Sunday, July 24, 2016

வருவாயைப் பெருக்குவோம்; செலவுகளை குறைப்போம்



DAILY THANTHI   THALAYANGAM

தமிழக அரசின் பட்ஜெட் பெரிய எதிர்பார்ப்புகளை மக்களிடம் ஏற்படுத்தியிருந்தது. அதற்கேற்ப, இந்த ஆண்டு பட்ஜெட்டையும், வரியில்லாத, வரிஉயர்வு இல்லாத பட்ஜெட்டாகவே தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஆனால், வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பட்ஜெட்டாகவே இருக்கிறது. எதிர்பார்த்த வருவாய் இல்லாதநிலையில், நினைத்ததற்கும் அதிகமாக செலவுகள் உயர்ந்துவிட்டநிலையில், இனி எந்தக்கோரிக்கை வைத்தாலும், சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்ற நிலைமை உருவாகிவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்யும்போது, இந்த நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 4 கோடியே 23 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இப்போது தாக்கல்செய்யப்பட்ட திருத்த பட்ஜெட்டில் அரசின் வருவாய் இந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 175 கோடியே 9 லட்சமாகத்தான் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆக, வருவாய் குறைந்துவிட்டது. ஆனால், இடைக்கால பட்ஜெட் மதிப்பீட்டில் குறிப்பிட்டதைவிட செலவு அதிகமாகியிருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் இந்த நிதியாண்டில் அரசின் செலவு ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 159 கோடியே ஒரு லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டதற்கு மாறாக, ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 29 கோடியே 56 லட்சமாக செலவு உயரும் என்று திருத்தி மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2016–17–ம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.15 ஆயிரத்து 854 கோடியே 47 லட்சமாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.40 ஆயிரத்து 533 கோடியே 84 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய நிலுவையில் உள்ள விவசாயக்கடன் தள்ளுபடி மற்றும் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் போன்ற புதிய அறிவிப்புகளை செயல்படுத்துவதாலும், ஏற்கனவே உள்ள பல்வேறு நலத்திட்டங்கள், மானியங்களை தொடர்ந்து கொடுக்கவேண்டிய இருப்பதாலும் அரசுக்கு செலவு அதிகரித்துள்ளது.

அரசின் செலவில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய வகைகள் செலவினங்கள் மட்டும் ரூ.64 ஆயிரத்து 410 கோடியே 34 லட்சமாகும். இது மொத்தசெலவில் 39.27 சதவீதமாகும். இதுபோல, மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு ரூ.68 ஆயிரத்து 211 கோடியே 5 லட்சமாகும். அரசு வாங்கியுள்ள கடன்தொகை ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி என்றநிலையில் வட்டியாக மட்டும் ரூ.21 ஆயிரத்து 215 கோடியே 67 லட்சம் கட்டவேண்டியதிருக்கிறது. இது மொத்த வருவாய் செலவில் 12.93 சதவீதமாகும். ஆக, அரசின் மொத்தவருவாயில் அரசு ஊழியர்கள் சம்பளம், பென்சன், மானியம் மற்றும் உதவித்தொகை, வாங்கிய கடனுக்கான வட்டி ஆகியவற்றிற்கு மட்டும் 93.8 சதவீதம் சென்றுவிடுகிறது. மீதமுள்ள 6.2 சதவீத தொகையை வைத்துத்தான் அரசின் வளர்ச்சித்திட்டங்களுக்கான முதலீடுகள், புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவால், ஆயத்தீர்வை வசூல் குறைந்தது உள்பட வணிகவரி வசூலும் பெருமளவு குறைந்துவிட்டது. சர்வதேச பொருளாதார வீழ்ச்சி காரணமாக, சிமெண்டு, இரும்பு, மின்சார சாதனங்கள், வாகனங்கள் விற்பனை, எல்லாவற்றிற்கும் மேலாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்டவீழ்ச்சியும் வருவாய் குறைவுக்கு காரணமாகும். 500 டாஸ்மாக் மதுபானக்கடைகளை அடைத்ததிலேயே ரூ.1,500 கோடி வருமானம் இழப்பு ஏற்படும். இந்த சூழ்நிலையில், புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், தேர்தல் அறிக்கைகளில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் நிதிவேண்டும். எனவே, வருமானத்தை பெருக்குவதிலும், செலவுகளை குறைப்பதிலும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசர, அவசியம் வந்துவிட்டது. தேவையற்றவர்களுக்கு மானியங்கள் செல்வதை தவிர்க்க, மத்திய அரசாங்கம் மானியங்களை நேரடியாக வங்கியில் செலுத்தும் திட்டம்போல, புதிய திட்டங்களை செயல்படுத்துவதே நல்லது.

கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன்களில் அதிகரித்து வரும் 'ரேன்சம்வேர்' தாக்குதல்; தாக்குதலுக்கு ஆளாகும் டாப்-10 நாடுகளில் இந்தியா

DAILY THANTHI


புதுடெல்லி,

உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் அதிகரித்து வரும் ’ரேன்சம்வேர்’ தாக்குதல் பற்றி பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'சிமண்டெக்' வெளியிட்டிருக்கும் தகவல்கள் பின்வருமாறு:-

கடந்த சில ஆண்டுகளாக இண்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் மூலமாக பயனர்களை ஏமாற்ற தகவல் திருடர்கள் 'ரேன்சம்வேர்' (Ransomware) என்ற மால்வேரை பரப்பி வருகின்றனர். இந்த மால்வேர் நிரல்கள் ஒருமுறை நம் கம்ப்யூட்டரில் வந்துவிட்டால், அவை ஒட்டுமொத்த கம்ப்யூட்டரையும் முடக்கி விடும். பிறகு, பணம் செலுத்துவதற்காக ஒரு 'பாப்-அப் மெசேஜ்'-ஐ காண்பிக்கும். இதை கிளிக் செய்து அது கேட்கும் பணத்தை செலுத்திய பிறகே கம்ப்யூட்டரை மீண்டும் 'அன்லாக்' செய்ய முடியும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி தற்போது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இதன் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன.

பணம் பறிக்கும் நோக்கில் பரப்பப்படும் இந்த மால்வேர்கள் பெரும்பாலும், வியாபார நிறுவனங்களையே குறிவைக்கிறது. 2015-ம் ஆண்டு நிலவரப்படி ரேன்சம்வேரை பரப்பிய பின் கம்ப்யூட்டர்களை விடுவிக்க ஹேக்கர்கள் சராசரியாக 679 டாலர்களை வரை கேட்கின்றனர். இந்த வகை மால்வேர் தாக்குதல்களுக்கு அதிக அளவில் ஆளாகும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட புதிய ரேன்சம்வேர்களை கண்டறிந்துள்ளோம். குறிப்பாக, இந்த ஆண்டு கிரிப்டோ-ரேன்சம்வேர் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய வகை. இது கம்ப்யூட்டரை முடக்கிவிட்டால் அதை அன்லாக் செய்வது என்பது முடியாத ஒன்று. முறையாக பேக் அப் செய்திருக்காவிட்டால் ஹேக்கர்களுக்கு பணம் செலுத்துவது ஒன்றே வழியாக இருக்கும்.

இவ்வாறு சிமண்டெக் தெரிவித்துள்ளது.

Thursday, July 21, 2016

அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவிகள்!

கழிப்பறைக்கு ரூ.333 கோடி; தண்ணீர் யார் தருவார்?' -அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவிகள்!


 அரசுப் பள்ளிகளில் கழிவறை அமைக்கவும், தூய்மைப் பணிகளை மேம்படுத்தவும் 333 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில், ' எங்கள் பள்ளி கழிப்பறையில் தண்ணீரே வருவதில்லை. பொது வெளியில் ஒதுங்க வேண்டிய துன்பத்திற்கு ஆளாகிறோம்' என வேதனைப்படுகின்றனர் திருவாரூர், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகில் உள்ள சேங்காலிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், நானூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, பள்ளி கழிப்பறையில் தண்ணீர் வராததால் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

நம்மிடம் பேசிய மாணவி ஒருவர், " எத்தனையோ முறை ஹெச்.எம்மை பார்த்து சொல்லிட்டோம். அவங்க எதைப் பத்தியும் கவலைப்படலை. தண்ணி இறைக்கும் மோட்டார் ரிப்பேர் ஆகிவிட்டது. அதை சரி செய்யாமல் விட்டுட்டாங்க. ' ஸ்கூல்ல நிதி இல்லை, சரி பண்ண முடியாது' ன்னு சொல்றாங்க. வகுப்பு நேரத்தில் அவசரத்திற்குக் கூட பாத்ரூம் போக முடியலை. இடைவேளையில் மறைவான இடம் பார்த்து ஒதுங்க வேண்டிய அளவுக்கு அவஸ்தைப்படறோம். டீச்சர்களுக்கும் இதே நிலைமைதான். நாங்க எல்லாம் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து படிக்கிறோம். கல்வி அதிகாரிகள்கிட்ட புகார் கொடுத்தும் கவனிக்க மாட்டேங்கறாங்க. கொஞ்சம் சொல்லுங்க சார்..." என்கின்றனர் வேதனையோடு. 

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியயை விஜய கவுரியிடம் பேசினோம். " இங்கு நிலத்தடி நீர் மட்டம் ரொம்பவே குறைந்து போய்விட்டது. மாணவர்கள் குடிப்பதற்காக ஊராட்சிமன்ற தண்ணீர் வருகிறது. கழிப்பறைக்குப் போதுமான தண்ணீர் இல்லை. கழிப்பறையைப் பயன்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான். மோட்டாரும் ரிப்பேர் ஆகிவிட்டது. அதைச் சரி செய்வதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் சரி செய்யப்படும்” என்றார்.

' சுத்தமான கழிப்பிடங்களே நாட்டின் தேவை' என்ற குரல்கள் வலுத்து வரும் வேளையில், கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் பொது வெளியில் ஒதுங்குவதைப் பற்றி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் கவலைப்படுமா?

-ஆ.விஜயானந்த்

குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி தாளாளர்!

பிளஸ் 2 தேர்வும் 'சென்டம்' ரகசியமும்.... குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி தாளாளர்!


பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வு பணிகளை கண்காணிக்கவும் சென்னையில் இருந்து இயக்குநர்கள், இணை இயக்குநர்களை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைப்பது வழக்கம்.

நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகளில், மாணவர்கள் 'மாஸ் காப்பியிங்கில்' ஈடுபடுவதாக நீண்ட நாளாகக் குற்றச்சாட்டு உண்டு. இதற்கிடையே ஈரோட்டில் பிரபலமான ஆதர்ஷ் மற்றும் ஐடியல் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 'பிட்' அடிப்பதாக அப்போதைய இணை இயக்குநரும் தற்போதைய மெட்ரிக் பள்ளி இயக்குநருமான கருப்பசாமிக்கு தகவல் கிடைத்தது.

ஈரோட்டில் உள்ள அந்த பிரபலமான பள்ளிக்கு இணை இயக்குநர் வரும் தகவல் கிடைத்ததும் மாணவர்களுக்கு சிக்னல் கொடுத்தனர், அங்குத் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள். அந்த பள்ளியில் இரு மாடிக்கட்டடங்களிலும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அப்போது அவசர அவசரமாக மாணவர்கள் ஜன்னல் வழியாக பிட்டுகளை தூக்கி எறிந்தனர். அந்த பிட்டுகள் பள்ளி வளாகத்தில் நுழைந்த இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீதே விழுந்ததுதான் வேடிக்கை.

தன் மீது விழுந்த பிட்டு பேப்பர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அந்த இரு பிரபலமான தனியார் பள்ளிகளில் 'மாஸ் காப்பியிங்' நடப்பதாக அரசுத் தேர்வுத்துறைக்கு அறிக்கை அனுப்பியதோடு தனது வேலையை முடித்துக்கொண்டார்.

இது ஒரு புறம் இருக்க, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இனிதே தொடங்கியது. திருச்சி லால்குடியில் ஒரு பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது வேதியியல், இயற்பியல், உயிரியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள்களில், குறிப்பிட்ட 5 மாணவர்கள் 200க்கு 200 மார்க் வாங்கியிருந்தனர். அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களின் விடைத்தாள்களில் இருந்த கையெழுத்து ஒரே மாதிரியாக இருந்ததை விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கண்டுபிடித்தபோதுதான் 'சென்டம்' ரகசியம் அம்பலமானது. அதாவது ஒரே நபரே 5 மாணவர்களுக்கும் விடைத்தாள்களில் விடைகளை எழுதியிருக்கிறார்.

இதில் ஆச்சர்யமான விஷயம்.. ஈரோட்டில் இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீது பிட்டுகளை வீசிய அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் விடைத்தாள்கள்தான் அது என்று தெரியவந்தது. எங்கேயோ உதைக்கிறது, என்று கருதிய அரசு தேர்வுத்துறை, அந்த விடைத்தாள்களை, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பிய போது, அவை ஒரே ஆளால் எழுதப்பட்டு, அந்த 5 மாணவர்களின் விடைத்தாள்களோடு இணைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களை வரவழைத்து தனித்தனியாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, அது தங்களது கையெழுத்து இல்லை, என்று ஒத்துக் கொண்டனர்.



இது தொடர்பாக, இப்போது ஈரோட்டில் பிரபலமான அந்த இரு தனியார் பள்ளிகளில் தேர்வுப்பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி தலைமையாசிரியர் நசீர் உட்பட 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஈரோட்டின் பிரபலமான அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ், பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கட் ஆப் மார்க்கிலும் முதலிடம் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். இதே பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் 'சென்டம்' பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில்‘மெரிட்டில்’ சேர்ந்துள்ளனர்.

இப்போது அந்தப் பள்ளி மாணவர்களின் 'சென்ட்ம்' மார்க் மீது மற்றவர்களுக்கு சந்தேகக் கறை படிய தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விரிவாக விகடன்.டாட் காமில் நேற்று (புதன்) செய்தி வெளியானது. இது தொடர்பாக விளக்கம் கேட்க, ஐடியல் பள்ளி தாளாளர் சிவலிங்கத்தைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததாகவும் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க முன்வந்தால் அதனை பிரசுரிக்க தயாராக உள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் நம்மை தொடர்பு கொண்டு பேசிய ஈரோடு ஐடியல் மற்றும் ஆதர்ஷ் பள்ளியின் தாளாளரான சிவலிங்கம், "எங்கள் பள்ளியில் எந்தத் தவறும் நடக்கவில்லை. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடவில்லை. இப்போது எங்கள் மீது திட்டமிட்டே அதிகாரிகள் பழி சுமத்துகின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக கல்விப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. வீண் வதந்திகளைப் பெற்றோர்கள் நம்ப வேண்டாம். இதற்கு மேல் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

- எம்.கார்த்தி

கபாலி திரைப்படமும், வினுப்பிரியா மரணமும்...!


