Thursday, November 3, 2016

தகர்க்கப்பட்டது மவுலிவாக்கம் 11 மாடி அடுக்குமாடி கட்டடம்


சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி அடுக்குமாடி கட்டடம் வெடி மருந்து மூலம் நேற்று மாலை 6.52 மணிக்கு தகர்க்கப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் இருந்த இரண்டு 11 மாடி அடுக்குமாடி கட்டத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி அருகில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அடுக்குமாடி கட்டடம் இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று கட்டடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, தரைதளம், 5வது தளம் உள்ளிட்டவற்றில் உள்ள தூண்களில் துளையிடப்பட்டு வெடிமருந்துகள் வைக்கப்பட்டன. இதற்காக திருப்பூரில் இருந்து மேக்லிங்க் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டடத்தை இடிப்பதற்கான அனைத்துப் பணிகளையும் அதிகாரிகள் முன்னிலையில் செய்தனர். இடிப்பதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியவுடன் 5வது தளத்தில் உள்ள வெடிமருந்துகள் வெடித்தன. அடுத்த சில நொடிகளிலேயே முதல்தளத்தில் உள்ள வெடிமருந்துகள் வெடித்தன. இதைத் தொடர்ந்து அந்த பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சி அளித்து.

கட்டடம் இடிக்கும் பணி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, சிஎம்டிஏ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இது குறித்து கட்டடம் இடிப்பு பணியில் ஈடுபட்ட நிபுணர்கள் கூறுகையில், "இந்த கட்டடத்தின் வரைபடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சில நாட்களாக ஆய்வு செய்தோம். எந்த தூண்களின் பிடிமானத்தில் கட்டடத்தை தாங்கும் சக்தியை கண்டறிந்தோம். அடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடத்தை அப்படியே சீட்டுக்கட்டு சரிவது போல இடிக்க ஏற்பாடு செய்தோம். இதனால் அருகில் உள்ள எந்த கட்டடங்களுக்கும் எந்தவித பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டோம். கண்மூடி கண்திறக்கும் நொடிக்குள் 11 மாடி கட்டடமும் இடித்துத் தள்ளப்பட்டது" என்றார்.

3 நொடிகளுக்குள் 11 மாடி அடுக்குமாடி கட்டடமும் இடிக்கப்பட்டது. கட்டடம் தகர்க்கப்பட்டு 30 நிமிடங்களுக்கு மேலாக, அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் காணப்பட்டது. பாதுகாப்பு கருதி அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதற்கு மத்தியில், அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டு இருந்த மக்கள், கட்டடம் தகர்க்கப்பட்டதற்குப் பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அதிகாரிகள், மற்றும் போலீசார் இரவு முழுவது, அந்தப் பகுதியிலேயே முகாம் இட்டிருந்தனர்.


எஸ்.மகேஷ், ந.பா.சேதுராமன்
வீடியோ/படம்: ஆ.முத்துக்குமார், தி.குமரகுருபரன்

Wednesday, November 2, 2016

மாணவர்களுக்கு ''வாட்ஸ் அப்'' வரமா.... சாபமா

DINAMALAR

அலைபேசியில் அனுப்பும் குறுந்தகவலுக்குப் பதில் காணொலி, கேட்பொலி மற்றும் உருப்படிமங்களை எளிமையாகத் தடையின்றி அனுப்புவதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது 'வாட்ஸ் ஆப்' செயலி. அமெரிக்காவைச் சார்ந்த ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகியோரின் முயற்சியால் 2009 பிப்., 24ம் தேதி சிலிகான் பள்ளத்தாக்கில் 55 பணியாளர்களைக் கொண்டு 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் துவங்கப்பட்டது. அதன் மூலம் 'வாட்ஸ் ஆப்' செயலி
உருவாக்கப்பட்டது.
ஜான், பிரைன் இருபதாண்டுகளாக 2007 செப்., வரை யாஹூ நிறுவனத்தில் கணினி சார்ந்த வேலைகளைச் செய்தனர். பின் 'பேஸ்புக்' நிறுவனத்தில் வேலையில் சேர முயற்சித்தனர். அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. மனம் தளராத இருவரும், வரும் காலங்களில் மக்கள் 'ஸ்மார்ட் போன்' உபயோகிப்பர் என கணித்து, 'வாட்ஸ் ஆப்' செயலியை உருவாக்கியதுதான் இன்றைய அவர்களின் இமாலய வெற்றிக்குக் காரணம். 'வாட்ஸ் ஆப்' நிறுவனர்களான ஜான் மற்றும் பிரைன் ஆகியோரை வேலைக்கு எடுக்காத 'பேஸ்புக்' நிறுவனம், ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு 2014 பிப்., 19 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்தைத் 1600 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

மைனர்களுக்கு தடை

'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துபவர்கள், தங்கள் சொந்தத் தகவல்களை வெளியிடுவதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும். பதினாறு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அதைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்துவது தெரிந்தால் உடனடியாக 'வாட்ஸ் ஆப்' குழுவிலிருந்து நீக்கப் படுவர் என்பதை 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் விதிமுறையாக குறிப்பிட்டது. ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறை எவ்வளவுதுாரம் காப்பாற்றப்பட்டுள்ளது என தெரியவில்லை.
80 கோடி பேர்

உலகில் 80 கோடி நுகர்வோர் 'வாட்ஸ் ஆப்' செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். மாதம் லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனாளர்கள் உருவாகின்றனர். 'வாட்ஸ்ஆப்' பயன்படுத்துபவர்களில் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
'ஸ்மார்ட் போனுடன் 'வாட்ஸ் ஆப்' வைத்திருப்போரை, இன்றைய நாகரிகக் குறியீடாக உருவாக்கி, அவர்களைத் தங்கள் மாய வலைக்குள் சிக்கவைக்கும் வேலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இந்த கவர்ச்சி வலையில் சிக்கிய மாணவர்கள், 'வாட்ஸ் ஆப்'க்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் மாணவர்கள் சுயமாகச் சிந்திக்கும் நேரத்தையும் கல்வி கற்கும் நேரத்தையும் இழக்க நேரிடுகிறது. இதைப் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் உணர்ந்து, அதைப் பயன்படுத்த முறையாக வரையறை செய்ய வேண்டும்.
அரட்டைக்காக பயன்படும் அவலம்

'ஸ்மார்ட் போனுடன் வாட்ஸ் ஆப் பயன்படுத்தக் கூடிய மாணவர்களிடம், அவர்கள் கல்வி முறையில் ஏற்படக்கூடிய நன்மை மற்றும் தீமைகளை அறிய, தென்மாவட்ட தகவல் தொழில் நுட்ப இளைஞர்களை ஒருங்கிணைத்து வரும் 'மதுரை ஐடியன்ஸ்' அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
மதுரை மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளிடம் ஆய்வு நடந்தது. அவர்களிடம் கலந்துரையாடல், அலைபேசி, மின்னஞ்சல், முகநுால், மற்றும் டுவிட்டர் வழியாகக் கேள்விகளை கேட்ட போது கல்வி, பொதுத் தகவல், அரட்டை, குடும்பம் போன்ற நான்கு நியாயமான காரணங்களுக்காக இதைப் பயன்படுத்துவதாகப் பெரும்பாலோர் தெரிவித்தனர்.
அவர்களிடம் பெற்ற தகவல்களைப் பகுப்பாய்வு செய்ததில், மாணவர்கள் அரட்டைக்காகவும், பொதுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், “வாட்ஸ்ஆப்'” பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.
மாணவிகள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்த தகவல்களை நண்பர்களிடம் தெரிவிக்கவும் அரட்டைக்காகவும் பயன் படுத்துவதாகத் தெரிவித்தனர்.
கல்விக்கான பயன்பாடு குறைவு

மிக குறைந்த எண்ணிக்கையினரே கல்விக்காக பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.கல்விக்காக -8, பொதுத் தகவலுக்காக -11, அரட்டைக்காக -72, குடும்பத்திற்காக -9 சதவீதம் பயன்படுத்தியுள்ளனர். 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்தியவர்கள் 72 சதவீதம் பேர் நடந்து முடிந்த தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுத்ததையும்
ஒப்புக்கொண்டனர்.
நுாறு பேர் கொண்ட குழுவாக இருப்பதால், அரட்டையடிப்பதிலேயே மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், அதனால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த நேரத்தை ஒதுக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைப் பார்க்கும் போது வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும், வலிமை இழந்து போய்க் கொண்டிருக்கும் மாணவ மாணவியரின் பொன்னான நேரம் குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் ஏற்படுத்தித் தர வேண்டியது
அவசியம் என்பது தெரிகிறது. 'வாட்ஸ்ஆப்' செயலியில் மாணவ மாணவியர் ஆங்கிலத்தில் மிகச் சுருக்கமாகவும், வேகமாகவும் எழுதிப் பழகுவதால் மொழிப் பயன்பாட்டில் நிறைய குழப்பங்களும் இலக்கணப் பிழைகளும் ஏற்படுகின்றன. இது தேர்வுகளிலும் அவர்களை அறியாமல், எழுத்துப் பிழை ஏற்படுத்த வைப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பாதிக்கப்படும்

கல்வியின் தரம்

'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, ஆம் என 76, பாதிப்பு இல்லை என 24 சதவீதத்தினரும் பதில் அளித்துள்ளனர்.
மாணவர்களின் கல்வி மட்டும் பாதிக்கப்படாமல், ஒருவர் பொழுதுபோக்காகக் காணொலி, கேட்பொலி ஆகியவற்றை 'வாட்ஸ்ஆப்' பில் தடையின்றி அனுப்புவதால் அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் அவை செல்கின்றன.
அவற்றை விருப்பம் இல்லாமலும் பார்க்க வேண்டிய சூழல் அக்குழுவிலுள்ள அனைவருக்கும் ஏற்படுகிறது. ஒருவகையில் அதுவே அவர்களின் நேரத்தைச் சூறையாடத் தொடங்குகிறது.

