Thursday, August 15, 2019

ஆன்லைனில் சுயவிளம்பரம்: 5 மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

By DIN | Published on : 15th August 2019 02:54 AM

இணையதளங்களில் விதிகளுக்குப் புறம்பாக சுய விளம்பரம் மேற்கொண்ட மருத்துவர்கள் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு மருத்துவ ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்பேரில் அவர்கள் மீது துறைசார் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது.
அண்மைக்காலமாக, சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவர்கள் குறித்த விளம்பரங்கள் அதிக அளவில் வருகின்றன. பயன்பாட்டாளர்கள் அவற்றை விரும்பாத போதிலும், அனைத்து வலைதளப் பக்கங்களிலும் அதுபோன்ற விளம்பரங்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. மக்களை ஏமாற்றும் நோக்கில் பொய்யான சில மருத்துவ உத்தரவாதங்கள் அதில் இடம்பெறுகின்றன. 

இந்த நிலையில், அவற்றை முறைப்படுத்தும் வகையில் சில அறிவுறுத்தல்களை அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும், மருத்துவ அமைப்புகளுக்கும் தமிழக மருத்துவ கவுன்சில் அண்மையில் அனுப்பியது.

ஆன்லைனில் சுய விளம்பரத்தை மருத்துவர்கள் தேடிக்கொள்வது விதிகளுக்குப் புறம்பானது என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவ்வாறு விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு தமிழக மருத்துவக் கவுன்சில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில் 75 பேர் மட்டுமே விளக்கமளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும், சிலர் தொடர்ந்து ஆன்லைன் விளம்பரங்களை மேற்கொண்டு வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அவ்வாறு விதிகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5 மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக மருத்துவக் கவுன்சிலின் தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபாரைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தமிழக மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 90 ஆயிரம் மருத்துவர்கள் மருத்துவ சேவையாற்றி வருகின்றனர். 

விதிகளுக்குப் புறம்பாக லாப நோக்கத்துடன் மருத்துவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது தவறு. இது தொடர்பாக வரும் 27-ஆம் தேதி நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 19.04.2024 & 20.04.2024