'அனைத்து சாலைகளும் ரோமில் போய் முடிவடைகின்றன' என்று சொல்வதுபோல், இங்கு அனைத்து உரையாடல்களும் ‘கபாலி’ திரைப்படத்தில் போய்தான் முடிவடைகின்றன. அண்மையில், ஒரு துக்க வீட்டிற்கு சென்று இருந்தபோது கூட இதை உணர முடிந்தது. “நல்ல மனுஷன்... சமூகத்துக்கு எவ்வளவோ செஞ்சு இருக்காரு..” என்று துவங்கிய அந்த உரையாடல், அடுத்துப் பேசியது கபாலி திரைப்படம் பற்றி. “என்னப்பா... கபாலி டிக்கெட் விலை ஆயிரம் ரூபாயாம்ல...” என்று வருந்தினார் அந்த உரையாடலுக்கு உரியவர்.

மிகையாகச் சொல்லவில்லை, உண்மைதான். எப்போதும் நாயகர்களைக் கொண்டாடும் தமிழ் சமூகத்தில், ரஜினி கொண்டாடப்படுவதும், அந்த படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதும் வியப்பில்லை. ஆனால், இந்த கட்டுரை அதன் டிக்கெட் விலை குறித்தானது அல்ல...!

இணையத்தில் கபாலி!

கபாலி டிக்கெட் குறித்த சர்ச்சைகளை விட, அதிகம் ஈர்த்தது கபாலி திரைப்படம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாவதை தடுப்பதற்காக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுதான். இது குறித்த விவாதங்களை நாம் உரிய முறையில் செலுத்தினால், நிச்சயம் ஆரோக்கியமான சட்டத்திருத்தங்களை நம்மால் கொண்டு வரமுடியும். அதன் மூலம் சில உயிர் இழப்புகளையும் தவிர்க்க முடியும்.

சில தினங்களுக்கு முன், கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுகிறார். '"கபாலி திரைப்படம் 3500 பேர் உழைப்பில், 100 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம். ஆனால், அதை வெறும் 20 ரூபாய் செலவில் முறைகேடாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அதனால் இதுபோன்ற திருட்டுகளுக்கு காரணமாக இருக்கும் இணையச் சேவை நிறுவனங்களை முடக்க, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும்" என்கிறார். மேலும் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் 225 இணையதளங்களின் முகவரியையும் தருகிறார். இதனை விசாரித்த நீதிமன்றம், 180 இணையதளங்களுக்கு இடைக்கால தடை விதிக்கிறது.





சரியான நடவடிக்கைதான். இதில் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், இது அனைத்தும் நடந்தது இரண்டு நாட்களில். ஒரு திரைப்படத்தையும், அதன் வணிகத்தையும், அதன் தயாரிப்பாளரையும், 3,500 தொழிலாளர்களின் உழைப்பையும் காக்க நீதிமன்றம் இவ்வளவு துரிதமாக செயல்பட்டு இருக்கிறது.

உண்மையில் இது பாராட்டப்பட வேண்டியதுதான் என்றாலும், இயல்பாக ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதாவது, நூற்றுக்கணக்கான இணையதளங்களை இரண்டு நாட்களில் முடக்க முடியும் என்னும் போது... ஏன் வினுப்பிரியா படம் தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு இணையதள பக்கத்தை முடக்க நான்கு நாட்கள் ஆனது..?

வினுப்பிரியாவின் மரணம்!

வினுப்பிரியாவின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து கடந்த ஜூன் 23 ம் தேதி புகார் அளிக்கப்படுகிறது. காவல் துறை மிக நிதானமாக செயல்பட்டு... இல்லை இல்லை... கிட்டத்தட்ட செயல்படவே இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து முறையிட்டதால், நடவடிக்கை எடுக்க, காவல் துறையின் சைபர் பிரிவு ஒரு கைபேசியை லஞ்சமாக கேட்கிறது. ரூபாய் 2000க்கு ஒரு கைபேசியை வினுப்ரியாவின் தந்தை வாங்கித் தந்த பிறகு,
விசாரணை நத்தை வேகத்தில் ஊர்கிறது. அப்போது, மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகிறது. வினுப்பிரியா மன அழுத்தம் தாங்காமல் ஜூன் 27 ம் தேதி தற்கொலை செய்து கொள்கிறாள்.




இது குறித்து அண்மையில் ஒரு ஆங்கில ஊடகத்தில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ள காவல் துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங், 'காவல் துறை மீதெல்லாம் தவறல்ல. முகநூல் நிறுவனத்திலிருந்து தகவல்களைப் பெற எங்களுக்கு நான்கு நாட்கள் ஆனது’ என்று பொருள் தரும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதே நேரம், காவலர் லஞ்சம் பெற்றதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்தக் கட்டுரையில் காவல் கண்காணிப்பாளர் இவ்வாறாக எழுதி உள்ளார், “ஜூன் 23 ம் தேதி நாங்கள் புகாரைப் பெறுகிறோம். அடுத்த நாள், நாங்கள் அந்த முகநூல் பக்கத்தை முடக்குவதற்கும், அந்தப் படம் எந்த கணினியிலிருந்து பதிவேற்றப்பட்டது என்பதை அறிவதற்கும், இணைய நெறிமுறை முகவரியை (IP address) கேட்கிறோம். ஜூன் 27 ம் தேதிதான் அந்த பக்கம் முடக்கப்படுகிறது. இணைய நெறிமுறை முகவரியும் கிடைக்கிறது. அதன் பின் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளியை கைது செய்கிறோம்” என்கிறார்.





அதாவது, 'காவல் துறை மீது தவறு இருக்கிறது. ஆனால், அது பெரிய தவறு அல்ல. பெரும் தவறு முகநூல் நிர்வாகத்தின் மீதுதான்.' என்பதுதான் அவரது கருத்து.

இதை சரியென்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், இதில் தலையிட்டு, சமூக ஊடகங்களை முறைப்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு...? அரசுடைய, அரசைச் செலுத்தும் அதிகாரவர்க்கத்துடைய பொறுப்புதானே அது...?

ஒரு பிரபலத்திற்கு ஏதாவது பிரச்னை என்றால், அதிவேகமாக இயங்கும் அதிகாரவர்க்கம், சாமான்யனுக்கென்றால் மட்டும் தன் பொறுப்பை தட்டிக் கழிப்பது என்ன நியாயம்...? நாளை இதுபோல் இன்னொரு மரணம் நிகழ்ந்தால், அப்போதும் முகநூல் மேல் மட்டுமேதான் தவறு என்று சொல்லிக் கொண்டிருப்பார்களா...? அப்படி என்றால் எதற்கு அரசாங்கம்....?
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
'ஏன் கபாலிக்கு இவ்வளவு விரைவாக செயல்பட்டீர்கள்...' என்பது எம் கேள்வி அல்ல. நிச்சயம் அது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், அதே நேரம் அனைவரையும் சமமாக மதித்துச் செயல்படுங்கள் என்பதுதான் சாமன்யனின் வாதம்.

அந்த சாமான்யனின் குரலைப் புறக்கணித்து, கடந்து செல்வது... நிச்சயம் ஆரோக்கியமான போக்கல்ல!

- மு. நியாஸ் அகமது

சிவாஜிகணேசன் நினைவு நாள்:

Inline image 1

ஜூலை 21 சிவாஜிகணேசன் நினைவு நாள்:

தமிழர்களின் 50 ஆண்டுகால அடையாளமாகத் திகழ்பவர்களின் பட்டியல் ரொம்பவும் நீளமானது. அதில் சிவாஜி கணேசனும் ஒருவர். சில ஞாபகங்களுக்கு நரைப்பதே இல்லை. சினிமா மட்டுமே நம் மக்களின் பொழுதுபோக்கு, சாயங்கால சந்தோஷமாக இருந்த வேளைகளில் சிவாஜி எனும் கலைஞன் தமிழர்களின் நெஞ்சங்களில் ஏற்படுத்திய பிம்பம் அளவிட முடியாதது.

இன்று 40 வயதைத் தாண்டிய தமிழர்களுக்குள் அந்த பிம்பம் ஏற்படுத் திய விளைவுகள் கலைடாஸ்கோப் புக்கு இணையானது. இதை இன்று தியேட்டரில் படம் பார்த்துக்கொண் டிருக்கும் அந்த நிமிடத்திலேயே ‘படம் மொக்கை’, ‘படம் சூப்பர்’ என்று மெசேஜ் தட்டுகிற, வாட்ஸ்-அப் செய்கிற தலைமுறையினரால் புரிந்துகொள்ள முடியாது.

ஒரு தடவை சிவாஜிகணேசனைப் பற்றி இலக்கிய விமர்சகர் கைலாசபதி ‘‘சிவாஜியின் நடிப்பை எல்லோரும் ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். ஆமாம், அவருடையது ஓவர் ஆக்டிங் தான். ஆனால், அவர்தான் எங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், அப்பர், ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன்’’ என்று குறிப்பிட்டார்.

இதை இங்குப் பதிவு செய்யக் காரணம் உள்ளது. எப்போதும் ஒன்றை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வது என்பது ஒரு பக்கம். விமர்சித்து விலக்கித் தள்ளுவது இன்னொரு பக்கம். இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தும். சிவாஜியும் இந்த வினோதச் சதுரத்துக்குள் கொண்டு வரப்பட்டு இன்று சிவாஜியின் நடிப்பு சிலரால் நகையாடப்படுவதை சிவாஜி ரசிகர்கள் பெருங்கோபத்துடன் எதிர் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத் தில் சிவாஜி எனும் பெருங்கலைஞன் காட்டிய ஜால வித்தையை வேறு எந்தத் தமிழ் கலைஞனாலும் நிகழ்த்த முடியுமா? பத்மினி பரதம் ஆடப் போவதை, அழகு மிளிரும் கோயில் தூண் மறைவில் இருந்து சிவாஜி தலையை மட்டும் நீட்டி பார்த்து ரசிக்க முற்படும்போது அவர் முகத்தில் தோன்றும் கலவையான உனார்ச்சிகளை எந்த மொழியில் பதிவு செய்வது?

1952-ல் ‘பராசக்தி’ படத்தில் சிவாஜியை நடிக்க வைக்க அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆயத்த வேலைகளில் இருந்தபோது, பெருமாள் முதலி யாருக்கு நிதியுதவி செய்ய முன்வந்த ஏவி.மெய்யப்ப செட்டியார் ‘‘இது நடிப் புக்கேற்ற முகம் கிடையாது. வேறு யாரையாவது கதாநாயகனாக்குங் களேன்’’ என்று பெருமாள் முதலியா ரிடம் சொன்னதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டவரல்ல சிவாஜி என்பதற்கு, இது ஒரு வரலாற்று உதாரணம். இப்படித்தான் சிவாஜி எனும் ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் தடைகளை மீறிச் சிறு புள்ளியில் இருந்து ஆரம்பித்திருக்கிறது.

சிவாஜியின் நடிப்பு என்பது காலத்தோடு உறவாடிய ஒரு வெளிப் பாடு. ‘சினிமா என்பது சப்தமல்ல…’ என்பதை 1980-க்கு பிறகுதான் தமிழர்கள் உணரவே ஆரம்பித்தார்கள். அதனை ஆழமாக உணர்த்த கே.பாலசந்தரும், பாரதிராஜாவும், மகேந்திரனும், பாலுமகேந்திராவும் தேவைப்பட்டார்கள். ‘நாடக தாக்கமும், அரங்கமே எதிரொலிக்கும் உரையாடல் உத்தியும் சேர்ந்த கலவைதான் சினிமா…’ என்றிருந்த காலகட்டத்தில் திரையில் தோன்றிய ஒரு கலைஞனை இன்றைய விழுமியங்களுடன் பூதக் கண்ணாடி வைத்து நோக்குவது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?

சிவாஜிக்காகவே கதை பின்னப் பட்டது. அப்படியான திரைக்கதையில் தனக்குரிய பங்கு என்ன என்பதை உணர்ந்து, தனது அனைத்துத் திறமைகளையும் கொட்டினார் சிவாஜி. மேலைநாட்டுத் தாக்கத்தால் நவீன மாயைகளில் சிக்கித் தவிக்கும் மனைவிக்கு வாய்த்த பட்டிக்காட்டு கணவனாக அவர் தோன்ற வேண்டிய திரைக்கதையில் அவர் அந்த ஜோடனைகளுடன் கூடிய கட்டுக் குடுமியுடன் வந்து கலக்குவார் ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில். ‘அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி…’ என்று அவர் ஆடிப் பாடுவதை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது.

நம்பகமான நடிப்புத் திறன்

‘சம்பூரண ராமாயணம்’ என்ற புராணப் படத்தில் பரதனாக வருவார் சிவாஜி. பொதுவாக புராணக் கதைகள் அத்தனையுமே கற்பனையின் அதீதத் தில் உருவானவைதான். அன்றைய கதைசொல்லிகளின் கற்பனை பாதை வழியே சென்றுதான் அந்தக் கதாபாத்திரங்களை நம் மனதில் உருவேற்றிக்கொள்ள முடியும். உண்மையிலேயே பரதன் என்பவன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நம்மை நம்ப வைக்கும் முயற்சியில் பெரிய வெற்றி பெற்றிருப்பார் சிவாஜி.

சினிமாவில் அப்பாவாக, அண்ண னாக, கணவனாக, முதலாளியாக, வேலையாளாக, திரைக்கதையில் வலம் வரும் நடிகர்கள் தன்னை உருமாற்றி, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உணர்ச்சியை தன் முகபாவனை களால் காட்ட வேண்டிய கட்டாயம். சிவாஜி அதில் பன்முகத் திறன் பெற்றவராக ஒளி வீசினார்.

“ராஜராஜ சோழன் சிவாஜி கணேசனாக நடித்த ‘ராஜராஜ சோழன்’ படம் பார்த்தேன்’’ என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்தது நேற் றைய ஆவணம். இன்றைய கோலிவுட் சரித்திரம்!

ரசிகர்களை நெருங்கும் ஆற்றல்

‘பூமாலையில் ஓர் மல்லிகை, இங்கு நான்தான் தேன் என்றது’ என்று திரையில் சிவாஜி பாடி ஆடியபோது அன்றைய ரசிகர்கள் அதில் தன் முகம் பார்த்துக்கொண் டார்கள்.

‘மலர்ந்து மலராத பாதி மலர் போல’ என்று சிவாஜி கசிந்துருகிய போது ரசிகர்கள் தங்கள் பாச உணர்ச்சியில் கண்களைத் துடைத் துக்கொண்டார்கள்.

‘என் தேவையை யார் அறிவார்? உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்று செல்லம்மாவைப் பார்த்து பிரஸ்டீஜ் பத்மநாபன் பாடியபோது, காதில் சிகை முளைத்த ஒரு அக்ரஹாரத்து மனிதர் ஞாபகத்தில் மின்னி மறைந்தார்.