'வாட்ஸ் ஆப்' போதை

உண்மையான தேவைக்குப் பயன்படவேண்டிய மின்சாரம் மற்றும் இணைய சேவையும் திசைமாறி வீணாகிறது என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இதுவே தொடர்ந்து, கணவன் மனைவியாகிற நிலையில், அவர்களுக்குள் பேசி பகிர்ந்து கொள்ளுதல் என்ற பரஸ்பர உறவு நிலை மாறி 'வாட்ஸ்ஆப்' மூலம் பகிர்ந்து கொள்ளுதல் என்கிற நிலை மேலோங்கி, அவர்களின் நெருங்கிய உறவிற்கு தடையாகவும் அமைந்து விடும்.
'டிவி' மூலம் கால் நூற்றாண்டு களாக மாணவர் கிரிக்கெட் நோய்க்கு ஆட்கொள்ளப்பட்டார்களோ, அதைப்போல 'ஸ்மார்ட்போன்' உதவியுடன் 'வாட்ஸ்ஆப்' என்ற நோயால் இப்போது உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வரு கின்றனர் என ஆய்வு முடிவு மூலம் அறிய முடிந்தது.
எனவே இளம் தலைமுறையினர் வாழ்வை செம்மைப்படுத்தும் விதம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எல்லா நல்லதற்குள்ளும் கெட்டதும் இருக்கிறது. எல்லாக் கெட்டதற்குள்ளும் நல்லதும் இருக்கிறது என்பது 'வாட்ஸ் ஆப்' செயல்பாடு தெரியப்படுத்துகிறது.-பெரி.கபிலன்
கணினி அறிவியல் பேராசிரியர்மதுரை. 98944 06111.

அதிகாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் மட்டும் தான் ரெயில் சேவையா? ரெயில்வே நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு கண்டனம்

மதுரை

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பெட்டிகளை அகற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் மட்டும் தான் ரெயில் சேவையா என்று கூறி, ரெயில்வே நிர்வாகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

2 பெட்டிகள் அகற்றம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வி.பூதிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜசெல்வன், வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–

மதுரையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மதுரைக்கும் தினசரி பாண்டியன் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மொத்தம் 24 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இதில் 3 பெட்டிகள் முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளாகவும், ஒரு பெட்டி முன்பதிவில்லாத பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டியாகவும் இருந்தன.

இந்தநிலையில் கடந்த 15.8.2016 முதல் நவீன ரக பெட்டிகள் பொருத்தப்பட்டு இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இதனால் பெட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பதிவில்லாத பெண்கள் பெட்டி, முன்பதிவில்லாத ஒரு பொதுப்பெட்டி ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.

இணைக்க உத்தரவிட வேண்டும்

ரெயில்வே விதிப்படி ஒவ்வொரு ரெயிலிலும் குறைந்தபட்சம் ஒரு ரெயில் பெட்டி பெண்களுக்கென்று தனியாக ஒதுக்கப்பட வேண்டும். அதேபோன்று ஒவ்வொரு ரெயிலிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக கழிப்பிட வசதி, 4 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி பெட்டி ஒதுக்கப்பட வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

பாண்டியன் விரைவு ரெயிலில், ரெயில்வே விதி மற்றும் சுற்றறிக்கைப்படி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கவில்லை. எனவே, அந்த ரெயிலில் அகற்றப்பட்ட முன்பதிவில்லாத பொதுப் பெட்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தனித்தனி பெட்டிகள் ஆகியவற்றை இணைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பதில் மனு தாக்கல்

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, ஜே.நிஷாபானு ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை ரெயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் குகனேசன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாண்டியன் விரைவு ரெயிலில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய எல்.எச்.பி. கோச் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டி ஒன்றின் நீளம் 24 மீட்டர். ஏற்கனவே இருந்த பெட்டியின் நீளத்தை காட்டிலும் 1.7 மீட்டர் அதிகம். எனவே ரெயில்நிலைய பிளாட்பாரத்தை கணக்கிடும்போது இந்த பெட்டிகள் 22 தான் இணைக்க முடியும். கூடுதல் பெட்டிகள் இணைத்தால் ரெயில்நிலைய பிளாட்பாரத்தை நீட்டிக்க வேண்டியது வரும். அதனால் தான் பாண்டியன் விரைவு ரெயிலில் 2 பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன. இது ரெயில்வே விதிப்படி தான் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கத் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

ஏற்க மறுப்பு

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

‘‘ரெயில் சேவை என்பது ஏழை மக்களின் நலன் கருதி செய்யப்படுகிறது. அவர்களால் ரூ.2 ஆயிரம் கொடுத்து சொகுசு பஸ்களில் பயணம் செய்ய முடியாததால் தான் முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் நெரிசலில் பயணிக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தை புகுத்துகிறோம் என்று அந்த பெட்டிகளை நீக்கிவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? அதிகாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்காகவும் மட்டும் இந்த வண்டி இயக்கப்படுகிறதா?

இந்த ரெயிலில் எலிகள் தொல்லையும் அதிகமாக உள்ளது. அதை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிற 7–ந்தேதி கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.“

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tuesday, November 1, 2016

HC dismisses plea by Muslim woman against divorce based on ‘forged’ papers

Making it clear that a court dealing with writ petitions can only decide on questio
ns of law and not questions of facts, the Madras High Court dismissed a plea moved by a Muslim woman seeking to set aside a ‘Khulanama’ (a document expressing consent for divorce) allegedly obtained by her husband in a fraudulent manner.

According to S. Basheria, a mother of three, her husband T.C.A. Mohamed Yusuf had obtained divorce through an authoritative verdict (fatwa) from the Government Chief Kazi, by showing a fake ‘Khulanama’ dated June 9, 2006, allegedly written by her.
He subsequently married another woman.

In 2007, when Ms. Basheria approached the HC seeking to call for records from the Government Chief Kazi in connection with the divorce granted based on the ‘Khulanama’ and to pay a compensation of Rs. 7 lakh, a single judge of the court dismissed the plea pointing out that a case of forgery was pending before a trial court. Hence, the court was not inclined to entertain the writ petition. “The rights of the petitioner are relegated to be renewed after the conclusion of the criminal trial. At this stage, the writ petition is premature and no relief can be given to the petitioner,” the single judge said.

Assailing the order, Ms. Basheria moved the present appeal. The appellant contended that the single judge had failed to take note of the life of the appellants, who had been stranded by the act of her husband.

She argued that the ‘Khulanama’ was a forged document and by virtue of the divorce certificate issued by the Government Chief Kazi, the appellant and her children were deprived of their rights. Denying her allegations, the Special Government Pleader submitted that as per Muslim law, the ‘Khulanama’ was valid if it contained a proposal and acceptance from the wife and the husband respectively.
Validity issues

He added that the Government Chief Kazi was not a competent person to declare Khulanama valid or forged.

Pointing out that allegations made by the appellants were disputed questions of fact, a Division Bench of Justices Huluvadi G. Ramesh and S. Vaidyanathan said: “It is well settled law that the disputed questions of fact cannot be gone into by this court under Article 226 of the Constitution.”

Basheria had argued that the fake Khulanama deprived her and her children of their rights
சென்னை:
 அவர் உலகின் மிக மெதுவான கேஷியர் இல்லை - ஒரு வைரல் வீடியோவின் உண்மை முகம்!
cashier

'உலகின் மிக மெதுவான கேஷியர்' என்ற பெயருடன் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய வீடியோ ஒன்றின் பின் உள்ள நெஞ்சை உருக்கும் நிஜம் வெளிவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் அண்மையில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. அந்த வீடியோவில்  வங்கி பெண் ஊழியர் ஒருவர் மிகவும் மெதுவாக வேலை செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய இணைய தளத்தில் கருத்து தெரிவித்திருந்த எழுத்தாளர் ஜெயமோகன் மிக கடுமையான வசைச் சொற்களைக்கொண்டு அப்பெண்ணை விமர்சித்திருந்தார். ஜெயமோகனின் இந்த கருத்துக்கு சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து  அந்த கருத்தை தம்முடைய இணையப் பக்கத்தில் இருந்து ஜெயமோகன் நீக்கி விட்டார். மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இதனிடையே அந்த வீடியோவில் இடம் பெற்ற  வங்கி ஊழியரின் உண்மை நிலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குந்தன் ஸ்ரீவத்சவா தம்முடைய முகநூல்  பக்கத்தில் இது குறித்து எழுதியுள்ளதாவது:
வீடியோவில் மெதுவாக வேலை செய்யும் ஊழியர் பெயர் பிரேம்லதா ஷிண்டே. புனேவில் உள்ள மகாராஷ்டிரா வங்கியில் காசாளராக பணியாற்றுகிறார். கணவரை இழந்த அவர் 2017-ம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார். அவரது மகன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். பிரேம்லதா ஷிண்டேவுக்கு 2 முறை ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. ஒருமுறை பக்கவாதத்தாலும்  பாதிக்கப்பட்டவர். வீடியோவில் இடம்பெற்று காட்சியானது சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய நாட்களில் எடுக்கப்பட்டது. இத்தனைக்கும் பிரேம்லதா ஷிண்டேவுக்கு பணிக்கு வராமலேயே முழு சம்பளத்தையும் பெரும் அளவுக்கு மருத்துவ விடுப்புகள் அதிகம் இருக்கின்றன. அதாவது வீட்டில் இருந்து கொண்டே அவர் ஊதியத்தைப் பெற முடியும். ஆனால் பிரேம்லதா ஷிண்டேவோ ஆனால் அதை விடுத்து ஓய்வு பெறும்போது கண்ணியத்துடனும் நேர்மையுடனும் ஓய்வு பெற நினைத்ததால் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வேலைக்கு திரும்பியிருக்கிறார்.
தம்முடைய சிகிச்சைக்கான பணத்தை தாமே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட லட்சக்கணக்கான பெண்களில் ஒருவராகத்தான் பிரேம்லதா ஷிண்டே இருக்கிறார். அவரை விமர்சித்து, கேலி செய்யும் பதிவு போட்டதற்கு பதிலாக அவரது உண்மை நிலையை சொல்லி பாராட்டும் வீடியோவை நாம் போட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு குந்தன் ஸ்ரீவத்சவாவின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்மைக்கு இழுக்கு!

