குடியரசுத் தலைவர் கவுரவம்

மரியஜீனா ஜான்சன்

சத்தியபாமா பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் மரியஜீனா ஜான்சன் சிறந்த பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் விருந்து வழங்கி கவுரவித்தார்.

இதுகுறித்து, சத்தியபாமா பல் கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:

இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகமும், பேஸ்புக் சமூக வலைதளமும் இணைந்து நடத்திய போட்டியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நூறு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராஷ்டிரபதி பவனில் நேற்று மதிய விருந்தளித்து கவுரவித்தார்.

இதில் சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் இயக்குநர் முனைவர் மரியஜீனா ஜான்சன் கல்வித் துறைக்கான சாதனையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முனைவர் மரியஜீனா ஜான்சன் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட் டங்களை செயல்படுத்தி வருகிறார். “என் சனிக்கிழமை பல்கலைக் கழகம்” என்ற பள்ளிகள் தத்தெடுப் புத் திட்டத்தின் மூலம் நலம்பாக்கம் கிராம பள்ளி, அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, காரப்பாக்கம் துவக்கப்பள்ளி, கண்ணகிநகர் அரசுப்பள்ளி, எழில் நகர் அரசுப்பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகள் பலன் பெற்றிருக்கின்றன.

விருது பெற்ற முனைவர் மரிய ஜீனா ஜான்சன் கூறும்போது, “இந்த விருது பெண் இனம் முழுமைக்கு மானது. கல்வித்துறைக்காக விருது வழங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்” என்றார்.

10 மாதங்களுக்குப் பின் திருப்பதி உண்டியல் துணி தைக்கும் பணி தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் (கோப்பு படம்).

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் துணி தைக்கும் பணி 10 மாதங்களுக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின், அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். தினமும் சுமார் ரூ. 2 கோடியை தாண்டும் இந்த காணிக்கை மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

உண்டியல் மீது பித்தளை கொப்பரை வைத்து, திருநாமம் வரைந்த வெள்ளை நிற துணியால் கொப்பரையும் உண்டியலும் மூடப்பட்டு, சுற்றிலும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் அது கட்டப்பட்டிருக்கும். இந்த உண்டியல் துணியை தைப்பவரை ‘தர்ஜி’ என்று அழைக்கின்றனர்.

பல ஆண்டுகளாக கே.தேவ தாஸ் என்பவர்தான் இந்த உண்டியல் துணியை தைத்து வந்தார். இவருக்கு மாதம் ரூ. 6,400 ஊதியமும், தினமும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு சென்று வர பஸ் பாஸும் வழங்கப்பட்டு வந்தது. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆயினும் இவருக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவரை தேவஸ் தானம் பணியில் இருந்து நிறுத்தி யது. அப்போது முதல் பழைய உண்டியல் துணிகளையே துவைத்து தினமும் 3 வேளை மாற்றப்பட்டு வந்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து பக்தர் களிடையே விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் கே.தேவதாஸை மீண்டும் பணி நியமனம் செய்ய தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தீர்மா னித்து, அதற்கான உத்தரவையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து நேற்று முதல் அவர் மீண்டும் தனது பணியை தொடங்கினார்.

இதுகுறித்து தேவதாஸ் கூறும்போது, “நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் காணிக்கை செலுத்தும் அட்சய பாத்திரமாக இந்த உண்டியல் உள்ளது. இதன் துணியை தைக்கும் பணியை ஏழுமலையான் எனக்கு மீண்டும் வழங்கி இருப்பதை புண்ணியமாக கருதுகிறேன்” என்றார்.

கன்னத்தில் 5 அறைகள்: பலாத்கார குற்றவாளிகளுக்கு பஞ்சாயத்து அளித்த தண்டனை

THE HINDU TAMIL

உத்தரப்பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை, 5 முறை கன்னத்தில் அறைந்த பின் விடுவித்துள்ளது உள்ளூர் பஞ்சாயத்து.

பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த இச்சிறுமி பள்ளிக்கு செல்லும்போது 3 பேரும் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை விசாரித்த உள்ளூர் பஞ்சாயத்து மேற்கண்ட அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பக்பத் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பலாத்கார குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேர் மற்றும் கிராம பஞ்சாயத்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஹரியாணாவில் சிறுமியை பலாத்காரம் செய்த இருவரை 5 முறை ஷூவால் அறைந்த பின் பஞ்சாயத்து விடுவித்த சம்பவம் சில வாரங்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் தற்போது உ.பி.யில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

பாஸ்போர்ட் அலுவலகம் வந்த அஜித்: முண்டியடித்த ரசிகர்கள் கூட்டம் ................ஸ்கிரீனன்



இரண்டாவது மகன் பாஸ்போர்ட் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் வந்த அஜித்தைக் காண பெரும் ரசிகர்கள் கூட்டம் கூடியது.

'வேதாளம்' இறுதிகட்ட படப்பிடிப்பில், அஜித்துக்கு ஏற்கனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. இதனால், உடனடியாக் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டிலேயே ஒய்வு எடுத்து வந்தார் அஜித்.

அஜித் தனது குடும்பத்தினருடன் லண்டனில் 2 மாதங்கள் ஒய்வெடுக்கத் திட்டமிட்டார். நேற்று இரண்டாவது மகன் ஆத்விக் பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் வந்திருந்தார் அஜித்.

குடும்பத்தினருடன் அஜித் வந்திருந்ததால் அவரைக் காண பெரும் கூட்டம் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக கூடியது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் அஜித் மற்றும் ஷாலினி, அனோஷ்கா, ஆத்விக் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன.