ஓவியங்களில் ‘போர்ட்ரெய்ட்’ என் கிற ஓவிய வகை உண்டு. நவீன ஓவியங் களுடன் பயணிக்கிற ரசிகர்களுக்கு ‘போர்ட்ரேய்ட்’ ஓவியத்தை அவ்வள வாகப் பிடிக்காதுதான். ஆனால், நம் அப்பாவை, நம் அம்மாவை, நம் அண்ணனை, நம் காதலனை நவீன ஓவியங்களில் வரைந்து வைத்துக் கொண்டு ரசிக்க அவ்வளவாகப் பிடிக்காதுதானே!

ஒருமுறை சிவாஜிகணேசனைப் பற்றி கமல்ஹாசன் “சிவாஜி சிங்கம் போன்றவர். அவருக்கு தயிர் சாதத்தை வைத்துச் சாப்பிட சொல்லிவிட்டோம்” என்றார். எவ்வளவு உண்மை அது!

Wednesday, July 20, 2016

விவாதம்: பயணங்களும் பாதுகாப்பானவை இல்லையா? பிருந்தா சீனிவாசன்


விவாதம்: பயணங்களும் பாதுகாப்பானவை இல்லையா?
பிருந்தா சீனிவாசன்


பொதுப் போக்குவரத்துகளில் எதிர்கொள்ளும் சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல்தான் பலரும் தனியார் நிறுவனங்களின் சேவையை நாடுகின்றனர். வாடகை கார், ப்ரீபெய்ட் டாக்ஸி, ஆட்டோ போன்றவற்றில் பெண்களுக்குக் குறைந்தபட்ச பாதுகாப்பாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்கின்றன அடிக்கடி கேள்விப்படுகிற தகாத நிகழ்வுகள். சமீபத்திய உதாரணம் சென்னையைச் சேர்ந்த விலாசினி ரமணிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்.

இரவு நேரத்தில் தனியார் நிறுவனத்தின் காரில் தனியாகப் பயணம் செய்திருக்கிறார் விலாசினி. ஓட்டுநர் காரை அதிவேகத்தில் இயக்க, கொஞ்சம் பொறுமையாக ஓட்டச் சொல்லியிருக்கிறார். அதற்குத் தகாத வார்த்தைகளில் பேசியதோடு நில்லாமல், பாதி வழியில் இறக்கியும் விட்டுவிட்டார் ஓட்டுநர். வேறொரு ஆட்டோ பிடித்து பயணித்தவரைப் பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்தியிருக்கிறார்.

தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற பயத்துக்கு நடுவே காவல்துறையின் உதவியை அவர் நாடியிருக்கிறார். அங்கேயும் அவருக்கு அலைக்கழிப்புதான் மிச்சம். இது எங்கள் எல்லைக்குள் வரவில்லை என்று மாற்றி மாற்றி இரண்டு காவல்நிலையங்களுக்கு அலையவைத்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நாளிதழ் மூலமாகவும் இந்தப் பிரச்சினை வெளியே தெரிந்தபிறகுதான் காவல்துறை புகாரை ஏற்றிருக்கிறது.

இதே போன்றதொரு சம்பவம் தன் மனைவிக்கு நேர்ந்ததாகச் சொல்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர். பயணம் இணக்கமாக இல்லாததால் பதிவுசெய்த வண்டியை ரத்து செய்ததற்காகத் தன் மனைவி தகாத வார்த்தைகளால் தாக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது பயணங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பானவை இல்லையா என்ற கேள்விதான் முதலில் எழுகிறது.

நீ ஏன் தனியாகப் பயணம் செய்தாய்? இரவு நேரப் பயணம் தேவையா? துணைக்கு யாரையாவது அழைத்துச் சென்றிருக்கலாமே? ஓட்டுநர் என்ன பேசினாலும் அமைதியாக இருக்க வேண்டியதுதானே? ஏன் எதிர்த்துப் பேசி ஒரு ஆணின் கோபத்தைக் கிளற வேண்டும்? இப்படிப் பெண்களைக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, இதற்கான தீர்வு என்ன என்பதை நோக்கி நகர்வதில்தான் பெண்களின் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது. காரணம், மேலே குறிப்பிடப்பட்ட கேள்விகள் எழ வாய்ப்பில்லாத பயணங்களின் போது பெண்கள் மிகப் பாதுகாப்பாக பயணிக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.

இப்படிப் பயணங்களின்போது எதிர்பாராமல் நடக்கிற அச்சுறுத்தல்களையும் வன்முறைகளையும் எப்படிக் கையாள்வது என்ற பதற்றமும் அச்சமும் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படுவது இயல்பு.

நிறுவனங்களின் பங்கு என்ன?

தங்கள் நிறுவனத்தின் வாகனங்களில் பயணம் செய்கிற பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கடமை இல்லையா? தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்தில் ஆபத்துக் காலங்களில் அழைப்பதற்கென்று ஏதாவது தனிப்பட்ட பொத்தான் வசதியோ, எச்சரிக்கை மணியோ வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்க வேண்டாமா?

இக்கட்டான நேரங்களில் பெண்கள் காவல் துறையை நாடும்போது காவல்துறையின் அணுகுமுறை எல்லா நேரங்களிலும் அனுசரணையாக இருப்பதில்லை. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல்களின்போதுகூடப் புகாரை ஏற்றுக்கொள்வதிலோ அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதிலோ காவல் துறை சுணக்கம் காட்டினால் பெண்கள் எங்கே செல்வது? காவல் துறையின் விரைவான செயல்பாடுதானே அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்?

பயிற்சி தேவை

பெண்களிடம் கண்ணியக் குறைவாக நடந்துகொள்கிற ஓட்டுநர் தண்டனை பெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவரைப் போல இன்னும் சில நூறு ஓட்டுநர்கள் உருவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வாடகை கார் ஓட்டுநர்களுக்கு இங்கே போதுமான பயிற்சி அளிக்கப்படுகிறதா? பயணிகளிடம், அதுவும் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது ஓட்டுநர் உரிமத்துக்கு இணையான முக்கிய அம்சம் அல்லவா? பெண் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து ஓட்டுநர்களுக்கு வழிகாட்டுதலோ ஆலோசனையோ வழங்கப்படுகிறதா? நிறுவனங்களின் சார்பில் நடக்கும் போக்குவரத்துச் சேவையிலேயே இந்த நிலை என்றால் தனிநபர்களின் வாடகை வண்டிகளில் கிடைக்கக்கூடிய பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?

இப்படிப்பட்ட கேள்விகளுக் கிடையேதான் பெண்களின் பாதுகாப்புக்கான விடை பொதிந்திருக்கிறது.

நீங்க என்ன சொல்றீங்க?

வாசகர்களே, பயணங்களின் போது சந்திக்கிற அச்சுறுத்தல்களைப் பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்? பாதுகாப்பான பயணத்துக்கு வழி என்ன? இந்தப் பிரச்சினையில் உங்கள் அனுபவம் என்ன? போக்குவரத்துச் சேவை நிறுவனங்களின் பங்கு, காவல் துறையின் கடமை பற்றியெல்லாம் உங்கள் கருத்து என்ன? பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

Tuesday, July 19, 2016

பாரதிராஜா

பாரதிராஜா 10

இயக்குநர் பாரதிராஜா
தமிழ் சினிமாவின் ‘திருப்புமுனை’ இயக்குநர் என போற்றப்படும் பாரதிராஜா (Bharathiraja) பிறந்தநாள் இன்று (ஜூலை 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* தேனி அல்லி நகரில் (1941) பிறந்தவர். இயற்பெயர் சின்னச்சாமி. சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தார். பெரியவர்களுடன் சேர்ந்து வேட்டைக்குச் செல்வதில் இவருக்கு அலாதி ஆசை. சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் ஆர்வமும் பற்றிக்கொண்டது.

* விளையாட்டுப் பருவம் முடிந்ததும், நாடகம் எழுதுவது, இயக்குவது, நடிப்பதில் கவனம் திரும்பியது. ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ ஆகிய நாடகங்களை எழுதி, அவ்வப்போது திருவிழா மேடைகளில் அரங்கேற்றினார். சுகாதார ஆய்வாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.

* சினிமா மோகத்தில், அரசு வேலையை உதறிவிட்டு, சென்னைக்குப் புறப்பட்டார். உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, தாய் மட்டும் ஆசி கூறி அனுப்பிவைத்தார். மேடை நாடகம், வானொலி நிகழ்ச்சி, பெட்ரோல் பங்க் என பல்வேறு வேலைகளை செய்துகொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

* சென்னையில் இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ் ஆகியோர் ஆரம்ப காலத்தில் ஒரு சிறிய வீட்டில் இவருடன் சேர்ந்து தங்கியிருந்தவர்கள். இவரது நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்தது. இயக்குநர் பி.புல்லையாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் சேர்ந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றார்.

* 1978-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘16 வயதினிலே’, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். அதுவரை ஸ்டுடியோவுக்குள் மட்டுமே சுழன்ற கேமராக்களை, கிராமங்களை நோக்கிப் படையெடுக்க வைத்தார். முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றியை சாதித்துக் காட்டியவர்.

* தொடர்ந்து இவர் இயக்கிய ‘சிகப்பு ரோஜாக்கள், ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த படைப்புகள்.

* தமிழ், தெலுங்கு, இந்தியில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பாக்யராஜ், ராதிகா, மணிவண்ணன், நெப்போலியன், நிழல்கள் ரவி, விஜயசாந்தி, ரோகிணி, கவுண்டமணி, கார்த்திக், ரேவதி உள்ளிட்ட பலரை அறிமுகம் செய்தவர்.

* ‘தாஜ்மஹால்’, ‘கருத்தம்மா’, ‘அல்லி அர்ஜுனா’ ஆகிய படங்களைத் தயாரித்தார். சிறப்பாக ஓவியம் வரைவார். காட்சி அமைப்புகளை வரைந்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஓவியத் திறன் பெற்றவர்.

* இவரது ‘முதல் மரியாதை’ படம் 1986-ல் தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தன் தாய் கருத்தம்மாவின் பெயரில் வெளிவந்த படத்துக்கான தேசிய விருதை தன் தாயையே பெற்றுக்கொள்ள வைத்தார். பத்மஸ்ரீ, 6 முறை தேசிய விருதுகள், 3 முறை மாநில அரசு விருதுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ‘நந்தி’ விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

* தனது நீண்டகால கனவுத் திரைப்படம் என இவர் குறிப்பிடும் ‘குற்றப் பரம்பரை’ வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். ‘இயக்குநர் இமயம்’ என போற்றப்படும் பாரதிராஜா இன்று 75-வது வயதை நிறைவு செய்கிறார்.

ஆயுள் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவித்தால் போதும்: உச்ச நீதிமன்றம்


THE HINDU

குற்றவாளிக்கு வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவித்தால் போதுமானது. அதை அவர் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டியது இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சில வழக்குகளில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையோ அல்லது அதற்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனையோ வழங்கப்படுவது உண்டு. அவ்வாறாக வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளை குற்றவாளி எதிர்கொள்ளும் முறையை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையில் நீதிபதி எப்.எம்.ஐ.கலிபுல்லா, ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஒரு வழக்கிலோ அல்லது பல்வேறு வழக்குகளிலோ தொடர்புடைய குற்றவாளி ஒருவர், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை எப்படி அனுபவிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலானது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "விசாரணை நீதிமன்றங்களோ அல்லது உயர் நீதிமன்றங்களோ குற்றத்துக்கான தண்டனைக் காலத்துடன் ஆயுள் தண்டனையையும் சேர்த்து விதித்திருந்தால், அந்த தண்டனைகளை ஏக காலத்தில் குற்றவாளி அனுபவித்தால் போதுமானது எனத் தீர்ப்பளித்தனர்.

அதாவது, ஒருவருக்கு ஒரு வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், அத்துடன் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டால், அவர் இரண்டையும் ஒரே காலகட்டத்தில் அனுபவிப்பார். முதலில் 5 ஆண்டு சிறைத் தண்டனை; பின்னர் ஆயுள் தண்டனை எனப் பிரித்து அனுபவிக்கத் தேவையில்லை.

குறள் இனிது:

குறள் இனிது: சுமாரா வேலை செய்யலாமா குமாரு?

சோம.வீரப்பன்

நான் சென்னையில் 1977ல் வங்கியில் பணி யாற்றிய பொழுது கருப்பையா எனும் பியூன் எனது கிளையில் வேலை செய்தார். பெயர் பிடிச்சிருக்கா?
7ஆம் வகுப்பு வரை தான் படித்தவர் என்றாலும் வேலையில் கில்லாடி. டெஸ்பாட்ச் எனும் தபால் அனுப்பும் வேலை. தினமும் சுமார் 150 கவர் அனுப்ப வேண்டும். மனுஷன் ஏதோ குஸ்தி சண்டையில் எதிரியைக் கையசைத்து அழைப்பது போல ‘கொடுங்க, கொடுங்க' என்று எல்லோரது இருக்கைக்கும் அவரே சென்று கவர்களை வாங்கிச் செல்வார்!
சென்னையில் வாடிக்கையாளர் திங்கள் மாலை 4.30 க்கு சேலம் காசோலையைக் கொடுத்தால், அன்றே அதை எங்களது சேலம் கிளைக்கு அனுப்பி விடுவோம். அவர்களும் அதை செவ்வாயன்றே கிளியரிங்கில் எஸ்பிஐ-க்கு அனுப்பி அது பணமாகி விட்ட விபரத்தை உடனே தபாலில் அனுப்புவார்கள். இல்லாவிட்டால் நம்ம கருப்பையா தொலைபேசியில் துளைப்பாரே!
அப்புறம் என்ன, துறுதுறு கருப்பையா சென்னையில் தானே இருந்தார். காலை 10.30க்கே தபாலைப் பிரித்து வாடிக்கையாளரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விடும்.
அதாவது திங்கள் மாலை சென்னையில் செலுத்தப்பட்ட காசோலை புதன் காலையே பணமாகிவிடும். எல்லாப் புகழும் கருப்பையாவிற்கே!
இதில் வேடிக்கை என்னவென்றால் சென்னையில் எங்கள் கிளைக்கு எதிரிலேயே இருக்கும் வங்கிக் காசோலையை திங்கள் மாலை வாடிக்கையாளர் கொடுத்தால் அது செவ்வாயன்று உள்ளூர் கிளியரிங்கில் ஆர்பிஐக்குப் போகும். பின் புதனன்று காசோலை திரும்பவில்லை என்பதறிந்து வியாழக்கிழமை தான் பணமாகும்!
அடிப்படையில் கருப்பையாவிற்கு வேலை செய்வது ரொம்பப் பிடிக்கும். பெரிய கடனுக்கான விண்ணப்பப் படிவங்களைக் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமெனில், இரவு 7, 8 மணியானாலும் காத்திருந்து பேப்பர்களை எல்லாம் அடுக்கி, கனத்த நூல் போட்டுக் கட்டிக் கவரில் போட்டு அனுப்பி விட்டு உளம் புளகாங்கிதம் அடைவார்! ஒப்புதல் வந்துவிட்டால் கடன் வாங்குபவரை விடவும் அதிகம் மகிழ்வார்!
‘மகத்தான பணி செய்ய ஒரே வழி செய்யும் காரியத்தை நேசிப்பது தான்' என்று ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது சரிதானே!
அண்ணே, பணியாளர்களை இருவகைப்படுத்தலாம். மகிழ்ச்சியாக உத்வேகத்துடன் பணி செய்வோர் ஒரு ரகம். வேண்டா வெறுப்பாய், அலட்சியமாய் வேலை செய்பவர்கள் மற்றொரு ரகம்!
கருப்பையா தம் பணியில் காட்டிய ஆர்வத்தினால் அவரை வங்கியில் எல்லோரும் கொண்டாடினர். பல கிளைகளின் மேலாளர்களும் அவரைத் தம் கிளைக்கு மாற்றுமாறு கேட்டனர். உயரதிகாரிகளுக்கு மேலாளர்களைத் தெரிகிறதோ இல்லையோ, கருப்பையாவை நன்கு தெரியும்! வாடிக்கையாளரில் பலர் எங்கள் வங்கியை ‘கருப்பையா வங்கி' என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர்!
படிப்போ பதவியோ கொடுக்க முடியாத பெருமையை அவரது கடமை மறவாமை கொடுத்து விட்டது!
செய்ய வேண்டிய கடமையை அலட்சியப் படுத்துகிறவர்களுக்குப் புகழ் வாழ்வு இல்லை. இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்துமென்கிறார் வள்ளுவர்.
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு (குறள்: 533)