By ஆசிரியர் | Last Updated on : 01st November 2016 01:25 AM

இந்தியாவில் ஏதாவது ஒன்றுக்காக நாம் மகிழ்ச்சி அடையும்போது, அதன் மறுபக்கம் சோகத்தை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. கடந்த மாதம் உலக மக்கள்தொகை குறித்த உலக வங்கியின் அறிக்கை ஒன்று, நாம் ஆறுதல் அடையும் செய்தியை வெளியிட்டிருந்தது. கடந்த 40 ஆண்டுகளாக அரசு மேற்கொண்டு வரும் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றியடைந்திருப்பதுதான் அந்த ஆறுதலான செய்தி.
இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்க விகிதம் கடந்த 40 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை. அவசரநிலைக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு, 1977 முதல் சுகாதார ஊழியர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மட்டுமே கடந்த 40 ஆண்டுகளாகக் குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும்கூட, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் தங்களது குடும்பத்தை அமைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வந்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை.

ஆனால், அது மட்டுமே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறதே தவிர, குடும்பக் கட்டுப்பாட்டுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்வது கணவனா, மனைவியா என்பதைப் பார்க்கும்போது, அந்தத் தகவல் பெருமை சேர்ப்பதாக இல்லை. உலக வங்கியின் அறிக்கையைப் பார்த்த பிறகு, நமது மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்களை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிப்படுகின்றன.

தங்களைக் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திக் கொள்பவர்களில் 98 விழுக்காட்டினர் பெண்களே தவிர ஆண்கள் அல்ல. 2015-16 நிதியாண்டில் இந்தியாவில் 41,41,502 குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. அவற்றில் 40,61,462 அறுவை சிகிச்சைகள் பெண்களுக்கு செய்யப்படும் "டியூபக்டமி' அறுவை சிகிச்சைகளாகும்.
பெண்களுக்கான "டியூபக்டமி'யைவிட, ஆண்களுக்கு செய்யப்படும் "வாசக்டமி' என்கிற கருத்தடை சிகிச்சை எளிமையானது, பக்க விளைவுகள் இல்லாதது, பத்திரமானது. அதனால் ஆணுடைய இயல்பான இல்லற வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவும் செய்யாது. ஆனாலும், "வாசக்டமி' செய்து கொள்வதால் தங்களது ஆண்மைத்தனம் குறைந்துவிடுமோ என்கிற பயத்தில் ஆண்கள், தங்களது மனைவியரை பக்கவிளைவுகளையும் பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடிய "டியூபக்டமி' கருத்தடை சிகிச்சைக்கு உட்படுத்திவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள்.
வழக்கம்போல, இந்திய ஆணாதிக்க சமுதாயத்தில், பெண்கள் இதற்கான விலையைத் தரவேண்டி இருக்கிறது. பல பெண்கள் "டியூபக்டமி' அறுவை சிகிச்சையில் மரணமடைந்திருக்கிறார்கள். 2014-இல் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் அரசு நடத்திய கருத்தடை அறுவை சிகிச்சை முகாமில் 15 பெண்கள் இறந்த சம்பவத்திற்குப் பிறகும்கூட, நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்ட
தாகத் தெரியவில்லை. இதுபோன்ற அறுவை சிகிச்சை முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள்கூட இருப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை.
அதுமட்டுமல்ல, ஆண்களுக்கு செய்யப்படும் "வாசக்டமி' போல, பெண்களுக்கு செய்யப்படும் "டியூபக்டமி' அறுவை சிகிச்சை பாதுகாப்பனதும், வெற்றிகரமானதும் அல்ல. பல நிகழ்வுகளில், "டியூபக்டமி' அறுவை சிகிச்சைக்குப் பிறகும் பெண்கள் கருத்தரித்திருக்கிறார்கள். அவர்கள் கருக்கலைப்புக்குத் தங்களை உட்படுத்திக் கொண்ட சம்பவங்கள் ஏராளம். இதன் பக்க விளைவுகளும், அதனால் ஏற்படும் மன உளைச்சலும் பெண்களைக் கடுமையாக பாதிப்பதாகப் பல சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.கருத்தடை அறு
வை சிகிச்சை முகாம் என்பது போன்ற அவமானகரமான நிகழ்வு வேறு எதுவுமே இருக்க முடியாது. இதைவிடக் கேவலமாக மகளிரை அவமானப்படுத்த முடியாது. குறிப்பாக, ஏழை எளிய, படிப்பறிவு இல்லாத பெண்கள், வரிசையில் நிறுத்தப்பட்டு பதிவு செய்து கொள்ளும் அநாகரிகத்தை நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது. ஏதோ மிருகங்களுக்கு செய்யப்படுவதுபோல அவசர அவசரமாக அவர்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது. பல நிகழ்வுகளில் அவர்களது ஒப்புதல் இல்லாமலேகூட அறுவை சிகிச்சை நடத்தப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை மகளிர் அமைப்புகள் தாக்கல் செய்தன. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதுபோன்ற கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்துவதை அரசு முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுபோன்ற வற்புறுத்தல்கள் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் இருத்தல் கூடாது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
மகளிர் உரிமையையும், அவர்களது கெளரவத்தையும் பாதுகாத்து, சுகாதார ஊழியர்கள் மூலம் பெண்களுக்கு கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அறுவை சிகிச்சை இல்லாமலே குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க ஆலோசனைகள் வழங்குவதுதான் சரியாக இருக்கும். பெண் சுகாதார ஊழியர்களைப் போல, ஆண் சுகாதார ஊழியர்கள் மூலம் ஆண்கள் மத்தியில் "வாசக்டமி' குறித்த தேவையற்ற அச்சத்தை அகற்றி, கருத்தடை அறுவை சிகிச்சைக்கு அவர்களை உட்படுத்துவதில் அரசு முனைப்புக் காட்டுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
மக்கள்தொகைப் பெருக்க விகிதம் குறைவது மகிழ்ச்சியை அளித்தாலும், பெண்கள் மட்டுமே இதற்குக் காரணமாக இருப்பதும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதும் அதிர்ச்சி அளிக்கிறது. இதை மாற்றியாக வேண்டும்!

கொண்டாடவா? சிந்திக்கவா?
By கே.எஸ். இராதாகிருஷ்ணன் | Last Updated on : 01st November 2016 01:25 AM +அ

தமிழ்நாடு மாநிலம் அமைந்து இன்று (நவம்பர் 1) 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா துக்கமா என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம்.
சென்னை ராஜதானி என்று அழைக்கப்பட்ட ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்ததை 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக சென்னை மாகாணம் என்று பிரிந்த பின்பு அண்ணா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.
கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தோன்றிய நாளையொட்டி ஆண்டுதோறும் அந்தந்த மாநில அரசுகள் விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை.
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்உலகம்' என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லையை வரையறுத்து கூறுகிறது. ஆங்கிலேயர் வங்க தேசத்தை சூழ்ச்சியால் இரண்டாகப் பிரித்தனர். அன்றைக்கு காங்கிரஸ் இச்சூழ்நிலையை கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில், ஐக்கிய தமிழகம், விசாலா ஆந்திரம், நவ கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 1952 அக்டோபர் 13-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் டிசம்பர் 15 அன்று அவருடைய மரணத்தில் முடிந்தது. இது ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பி, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இதன் விளைவாக கர்நூலைத் தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்திற்குச் சொந்தமான திருப்பதியை தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், "மெட்ராஸ் மனதே' என்ற கோஷம் எழுப்பி அர்த்தமற்ற முறையில் போராடினார்கள்.

சென்னை மாகாணம், தமிழகம் உருவானதற்கு பின்னால் பலரின் தியாகங்கள் உள்ளன.
தமிழகத்தின் வட எல்லையான திருத்தணியையும், திருப்பதியையும் தமிழகத்திற்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நடத்திய போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன.

வடக்கு எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி., கொ.மோ. ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ. தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, அ. லூயிஸ், மு. வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி. சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரசார பணியையும் மேற்கொண்டார்.

மங்களங்கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று புகை வண்டி மூலமாக வட எல்லைப் பகுதியான திருப்பதிக்கு பயணப்பட்டார். ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தனர். கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்பொழுது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் "வேங்கடத்தை விட மாட்டோம்' என்று ஒரு மணி நேரம் கர்ஜித்தார்.

ம.பொ.சி. நடத்திய மொழிவாரி மாநிலப் பிரச்னை வேகமடைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. ஆனால், திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகளை நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

09.04.1953 முதல் 24.4.1953 வரை கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் நடைபெற்றன. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி.யை தாக்க சதிகளும் தீட்டப்பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றினார். இவரை நெல்லை தமிழன் என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ம.பொ.சி. 1953 ஜூலை 3-ஆம் தேதி தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத் தண்டனை பெற்றார்.
திருத்தணி எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக அன்றைய தமிழக - ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.
ஒரு காலத்தில் வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகியவற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்னை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக, தமிழக - ஆந்திர சட்டப்பேரவைகளில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ். மணி ஆவார். சாம் நதானியெல், நேசமணி போன்ற போர்க்குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை பிறந்தது. மணிக்கு ம.பொ.சி.யின் ஆதரவு கிடைத்தது.
1954 ஜூனில் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரசாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். அச்சமயத்தில் திருவிதாங்கூர் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.

1950-இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து அன்றைய கொச்சி முதல்-அமைச்சரும் தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசி முடிவு எடுத்தனர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமசர திட்டத்திற்கும் நாங்கள் தயார் இல்லை எனவும் தெரிவித்தார்.
குஞ்சன் நாடார் போன்ற போராட்டத் தளபதிகள் இப்பிரச்னையில் அணிவகுத்தனர். குமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீஸாரால் சுடப்பட்டு மாண்டனர்.
நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும் குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீஸாரால் பிடிக்கப்பட்டு அடித்து உதைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்து போராட்டத்தை நடத்தி வந்த மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீஸார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர்.

இதுபோன்று போராட்டங்களை நடத்தி வந்த சட்டநாத கரையாளர் செங்கோட்டையில் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார்.

இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் - கொச்சி பகுதிகளை உள்ளடக்கிய கேரள முதல் - அமைச்சர் மனம்பள்ளி கோவிந்தமேனனும் பேசியபின் தேவிக்குளம் - பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது.
அதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கன்னியாகுமரி - செங்கோட்டை தமிழகத்தில் இணைந்தது. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபொழுது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

1956 நவம்பர் 1-ஆம் தேதி நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழாவில் காமராசர் கலந்து கொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவில் செங்கோட்டையில் சி. சுப்பிரமணியன் பங்கேற்றார்.
நாகர்கோவிலில் நடந்த விழாவிற்கு தியாகி பி.எஸ். மணியை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மணி இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை பங்கேற்க வைத்து குமரி மாவட்ட இணைப்பு விழாவை சிறப்பாக நடத்தினார்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். ஈ.வெ.ரா. பெரியார், அண்ணா, பொது உடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தினர்.
தட்சணப்பிரதேசம் என்ற பெயரில் தக்கண பீடபூமி மாநிலங்களை ஒன்றிணைக்க பண்டித நேரு நடவடிக்கை எடுத்தபொழுது முதல் கண்டனக் குரல் அன்றைய முதல் அமைச்சரான காமராஜரிடம் இருந்து எழுந்தது.
மொழிவாரியாக மாநிலங்கள் அமைய வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். பெரியார், அண்ணா ஆகியோரின் குரல்கள் காமராஜரின் எதிர்ப்புக்கு வலு சேர்த்தது.

கடந்த காலங்களில் தமிழர் இழந்த நிலங்கள் ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகத்திலும் உள்ளன.
கொள்ளேகால், பெங்களூரு, கோலார் ஆகிய பகுதிகளை கர்நாடகத்திடம் நாம் இழந்து உள்ளோம். 1956-இல் தமிழகத்தின் விருப்பத்திற்கு மாறாக நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை, தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளை கேரளத்தோடு முறைகேடாக சேர்த்துவிட்டனர்.ஆந்திரத்தில் சித்தூர், நெல்லூர், திருப்பதி பகுதிகளை இழந்துவிட்டோம்.
இந்த நாள் கொண்டாடவா சிந்திக்கவா என்று புரியவில்லை.

கட்டுரையாளர்: வழக்குரைஞர்.










Monday, October 31, 2016

ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா

By இரா. இராஜாராம்  |   Last Updated on : 31st October 2016 02:06 AM  |   
சுதந்திரமாக ஓடி விளையாடித்திரிய வேண்டிய இளவயது குழந்தைகளை காலுறை போட்டு இறுக்கமான ஷூ அணிவித்துக், கழுத்தை இறுக்கி டை கட்டிக் கனமான புத்தக மூட்டையை முதுகிலேற்றி ஆங்கில வழிப்பள்ளிக்கு அனுப்புவதே இன்றைய நாகரிகமாகிவிட்டது.
காலை எட்டு மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் குழந்தை மாலை வரை வகுப்பறையில் அடைபட்டு, ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு உடலும், மனமும் சோர்ந்து போய் வீடு திரும்புகிறது.
வீட்டிற்கு வந்த குழந்தைகளுக்கு பெற்றோர் தின்பண்டங்கள் ஏதாவது உண்ணக்கொடுத்து ட்யூஷனுக்கு அனுப்பி
விடுவது அல்லது வீட்டில் உட்காரவைத்துச் சலிப்பூட்டும் வீட்டுப் பாடங்களைச் செய்ய வைப்பது எனக் குழந்தைகள் வாழ்வு குதூகலமின்றி நெருக்கடிக்குள்ளாகிறது. பெரும்பாலான குழந்தைகளை மாலை நேரத்தில் கூட விளையாட அனுமதிப்பதில்லை.
அவர்களைப் புத்தகப் புழுவாக, மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக ஆக்கிடவே பெற்றோர்கள் பெரிதும் விரும்புகின்றனர். நகரங்களில் மட்டுமே இருந்த இந்த நிலை இப்போது கிராமங்களையும் தொற்றிக்கொண்டது.
ஐந்து வயது முடிந்த பின்பே பள்ளியில் சேர்ப்பது என்ற நடைமுறை இருக்கிறது. அதுவரையாவது குழந்தைகள் இயல்பாகச் சுற்றித்திரிந்து தன்னம்பிக்கையுடன் விளையாடி மகிழும்.
ஆனால் ஆங்கில மோகமும், பகட்டுக்கல்வியும் பச்சிளங் குழந்தைகைளக்கூட பள்ளியில் சேர்த்து விடும் அவல நிலைக்குத்தள்ளிவிட்டது. எந்தப்பள்ளியில் சேர்த்தாலும் ஐந்து வயது நிறைவடைந்த பின்புதான் சேர்த்திட வேண்டும் என்ற நடைமுறையை அரசு கொண்டு வரவேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளிலெல்லாம் ஐந்து வயது வரை புத்தகச் சுமையைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதில்லை. அவர்கள் சுதந்திரமாக விளையாடி மகிழ்ந்திட வாய்ப்பளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் மிகுதியோ அதனைச் செய்திட வாய்ப்புகள் தரப்படுகின்றன.
படிப்படியாகக் கற்பதில் ஆர்வம் வரும்வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுக் கற்றலில் இனிமை ஏற்படுத்தப்படுகிறது. அதனால் அக்குழந்தைகள் கல்வியிலும், விளையாட்டிலும், சிறந்தோங்குவதோடு தன்னம்பிக்கையும், செயல்திறனும், மிக்கவர்களாகவும் உருவாக முடிகிறது.
பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு மைதானம் போதுமான அளவில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். விளையாட்டினால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதோடு, இரவில் நல்ல உறக்கமும் வந்திடும்.
தன்னம்பிக்கையும், நட்புறவும் வளர்கிறது. ஒழுக்கக்கேடான பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் ஆற்றல் விளையாட்டுகளுக்கே உண்டு.
மெக்ஸிக்கோவிற்கு அருகில் உள்ள மிகச் சிறிய நாடு கவுதமாலா. இது போதைப்பொருட்கள் கடத்தல் மையமாக இருந்து வந்தது. அங்கு அமெரிக்காவைச் சேர்ந்த கம்டன் கிரிக்கெட் கிளப் கிரிக்கெட் விளையாட்டை அறிமுகம் செய்து அங்குள்ளவர்களை விளையாடும்படிச் செய்தனர்.
அதன்பிறகு அங்குப் பெருமளவில் குற்றங்கள் குறையத் தொடங்கி விட்டதையும் கண்டறிந்தனர். இதே கம்டன் கிரிக்கெட் கிளப் அமெரிக்காவிலும் போதைக்கு அடிமையானவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி நல்ல பலன் கண்டுள்ளது.
கபடி, கோகோ, போன்ற விளையாட்டுகள் நம் நாட்டின் கிராமப்பகுதிகளில் பரவலாக விளையாடப்படுகிறது. நகரங்களில் ஆங்காங்கு உள்ள மைதானங்களிலும், கிடைக்கும் இடங்களிலும் கிரிக்கெட், வாலிபால், பேட்மிண்டன், ஹாக்கி போன்ற விளையாட்டுகளை விளையாடி வந்தனர்.
தொலைக்காட்சி, செல்லிடப்பேசியின் வருகைக்குப் பின்பு வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாடுவது பெருமளவில் குறைந்து, உட்கார்ந்த இடத்திலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும், செல்லிடப்பேசியில் வீடியோ கேம் விளையாடுவதிலுமே தங்களை முடக்கிக்கொண்டு விடுகின்றனர்.
சிறுவர் முதல் பெரியவர் வரை தங்களுக்கேற்ற விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்து நாளும் விளையாடிடலாம். குறிப்பாகப் பள்ளி ஆசிரியர்கள் மாலையில் பள்ளி முடிந்து விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுடனும், சக ஆசிரியர்களுடனும் விளையாடிப் புத்துணர்வு பெறலாம். இதில் இரட்டைப்பலன் கிடைக்கின்றது.
காலை முதல் மாலை வரை வகுப்பறையிலேயே பாடம் நடத்திக் களைப்புற்ற ஆசிரியர்களுக்கு மைதானத்தில் விளையாடிச் சோர்வு நீங்கப்பெறுவதோடு, சக ஆசிரியர்களுடனான நட்புறவும் வளர்கின்றது.
மாணவர்களுடன் மைதானத்தில் விளையாடும் போது தங்களுடன் ஆசிரியர்கள் விளையாடுவதைப் பெருமையாகக்கருதி மாணவர்கள் பெருமிதம் அடைவர்.
அலுவலகங்களில், கணினியோடு தொடர்புடைய பணிகள் புரிவோர், சற்று இடம் கிடைத்தாலும் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் சேர்ந் து தினமும் விளையாடுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
விளையாட்டுகளில் ஈடுபடுவதனால் வேண்டாத பழக்கங்களுக்கு அடிமையாவது தடுக்கப்படும். தேவையின்றி எதையாவது நினைத்து வருத்திக்கொண்டிருப்
பவர்கள் தினமும் விளையாடினால் மனம் வளம் பெற்று ஆக்கச்சிந்தனைகள்
வளரும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர். ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் அனைவருமே சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் காட்டியவர்களே. அவர்களுடைய நாடு அவர்களுக்கு ஆதரவளித்து ஊக்கப்படுத்திப் பயிற்சித் தந்ததே ஒலிம்பிக் வெற்றிக்குக் காரண
மாகியது.
குழந்தைகள் விளையாடச் சென்றால் படிப்பு பாதிக்கும் என்ற தவறான எண்ணத்தைப் பெற்றோர்கள் விடுத்து, அவர்களின் நலன் கருதி விளையாட அனுமதிக்க வேண்டும்.

Sunday, October 30, 2016


விழிப்புடன் இருப்போம்!