அஜித் தன் மகன் ஆத்விக்கை முதன் முறையாக பொது இடத்துக்கு அழைத்து வந்ததால், இணையத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். #KuttyThala என்ற ஹேஷ்டேக் சென்னை, பெங்களூர் மற்றும் இந்திய அளவில் ட்ரெண்ட்டானது.

லண்டன் ஒய்வை முடித்து அஜித் திரும்பியவுடன், அவருடைய அடுத்த படத்தின் முறையான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பதின் பருவம் புதிர் பருவமா? 16: இளைஞர்களையும் விட்டுவைக்காத மன அழுத்தம் ....டாக்டர் ஆ. காட்சன்

Return to frontpage

உன்னால் முடியும் தம்பி, நாங்க எல்லாரும் இருக்கோம் உன்னை நம்பி” என்ற அறிவுரைகள் யாருக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினருக்கு இலவசமாகவே கிடைக்கும்.

“உன்னைப் பெத்ததுக்கு ஒரு தென்னைமரத்த நட்டு வச்சிருந்தா இளநீராவது கிடைக்கும். இப்படித் தண்டமா உட்கார்ந்திருக்கியே” எனப் பல நேரங்களில் வளரிளம் பருவத்தினருக்கு அர்ச்சனைகள் கிடைக்கும். அவர்களின் நடவடிக்கைகளும் சில நேரங்களில், அப்படித்தான் அமைந்துவிடும். ஆனால் மன அழுத்த நோயாலும் இது போன்ற மாற்றங்கள் வரும் என்பதை மறந்துவிடக்கூடாது.

மன அழுத்தம் ஒரு நோயா?

‘நான் இன்னைக்கு டிப்ரஸ்டா இருக்கேன்’ என்று எல்லோரும் சாதாரணமாகக் கூறுவது வேறு, மன அழுத்தம் அல்லது டிப்ரஷன் நோய் (Depressive disorder) என்பது வேறு. சுமார் 10 - 15% வரையிலான வளரிளம் பருவத்தினரை இது பாதிக்கிறது. ஏதாவது மோசமான வாழ்க்கைச் சூழலாலும் இது ஏற்படலாம், எந்தப் பிரச்சினையும் இல்லாத நிலையில் தானாகவும்கூட ஏற்படலாம். பெற்றோர்களிடமிருந்துகூட மன அழுத்த நோய் ஏற்படுத்தும் மரபணுக்கள் குழந்தைகளுக்குக் கடத்தப்படும்போது வளரிளம் பருவத்தில் மன அழுத்தம் ஏற்படலாம்.

படிப்பில் உள்ள பிரச்சினைகளால் மன அழுத்தம் ஏற்படலாம். அதேநேரம், மன அழுத்த நோய் ஏற்படுவதால் படிப்பில் மந்தத்தன்மை ஏற்படலாம். காரணம் எதுவாக இருந்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது மூளை நரம்புகளில் காணப்படும் ‘செரடோனின்’ என்ற ரசாயனப் பொருள்தான். இதுதான் ஒருவரின் மன உற்சாகத்தைத் தீர்மானிக்கும் வேதிப்பொருள். எனவே, மன அழுத்தம் யாரையும் பாதிக்க வாய்ப்புண்டு.

மருத்துவக் காரணங்கள்

வாழ்க்கைச் சூழ்நிலைகள், மரபணுக்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் உடல்ரீதியான நோய்கள்கூட மன அழுத்த நோயை உண்டு பண்ணும். உதாரணமாக, தைராய்டு என்ற ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால்கூட மூளை நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால் 50% பேர்வரை மன அழுத்த அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் எல்லோரும், தாங்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்வதில்லை.

குறிப்பாக வளரிளம் பருவத்தினருக்கு நாள்பட்ட தலைவலி, திடீரென ஏற்படும் மயக்கம் அல்லது வலிப்பு போன்ற உடல் அறிகுறிகள்கூட மன அழுத்த நோயின் அறிகுறியாக வெளிப்படலாம். பள்ளி செல்வதைப் புறக்கணித்தல், பள்ளி செல்லும் நேரம் வந்ததும் ஏற்படும் வயிற்றுவலி, வாந்திகூட இதன் அறிகுறியாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட நோய்க்கான எல்லாப் பரிசோதனைகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டால், மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

அறிகுறிகள்

கீழே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் காணப்பட்டால் அது மன அழுத்த நோயாக இருக்கலாம்.

# வழக்கத்துக்கு மாறான மந்தத்தன்மை.

# சுறுசுறுப்பு இல்லாமல் அதிகச் சோர்வுடன் காணப்படுவது.

# முன்பு ஆர்வமாக இருந்த எந்த விஷயத்திலும், தற்போது ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியிருப்பது.

# தூக்கமின்மை அல்லது எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது.

# பசியின்மை மற்றும் உடல் எடை குறைவு

# காரணமே இல்லாமல் தற்கொலைக்கு முயற்சி செய்யும் எண்ணங்கள் ஏற்படுவது.

# தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்.

# தான் எதற்கும் உதவாதவன், வாழத் தகுதியற்றவன் என்ற எண்ணம்.

# அதீதக் குற்ற உணர்ச்சி.

# எரிச்சல் தன்மை, கோபம்.

# படிப்பில் பின்தங்குதல், பள்ளியைப் புறக்கணித்தல்.

# காரணமில்லாமல் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது.

# புதிதாக ஏற்படும் போதைப்பழக்கம்.

# அதிகக் கவனக் குறைவு, ஞாபக மறதி.

தடுப்பும் சிகிச்சையும்

# தினமும் மிதமான உடற்பயிற்சி, நண்பர்களுடன் திறந்தவெளியில் விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது.

# குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், மனப் பாரங்களைப் பகிர்வது அவசியம்.

# புத்தகங்கள் வாசிப்பது, இசைக் கருவிகளை வாசிக்கப் பயிற்சி எடுக்கலாம்.

# நேரத்தைப் பகிர்ந்து செலவிடக் கற்றுக்கொள்வது பலன் தரும் (Time management)

# வேலைகளைப் பட்டியலிட்டு முக்கிய வேலைகளுக்கு முதலிடம் கொடுப்பது. மற்றும் பெரிய வேலைகளைப் பகுதிப் பகுதியாகப் பிரித்துச் செய்வதற்குப் பழகலாம்.

