Wednesday, December 14, 2016

வர்தா' புயலால் அதிகாரிகள் பாடம் கற்பரா? பசுமை இழந்த சென்னை மாநகரம்

சென்னை அருகே, நேற்று முன்தினம், 'வர்தா' புயல், கரையைக் கடந்தது. இதனால், சென்னை நகரில், 5,000க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.
வேர் பிடிப்பு இல்லாத மரங்களை நட்டதால் தான், சேதம் அதிகமானது என, பசுமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். வங்கக் கடலில் மையம் கொண்ட, 'வர்தா' புயலின் மையம், நேற்று முன்தினம், மாலை, 3:30 மணிக்கு, சென்னை துறைமுகம் அருகே, 100 - 110 கி.மீ., வேகத்தில் கரையை கடந்தது. இதை தொடர்ந்து, புயலின் கிழக்குப் பகுதி, மாலை, 6:30 மணிக்கு கரையை கடந்தது.
புயலின் தாக்கத்தால், சென்னையில், 5,000க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இந்தியாவில், மாநகரங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, டில்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய வற்றை விட, சென்னை மிகவும் பின்தங்கி உள்ளது. டில்லி நகரின், மொத்த பரப்பில், 25 சதவீதம் வரை, பசுமைப் போர்வை உள்ளது. ஆனால், சென்னை யில், 9 சதவீதத்திற்கும் குறைவாகவே, மரங்களின் பரப்பு உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், சென்னையில், கட்டுமானப் பணிகளுக்காக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மத்திய அரசு வெளியிட்ட வனத்துறை கணக்கெடுப்பில், சென்னையில் பசுமை போர்வை வேகமாக குறைந்து வருவது தெரியவந்தது.
இந்நிலையில், 'வர்தா' புயலால், சென்னை மாநகரில், மரங்கள் விழுந்து கிடக்காத சாலைகளே இல்லை. சிறிதும், பெரிதுமாக மரங்கள் வேரோடு விழுந்து கிடந்தன. மரங்கள் விழுந்ததால், போக்கு வரத்து முற்றிலும் பாதித்தது; மேலும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன.மரங்கள் சரிந்து விழுந்ததற்கு, புயல் மட்டும் காரணமல்ல, அரசு அதிகாரிகளும் தான் என, பசுமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: சென்னையில், வெளிநாட்டை சேர்ந்த, வேர்ப்பிடிப்பு இல்லாத, துாங்கு மூஞ்சி மரங்கள் தான் அதிகம் நடப்பட்டுள்ளன. அந்த மரங்கள், சாதாரண காற்றுக்கே தாங்காது; 110 கி.மீ.,க்கும் அதிகமான வேகம் கொண்ட புயலை, எப்படி தாங்கும். சென்னையில், மரங்களை நடுகிறோம் என்ற பெயரில், வேர் பிடிப்பு இல்லாத மரங்களை நடுவதால், பயன் ஏதும் இல்லை. நம் நாட்டு மரங்கள், அதிகளவு கார்பன் - டை - ஆக்ஸைடு வாயு உட்கொண்டு, அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடும். அத்தகைய மரங்களை நடுவதால், மண்ணுக்கும், மக்களுக்கும் பயன் இருக்கும். இத்தகைய மரங்கள், புயல் காற்றில், எளிதில் சாய்ந்து விடாது.அரசு அதிகாரிகள், 'வர்தா' புயலில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இனிமேல், வேர் பிடிப்பு இல்லாத மரங்கள் நடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மரங்களை மீண்டும் நட வேண்டும்
வேருடன் சாய்ந்த மரங்கள், 20 நாட்கள் வரை, உயிருடன் இருக்கும். எனவே, புயலில் சாய்ந்த மரங்களின், கிளைகளை வெட்டி விட்டு, அடிமரத்தை நிமிர்த்தி, வேருடன் அதே இடத்தில் நட்டு வைக்க வேண்டும். அந்த மரம், இரண்டு மாதத்திற்குள், துளிர் விட ஆரம்பித்து விடும். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட புயலில், சாய்ந்த, அடையாறு ஆலமரம், நிமிர்த்தி நடப்பட்டு, இரண்டு மாதத்தில் துளிர்விட்டது. இதே முறையை, வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் துணையுடன், சென்னை மாநகராட்சி மேற்கொண்டால், சென்னையின் பசுமைப் போர்வையை காப்பாற்ற முடியும்.


- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...