Sunday, December 25, 2016

என் பெயர் சைக்கிள் ரிக் ஷா’: கும்பகோணத்தில் ஓடிய 1,500-ல் எஞ்சியது 5 மட்டுமே! வி.சுந்தர்ராஜ்

கும்பகோணத்தில் சவாரிக்காக காத்திருக்கும் சைக்கிள் ரிக் ஷா தொழிலாளர்கள்.

கடந்த 1980-ம் ஆண்டு வாக்கில் கும்பகோணம் நகரில் எங்கு திரும்பினாலும் சைக்கிள் ரிக் ஷாக்கள்தான் தென்படும். அப் போது, 1,500 ரிக் ஷாக்கள் ஓடிக் கொண்டிருந்த கும்பகோணத்தில் தற்போது இயங்குபவை வெறும் ஐந்தே ஐந்துதான்.

இந்த தொழில் எப்படி நசிந்தது, இதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்?

கும்பகோணம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கூண்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தன. பின்னர் சைக்கிள் ரிக் ஷாக்கள் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டன.

கும்பகோணத்தில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், பாலக்கரை காய்கறி சந்தை, அரசு மருத்துவமனை, காந்தி பூங்கா, பெரிய தெரு உள்ளிட்ட இடங்களில் சைக்கிள் ரிக் ஷா ஸ்டாண்டுகள் இருந்தன.

வெளியூரிலிருந்து வருபவர் களும், உள்ளூரில் உள்ளவர்களும் ரிக் ஷாக்காரர்களை பாசத்தோடு சவாரிக்கு அழைத்து செல்வார்கள். நியாய மான கூலியைத் தருவதுடன், உழைப்பைப் பார்த்து சற்று கூடுத லாகவும் கொடுக்கும் காலமும், மனதும் அப்போது இருந்தது.

பின்னர் மோட்டார் வாகனங் களின் வளர்ச்சியால் ஆட்டோக்கள் வரத் தொடங்கின. செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாகச் செல்வதற்கு எளிதான வாகனமாக ஆட்டோக்கள் இருந்ததால், பொதுமக்களும் சைக்கிள் ரிக் ஷாவைத் தவிர்த்து விட்டு ஆட்டோக்களை பயன் படுத்தத் தொடங்கினர்.

நாடு முழுவதும் ரிக் ஷாக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், பாரம்பரியமிக்க நகரமாகவும், கோயில் நகரமாகவும் உள்ள கும்பகோணத்தில் இன்றும் 5 பேர் சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர்.

கும்பகோணம் ரயில் நிலை யத்தில் காலையில் ரயில் வரும் நேரங்களில் இவர்கள் ஆஜராகி, பயணிகளை சவாரிக்கு அழைக்கின் றனர். ஆனால், யாருமே அவர் களைக் கண்டுகொள்வதில்லை என்றாலும், நாள்தோறும் ரயில் வரும்போதெல்லாம் சளைக் காமல் வந்து காத்திருந்து எப்படியாவது ஒரு சவாரியாவது ஏற்றிச் செல்கின்றனர்.

ரிக் ஷா ஓட்டும் தொழிலாளர் கள் முருகையன்(69), ஆனந்தன் (57), ராமகிருஷ்ணன்(72), காந்தி(69) ஆகியோர் கூறியது: நாங்கள் 40 ஆண்டுகளாக ரிக் ஷா ஓட்டி வருகிறோம். அப்போது எம்ஜிஆர் நடித்த ரிக் ஷாக்காரன் படம் வந்தபோது எங்களுக்கு பெரும் மரியாதையும் மதிப்பும் இருந்தது. இப்போது அதெல்லாம் போய்விட்டது. நாங்கள் ரயில் நிலையத்தை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துகிறோம். சென்னை போன்ற நகரங்களிலிருந்து வரும் வயதானவர்கள் ரிக் ஷாவில் ஏறு கிறார்கள். ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் கிடைத்தாலே அதிகம். வறுமையில் வாடும் எங்களுக்கு மாத உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாங்கள் ரயில் நிலையத்தில் ரிக் ஷாவை நிறுத்த ஆண்டுதோறும் பணம் கட்ட வேண்டும். எங்களது நிலையைப் பார்த்து இங்குள்ள பார்சல் கையாளுபவர்களே பணம் கட்டி விடுவார்கள். ஆட்டோக்கள் வந்ததும் பலர் ஆட்டோ ஓட்டவும், மார்க்கெட்டில் கூலி வேலைக்கும் சென்றுவிட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றோம். தாங்கள் ரிக் ஷாவில் செல்வதை மற்ற குழந்தைகள் கேலி செய்வதாகவும், எங்கள் வாகனங்கள் வேண்டாம் என்றும் பெற்றோரிடம் குழந்தைகள் கூறிய தால், யாரும் எங்களுக்கு சவாரி கொடுப்பதில்லை. எங்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது. இந்த பிழைப்பு எங்கள் தலை முறை யோடு முடிந்துவிடும். இவ்வாறு வேதனையுடன் தெரிவித்தனர்.

குறைந்த கட்டணம், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனம், சக மனிதனின் உழைப்பை நேரடியாக பார்த்து நெகிழும் மனிதம் என ரிக் ஷா வண்டிக்கென தனி அடையாளங்கள் உள்ளன. எனவே, குறைந்த தூரங்களுக்குச் செல்லும்போது இந்த ரிக் ஷாக்களை சவாரிக்காக பயன்படுத்துவோம். இதன்மூலம் ரிக் ஷாக்காரர்களின் வாழ்வாதா ரத்தை நாம் காப்பது மட்டுமல்ல, பரபரக்கும் இந்த அவரச காலத் திலும் ஒரு பாரம்பரியத்தை காத்து நின்ற பெருமை நம்மைச் சேரும்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...