# பிரச்சினைகள் எப்போதுமே நிரந்தரமானவை அல்ல, பிரச்சினைகளுக்குத் தற்கொலை ஒரு தீர்வு அல்ல என்பதை எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும்.

# பதற்றமான நேரங்களில் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்துப் பிடித்து, சில நொடிகளுக்குப் பிறகு மெதுவாக வெளிவிடலாம். அவ்வாறு செய்யும்போது கைகால், உடல் பாகங்களை இறுக்கமாக வைக்காமல் தளர்ச்சியாக விட வேண்டும்.

# பெரும்பாலான நேரங்களில் ஆலோசனைகளுடன் மாத்திரைகளின் உதவியும் தேவைப்படும்.

# தீவிரமான மன அழுத்தம் மற்றும் அதிகமான தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு மின் அதிர்வு சிகிச்சை (Electroconvulsive therapy) உடனடியாகப் பலனைத் தரும். இது பாதுகாப்பான முறை மட்டுமல்லாது மாத்திரைகளின் தேவையையும் குறைக்கும்.

(அடுத்த வாரம்: வேண்டாம் விபரீத விளையாட்டு)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

நெட்டெழுத்து: இணையத்தில் அரசு பள்ளி மகத்துவம் அடுக்கும் ஆசிரியர்

க.சே. ரமணி பிரபா தேவி

Return to frontpage

ஒவ்வோர் ஆசிரியருக்கும், அவர் பணியாற்றும் பள்ளி ஒரு கோயில்தான்.

அதன் அடிப்படையில் தான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைத்தளத்துக்கு ''கல்விக்கோயில்'' எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறுகிறார் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் இராஜேந்திரன்.

'பள்ளிக்குச் சென்றோம்; பாடம் சொல்லிக் கொடுத்தோம். மாலை மணி அடித்தால், கிளம்பினோம்' என்று இல்லாமல், தான் செய்யும் பணிகளை முறையாக ஆவணப்படுத்தி, தன் வலைதளத்தில் பதிவேற்றுகிறார். ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இவருக்கு, தன் பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும், புகைப்படங்களோடு கூடிய செய்திகளாக பதிவுபடுத்துவது வழக்கம்.

பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து கொண்டாடிய பொங்கல் விழாவை விரிவான தகவல்கள் மற்றும் புகைப்படங்களோடு சேர்த்து செய்தியாகப் பதிவிட்டிருக்கிறார்.படிக்க http://kalvikoyil.blogspot.com/2016/01/blog-post_11.html

பள்ளியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள், சுகாதார விழிப்புணர்வுப் போட்டிகள், கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் குறித்த தகவலையும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் தகவலையும் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார். புகைப்படங்களோடும், மாணவர்களின் கைவண்ணங்களோடும் பதிவுகள் மிளிர்கின்றன. வாசிக்கhttp://kalvikoyil.blogspot.com/2014/07/blog-post.html

பள்ளியில் நடத்தும் விழாக்களைத் தாண்டி, ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நடத்தும் பதிவுகளையும் தவறாமல் தன் வலைத்தளத்தில் பதிகிறார் ஆசிரியர் இராஜேந்திரன். கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பப் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்ட துவக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆசிரியர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி முகாம் குறித்த பதிவுக்கான இணைப்பு http://kalvikoyil.blogspot.com/2015/12/blog-post.html

இவரின் ஆசிரியர் குழு, பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தாண்டி வெளியிலும், தனது மாணவர்களைக் களப் பணியில் ஈடுபடுத்துகின்றது. அதன் ஒரு பகுதியாக உலக பாரம்பரிய வார விழா தொடர்பாக தேடுதல் பணியை மேற்கொண்டனர். அப்போது பள்ளியிலிருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் புதரில் மறைந்திருந்த நூற்றாண்டுகள் பழமையான தமிழ்க் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. வாசிக்க: புதிய தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்புhttp://kalvikoyil.blogspot.com/2015/11/blog-post_22.html

இவை தவிர பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம், யோகா உள்ளிட்ட மனவளக் கலை பயிற்சிகள், சுதந்திர தின விழா, குழந்தைகள் தின விழா, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகளின் இணைப்புகளும் காணக்கிடைக்கின்றன.

கல்விக்கான வலைதளத்தில் அறிவியல் சோதனைகள் இல்லாமல் போகுமா? ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் கால நேரம் கொண்ட அறிவியல் குறும்படங்களின் யூடியூப் இணைப்புகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல் மற்று உயிரியல் தொடர்பான சோதனைகள் கொண்ட காணொலிக் காட்சிகள், நிச்சயம் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்! காணஒரு நிமிட அறிவியல் சோதனைகள் http://kalvikoyil.blogspot.com/2014/08/experiments-tamil.html

'அரசுப் பள்ளி எப்போதும் தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளிதான்' என்று ஆணித்தரமாகக் கூறும் ஆசிரியர் இராஜேந்திரன், அதை உலகுக்கு உணர்த்திடவே இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார். அரசுப்பள்ளிகளின் சாதனைகளை வெளிக்கொணரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