Monday, July 18, 2016

'நர்சிங் கவுன்சலிங் கனவு நிறைவேறுமா?' -அகதிகளின் கண்ணீர் கோரிக்கை

vikatan news

நர்சிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க இருக்கிறது. 'பொறியியல் படிப்புகளுக்கு அனுமதி கொடுத்ததைப் போலவே, மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான கவுன்சலிங்கில் அகதி மாணவர்கள் பங்கேற்பதற்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கின்றனர் இலங்கை அகதிகள்.

தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டுக்கு முன்பு வரையில், இலங்கை அகதிகளின் பிள்ளைகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவர் நாகராஜின் கோரிக்கை மூலம்தான் அதற்கு விடிவு பிறந்தது. பிளஸ் 2 படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நாகராஜால் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை. இந்த விவகாரத்தை முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் வழக்கறிஞர் சிவக்குமார். இதையடுத்து, பொறியியல் விண்ணப்பப் படிவத்தில் இலங்கை அகதிகளுக்கு என தனி இடத்தை உருவாக்கிக் கொடுத்தார் கருணாநிதி. இதனால், நாகராஜைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பொறியியல் கனவுகள் நிறைவேறின. ஆனால், மருத்துவம், நர்சிங், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, இந்த மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு உயர்கல்வி கனவுகளோடு 75-க்கும் மேற்பட்ட அகதி மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சிவக்குமார், " தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் ஒன்றரை லட்சம் இலங்கை அகதிகள் வாழ்கின்றனர். இவர்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் முதல்வர். பிரதமர் மோடியை சந்தித்தபோது, ' இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். பொறியியல் படிப்புகளில் அகதிகள் பங்கேற்க எவ்விதத் தடையுமில்லை. ஆனால், தற்போதுள்ள காலகட்டத்தில் பொறியியல் படிப்பை விடவும், மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட பாடப் பிரிவுகளை எடுத்துப் படித்தால், நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

பொறியியல் படிப்புகளுக்கு சுமார் நான்கு லட்ச ரூபாய் வரை செலவாகிறது. அதற்கேற்ப அவர்களுக்கு வசதியுமில்லை. நர்சிங் பிரிவுகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தாலே, அதன்மூலம் தனியார் கல்விக் கூடங்களில் அவர்கள் சேர்ந்து படிக்க முடியும். தற்போது மருத்துவக் கலந்தாய்வில் அரசுக்கான இடங்கள் பெருமளவில் நிரப்பப்பட்டுவிட்டன. வரும் நாட்களில் நர்சிங் கவுன்சலிங் நடக்க இருக்கிறது. அதற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறோம். இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கும் உயர்கல்வித் துறை அமைச்சரின் கவனத்திற்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். நர்சிங் கலந்தாய்வு தொடங்குவதற்குள், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என முகாம்களில் உள்ள அகதி மாணவர்கள் காத்திருக்கிறார்கள்" என்றார் கவலையோடு.

ஆந்திரா, கேரளாவில் பிளஸ் 2 முடித்துவிட்டு, தமிழக அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேரக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்து முடித்த அகதி மாணவர்கள், அரசின் கண்ணசைவுக்காக காத்திருக்கிறார்கள்.

'அ.தி.மு.க. பிரமுகரிடமிருந்து செத்துப் பிழைத்து வந்தேன்!' - ஒரு இன்ஸ்பெக்டரின் குமுறல்!

VIKATAN NEWS

வேலூர்: மணல் கடத்தல் லாரியை பிடிக்கப்போன சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளரை, லாரி உரிமையாளரான அ.தி.மு.க. பிரமுகர் ஜி.ஜி.ரவி, தனக்கு சொந்தமான கல்லூரியில் வைத்து தாக்கியதில் ஆய்வாளர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம், வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி. இவர், நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெருமுகை அருகே, ஒரு லாரி போலீஸ் வாகனத்தை பார்த்தவுடன் வேகமாக திரும்பிச் சென்றுள்ளது. அதனை தனது ஜீப்பில் விரட்டிப் பிடிக்க ஆய்வாளர் பாண்டி முயன்றுள்ளார். அந்த லாரி, பிள்ளையார் குப்பத்தில் உள்ள ஜி.ஜி. ஆர். பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்திருக்கிறது.

அங்கு சென்ற காவல் துறை ஆய்வாளரை, உள்ளே விடாமல் அங்கிருந்தவர்கள் கேட்டை இழுத்துப் பூட்டி உள்ளனர். அவர்களிடம் வாக்குவாதம் செய்து உள்ளே நுழைந்த ஆய்வாளர், லாரி டிரைவரை தேடி உள்ளார். அப்போது, அங்கு வந்த கல்லூரி தலைவரும், அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகருமான ஜி.ஜி.ரவி, ஆய்வாளர் பாண்டியின் சட்டையைப் பிடித்து வெளியே போகுமாறு கூறி இருக்கிறார்.

என்ன நடந்தது என்று ஆய்வாளர் பாண்டியிடம் கேட்டோம். "நேற்று இரவு நானும் ஒரு ஏட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு லாரி எங்கள் வண்டியை பார்த்துவிட்டு பின்வாங்கி வேகமாக திரும்பிப் போனது. அந்த லாரியை சந்தேகப்பட்டு விரட்டிச் சென்றோம். அது ஒரு பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்தது. முதலில் அந்தக் கல்லூரி யாருடையது என்று எனக்கு தெரியவில்லை.

அந்த கல்லூரிக்குள் நாங்கள் நுழைந்து லாரியை தேடினோம். மணல் லோடுடன் அந்த லாரி அங்கு நின்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த ரவி 'யாரோட லாரியை பிடிக்க வர்ற. நாங்கதான் இப்ப கவர்மெண்ட். மரியாதையா வெளிய போ, இல்லைனா இங்கயே புதைச்சுடுவேன்னு' சொல்லி என்னை தள்ளினார். அதில் என் சட்டை 'நேம் பேட்ஜ்' உடைந்துவிட்டது. ஆனாலும் நான், 'போக முடியாது, லாரியையும் டிரைவரையும் அனுப்புங்க' ன்னு சொன்னேன்.

அவர் உடனே அடியாளுங்களுக்கு குரல் கொடுத்தார். இருபது, முப்பது அடியாட்கள் கட்டை, கம்போடு கல்லூரிக்குள்ளே இருந்து வந்து என்னை சூழ்ந்து கொண்டார்கள் . நானும் ஒரு போலீசும் மட்டும் போனதால அவங்கக்கிட்ட மாட்டிக்கிட்டோம். ஆனாலும் வாக்கி டாக்கயில ஃபோர்ஸை அனுப்பச் சொன்னேன். வேலூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீஸ் ஃபோர்ஸ் வந்ததால, நான் உயிரோட வர முடிஞ்சது. ஒரு போலீசா இருந்துக்கிட்டு இப்படிச் சொல்றது எனக்கே அசிங்கமா இருக்கு. கட்சி பேரை இப்படி தப்பா பயன்படுத்திக் கொள்ளை அடிக்கிறாங்க" என்றார் குமுறலோடு.

ஜி.ஜி.ரவி மீது ஆய்வாளர் பாண்டி அளித்த புகார் குறித்து நேற்று மாலை வரை வழக்குப் பதியவில்லை. அதன் பிறகே கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளின் கீழ், ஜி.ஜி.ரவி மீது போலீசார் வழக்குப் போட்டு வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, ஜி.ஜி. ரவி தரப்பினரும் பதிலுக்கு ஆய்வாளர் பாண்டி மீது, குடித்துவிட்டு கல்லூரிக்குள் வந்து தகராறு செய்ததாக புகார் அளித்து இருக்கின்றனர்.

காவல்துறை அதிகாரி ஒருவரே அ.தி.மு.க. பிரமுகரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம், போலீஸ் வட்டாரத்தில் மட்டுமல்லாது பொதுமக்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



- அ.அச்சணந்தி

உயர் நீதிமன்றம் உத்தரவு

மனநல காரணம் கூறி மனைவிக்கு ஜீவனாம்சம் மறுக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மனநலம் சரியில்லை என்று கூறி மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க மறுக்கக்கூடாது எனஉயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜீவனாம்சம் கேட்டு ரேவதி, நாங்குநேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் முடிவில் மனைவி மற்றும் மகனுக்கு தலா ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சமாக வரதராஜன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து வரதராஜன் நெல்லை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், தனது மனைவிக்கு மனநலம் சரியில்லாத காரணத்தால் ஜீவனாம்சம் வழங்க இயலாது என்று குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மனைவிக்கு மனநலம் சரியில்லை என்று கூறி அவருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ரேவதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு:
மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றோ, மனநலம் சரியில்லை என்றோ சாதாரண ஒரு காரணத்தை கூறி ஜீவனாம்சம் வழங்க கணவன் மறுக்கக்கூடாது.
இந்த ஒரே காரணத்துக்காக மனைவியை, கணவர் கைவிட முடியாது. மனைவி நல்ல மனநலத்துடன் இருந்தாலும் சரி, மனநலம் சரியில்லாமல் இருந்தாலும் சரி, திருமணம் முடிந்ததுமே கணவன் தனது மனைவியை பராமரிக்க வேண்டும் என்ற நடைமுறை நீண்டகாலமாகவே உள்ளது.
மனைவி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியது கணவனின் கடமை. எனவே, மனுதாரருக்கு அவரது கணவர் நியாயமான தொகையை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். மனநலம் சரியில்லை என்பதால் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என்ற திருநெல்வேலி நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரர், அவரது குழந்தை ஆகியோருக்கு தலா ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று நாங்குநேரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, இருவருக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும என மறக்கடிக்கப்படுகிறது. இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளான 3.1.2014 முதல் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ அறிவிப்பு

பலத்த மழை பெய்தாலும் திட்டமிட்டபடி மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 24-ம் தேதி நடக்கும்: சிபிஎஸ்இ அறிவிப்பு


பலத்த மழை பெய்தாலும் திட்ட மிட்டபடி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெறும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) வரும் 24-ம் தேதி நாடுமுழுவதும் நடக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு நடத்துகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கேரளா மற்றும் வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், திட்டமிட்டபடி தேர்வு நடக்குமா அல்லது தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதா என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய இடை நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஜூலை 24-ம் தேதி நடக்கிறது. அப்போது பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். பலத்த மழை பெய் தாலும் தேர்வு திட்டமிட்டபடி நடை பெறும். அதனால் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் முன்கூட்டியே சென்று தேர்வு மையம் எங்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வானிலை நிலவரம், போக்குவரத்து, தேர்வு மையத்தின் இடம் உள்ளிட்ட அம்சங்களை கணக்கில் கொண்டு மாணவர்கள் முன்கூட்டியே வீட்டில் இருந்து புறப்பட வேண்டும். வெளியூர்களை சேர்ந்த மாணவர் கள் எந்த பகுதியில் தேர்வு மையம் அமைந்திருக்கிறதோ, அந்த பகுதிக்கு முன்கூட்டியே சென்று விட வேண்டும். காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு மையத் திற்கு வரும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக் கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Sunday, July 17, 2016

சவ்கார்பேட் ஆவோஜி... பாவ் பாஜி... வாவ் ஜி!

சவ்கார்பேட் ஆவோஜி... பாவ் பாஜி... வாவ் ஜி!


சென்னையின் சவுகார்பேட்டைக்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுபவை அங்கேயிருக்கும் தெருவோர உணவுச் சந்தைகள். இவற்றை சென்னைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும், நம்ம ஊர் உணவுப் பிரியர்களுக்கும் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு முயற்சி எடுத்திருக்கிறது ‘ஸ்டோரி டிரெயில்ஸ்’ (Story Trails) நிறுவனம். அதன் விளைவுதான் இரண்டு மாதங்களாக அந்நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கும் ‘ஃபுட் டிரெயில்’ (Food Trail). அப்படியொரு சனிக்கிழமை மாலை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ‘ஃபுட் டிரெயி’லில் கலந்துகொண்ட அனுபவம் சுவையானது மட்டுமல்ல; சுவாரஸ்யமானதும்கூட.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மின்ட் தெருவில் உள்ள சின்னக்கடை மாரியம்மன் கோயிலிலிருந்து ஏழு பேர் அடங்கிய குழுவுடன் தொடங்கியது அந்த உணவு உலா. இந்த உலாவின் ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மி ஒரு கதைசொல்லி. அதனால், எங்கள் அனைவருக்கும் முதலில் உணவின் வரலாற்றைச் சுவையாகச் சொன்னார். பின்னர்தான், உணவுகளைச் சுவைக்க அழைத்துச் சென்றார். சவுகார்பேட்டையின் தெருக்களில் எப்போதுமே மக்கள் சுறுசுறுப்பாக நடமாடிக்கொண்டிருப்பார்கள். அந்தச் சத்தத்தில் உணவுக் கதைகளை நாம் ‘மிஸ்’ பண்ணிவிடக் கூடாது என்பதற்காக அவர் பேசுவதைக் கேட்பதற்கு ஆரம்பத்திலே நமக்கு ஒரு ‘இயர்பீஸ்’ கொடுத்துவிடுகிறார் லக்ஷ்மி.