By ஆசிரியர் | Last Updated on : 29th October 2016 12:35 AM |

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி அதன்மூலம் ஆட்சியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்திருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இதன் தாக்கத்தைப் பார்த்து பயந்து மாற்றங்களைச் செய்ய முற்பட்டது. நல்லவேளையாக, பொதுநல ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் அந்த முயற்சி தடைபட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் அமர்ந்த பிறகு, தகவல் பெறும் உரிமைச் சட்டம் மேலும் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தால், இந்த ஆட்சியும் அதிலுள்ள சிறு சிறு குறைகளைப் பெரிதுபடுத்த முயற்சிக்கிறதே தவிர, அதற்கு வலுசேர்ப்பதாக இல்லை. இந்தப் பிரச்னையில் காங்கிரஸும், பா.ஜ.க.வும் ஒரேமாதிரியான நிலைப்பாட்டைத்தான் கடைப்பிடிக்கின்றன.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற அதிகாரவர்க்கத்தின் குரலை அரசியல்வாதிகளும் பிரதிபலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்தப் பிரச்னையை மாநிலங்களவையில் எழுப்பியவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,மத்திய விமான போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சருமான பிரபுல் படேல். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அரசு திருத்தங்கள் கொண்டு வருமா என்று பிரச்னையைக் கிளப்பினார் அவர்.
இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அவர்.
2005-ஆம் ஆண்டு அவசர கதியில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியதாகவும், அது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். எந்தவொரு தகுதியோ, பின்னணியோ இல்லாதவர்கள்கூட இந்தச் சட்டத்தை பயன்படுத்திக் கேள்வி எழுப்ப தகவல் பெறும் உரிமைச் சட்டம் அனுமதிக்கிறது என்றும், அதனால் அதிகாரிகள் எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அவரை வழிமொழிந்து காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா, சிலர் தங்களை தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் என்று கூறிக்கொள்வதாகவும், அதையே தொழிலாக மாற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதைப் பிரதமர் அலுவலக இணையமைச்சராக இருக்கும் ஜிதேந்திர சிங் ஆமோதிக்கவும் செய்தார். இதிலிருந்து ஆளும் பா.ஜ.க.வும், ஆட்சியிலிருந்த காங்கிரஸும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பது தெரிகிறது.

தனிநபர் குறித்த விவரங்களைக் கோருவது, அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத் தங்களுக்கு எதிரான அதிகாரிகள், ஆட்சியாளர்கள் குறித்த தேவையற்ற கேள்விகளை எழுப்புவது, தேசியப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புவது என்பவை இல்லாமல் இல்லை. ஆனால், ஏறத்தாழ, 20 லட்சம் தகவல்கள் கோரப்படும் நிலையில், இவற்றின் அளவு அதில் 10 சதவீதம்கூட இருக்காது. அதைச் சாக்காக வைத்துத் தகவல் பெறும் உரிமைச் சட்டமே தேவையற்றது என்றோ, அதில் மாற்றங்கள் கொண்டுவந்து பலவீனப்படுத்துவது என்பதோ நியாயமல்ல.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், கடந்த மாதம் மத்திய தகவல் ஆணையத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் அம்ரித் மஹால் கவல் பசுமைவெளி அமைந்திருக்கிறது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் பெற்ற இந்தப் பகுதியில் தேசிய பசுமை ஆணையத்தின் வரைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்கிற கேள்வியை தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் எழுப்பினார். இதற்கு, இந்தக் கேள்வி தேசியப் பாதுகாப்புத் தொடர்பானது என்று கூறி பதில்தர மறுத்துவிட்டனர் அதிகாரிகள். இதுபோல தேசியப் பாதுகாப்பு, தனிநபர் விவரம் என்று கூறி, போதிய கவனம் இல்லாமல் கேள்விகள் நிராகரிக்கப்படுவதை மத்தியத் தகவல் ஆணையம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடுகளில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. சாமானியக் குடிமகனுக்கு, தனது வரிப்பணம் எப்படி செலவிடப்படுகிறது, தனது வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகளும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களும் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் மக்களின் வரிப்பணம், பள்ளிக்கூடங்கள், சாலைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் விரயம் செய்யப்பட்டால் அதைத் தெரிந்துகொள்ள இந்தச் சட்டம் உதவியிருக்கிறது.

பொதுவிநியோகக் கடைகளில் நடக்கும் தவறுகள், அரசு அலுவலகங்களில் கையூட்டுத் தரப்படாததால் தேங்கிக் கிடக்கும் கோப்புகள் குறித்த விவரங்கள் போன்றவை தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களால் வெளிக்கொணரப்பட்டு, தவறுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. மிகப்பெரிய நிதிமோசடிகள், நிலம் ஒதுக்குவதில் முறைகேடுகள், உணவுப் பொருள் பதுக்கல்கள், கருப்புச் சந்தை விவரங்கள் போன்றவை வெளிவருவதற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் பயன்பட்டிருக்கிறது.

ஆட்சியிலும், நிர்வாகத்திலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட உலகிற்கே முன்மாதிரியான தகவல் பெறும் உரிமைச் சட்டம், வலுப்படுத்தப்பட வேண்டுமே தவிர, சில குறைகளை முன்வைத்து பலவீனப்படுத்தப்படக் கூடாது. அதற்கான முயற்சிகளை முறியடித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்!


கல்வி கண் போன்றது

By மா. இராமச்சந்திரன் | Last Updated on : 29th October 2016 12:32 AM |

கடந்த மூன்று ஆண்டுகளில் முப்பத்தெட்டு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இது ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் உண்மை. சாராயக்கடைகள் மூடப்பட்டிருந்தால் சந்தோஷமாயிருந்திருக்கும். மூடப்பட்டிருப்பதோ கண்ணொளி கொடுக்கும் கல்விக்கூடங்கள். கவலையாகத்தான் இருக்கின்றது.

மேலும் பல அரசுப் பள்ளிகளின் அவலநிலை பற்றியும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. 1,200 அரசுப் பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் தெரிவித்துள்ளது.
எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாகவி பாரதியார், "புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்' என்று கூறினார். நாடு விடுதலை பெற்றபின் பொறுப்பேற்ற ஆட்சியாளர்கள் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் காட்டினர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் கல்வித் துறையில் பெரும் புரட்சியே ஏற்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி செய்ததோடு அரசுப் பள்ளிகளையும் தோற்றுவித்தனர். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள் பல திறக்கப்பட்டன.

ஓட்டுக்கூரையும் சிறிய தோட்டமும் கூடிய கட்டமைப்புடன் ஓராசிரியர் பள்ளி, ஈராசிரியர் பள்ளிகளாக அவை செயல்பட்டன. தமிழகத்தில் 300-க்கும் மேல் மக்கள்தொகையுள்ள எல்லா கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

1954-இல் 21,000-ஆக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 1962-இல் 30,000-ஆக அதிக ரித்தது. இதனால் ஏழை, எளியோரின் பிள்ளைகளும் கல்வி கற்கும் வாய்ப்பு உருவானது.

கல்வி கொடுப்பது அரசின் கடமை, அதைப் பெறுவது மக்களின் உரிமை என்ற உணர்வோடு அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த அவலநிலை அரசுப் பள்ளிகளுக்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? மாணவர் சேர்க்கை குறைந்ததால் வந்தது என்பர்.
மாணவர் சேர்க்கை குறைவான இழிநிலைக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பின்மை, பொதுமக்களின் தனியார் மோகம், அரசின் அலட்சியம் என்ற மூன்றையும் காரணமாகச் சொல்லலாம்.

தொடக்கக் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணி செய்த ஆசிரியர்கள்போல் பின்னர் வந்த ஆசிரியர்கள் இல்லை. பள்ளிப் பணியைவிடத் தம் சொந்தப் பணியையே அவர்கள் பிரதானமாகக் கருதினர். சொந்த வேலைகளையெல்லாம் முடித்த பின்னர்தான் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர்.
பாடம் நடத்துவதில் அக்கறையின்றி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாகப் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டனர். பாதி நேரம் பள்ளிக்கு வராமல் வெளி வேலைகளில் ஈடுபட்டனர். அரசியல் சார்பும், அதிகாரிகள் தொடர்பும் அவர்களுக்குச் சாதகமாகயிருந்தன.

இதனால் பள்ளியின் தரம் குறைந்தது. மக்கள் மனத்தில் அரசுப் பள்ளிகளின் மீதிருந்த மதிப்பும் நம்பிக்கையும் குறையத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் பெருகின. மக்கள் மனத்திலும். தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணம் வளர்ந்தது.
பணிப்பாதுகாப்பு போன்ற தங்கள் நலனுக்காகப் போராடிய ஆசிரியர்கள் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தத் தவறிவிட்டனர்.
விண்ணுயர் கட்டடங்கள், விதவிதமான விளையாட்டுச் சாதனங்கள், விரிவான கட்டமைப்பு வசதிகள், கவர்ச்சியான சீருடை, ஆங்கிலவழிப் போதனை, வீட்டு வாசல்வரைவரும் வாகன வசதி, மாணவரிடம் காட்டும் கவனம் போன்றவை தனியார் பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு ஓர் ஈர்ப்பை உண்டாக்கியதோடு, தங்கள் பிள்ளைகள் இத்தகைய பள்ளியில் படிக்கவேண்டும் என்ற மோகத்தையும் அவர்கள் மனத்தில் தோற்றுவித்தது.
ஏற்கெனவே அரசுப் பள்ளிகள் மீது அவர்களுக்கிருந்த அதிருப்தி, செலவையும் பொருட்படுத்தாது தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கத் தூண்டியது.

உள்ளூரில் அரசு பள்ளியில் இலவசக் கல்வி கிடைத்தும் தங்கள் பிள்ளைகள் பள்ளி வாகனத்தில் வெளியூர் சென்று கட்டணம் செலுத்திப் படித்துவருவதைக் கெளரவமாகக் கருதினர். இதனால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்தது.

ஆயினும், அரசின் அலட்சியமே இதன் மூல காரணம் எனலாம். கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய அரசு, ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் சம்பளமும் அவர்களுக்குள்ள சலுகைகளும் வீண் என்று எண்ணியது. சங்கம் அமைத்து உரிமை கேட்ட ஆசிரியர்களைப் பகைவர்களாகக் கருதியது.

ஆசிரியச் சங்கங்களின் வலிமையை அடக்க எண்ணிய ஆட்சியாளர்கள் அரசுப் பள்ளி நலனில் அக்கறை காட்டுவதைத் தவிர்த்தனர். தனியார் பள்ளிகளின் பெருக்கத்தைக் கண்டுகொள்ளாமலே இருந்து, அவற்றை வளரவிட்டனர்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை நவீனப்படுத்தி, கல்விமுறையில் புதுமையைப் புகுத்தியிருக்க வேண்டியவர்கள் அலட்சியமாக இருந்துவிட்டார்கள். இன்றுவரை ஓராசிரியர் பள்ளியும் ஈராசிரியர் பள்ளியும் இருப்பது இதைத்தான் காட்டுகிறது.
கல்வியைத் தனியார் மயமாக்கும் நோக்கத்தை ஓசைப்படாமல் செயல்படுத்தினர். அதன் விளைவு, "பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம்' என்ற பாரதியின் கனவுக்கெதிராய்ப் பள்ளித் தலமனைத்தும் மூடுதல் செய்யும் அவலத்திற்கு வித்திட்டுள்ளது.

