Wednesday, December 14, 2016

தமிழகத்தை கொடூரமாக தாக்கிய கோரப் புயல்கள் ஒரு பார்வை...!

Published on : 13th December 2016 07:55 PM 

இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன. புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது. தில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), லெஹர் (அலை). மேக், சாகர், வாயு. இந்த 8 பெயர்களுமே பஞ்ச பூதங்களை குறிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில்தான் உருவானது. அப்படி இருக்க 1994-ஆம் ஆண்டில் பெயர் வைக்கவில்லையே தவிர தற்போது சென்னையைத் தாக்கிய வர்தா புயல் "அதிதீவிர"ப் புயல் ஒன்று சென்னையைத் தாக்கியது.
1994- அக்டோபர் இறுதியில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த அந்தப் புயல், சென்னை - கடலூர் இடையே 115 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு, தமிழகத்தில் 26 பேர் உயிரிழந்தனர். புயல் கரையைக் கடந்த பிறகும், 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.



ஃபானூஸ் புயல்:
அடுத்து தமிழகத்தைத் தாக்கிய பெரும் புயல்களில் ஒன்று ஃபானூஸ் புயல். கடந்த 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் உருவான இந்த புயல், டிசம்பர் 7-ஆம் தேதி, மணிக்கு 101 கிலோமீட்டர் வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இந்த புயலால் சுமார் 25 ஆயிரம் பேர் வீட்டை விட்டு வெளியேற நேரிட்டது. அதோடு, வட தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் இப்புயல் கடுமையாக பாதித்தது.


நிஷா புயல் : ஃபானூஸ் புயலை அடுத்து தமிழகத்தைத் தாக்கிய கடும் புயல் நிஷா. கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான இந்த புயல், மறுநாள் மணிக்கு சுமார் 83 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. இப்புயலால் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, 189 பேர் உயிரிழந்தனர்.


ஜல் புயல்: கடந்த 2010-ஆம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், இந்தியப் பெருங்கடல் நோக்கி நகர்ந்த இந்த புயல், நவம்பர் மாதம் 6-ஆம் தேதி அன்று மணிக்கு சுமார் 111 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை அருகே கரையை கடந்தது. இந்த புயலால், 70 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த புயல் சீற்றத்தால் 54 பேர் உயிரிழந்தனர். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லாமல் தப்பித்தது தமிழகம்.


தானே புயல்: கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவான தானே புயல், மணிக்கு சுமார் 165 கிலோமீட்டர் வேகத்தில் டிசம்பர் 30-ஆம் தேதி புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடந்தது. இந்த புயலால், 46 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பலரது வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்துபோனது. எண்ணற்ற வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் நாசமாகின. கடலூர், நாகை. காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம் மாவடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் இப்போது கூட முழுமையாக சீரடையவில்லை.


நீலம் புயல்: 2012-ஆம் ஆண்டு 28-ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவான நீலம் புயல், அக்டோபர் 31-ஆம் தேதி மணிக்கு 83 கி.மீட்டர் வேகத்தில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனால், கடல் நீர் 100 மீட்டர் அளவுக்கு நகருக்குள் புகுந்தது. நீலம் புயல் சீற்றத்தால் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர். சுமார் 450 மின் கம்பங்கள் சாய்ந்தன.


மடி புயல்: கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி உருவான மடி புயல், மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி வழியாக கரையை கடந்தது. இதன் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் வெளியேற்றப்பட்டனர். இதனால், அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.


வர்தா புயல்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்கிழக்கு வங்கக்கடலில் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவான அதிதீவிரப் புயலான “வர்தா” புயல், டிசம்பர் 12-ஆம் தேதி மாலை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை புறநகர் பகுதியான பழவேற்காடு அருகே 6.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது. வர்தா புயலின் கடும் சீற்றத்தால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. சென்னையில் அதிக பாதிப்பை வர்தா புயல் ஏற்படுத்தியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. சென்னை மட்டும் ஏற்பட்டுள்ள சேதங்களின் மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. வர்தா புயலுக்கு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை தலைகீழாக புரட்டிப்போட்ட அதிதீவிர புயலுக்கு "வர்தா' என பாகிஸ்தான் பெயரைச் சூட்டியது. உருதுச் செல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்று பொருளாகும். இந்த ரோஜாவின் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

10 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்: 3 நாள்களுக்குள் மின்விநியோகம் சீராகும்: மின் வாரியம் அறிவிப்பு


By DIN | Published on : 14th December 2016 12:55 AM 

 வர்தா புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் 10 ஆயிரம் மின்கம்பங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், 3 தினங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் சீராகும் என்றும் தெரிவித்துள்ளது.
வர்தா புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை சேதமடைந்தும், முழுவதுமாக பெயர்ந்து விழுந்தும் விட்டன. இதற்கான சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், படப்பை அருகே உயர் மின் கோபுரத்தை சீரமைக்கும் பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான எம்.சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து புயலின் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் குறித்தும், சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.
10 ஆயிரம் மின்கம்பங்கள்: வர்தா புயலால் இதுவரை 10 ஆயிரம் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், மரங்கள் பெயர்ந்து விழுந்ததாலும், கிளைகள் உடைந்து விழுந்ததாலும், 450 மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன. 24 உயர் அழுத்த மின் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன.
3 ஆயிரம் மட்டுமே இருப்பு: சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கு 3 ஆயிரம் மின்கம்பங்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தன. எனவே, பிற மாவட்டங்களில் இருந்து மீதம் 7 ஆயிரம் மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து தளவாடங்களும் கையிருப்பில் உள்ளன.
பணியில் 9 ஆயிரம் ஊழியர்கள்: வரலாறு காணாத இந்தச் சேதத்தை சீரமைப்பதற்காக சென்னையில் உள்ள 6 ஆயிரம் மின் ஊழியர்கள், அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர பிற மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் 70 அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
மின்உற்பத்தி நிலையங்கள் இயக்கம்: சென்னையில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இயக்கத்தில் உள்ளன. இதனால் போதுமான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பேசின் மேம்பாலம் வாயு மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மின்சாரம் விநியோகம்: சென்னையில் இதுவரை ராஜ்பவன், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, பரங்கிமலை, கோடம்பாக்கம், அசோக் நகர், ராமசாமி சாலை, பி.டி. ராஜன் சாலை, ஜெருகம்பாக்கம், மதாண்டாபுரம், லட்சுமி நகர், அய்யப்பன்தாங்கல், ஸ்ரீ ராமச்ந்திரா மருத்துவமனை, காரப்பாக்கம், குன்றத்தூர் சாலை, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், லஸ், ராயப்பேட்டை, அபிராமபுரம், எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, அடையாறு, வேளச்சேரி, கொட்டிவாக்கம், சிறுசேரி, திருவான்மியூர், பெசன்ட் நகர், இந்திரா நகர், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர், முகப்பேர், அரும்பாக்கம், மதுரவாயல், திருவேற்காடு மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சீரமைக்கப்பட்டு, மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
3 நாள்களில் மின்விநியோகம்: சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பிற பகுதிகளிலும் துரித கதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகரத்தில் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் அடுத்த 3 நாள்களுக்குள் மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சசிகலாவுக்கு சமூக வலைதளங்களில்
எதிர்ப்பு : அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சி

அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் சசிகலாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துக்கள், அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவை அடுத்து, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் முதல்வரானார். அவர் ஏற்கனவே இரு முறை, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் என்பதால், கட்சியில் சலசலப்பு ஏற்படவில்லை.
ஆனால், சசிகலா பொதுச் செயலராவார் என்ற தகவல், கட்சியினரிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பர் என, தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தங்கள் பதவியை இழக்க விரும்பாத மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஏழு நாட்கள் துக்கம் முடியும்முன், 'தலைமை ஏற்க வாருங்கள்' என, சசிகலாவை

சந்தித்து வலியுறுத்தினர்.

நேர் பாதியாக திகழ்ந்தவர் சசிகலா

இது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதற்கு
சசிகலா ஆதரவாளர்களும், பதில் அளித்து வருகின்றனர்.
'ஜெயலலிதா செயல்பாடுகளில், நேர் பாதியாக திகழ்ந்தவர் சசிகலா. அவருக்கு, நல்ல அரசியல் அனுபவம் உள்ளது. தற்போதைய நிர்வாகிகளை காட்டிலும், அதிக தலைமை பண்புடையவர்' என, அவரது புகழை பரப்பி வருகின்றனர். எதிர் தரப்பினரோ, 'சாக்லேட்டுடன் ஒட்டியிருந்த காகிதம் என்பதற்காக, காகிதத்தையும் சேர்த்து உண்ண முடியாது' என, பதில் அளித்துள்ளனர்.

1989 தேர்தலில்

'ஜெயலலிதா முகத்துக்காக, யாரும் ஓட்டளிக்கவில்லை. இரட்டை இலை சின்னத்திற்காகவே மக்கள் ஓட்டளித்தனர்' என, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாக, தகவல் வெளியானது.
அதற்கு,'இரட்டை இலை சின்னம் இல்லாத, 1989 தேர்தலில், ஜானகியை விட, அதிக வாக்காளர்களை கவர்ந்து, வெற்றி பெற்றவர்

ஜெயலலிதா. சரி, சசிகலாவிற்கு ஆதரவு கொடுக்கும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஜெ., பிரசாரத்தால் வெற்றி பெற்றவர்கள். பதவியை, ராஜினாமா செய்து விட்டு, சசிகலாவை பிரசாரம் செய்ய சொல்லி, ஆட்சியை பிடியுங்கள் பார்ப்போம்' என, சவால் விட்டுள்ளனர்.
மேலும் சசிகலாவிற்கு ஆதரவாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை வெளியிட்டு, அதன் கீழ், 'எம்.ஜி.ஆர்., படத்துடன், சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்; ஒரு மானம் இல்லை; அதில் ஈனம் இல்லை. அவர் எப்போதும் வால்பிடிப்பார்' என, அவர் படத்தில் வந்த பாடலையே பதிவிட்டுள்ளனர்.
இதுபோல், சசிகலாவுக்கு எதிராக, ஏராளமான கேலி, கிண்டல் செய்யும், 'மீம்ஸ்'களை வெளியிட்டு வருகின்றனர். இது, சசிகலாவை முன்னிறுத்தும், அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -
தானே'வை ஞாபகப்படுத்திய வர்தா!
அதே பாதை, அதே அவதாரம்

சென்னையில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை சாய்த்த, 'வர்தா' புயலின் கோர தாண்டவம், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய, 'தானே' புயலை ஞாபகப்படுத்தி உள்ளது.

வங்க கடலில் பொங்கி எழுந்த, வர்தா புயல், தமிழகத்தில், வட மாவட்டங்களையும், ஆந்திராவின் தென் மாவட்டங்களையும்

சிதைத்து சென்றது. மழை கொட்டித் தீர்த்தது மட்டுமின்றி, மரங்களை கொத்து கொத்தாக வேரோடு பெயர்த்த வர்தாவின் ஆக்ரோஷம், ஐந்தாண்டுகளுக்கு முன், கடலுாரை புரட்டிப் போட்ட,தானே புயலை ஞாபகப்படுத்தியுள்ளது.

கடலுாரும் சீர்குலைந்தது.

வங்க கடலில், 2011ல், அந்தமானுக்கு மேற்கே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுப்பெற்று, டிச., 31ல், கடலுாரில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில்வீசிய காற்றால், 1.5 லட்சம் ஏக்கரில் இருந்த, முந்திரி மற்றும் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன; மொத்த கடலுாரும் சீர்குலைந்தது.அதேபோன்று, தானே உருவான இடத்திற்கு தென் கிழக்கில், வங்க கடலில் உருவான வர்தா

புயல், அதே பாதையில் வந்து, கடலுாருக்கு பதில், சற்று வடக்கே திரும்பி, சென்னையை பதம் பார்த்துள்ளது. கடலுாருக்கு அன்று ஏற்பட்ட பாதிப்பை, சென்னை இன்று உணர்ந்துள்ளது. - நமது நிருபர் -
வர்தா' புயலால் அதிகாரிகள் பாடம் கற்பரா? பசுமை இழந்த சென்னை மாநகரம்

சென்னை அருகே, நேற்று முன்தினம், 'வர்தா' புயல், கரையைக் கடந்தது. இதனால், சென்னை நகரில், 5,000க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.
வேர் பிடிப்பு இல்லாத மரங்களை நட்டதால் தான், சேதம் அதிகமானது என, பசுமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். வங்கக் கடலில் மையம் கொண்ட, 'வர்தா' புயலின் மையம், நேற்று முன்தினம், மாலை, 3:30 மணிக்கு, சென்னை துறைமுகம் அருகே, 100 - 110 கி.மீ., வேகத்தில் கரையை கடந்தது. இதை தொடர்ந்து, புயலின் கிழக்குப் பகுதி, மாலை, 6:30 மணிக்கு கரையை கடந்தது.
புயலின் தாக்கத்தால், சென்னையில், 5,000க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இந்தியாவில், மாநகரங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, டில்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய வற்றை விட, சென்னை மிகவும் பின்தங்கி உள்ளது. டில்லி நகரின், மொத்த பரப்பில், 25 சதவீதம் வரை, பசுமைப் போர்வை உள்ளது. ஆனால், சென்னை யில், 9 சதவீதத்திற்கும் குறைவாகவே, மரங்களின் பரப்பு உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், சென்னையில், கட்டுமானப் பணிகளுக்காக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மத்திய அரசு வெளியிட்ட வனத்துறை கணக்கெடுப்பில், சென்னையில் பசுமை போர்வை வேகமாக குறைந்து வருவது தெரியவந்தது.
இந்நிலையில், 'வர்தா' புயலால், சென்னை மாநகரில், மரங்கள் விழுந்து கிடக்காத சாலைகளே இல்லை. சிறிதும், பெரிதுமாக மரங்கள் வேரோடு விழுந்து கிடந்தன. மரங்கள் விழுந்ததால், போக்கு வரத்து முற்றிலும் பாதித்தது; மேலும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன.மரங்கள் சரிந்து விழுந்ததற்கு, புயல் மட்டும் காரணமல்ல, அரசு அதிகாரிகளும் தான் என, பசுமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: சென்னையில், வெளிநாட்டை சேர்ந்த, வேர்ப்பிடிப்பு இல்லாத, துாங்கு மூஞ்சி மரங்கள் தான் அதிகம் நடப்பட்டுள்ளன. அந்த மரங்கள், சாதாரண காற்றுக்கே தாங்காது; 110 கி.மீ.,க்கும் அதிகமான வேகம் கொண்ட புயலை, எப்படி தாங்கும். சென்னையில், மரங்களை நடுகிறோம் என்ற பெயரில், வேர் பிடிப்பு இல்லாத மரங்களை நடுவதால், பயன் ஏதும் இல்லை. நம் நாட்டு மரங்கள், அதிகளவு கார்பன் - டை - ஆக்ஸைடு வாயு உட்கொண்டு, அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடும். அத்தகைய மரங்களை நடுவதால், மண்ணுக்கும், மக்களுக்கும் பயன் இருக்கும். இத்தகைய மரங்கள், புயல் காற்றில், எளிதில் சாய்ந்து விடாது.அரசு அதிகாரிகள், 'வர்தா' புயலில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இனிமேல், வேர் பிடிப்பு இல்லாத மரங்கள் நடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மரங்களை மீண்டும் நட வேண்டும்
வேருடன் சாய்ந்த மரங்கள், 20 நாட்கள் வரை, உயிருடன் இருக்கும். எனவே, புயலில் சாய்ந்த மரங்களின், கிளைகளை வெட்டி விட்டு, அடிமரத்தை நிமிர்த்தி, வேருடன் அதே இடத்தில் நட்டு வைக்க வேண்டும். அந்த மரம், இரண்டு மாதத்திற்குள், துளிர் விட ஆரம்பித்து விடும். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட புயலில், சாய்ந்த, அடையாறு ஆலமரம், நிமிர்த்தி நடப்பட்டு, இரண்டு மாதத்தில் துளிர்விட்டது. இதே முறையை, வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் துணையுடன், சென்னை மாநகராட்சி மேற்கொண்டால், சென்னையின் பசுமைப் போர்வையை காப்பாற்ற முடியும்.


