Sunday, February 17, 2019

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம் ஏன்?


தமிழக சுகாதாரத் துறை ஆணையராக சுமார் ஏழு ஆண்டுகள் பதவி வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு நேற்று (பிப்ரவரி 16) மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

2012 செப்டம்பர் மாதம் முதல் சுகாதாரத் துறை செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்பலோவில் சிகிசை மேற்கொண்ட காலங்களில் சுகாதாரத்துறை சார்பில் முக்கியப் பங்காற்றியவர். அண்மையில் இதுகுறித்து அவர் ஆறுமுகசாமி ஆணையத்திலும் சாட்சியம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் சி.வி. சண்முகம் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு புகார்களை சுமத்தினார். ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டிய வகையில் விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையாகப் பேசினார் அமைச்சர் சிவி சண்முகம். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்குப் பிறகு ராதாகிருஷ்ணனே தன்னை சுகாதாரத் துறையில் இருந்து விடுவிக்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டதாகவும் உடனடியாக அதைச் செய்தால் அதுவும் சர்ச்சை ஆகும் என்பதால் சற்று காலம் எடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கோட்டை வட்டாரங்களில் 
தெரிவிக்கிறார்கள்.
 

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024