ஏழையின் கல்வியில் அக்கறையுள்ள அரசு இருந்திருந்தால் இந்த அவலம் உருவாகியிருக்காது. இப்பொழுதாவது அரசு விழித்துக்கொண்டு தொடக்கக் கல்வியில் சீர்திருத்தம் செய்து கிராமப்புற அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கற்றுகொடுக்கவும் கற்றுக்கொள்ளவும்
மனம் இருந்தால் போதும்
சாலைகளும்
பாட சாலைகளாகும்.

நீங்கள் நிலவுக்கு சாலை அமைத்துவிடவில்லை; தற்புகழ்ச்சி வேண்டாம்: சுங்கச்சாவடி நிறுவனத்திடம் உச்ச நீதிமன்றம்


தலைநகர் டெல்லியையும் நொய்டா பகுதிகளையும் இணைக்கும் 8 பாதை ‘பிளை வே’ சாலையை அமைத்த நிறுவனம் சுங்கவரி வசூலிப்பதற்கான அலஹாபாத் உயர் நீதிமன்றத் தடைக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் தற்புகழ்ச்சி வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளது.

டெல்லி-நொய்டா-டைரக்ட் (டி.என்.டி) ஃபிளை வே அடுத்த உத்தரவு வரும் வரை வாகனங்களிடம் சுங்கவரி வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

நொய்டா டால் பிரிட்ஜ் கம்பெனி, சுங்கவரி வசூலிப்பதற்கான அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமை அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ஏதோ நிலாவுக்கே சாலை அமைத்தது போல் நீங்கள் கூறுகிறீர்களே! சரி, நீங்கள் நல்ல பணிதான் செய்திருக்கிறீர்கள், மக்கள் அதில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அதற்காக உங்களை நீங்களே தட்டிக் கொடுத்து தற்புகழ்ச்சி செய்து கொள்ளாதீர்கள்.

மேலும், இது தொடர்பாக சுங்கவரி வசூல் நிறுவனமே ஆலோசனை வழங்கியது போல் தனிப்பட்ட தணிக்கையாளர் அல்லது தலைமை தணிக்கையாளரையோ நியமித்து நிறுவனத்தின் செலவுகள், லாபம் ஆகியவற்றை ஆய்வு செய்வோம் என்று நீதிபதிகள் கூறினர்.

நிறுவனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அலஹாபாது உயர்நீதிமன்றம் நொய்டா அதிகாரிகளுடன் 1993-ம் ஆண்டு நிறுவனம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் புனிதத்தன்மையை காக்காமல் அலஹாபாத் உயர்நீதிமன்றம் சுங்க வரி வசூலிக்கத் தடை விதித்தது, நிறுவனம் இன்னும் இத்திட்டத்தின் செலவுத்தொகையையே ஈட்டவில்லை. சுங்கவரி நிறுவனம் மைனஸ் வருவாயில் ஓடிக்கொண்டிருக்கிறது பிளை வே 2001-ல் தொடங்கப்பட்டது.

“நாங்கள் சுமார் 80,000 பங்குதாரர்களைக் கொண்ட ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனம். வரிவசூலை நிறுத்தினாலும் நாங்கள் ஒப்பந்தத்தின் படி சாலைகளின் பழுதுகளை பார்த்தேயாக வேண்டும். இன்னும் 15 ஆண்டுகளுக்கு நாங்களே இதற்குப் பொறுப்பு. ஆனால் நாங்கள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்றால் எப்படி?

வரிவசூலை நிறுத்தினால் சுங்கச்சாவடியில் பணியாற்றும் 472 பேரையும் வேலையிலிருந்து அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த தலைமை நீதிபதி, “நீங்கள் 300 கோடி முதலீடு செய்து 1,100 கோடி சம்பாதித்துள்ளீர்கள் என்றுதானே உயர்நீதிமன்றம் வரிவசூலுக்கு தடை விதித்தது” என்றார்.

பிறகு நொய்டா நிறுவனத்தை நோக்கி நிறுவனம் பொதுமக்கள் பக்கம் நிற்கிறதா அல்லது சுங்கவரி நிறுவனத்தின் பக்கம் நிற்கிறதா என்று கேட்ட போது வழக்கறிஞர் உத்தரவுகளை தான் எடுத்துக் கொள்வதாக கூறினார்.

“ஏன் உங்கள் அதிகாரிகள் வரவில்லை. பொது விஷயத்தில் நாட்டம் இல்லையா” என்று கேட்டார் நீதிபதி டி.எஸ்.தாக்குர். மேலும் சுங்கவரி வசூலை தற்காலிகமாக நிறுத்துவதால் நிறுவனம் ஒன்றும் பாதிப்படையாது என்று திட்டவட்டமாகக் கூறியதோடு, நிறுவனத்தின் செலவு., ஈட்டிய தொகை விவரங்கள் தனிப்பட்ட தணிக்கையாளர் அறிக்கையில் இன்னும் சில நாட்களில் வந்து விடும் அந்த அறிக்கை உங்களுக்குச் சாதகமாக இருந்தால் நீங்கள் கூடுதல் காலம் வரி வசூல் செய்யலாமே” என்று அலஹாபாத் உயர்நீதிமன்ற வரிவசூல் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தார்.

நொய்டா குடியிருப்புவாசிகள் சங்கமோ சுங்கச் சாவடி நிறுவனம் இதுவரை சுமார் ரூ.2,300 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணை தீபாவளி விடுமுறைகள் முடிந்து மீண்டும் நடைபெறும் என்று தெரிகிறது.

காவு வாங்கும் கலப்பட எண்ணெய்கள்! எந்த எண்ணெயும் நல்ல எண்ணெய் இல்லை!


நன்றி குங்குமம் டாக்டர்

ஆரோக்கிய அச்சுறுத்தல்

ஏற்கனவே நாம் பல குழப்பத்தில் இருக்கிறோம்… இதில் ஒவ்வொருவரும் டாக்டராக மாறி ஆலோசனை என்ற பெயரில் நம் குழப்பத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் சமையல் எண்ணெய் பற்றி வெளிவரும் விளம்பரங்கள் ஒவ்வொன்றும் அநியாய குழப்பம். ‘சந்தையில் விற்பனையாகும் எண்ணெய்களைப் பயன்படுத்தினால் உங்கள் இதயத்தில் மெழுகு படியும். எங்கள் எண்ணெயில் அது கிடையாது’ என்று சமீபத்தில் ஒரு விளம்பரம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

எல்லா எண்ணெயிலுமே பிரச்னை என்றால் எந்த எண்ணெயைத்தான் பயன்படுத்துவது என்று இதய சிகிச்சை மருத்துவரான ஜாய் தாமஸிடம் கேட்டோம்…‘‘எண்ணெய் கலப்படம் என்பது சாதாரணமாகிவிட்டது. காஸ்மெட்டிக் ஆயில் என்கிற தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் செய்கிற கலப்படத்தால் பெரிய பிரச்னைகள் எதுவும் வரப்போவதில்லை. சருமத்தில் அலர்ஜி, எரிச்சல், காயம் போன்ற சின்னச் சின்ன தொந்தரவுகள்தான் ஏற்படும். அரிதாக சில பெரிய பிரச்னைகள் உண்டாகலாம். ஆனால், சமையல் எண்ணெயில் நடக்கும் Adulteration என்கிற கலப்படம்தான் நம் உடனடி கவனத்துக்குரியது.

சில விளம்பரங்களில் சொல்லப்படுவது போல சமையல் எண்ணெய் கலப்படங்கள் ரத்த நாளங்களில் படியாது. கொழுப்பு மட்டும்தான் அப்படிப் படிந்துகொள்ளும். ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பாக வரும் வாய்ப்பும் கலப்பட எண்ணெய்களால் இல்லை. கொழுப்பு எண்ணெய்கள் சூடான நிலையில் உருகி திரவ வடிவத்துக்கு மாறும். குளிர்ந்த நிலையில் உறைந்துவிடும். அதுபோல இந்த கலப்பட எண்ணெய்கள் மாறுவதில்லை. கலப்பட எண்ணெய்க்கு ஒரே தன்மைதான் உண்டு. அது எப்போதும் திரவ வடிவில்தான் இருக்கும்.

அதேபோல, இந்த கலப்பட எண்ணெய்களால் இதயம் நேரடியாகப் பாதிக்கப்படுவதும் இல்லை. இதயத்தின் மின் திறன் வேண்டுமானால் பாதிக்கப்படலாம். அதாவது, இதயத் துடிப்பின் விகிதம், ரத்தத்தை உள்வாங்கி வெளியேற்றும் தன்மை போன்றவை பாதிப்புக்குள்ளாகும். இந்த உண்மை சில ஆய்வுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி கலப்பட எண்ணெய்களால் ஏற்படும் முக்கியமான பிரச்னை கல்லீரல் பாதிப்பு. நாம் சாப்பிடும் உணவு குடலிலிருந்து முதலில் கல்லீரலில் சென்றுதான் சேர்கிறது.

அங்குதான் கார்போஹைட்ரேட், புரதம் என உணவு உடைக்கப்பட்டு செரிமானம் நடக்கிறது. அதனால், கலப்பட எண்ணெய்களால் கல்லீரலே பெரிதும் பாதிக்கப்படும். இந்த எண்ணெய்கள் கார்சினோஜெனிக் என்கிற புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் கொண்டவை. அதனால் கல்லீரல் புற்றுநோய் வரும் அபாயமே இதில் அதிகம். கல்லீரல் உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு. கல்லீரல் மாற்று சிகிச்சை என்பது மிகவும் காஸ்ட்லியான அறுவை சிகிச்சையும் கூட. எல்லோராலும் செய்துகொள்ளவும் முடியாது. இதில் இன்னும் ஒரு அபாயமும் உண்டு.

கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டால் மாற்று சிகிச்சை செய்து கொண்டு தப்பித்துவிடலாம். இந்த புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரவிவிட்டால் கல்லீரல் மாற்று சிகிச்சையும் கைகொடுக்காது;6 மாதங்களில் இருந்து ஒரு வருடத்துக்குள் உயிரிழப்பு ஏற்படுவதற்கான அபாயமும் அதிகம். அதனால், இந்தப் பிரச்னையின் தீவிரத்தை எல்லோரும் உணர வேண்டும். மக்களின் அத்தியாவசியப் பயன்பாட்டில் இடம்பிடித்திருக்கும் எண்ணெய் கலப்படத்தை அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.

மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கலப்படம் செய்கிறவர்களை சமூக விரோதிகளாகத்தான் கருத வேண்டும். அரசாங்கம் இவர்கள் மேல் தீவிரமான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களுக்கு வியாபாரம் செய்யும் உரிமை உண்டு. தங்கள் தயாரிப்பின் பெருமைகளைச் சொல்லவும் உரிமை உண்டு. ஆனால், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான விளம்பரங்களைச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இது தார்மீக ரீதியாகவும் பெரும் தவறு’’என்கிறார் ஜாய் தாமஸ்.

சமையல் எண்ணெயில் மெழுகு ஏன் கலக்கிறார்கள் என்ற நம் கேள்விக்கு நுகர்வோர் ஒருங்கிணைப்பு அலுவலரான சோமசுந்தரம் விளக்கமளிக்கிறார்.‘‘இந்த கிரீமை பூசிக் கொண்டால் சிவப்பாகிவிடலாம் என்று சில விளம்பரங்கள் வருகின்றன. அதுபோலத்தான் எண்ணெயில் வாக்ஸ் கலப்படம் என்பதும். இது ஒரு விற்பனைத் தந்திரம். ஏனெனில், மெழுகை எண்ணெயில் கலக்க முடியாது. மெழுகின் குணமே வேறு. சமையல் செய்து முடித்தபிறகு பாத்திரத்தில் படியும் எண்ணெய் கறையைத்தான் Wax என்று குறிப்பிடுகிறார்கள்.

எந்த எண்ணெயில் சமையல் செய்தாலும் கறை படியத்தான் செய்யும். ஆனால், வாக்ஸ் என்றவுடன் மெழுகை எண்ணெயில் கலக்கிறார்கள் போல என்று மக்கள் நினைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. மக்களைத் தவறான வழிக்குத் திசை திருப்பும் விளம்பரம் இது. குறைவான விலையில் அரசாங்கமே விற்கிற பாமாயில் பற்றியும் இப்படித்தான் தவறான அபிப்பிராயத்தை மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தேங்காய் எண்ணெய்
கெடுதல் என்ற நம்பிக்கையையும் இப்படித்தான் உருவாக்கினார்கள்.

இதுபோன்ற விளம்பரங்களைப் பற்றி Advertisement Standards Council of India என்ற அமைப்பில் புகார் செய்யலாம். மும்பையில் இருக்கும் இந்த அமைப்பு பற்றிய விவரங்களை இணைய தளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இதேபோல ஒரு எண்ணெய் நிறுவனம் கலப்படம் செய்கிறது என்று சந்தேகப்பட்டால் குறிப்பிட்ட எண்ணெயின் மாதிரியை எடுத்து அரசாங்கத்தின் பகுப்பாய்வுக்கூடத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 500 ரூபாயிலேயே இந்த பரிசோதனை செய்துவிடலாம். உணவுப் பாதுகாப்புத்துறையிடமும் புகார் அளிக்கலாம். தவறு உறுதியானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

தனிமனிதராக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதபட்சத்தில் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ எங்களைப் போன்ற நுகர்வோர் அமைப்பிடமோ உதவிகளைக் கேட்கலாம். நாங்கள் தேவையான உதவிகளைச் செய்வோம். இதையும் விட முக்கியமான விஷயம், நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்தான் எப்போதுமே பாதுகாப்பானவை. நம் ஊரின் வெப்பநிலைக்கும், நம் வாழ்க்கைமுறைக்கும் இந்த 3 எண்ணெய்கள்தான் ஆரோக்கியமானவையும் கூட. இதைத்தாண்டி இன்று சந்தையில் விற்பனையாகி வரும் எல்லா எண்ணெய்களுமே பிரச்னைகளுக்குரியவைதான்’’ என்கிறார்.

எந்த எண்ணெயைத்தான் வாங்குவது?

Refine, Bleach, Deodorised இந்த மூன்று விஷயங்களும் ஒரு எண்ணெயில் இருக்கக் கூடாது. எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் அது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கெட்டுப் போய்விடும். அதனால் ஒரு பொருளின் வாழ்நாளை நீட்டிப்பதற்காக செய்யப்படும் வேதிவினைதான் Refine. அடுத்து Bleach என்பது எண்ணெயை சுத்தமாகத் தண்ணீர் போல காட்டு வதற்காக செய்யப்படும் வேதிவினை.

அடுத்து எண்ணெய் நமக்குப் பிடித்த வாசனையில் இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெயின் நிஜமான மணத்தை மாற்றி வேதிப்பொருட்களைக் கலக்கும் முறை. தரமான எண்ணெய் கொஞ்சம் கெட்டியாகத்தான் இருக்கும். தண்ணீர் போல இருக்காது. பளிச்சென்று சுத்தமாகவும் இருக்காது. கடலை எண்ணெய் என்றால் அதன் வாசனை கொஞ்சமாவது இருக்கும். வித்தியாசமான நறுமணம் எதுவும் இருக்காது.

இந்த 3 விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, விளம்பரங்களைப் பார்த்து எண்ணெய் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எல்லாப் பொருட்களுக்குமே இது பொருந்தும். எண்ணெயைப் பொறுத்தவரை குடும்ப நல மருத்துவரிடமோ, இதய சிகிச்சை மருத்துவரிடமோ ஆலோசனை கேட்டுத் தேர்ந்தெடுப்பது இன்னும் பாதுகாப்பானது.

எண்ணெய் பயன்பாட்டிலும் பேலன்ஸ்டாக இருங்கள்!
கொஞ்சம் தானிய உணவு, கொஞ்சம் கீரை, கொஞ்சம் பழங்கள் என்று உணவில் சரிவிகிதத்தை மருத்துவர்கள் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள். அந்த பேலன்ஸ்டு டயட் முறை எண்ணெய் பயன்பாட்டிலும் அவசியம். வீட்டுக்கு மாதம் 2 லிட்டர் எண்ணெய் சமையலுக்குத் தேவை என்றால் ஒரே எண்ணெயை மட்டுமே 2 லிட்டர் வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு வகையான சத்துகள் உண்டு. இதை Essential fatty acid என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என பல எண்ணெய்களை மாறி மாறிப் பயன்படுத்தும்போது நமக்குக் கூடுதல் பலன் கிடைக்கும். அதேபோல, சிலர் எண்ணெய் என்றாலே ஆபத்து என்று அலர்ஜியாவார்கள். அப்படி முற்றிலும் எண்ணெயைத் தவிர்ப்பதும் தேவையற்றது. எண்ணெயில் இருக்கும் சத்துகளும் நமக்குத் தேவை. நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் எண்ணெயை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம், எந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறோம், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைத்தான்.

ஞானதேசிகன்

படம்: ஏ.டி.தமிழ்வாணன்
வாழ்க்கையில் யாரையும் குறை சொல்லாதீர்கள்...

நல்லவர்கள் மகிழ்ச்சி தருகிறார்கள்

கெட்டவர்கள் அனுபவம் தருகிறார்கள்

மிகக் கெட்டவர்கள் பாடம் தருகிறார்கள்

மிக நல்லவர்கள் நினைவுகள் தருகிறார்கள். :)
நாட்டாண்மைக்கே' தீர்ப்பு சொன்ன கிராமம்

திருப்புவனம்: சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் குறைவாக இருந்த காலத்தில் கிராமங்களில் பெரும்பாலும் பிரச்னைகளை விசாரித்து தீர்ப்பு சொல்வது நாட்டாண்மை எனப்படும் கிராம தலைவர்கள் தான். அதிலும் தீர்ப்பு சொன்ன நாட்டாண்மைக்கே பிரச்னை வந்த போது கிராமமே சேர்ந்து தீர்ப்பு சொன்னதும் அதை நாட்டாண்மை ஏற்றுக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள ஏனாதி, பூவந்தி, மடப்புரம், செம்பூர், சுண்ணாம்பூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் 'அஞ்சூர்நாடு' என அழைக்கப்படுகிறது. இதில் தாய் கிராமம் ஏனாதி. ஐந்து கிராமத்திலும் நடைபெறும் சொத்து பிரச்னை, வாய்க்கால் தகராறு,பாதை தகராறு , திருவிழா உள்ளிட்ட எந்த பிரச்னையானாலும் அஞ்சூர் நாட்டு தலைவர் சொல்வது தான் இறுதி தீர்ப்பாக இருக்கும். இந்த ஐந்து கிராமங்களுக்கும் தனித்தனி நாட்டாண்மை உண்டு. இன்றைய கால கட்டத்தில் நாட்டாமை பதவியை ஒழித்து விட்டனர் என்றாலும் கிராமத்தில் பெயரளவில் இன்னமும் நாட்டாண்மை உண்டு. கோவில் திருவிழா உள்ளிட்ட விஷயங்களில் இன்னமும் முதல் மரியாதை நாட்டாமைகளுக்கு உண்டு. நாட்டாண்மைக்கு சொன்ன தீர்ப்பை கோர்ட்டே பாராட்டிய சம்பவமும் நடந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள ஏனாதி கிராம நாட்டாண்மையாக இருந்தவர் கருப்பையா அம்பலம். இவருக்கு திருமணமாகி சிட்டுப்பிள்ளை என்ற மனைவியும்,மூன்று குழந்தைகளும் உண்டு. அந்தக்காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் நாட்டாண்மை கருப்பையா அம்பலம் தட்டு வண்டி எனப்படும் மாட்டு வண்டியில் மற்ற ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு நாலுார் நாட்டைச் சேர்ந்த அரசனுார் கிராமத்திற்கு கடந்த 1937ல் செல்கையில் அந்த ஊரைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரை பார்த்து விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டு ஏனாதிக்கு வந்துள்ளார். தகவலறிந்து முதல் மனைவி மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமங்களில் பிரச்னை என்றால் நாட்டாண்மைக்கு தகவல் சொல்வார்கள். பிரச்னைக்கு காரணமே நாட்டாமை என்பதால் கிராமமே இணைந்து விசாரித்துள்ளது. இரண்டாவது மனைவி பேச்சியம்மாளை கைவிட கருப்பையா அம்பலம் மறுத்துள்ளார். 