ஜார்ஜ் டவுனின் வரலாறு, ராஜஸ்தான், குஜராத்திலிருந்து எப்படி மக்கள் இங்கே வந்து குடியேறினார்கள், சவுகார்பேட்டையின் பெயர்க் காரணம், அந்த மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் என எல்லாவற்றையும் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை லக்ஷ்மி கொடுத்த பின் தொடங்குகிறது உணவு உலா.

# மன்சூக்லால் மிட்டாய்வாலா

உணவு உலாவில் நாங்கள் சென்ற முதல் இடம் ‘மன்சூக்லால் மிட்டாய்வாலா’ கடை. அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார் லக்ஷ்மி. “1946-லிருந்து செயல்படும் இந்தக் கடையின் இனிப்புகள் இங்கே ரொம்பப் பிரபலம். அதுவும் இந்தக் கடையில் தயாரிக்கும் ‘துதி அல்வா’வுக்கு (சுரைக்காய் அல்வா) நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அத்துடன், ‘மேதி பூரி’ (வெந்தயக்கீரை தட்டை), ஷக்கர் பாரா (சர்க்கரையும் மைதாவும் கலந்து செய்யப்படும் பதார்த்தம்) போன்ற இனிப்பு வகைகளும் இந்தக் கடையின் சிறப்பு” என்று சொல்லி நமக்கு அவற்றை வாங்கித் தருகிறார் அவர்.

# நோவல்டி டீ ஹவுஸ்

அங்கிருந்து நாம் சென்ற அடுத்த கடை ‘நோவல்டி டீ ஹவுஸ்’. இந்தக் கடையின் தேநீர் சிறப்பானது. ஆனால், இந்தக் கடையில் நமக்கு ‘பாவ் பாஜி’யைப் பரிந்துரைக்கிறார் லக்ஷ்மி. உண்மையிலேயே சுவையான ‘பாவ் பாஜி’தான். நம்ம ஊருக்கு ‘பாவ் பாஜி’யும், ‘வடா பாவ்’வும் எப்படி வந்தன என்று லக்ஷ்மி சொன்ன கதையைக் கேட்டுக்கொண்டே ‘பாவ் பாஜி’யை அனைவரும் சாப்பிட்டோம். அதற்குள் குழுவிலிருந்த ஒருவர் தேநீரைச் சுவைக்க ஆசைப்பட, அதை ஆர்டர் செய்தார் லக்ஷ்மி. தேநீர் வருவதற்குள் அதன் வரலாற்றைச் சொல்லிமுடித்தார்.



# ஜெய் ஸ்ரீ வைஸ்னவாஸ்

என்னதான் குஜராத்தி, ராஜஸ்தானி உணவு என்றாலும் நம்ம ஊர் இட்லியில்லாமல் ஓர் உணவு உலா இருக்க முடியுமா? அதுவும் சாதாரண இட்லி அல்ல. ‘தட்டு இட்லி!’ ஜெய்  வைஸ்னவாஸ் கடையிலிருந்து லக்ஷ்மி அதை வாங்கிவந்தவுடன் குழுவினர் அனைவரும் உற்சாகமாகிவிட்டனர். இட்லி பொடி தூவி, நெய்யில் மிதந்த அந்தத் தட்டு இட்லியை சாம்பார், சட்னியுடன் சுவைத்த எல்லோருக்கும் அப்படியொரு திருப்தி. நாங்கள் அனைவரும் இட்லியைச் சுவைப்பதில் பிஸியாக இருந்தாலும், விடாமல் எங்களுக்கு இந்தோனேஷியாவிலிருந்து இட்லி இங்கே பயணமாகிவந்த கதையையும், மராட்டிய மன்னர் சாம்பாஜியின் பெயரை சாம்பாருக்கு வைத்ததன் பின்னணியையும் சொல்லி முடித்தார் லக்ஷ்மி.

# ஜக்துஷா

தட்டு இட்லியைச் சுவைத்தபின் நாங்கள் அடுத்துச் சென்ற இடம் ஜக்துஷா. அங்கே நாங்கள் சுவை பார்ப்பதற்காகக் காத்திருந்தன ‘முறுக்கு சாண்ட்விச்’சும் குலாப் ஜாமூனும். “இப்போது அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சாட் உணவு வகைகளில் ‘முறுக்கு சாண்ட்விச்’சுக்கு முக்கிய இடமுண்டு. ஒரு தென்னிந்தியாவின் தின்பண்டத்தை வைத்து உருவாக்கியதால் நம்ம உள்ளூர் மக்களுக்கு இது பிடித்துவிட்டது. அத்துடன், கைமுறுக்கு என்பது நம்ம மக்களின் பாரம்பரியத் தின்பண்டங்களில் ஒன்று. திருமணமாகிச் செல்லும் பெண்ணுக்குச் சீதனமாகக் கொடுக்கப்படுபவை முறுக்குகள். அவற்றின் சுற்றுகளைப் பெருமையாகக் கருதிய காலமும் உண்டு. கிட்டத்தட்டப் பதினொரு சுற்றுகள் உள்ள கைமுறுக்குகள் இருக்கின்றன” என்று அவர் முறுக்குக் கதையைச் சொல்லி முடிக்கவும், நாங்கள் முறுக்கு சாண்ட்விச்சை சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.

# காக்கடா ராம்பிரசாத்

சவுகார்பேட்டைக்குச் சாப்பிடச் சென்றவர்கள் யாரும் காக்கடா ராம்பிரசாத்தில் சாப்பிடாமல் வர மாட்டார்கள். இந்தக் கடையின் சிறப்பாகச் சூடான ஜிலேபிகளும், பாதாம் பாலும் இருக்கின்றன. லக்ஷ்மி எங்களுக்கு வாங்கிவந்த பாதாம் பாலைச் சுவைப்பதற்கு வயிற்றில் இடமில்லையென்றாலும் அதை வேண்டாம் என்று யாராலும் மறுக்க முடியவில்லை. பாதாம் பாலைக் குடித்து முடித்தவுடன் உணவு உலா நிறைவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தோம்.

ஆனால், ‘பான்’ இல்லாமல் உணவு உலா முழுமையாக நிறைவுபெறாது என்று சொல்லி, பாண்டே பான் ஹவுஸ்ஸில் எங்கள் அனைவருக்கும் பான் வாங்கிக் கொடுத்தார் லக்ஷ்மி. இந்த உணவு உலாவில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் சுவையான உணவைச் சாப்பிட்ட திருப்தியுடன் மட்டுமல்லாமல் உணவு வரலாற்றைத் தெரிந்துகொண்ட திருப்தியுடன் விடைபெற்றுச்சென்றனர்.

இந்தச் சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு ரூ.1,300 வசூலிக்கப்படுகிறது. அத்துடன் ‘ஸ்டோரி டிரெயில்ஸ்’ சார்பாகச் சென்னை, மதுரை, புதுச்சேரி போன்ற நகரங்களில் பல்வேறு உலாக்கள் (‘டிரெயில்ஸ்’) நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு: http://www.storytrails.in/india/


யூடியூப் பகிர்வு: சுவையான முறையில் தயாராகும் காஞ்சிபுரம் டம்ளர் இட்லி


கோயில் நகரமான காஞ்சிபுரம், அதன் நெடிதுயர்ந்த கோபுரங்களுக்காகவும், பிரமிடுகளைப் போன்ற வாயில்களைக் கொண்ட வளைவுகளுக்காகவும் அதிகமாக அறியப்படுகிறது. நல்ல விஷயம். அதே நேரத்தில் சூடான கோபுரங்களை ஸ்டீல் டம்ளர்களில் அடைத்திருப்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

புரியவில்லையா, காஞ்சிபுரத்தில் சிறப்பாகத் தயாராகும் டம்ளர் இட்லிகள்தான் அவை. கோபுரத்தின் வடிவத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் கோயில் இட்லிக்கும், நிஜ கோபுரத்தின் வடிவத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இந்த இட்லியைத் தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் 4 - 5 மணி நேரங்கள் ஆகிறது. ஆனாலும் அருகில் இருக்கும் தனியார் உணவு விடுதியில் இது அன்றாட மெனுவில் இடம்பெறுகிறது. இந்த கோவில் இட்லி வேறு வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டாலும், இட்லி பொடி மற்றும் புதினா சட்னியோடுதான் அதிகம் பரிமாறப்படுகிறது.

செய்முறை

கெட்டியாக அரைக்கப்பட்ட இட்லி மாவை, ஸ்டீல் பக்கெட்டில் ஊற்றுகின்றனர். புளிப்பதற்காக அதை இரவு முழுக்கவோ அல்லது குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்கோ அப்படியே வைக்கின்றனர். வழக்கமாக அரைக்கப் பயன்படுத்தும் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றோடு தயிர், சோடா உப்பு, கறிவேப்பிலை, நெய், முந்திரி ஆகியவற்றையும் சேர்க்கின்றனர்.

கவிழ்த்தி வைக்கப்பட்டுள்ள டம்ளர்களை எடுத்து அவற்றில் நெய் பூசுகின்றனர். பின்னர் தயார் நிலையிலுள்ள மாவை டம்ளர்களில் ஊற்றுகின்றனர். பின்னர் அவற்றை எடுத்து நீராவியில் வேக வைக்கின்றனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, மூடியைத் திறந்தால் சூடு பறக்க இட்லிகள் வெந்திருக்கின்றன. சூடான, பஞ்சு போன்ற கோபுரங்கள் தங்களைச் சாப்பிடச் சொல்லிக் காத்திருக்கின்றன. அந்த உணவு விடுதியில் தினந்தோறும் சுமார் 100 ப்ளேட் இட்லிகள் விற்பனையாகின்றன.

செய்வதைப் பார்த்தால் கடினமாகத் தோன்றுகிறதா? இருக்கலாம், ஆனால் இந்தக் காஞ்சிபுரம் இட்லியைத்தான் சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டவர்களும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். செய்வதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், கண்ணுக்கும் வயிற்றுக்கும் எளிமையாகவும் சுவையாகவும் இருக்கிறது இந்த காஞ்சிபுரம் டம்ளர் இட்லி.

கண்ணுக்கு விருந்தாகும் காஞ்சிபுரம் இட்லியைக் காண

போலீஸிடம் ராம்குமார் வாக்குமூலம்: 'சுவாதியை நான் மட்டுமே கொலை செய்தேன்; வேறு யாருக்கும் தொடர்பில்லை' - 3 நாள் போலீஸ் காவல் முடிந்து புழல் சிறையில் அடைப்பு


Return to frontpage

சுவாதியை நான் மட்டுமே கொலை செய்தேன். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று ராம்குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸார் கூறினர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி ஐடி பெண் ஊழியர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட் டம் செங்கோட்டையை சேர்ந்த ராம் குமார்(24) கைது செய்யப்பட்டார்.

ராம்குமாரிடம் போலீஸ் காவலில் 3 நாட்கள் விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. 13-ம் தேதி மாலை முதல் நேற்று மாலை வரை ராம்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 3 நாட்களும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து ராம்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. துணை ஆணையர் பெருமாள், ரயில்வே போலீஸ் எஸ்.பி. விஜயகுமார், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் மற்றும் தனிப்படையினர் ராம்குமாரிடம் விசாரணை நடத்தினர். நேற்று மாலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்த மருத்துவக் குழுவினர், அவரது கழுத்தில் உள்ள காயத்தை பரிசோதனை செய்தனர்.

நீதிபதி விசாரணை

நேற்றுடன் போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் மூர் மார்க்கெட் அல்லிக்குளத்தில் செயல்படும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு ராம்குமாரை போலீஸார் அழைத்து வந்தனர். நீதிபதி கோபிநாத் முன்பு அவரை ஆஜர்படுத்தினர். அப்போது போலீஸ் காவலில் ராம்குமார் அளித்த வாக்குமூலத்தை நீதிபதி யிடம் போலீஸார் சமர்ப் பித்தனர். வாக்குமூலத்தை போலீ ஸார் வீடியோ எடுத்துள்ளனர். அதன் சிடியையும் சமர்ப்பித்தனர். பின்னர் ராம்குமாரிடம் சுமார் அரை மணி நேரம் நீதிபதி கோபிநாத் தனியாக விசாரணை நடத்தினார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறை யில் ராம்குமார் அடைக்கப்பட்டார். ராம்குமாரை வருகிற 18-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க ஏற்கெனவே நீதிபதி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் வாக்குமூலம்

போலீஸ் காவலில் ராம்குமாரிடம் சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்வதற்கு வேறு யாராவது உதவி செய்தார்களா? போன்ற பல கேள்விகளை போலீஸார் கேட்டுள்ளனர். “எனது காதலை நிராகரித்ததாலும், என்னையும் எனது குடும்பத்தையும் சுவாதி தவறாக பேசியதாலும்தான் அவரை வெட்டினேன். நான் மட்டுமே தனியாக முடிவு செய்து இந்த கொலையை செய்தேன். இந்த கொலைக்கும் வேறு யாருக்கும் தொடர்பில்லை” என்று ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்கிடமும் போலீஸார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். சுவாதியை பற்றிய நிறைய தகவல்கள் பிலாலுக்கு தெரிவதால் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். ராம்குமார் கூறும் தகவல்களை பிலால் மாலிக்கிடம் கேட்டு, அதுபற்றி சுவாதி ஏதாவது கூறியிருக்கிறாரா என்று போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

சுவாதி அலுவலகம் மற்றும் வீட்டில் பயன்படுத்திய லேப்டாப், பிரின்டர், செல்போன் ஆகியவற்றில் உள்ள தகவல்களை பெறுவதற்காக ஐதராபாத்தில் உள்ள ஆய்வுக் கூடத் துக்கு போலீஸார் அனுப்பியுள்ள னர். அதில் என்னென்ன தகவல்கள் கிடைத்தன என்பதை போலீஸார் இதுவரை வெளியிடவில்லை. “சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து அவரது செல் போனையும் கொலையாளி எடுத்து சென்றார். எனவே, யாருக்கோ தேவையான ஒரு தகவல் சுவாதிக்கு தெரிந்துள்ளது. அதை அவர் தனது லேப்டாப்பில் வைத்து இருந்திருக்கலாம். அந்த தகவல் வெளியே தெரியாமல் இருக்க சுவாதியை கொலை செய்ய முடிவு செய்து, அதற்கு ராம்குமாரை பயன்படுத்தி இருக்கலாம்.

சுவாதியை கொலை செய்வதற்கு முன்பு 20, 21-ம் தேதிகளில் ராம்குமார் ஆந்திர மாநிலம் சென்று வந்திருக்கிறார். இந்த கொலை சம்பவத்தில் ராம்குமார் ஒரு அம்பாக மட்டுமே செயல்பட்டு இருக்கிறார். அவரை எய்த வில் வேறு எங்கோ உள்ளது” என்று சிலர் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். இந்த தகவல் சமூக வலை தளங்களில் இப்போது அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.