கல்விக்கோயில் வலைதள முகவரி http://kalvikoyil.blogspot.com/

சென்னையை சிங்கப்பூராக மாற்றும் செயல்திட்டம் எங்களிடம் உள்ளது: அன்புமணி ராமதாஸ் தகவல்..THE HINDU TAMIL

பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் ‘நாம் விரும்பும் சென்னை’ பிரச்சாரம் மற்றும் பொதுமக்களின் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியின் 3 நாள் பயணத்தை அன்புமணி ராமதாஸ் சென்னையில் நேற்று தொடங்கினார். புரசைவாக்கம் தானா தெருவில் பொதுமக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார் படம்: ம.பிரபு


பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் ‘நாம் விரும்பும் சென்னை’ பிரச்சாரம் மற்றும் பொதுமக்களின் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியின் 3 நாள் பயணத்தை அன்புமணி ராமதாஸ் சென்னையில் நேற்று தொடங்கினார். புரசைவாக்கம் தானா தெருவில் பொதுமக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார் படம்: ம.பிரபு


சென்னையை சிங்கப்பூராக மாற்றும் செயல்திட்டம் எங்களிடம் உள்ளது என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் ‘நாம் விரும்பும் சென்னை’ என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று தொடங்கியது. நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ், ‘நாம் விரும்பும் சென்னை எப்படி இருக்க வேண்டும்’ என்ற தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். பின்னர் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

இந்தப் பிரச்சாரத்தின்போது, சூளைமேடு நெடுஞ்சாலை, காந்தி சிலை அருகே கூடியிருந்த மக்களிடம் அன்புமணி பேசியதாவது:

பாரம்பரிய சிறப்புகொண்ட, 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னையை திமுக, அதிமுக கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக நாசம் செய்துவிட்டன. சென்னையை நீடித்த, வளர்ந்த நகரமாக மாற்றுவதற்கான பிரச்சார இயக்கம் இது. நாம் விரும்பும் சென்னை எப்படி இருக்க வேண்டும் என நம் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் அரசியல் செய்யவோ, ஓட்டு கேட்கவோ இந்தப் பிரச்சார இயக்கத்தை தொடங்கவில்லை.

அடுத்த 6 மாதங்கள் இந்தப் பிரச்சாரம் நடக்கும். சென்னை பெருநகர் முழுவதும் பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்டு ஒரு ஆவணத்தை தயாரித்து அரசிடம் வழங்க இருக்கிறோம். சென்னையை சிங்கப்பூராக மாற்ற முடியும். அதற்கான செயல்திட்டம் எங்களிடம் இருக்கிறது.

கடந்த 2010-ல் அண்ணா பல்கலைக்கழகம் ரூ.2.17 கோடி செலவில் ஓர் ஆய்வு நடத்தி சென்னையை மேம்படுத்துவதற்கான செயல்திட்ட அறிக்கையை வழங்கியது. அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டதால் இப்போது கடும் வெள்ள சேதத்தை நாம் சந்திக்க நேரிட்டது.

மழை நீரை கடலில் விட்டுவிட்டு மறுபடி கடலில் இருந்து நீரை எடுத்து சுத்திகரித்து குடிநீராக்கும் திட்டத்தை 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்துகின்றனர். இது திமுக, அதிமுக கட்சிகள் கொள்ளையடிப்பதற்கான திட்டம்.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

அன்புமணியின் விழிப்புணர்வு பிரச்சார பயணம் இன்றும் நாளையும் தொடர்ந்து நடக்கிறது.

மாற்றம் தந்த மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினோம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு


Return to frontpage


சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா. | படம்: ம.பிரபு

2011-ல் தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என உறுதியுடன் இருந்து, அந்த மாற்றத்தை ஏற்படுத்தினர். அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றியதால்தான், தொடரட்டும் இந்த அரசு என நினைக்கின்றனர்" என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

மேலும், "எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. எனக்குப் பிறகும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்று அவர் உறுதியுடன் கூறினார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 3 நாட்களாக விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பேசியது:

"தமிழகத்தின் வளர்ச்சி, கல்வி, மருத்துவம், விவசாயம், நதி நீர், அடிப்படைக் கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் 2011-ல் எங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, அவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி, குறைந்த விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், வழங்கப்படுகிறது. 3 லட்சம் பசுமை வீடுகள் திட்டத்தில், 2 லட்சத்து 62 ஆயிரத்து 853 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 12 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள், 59,905 இலவச கறவை மாடுகள், 27 லட்சத்து 80 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் ரூ.2 ஆயிரம், மீன் குறைவு காலங்களில் ரூ.4 ஆயிரம், மீனவர் குடும்பங்களுக்கு ரூ.2,700 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 63 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிருக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மகப்பேறு நிதித் திட்டத்தின் கீழ் 31 லட்சத்து 19 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு ரூ.2,910 கோடியே 21 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 7 லட்சத்து 72 ஆயிரத்து 643 பெண்களுக்கு திருமண நிதி மற்றும் திருமாங்கல்யத்துக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் 32 லட்சத்து 67 ஆயிரத்து 311 பேருக்கு மடிக்கணினிகள், 31 லட்சத்து 71 ஆயிரத்து 764 பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உணவுக் கட்டணம் ரூ.755, ரூ.875 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலவச திட்டங்கள் அனைத்தும் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.70 கட்டணத்தில் அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படுகிறது.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதுடன், புதிதாக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமென்ட், அம்மா மருந்தகங்கள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். 8,542 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 724 கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் மற்றும் பழநி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

நிறைவேற்றப்பட்ட எதிர்பார்ப்புகள்...

கடந்த திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகத்தான். 2011-ல் தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என உறுதியுடன் இருந்து, அந்த மாற்றத்தை ஏற்படுத்தினர். அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றியதால்தான், தொடரட்டும் இந்த அரசு என நினைக்கின்றனர்.