- நமது நிருபர் -
'வாழ்ந்து விடு...' மிரட்டிச் சென்ற 'வர்தா'

மத்திய சென்னை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு. பனியில் தலை குளித்துக் கொண்டிருந்தது, என் வீட்டின் மொட்டை மாடி.'வர்தா புயல் நெருங்கி வந்திருச்சு. சாயங்காலத்துக்கு மேலே மழை வரும்னு சொன்னாங்க... ஒண்ணையும் காணோம்...' பக்கத்து வீட்டுக்காரர், தோள் துண்டால் முதுகு துடைத்தபடி கேட்டார்.

'அவங்க சொல்றது என்னைக்கு சரியா நடந்திருக்கு...' குளிரில் துவண்டிருந்த மூளைக்கு, புதிதாய் எதுவும் தோன்றாததால், மொக்கையாய் இப்படிச் சொல்லி சலித்துக் கொண்டேன்.

எதிர் வீட்டின் முன் இருந்த பெரிய வேப்ப மரம், சாதுவாய் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. கையிலிருந்த அலைபேசி சிணுங்க, எடுத்துப் பார்த்தேன். மணி, 8:00. அழைத்தது, தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் உறவுக்காரர்.

'வர்தா' பற்றி விசாரித்த உறவுக்காரரிடம், 'அப்படில்லாம் இருக்காது. நிலா கூட தெளிவா தெரியுதுன்னா பாரேன்' என்றேன். எதிர் வீட்டில், வேப்ப மரத்தையும் விஞ்சி நின்றிருந்த மொபைல் போன் டவர், என்னை முறைத்துக் கொண்டிருந்தது.

'மழை வர்றதா இருந்தா, குளிர் குறைஞ்சிருக்குமே' அனுபவப் பாடம், குளிரோடு சேர்த்து மனதை சிலிர்க்க வைக்க, அக்குளிரை நிறைத்தது, குருமா வாசம். இரவு உணவாக வீட்டில் தயாராகி கொண்டிருந்த சப்பாத்தி நினைவுக்கு வர, கீழிறங்க, மாடிப்படியை நெருங்கினேன்.

அப்போது, என் தோளில் விழுந்தது ஒரு துளி. அம்மழைத் துளியை, பெரும் அபாயத்திற்கான சிறு எச்சரிக்கையாய் கூட நான் உணரவில்லை.

நள்ளிரவு 12:00 மணி. 'மழை பெய்யுதுன்னு நினைக்கிறேன்' என, மனைவி சொல்ல, ஜன்னல் கதவை திறந்தேன். மழை தான்! குனிந்து வானம் பார்த்தால், நான்கு மணி நேரத்திற்கு முன் பார்த்த வானம் அது இல்லை; சிவந்து கிடந்தது.

'வாட்ஸ் ஆப்'பை உயிர்ப்பித்தேன். 'சென்னைக்கு மிக அருகில் நெருங்கி விட்டது வர்தா; எச்சரிக்கையாக இருங்கள்' நண்பர்கள் அனுப்பியிருந்த தகவல், மனதிற்குள் பீதியை கிளப்பியது. 'மழை அந்தளவுக்கு இல்லையே...' எனக்குள்ளே சமாதானம் சொல்லி, புரண்டு படுத்தேன். மழை வலுக்கத் துவங்கியது. 'எதுவும் நடக்காது' என்ற என் தைரியம், வெளுக்கத் துவங்கியது!

திங்கட்கிழமை கண் விழித்த போது, காலை மணி, 7:00. கும்மிருளில் இருந்தது வீடு. 'கரன்ட் கட் ஆயிருச்சுப்பா!' மகள் சொல்ல, 'டேங்க் நிறைச்சிட்டீங்களா...' பதற்றமாய் கேட்டேன். 'ஹவுஸ் ஓனர், 5:00 மணிக்கே மோட்டார் போட்டுட்டார்' மனைவி சொன்ன பதில், நிம்மதி தந்தது.

'நாலு பாக்கெட் பால் வாங்கிட்டு வந்துட்டேன். இப்போ, கரன்ட் இல்லை. பிரிஜ் இல்லேன்னா பால் கெட்டுப் போயிடுமே...' மனைவியின் புலம்பலில், நெருங்கி வரும், 'வர்தா'வின் வீரியம் புரிந்தது.

என் தைரியம் இன்னும் வெளுக்கத் துவங்கியது. ஆனால், என் மனைவிக்கும், மகளுக்கும், என் அம்மாவுக்கும் தைரியம்; நான் இருக்கிறேன் என்று! எனக்கோ பயம்; அவர்களை பாதுகாக்க வேண்டுமே என்று!

படுக்கையறையின் ஜன்னல் இடுக்கு வழியே, மெலியதாய் ஊளையிடத் துவங்கியது காற்று.

'மாடிக் கதவை அடைச்சிட்டேன். யாரும் மொட்டை மாடிக்கு போகாதீங்க. ஜன்னல் கதவு எதையும் திறக்காதீங்க' சத்தமாய் சொல்லிய படியே, கீழிறங்கிப் போனார் வீட்டின் உரிமையாளர். வீட்டிற்குள் மெழுகுவர்த்தி கரைந்து கொண்டிருந்தது. அதை அணைக்க, வீட்டின் இடுக்குகளின் வழியே போராடிக் கொண்டிருந்தது காற்று.

'சாயங்காலம் கார்த்திகை தீபம் ஏத்த முடியுமாப்பா?' - 70 வயது அம்மாவின் சந்தேகக் கேள்வி, மனதிற்குள் திகிலை கிளப்பியது. '100 கி.மீ., தொலைவில் வர்தா' அலைபேசி வழி, 'வாட்ஸ் ஆப்' செய்தி வந்து விழுந்த வேளையில், 'ஊஊ... ஊஊ...' என, பெரும் ஊளையிடத் துவங்கியிருந்தது, காற்று.

'ச்ச்ச்சடார்...' பின் பக்க வீட்டில் வேயப்பட்டிருந்த, 'ஆஸ்பெஸ்டாஸ்' கூரை, இருந்த இடத்தின் தொடர்பை முறித்துக் கொள்ளத் துவங்கியிருந்தது. 'ஷ்ஷ்ஷ்ஷ்...' சீறியபடி ஏதோ ஒன்று, எங்கள் படுக்கையறையின் கண்ணாடி ஜன்னலை நோக்கி வந்தது. 'அது என்னவாக இருக்கும்' என, உணர்வதற்குள், 'ச்ச்ச்ச்லீர்ர்ர்...' நொறுங்கியது கண்ணாடி. சில கண்ணாடி துண்டுகள் மெத்தையில் தெறிக்க, 'அம்மா...' அலறினாள், என் மகள். 'அய்யய்யோ... இங்கே வந்திருங்க...' மனைவியும், அம்மாவும் கையைப் பிடித்து இழுக்க, மகளும், நானும் அறை கடந்தோம்.

அந்த அறைக்குள் காற்றாகவும், நீராகவும் நுழையத் துவங்கியிருந்தது வர்தா.

கை, கால் நடுங்க, மூச்சிறைக்க, இதயம் குதிரை வேகத்தில் விரைய, வரவேற்பறை சோபாவில் அமர்ந்த படி, நான். சுற்றிலும், என்னை நம்பியிருக்கும் மூன்று ஜீவன்கள். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், அத்தனை பேர் முகத்திலும் மின்னியது பயம். சமையலறையில் உள்ள, 'எக்ஸ்ஹாஸ்ட் பேன்' நிலை கொள்ளாமல் முன்னும், பின்னும் அசுரத்தனமாய் சுற்றிக் கொண்டிருந்தது.

பதற்றம் தணிக்க, அண்ணாந்து நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த நொடியில், 'டொம்ம்ம்ம்ம்ம்...' என, பெரும் சத்தம் கேட்டது, வெளியே. மகள், என் கையை இறுகப் பற்றிக் கொண்டாள். மனைவி, தோள்களைப் பற்ற, அம்மா, என் கைகளைப் பிடித்துக் கொண்டார். தண்ணீர் விழுங்கிய நான், இடைவெளியின்றி எச்சில் விழுங்கினேன்.

'எதிர் வீட்டு வேப்ப மரமும், டவரும் சாய்ஞ்சிருச்சு. யாரும் வெளியில வராதீங்க' வீட்டின் உரிமையாளர் கீழிருந்து கத்தினார். என் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள், மகள். நிலைமை கைமீறி போவதை உணர்ந்தேன். பதற்றம் தணிக்க, 'இன்ட்ரால் 10' மாத்திரை ஒன்றை விழுங்கினேன். மகளையும், அம்மாவையும் வரவேற்பறையில் இருக்கச் சொல்லி விட்டு, அரிசி சாக்குப்பை ஒன்றை எடுத்தபடி படுக்கையறைக்குள் நுழைந்தேன். அறை முழுக்க சாரல்; தரை முழுக்க ஈரம். 'உடைந்த ஜன்னல் பகுதியை நீ எப்படி அடைக்கிறாய், பார்ப்போம்' என, முஷ்டி முறுக்கியது, வர்தா. அதனுடன் மல்லுக்கட்டி, ஒருவழியாக சாக்கை அடைத்து, சாரலை குறைந்து, வரவேற்பறை திரும்புகையில், என் உடலெங்கும் ஈரம்; என் மகள் கண்களிலும்!

அருகருகே அமர்ந்து, ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொண்டிருந்த போது, 'ஆ... அய்யோ...' வர்தாவை மீறி, வெடித்தது பெருங்குரல் ஒன்று! வரவேற்பறை பக்கம் இருந்து வந்த குரல், ஏதோ ஒரு அசம்பாவிதம் என்பதை உறுதிப்படுத்த, ஜன்னல் பக்கமாக சென்று காது கொடுத்தேன். எங்கோ இருந்து பறந்து வந்த பிளாஸ்டிக் தொட்டி, அடுத்த வீட்டின் பாத்ரூம் கூரையை பதம் பார்த்திருந்தது. வீட்டைச் சுற்றி, நாலாபுறமும் கூக்குரல்கள்!

தெருவிளக்குகள் வெடித்து தெறிக்கும் ஓசை, வயது வித்தியாசமின்றி அனைவரையும் அலற வைத்தது. பூஜையறையில் விளக்கேற்றி, முருகனை வழிபடத் துவங்கியிருந்தார், அம்மா. 'வாட்ஸ் ஆப்' படங்கள் மூலம், சென்னை சின்னாபின்னமாவதை உணர்ந்தேன். ஹாலிவுட் படம் ஒன்றில், 'சுனாமி' வரும் போது, மகளையும், மனைவியையும், நெஞ்சோடு சேர்த்து அணைத்து, அழும் கதாபாத்திரம் நினைவுக்கு வந்தது. மணி, 3:00. காற்றிடமிருந்து, மழை கழன்று கொண்டது.
வீட்டிற்கு வெளியே, மாடிப்படிகளில் காலடி சப்தம். 'வேண்டாம்ப்பா... போகாதீங்க...' மகள் தடுத்தும் கேளாமல், மாடிப்படிகள் ஏறினேன். எங்கிருந்தோ பறந்து வந்த பாத்திரங்கள், மரக்கட்டைகள் பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் பச்சை இலைகளால் மொட்டை மாடி நிறைந்திருந்தது. காற்றில் பச்சை வாசம். சுவாசித்துக் கொண்டே, சுவர் அருகில் வந்து, தெருவைப் பார்த்தேன்; போர்க்களம் போல் இருந்தது. முதல் நாள் இரவு நான் உயிரோடு பார்த்த வேப்ப மரம், சடலமாகி கிடந்தது. கம்பீரமாய் நின்ற டவர், கவிழ்ந்து இருந்தது. என் வீட்டில், ஒரு ஜன்னல் கதவு மட்டும் சேதம்; பல வீடுகளில் எல்லா கதவுகளிலுமே சேதம்.'எனக்கு, 60 வயசு ஆகுது... நான் பார்த்த ஆக்ரோஷ புயல் இது தான்' என்றார், வீட்டு உரிமையாளர். பார்வைக்கு தென்பட்டவரையில் அத்தனை மரங்களுமே சாலையில் தான் கிடந்தன. கொஞ்சம், கொஞ்சமாய் தன் வேகத்தை வர்தா குறைத்துக் கொள்ள, எல்லா வீட்டு மாடிகளிலும் மனிதத் தலைகள்.

'உங்க வசதிக்காக, ஒரு பக்கமா கிளைகளை வெட்டி, என்னை இப்படி சாய்ச்சுட்டீங்களேடா...' என, வியந்து பார்க்கும் மனிதர்களிடம் மரங்கள் கதற, விடைபெற்றது வர்தா.
மாடியிலிருந்து இறங்கி வீட்டிற்கு வந்தேன். பாதிப்புகளை அறிய, என் குடும்பத்தையும் மொட்டை மாடிக்கு அனுப்பி வைத்தேன்.

அவர்கள் மீண்டும் வரும் இடைவெளியில், எனக்குள் மீண்டும் ஒலித்தது அந்த குரல்... 'நாம இன்னைக்கு செத்துருவோமாப்பா...' என, சற்று நேரத்திற்கு முன், என் கைகளை இறுக பற்றியபடி, என் மகள் கேட்ட அந்த கேள்வி... ஒவ்வொரு நிமிடமும் முழுமையாய் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய கேள்வி! நீங்களும் வாழ்ந்து விடுங்கள் நண்பர்களே...!

- துரை கோபால் -

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வர்தாவை சமாளித்தது இப்படித்தான்!


கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வியை தழுவியது. இதற்கு மழையின்போது செயல்படாத அரசின் செயலற்றத் தன்மையே காரணமாக இருந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்... புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள ஓ.பி.எஸ்ஸின் செயல்பாடு சுதந்திரமாகவும், துரிதமாகவும் இருப்பதற்கு... ‘வர்தா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

வர்தா புயலை ஒட்டி தமிழக அரசு எடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி, மீட்புப் பணிகள் வரை அனைத்தும் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. இதற்காக, தமிழக அரசு சுறுசுறுவென செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அரசை இயக்கும் ஓ.பி.எஸ்., ‘வர்தா’ முன்னெச்சரிக்கைகளை எப்படி எடுத்தார் என்பதை விவரிக்கும் தொகுப்பு இங்கே...

‘வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் வர்தா புயல் சென்னை அருகே கரையைக் கடக்கக் கூடும்’ என கடந்த 10-ம் தேதி இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வந்தவுடன், தமிழக அரசு சுதாரித்துக்கொண்டது. புயலின் தாக்கம் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.



இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்கள் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கும்படி தலைமைச் செயலகத்தில் இருந்து உத்தரவுகள் பறந்தன. 11-ம் தேதி மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். புயலின்போது உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ்அப் எண்களும் அறிவிக்கப்பட்டன. புயலினால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உடனடி நிவரணம் கிடைக்க ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அரசு நியமித்தது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் 16 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் காஞ்சிபுரத்துக்கு 6 அதிகாரிகள், திருவள்ளூருக்கு 6 அதிகாரிகள், விழுப்புரத்துக்கு 1 அதிகாரி உட்பட 29 பேர் நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.



11-ம் தேதி மாலை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது. இதில் வர்தா புயலை எதிர்கொள்ள இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஓ.பி.எஸ் ஆய்வு செய்தார். ராணுவம் மற்றும் மத்தியப் படைகள் தயார் நிலையில் இருக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 6 குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், சிவாலிக், காட்மட் என்ற இரண்டு கடற்படை கப்பல்கள் சென்னைக்கு அருகில் கடலில் மீட்புப் பணிக்காக நிறுத்திவைக்கப்பட்டன. 30 படகுகளுடன் கடற்படை வீரர்கள் கொண்ட மீட்புக் குழுவினர் தயாராக நிற்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் கடலோர வட்டங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அல்லது வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியது. இதற்கான உத்தரவை தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அரசுச் செயலாளர் அமுதா வெளியிட்டிருந்தார். சென்னையில் உள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பேரிடர் காலத்தில்கூட ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க முன்வராத நிலையில், அரசின் உத்தரவால் தனியார் நிறுவன ஊழியர்கள் நிம்மதியடைந்தனர். அதேபோல அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.



இதனிடையே தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசித்துவந்தவர்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 12-ம் தேதி பிற்பகல் புயல், கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில், நேற்று (13-12-16) காலை மீண்டும் ஓர் அவசர கூட்டத்தைக் கூட்டி அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார் முதல்வர். 12-ம் தேதி இரவு எண்ணூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக நிவாரண முகாம்களுக்குச் சென்ற முதல்வர், மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை ஆய்வு செய்தார். மேலும், அங்கு செயல்பட்டு வந்த மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி தனது ஆறுதல்களைக் கூறினார்.

முதல்வரின் செயல்பாடு தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்...

புயல் மழைக்கு உயிரிழந்தோர் 23-ஆக உயர்வு.. 3-வது நாளாகத் தொடரும் மீட்பு பணிகள்


சென்னையில் கோரத் தாண்டவம் ஆடிய வர்தா புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.

வங்க கடலில் உருவான வர்தா புயல் கடந்த 12-ம் தேதி மாலை சென்னையில் கரையை கடந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த புயல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆவேசமாக வீசியது. இந்த புயல் மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 பேர் என்று முதல் நாள் அறிவிக்கப்பட்டது. நேற்று 16-ஆக உயர்ந்திருந்தது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனும் அஞ்சப்பட்டது. அதேபோல, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.

புயல் மற்றும் கன மழை காரணமாக, ஏராளமான மரங்கள் மற்றும் கட்டடங்கள் சாய்ந்ததில் 27 பெண்கள் உள்பட 172 பேர் படுகாயங்களுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புயல், மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 97 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தபடி, உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க, நேற்று உத்தரவு பிறப்பித்தார்.



புயல் காற்றில், பழைய கட்டடங்கள், சுமார் 12 ஆயிரம் மரங்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டட மின் கம்பங்கள், 450 மின்மாற்றிகள் உள்ளிட்டவை சாய்ந்துவிட்டன. பல்வேறு இடங்களில் மரங்கள், வாகனங்களின் மீது விழுந்து கண்ணாடிகள் உள்ளிட்டவை உடைந்து சேதமடைந்தன.

இதனால், சென்னை நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ரயில் மற்றும் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு இரண்டாவது நாளாக மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் இல்லாததால் வீடுகளில் உள்ள மோட்டார்களை இயக்க முடியாமல் தண்ணீர் இன்றி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.



புயல், மழை காரணமாக கடைகள், வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் அவை திறக்கப்படாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

வரதா புயல் தாக்கத்தில் சிக்கித் தவித்த சென்னை மாநகரம், தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து போக்குவரத்து, மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில், சென்னையில் 3-வது அவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், பேருந்துகள் இன்று பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் சென்னை மக்கள் தங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் ஓரிரு நாட்களும் ஆகக்கூடும். இதை அதிகாரிகள் விரைவு படுத்தி வருகின்றனர்.

- ரா.வளன்

வர்தா புயலால் தமிழகத்துக்கு ரூ. 6,749 கோடி இழப்பு



வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு, பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த புயலால் தமிழகத்துக்கு ரூ.6,749 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான அசோசாம் கூறியுள்ளது. குறிப்பாக விவசாயம், மீன் துறை ஆகிய இரண்டு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நகர் மற்றும் கிராமம் இரண்டு பகுதிகளுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அசோசாம் கூறியுள்ளது. மேலும், தென் இந்தியாவின் சுற்றுலாத்துறையும் இதனால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

'வார்தா' புயல்: காற்றில் பறந்த கூரைகள்; தங்க இடமின்றி தவித்த மக்கள்

சென்னை ராயப்பேட்டை முத்தையா தோட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிசைகளின் மேற்கூரை மீது மரங்கள் விழுந்தன. மழைநீரும் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து முத்தையா தோட்டம் குடிசைப் பகுதியில் வசித்து வரும் சித்ரா கூறியதாவது: புயல் காற்றால் எங்கள் பகுதியில் உள்ள குடிசைகள் அனைத்தும் நேற்று சேதமடைந்துவிட்டன. கூரைகள் காற்றில் பறந்துவிட்டன. பல குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. குழந்தைகளின் பள்ளி புத்தகங்கள், உடமைகள் அனைத்தும் மழையில் நனைந்துவிட்டன. இதனால், அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் நேற்று தஞ்சமடைந்தோம்.

அங்கும் மரம் விழுந்ததால் அருகில் உள்ள கருமகாரிய கூடத்தில் பலர் தஞ்சமடைந்தனர். நேற்று இரவு முழுவதும் படுக்க சரியான இடமின்றி, உணவில்லாமல் குழந்தைகளும், முதியவர்களும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகினர். ஆனால், இதுவரை அதிகாரிகள் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் நேரத்தில் ஓட்டுகேட்டு வரும் கட்சிக்காரர்கள், உதவி தேவைப்படும் காலத்தில் உதவவில்லை. இந்தப் பகுதிக்கு அருகிலேயே உள்ள குழந்தைகள் மையத்தையும் பூட்டிவைத்துவிட்டனர். இதனால், அங்கு சென்றும் தங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

'வார்தா' தாண்டவம்: களைப்பில்லாமல் உழைக்கும் காவல்துறை

க.சே. ரமணி பிரபா தேவி

சென்னை மற்றும் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டிருக்கிறது ’வார்தா ’ புயல். சென்னையின் ஒட்டுமொத்த மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சூறாவளிக்காற்றும், மழையும் நின்றுவிட்ட நிலையில் அதன் விளைவாக விழுந்த பெரு மரங்கள் சாலைகளில் கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் விரைந்து சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் ரோந்து வாகனங்கள் தங்கள் வேலையைத் தொடங்கியிருந்தன. காலை அலுவலகம் வரும்போது கண்ணில் தென்பட்ட காட்சிகள் இவை.

வழியில், சிந்தாதிரிப்பேட்டையில் மரங்களை அப்புறப்படுத்தும் வேலைகளில் ஏராளமான காவல்துறையினரைக் காண முடிந்தது.

அருகில் சென்று விசாரித்தபோதுதான் தெரிந்தது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் பூபாலன் அவரென்று. அவரோடு காவல்நிலையத்தின் மற்ற காவலர்களும், சில இளைஞர்களும் வீழ்ந்துகிடந்த மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தனர். ''பணியாளர்கள் யாரும் வரவில்லையா?'' என்று கேட்டேன். ''அதனால் என்னங்க, நம்ம வீட்டுல யாரு செய்யறோம்? நம்மதானே, அதுபோலத்தான் இங்கயும்!'' என்று கூறியவாறு தன் பணியைத் தொடர்ந்தார்.



பல்நோக்கு மருத்துவமனையின் எதிர்ப்புறத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு அருகே இருந்த கட்டிடத்திலும் மரங்கள் பெயர்ந்து கிடந்தன. அவற்றையும் சில காவலர்கள் எடுத்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

வாலஜா சாலை, கலைவாணர் அரங்கம் எதிரே உள்ள சாலை மரங்களை திருவல்லிக்கேணி D1 காவல்நிலைய உதவி ஆணையர் உட்பட நிறைய அதிகாரிகள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர் என்று சக நண்பர் கூறினார்.

இதுபோல வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகள், டி.டி.கே. சாலை, வெஸ்ட் காட் சாலை உள்ளிட்ட சென்னை நகரத்தின் ஏராளமான இடங்களில் விழுந்துகிடக்கும் மரங்களையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருவதாக அந்த வழியாக வந்த அலுவலக நண்பர் கூறியதைக் கேட்க முடிந்தது.



தன்னலம் கருதாது மழை, வெயில், புயல் என எல்லா இயற்கை சீற்றங்களிலும், செயற்கை மாற்றங்களிலும் களைத்துப் போகாது உழைக்கும் காவல்துறைக்கு ஒரு ராயல் சல்யூட்!

22 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை தாக்கிய புயல்


சென்னையை அதிதீவிர புயல் ஒன்று 22 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கியிருப்பது தெரியவந்துள் ளது.

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் வங்கக் கடலில் புயல் உருவாவது வழக்க மானது. இது பெரும்பாலும் தமிழ கம் மற்றும் ஆந்திரா, ஒடிசா அல் லது மேற்கு வங்க கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும். தமி ழகத்தை பொருத்தவரை பெரும் பாலான புயல்கள் கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட் டங்களில் தான் கரையைக் கடக்கும்.

இரு வாரங்களுக்கு முன்பு தமிழக கரையைக் கடந்த ‘நடா’ புயல், நாகப்பட்டினம் அருகே தான் கரையைக் கடந்தது. சென்னையை கரையைக் கடப் பதும், சென்னையை தாக்குவதும் அரிதாகவே நிகழ்கிறது. ஒருசில புயல்கள் மட்டுமே சென்னை அருகே கரையைக் கடக்கின்றன. அவற்றிலும் அரிதானவையே சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளன.

தற்போது சென்னை அருகே கரையைக் கடந்துள்ள அதி தீவிர புயலான வார்தா, சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 192 கி.மீ வேகத்தில் தாக்கியதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற புயல், 22 ஆண்டுகளுக்கு முன்பு 1994-ல் சென்னையை தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2010-ல் உருவான ‘ஜல்’ புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது. 2012-ல் உருவான ‘நிலம்’ புயல், மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இந்த 2 புயல்களும் சென்னை அருகே கரையைக் கடந்தாலும், சென்னைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அதே வேளையில், கடந்த 1994-ல் அக்டோபர் 31-ம் தேதி சென்னையை தாக்கிய புயல், சென்னைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது சென்னையில் 24 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. அதனைத் தொடர்ந்து அதற்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தும் புயலாக இந்த வார்தா புயல் விளங்குகிறது. ஒரு அதிதீவிர புயல் ஒன்று சென்னையை தாக்கும் நிகழ்வு, 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் நிகழ்ந்துள்ளது என்று அந்த முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

கொந்தளித்தது கடல்.. கொட்டித் தீர்த்தது மழை.. கோரத் தாண்டவம் ஆடியது ‘வார்தா’ புயல்..: தலைவிரி கோலத்தில் தலைநகர்!

ச.கார்த்திகேயன்

பகலிலேயே இருளில் மூழ்கியது சென்னை: மின்சாரம் துண்டிப்பு; அதிக உயிரிழப்பு தவிர்ப்பு
சூறைக் காற்றின் பேயாட்டத்தில் பெயர்ந்தன மரங்கள், மின் கம்பங்கள்; போக்குவரத்து பாதிப்பு
முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் காரணமாக வீடுகளிலேயே மக்கள் முடங்கியதால் நிம்மதி

சென்னையை மணிக்கு 110 கிமீ வேகத்தில் தாக்கிய ‘வார்தா’ புயலின் கோரத்தாண்டவத்தால் தலைநகரம் தலைவிரிகோல மானது. சூறைக் காற்றாலும், கொட்டித் தீர்த்த மழையாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, 4 நாட்களுக்கு முன்பு ‘வார்தா’ புயலாக உருமாறியது. தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கிய இந்த புயல், பின்னர் அதிதீவிர புயலாக மாறியது.

இந்த புயல் கரையை நெருங்க நெருங்க ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் லேசான காற்றும், மழையும் தொடங்கியது. நேற்று காலையில் காற்றின் வேகமும், மழையும் மேலும் அதிகமானது. சுமார் 12 மணி அளவில் உச்சநிலையை அடைந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று தீவிர மாக வீசியது. கடல் கொந்தளிப் புடன் காணப்பட்டது. கூடவே கனமழையும் கொட்டித் தீர்த்து.

இந்த புயலால் சாலையோரங் களில் இருந்த 3,300-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதேபோல் சென்னை, காஞ்சி, திவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமை யாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வெவ்வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டன.




நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் மரம் விழுந்து சிக்கியுள்ள 2 அரசுப் பேருந்துகள். | படம்: க.ஸ்ரீபரத்


விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியா ளர்கள், தீயணைப்புப் படை வீரர்கள், போலீஸார் ஈடுபட்டனர். இயந்திரங்கள் மூலமாக மரங்களை அறுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக அகற்றி, உடனடியாக சீரான போக்குவரத்துக்கு வழி வகை செய்தனர்.அவர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் களமி றங்கி மரங்களை அகற்றினர். போக்குவரத்தையும் ஒழுங்குப் படுத்தினர்.

