Monday, March 2, 2020

பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள் - மாணவ, மாணவிகளுக்கு மனநல மருத்துவர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவிகளிடையே பேசுகிறார் மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம்.


பிளஸ் 2 பொதுத்தேர்வை பதற்ற மின்றி எதிர்கொள்ள வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு மனநல மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வை மாணவர்கள் பதற்றமின்றி எழுதுவது குறித்து, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் பேசிய தாவது:

பொதுவாக தேர்வு எழுதும் போது மாணவ, மாணவிகளுக்கு மன உளைச்சல், மனப் பதற்றம் ஏற்படுவது இயல்பு. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், வெவ்வேறு அளவிலான சிந்தனைத்திறன், ஞாபகசக்தி, கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதை உணர்ந்து, ஒவ்வொரு மாணவரையும் அணுகி னால் மாணவர்களின் தேர்வு கால பதற்றத்தைக் குறைக்க முடியும்.

மேலும், உறக்கம் ஞாபகசக் தியை திடப்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை. தினமும் குறைந்தது 8 மணி நேரம் இரவில் உறங்க வேண்டும். அப்போது தான் தேர்வுக்கு சிறப்பாக தயாராகி எழுத முடியும்.

தினமும் போதிய அளவு தண்ணீர், இளநீர், பழச்சாறு, நீர்மோர் போன்ற நீராகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மன அழுத்தத்தை, பதற்றத்தைக் குறைக்கும். வீட்டிலேயே கை, கால்களை நீட்டி மடக்குதல், விரல்களை மடித்து நீட்டுதல், தினமும் குறைந்தது 15 நிமிட நடைபயிற்சி, நிதானமாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியிடுதல் போன்ற பயிற்சிக ளும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களை மற்ற மாணவர்களோடு ஒப்புநோக்குவதும் குழந்தைகளின் பதற்றத்தை அதிகரிக்கும். அறிவை வளர்த்துக் கொள்வதும், வாழ்வை மேம்படுத்துவதுமே கல்வியின் நோக்கமாகும். தேர்வு என்பது கல்வி கற்றலின் ஒரு பகுதி என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட்டால் மாணவர்களின் மனப்பதற்றத்தை எளிதாக குறைக்க முடியும்.

எனவே, மாணவர்கள் மனப் பதற்றமின்றி பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அளவு கடந்த மனப் பதற்றம், தூக்கமின்மை போன்றவற்றால் மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளானால், புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ளலாம். மனநல ஆலோசனை குறித்த தகவலுக்கு 9486067686 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024