குறிப்பில்லாமல் பேச முடியாதா என்று சிலர் கேட்கலாம். பேச முடியும். ஆனால், இத்தனை புள்ளிவிவரங்களை நினைவில் வைத்து பேச முடியுமா? அரசில் 36 துறைகள் உள்ளன. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகளையும் சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் பதில் வழங்க வேண்டும். அவற்றை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லும் அளவுக்கு சுருக்கி, பார்த்து பார்த்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது.

எங்கள் செயல்பாடுகள், திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான். எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பொது நலம், மக்கள் நலம் மட்டும்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம். நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

Thursday, January 21, 2016

வெள்ளி இழை இல்லாமல் 1000 ரூபாய் நோட்டுகளை தவறாக அச்சடித்த ரிசர்வ் வங்கி

Dinamani

First Published : 21 January 2016 09:10 AM IST
வெள்ளி இழை இல்லாமல் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை தவறுதலாக ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் விதமாக இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கியப் பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படும் வெள்ளி நூல் இல்லாமல், 5AG, 3AP வரிசையில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது. இதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமும், 10 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ரூபாய் நோட்டு அச்சக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில், பாதுகாப்பு அம்சம் இல்லாத ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5AG, 3AP வரிசையில் உள்ள 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புழக்கத்தில் உள்ள 5AG, 3AP வரிசை நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து வணிக வங்கிகளுக்கு அதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், மத்திய பிரதேசம், ஹோஷன்காபாத்தில் உள்ள Security Printing and Minting கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, பின்பு நாசிக்கில் உள்ள ஆர்பிஐ அச்சகத்திற்குக் கொண்டு வரப்படும்.
இந்நிலையில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி SPMCIL அச்சகத்தின் நிர்வாக இயக்குநருக்கு ஆர்.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. SPMCIL அச்சகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, January 20, 2016

வாட்ஸ் அப்’ வாழ்க்கை!


logo

உங்கள் கையில் ஆறாவது விரல் இருக்கிறதா? இல்லையென்று சொன்னால் நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலி. இருந்தால்தானே அதிர்ஷ்டம் என்பார்கள். இது என்ன புதிதாக இருக்கிறது...?

ஆமாம், ஆறாவது விரல் இருந்தால், அதுவும் எல்லா நேரமும் இருந்தால் கிரகம் சரியில்லை என்று அர்த்தம். சோதிடம் போல இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம்மில் பலருக்கு உடலின் ஓர் அங்கமாக மாறி இருக்கும் செல்பேசி தான் அந்த ஆறாவது விரல். விஞ்ஞானத்தின் அற்புத படைப்பான செல்பேசியை இப்படி மாற்றியதில் பெரும்பங்கு வாட்ஸ் அப் (கட்செவி அஞ்சல்), பேஸ் புக் (முகநூல்) போன்ற சமூக வலைத்தளங்களுக்கு உண்டு.

பண்டிகை காலங்களில் கடைகடையாய் ஏறி இறங்கி வாழ்த்து அட்டைகளை வாங்கி, பிடித்தவர்களுக்கு அனுப்பியதில் கிடைத்த நிறைவு இப்போது இல்லாவிட்டாலும் ‘வாட்ஸ் அப்’ வாழ்த்து புது சுகம் தருகிறது. முந்திக்கொண்டு வாழ்த்து அனுப்பியவர்களுக்குப் பிடித்தமாதிரி ‘நன்றி கார்டு’ அனுப்பியதைவிட முகநூல் பதிவுக்கு கிடைக்கும் வரவேற்பில் இன்பம் அதிகமிருக்கிறது.

இதெல்லாம் காலத்தின் கொடை. இன்னும் சொல்லப்போனால் கட்டாயம். இவற்றைப் புறக்கணித்துவிட்டு 21–ம் நூற்றாண்டில் நாம் மட்டும் தனி தீவாக வாழ முடியாது.

அண்மையில் சென்னையை தாக்கிய பேய் மழையின் போது சமூக ஊடகங்களின் சக்தியையும் பார்த்தோம். பிரிந்து போன நட்பை மீட்டெடுத்தல், ஒத்த சிந்தனை கொண்டோரை ஒருங்கிணைத்தல், கோடிக்கணக்கானோரை ஒரே நேரத்தில் சென்றடைதல், அரசுகளைத் தீர்மானிக்கும் ஆற்றல் என நீளும் இவற்றின் அதீத வீச்சு மிரள வைக்கிறது. இதையெல்லாம் தாண்டி, எளியோரின் சொற்களையும் அம்பலம் ஏற்றி எல்லாரையும் சமமாக்குவதால் இவற்றைக் கொண்டாடவும் செய்யலாம். தப்பில்லை. அதனால் உலக அளவில் பேஸ்புக் பயன்படுத்துவோரின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதை நினைத்து மகிழலாம். ‘வாட்ஸ் அப்’ பயன்பாடும் அப்படியே. எவ்வளவு வசதி. என்னே வேகம். இன்றைய அவரச யுகத்திற்கு நிச்சயமாக இது தவமின்றி கிடைத்த வரம். பெரும் மகிழ்வு.

மகிழ்ச்சி எல்லாம் எதுவரையில்..? வரமாக இருக்கும் வரைதான். அதுவே சாபமாகி விட்டால் என்னாகும் என்கிற கவலை இப்போது எட்டிப்பார்க்கத் தொடங்கி இருக்கிறது. புகழ், பணம், வாழ்க்கை இப்படி எதுவுமே நமது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பிரச்சினையில்லை. எதற்காவது அடிமையாகிவிட்டால் தொலைந்தோம். எல்லாவற்றிலுமே ஒரு போதை இருக்கிறது. அது இருமல் மருந்தில் இருக்கும் ஆல்கஹால் போல மிதமாக இருந்தால் ரொம்பது நல்லது.