இந்தப் புயல் உருவான உடனேயே அரசின் வருவாய்த் துறை முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பல்வேறு துறை அதிகாரி களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இதன்மூலம் போதிய மீட்புக் குழுக்களை ஏற்படுத்தவும், தேசிய பேரிடர் மீட்பு படைகளைத் அழைத்து தயார் நிலையில் நிறுத்தவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், அவர் களுக்கு தேவையான உணவை வழங்கவும் உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியிலும் அந்தந்த மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் முடுக்கி விடப்பட்டனர். அரசும், பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பும் வெளி யிட்டது. நீண்ட நேரம் கெடாமலிருக்கும் உணவுகளை சமைத்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களும் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் காரணமாக, புயல் சென்னையை புரட்டிப் போட்ட நிலையில், மக்கள் வீடுகளிலே முடங்கினர். முன்கூட் டியே பொதுமக்கள் காய்கறிகள், பால், கேன் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பில் வைத்துக் கொண்டனர். இதனால் இந்த பேரிடரால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட வில்லை.

சென்னையில் 30 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அத்துறை செயலர் க.பணீந்திரரெட்டி, மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மேற்பார்வை அலுவலர் காக்கர்லா உஷா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இருளில் மூழ்கியது

முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சூறைக் காற் றுடன் மழை பெய்த நிலையில், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்த நிலையிலும், பல இடங்களில் மின் பெட்டி அருகில் நீர் தேங்கிய நிலையிலும், மின்சாரம் தாக்கி ஏற்படும் உயிர்ப் பலிகள் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் புயல் காரணமாக 4 பேர் பலியாகியுள்ளனர். 24 குடிசைகள் சேதமடைந் துள்ளன.




ஆழ்வார்பேட்டை நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே மாடியிலிருந்து தெருவுக்கு வந்த குடிநீர் தொட்டி. | படம்: க.ஸ்ரீபரத்


மேலும் கருமேகங்கள் சூழ்ந்து, சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வந்ததாலும், நகர் முழுவதும் வெளிச்சம் குறைந்ததாலும், சென்னை பகலிலேயே இருளில் மூழ்கியது.

முதல்வர் வேண்டுகோள்

இதனிடையே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வார்தா புயல் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

235 புகார்கள் பதிவு

சென்னையில் மரம் மற்றும் மின் கம்பங்கள் விழுந்தது, நீர் தேங்கியது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 235 புகார்களை மாநகராட்சி பெற்றுள்ளது. இதில் 203 புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

புயல் கரையைக் கடந்தது தொடர் பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

இந்த புயல் மேற்கு பகுதி பழவேற்காடு அருகே கரையைக் கடந்தது. அதன் மையப் பகுதி மாலை 3.30 மணி அளவில் சென்னை துறை முகம் அருகே கரையைக் கடந்தது. கிழக்கு பகுதி 6.30 மணி அளவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. காற்றின் தாக்கம் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மரக் காணம் ஆகியவற்றுக்கு இடைப் பட்ட பகுதி வரை இருந்தது. புயல் கரைகடந்தாலும் நாளை (இன்று) மாலை வரை மழை நீடிக்கும்.

\


சூறைக் காற்றில் சிக்கி சேதமுற்ற ராயபுரம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம். | படம்: ம.பிரபு


காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, சென்னை மீனம்பாக்கத்தில் 18 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. காலை 8.30 முதல் மாலை 4.30 மணி வரை செம்பரம்பாக்கத்தில் 170 மிமீ, பூந்தமல்லியில் 130 மிமீ, அம்பத்தூரில் 121 மிமீ, திருவள்ளூரில் 116 மிமீ, சோழ வரத்தில் 106 மிமீ, திருவாலங் காட்டில் 97 மிமீ, செங்குன்றத்தில் 93 மிமீ, திருத்தணியில் 93 மிமீ, ஊத்துக்கோட்டையில் 88 மிமீ, பொன்னேரியில் 74 மிமீ, பூண்டியில் 64 மிமீ, தாமரைப்பாக்கத்தில் 52 மிமீ, பெரும்புதூரில் 153 மிமீ, செங்கல்பட்டில் 65 மிமீ, திருக்கழுகுன்றத்தில் 50 மிமீ, காஞ்சிபுரத்தில் 45 மிமீ, மதுராந்த கத்தில் 45 மிமீ, அரக்கோணத்தில் 92 மிமீ, காவேரிபாக்கத்தில் 19 மிமீ, திண்டிவனத்தில் 16 மிமீ, மரக்காணத்தில் 13 மிமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு, இது போன்ற மோசமான புயலை சென்னை சந்தித்துள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

Saturday, December 10, 2016

சசிகலா | கோப்பு படம்

அதிமுகவில் மிகவும் அதிகாரம் வாய்ந்த பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தீவிர முயற்சி: ஜெயலலிதா சமாதியில் சோகத்துடன் அஞ்சலி

அதிமுக பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற சசிகலா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, நேற்று ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர் சோகத்தோடு அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அன்று இரவே, தமி ழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன் னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால், கட்சியின் பொதுச் செய லாளர் பதவி இன்னும் காலியாகவே உள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் என்றாலும், கட்சி விதிகளின்படி, போட்டியின்றி ஒருமனதாகவே பொதுச் செயலாளர் தேர்ந் தெடுக்கப்படுகிறார். அதன்படி, 1988-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 7 முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுச் செயலாளர் பதவி மிகவும் அதிகாரம் வாய்ந்தது என்பதால், அப்பதவியைக் கைப் பற்ற சசிகலா தீவிர முயற்சியி்ல் இறங்கியுள்ளார். இதற்காக, முதல்வர் ஓபிஎஸ், தம்பிதுரை எம்.பி. மற்றும் அமைச்சர்களுடன் கடந்த 3 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்ட செய லாளர்களில் பலர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் தேர்வான வர்கள். எனவே, அவர்களில் பலரும் சசிகலாவுக்கு ஆதரவாகவே இருப் பதாக தெரிகிறது. ஆனால், ஒன் றிய, கிளைச் செயலாளர்கள் என அடிமட்ட நிர்வாகிகளிடமும், தொண் டர்களிடமும் சசிகலாவுக்கு அவ்வள வாக ஆதரவு இல்லை. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங் களிலும் சசிகலா எதிர்ப்பு கருத்து களையே அதிகம் காண முடிகிறது.

இதையெல்லாம் மீறி, பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் சசிகலா, கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் தன் மீதான ஆதரவு அலையை உருவாக்கு மாறு அமைச்சர்கள், எம்எல்ஏக் கள், நிர்வாகிகளிடம் அவர் கூறியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, மத்திய பாஜக அரசின் காய் நகர்த்தல்களை சமாளிப்பது, அதிமுகவை திமுக உடைக்காமல் கவனமாக இருப் பது, உள்கட்சியில் இருக்கும் உடைப்பு முயற்சிகளைத் தடுப்பது, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை முன்னிறுத்தி செய் யப்படும் முயற்சிகளை முறியடிப் பது உள்ளிட்டவை குறித்தும் சசிகலா விரிவாக ஆலோசனை நடத்தியுள்ள சசிகலா, இப்பணிகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் ஒப்படைத் திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையில், முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் சசி கலா நேற்றும் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு, ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் தனது குடும்பத்தினருடன் சசிகலா வந்து அஞ்சலி செலுத்தினார். சசிகலா நேற்று மிகுந்த சோகத்துடன் காணப்பட்டதும், ஜெயலலிதாவை வணங்கியதுபோல மிகவும் பவ்யமாக அவருக்கு அமைச்சர்கள் வணக்கம் தெரிவித்ததும் குறிப் பிடத்தக்கது.

மனமே நலமா?- இழப்புத் துயரத்திலிருந்து மீள வழியில்லையா?



டாக்டர். எம்.எஸ்.தம்பிராஜா

நான் இறந்த பிறகு

எனக்காகக் கொஞ்சம் அழு, கண்ணீர் விடு

நம் இனிமையான தருணங்களை

அவ்வப்போது நினைத்துக்கொள்

ஆனால், கொஞ்ச நேரம் நினைத்தால் போதும்.

பின் அந்த நினைவுகளைத் தாண்டிச் செல்

நீ உயிரோடு இருக்கும்வரை

உன் எண்ணங்கள் உயிருள்ளவர்களுடனேயே இருக்கட்டும்” - யாரோ

மனித வாழ்வில் இழப்புகள், குறிப்பாகக் குடும்பத்தினர் ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்புகள், தவிர்க்க முடியாதவை. அன்பார்ந்த ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ளும்போது உண்டாகும் துன்பமும் துயரமும் சொல்லில் வடிக்க முடியாதவை. ஒரு தாய் தன் மகனை இழப்பதாலும், ஒரு கணவன் தன் மனைவியைப் பறிகொடுப்பதனாலும் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கப் பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் ஏற்படும் ஓர் அகால மரணம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். அந்த மரணத்தின் கருநிழல் அவர்கள் மனதை விட்டு நீங்குவதே இல்லை.

“ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அவளைத் தேடுவேன். அவள் இல்லை என்று உணரக் கொஞ்ச நேரம் ஆகும். பின் மனதை ஒரு பாரம் அழுத்தும். முக்கியமான ஏதோ ஒரு பொருளைத் தொலைத்துவிட்டபோது ஏற்படும் படபடப்பு இருக்கிறதே, அது போன்ற ஒரு பதற்றம் என் நெஞ்சில் வியாபிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படித்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு ஆரம்பமாகிறது” - மனைவியை இழந்த ஒருவரின் மனக்குமுறல் இது.

நெருங்கிய ஒருவரின் மரணத்துக்குப் பின் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்குகளைப் பட்டியலிடுவது கடினம். ஆனாலும் இழப்புத் துயரத்தை (Grief) அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தவர்கள், அன்பார்ந்த ஒருவரை இழந்த பின் ஏற்படும் உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் விரிவாக விவரித்துள்ளார்கள்.

உணர்ச்சிக் கோலங்கள்

மரணத்தை அறிந்த பின் முதன்முதலில் ஏற்படுவது மனஅதிர்ச்சி. கூடவே மனம் மரத்துப் போகிறது (Shock and Numbness). மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை உள்ளம் நம்ப மறுக்கிறது. ‘இது உண்மை இல்லை’ என்று தோன்றுகிறது. நடப்பது எல்லாம் வேறொரு உலகத்தில் நடப்பதுபோலத் தோன்றுகிறது. அடுத்ததாக, மெல்ல மெல்ல உண்மை விளங்க ஆரம்பிக்கும்போது, கடும் மனவேதனை ஒருவரை ஆட்கொள்கிறது. நெஞ்சில் வேல் பாய்ந்ததுபோன்று உள்ளம் வலிக்கிறது.

அழுகையை நிறுத்த முடிவதில்லை. கடும் துயரம் மனதை ஆக்கிரமிக்கிறது. ஊன் உறக்கம் கொள்ள முடிவதில்லை. இழந்தவரின் நினைவு மனதை விட்டு நீங்குவதே இல்லை. இதிலிருந்து மீளச் சில வாரங்கள், மாதங்கள் ஆகலாம்.

அதோடு, அவரின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்ற உணர்வும் மனதை உறுத்துகிறது. “நான் அவனைப் பள்ளிக்கூடச் சுற்றுலாவுக்கு அனுப்பியிருக்கக் கூடாது” என்று தன்னையே மீண்டும் மீண்டும் கடிந்துகொள்கிறாள், பள்ளிச் சுற்றுலாவின்போது தன் மகனைக் கடலில் பறிகொடுத்த ஒரு தாய். இந்தக் கட்டத்தில் தன்னையே குறைகூறுவதும் (“நான் மட்டும் அன்று அவர் கூடவே இருந்திருந்தால், அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்கலாம்”), மற்றவர்களைக் குற்றம்சாட்டுவதும் (“அந்த டாக்டர் சரியாகக் கவனிக்கவில்லை”) சகஜம்.

சில வேளைகளில் இறந்தவர் மீதே கடும் கோபம் கொள்வதும் உண்டு (“இந்த மனுஷன் என்னைத் தனியே விட்டுவிட்டுத் தான் போய்ச் சேர்ந்துவிட்டான்”). ஆனால் இம்மாதிரியான எண்ணங்களால் குற்ற உணர்வு பெரிதாகி, அதை வெளியே சொல்வதற்குத் தயங்கவும் செய்யலாம்.

குரலும் இருப்பும்

இறந்தவரின் பிரிவைத் தாங்க முடியாமல், நடந்ததையே நினைத்து நினைத்து மனம் வருந்துவது தவிர்க்க முடியாத ஒன்று. சில வேளைகளில் இறந்தவர் தன்னுடன் பேசுவதுபோல அவருடைய குரல் கேட்கலாம்; அவர் அருகில் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். ஆனால், இவை நெடுங்காலம் நீடிப்பதில்லை.

இவ்வாறாக ஒரு மரணத்துக்குப் பின் மனஅதிர்ச்சி, மனவலி, கோபம், குற்ற உணர்வு, மன சஞ்சலம் ஆகிய பல தரப்பட்ட மனவெழுச்சிகளுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். இவை குறிப்பிட்ட எந்த ஒழுங்குமின்றி மனதை வியாபிப்பதுதான் இழப்புத் துயரத்தின் தன்மை.

எப்படிக் குறைப்பது?

பொதுவாக, இழப்புத் துயரம் ஓரிரு ஆண்டுகள்வரை நீடிக்கும். பின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும். இறந்தவர் இல்லாமல் வாழ்க்கையைச் சீரமைக்க வேண்டி இருக்கும். ஆனாலும் இறந்தவரின் நினைவு, நிழல்போல நெடுங்காலம் தொடரும். ஒருவரது மரணத்துக்குப் பின் நடத்தப்படும் இறப்புச் சடங்குகள் சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபட்டாலும், இவை இழப்புத் துயரத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இழப்புத் துயரம் உடலையும் வெகுவாகப் பாதிக்கிறது. மனைவியை இழந்த ஆண்களில் பலர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மரணமடைகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாத்துக்கொள்ளும் திறனும் இழப்புத் துயரத்தின்போது குறைகிறது.

சாதாரண இழப்புத் துயரத்தின்போது ஏற்படும் மனவேதனைக்கு மருந்துகள் தேவை இல்லை. காலம்தான் இவர்களுக்கு மருந்து. சிலர் தூக்க மாத்திரையைப் போட்டுக்கொள்வது உண்டு; சிலர் மது அருந்தி மனதை மரத்துப்போகச் செய்வதுண்டு. இவை பயன் தருவதில்லை. சிகிச்சை ஏதும் இல்லாமலேயே ஓரிரு ஆண்டுகளில் சாதாரண இழப்புத் துயரம் தானாகக் குறையும். நெருக்கமானவர்களுடன் தன் மனவேதனையைப் பகிர்ந்து கொள்வது இழப்புத் துயரத்தில் இருந்து மீள்வதற்கு உதவும்.