வாங்க, 100 வருஷம் வாழலாம்... வாழ்நாளில் டாக்டரை 'சந்தித்திராத' முதியவர்!


வாங்க, 100 வருஷம் வாழலாம்... வாழ்நாளில் டாக்டரை 'சந்தித்திராத' முதியவர்!

DINAMALAR

நோய் நோடியின்றி ஆரோக்கியமாக நுாறாண்டு வாழ எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், அந்த பாக்கியம் அவ்வளவு எளிதாக வாய்த்துவிடுவதில்லை. தவறான உணவுப் பழக்க
வழக்கம், வாழ்வியல் சூழல், புகையிலை வஸ்து மற்றும் போதை பழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அறுபதைத் தொடாமலே ஆயுசு முடிந்து விடுகிறது பலருக்கு.
சாப்பாட்டு தட்டில் பரிமாறப்படும், 'பொரியல் குவியல்' அளவுக்கு இணையாக, மருந்து மாத்திரை உட்கொண்டால்தான் உயிர்வாழவே முடியும்
என்கிற அபாய நிலை சிலருக்கு.'எப்படி இருக்கீங்க...' எனக்கேட்டால், 'ஏதோ, இருக்கிேறனே...' என, இளமைக் காலத்திலேயே புலம்புவோர் அதிகம். ஐம்பதை, அறுபது வயதைக் கடந்தோரை கேட்டால், சிலர், ''இனி இங்கு என்ன கிடக்கு... சாவுதான்
வரமாட்டேங்குது...' என, 'சங்கு ஊத' ஆட்களை அழைக்காத குறையாக
சலித்துக்கொள்வதும் உண்டு.இவர்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான மனிதர். 'எப்படி இருக்கீங்க...' எனக்கேட்டால், 97 வயதிலும், 'எனக்கு என்னய்யா... ராஜாவாட்டம் ஜம்முன்னு இருக்கேன்'னு, முஷ்டி
யை உயர்த்துகிறார் சிதம்பரம். யாருடைய துணையுமின்றி தனி ஆளாக நாடு கடந்தும்
விமானத்தில் பறக்கிறார்.
அதுமட்டுமின்றி, 'மருத்துவமனைக்கே செல்லாமல் ஆயுசுக்கும் வாழ முடியும்' என, நம்பிக்கையூட்டுகிறார். இவர், நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகேயுள்ள உப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
கடந்த, 1919, ஏப்., 19ல், இலங்கையிலுள்ள தொட்லாக்கல்ல தோட்டத்தில், கதிர்வேல் - ஆராயிக்கு பிறந்தார். இவரின் சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட வறுமையிலும் தாயார் குடும்பத்தை பராமரித்தார்.
பள்ளி செல்ல வாய்ப்பு கிடைக்காத போதும், அங்கிருந்த ஆங்கிலேயர்களுடன் பழகினார். தமிழ், ஆங்கிலம் பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டார். மனக்கணக்கும் சர்வ சாதாரணமாக வந்ததால், அதே பகுதியில் உள்ள எஸ்டேட்டில், 'கணக்கு' பிள்ளை' ஆனார்.
வேலாயி என்பவரை மணமுடித்து, குழந்தையும் பிறந்தது. தாயகம் திரும்பும் ஆசை துளிர்த்தது. தனது தாயின் இறப்புக்குபின், கனத்த இதயத்துடன் பணிக்கு விடை கொடுத்து விட்டு தமிழகம் திரும்பினார்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் தேவாலாவில், தேயிலைத் தோட்டம், உப்பட்டியில் வீட்டை வாங்கி குடியேறி, தேயிலைத் தோட்ட பணியில் ஈடுபட்டார்.
இன்று, 97 வயதை எட்டியும், அயராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குமுன், இலங்கைக்கு தனியாக சென்று வந்துள்ளார்.
அங்கு, இவரை வரவேற்ற தோட்ட நிர்வாகத்தினர், நினைவுப் பரிசு வழங்கி, கதிர்காமம் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர். இவரது மகன், ராஜமாணிக்கம், தனியார் எஸ்டேட்டியில் பணிபுரிந்து ஓய்வு
பெற்றுள்ளார். தற்போது, கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் வசித்து வருகிறார்.ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து சிதம்பரம் கூறியதாவது:
என் காலை உணவு பெரும்பாலும் பழைய சாதம், வெங்காயம்தான். அது, உடலுக்கு தெம்பு தருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, மாமிசம் எடுத்துக் கொள்வேன்.
தினசரி கடைக்கு சென்று பொருள் வாங்கி, வீட்டு வேலை செய்கிறேன். மனைவியின் மறைவு, எனக்கு பேரிழப்பு. மது, புகையிலை என, எவ்வித பழக்கமும் எனக்கில்லை. நான் ஆரோக்கியமாக இருக்க, இதுவும் ஒரு காரணம்.
எப்போதாவது காய்ச்சல் வந்தால், 'முடக்கத்தான் இலை' ரசம் உண்டு, சரி செய்துகொள்வேன்; இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை. எனது தாத்தா, 114 வயது வரை வாழ்ந்தார். அவரது வாழ்க்கை முறையை நானும் பின்பற்றுகிறேன். போதை பழக்கமின்றி வாழ்ந்தால், யாரும் நுாறாண்டு என்ன, அதைக் கடந்தும் ஆரோக்கியமாக வாழலாம், என சிதம்பரம் கூறினார்.
நல்லதொரு வாழ்க்கை நமக்கும் வாய்க்க... மருத்துவமனை நாடாத ஆரோக்கியம் கிடைக்க... தவறான பழக்கவழக்கம், வாழ்க்கை முறை
களுக்கு விடைகொடுத்தால், இவரைப்போன்று நமக்கும் வாய்க்கும், 100ஐ தொடும் வாய்ப்பு!

எம்.பி.ஏ. முடித்துவிட்டு ஆடு வளர்ப்பில் களம் இறங்கி சாதித்த இளைஞர்

THE HINDU

எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு ஆடு வளர்ப்பில் களம் இறங்கி திட்டமிட்டு செயலாற்றி ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் சாதித்துக் காட்டியுள்ளார்.

கோவை கொடிசியாவில் ‘அக்ரி இன்டெக்ஸ் 2016’ கண்காட்சி நேற்று தொடங்கியது. வேளாண் தொழில், ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில், ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் தோப்புக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் எஸ்.அருண்குமார் அமைத்துள்ள ஆடு வளர்ப்பு குறித்த அரங்கு கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதே இடத்தில் திடகாத்திரமாக நிற்கும் ஆட்டில் இருந்து பாலை கறந்து தேநீர் தயாரித்து ரூ.20-க்கு ஒரு கோப்பையில் வழங்குகிறார். அரங்கில் அவர் நிறுத்தி வைத்துள்ள தலச்சேரி இனத்தைச் சேர்ந்த ஆடுகளும், குட்டிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. கண்காட்சி நடைபெறும் இடத்தை சுற்றி வருபவர்கள், அவரது தொழில்முறை குறித்து விசாரித்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

கூடவே, சூடாக தேநீர் அருந்திச் செல்கின்றனர்.

வளர்ப்பதற்கு ஆட்டுக்குட்டிகளை விற்பனை செய்கிறார். ஒரு கிலோ ரூ.350 என விலை நிர்ணயித்து ஆடுகள் விற்கப்படுகின்றன.

அருண்குமார் வசம் தற்போது 200 தலச்சேரி ஆடுகள் இருக்கின்றன. தனது சொந்த ஊரிலேயே ஆட்டுப் பால் விற்பனையிலும், ஆடு விற்பனையிலும் நல்ல வருமானம் ஈட்டி வருவதாக தெரிவிக்கும் அவர், எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு களத்தில் இறங்கியது என்பது கூடுதல் தகவல்.

தொழில்முறை குறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை கே.சுப்ரமணியம், கூலித்தொழிலாளி. தாயார் சிவகாமி. கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி.ஏ. படிப்பு முடித்தேன். படிப்பை முடித்ததும் அடுத்தவரிடம் சென்று வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. வேளாண்துறையில் தொழில் நடத்த வேண்டும் என்பது லட்சியம். தொடர்ந்து, பல்வேறுகட்ட யோசனைக்கு பின்னர் ஆடு வளர்ப்பில் இறங்கினேன். தொடக்கத்தில் கடன் வாங்கி ரூ.3 லட்சத்தில் கேரளம் சென்று 40 ஆடுகளை வாங்கி வந்தேன்.

ஆடு வளர்ப்பு குறித்து கேட்டும், படித்தும் தெரிந்து வைத்திருந்தாலும் ஆடுகள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தன. அவற்றை நேர்த்தியாக பராமரித்து வருமானம் ஈட்டுவது என்பது, தொழில் தொடங்கி 3 ஆண்டுகள் முடிவடைந்தும் முடியவில்லை. 2012-ம் ஆண்டு வரை இடர்பாடுகளை சந்தித்து வந்தேன்.

தற்போது, நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஆட்டு பால் வயிற்றுப்புண், தைராய்டு நோய், உடல்சோர்வு, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளைப் போக்கும் என்பதால் பால் விற்பனை நன்றாக உள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ.150-க்கு விற்பனை செய்கிறோம்.

தலச்சேரி ஆடுகள் மாமிச வகைக்கு உகந்தது. இரண்டு ஆண்டு கடந்த ஆட்டின் எடை மட்டும் 80 கிலோவை தாண்டி இருக்கும். இதில், நேர்த்தியுடன் இயங்குவதால் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. தற்போது, 5 பணியாட்களை வைத்து தொழில் நடத்தி வருகிறேன்.

எனது தாயாரும் உறுதுணையாக இருக்கிறார். இதைத்தவிர காங்கேயம் வகை நாட்டு மாடுகள் பராமரிப்பும் செய்து வருகிறேன். அதிலும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது என்றார்.

ஆடு வளர்ப்பில் சாதித்துள்ள அருண்குமார், ஆடு வளர்ப்பு ஓர் அனுபவக் கையேடு என்ற புத்தகத்தை ரூ.30-க்கு விற்பனை செய்து வருகிறார். அரங்குக்கு வரும் பெரும்பாலான பார்வையாளர்கள் அந்த புத்தகத்தை தவறாமல் வாங்கிச் செல்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

Friday, July 15, 2016

கழகத்தை மையம் கொண்ட காமராஜர் புயல்... மாற்று முகாமிலிருந்தும் மாலையிடப்பட்ட கர்மவீரர்!

vikatan.com

தமிழக வரலாற்றில், காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஆண்ட 10 ஆண்டுகள் ஒரு பொற்காலம்...தமிழக வரலாறு, புவியியல் ரீதியாக வலுப்பெற்ற காலகட்டம் அவர் ஆட்சியில்தான்.

அவர் சென்னை மாகாண முதல்வராக பொறுப்பேற்ற சில வருடங்களில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. செய்தித்தாள்களை நாள்தவறாமல் படிக்கும் பழக்கமுள்ள முதல்வர் காமராஜின் பார்வையில், அன்றைய தினமணி நாளிதழில் இடம்பெற்ற ஒரு செய்தி தென்பட்டது. அன்றைய கல்வித்துறை ஆலோசகர் நெ.து சுந்தரவடிவேலு, தென்மாவட்டத்தின் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றபோது, ஒரு மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளான். அவனுக்கு முதலுதவி அளித்து தெளிவித்தபின், மயக்கத்திற்கான காரணம் கேட்டபோது அதிர்ச்சியானாராம் நெ.து சு. ஆம், அவன் அன்று காலை உணவு எடுக்காமல் வகுப்புக்கு வந்திருந்தான். 'இம்மாதிரி ஏழை மாணவர்களுக்கு பள்ளியிலேயே உணவு வழங்கினால் நன்றாக இருக்கும்' என ஆய்வின் முடிவில் அவர் பேசியதாக அந்த சிறிய செய்தி சொன்னது.

செய்தியை காமராஜ் படித்து முடித்த சில நொடிகளில், நெ.து சுந்தரவடிவேலுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து போன் பறந்தது. அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. அடுத்த சில நாட்களில் சத்துணவுத் திட்டம் என்ற மகத்தான திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. சிறிய செய்தி ஒன்றுக்கு காமராஜ் அளித்த முக்கியத்துவத்தால், சத்துணவுத் திட்டம் என்ற ஏழைக் குழந்தைகளின் பசி போக்கும் திட்டம் பிறந்தது. அந்த மனிதநேயர் காமராஜரின் பிறந்தநாள் இன்று.



ஆரம்பத்தில் அந்த திட்டத்தில் பெற்றோர் பங்களிப்பாக மிகக் குறைந்த தொகை வசூலிக்கப்பட்டது. அதிகாரிகள் சிலர், 'அரசு இவ்வளவு தொகை செலவு செய்கிறபோது எதற்காக மிக அற்பத்தொகையை பெற்றோரிடம் பெறவேண்டும். அரசுக்கு ஒன்றும் இது இழப்பில்லையே...' என்றனர். “நான் திட்டத்தின் செலவை குறைக்க இப்படி செய்யவில்லை. எந்த ஒன்றும் இலவசமாக அளிக்கப்பட்டால் அதன்மீது ஒரு பொறுப்பு வராது. இப்போது சிறிய தொகையானாலும் தங்களது பணமும் இதில் இருக்கிறது என அவர்களுக்கு தோன்றுமானால், இலவச உணவை வீணாக்கமாட்டார்கள்.” என்றார் காமராஜர். 3 வது படித்த காமராஜரின் நுண்ணிய அறிவை எண்ணி வியந்து போயினர் அதிகாரிகள். அதுதான் காமராஜர். அவரை மாற்றுக்கட்சியினரும் நேசிக்க அதுவே காரணமானது.

காங்கிரஸின் பரம வைரியான திராவிட இயக்கங்கள், அரசியல் மேடைகளில் அவரை வரிந்துகட்டி தாக்கினாலும், தனிப்பட்ட முறையில் அவர் மீது நன்மதிப்பு கொண்டிருந்தனர். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என இந்த வரிசைத் தலைவர்கள் காமராஜரை நேசித்தவிதம் அரசியல் கண்ணியத்திற்கு என்றும் அழியாத சாட்சிகள்.

காங்கிரசும், அண்ணா தலைமையிலான திமுகவும் அரசியல் களத்தில் அனல் கிளப்பிவந்த 60 களில், எம்.ஜி.ஆரை மையமாகக் கொண்டு திமுகவில் ஒரு புயல் கிளம்பியது. அண்ணாவின் தலைமையிலான திமுகவில் முக்கிய தலைவர்கள் வரிசையில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர், எதிர் கூடாரத்திலிருந்த காமராஜர் மீது கொண்ட காதலுக்கு அந்த சம்பவம் சாட்சியானது.