குடிகாரர்களில் இரண்டு வகை உண்டு. எப்போதாவது, விரும்பிய போது அல்லது கொண்டாட்டங்களின் போது குடிப்பவர்கள் முதல் ரகம். இவர்களால் பெரிய வம்பில்லை. இரண்டாவது ரகம் குடி நோயாளிகள். இப்படிப்பட்டவர்கள் முழுக்கவும் மதுவுக்கு அடிமையானவர்கள். குடிக்காவிட்டால் கை, கால்கள் நடுங்கும். பேச்சே வராது. மூளை சொல்படி கேட்காது. முக்காலமும் மதுவையே நினைத்துக் கொண்டிருக்கும். கிட்டதட்ட மதுவைப் போலவே இன்றைக்குப் பலரையும் மயக்கி வைத்திருக்கின்றன சமூக வலைதளங்கள். என்ன, குடித்துவிட்டு தெருவில் கிடப்பவனைப் பளிச்சென தெரிகிறது. இதில் நடக்கும் பாதிப்புகள் மெல்லக் கொல்லும் நஞ்சாக சத்தமின்றி தனி மனித சக்தியை, குடும்பங்களை உறிஞ்சி குடித்து வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக் இரண்டிலும் கதியாக கிடப்பவர்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு எகிறிக் கொண்டே போகிறது.

சாதாரணமாக நம்முடைய வீடுகளிலேயே கவனியுங்களேன். ஆளாளுக்கு கையில் ஒரு செல்பேசி. கிடைக்கிற நேரத்தில் எல்லாம் அதிலேயே மூழ்கி இருக்கிறார்கள். இதில் வயது, பாலின வித்தியாசமெல்லாம் கிடையாது. குழம்பு தாளிக்கும் நேரத்தில் கூட ‘வாட்ஸ் அப்’ பையும், ‘பேஸ் புக்’கையும் விட்டுப் பிரிய முடியாத குடும்பத்தலைவிகள் அதிகரித்துவிட்டார்கள். குடும்பத்தலைவனைப் பற்றி கேட்கவா வேண்டும்? இரண்டும் பேரும் இப்படி என்றால் குழந்தைகளையும் மற்றவர்களையும் இவர்களால் எப்படி கேட்க முடியும்?

இரவு நெடு நேரம் சமூகத்தளங்களில் தேவையோ, நோக்கமோ இன்றி மேய்ந்துக் கொண்டிருக்கிறார்கள். காலையில் எழுந்ததும் கைகள் பர, பரவென்று ஆகின்றன. காலைக்கடன்களைக் கழிக்கிறார்களோ இல்லையோ, செல்பேசி முகத்தில்தான் விழிக்கிறார்கள். ஒரு நாள் பார்க்க முடியாவிட்டால் பட,படத்துப் போய்விடுகிறார்கள். இன்னும் சிலருக்கோ நாட்கணக்கெல்லாம் இல்லை. சில மணி நேரம் கூட பொறுக்க முடியாது. செல்பேசியோ, சமூக வலைத்தளங்களோ இல்லையென்றால் பைத்தியமாகிவிடுவார்கள். அதிலும் ஒரு கண் வைத்திருந்தால்தான் எந்த வேலையையும் செய்யமுடியும். சாமி கும்பிட கோவிலுக்குப் போனாலும் சரி; துக்கம் விசாரிக்க மரண வீட்டுக்குப் போனாலும் சரி; என்ன பதிவு வந்திருக்குமோ என குறுகுறுப்போடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் இஷ்டம் போல எல்லாவற்றையும் பதிவேற்றுவது கொடுமையிலும் கொடுமை. துக்க வீட்டில் போய் செல்ஃபி (கைப்படம்) எடுத்து, பதிவேற்றம் செய்பவர்களும் இருக்கிறார்கள். முக்கியமான வேலை இருந்தாலும், ‘வேண்டாம்’ என்று மனசு நினைத்தாலும் கைகள் தானாகவே ‘வாட்ஸ் அப்’, ‘பேஸ்புக்’ போன்வற்றுக்குப் போனால் ‘முற்றி’ போய்விட்டது என்று அர்த்தம். என்னவொன்று அடிமையாகிவிட்டோம் என்பதே இவர்களுக்குத் தெரியாது. இப்படியானவர்கள் முன்பு நாம் பார்த்த குடிநோயாளிகளைப் போன்றவர்கள். உடனடியாக மனநல மருத்துவர்களைப் பார்க்க வேண்டியவர்கள்.

குடியைப் போலவே ‘சமூக வலைத்தள போதை’யில் சிக்கியிருப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் களும் ஏராளம். இவர்கள், எந்த வேலையிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள். வீட்டில் யாரோடும் மனம்விட்டுப் பேசாமல் எப்போதும் அதிலேயே மிதந்து கொண்டிருப்பதால் குடும்ப உறவுகளிடையே இடைவெளி விழுகிறது. அதிலும் குடும்ப வாழ்க்கைக்கு ‘வாட்ஸ் அப்’ பெரும் வில்லனாக உருவெடுத்திருப்பதைச் சமீபத்திய விவாகரத்து வழக்குகளில் காண முடிகிறது. மண வாழ்க்கை முறிவுக்கு மட்டுமல்ல; உளவியல் நோய், குழந்தைப் பேறின்மை போன்றவை அதிகரிப்பதற்கும் சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணியாகி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தருகிறது.