தீராத இழப்புத் துயரம்

சில மரணங்கள் தீவிரமான இழப்புத் துயரத்தை உண்டாக்கலாம். தற்கொலைகள், அகால மரணங்கள் போன்றவை ஏற்படுத்தும் துயரம் கடுமையாகவும் நெடுங்காலம் நீடிப்பவையாகவும் அமையலாம். இது தீராத இழப்புத் துயரம் (Unresolved grief) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் பல ஆண்டுகள் கழிந்த பின்னும் தான் இழந்தவரைப் பற்றி பேசும்போது மிகுதியாக உணர்ச்சிவசப்படுகிறார் என்றால், அவர் இன்னும் அந்தத் துயரத்தில் இருந்து விடுபடவில்லை என்று கூறலாம்.

இறந்தவரின் சடலத்தைக் காணக் கிடைக்காதபோது ஏற்படும் துயரம் இவ்வகையைச் சேர்ந்தது. இறந்தவர் ஒரு நாள் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பில், இவர்கள் நாட்களைக் கடத்துகிறார்கள். அவர் திரும்பி வருவது சாத்தியமில்லை என்பது அடிமனதில் தெரிந்தால்கூட, அதை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள்.

உதாரணமாக, படிப்புக்காக வெளிநாடு சென்று விபத்தில் இறந்துவிட்ட ஒரு மாணவனின் தாய் (அவருக்கு மகனின் உடல் காணக் கிடைக்கவில்லை) பத்து ஆண்டுகளுக்கு மேலாக எவரையும் தன் மகனின் அறைக்குள் போக அனுமதிக்காமல், அந்த அறையைப் பழசு போலவே வைத்திருந்தார்! இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏறக்குறைய 20,000 பேர் ‘காணாமல் போனார்கள்’. இவர்களின் பெற்றோர், உறவினர் படும் இழப்புத் துயரமும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.

தீராத இழப்புத் துயரத்துக்கு உளவியல் ஆலோசனை அவசியம். கடுமையான இழப்புத் துயரம் மனச்சோர்வுக்கும் வழி வகுத்துவிடலாம். எனவே, அதற்கு ஆலோசனை பெறுவதே சிறந்தது.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

Friday, December 9, 2016

ஜெ. இறுதிச்சடங்கு.. சம்பிரதாயத்தை மீறினாரா சசிகலா?



vikatan.com

ஜெயலலிதாவின் மறைவால் மீளமுடியாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழக மக்களை, அவர் மறைவு குறித்து எழும் பல்வேறு சர்ச்சைகளும், பதில்கள் இல்லாத கேள்விகளும் மேலும் அதிக வேதனையில் ஆழ்த்தியிருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.
அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்த இறுதிச் சடங்கு குறித்தும் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ‘சமயச் சம்பிரதாயப் படி பரிபூரணமாக அவரது இறுதிச்சடங்கு நிகழவில்லை’ என்று குறிப்பிட்டு, பெரும் மனக்குமுறல்களுடன் ஆன்மீக பெரியவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, புகழ்பெற்ற திராவிடக் கட்சி ஒன்றின் தலைவராக இருந்தபோதும் தனிப்பட்ட முறையில் அவர் தன்னை ஆன்மிக பிடிப்புள்ளவராகவே வெளிப்படுத்திக்கொண்டார். ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்ட ஜெயலலிதா, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தியவர். வைஷ்ணவ தர்ம சாஸ்திரங்களையும் ஆசாரஅனுஷ்டானங்களையும் தவறாமல் கடைப்பிடிக்கக்கூடியவர். விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சில நிமிடங்களில் பாராயணம் செய்து விடக் கூடியவர். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சென்னை பார்த்தசாரதி பெருமாள், திருவரங்கம் ரங்கநாதர் மீது அதீத பக்தி கொண்டவர் என்பது நாடறிந்த விஷயம். அவ்வளவு ஏன், ஒருநாள்கூட தமது நெற்றியில் சூர்ணம் தரிக்காமல் (கோபிநாமமாக திலகம் அணிந்திருப்பார்) இருந்ததில்லை. அந்தளவுக்கு அவர் பெருமாள் பக்தை. ஆனால், அவரது இறுதிச் சடங்கு வைணவ சம்பிராதயப்படி நடைபெறவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.

‘முதல்வர் என்பவர் சமயச் சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற அடிப்படையில் பார்த்தாலும், தனிமனிதருக்கு உரிய உரிமையையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, மறைந்த பிரதமர் இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி ஆகியோர் மறைந்தபோது, அவர்களின் இறுதிச்சடங்குகள் அனைத்தும் அவரவர் சம்பிரதாய முறைப்படி முழுமையாக நடந்தேறின. தகனக்கிரியை நிகழ்ந்தபிறகு, அஸ்தியை வைத்தே நினைவிடம் எழுப்பினார்கள். ஆனால், அம்மா அவர்களின் விஷயத்தில் அந்தமாதிரியான சடங்கு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. நடந்தவை அனைத்தும் வெறும் கண் துடைப்பாகவே நடந்தன.
முறைப்படி ரத்தசொந்தமான ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக் மூலமாகவே அனைத்தையும் செய்திருக்கவேண்டும். ஆனால், அவரை அருகில் வைத்துக்கொண்டு சசிகலாவே அனைத்தையும் செய்தார். இதையெல்லாம் விட, தீபக் பேண்ட்-சர்ட் போட்டுக்கொண்டும், காலணிகளைகூட கழற்றாமலும் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் காரியங்கள் செய்ததும், சசிகலா பால் தெளித்த தனது கைகளை தேவாதிபட்டரின் வஸ்திரத்தில் துடைத்துக்கொண்டதும் மறைந்த ஆத்மாவை அவமதிக்கும் செயல். மரியாதை செலுத்த வந்த ராகுல்காந்திகூட காலணிகளைக் கழற்றிவைத்துவிட்டே அருகில் வந்தார். அவருக்கு இருந்த அன்பும் மரியாதையும்கூட இவர்களுக்கு இல்லையே...’ என்று நீள்கிறது அவர்களது மனக்குமுறல்கள்.

இதுகுறித்தும் இறுதிச்சடங்கு-சம்பிரதாயங்கள் குறித்த நியமங்களை விவரிக்கச் சொல்லியும் வைணவ வேதபண்டிதர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டோம். அவர்கள், தங்களின் பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளோடு தங்களின் விளக்கத்தை முன்வைத்தார்கள்.

‘‘முதல் விஷயமாக, திருக்கோயிலில் கைங்கர்யம் செய்யும் ஒருவர் இறுதிச்சடங்கில் ஈடுபடுவது வழக்கம் இல்லை. ஆனால், அம்மா அவர்களுக்கு இறுதிச்சடங்கு காரியங்களை நடத்திவைத்த தேவாதிபட்டர் சென்னை தி.நகரில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிவதாக அறிகிறோம். அது உண்மையெனும்பட்சத்தில், அவர் எப்படி இறுதிச் சடங்கு நிகழ்த்த ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. ஒருவேளை இப்போது அவர் எந்தக் கோயிலிலும் கைங்கர்யம் செய்யவில்லை என்றாலும்கூட, அவரும் வைணவ சம்பிராதயங்களை அறிந்தவராகவே இருப்பார். அப்படிப்பட்டவர் இப்படி அரைகுறையாகச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? எந்தக் குறையும் இல்லாமல், முழுமையாக நடத்தியிருக்கலாமே என்பதுதான் எங்களுடைய ஆதங்கம்’’ என்று குறைபட்டுக்கொண்டவர்களிடம் சம்பிரதாய விதிகள் குறித்துக் கேட்டோம்.

‘‘ஸ்ரீரங்கத்தை பூர்விகமாகக் கொண்ட ஜெயலலிதா ஆசாரமான ஐயங்கார் குலத்தில் பிறந்தவர். அவருடைய இறுதிச் சடங்கு அவர்களுடைய குல மரபுப்படி நடைபெறவில்லை. பிராமணர் குலத்தில் இறந்தவர்களை தகனம் செய்வதுதான் வழக்கம்.
அதாவது ஒற்றை மூங்கில் கழியில் பாடை செய்து அதில் தென்னை கீற்று மட்டை பரப்பி, அதில் இறந்தவரின் உடலை வைத்து காடு வரைக்கும் சுமந்துசென்று தகனம் செய்வதுதான் காலம் காலமாய் கடைப்பிடிக்கும் வழக்கம். இந்தக் காரியத்தை, எவர் வந்தாலும் வராவிட்டாலும் இறந்த 24 மணி நேரத்துக்குள் நடத்தவேண்டும்.

தகனம் செய்வதற்கு முன் சுடுகாட்டிலும் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள், பாசுரங்கள் சொல்வார்கள். மறுநாள்தான் சஞ்சயனம் எனப்படும் பால் தெளியல் நடைபெறும். தொடர்ந்து 3-ம் நாள் முதல், 10-ம் நாள் வரையிலும் நித்ய கர்மாக்கள் உண்டு. 11-ம் நாள் ஒத்தன், 12-ம் நாளன்று சபிண்டிகரணம், 13-ம் நாளன்று கிரேக்கியம் ஆகியன நடக்கவேண்டும். இந்த நாளில் மணவாளமுனி பாராயணம், ராமானுஜர் பாசுரம், பல்லாண்டு பாசுரம் ஆகியவற்றை நிகழ்த்தி, பல்வகை தானம் செய்வார்கள். இவற்றையெல்லாம் செய்து இறந்தவரை அவருடைய மூதாதையருடன் சேர்த்துவைக்கும் சடங்கு இது.

பிறகு ஓராண்டு வரையிலும் மாதாந்திர திதியன்று கடைப்பிடிக்க வேண்டிய சடங்குகளும் உண்டு. அதேபோல், ஐயங்கார் குடும்பத்தில் இறந்தவர்களை அவர்களின் வாரிசுகளோ அல்லது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளோ தர்ப்பையை எரித்து அதைக் கொண்டு தகனம் செய்வார்கள்.

நேரடி ஆண் வாரிசு இல்லை பெண் வாரிசுதான் உண்டு எனில், அந்தப் பெண்ணின் வயிற்றில் பிறந்த பேரன் காரியங்கள் செய்ய வேண்டும். திருமண பந்தத்தில் இணையாதவர்களுக்கு ரத்தவழிச் சொந்தங்கள்... சகோதரர் வழிப் பிள்ளைகள் செய்யலாம். எந்த உறவுகளும் இல்லாதவர் எனில், அவருக்கு ‘கோவிந்த கொள்ளி’ என்று வேற்று நபர்கள் காரியம் செய்யலாம். கோவிந்தகொள்ளி வைப்பதற்கும் உரிய சடங்குகள் உண்டு’’ என்று விளக்கியவர்கள், தங்கள் பங்குக்கு தங்களது மனக்குறைகளையும் கொட்டித் தீர்த்தார்கள்.
‘‘இறந்து போனவருக்கு நேரடியான வாரிசுகள் இல்லாவிட்டால், ரத்த சம்பந்த உறவு உள்ள ஒருவர் இறுதிச் சடங்குகளைச் செய்யலாம். அப்படிப் பார்த்தால் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சம்பந்த உறவாக அவருடைய அண்ணன் மகன் தீபக் இருக்கிறார். அவரைக் கொண்டு முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்திருக்கலாம். ஆனால், அவரை கடைசியில் பேருக்குத்தான் இறுதிச் சடங்குகளைச் செய்யவைத்திருக்கிறார்கள். சாஸ்திரப்படி ஒருவருடைய உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுவிட்டால் உடனே தகனம் செய்துவிடவேண்டும். ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிகாலையில் போயஸ் கார்டனிலேயே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லும் நிலையில், அவருடைய உடலை உடனே தகனம் செய்யாமல் மாலைவரை காத்திருக்கவைத்தது சாஸ்திர விரோதம் என்றுதான் சொல்லவேண்டும். இது ஒருபுறமிருக்க...

காலையில் நேராக ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு, மாலையில் உரிய இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அடுத்ததாக, இறுதிச்சடங்கு நடந்த இடத்தில் சாஸ்திரிகளைக் கொண்டு வேதம், பிரபந்த பாராயணம் செய்திருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை.

பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருக்கும் ஜெயலலிதாவின் உடலுக்கு பெருமாள் மாலையும், வஸ்திரமும் அணிவித்து மரியாதை செய்திருக்கலாம். அதுகூட செய்யவில்லை. பிராமண குடும்பங்களில் இறந்தவர்களை தகனம் செய்துவிட்டு, மறுநாள் அஸ்திக்குத்தான் பால் தெளித்தல் நடைபெறும். ஆனால், இங்கே தகனம் செய்யாததுடன், சவப்பெட்டியை குழியில் இறக்கியதுமே பாக்கெட் பாலை பீய்ச்சித் தெளித்தது பெரும் தவறு. சந்தனக் கட்டைகளையும் குழிக்குள் வீசி எறிந்திருக்கக்கூடாது.

மொத்தத்தில் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் எதையும் கடைப்பிடிக்கவில்லை என்பதில் எங்களைப் போன்றவர்களுக்கு நிறையவே வருத்தம் இருக்கிறது’’ என்றவர்களிடம், ‘ஒருவர் கல்யாணம் ஆகாமல் கன்னியாகவே இறந்துவிட்டால், அவருக்கு மாதம்தோறும் செய்யும் சடங்குகளையும் வருடாந்திர திதி கொடுக்கவும் ஏதேனும் சட்டதிட்டங்கள் இருக்கிறதா?’’ என்று கேட்டோம்.