கருத்தியல் ரீதியாக எம்.ஜி.ஆரை திமுகவிடமிருந்து தனிமைப்படுத்திய அந்த சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வும்கூட. திமுகவில் ஒரு பெரிய புயலை கிளப்பிய அந்த சம்பவம் நிகழ்ந்தது 1965 ம் ஆண்டு காமராஜரின் 62 வது பிறந்தநாள் விழாவின்போது.



சென்னை, எழும்பூர் பெரியார் திடலில் நடந்த அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், மேடையில் சற்று உணர்ச்சிவயப்பட, பின்னாளில் அது பெரும் சலசலப்பை திமுகவில் உருவாக்கியது.

எம்.ஜி.ஆரின் சர்ச்சைக்குரிய உரை இதுதான்...

“காமராஜரின் பிறந்த தின விழாவில் நானும் கலந்து கொண்டு, அவரை வாழ்த்தி, அவர் நீடூழி வாழவேண்டும் என்று வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமைப்படுகிறேன். தலைவர் காமராஜர், தோழர் காமராஜர், அய்யா காமராஜர் என்று பலர் அழைக்கும் நிலையை காமராஜர் அடைந்திருக்கிறார். எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர்; பாராட்டப்பட வேண்டும். நல்ல உள்ளம் கொண்டவர்களை எல்லோரும் பாராட்டித்தான் தீரவேண்டும். மனிதனை மனிதன் பாராட்ட வேண்டும். நல்லவனை நல்லவன் பாராட்ட வேண்டும்.

கொள்கைக்காக வாழ்கிறவனை, கொள்கைக்காக வாழ்கிறவர்கள் பாராட்டியாக வேண்டும். யார் யாரை மதிக்கிறார்களோ அவர்களைப் பாராட்ட வேண்டும். யாரால் மதிக்கப்படுகிறார்களோ அவர்களைப் பாராட்டியாக வேண்டும். இந்த நிலை மாறும்போது அருவருப்பான சூழ்நிலை ஏற்படுகிறது.
நண்பர் சிவாஜி கணேசன் ஒரு கட்சியில் (தி.மு.க.) இருந்து விட்டுப்போனவர். அவருடைய ‘கட்டபொம்மன்’ நாடகத்திற்கு எங்கள் தலைவர் அண்ணா போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார். சிவாஜி நம்மை விட்டுப்போய்விட்டாரே என்ற எண்ணத்திற்கே அங்கு இடமில்லை. அதுதான் நல்ல பண்பு.



காமராஜர் என்னை விட்டுப்போகவில்லை. நான் அவரைவிட்டு வந்தவன் (எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர்). நான் காமராஜரைப் பாராட்டிப் பேச வந்ததற்கு வேறு உள் காரணங்கள் தேடினாலும் கிடைக்காது. காமராஜர் வாழ்ந்தால் யாருக்கு லாபம்? வாழாமல் இருந்தால் யாருக்கு லாபம்? காமராஜர் ஒரு ஏழையாக வளர்ந்திருக்கிறார். யாரும் மேடையில் ஏறி அவர் சொத்து சேர்த்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. தன்னை ஈன்றெடுத்த தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அவரை 10 நிமிடங்கள், 5 நிமிடங்களுக்கு மேல் இருந்து பார்ப்பதில்லை.

தன் தாயை ஈன்ற இந்த நாட்டின் கடமைகளை விடாமல் செய்து வருகிறார். காமராஜரைப் புகழ்வதில் யாருக்கு நஷ்டம்? நான் ஒரு கலைஞன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். அண்ணா வழியில் நடப்பவன். அவர் கொள்கை எனது உயிர். அப்படிப்பட்ட நான் காமராஜரையும், அய்யாவையும் (பெரியார்) பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்ட முடியும்?

இதே மேடையில்தான் பெரியாரைப் பாராட்டிப் பேசினேன். நமது தலைவர் காமராஜரைப் பாராட்டிப் பேசுகிறேன். நமது தலைவர் என்று நான் சொல்வது மக்கள் ஏற்ற தலைவர் அவர். அதனால் நமது தலைவர் என்று சொல்கிறேன். காமராஜர் இரவு-பகல் பாராமல் பாடுபடுகிறார். அவரை ஏன் பாராட்டக் கூடாது? என் கொள்கையை நான் கடைப்பிடிப்பதிலும் ஏன் இந்த இலக்கணத்தை பின்பற்றக்கூடாது? எங்கெங்கு நல்லது இருந்தாலும் அதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஏழைகளுக்கும், பின்தங்கிய மக்களுக்கும் உயர்ந்த நிலையை உருவாக்கித் தந்தவர் காமராஜர். ஏழைகளை வாழவைக்க வேண்டும் என்று காமராஜர் சொல்கிறார். நானும் அதைத்தான் சொல்கிறேன். என் கட்சியும் அதைத்தான் சொல்கிறது. அதனால் அவருக்கு மாலையிடுகிறேன்.



பண்புள்ளவன், பகுத்தறிவுள்ளவன் அண்ணா வழியில் நடப்பவன் மாலை இடுகிறான். காமராஜர் நேரில் இருந்திருந்தால் மாலைகளைக் குவித்திருப்பேன். ஏழைகளின் நல்வாழ்வுக்காக காமராஜர் தன்னையே தியாகம் செய்து கொண்டவர், அவருடைய லட்சியத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. அவர் மேற்கொண்டுள்ள லட்சியம்தான் நம்முடைய வழி. நான் ‘நாடோடி மன்னன்’ படத்தில் சொன்ன கருத்துக்கள், போட்ட சட்டங்கள் அனைத்தையும் காமராஜர் அமல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் இலவச கல்வி என்றேன். அது நடந்து வருகிறது. உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் எல்லா வசதியும் என்று இருந்த நிலைமையை மாற்றி தாழ்ந்த வகுப்பினருக்கும் எல்லாவற்றிலும் எங்கும் முதலிடம் என்று அமைத்தவர் காமராஜர்.

இங்கு காமராஜரை சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசினார்கள். நான் இதை ஏற்க விரும்பவில்லை. ஏனென்றால், சந்தனக் கட்டையை அரைக்க அரைக்க மணம் வீசுவது உண்மை. ஆனால் அது தேய்ந்து மறைந்து விடுகிறது. ஆகவே சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல சரியல்ல.
என்னைப் பொருத்தவரை காமராஜரை நான் உதயசூரியனுக்கு ஒப்பிடுகிறேன். சூரியன் கிழக்கிலிருந்து உதிர்த்து மேற்கில் மறைவதுபோல் தோன்றுகிறது. உண்மையில் அது மறையவில்லை. இருந்த இடத்தில்தான் இருக்கிறது. அதுபோல காமராஜரின் புகழ், தொண்டு உதயசூரியனைப்போல் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது. நான் இதுவரை எந்தவித தியாகமும் செய்யவில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. ஆனால் தியாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு தியாகிகளால் பாராட்டுவதை கேட்கும்போது எனக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

காமராஜர் அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும். மக்களின் கவலைகளைப் போக்கி நல்வாழ்வைக் கொடுக்கவேண்டும். கல்யாண வீடு போல நாம் இங்கே சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதோடு நாம் சிந்திக்கவேண்டும். அதற்கு நாம் காமராஜரை வணங்கித்தான் ஆகவேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்தும் காமராஜர் நீடூழி வாழவேண்டும்.



ஜனநாயக சோஷலிசம் என்று காமராஜர் சொல்கிறார். இது சரியா என்று சிலர் கேட்கிறார்கள். சர்வாதிகார ஆட்சி வேறு, பரம்பரையாக நாட்டை ஆள்வது வேறு, ஜனநாயகத்தில் மக்கள் விருப்பத்துடன் அமல்படுத்தப்படுவது சோஷலிசம், பேதமற்ற சமுதாயம் காண்பதுதான் அதன் அடிப்படை. ராஜாஜி இங்கே முதல் அமைச்சராக இருந்தபோது குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதனை தி.மு.க.கழகம் எதிர்த்தது. காமராஜர் முதல் அமைச்சராக வந்தவுடனேயே மாற்றப்பட்டது. காங்கிரசின் திட்டத்தை அதே காங்கிரஸ்காரர் மாற்றினார். எப்படி மாறியது? ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் கட்சிக் கொள்கையும் மாறுகிறது. அதற்கு எடுத்துக் காட்டு காமராஜர்.

இப்படிப்பட்டவரைப் போற்றாமல் தி.மு.க.கழகத்தில் எனக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும். தி.மு.க.வின் லட்சியங்களைக் காமராஜர் நிறைவேற்ற விரும்புகிறார். அதற்குக் காலதாமதம் ஆகலாம். காமராஜர் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி. என்னைவிடச் சிறந்தவர்களை என் தலைவர்களாக ஏற்கிறேன். இங்கே பேசிய என்.வி. நடராஜன், ‘காமராஜர் எதிர்கட்சித் தலைவராக இருக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டார். நல்ல ஒரு எதிர்க்கட்சி தேவைதான். காங்கிரசை தி.மு.க.கழகம் எதிர்க்கிறது. தி.மு.கவை காங்கிரஸ் எதிர்க்கிறது. இரண்டும் எதிர்க்கட்சிகள்தான். அதில் எது உயர்ந்த கட்சி என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் மனமாற்றத்திற்கேற்ப மாறும் ஆட்சிதான் தேவை.

ஒருசமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன். அப்போது அவரது நல்ல எண்ணத்தைத்தான் கண்டேன். எண்ணி எண்ணிப் பூரித்தேன். என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ, அவமானப்படுத்தவோ இல்லை. மாநகராட்சித் தேர்தலின்போது அவர் ‘வேட்டைக்காரன்’ வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார். நானும் பதிலுக்கு ஏதேதோ பேசினேன். அது அரசியல், தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர், பெரிய முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர். தொண்டராய், தோழனாய் இருந்து மக்கள் சேவை செய்யமுடியும் என்று கருதி பதவியைத் துறந்தார்.



சாதாரண கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். சிகப்பு, நான் கறுப்பு என்று (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) முகவை ராஜமாணிக்கம் குறிப்பிட்டார். மனிதனுக்கு இந்த இரண்டு ரத்தமும் தேவை. ஏதாவது ஒன்று அதிகமாகி விட்டால் வியாதிதான். கறுப்பு என்றால் களங்கம் அல்ல. இரண்டும் சேர்ந்தால்தான் ஜனநாயக சோஷலிசம் மலரும்." என்று பேசினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் இந்தப் பேச்சு திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 'கட்சியின் முக்கியத் தலைவர் அந்தஸ்தில் இருப்பவர், எப்படி மாற்றுக்கட்சியின் தலைவரை புகழலாம்' என கட்சியில் கலகக்குரல் எழுந்தது. குறிப்பாக, 'காமராஜரை தலைவர் எனக் குறிப்பிட்டது அண்ணாவை அவமதிக்கும் செயல்' என பரபரப்பு கிளப்பினர் எம்.ஜி.ஆருக்கு எதிரான கோஷ்டியினர்.

இருப்பினும் எம்.ஜி.ஆர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். அண்ணாவிடம் தன் நிலைப்பாட்டை அவர் ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்தார். எம்.ஜி.ஆரை நன்கு புரிந்தவரான அண்ணா, மற்றவர்களின் பேச்சை பொருட்படுத்தவில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்திற்கு பிறகு, பொதுவான அண்ணா பற்றாளர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்பட்டது உண்மை. பின்னாள் நடந்தவை தமிழக அரசியல் வரலாற்றில் பதிவானவை.

1967 தேர்தல் நிலவரம் வெளியாகிக்கொண்டிருந்தது. விருதுநகர் தொகுதியில் கல்லூரி மாணவரான பெ.சீனிவாசனிடம் காமராஜர் தோல்வியுற்ற தகவலைக் கேட்டு எம்.ஜி.ஆர் கண்ணீர் வடித்ததாக சொல்வார்கள். திமுக வெற்றியை மற்றவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, அண்ணா நுங்கம்பாக்கம் வீட்டில் சோகமாகி இருந்தார். “காமராஜர் தோற்றிருக்கக்கூடாது. எத்தனை அதிருப்தி இருந்திருந்தாலும் மக்கள் காமராஜரை தோற்கடித்திருக்கக்கூடாது' என திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார் அவர்.



“சட்டமன்றத்தில் நாம் ஒரு வலுவான தலைவரின் அனுபவத்தை இழந்துவிட்டோம்”என வேதனைப்பட்டார் அண்ணா. காமராஜரின் வெற்றியை பாதிக்கக் கூடாது என்பதற்காகவே அந்த தொகுதியில் முன்பின் அறிமுகமாயிராத ஒருகல்லுாரி மாணவனை நிறுத்தியிருந்தார் அண்ணா என்பார்கள். ஆனால் அதிருப்தி அலையில் காமராஜரும் தப்பவில்லை.

திமுக அரியணைக்கு வந்த சில மாதங்கள் கடந்த நிலையில், திமுக ஆட்சி பற்றி அதுவரை காமராஜர் எந்த விமர்சனமும் வைக்காதது பற்றி சிலர் காமராஜரிடம் குறைபட்டுக்கொண்டனர். " அவங்க வந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. கட்சி நிர்வாகம் வேற...ஆட்சி வேற...இப்போதான் புதுசா வந்திருக்காங்க. ஆட்சியின் நிர்வாக விஷயங்களை அவர்கள் தெரிந்துகொள்வதற்கே இன்னும் பல மாதங்கள் ஆகும்...அதுக்குள்ள விமர்சிக்கறதுதான் ஜனநாயகமா... ?" என குறைபட்டவரை கடிந்துகொண்டார் காமராஜர். அதுதான் காமராஜர்.

அக்டோபர் 2, காமராஜர் மறைந்த அன்று சோகமே உருவாக, அப்போதைய முதல்வர் கருணாநிதியும், அவர் அமைச்சரவை சகாக்களும் அவரது உடலை சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திலேயே காமராஜர் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சம்பிரதாயங்களையும் அங்கேயே நடத்த திட்டமிட்டனர். முதல்வர் கருணாநிதியின் காதுகளுக்கு இந்த தகவல்போனது.



கொதித்துவிட்டார் அவர். “காமராஜர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அரசு முறைப்படிதான் தகனம் செய்யவேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகார் ஒருவர், காமராஜர் அப்போது எந்த பொறுப்பிலும் இல்லாததை சொல்லி, சில சட்ட சம்பிதராயங்களை தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டிய சட்டவிதியை எடுத்துச்சொன்னார். மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்ட கருணாநிதி, " நான் சொன்னதை செய்யுங்கள்...மேலும் காமராஜரின் உடலை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான ராஜாஜி நினைவகம் அருகில்தான் அடக்கம் செய்யவேண்டும்...காமராஜருக்கு இறுதி மரியாதை செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" என கறாராக கூறினார்.

காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் துாணாக விளங்கிய கர்மவீரர், இப்படி மாற்றுக்கட்சியினராலும் போற்றக்கூடிய வகையில் தன் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தை நேர்மையான முறையில் கையாண்டார் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்.?

- எஸ்.கிருபாகரன்

நன்றி அரசியல்வாதிகளே...! - ஒரே ரயில் சேவையை 4 முறை தொடங்கி வைத்து சாதனை!

vikatan.com

உத்தரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேதி மட்டும்தான் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உத்தரபிரதேச அரசியல்தான் இந்திய அரசியலின் மையம் என்பதால், இப்போதே அங்கு தேர்தல் களைக் கட்டத் தொடங்கி விட்டது. 'நான்தான் அதைத் தொடங்கினேன், இதைத் தொடங்கினேன்' என்று இப்பவே உ.பி அரசியல்வாதிகள் அடிக்கும் சுயதம்பட்டங்களை தாங்க முடியாமல் மக்கள் அல்லலோப்படுகின்றனர்.



அரசியல்வாதிகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த போட்டியால், ஒரே ரயில் சேவையை 4 அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் தொடங்கி வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அப்படி 4 முறைத் தொடங்கி வைக்கப்பட்ட ரயில் என்ற பெருமையை, பிரயாக் நகரில் இருந்து கான்பூர் செல்லும் பிரயாக் எக்ஸ்பிரஸ் ரயில் பெற்றுள்ளது. இந்த ரயிலை 4 அரசியல்வாதிகளுமே பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளனர்.

பிரயாக் ஸ்டேசனில் மாலை 4.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இரவு 9.50 மணிக்கு கான்பூர் செல்லும். மொத்தம் 208 கி.மீ தொலைவு பயணிக்கும் இந்த ரயில், 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அந்த ரயில் செல்லும் பகுதியில் உள்ள எம்.பிக்கள் எல்லோரும், அந்த ரயிலை தொடங்கி வைத்த பெருமையை பெற்றுள்ளனர்.

இந்த ரயிலை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும் கான்பூர் எம்.பியுமான முரளி மனோகர் ஜோஷி. கடந்த ஜுலை 4 ம் தேதி, இந்த ரயிலுக்கு முரளி மனோகர் ஜோஷி பச்சைக்கொடிக் காட்ட, பிரயாக்கில் இருந்து கான்பூர் நோக்கி புறப்பட்டது. 'முரளி மனோகர் ஜோஷி பிரயாக் - கான்பூர் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்' என பத்திரிகைகளில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன உன்னாவ் தொகுதி எம்.பி சாக்ஷி மகராஜ், தன் பங்குக்கு அந்த ரயில் சேவையைத் தொடங்கி வைக்க களத்தில் இறங்கினார். அந்தப் பெருமையை தனது நண்பருக்கு கொடுக்க விரும்பி, ஜுலை 5 ம் தேதி தனது நண்பர் பிரியங் ஆர்யாவை ரயிலுக்கு பச்சைக் கொடி காட்ட வைத்து பெருமைப்பட்டுக் கொண்டார். .

இந்த பட்டியலில் அடுத்து வருபவர் கவுசாம்பி தொகுதி பரதிய ஜனதா கட்சியின் எம்.பி வினோத் சோனகர். இவர் லெலோபால்குஞ்ச் ரயில் நிலையத்தில், மணப்பெண் போல ரயிலை அலங்கரித்து பச்சைக் கொடி காட்டி பெருமைப்பட்டார். நான்காவதாக உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சேசல் பிரசாத் மவுரியா, இந்த ரயிலுக்கு பச்சைக் கொடி காட்டினார்.

இந்த ரயில் சேவையைத் தொடங்கி வைத்த 4 பேருமே, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள்தான். ஒரே கட்சிக்குள் இவ்வளவு உள்குத்தா என மாயாவதி கட்சியினர் சிரிக்கின்றனர்.

'கெட்டே போகாத சிக்கன் பிரியாணி வேணுமா?' அலற வைக்கும் ஐ.ஆர்.சி.டி.சி


'கெட்டே போகாத சிக்கன் பிரியாணி வேணுமா?' அலற வைக்கும் ஐ.ஆர்.சி.டி.சி.





நீண்ட தூரம் செல்லும் ரயில் பயணிகள் வசதிக்காக 6 மாதம் வரை கெட்டுப்போகாத பிரியாணி உள்பட எட்டு வகையான உணவை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு நாளிலேயே உணவுகள் கெட்டு போகும் நிலையில், ஆறு மாதங்கள் கெட்டுப்போகாத உணவு வழங்கப்படுவதால் உடல் நலம் பாதிக்கப்படாதா என்று கேள்வி எழுப்புகின்றனர் ரயில் பயணிகள்.

ரயில்களில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கும், இரவு நேரங்களில் ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கும் உதவிடும் வகையில் உணவு வழங்கும் புதிய திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மத்திய அரசின் கீழ் செயல்படும் டி.எப்.ஆர்.எல். நிறுவனம் மூலம் தற்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கலவை சாத வகைகளான லெமன் சாதம், புளிசாதம், வெஜ் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பருப்பு சாதம் மற்றும் கோதுமை உப்புமா உள்ளிட்ட 8 வகையான சாப்பாடு வகைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த உணவு வகைகள் ‘ரிடோர்ட் பாக்கெட்’ என்ற முறையில் ‘பேக்கிங்’ செய்யப்படுகிறது. குறைந்தது 6 மாதம் வரை கெட்டுப்போகாதாம். சோதனை முறையில் இந்தத் திட்டம் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர், ஒரு மாதத்துக்கு இந்த சாப்பாடு வகைகள் ரூ.32 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. டி.எப்.ஆர்.எல். நிறுவனத்தில் இருந்து ஐ.ஆர்.சி.டி.சி. அந்த உணவு பொருட்களை எப்படி ‘பேக்கிங்’ செய்வது என்று கற்றுக்கொண்டு புதியதாக ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. அப்படி அமைத்ததும், சாப்பாடு வகைகளின் விலைப்பட்டியல் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த சாப்பாடு வகைகளை வாங்கிய பின்னர் 2 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு அதன் பின்னர் பிரித்து சாப்பிடலாம். இந்த திட்டத்துக்கு ‘ரெடி டூ ஈட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ரயில் பயணியொருவர் கூறுகையில்,


"ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் புழுக்கள் காணப்படுகின்றன. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டால் அவர்கள் பதில் அளிப்பதும் இல்லை. உணவைத் தரப்படுத்துவதுமில்லை. ரயில்வே சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. இப்படி மோசமான உணவுகளை விற்பனை செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி. இப்போது ஆறு மாதம் கெட்டுப்போகாத உணவுகளை விற்பனை செய்ய உள்ளது. இதனை சாப்பிட்டால் நாங்கள் அவ்வளவுதான். உணவுகளின் தரம் குறைந்து வரும் நிலையில், உணவுகள் கெட்டுப் போகாத வகையில் தயாரிக்கப்படும் உணவுகளில் எப்படிப்பட்ட கெமிக்கல் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் எங்களது உடல் நிலை எப்படி ஆரோக்கியமானதாக இருக்கும்".என்றார்.

ஐ.ஆர்.டி.சி. கவனிக்குமா?

600 சிம்கார்டுகள், 25 மேன்சன்கள், தென்காசி அரிவாள்..!' -ஆந்திரா வரை நீளும் சுவாதி கொலை வழக்கு


vikatan.com
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், மூன்று நாட்கள் போலீஸ் விசாரணைக்குப் பிறகு, இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ' ராம்குமார்தான் கொலையில் ஈடுபட்டார் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன' என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். 

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ராம்குமாரை, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள  டி.மீனாட்சிபுரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் கைது செய்தது போலீஸ். நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரிடம், மாஜிஸ்திரேட் ராமதாஸ் ரகசிய வாக்குமூலம் வாங்கினார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரை, மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பியது நீதிமன்றம். போலீஸ் விசாரணையின்போது, சுவாதியின் நண்பர் முகமது பிலால் சித்திக் உள்ளிட்ட சிலரும் உடனிருந்தனர்.

"கொலை நடந்த மூன்றே நாட்களில் ராம்குமார்தான் குற்றவாளி என்ற இறுதி முடிவுக்குக் காவல்துறை வந்துவிட்டது. அதற்கேற்ப ஏராளமான ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த வழக்கிற்கும் ராம்குமாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் தேவையில்லை. ஆனால், கொலைக்கான பின்னணி ஒருதலைக் காதல் என்று சொல்வது தவறானது" என்கிறார் இந்த வழக்கில் ஆரம்பம் முதல் பயணிக்கும் வழக்கறிஞர் ஒருவர். 

அவர் மேற்கொண்ட விசாரணையின்படி எழுப்பப்படும் சந்தேகங்கள் இதோ...! 

1. சுவாதி படுகொலை வழக்கு மாநில போலீஸாருக்கு மாற்றப்பட்ட தினத்தன்றே, நுங்கம்பாக்கத்தைச் சுற்றியுள்ள 25 மேன்சன்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சம்பவ நாளன்று செங்கோட்டைக்கு கிளம்பிய ராம்குமார் மீது சந்தேகம் வலுத்துவிட்டது. அறையில் தங்குவதற்காக ராம்குமார் கொடுத்த விண்ணப்பப் படிவத்தில் இருந்த படமும் சி.சி.டி.வி பதிவுகளும் சந்தேகத்தை உறுதி செய்தன. 

2. நுங்கம்பாக்கம் மேன்சன்களில் தங்கியிருந்தவர்களின் 600 செல்போன் நம்பர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில், கொலை நடந்தபோது சுவாதியின் செல்போன் டவரும் ராம்குமாரின் செல்போன் டவரும் ஒரே இடத்தைக் காட்டியுள்ளன. வழக்கின் மிக முக்கியமான ஆதாரம் இது. 

3. ஐந்து முறை ராம்குமார் சுவாதியைப் பின்தொடர்ந்துள்ளார். அப்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் பிலாலுக்கு மெசேஜ் அனுப்பிய சுவாதி, 'கறுப்பாக, ஒல்லியாக இருக்கும் ஒருவன் என்னைப் பின் தொடர்கிறான்' எனக் கூறியுள்ளார். அந்த மெசேஜ்களை அனுப்பும் நேரத்தில் ராம்குமார் இருந்த இடமும், சுவாதி இருந்த இடமும் ஒன்று என துல்லியமாகக் காட்டுகிறது செல்போன் டவர். அதாவது நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூர் வரையில் சுவாதியைப் பின்தொடர்ந்துள்ளார் ராம்குமார். 

 

4. ஏப்ரல் மாதத்தில் சென்னை வந்த ராம்குமார் வேறு எங்கும் வேலைக்குப் போகவில்லை. அந்த மாதம் செல்போன் அலைவரிசை நுங்கம்பாக்கத்தையே காட்டுகிறது. மே மாதத்தில் பல நாட்கள் மேன்சனைச் சுற்றியுள்ள பகுதிகளை வலம் வந்திருக்கிறார். அதே மாதம் 20 மற்றும் 21 ஆகிய இரு தேதிகளில் ஆந்திரா சென்று வந்திருக்கிறார். அங்கு யாரை சந்தித்தார்? ஆந்திரா சென்றதற்கான நோக்கம் என்ன என்பது மிக முக்கியமான கேள்வி. அந்த இரண்டு நாட்களும் ராம்குமாரின் செல்போன் ஆந்திரா டவரைக் காட்டுகிறது. 'ஆந்திராவில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. வேலைக்காக சென்று வந்திருக்கும் வாய்ப்புகளும் இல்லை' என்கின்றனர் சிலர். 

5. நெல்லையில் ராம்குமாரை கைது செய்தபோது அவரது வீட்டில் இருந்து சுவாதியின் செல்போனைக் கண்டெடுத்ததாக போலீஸ் சொல்கிறது. ஆனால், கொலை நடந்த மறுநாள் (25-ம் தேதி) இரவு 8.30 மணிக்கு சுவாதியின் செல்போன் சென்னையில் ஆன் ஆகியிருக்கிறது. சில நிமிடங்களில் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது சுவாதியின் செல்போன் யாரிடம் இருந்தது? 24-ம் தேதி இரவே ராம்குமார் செங்கோட்டைக்குப் போய்விட்டார். கொலைக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, சுவாதியின் செல்போன் மைசூரு டவரைக் காட்டுகிறது. அவர் ஏன் அங்கு சென்றார்? தனியாகச் சென்றாரா... நண்பர்கள், உறவினர்களுடன் சென்றாரா..? அதைப் பற்றி போலீஸார் மௌனம் காப்பது ஏன்? 

6. ராம்குமாரை முன்னிறுத்தி இந்தப் படுகொலைக்கான ஆபரேஷனை இயக்கியவர்கள் யார்?சுவாதி கொல்லப்பட வேண்டும் என எண்ணியவர்களுக்கு, ராம்குமார் கருவியாகப் பயன்பட்டாரா? கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, தென்காசியில் உள்ள பாப்பம்பாளையத்தில் வாங்கப்பட்டிருக்கிறது. சுவாதி கொலைக்கான ஆபரேஷனுக்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்டாரா ராம்குமார்? 

- இப்படி சந்தேகங்களை விவரித்தவர், " இந்த வழக்கில் வெளியில் வராத மர்மங்கள் பல இருக்கின்றன. சுவாதியின் நட்புகள், அவரது தந்தையோடு ஏற்பட்ட சண்டைகள் என முக்கியமான சிலவற்றைத் திட்டமிட்டு மறைக்கின்றனர். கைது செய்யப்பட்ட ராம்குமார், சுவாதியைக் காதலித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அவர் சுவாதியைப் பின்தொடர்ந்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஏன் பின் தொடர்ந்தார்?; சுவாதியைக் கொல்வதற்கான ஆபரேஷனை வடிவமைத்தது யார்?; ராம்குமாரை இயக்கியது யார் என்பதைப் பற்றியெல்லாம் போலீஸாருக்கு எவ்வித அக்கறையும் இல்லை.


அதனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தால் வழக்கின் போக்கு வேறு திசையில் பயணிக்கும் என்பதால், ஒருதலைக்காதல் என்பதோடு வழக்கை முடித்துக் கொள்ள விரும்புகின்றனர். நேற்று ஐந்து வெற்றுத் தாள்களில் ராம்குமாரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர் போலீஸார். அதில் வேண்டிய வரிகளை இட்டு நிரப்பும் வாய்ப்புகளே அதிகம். எனவே, மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டால் கொலைக்கான உண்மைப் பின்னணி வெளியாகும் என நம்புகிறோம்" என்றார் நிதானமாக. 

-ஆ.விஜயானந்த்

NEWS TODAY 25.09.2024