இதற்காக அஞ்சி, நடுங்கி இவற்றை ஒரேயடியாக தவிர்க்கவும் முடியாது. இவற்றினால் கிடைக்கும் நன்மையைப் பெறாமல் போனால் அறிவலித்தனமாகிவிடும். அப்படியென்றால் என்ன வழி? நம்முடைய கட்டுப்பாட்டில் அவற்றை வைத்திருக்க வேண்டும். ‘ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே சமூக வலைத்தளத்தில் செலவிடுவேன்; அதுவும் எனக்குத் தேவையற்ற குப்பைகளைப் பார்க்க மாட்டேன்’ என்பதில் உறுதியாக இருக்கலாம். நிறைய நேரமிருப்பவர்கள் இதனை ஒரு மணி நேரமாக்கலாம். இந்த நேரத்தை வசதிப்படி பிரித்துக்கொள்ளலாம். ஆனால் அதைத் தாண்டி போகக்கூடாது; போகவே கூடாது. நம்முடைய நேரத்தைக் கொல்வதற்கு இடம் கொடுத்தோமானால், நாளை அது நம்மைக் கொல்வதற்கும் முயலும் என்பதை மறந்திடக் கூடாது.

குழந்தைகளோடு கொஞ்சுவதற்கு, குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கு, வாழ்க்கையைக் கொண்டாடுவதற்காகத்தான் அத்தனை வசதிகளையும் தேடுகிறோம். வசதியில் இவற்றைத் தொலைத்து விட்டு என்ன செய்யப்போகிறோம்? உலக நியதிப்படி எல்லாவற்றிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும். வசதிகள், வரமாவதும் சாபமாவதும் நம் கைகளில்தான் இருக்கிறது. எவ்வளவு அதி அற்புதமான அமிர்தமானாலும் அளவைத்தாண்டிவிட்டால் நஞ்சு தானே!

ஸ்டெத்தாஸ்கோப் காலம் முடிவுக்கு வருகிறதா? ... கு. கணேசன்

Return to frontpage

ஸ்மார்ட் ஸ்டெத்தாஸ்கோப்பின் வருகை

மருத்துவ உலகில் புதுப் புதுக் கண்டுபிடிப்புகளும், மருத்துவக் கருவிகளின் தொழில்நுட்ப மேம்பாடுகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பொதுவாக, ஒருவர் மருத்துவர் என்பதற்கு அடையாளமாகப் பொதுமக்களால் பார்க்கப்படும் ஸ்டெத்தாஸ்கோப்பையும் நவீன மாற்றம் விட்டுவைக்கவில்லை. குழாய் வடிவத்தில் இருக்கும் ஸ்டெத்தாஸ்கோப்புக்குப் பதிலாக ‘ஸ்மார்ட்போன்’ மாடலில் ஒரு நவீன ஸ்டெத்தாஸ்கோப்பை பிரிட்டனில் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் சாதக பாதகங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு இன்றைய ஸ்டெத்தாஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றைப் பார்த்துவிடலாம்.

ஸ்டெத்தாஸ்கோப்பின் பூர்வீகம்

1816-ல் ஃபிரான்ஸைச் சேர்ந்த ரெனே லென்னக் என்கிற மருத்துவர் ஸ்டெத்தாஸ்கோப்பைக் கண்டுபிடித்தார். இதன் பின்னணியில் சுவாரஸ்யமான கதை உண்டு. அக்காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்துகொள்ள மருத்துவர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும். ஆண் நோயாளிகளுக்கு இது சரிப்படும்; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள்.

ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத்துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின்மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார்.

1816 செப்டம்பர் மாதத்தின் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் ‘லீ லோவர்’ அரண்மனையைச் சுற்றி நடை பயின்றுகொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் ஒரு நீளமான மரத் துண்டை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அந்த மரத் துண்டின் ஒரு முனையைக் குண்டூசியால் கீறி ஒலி எழுப்பினான். இன்னொரு சிறுவன் மரத் துண்டின் மறு முனையைத் தன் காதில் வைத்துக்கொண்டு, அந்த ஒலியைக் கேட்டுக் குதூகலித்தான்.

இதைப் பார்த்த லென்னக் ‘இதயத் துடிப்பைக் கேட்க இந்த வழியைப் பயன்படுத்தலாமே!’ என்று யோசித்தார். ஒரு நீண்ட பேப்பரைச் சுருட்டி உருளை மாதிரி செய்தார். அதை மிகவும் குண்டாக இருந்த ஒரு நோயாளியிடம் சோதித்துப் பார்த்தார். இரண்டடி நீளம் இருந்த அந்த உருளையின் ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும், மறு பக்கத்தைத் தன் காதிலும் பொருத்திக் கேட்டார். நோயாளியின் நெஞ்சில் நேரடியாகக் காதை வைத்துக் கேட்பதைவிடப் பல மடங்கு துல்லியமாகக் கேட்டது, இதயத்தின் ஒலி. இதை அடிப்படையாக வைத்து 1819-ல் மூன்றரை செ.மீ. விட்டமும் 25 செ.மீ. நீளமும் கொண்ட - ஒரு காதை மட்டுமே வைத்துக் கேட்கக் கூடிய - மரத்தால் ஆன ஸ்டெத்தாஸ்கோப்பை லென்னக் தயாரித்தார். இதுதான் உலகம் கண்ட முதல் ஸ்டெத்தாஸ்கோப்!