‘‘வைத்தியநாத தீக்ஷிதியம் போன்ற பழம்பெரும் நூல்கள் சம்ஸ்கார விஷயங்கள் குறித்து விளக்குகின்றன. ஒரு பிராமணப் பெண் திருமணம் ஆகாமல் இறந்துவிட்டால், அவருக்கு மாதாந்திர சடங்குகளோ வருடாந்திர திதியோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வருடாந்திர திதி நாளில் கல்யாணம் ஆகாத பெண்ணுக்கு வஸ்திர தானம் செய்தாலே போதும்’’ என்று பதில் தந்தவர்கள், ‘‘அதிலும் இங்கே ஒரு சிக்கல் இருக்கிறது. இறந்த நேரம் மிகச்சரியாக தெரிந்தால்தான் இறப்பு திதியை (திதி நாளை) தெளிவாகக் கணிக்க முடியும். 5-ம் தேதியன்று இரவு 11:30 மணிக்குதான் அம்மா அவர்களின் உயிர் பிரிந்ததாக சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதிலும் சர்ச்சைகள் எழாமல் இல்லையே. அப்படியிருக்க திதியை எப்படிக் கணிப்பது?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீது பேரன்பு கொண்ட தமிழக மக்களின் மனதில், அவர் குறித்து தொக்கி நிற்கும், பதில் அறிய முடியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி


'எனக்கு சின்ன வயசுல இருந்து அவங்களைப் பிடிக்கும். சின்ன வயசா இருக்கும்போது, அவங்களும் நானும் அடிக்கடி பேசிக்கிற மாதிரி சொப்பணம் கண்டிருக்கேன். காலைல எழுந்து யோசிச்சா, இது எல்லாம் புதுசா இருக்கு என விட்டுட்டேன். அதுக்கப்புறம் தான், நான் வீணை வாசிப்பதை வைத்து என்னைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டாங்க. அதற்கு பிறகு, சென்னை இசைக் கல்லூரிக்கு என்னை துணை வேந்தராக ஆக்கினாங்க. அம்மா வேந்தரா இருந்தாங்க. இதுக்கெல்லாம் முன்னாடி, 'நான் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் உறுப்பினராக இருந்தேன். இந்தத் துறையில் தொடர்ந்து இருக்கப் பிடிக்காமல் என் கணவர் வேலை பார்க்கும் இடமான மும்பைக்கே திரும்பிவிட முடிவு செய்தேன். வீட்டுப் பொருட்களை எல்லாம் காலி செய்துவிட்டு வெறும் விட்டை பூட்ட கிளம்பும்போது ஒரு போன் வந்தது. அந்த போன் அம்மாவிடமிருந்து. 'தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணை வேந்தராக விருப்பமா?'னு கேட்டாங்க. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.. கண்கள் கலங்கிடுச்சு. சரின்னு சொன்னேன். இயல்பாகவே நான் ரொம்ப தைரியமானப் பெண்மணி. எதற்கும் கலங்கவே மாட்டேன். ஆனா, அன்றைக்கு அம்மாவிடமிருந்து போன் வரவில்லைனா என்றால் தமிழ்நாட்டிலேயே இருந்திருக்க மாட்டேன். நான் இப்போ வாழ்ந்து கொண்டிருப்பது அவங்கக் கொடுத்த வாழ்க்கை' என நெகிழ்ந்து பேச ஆரம்பிக்கிறார், சென்னையில் அமைந்துள்ள இசைப் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் வீணை காயத்ரி''.

''உங்களுக்கு வந்த கொலை மிரட்டல் அப்போ 'அம்மா'வை சந்தித்தீர்களே? என்ன சொன்னார்?''

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும் இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார். 'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது. அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''



''ஜெயலலிதாவுக்கும் உங்களுக்கும் இடையேயான பழக்கம் எப்படி?''

''முதல் முறையாக அவரை நேர்ல பார்த்து தனியாப் பேசினது 2006-ம் ஆண்டு போயஸ் கார்டன்ல தான். இயல், இசை, நாடக மன்ற உறுப்பினராக இருந்தப்போ, என் பெரிய பொண்ணோட திருமணத்துக்கு பத்திரிகை வைக்க நானும், என் கணவரும் போயிருந்தோம். பொதுவாகவே, அவங்களைப் பார்க்கப் போறவங்க, பொக்கே கொடுப்பது தான் வழக்கம். நான் வித்தியாசமா ஜாதி மல்லி 100 முழம், மல்லி 100 முழம் என 200 முழம் பூவையும் ஒரு லைட் கிரீன் பட்டுப் புடவையும், பத்திரிகையையும் அதனுடன் சேர்த்துக் கொடுத்தேன். மல்லிகையை வாசம் செய்து விட்டு பேச ஆரம்பித்தார்கள் அம்மா. என்கிட்ட கேட்ட முதல் வார்த்தையே, 'ஆட்சியில இருக்கும் போதுதானே பார்க்க வருவாங்க. நீங்க, நான் ஆட்சியில இல்லாதபோது பார்க்க வந்திருக்கீங்கனு கேட்டாங்க'. உடனே நான், 'உங்களை எனக்குப் பிடிக்கும். ஆட்சிக்காக யோசித்து எல்லாம் வரவில்லை. உங்களைப் பார்க்கணும்னு தோணிச்சு' என மெதுவாகச் சொன்னேன். என் மகள் திருமணத்துக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பினார். அதற்குப் பிறகு நான் அவரை தலைமைச் செயலகத்தில் அடிக்கடி சந்திச்சிருக்கேன். எனக்கு தெலுங்கு தெரியும் என ஒரு முறை தெரிஞ்சுக்கிட்டாங்க. அதற்குப் பிறகு என்கிட்ட தெலுங்கில் தான் பேசுவாங்க. நானும் அவங்களைத் தனியாக அழைக்கும்போது, 'அம்மாகாரு'னு தான் கூப்பிடுவேன். அவங்களும் என்னை மிஸ்ஸர்ஸ் காயத்ரி எனதான் கூப்பிடுவங்க. இதுவே மத்தவங்க இருந்தாங்கனா நான் மேடம்னுதான் கூப்பிடுவேன்.''

''உங்கள் இசையை அவர் கேட்டது உண்டா?''

''திருமண ரிஷப்ஷனுக்காக அடிக்கடி நிகழ்ச்சிகளில் வாசிப்பது உண்டு. அப்படி வாசிக்கும் போது மூன்று விழாக்களில் அவங்களைப் பார்த்திருக்கேன். அவங்களும் என்னைக் கவனிச்சிருக்காங்க. நான் கர்நாடகம் வாசிச்சுட்டு இருப்பேன். அவங்க நிகழ்ச்சிக்கு வந்தா உடனே, அவங்க நடிச்ச படத்தில் உள்ள, ' ஒரு நாள் யாரோ', 'ஆயிரம் நிலவே வா',' ஆயிரம் ஆசை' பாடல்களை வாசிக்க ஆரம்பிச்சுடுவேன். 20 வருஷத்துக்கு முன்பு, ஒரு பேட்டியின் போது அம்மாகிட்ட, யார் வீணை வாசிப்புப் பிடிக்கும் என கேட்டப்போ, என் பேரை சொல்லியிருக்காங்க. இதைவிட என்ன பெரிய பாக்கியம் என்னங்க இருக்கப் போவுது?.''

''உங்களால் அவருடனான மறக்க முடியாத நினைவுகள்?''

''ஜெயலலிதா அம்மாவுக்காக, பிப்ரவரி அன்னிக்கு திருப்பதியில வாசிச்சேன். கச்சேரி முடிந்து கிளம்பும் போது, அங்கே லட்டும், வடையும் கொடுத்தாங்க. அதை எடுத்துட்டு வந்து அம்மாவுக்கு கொடுக்கலாம் என அவர் அலுவலகத்தில் இருந்தவங்ககிட்ட கேட்டேன். அம்மா பொள்ளாச்சியில் தேர்தல் பிரசாரத்தில் இருக்காங்க என பதில் வந்தது. நானும் அதை அப்படியே வீட்டில் வச்சுட்டேன். அடுத்த நாள், கோவைக்காய் பொறியல் செய்து கொண்டு இருந்தேன். அப்போ, அம்மா ஆபீஸ்ல இருந்து போன், அம்மாவேப் பேசினாங்க. என்னைத் தெரியுதானு கேட்டாங்க. அம்மா நீங்க என்னோட சொப்பணத்துலக்கூட வந்துட்டு இருக்கீங்க.. உங்களை எப்படி மறக்க முடியும்னு சொன்னேன். அதுக்கு அவங்க எனக்கு பிரசாதம் கொடுத்து அனுப்புங்கனு சொன்னாங்க. அதற்குப் பிறகு 'WE WILL MEET VERY VERY SOON' அப்படினு சொன்னாங்க. அதாவது, இந்த தேர்தல்ல ஜெயிச்சு வந்திடுவேன். நாம கட்டாயம் சந்திப்போம் என அர்த்தப்படுத்திய வார்த்தையை சொன்னாங்க''.

''அம்மாவுடைய இழப்புச் செய்தி உங்களை எந்த அளவு பாதிச்சது?''

''வார்த்தைகளே இல்லைங்க. நான் அவங்களை சந்திக்கும்போது ஒரு அன்பு இருக்கும் பாருங்க. அதை எப்படி சொல்றதுனு தெரியல. அவங்களுக்கு மனசுல ஒளிவு மறைவே இல்லை. நியாயமா இருப்பாங்க. நீ, வானு அவங்க யாரையும் கூப்பிட்டதே இல்லை. அவங்க கொண்டு வந்த திட்டத்தில் என்னை ரொம்ப கவர்ந்தது, 'அம்மா உணவகம்'. அம்மா ஸ்தானத்துல இருந்திருக்காங்க. அதுதான் பலருக்கும் 'டச்'சிங்கா இருந்திருக்கு. அம்மா என்றாலே ஆசையா, அன்பா அழைத்து பரிவோடு சாப்பாடு போடுறதுதானே. ஐந்தாம் தேதி மாலை டி.வில திடீர்னு அம்மா மரணம்னு போட்டாங்க. அப்போலோ மருத்துவமனைக்கு போன் பண்ணி விசாரிச்சேன். இல்லைனு சொன்னாங்க. ஆறுதலா இருந்தது. இரவு 12 மணிக்கு தூக்கம் திடீரென கலைந்தது. டி.வி போட்டா இறந்ததா ஒளிபரப்பினாங்க. ரொம்ப ஷாக் ஆகிடுச்சு. அதை வார்த்தைகளால சொல்ல முடியாது ஜூலை 27-ம் தேதி நல்லா இருந்தாங்க. அதுக்குள்ள இப்படியானு கஷ்டமா இருந்தது.''

''அவங்க கொடுத்து பொக்கிஷமா வைத்திருக்கும் பொருள்?''

''என் பொண்ணு கல்யாணத்துக்கு, என்னோட உயரத்துக்கு இருக்கிற இரண்டு வெள்ளி குத்துவிளக்கு கொடுத்து அனுப்பினாங்க. மூன்று, நான்கு பேர் அதை தூக்கிட்டு வந்தாங்க. அதே போல ஒவ்வொரு தீபாவளிக்கும் ஸ்வீட் அனுப்புவாங்க. ஒவ்வொரு வருடமும் அவங்க பிறந்த நாளை என்னோட பல்கலைக்கழத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடுவேன். கிட்டத்தட்ட சினிமா பங்ஷன் மாதிரி. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 24-ம் தேதி நிகழ்ச்சியை நடத்துவோம். 2013-ம் ஆண்டு 66 மணி நேரம் தொடர்ந்து எல்லா மியூசிக்கும் வாசிச்சோம். நாட்டுப் புறக் கலைகள், பாட்டு, கிராமிய இசை என வாசிச்சோம். அவங்க 67-வது பிறந்த நாள் அப்போ 67 பேரின் நடனம். 68-வது பிறந்தநாளுக்கு 68 பேர் நாகஸ்வரம், 68 பெயின்டிங் என வெகு விமர்சையாகக் கொண்டாடினோம். அவங்களைப் பற்றிய அரிய புகைப்படங்கள், பெயின்டிங்ஸ் எல்லாவற்றையும் ஒரு மாதம் கண்காட்சிக்காக வச்சிருந்தேன். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவங்க கைப்பட வாழ்த்துக் கடிதம் அனுப்புவாங்க. அதையும் பாதுகாத்து வச்சிருக்கேன். நான் எப்பவுமே வெளிப்படையாகத்தான் பேசுவேன். இதைப்பற்றி என்கிட்ட ஒருமுறை 'யு ஆர் போல்ட். ஐ லைக் இட்' என பாராட்டினார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் நிதானமாக சத்தமாக வரும். போலீஸ் துறை பக்கம் போகணும் எனதான் விரும்பினேன். புலனாய்வு மீது மிகவும் விருப்பம் எனக்கு. இந்த வீணை இசைதான் என்னை இன்னும் கட்டிப் போட்டிருக்கு''.

முதல் வெற்றி!

முதல் வெற்றி!

By ஆசிரியர்  |   Published on : 07th December 2016 02:03 AM  |   அ+அ அ-   |  
அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமான "கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்பதற்கு இலக்கணமாக அவரது பெயரில் 44 ஆண்டுகளுக்கு முன்னால் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து கொண்டிருக்கிறது. எந்தவித முணுமுணுப்போ, சலசலப்போ இல்லாமல் அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடமை உணர்வுடனும், கட்டுப்பாட்டுடனும் கண்ணியம் காத்து, ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலியிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும்கூட கட்சி கட்டுப்பாடாகத் தொடரும் என்பதற்கான அறிகுறி இது.
ஒரு மிகப்பெரிய ஆளுமையின் மறைவு ஒட்டுமொத்த சமு
தாயத்தையே புரட்டிப்போட்டுவிடுவது இயல்பு. அதிலும் குறிப்பாக, அமைச்சர்களிலிருந்து அடிமட்டத் தொண்டர் வரை "அம்மா'வின் விழியசைவிற்கும் விரலசைவுக்கும் ஏற்ப செயல்பட்டு வந்த கட்சி, அவரது மறைவை எதிர்கொண்ட விதமும், அவரது பெயருக்கும் புகழுக்கும் துளியும் களங்கம் ஏற்பட்டுவிடாமல் நடந்துகொண்ட முறையும் ஒட்டுமொத்த இந்தியாவையே வியந்து பார்க்க வைத்திருக்கிறது.
ஜெயலலிதாவின் மரண அறிவிப்பைத் தொடர்ந்து உடனடியாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி முதல்வரைத் தேர்ந்தெடுத்து பதவிப் பிரமாணமும் எடுத்துக்கொண்ட விதத்திற்குப் பின்னால் இருந்த அப்பழுக்கில்லாத திட்டமிடுதலும், அரசியல் சாதுர்யமும் யாரும் எதிர்பார்க்காதது. அதிலும் குறிப்பாக, நள்ளிரவு நேரத்தில் ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருமே சாட்சிகளாகப் பங்கு கொண்டது என்பது, தலைவியின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு வலிமையையும், அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
ஒரு மிகப்பெரிய ஆலமரம் சாய்ந்து விழுந்தால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அறிஞர் அண்ணா காலமானபோதும் சரி, எம்.ஜி.ஆர். மறைந்தபோதும் சரி, தமிழகம் முழுவதும் நடந்த கலவரங்கள் எத்தனை, பொருள் இழப்பும் பாதிப்புகளும் எத்தகையவை என்பது அனைவருக்கும் தெரியும். இயல்பு வாழ்க்கை திரும்பப் பல நாட்கள் ஆயின.
நீண்ட கால உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனு
மதிக்கப்பட்டிருந்தாலும்கூட, தயார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடு
களைச் செய்து சரியான நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டிருக்காவிட்டால், தமிழகமே கலவர பூமியாக மாறிவிட்டிருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதாவுக்கு அடித்தட்டு மக்கள் மத்தி
யிலும், தொண்டர்களிடையிலும் ஏற்பட்டிருக்கும் அபரிமித செல்வாக்கு அத்தகையது. இதற்கு முன்னால் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது கொதித்தெழுந்த உணர்ச்சி எரிமலை இப்போதும் வெடித்திருக்கக்கூடும்.
அப்படிப்பட்ட சூழலை சாதுரியமாகக் கையாண்டு, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையிலும் அனை
வரும் பாராட்டும் வகையிலும் தனது தலைவியின் இறுதி யாத்திரையை நடத்தியது என்பது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நிர்
வாகத் திறமைக்குக் கிடைத்த முதல் வெற்றி. மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார் என்றாலும், சுதந்திரமாக அவர் தலைமையில் முதன்முறையாக ஒரு மிகப்பெரிய பிரச்னை, மிகத் திறமையாகக் கையாளப்பட்டிருக்கிறது. தொடக்கமே தெம்பூட்டும் விதமான ஆரம்பமாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையில் சசிகலாவின் பங்களிப்பு என்பது தவிர்க்க முடியாதது. குறைத்து மதிப்பிட முடியாதது. எம்.ஜி.ஆரின் மறைவில் தொடங்கி, கடந்த 29 ஆண்டுகளாக
ஜெயலலிதாவின் நிழலாகவும், மனசாட்சியாகவும் அவரது வெற்றியிலும் தோல்வியிலும் பக்கபலமாகவும், பின் துணையாகவும் இருந்து வந்திருப்பவர் சசிகலா மட்டுமே. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும்கூட, நீண்ட நாள் ஜெயலலிதாவால் சசி
கலாவை ஒதுக்கி வைக்க முடியவில்லை எனும்போது, எந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக அவர் இருந்திருக்கிறார் என்பது தெளிவு.
"மற்றவர்களால் மிகவும் தவறாக சித்திரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர். எனக்காக அவர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். எனக்காக சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். என்னுடைய நட்பு மட்டும் இல்லையென்றால் அவரை யாரும் இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். எனது உடன்பிறவாச் சகோதரி. என் அம்மாவின் இடத்தை நிரம்பிய பெண் அவர்' என்று
ஜெயலலிதாவே, சிமி கரேவாலுடனான தனது பேட்டியில் சசிகலா குறித்து கூறியிருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு சசிகலா ஜெய
லலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார் என்று தெரிந்து
கொள்ளலாம்.
இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா இருக்கும்போதே, அவரது எண்ணப்படியும், வழிகாட்டுதல்படியும் கட்சியினரை வழிநடத்தி வந்திருப்பவர் சசிகலாதான். அதனால், அ.தி.மு.க.வின் கட்சித் தலைமை என்பது இயற்கையாக சசிகலாவைச் சேரும் என்பதுதான் எதிர்பார்ப்பு. எதிர்கால கட்சித் தலைமைக்கு சசிகலாவும், நிர்வாகத் தலைமைக்கு ஓ. பன்னீர்செல்வமும் என்பது ஜெயலலிதா சொல்லாமல் சொல்லியிருக்கும் செய்தி என்றுதான் கூற வேண்டும். இந்த ஏற்பாடு சுமுகமாகத் தொடர்வதுதான் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.வினர் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஜெயலலிதாவின் அடிச்சுவட்டில் அடுத்து நான்கரை ஆண்டுகள் திறமையாகவும், சுமூகமாகவும் ஆட்சியை நடத்திச் செல்வதுதான் 2016-இல் மக்கள் அ.தி.மு.கவுக்கு அளித்த தீர்ப்பை நிறைவேற்றுவதாக அமையும்!

