Wednesday, December 14, 2016

சசிகலாவுக்கு சமூக வலைதளங்களில்
எதிர்ப்பு : அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சி

அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் சசிகலாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துக்கள், அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவை அடுத்து, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் முதல்வரானார். அவர் ஏற்கனவே இரு முறை, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் என்பதால், கட்சியில் சலசலப்பு ஏற்படவில்லை.
ஆனால், சசிகலா பொதுச் செயலராவார் என்ற தகவல், கட்சியினரிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பர் என, தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தங்கள் பதவியை இழக்க விரும்பாத மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஏழு நாட்கள் துக்கம் முடியும்முன், 'தலைமை ஏற்க வாருங்கள்' என, சசிகலாவை

சந்தித்து வலியுறுத்தினர்.

நேர் பாதியாக திகழ்ந்தவர் சசிகலா

இது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதற்கு
சசிகலா ஆதரவாளர்களும், பதில் அளித்து வருகின்றனர்.
'ஜெயலலிதா செயல்பாடுகளில், நேர் பாதியாக திகழ்ந்தவர் சசிகலா. அவருக்கு, நல்ல அரசியல் அனுபவம் உள்ளது. தற்போதைய நிர்வாகிகளை காட்டிலும், அதிக தலைமை பண்புடையவர்' என, அவரது புகழை பரப்பி வருகின்றனர். எதிர் தரப்பினரோ, 'சாக்லேட்டுடன் ஒட்டியிருந்த காகிதம் என்பதற்காக, காகிதத்தையும் சேர்த்து உண்ண முடியாது' என, பதில் அளித்துள்ளனர்.

1989 தேர்தலில்

'ஜெயலலிதா முகத்துக்காக, யாரும் ஓட்டளிக்கவில்லை. இரட்டை இலை சின்னத்திற்காகவே மக்கள் ஓட்டளித்தனர்' என, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாக, தகவல் வெளியானது.
அதற்கு,'இரட்டை இலை சின்னம் இல்லாத, 1989 தேர்தலில், ஜானகியை விட, அதிக வாக்காளர்களை கவர்ந்து, வெற்றி பெற்றவர்

ஜெயலலிதா. சரி, சசிகலாவிற்கு ஆதரவு கொடுக்கும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஜெ., பிரசாரத்தால் வெற்றி பெற்றவர்கள். பதவியை, ராஜினாமா செய்து விட்டு, சசிகலாவை பிரசாரம் செய்ய சொல்லி, ஆட்சியை பிடியுங்கள் பார்ப்போம்' என, சவால் விட்டுள்ளனர்.
மேலும் சசிகலாவிற்கு ஆதரவாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை வெளியிட்டு, அதன் கீழ், 'எம்.ஜி.ஆர்., படத்துடன், சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்; ஒரு மானம் இல்லை; அதில் ஈனம் இல்லை. அவர் எப்போதும் வால்பிடிப்பார்' என, அவர் படத்தில் வந்த பாடலையே பதிவிட்டுள்ளனர்.
இதுபோல், சசிகலாவுக்கு எதிராக, ஏராளமான கேலி, கிண்டல் செய்யும், 'மீம்ஸ்'களை வெளியிட்டு வருகின்றனர். இது, சசிகலாவை முன்னிறுத்தும், அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2026

  UP student (19) ‘bitten by snake’ 6 times in 6 weeks; family baffled  20.09.2026 Muzaffarnagar: For a 19-year-old BSc student from Hathras...