அதன் பிறகு, அது பல பரிமாணங்களை எடுத்தது. 1843-ல் இரு காதுகளை வைத்துக் கேட்கும் ஸ்டெத்தாஸ்கோப் உருவானது. 1894-ல் பித்தளை, எஃகு போன்ற உலோகங்களால் இது வடிவமைக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்டெத்தாஸ்கோப் எவர்சில்வர், ரப்பர், பிவிசி பிளாஸ்டிக் எனப் பல பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

வெளவால் தொழில்நுட்பம்

கடந்த 200 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் ராஜமரியாதையுடன் வலம் வந்துகொண்டிருக்கும் ஸ்டெத்தாஸ்கோப்புக்கு மாற்றாக, பிரிட்டனின் ‘ஜெனரல் எலெக்ட்ரிக் ஹெல்த் கேர் சிஸ்டம்’ எனும் நிறுவனம் 'விஸ்கேன்' (VScan) என்கிற நவீன ஸ்மார்ட்போன் ஸ்டெத்தாஸ்கோப்பைத் தயாரித்துள்ளது.

இது வேலை செய்யும் விதம் சற்று வித்தியாசமானது. ‘வௌவால்கள் பறப்பதற்குப் பயன்படுத்தும் தத்துவம்தான் இதிலும் பயன்படுகிறது’ என்கிறார் GE நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் இம்மெல்ட். “வௌவால்கள் இருட்டில் பறக்கும்போது எதிரில் ஏதேனும் தடை உள்ளதா என்று தெரிந்துகொள்ள, கேளாஒலி அலைகளை உண்டாக்கிக் காற்றில் அனுப்பும். வழியில் தடை இருந்தால் அந்த ஒலி எதிரொலித்துத் திரும்பும். அதை உணர்ந்து, வௌவால்கள் திசை மாறிப் பறக்கும். ஒலிக்கு உண்டான இந்தத் தனித்தன்மையை அடிப்படையாக வைத்து விஸ்கேனை உருவாக்கியுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

‘விஸ்கேன்’ சட்டைப் பையில் வைத்துக்கொள்ளும் அளவுக்குச் சிறியது. இது பேட்டரியில் இயங்குகிறது. இந்தக் கருவியில் ஒரு சிறிய திரை மற்றும் கீ பேடு உள்ளது. ஹேண்ட் மைக் அளவில் ‘டிரான்ஸ்டூசர்’ (Transducer) எனும் கருவி இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முனையை நோயாளியின் மார்பின் மீது வைக்க வேண்டும். அப்போது இது கேளாஒலி அலைகளை உற்பத்திசெய்து, இதயத்துக்கு அனுப்புகிறது. அவை இதயத்தில் மோதி, எதிரொலித்து வருவதை உள்வாங்கி, முப்பரிமாணப் படங்களாகத் திரையில் பதிவுசெய்கிறது. இதன் மூலம் இதயம் இயங்குவதைத் திரையில் பார்க்க முடியும். இதயத் துடிப்பு எண்ணிக்கை, லயம், இதய வால்வுக் கோளாறுகள், இதயத்தில் ரத்த ஓட்டம் போன்றவற்றை அடுத்த நிமிடத்தில் அறியலாம்’ என்கிறார் அவர். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம்.

இதுபோல் டிஜிட்டல் மாடலில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஸ்டெத்தாஸ்கோப் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ஒருவரின் நெஞ்சில் வைத்து, இதய ஒலிகளைப் பதிவுசெய்து, அதை வேறொரு இடத்தில் இருக்கும் மருத்துவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால், அங்கு அவர் அந்த ஒலிகளைக் கேட்டு நோயைக் கணிக்க முடியும். ரூ.15 ஆயிரம் விலையுள்ள இந்தக் கருவிக்கும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அனுமதி அளித்துள்ளது. இதுபோன்ற நவீன ஸ்டெத்தாஸ்கோப்புகள் மருத்துவர்களின் பணியை எளிதாக்கும் என்றும் நோயைக் கண்டறியும் முறையில் மேம்பட்ட வசதிகளைக் கொண்டுவரும் என்றும் இவற்றின் தயாரிப்பாளர்கள் பெருமிதப்படுகிறார்கள்.

எதிர்ப்பு அலை

ஆனால், வாட்ஸ்அப் பாணி ஸ்டெத்தாஸ்கோப்புக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ‘இந்தக் கருவி 100 சதவீதம் நுட்பமானது அல்ல; இதய ஒலியில் சிறிதளவு வித்தியாசம் ஏற்பட்டாலும் நோய்க் கணிப்பு தவறாகிவிடும். இது உயிரோடு விளையாடுவதற்குச் சமம்’என்கிறார்கள் பல இதயநல வல்லுநர்கள்.

‘இதுபோல் 17 வகை ஸ்மார்ட்போன் மாடல் ஸ்டெத்தாஸ் கோப்கள் உலக நாடுகளில் வலம்வருகின்றன. இவை எல்லாமே இன்றைய இளைஞர்களின் ஸ்மார்ட்போன் மோகத்தைக் குறிவைத்து, வணிக நோக்கில் அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே தயாரிக்கப் பட்டவை’ என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மருத்துவர் களும் இந்தப் புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வில்லை. நோயாளியைப் பரிசோதிக்கும் முறைகளில் எத்தனைக் கருவிகள் விதவிதமாகச் சந்தைக்கு வந்தாலும், நோயாளியின் கரங்களைப் பிடித்து, நாடி பார்த்து, அவரது நெஞ்சில் ஸ்டெத்தாஸ்கோப்பை வைத்துக் கேட்டு, சில வார்த்தைகள் கனிவாகப் பேசி, ஆறுதல் சொல்லி, ‘நோய் குணமாகும்’ என்ற நம்பிக்கையை விதைக்கிற பரிசோதனை முறைக்கு ஈடுஇணை எதுவுமில்லை என்று கருத்து தெரிவித்திருக்கி றார்கள். மக்களின்மீது உண்மையிலேயே அக்கறை உள்ள மருத்துவர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்ற கருத்தே மருத்துவ உலகில் நிலவுகிறது!

- கு. கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...