அம்மா...

By ஆசிரியர்  |   Published on : 06th December 2016 05:06 AM  

எது நடந்துவிடக் கூடாது என்று லட்சக்கணக்கான அ.தி.மு.க. அனுதாபிகளும், கோடிக்கணக்கான தமிழக மக்களும் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அவரவர் போற்றும் இறைப்பரம்பொருளை வேண்டி வந்தார்களோ அது நடந்துவிட்டது. கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுத் திரும்ப வேண்டும், ஆட்சிப் பொறுப்பை முன்புபோல ஏற்று நடத்த வேண்டும் என்கிற அனைவரது பிரார்த்தனையும் பொய்த்துவிட்டது. புரட்சித் தலைவி என்றும், பொன்மனச் செல்வி என்றும் தமிழக மக்களால் போற்றிப் பாராட்டப்பட்ட, "அம்மா' என்று அனைவராலும் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்ட அ.தி.மு.க.வின் தனிப்பெரும் தலைவி மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டிருக்கிறார்.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால், நிரப்ப முடியாத வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறுவது வெற்று வார்த்தைகள் அல்ல, நிஜம். தமிழக அரசியல் சரித்திரத்தில் இப்படியொரு அசைக்க முடியாத அதிகாரத்துடனும், ஆதரவுடனும் எந்தவொரு கட்சியின் தலைவரும் இருந்ததில்லை. தமிழகத்தின் கடைக்கோடி அடித்தட்டு மக்கள் வரை, தனது மக்கள் நலத் திட்டத்தால் சென்றடைந்து அவர்களால் பாசத்தோடு "அம்மா' என்று அழைக்கப்படும் நிலைக்கு தன்னை வளர்த்திக் கொள்ள அவரால் முடிந்தது என்பது வரலாற்றுப் பதிவு.

காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பிறகு மக்களிடம் தனது ஆட்சி தொடர மீண்டும் தேர்தல் வெற்றியை ஈட்டியவர் ஜெயலலிதா மட்டுமே. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி அடுத்த 15 ஆண்டுகள் அவர் மறையும்வரைத் தலைமை தாங்கி வழி நடத்தினார் என்றால், அவருக்குப் பிறகு கடந்த 29 ஆண்டுகளாக அந்தக் கட்சியைக் கட்டிக் காத்து நடத்தி வந்த பெருமை ஜெயலலிதாவைத்தான் சாரும்.

1989, 1996, 2006 என்று மூன்று தேர்தல் தோல்விகளையும், 1991, 2001, 2011, 2016 என்று நான்கு வெற்றிகளையும் அவரது தலைமையின் கீழ் அ.தி.மு.க. எதிர்கொண்டது. ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும், அவரது அரசியல் வருங்காலம் முடிந்து விட்டதாக ஆரூடம் கூறியவர்கள், அவர் "பீனிக்ஸ்' பறவையாய் சாம்பலிலிருந்து மீண்டெழுந்து வந்ததைப் பார்த்து மிரண்டு போனதைச் சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. ஜெயலலிதாவின் அரசியல் கிராஃப் மிகவும் விசித்திரமானது. அவர் எதிரிகளால் மூலைக்குத் தள்ளப்படும் போதெல்லாம் சீறியெழுந்து தான் இழந்த இடத்தை மீண்டும் பிடித்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் இன்னுமொரு ஆச்சரியம் காணப்படுகிறது. அவரது அரசியல் பிரவேசத்திலிருந்து தொடங்கி, ஒவ்வொரு மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்தும் ஒரு மிகப் பெரிய பின்னடைவு இருந்தவண்ணம் இருந்து வந்திருக்கிறது.

1982-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரால் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டு அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்த சில மாதங்களிலேயே அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய அசுர வளர்ச்சி அ.தி.மு.க.விலேயே பலரையும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வைத்தது. இப்படியே போனால், எம்.ஜி.ஆர். அவரைத் துணை முதல்வராக அறிவிக்கக்கூடும் என்று பேசப்படும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது.

ஆனால், 1984-இல் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்கா சென்றது, திரும்பி வந்த பிறகும் ஜெயலலிதாவைப் பார்க்காமல் இருந்தது என்று ஏறத்தாழக் கட்சியில் ஓரங்கட்டப்பட்ட நிலைமை. எம்.ஜி.ஆரைச் சுற்றி இருந்தவர்கள் ஜெயலலிதாவைக் கட்சியிலிருந்து விலக்கிவிட முயற்சி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், 1987-இல் எம்.ஜி.ஆர். காலமானார். அது ஜெயலலிதாவைத் தலைவியாக்கியது. அ.தி.மு.க. பிளவுபட்டு ஜெயலலிதா அணி தனித்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும், ஜானகி அணி அடைந்த படுதோல்வி ஜெயலலிதாவை எம்.ஜி.ஆரின் இயற்கையான வாரிசாகத் தூக்கிப் பிடித்தது. அதே வேகத்தில், ஜெ, ஜா அணிகள் இணைப்பு, 1989 மக்களவைத் தேர்தல், காங்கிரஸýடன் கூட்டணி என்று வளர்ந்து 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வரலாறு காணாத வெற்றியை பெற்றது.

1991 வெற்றி என்றால் 1996-இல் படுதோல்வி. தொடர்ந்து வழக்குகள். இத்துடன் முடிந்தது ஜெயலலிதாவின் சகாப்தம் என்று நினைத்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக 1998 மக்களவைத் தேர்தலும் 2001 சட்டப்பேரவைத் தேர்தலும் அமைந்தன. மீண்டும் முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது. அந்த வெற்றியின் மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. அவரது தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பதவி விலகினார். சிறிது இடைவெளி. மீண்டும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகிறார். ஆனால், தொடர்ந்து 2004 மக்களவைத் தேர்தலிலும் 2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வி. ஏறுமுகத்தைத் தொடர்ந்து இறங்குமுகம்.

2011 சட்டப் பேரவைத் தேர்தல் ஜெயலலிதாவுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து மீண்டும் முதல்வராக்கியது. அடுக்கடுக்காக அவர் அறிவித்த இலவசத் திட்டங்கள் அவரை அனைவருக்கும் "அம்மா'வாக்கின. தொடர்ந்து, 2014 மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களை அ.தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற்றது. இனி ஜெயலலிதா ஓர் அசைக்க முடியாத சக்தி என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இடியெனத் தாக்கியது பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு.

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பும் அதைத் தொடர்ந்து சிறைவாசமும் அவரை நிலைகுலைய வைத்துவிட்டன. அந்த அதிரடித் தாக்குதலில் இருந்து ஜெயலலிதா மனதளவில் மீளவே இல்லை என்றுதான் கூற வேண்டும். அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இப்போது மரணத்தைத் தழுவி இருப்பதற்கு நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்புதான் காரணம் என்று சரித்திரம் பதிவு செய்தால் வியப்பதற்கில்லை.

பதவி விலகி, உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை , பெங்களூரு உயர்நீதிமன்ற விடுதலை ஆகியவற்றிற்குப் பிறகு அவர் மீண்டும் முதல்வராகப் பதவி ஏறினார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியையும் அமைத்து சாதனையும் புரிந்தார். அவரது ராசி மீண்டும் வேலை செய்தது. இந்த முறை உடல்நிலையை பாதித்து முடக்கி அவரது வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டிருக்கிறது.

வெற்றி தோல்வி என்று மாறி மாறிப் பயணித்து, மக்களின் இதய சிம்மாசானத்தில் ஏறி அமர்ந்து விட்டவர் ஜெயலலிதா. அவரது ஆட்சியைப் பற்றி எத்தனையோ குறைகளைக் கூறலாம். ஆனால் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையையும், அவரது ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட சட்டம், ஒழுங்கு முறையும், வாரி வழங்கப்பட்ட சமூக நலத் திட்டங்களும், இலவசங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக பெண்மைக்குத் தரப்பட்ட மரியாதையும் பாதுகாப்பும் தமிழகம் உள்ள வரை நினைவுகூரப்படும்.
உலக சரித்திரத்தில் முதன்முதலாக ஒரு நடிகை நாடாள முடியும், தங்கத் தாரகை தலைவியாக அரசியல் இயக்கத்தை வழிநடத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் ஜெயலலிதா. சரித்திரம் படைத்த உலகப் பெண்மணிகளின் பட்டியலில் இஸ்ரேலின் கோல்டா மேயர், இங்கிலாந்தின் மார்கரெட் தாட்சர், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோருடன் ஜெயலலிதாவும் இடம் பெறுவார் - அவர் பிரதமராக ஆக முடியவில்லை என்றாலும் கூட!

""மக்களால் நான்; மக்களுக்காக நான்'' என்கிற அவரது கூற்றுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ஈடுசெய்ய முடியாத இழப்பால் தமிழகம் தத்தளித்து நிற்கிறது. "தினமணி' அந்த மீளாச் சோகத்தில் பங்கு கொள்கிறது!

வெகு சிலர் மட்டுமே மறைந்தும் நினைவுகூரப்படுவர். அவர்களில் நிச்சயமாக ஜெயலலிதாவும் ஒருவர்!

துக்ளக் அல்ல சாணக்கியன்!

துக்ளக் அல்ல சாணக்கியன்!

By ஆசிரியர்  |   Published on : 08th December 2016 01:30 AM 
அப்பல்லோ மருத்துவமனையில் "சோ' ராமசாமி அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவரை நலம் விசாரிக்க வந்தார். "சோ, நான் உயிரோடு இருக்கும்வரை உங்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. நீங்கள் போய்விட்டால் எனக்கு ஆதரவாகவும், பக்கபலமாகவும் வேறு யாரும் இல்லாமல் போய்விடும்' என்று அவரிடம் ஜெயலலிதா கூறினாராம். அவர் விழைந்தது போலவே, ஜெயலலிதா மறைந்த அடுத்த நாள் "சோ' ராமசாமியும் காலமாகி இருக்கிறார்.
அவசரநிலைச் சட்டம் அறிவிக்கப்பட்டபோது, "துக்ளக்' இதழ் அதை எதிர்கொண்ட விதமும், ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையிலான இயக்கத்துக்கு அவர் அளித்த ஆதரவும், அகில இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. காமராஜருடன் அவருக்கு இருந்த நெருக்கம் மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சந்திரசேகர், அத்வானி, ராமகிருஷ்ண ஹெக்டே என்று
பல தேசியத் தலைவர்களின் நட்பை அவசரநிலையும் அதைத் தொடர்ந்து அமைந்த ஜனதா ஆட்சியும் ஏற்படுத்திக் கொடுத்தன.
தமிழக அரசியலில் "சோ' ராமசாமியின் பங்கு, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகுதான் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. 1987 முதல் 2016 வரை ஏதாவது வகையில் தமிழக அரசியலை திரைமறைவிலிருந்து வழிநடத்திச் சென்றவர் "சோ' ராமசாமி எனலாம். 1990-இல் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டதற்கு, "சோ' ராமசாமியின் பங்களிப்புதான் முக்கியமான காரணம்.
ஜெயலலிதா 1991-இல் ஆட்சியில் அமர்வதற்கு "சோ' ராமசாமி காரணமல்ல என்றாலும், தி.மு.க.வை எதிர்கொள்ள ஜெயலலிதாதான் சரியான சக்தி என்கிற அளவில் அந்த ஆட்சிக்கு "சோ' ராமசாமி ஆதரவளித்தார். அதேநேரத்தில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி பல ஊழல்களில் சிக்கியபோது, அந்த ஆட்சியை அகற்றத் துணிந்து களமிறங்கியவரும் "சோ'தான். காங்கிரஸிலிருந்து மூப்பனார் பிரிந்து தமிழ் மாநிலக் காங்கிரஸைத் தொடங்கியது, அந்தக் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் கூட்டணி ஏற்படுத்திக் கொடுத்தது, அந்தக் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெற்றுத் தந்தது, அதன்மூலம் 1996 தேர்தலில் அ.தி.மு.க.வைப் படுதோல்வி அடையச் செய்தது எல்லாமே "சோ' ராமசாமியின் அரசியல் வியூகத்தின் வெற்றிகள்.
1996-இல் அ.தி.மு.க.வை வீழ்த்திய "சோ' ராமசாமிதான், 1998-இல் அ.தி.மு.க. மீண்டும் உயிர்த்தெழுவதற்கும் வழி வகுத்தார். பா.ஜ.க.வுடனானஅ.தி.மு.க.வின் கூட்டணி 1998 மக்களவை தேர்தலில் பெரும் வெற்றிபெற்று, மத்திய அரசிலும் அ.தி.மு.க. பங்குபெற வழிகோலியது. அடுத்த ஆண்டிலேயே, அ.தி.மு.க. தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் வாஜ்பாயி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை இழந்தபோது, தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் ஆதரவை பா.ஜ.க.வுக்குப் பெற்றுக் கொடுத்து 1999 தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவியதும் அவரேதான்.
2001 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு காங்கிரஸ், த.மா.கா., பா.ம.க., இடதுசாரிகள் என்று கூட்டணி ஏற்படுத்தி, தி.மு.க.வை வீழ்த்த ஆலோசனை வழங்கியவர் "சோ'. 2011 தேர்தலில், விஜயகாந்தின் தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இணைத்தவர் "சோ'தான் என்பதையும் நாடறியும்.
இப்படி தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர் இருக்க முடிந்திருக்கிறது என்பதுதான் "சோ' ராமசாமியின் தனித்துவம். நடிகராக, நாடக ஆசிரியராக, திரைப்படக் கதாசிரியர், வசனகர்த்தாவாக, இயக்குநராக அவருக்கு இருக்கும் கலைத்துறை முகங்கள் பல. வழக்குரைஞர், அரசியல், சட்ட பொருளாதார ஆலோசகர் என்பது அவரது இன்னொரு முகம்.
12 மேடை நாடகங்கள், 10 திரைப்படக் கதை வசனங்கள் என்பதுடன் நின்றுவிடவில்லை அவரது எழுத்து. ஏறத்தாழ 100 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அவரது மகாபாரதம் பேசுகிறது, வால்மீகி ராமாயணம், ஹிந்து மகா சமுத்திரம், இந்து தர்மம், அன்றைய வேதங்கள் முதல் இன்றைய விவகாரங்கள்வரை என்று இந்து மதம் குறித்து, சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் அவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்கள். இவை "சோ' ராமசாமி என்கிற அதிசய மனிதனின் மேதாவிலாசத்தைப் பல தலைமுறைகள் எடுத்துரைக்கும்.
தான் கொண்ட கருத்தை, எந்தவிதத் தயக்கமோ, அச்சமோ இன்றி எடுத்துரைப்பதுதான் பத்திரிகை தர்மம் என்று கருதியவர் "சோ'. அதனால்தான் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும்கூட, "சோ' என்ன சொல்கிறார் என்பதைப் படிக்கத் தவறவில்லை.
"துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் "சோ' ராமசாமியின் மறைவால் இந்தியா ஒரு பன்முகத்தன்மையுள்ள ஆளுமையை இழந்திருக்கிறது. சோ ராமசாமியின் கருத்துகளுக்கு முரண்பட்டவர்களும்கூட, அவரை வெறுத்ததில்லை. அவரது விமர்சனத்துக்கு ஆளானவர்கள்கூட அவரைத் தனிப்பட்ட முறையில் குறை கண்டதில்லை. அதற்குக் காரணம் அவரிடம் இருந்த உள்ளத் தெளிவும், உண்மைத்தன்மையும்.
அவர் தான் போற்றி வணங்கிய மகாகவி பாரதியின், "உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்' என்கிற வார்த்தைக்கு இலக்கணமாக இருந்து மறைந்த "சோ' ராமசாமியின் மரணத்தால், தமிழகம் நல்லதொரு வழிகாட்டியை இழந்து நிற்கிறது!

ரூ.100 கோடி, 120 கிலோ தங்கம் ஒரே தொழிலதிபரிடம் பறிமுதல்: அரசு உயர் அதிகாரி, அரசியல்வாதிகள் சிக்குகின்றனர்

By DIN  |   Published on : 09th December 2016 10:25 AM 

2000

தொழிலதிபரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.100 கோடி பணம், 120 கிலோ தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் உயர் அதிகாரியும், அரசியல்வாதிகளும் சிக்குவதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து வருமான வரித் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழகத்தில் மணல் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கனிமவள தனியார் நிறுவனம், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையோடு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பணத்தை ஈட்டுவதாகவும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் வருமான வரித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
அந்தப் புகார்களின் அடிப்படையில் சென்னை தியாகராய நகரில் வசிக்கும் அந்தத் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் ரெட்டியின் வீடு, அவரது கூட்டாளிகள் தியாகராய நகர் விஜயராகவ சாலையில் உள்ள சீனிவாச ரெட்டியின் வீடு, மேற்கு முகப்பேரில் உள்ள பிரேமின் வீடு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆந்திரா கிளப், சேகர் ரெட்டியின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்தி நகரில் உள்ள வீடு உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை காலை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து அதிரடி சோதனை நடத்தச் சென்றனர்.
இந்தச் சோதனை காலை 9 மணிக்கு தொடங்கியது. சோதனையில் வருமான வரித் துறையினர் 8 குழுக்களாக 160 பேர் ஈடுபட்டனர். அப்போது, வருமான வரித்துறையினரே மலைக்க வைக்கும் வகையில் பண நோட்டுகளும்,தங்கமும் கிடைத்தன.
முக்கியமாக, கணக்கில் வராத ரூ.100 கோடி பணம், 120 கிலோ தங்க நகைகள், தங்கக் கட்டிகள் வியாழக்கிழமை இரவு வரை பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர். ரூ.100 கோடி பணத்தில் ரூ.10 கோடி மட்டுமே புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகும்.
மணல் மோசடி என புகார்: வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:-
தமிழக அரசியலில் அதிகார மையங்களான 2 பேருக்கு சேகர் ரெட்டி பினாமியாகச் செயல்பட்டிருக்கிறார். சேகர் ரெட்டியின் அனைத்து விதிமீறல்களுக்கும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் துணையாக இருந்துள்ளனர். சேகர் ரெட்டி தமிழக அரசு நடத்தும் குவாரிகளில் அள்ளப்படும் மணலை அரசு நிர்ணயித்த குறைந்த விலைக்கு வாங்குவதுபோல முடக்கி வைத்துக் கொண்டு, அந்த மணலை அதிக விலைக்கு கட்டுமான நிறுவனங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்றுள்ளார்.
இதற்கு அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட எந்த வரியையும் செலுத்தாமலேயே சேகர் ரெட்டி விற்றுள்ளார். அதேபோல சில இடங்களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் குறைவான அளவு மணலை, அதிக விலைக்கும் விற்றுள்ளார்.
இவ்வாறு கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.100 கோடி வரை பணம் ஈட்டியிருப்பதை வருமான வரித்துறை புலனாய்வு விசாரணையின் மூலம் கண்டறிந்துள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தில் பெரும்பகுதி சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி வீடுகள், அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
அதேபோல ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததும், சேகர் ரெட்டி தான் சிக்கலில் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக தன்னிடம் மணல் வாங்கும் அனைவரிடமும் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டே தர வேண்டும் என கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். பழைய ரூபாய் நோட்டுகளை வழங்கியோருக்கு, மணலை அவர் விற்கவில்லை என கூறப்படுகிறது.
வியாழக்கிழமை காலை தொடங்கிய சோதனை நள்ளிரவையும் தாண்டி நீடித்தது. அதிகமான பணம்,தங்கநகை,ஆவணங்கள் பிடிபடுவதால் சோதனை முடிவடைவதற்கு இரு நாள்கள் ஆகும் என வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.
அரசு அதிகாரி சிக்குகிறார்: அதேவேளையில் இந்த வழக்கில் சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வருமான வரித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்கள் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனை, அரசியல்வாதிகளிடமும், ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை திருப்பதி கோயில் தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி வீட்டுக்கு "சீல்'




காட்பாடி காந்தி நகரில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக அருகருகே உள்ள 2 வீடுகளில் வியாழக்கிழமை சோதனையிடச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் இல்லாததால் வீட்டை பூட்டி "சீல்' வைத்தனர்.
வேலூர் வருமான வரித் துறை துணை ஆணையர் முருகபூபதி தலைமையிலான அதிகாரிகள் சோதனைக்காக வியாழக்கிழமை பிற்பகலில் சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் அந்த வீட்டின் காவலாளியிடம் சாவியைப் பெற்று, மாலையில் வீடு திறக்கப்பட்டு உள்ளே சென்ற அதிகாரிகள் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு வெளியே வந்து வீட்டைப் பூட்டி "சீல்' வைத்தனர். இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "வருமான வரித் துறை சட்டத்தின்படி வீட்டின் உரிமையாளர்கள் இருந்தால் தான் சோதனை நடத்த முடியும். சேகர் ரெட்டி வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் பூட்டி "சீல்' வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

வருமான வரித்துறையின் மிகப் பெரிய வேட்டை
தமிழகத்தில் அண்மையில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், இந்தச் சோதனையிலேயே மிக பெரியளவில் பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு, கருப்புப் பணம், ஹவாலா பணம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தி வரி செலுத்தாமலும்,கணக்கு காட்டாமலும் இருக்கும் பணத்தையும், தங்கம் உள்ளிட்ட நகைகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். சொத்து ஆவணங்களையும் அந்தத் துறையினர் கைப்பற்றுகின்றனர்.
இவ்வாறு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனையில், இந்தச் சோதனையிலேயே அதிகப்படியான பணமும்,தங்கநகையும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிக்கின்றனர்.
இன்னும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், சோதனையின் முடிவில்தான், கணக்கு காட்டப்படாமல் இருக்கும் பணம், தங்க நகைகள், தங்கக் கட்டி ஆகியவற்றின் முழு விவரம் தெரியவரும் அந்தத் துறையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

செல்லிடப்பேசியில் சிக்கினார்...!
செல்லிடப்பேசி பேச்சு மூலமே மணல் முறைகேடு குறித்த தகவல்களை வருமான வரித்துறையினர் சேகரித்து இருக்கின்றனர்.
சேகர் ரெட்டி குறித்து 6 மாதங்களுக்கு முன்பே வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் சேகர் ரெட்டி குறித்தான தகவல்களை ரகசியமாக சேகரித்தனர்.
மேலும் அவரது செல்லிடப்பேசி பேச்சுகளை வருமான வரித்துறையினர் ரகசியமாக ஓட்டு கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது தமிழக அரசின் உயர் பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், பிரபல அரசியல்வாதியின் மகனும் சேகர் ரெட்டியிடம் தினமும் செல்லிடப்பேசி மூலம் பேசியிருக்கின்றனர்.
மேலும், மணல் முறைகேட்டில் கிடைக்கும் பணம், அதை பதுக்குவது, பங்கு போடுவது என பலவாறு அவர்கள் பேசிய உரையாடல்களை கேட்டு வருமான வரித்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே மிகவும் செல்வாக்கான நபராக திகழ்ந்த சேகர் வீட்டிலும், அவரது கூட்டாளி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தச் சென்றிருக்கின்றனர்.

ஜெயலலிதா வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய கடலூர் By DIN | Published on : 09th December 2016 10:20 AM |

jayalalitha

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய நகரமாக கடலூர் திகழ்வதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசியலில் உச்சம் தொட்ட ஜெயலலிதாவின் வாழ்வில் கடலூர் மாவட்டம் முக்கியப் பங்கு வகித்ததை கட்சியினர் நினைவுகூர்ந்தனர். ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தின் போது கடலூர் மாவட்டம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது கடலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழிதேவனை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், "எனது அரசியல் கடலூரில்தான் தொடங்கியது' என நினைவுகூர்ந்ததை இன்றைய தலைமுறையினரும் கேட்டிருக்கலாம்.
இதுகுறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், தற்போதைய சென்னை மாவட்ட கூடுதல் சிவில் நீதிபதியுமான எம்.ராஜலட்சுமி கூறியதாவது:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தட்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் எனது தந்தை மாரிமுத்து கவுண்டர். அவர் அதிமுக விசுவாசி என்பதால் எனக்கும் அந்தக் கட்சியின் மீது ஈர்ப்பு இருந்தது. சட்டம் படித்து விட்டு வழக்குரைஞர் தொழில் செய்தபோது 1982-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 19ஆம் தேதி கடலூர், விழுப்புரம் பகுதிகள் ஒன்றிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் அதிமுக சார்பில் அனைத்து மகளிர் அணி மாநாடு நடத்தப்பட்டது.
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத என்னை எம்ஜிஆர் அழைத்து, "முதல் நாள் மாநாட்டுக்கு நீ தான் தலைமை' என்றார். இதை என்னால் நம்பவே முடியவில்லை.
திருவந்திபுரத்திலிருந்து தொடங்கிய பேரணி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் முடிந்து, அங்கு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அதிமுக உறுப்பினராக ஜெயலலிதா சேர்ந்தார். மாநாட்டில் பலரும் உரையாற்றினர். அப்போது அங்கு வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா பேசிவிட்டாரா? எனக் கேட்டார். இல்லையென்றதும் அவர் பேச அழைக்கப்பட்டார்.
ஜெயலலிதா பேசுகையில், "ராமர் இலங்கை செல்வதற்கு பாலம் அமைக்கும் பணியில் அணில் எவ்வாறு செயல்பட்டதோ, அதேபோல எம்ஜிஆரின் பணிக்கு அணில் போல நான் செயல்படுவேன் என்று பேசினார். அன்று தொடங்கிய ஜெயலலிதாவின் அரசியல் மேடைப்பேச்சு, தமிழகத்தில் ஆட்சிபுரியும் அளவுக்கு அவரை உயர்த்தியது. அதில் நானும் பங்கெடுத்தேன் என்பதே மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றார்.
கடலூர் மாவட்ட அதிமுக துணைச் செயலரும், கட்சியின் மூத்தத் தலைவருமான கே.முருகுமணி கூறியது:
1986ஆம் ஆண்டு மதுரையில் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அப்போது, ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட மாணவரணிச் செயலராக இருந்த என்னை மாநாட்டுக்கு தலைமை வகிக்க எம்ஜிஆர் பணித்தார். மாநாட்டில் கொள்கை பரப்புச் செயலர் ஜெயலலிதா வழங்கிய வெள்ளி செங்கோலை பெற்றுக்கொண்ட எம்ஜிஆர், அதை திரும்ப அவரிடமே வழங்கினார். இது கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஜெயலலிதாவிடம் வழங்கியதற்கான சமிஞ்கையாக அப்போதே பார்க்கப்பட்டது என்றார்.

NEWS TODAY 27.09.2024