இதனையடுத்து கிராமமே இணைந்து ஆலோசனை நடத்தியுள்ளது. முதல் மனைவியிடம் கிடைக்காத சந்தோஷம் இரண்டாவது மனைவியிடம் கிடைத்துள்ளது. எனவே கருப்பையா அம்பலம் இரண்டாவது மனைவியுடன் இருந்து கொள்ளலாம். ஆனால் இதுவரை சம்பாதித்த சொத்துக்கள், பரம்பரை சொத்துக்கள் அனைத்தையும் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கொடுத்து விட வேண்டும். இனி சம்பாதிக்கும் சொத்துக்கள் அனைத்தும் இரண்டாவது மனைவிக்கு சொந்தம் என கூறியுள்ளனர். 

அதனைக் கேட்ட நாட்டாண்மை கருப்பையா அம்பலம் கட்டியிருந்த இடுப்புக் கொடியை கூட அறுத்து கொடுத்து விட்டு இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தியதில் மலைச்சாமி, ராஜலட்சுமி, பாண்டியம்மாள் என்ற குழந்தைகள் பிறந்துள்ளன. கருப்பையா அம்பலத்திற்கு பின் மலைச்சாமி நாட்டாண்மையாகவும் அஞ்சூர் நாட்டு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அதன் பின் மலைச்சாமி மகன்கள் முருகானந்தம், வெங்கடேசன், திருமூர்த்தி ஆகியோரில் தற்போது வெங்கடேசன் ஏனாதி நாட்டாண்மையாக உள்ளார். வெங்கடேசனிடம் கேட்ட போது,“எங்கள் ஐயா(தந்தை வழி தாத்தா) விற்கு தான் இந்த தீர்ப்பு சொன்னார்கள். இந்த தீர்ப்பை பாராட்டி அந்த காலத்தில் சென்னை ஐகோர்ட் நீதிபதி மிஸ்ரா பாராட்டு பத்திரம் வழங்கியுள்ளதுடன் இதனை மேற்கோள் காட்டியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.தீர்ப்புக்கு பின் எங்கள் ஐயாவின் இரு மனைவிகளும் சமாதானமாக இருந்தாலும் எனது தந்தை, அதன் பின் நாங்கள் என பரம்பரை பரம்பரையாக நாட்டாண்மையாக இருந்துள்ளோம். 1989ல் எம்.ஜி.ஆர்.,ஆட்சி காலத்தில் நாட்டாண்மை பதவி ஒழிக்கப்பட்டது. ஏனாதி கிராம பஞ்சாயத்துகள் உள்ளுரில் உள்ள பொது மந்தையில் நடைபெறும். அஞ்சூர் நாட்டு பஞ்சாயத்துகள் தற்போது சிவகங்கை -மதுரை சாலையில் உள்ள தனியார் கல்லுாரி எதிரே உள்ள ஆலமரத்தடியில் நடைபெறும். பஞ்சாயத்து நாளன்று ஆலமரத்தடியில் அஞ்சூர் நாட்டைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கூடுவது வழக்கம்”, என்றார்.நாட்டாண்மை பதவி ஒழிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தான் காரணம் என கூறப்படுகிறது

. எல்லா கிராமங்களிலும் நாட்டாண்மைக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுவது வழக்கம்.1988ல் அப்போதைய அமைச்சராக இருந்த எஸ்.டி. சோமசுந்தரம் கிராமத்தில் நடந்த அரசு விழாவிற்கு வந்த போது நாட்டாண்மைக்காக காத்திருந்துள்ளார். கோபமடைந்த அவர் எம்.ஜி.ஆரிடம் சொல்லி நாட்டாண்மை பதவியையே காலி செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. கிராமப்புற பஞ்சாயத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் இன்றளவும் 2வது மனைவி சம்பந்தமான தீர்ப்பு அனைவராலும் ஏற்று கொள்ளக் கூடிய தீர்ப்பாக இருந்துள்ளது. திருமூர்த்தி கூறுகையில்,“ கிராமங்களில் பிரச்னை என்றால் பாதிக்கப்பட்டவர் வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் நாட்டாண்மையை சந்தித்து பிரச்னையை கூறுவார். எதிர்தரப்பிற்கு ஆளனுப்பிய பின் குறிப்பிட்ட நாளில் இருதரப்பையும் வைத்து விசாரணை ஆரம்பமாகும். நாட்டாண்மை சொல்லும் தீர்ப்பை 95 சதவிகிதம் அனைவரும் ஏற்று கொள்வோம். மீறுபவர்களை ஊரை விட்டு விலக்கி வைக்கும் சம்பவமும் நடைபெறும்.

ஆனால் எனக்கு தெரிந்து யாரும் நாட்டாண்மை தீர்ப்பை எதிர்த்ததில்லை. அனைவரும் ஏற்றுகொள்வார்கள். ஏன் என்றால் எங்கள் ஊர் நாட்டாண்மை அவருக்கு சொன்ன தீர்ப்பை ஏற்று கொண்டு அதன்படி நடந்து கொண்டவர் என்பதால் நீதி தவற மாட்டார் என்பது நம்பிக்கை,” என்றார்.
குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'

முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம். தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது. கீழ்க்கண்ட பாடங்களில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை:

பொது அறிவு பகுதி

புதிய தேர்வு முறையில் 25 வினாக்கள் ஆப்டிடியூட் பகுதியில் கேட்கப்படுகிறது. இதில் எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், அடிப்படை கணித முறை, கையாளும் முறை, பின்னங்கள், தனிவட்டி, கூட்டுவட்டி பரப்பளவு மற்றும் கனஅளவு பகுதிகளில் உள்ள சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.n விபரங்களை கையாளும் முறையில் பட்டை விளக்கப்படம், வட்ட விளக்கப்படம், கோட்டு விளக்கப்படம், அட்டவணைகள் தொடர்பான வினாக்கள்.n பகடை, புதிர், வினாக்கள், எண் தொடர் வரிசை, விடுபட்ட எண், விடுபட்ட படம், படத்தொடரில் அடுத்து இடம் பெறும் படம். நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து 10 முதல் 15 வினாக்கள் கேட்கப்படலாம். விண்வெளி நிகழ்வுகள், தேசிய சின்னங்களின் முக்கியத்துவங்கள், சமீபத்திய விருதுகள், உலகின் முக்கிய அமைப்புகளின் சமீபத்திய மாநாடுகள், நடைபெற்ற இடங்கள் (குறிப்பாக ஐ.நா., செய்திகள்) விளையாட்டுச் செய்திகள், புதிய கண்டுபிடிப்புகள், நியமனங்கள், பாதுகாப்பு சிறப்பம்சங்கள்.n வரலாறு பாடத்தில் கால வரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்றது வரையிலான காலங்களில் நடந்த போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்கள், போர் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்.n உலகை வலம் வந்த பயணிகள், அவர்கள் இந்திய வருகையின் போது இருந்த மன்னர்கள்.n வரலாற்று புத்தகங்கள், அதன் ஆசிரியர்கள், பத்திரிகைகள், சமய சீர்திருத்த இயக்கங்கள், இந்திய தேசிய காங்.,தோற்றம், மாநாடுகள், நடந்த இடம், தலைமை வகித்தவர், முக்கிய தீர்மானங்கள்.n இயற்பியலில் அலகுகள், விதிகள், அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், அளவிடும் கருவிகள், அதன் பயன்கள் மற்றும் அறிவியல் மதிப்புகள்.n வேதியியலில் வேதிப்பெயர்கள், சமன்பாடுகள், முக்கிய அமிலங்கள், தனிம வரிசை அட்டவணையின் சிறப்பு, அன்றாட வாழ்வில் பயன்படும் வேதிச் சேர்மங்கள்.n தாவரவியலில் செல் அமைப்பு, தாவர, விலங்கு செல்களில் உள்ள நுண்ணுருப்பிகளின் பணிகள், தாவர பாகங்கள், வளர்ச்சி காரணிகள், வைரஸ், பாக்டீரியாவால் ஏற்படும் தாவர நோய்களை பட்டியலிடல்.n மனித உடலியியலில் ரத்த வகைகள், ரத்த செல்களின் சிறப்பம்சம், இதய அமைப்பு, செயல்படும் விதம், நாளமிள்ளா சுரப்பிகளின் சிறப்புகள், வைட்டமின், எலும்புகளின் எண்ணிக்கை மற்றும் முக்கிய எலும்புகளின் பெயர்கள், நரம்பு மண்டலத்தில் மூளையின் அமைப்பு, அதன் பணிகள், பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள், அதை ஏற்படுத்தும் கிருமிகள்.n புவியியலில் மாநில தலைநகரங்கள், முக்கிய மலைகளின் அமைவிடம், காடுகளின் சிறப்பு, விலங்கு சரணாலயங்கள், அமைந்துள்ள மாவட்டம், மாநிலங்கள், அங்கு புகழ்பெற்ற விலங்குகள், முக்கிய ஆறுகளின் பிறப்பிடம், சேருமிடம், துணையாறுகள், பயனடையும் மாநிலங்கள், அணைகளை வரிசைப்படுத்தி படிக்கவும். போக்குவரத்து அமைப்பை, உணவு பயிர்களில் முதன்மை வகிக்கும் மாநிலங்கள், தாதுக்கள் காணப்படும் இடங்கள்.n சூரியன் மற்றும் சூரியக் குடும்ப 8 கோள்களின் தனிச்சிறப்புகள், வானிலை, பருவகால காற்றுகள்.n இயற்கை பேரிடர்களான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, பனிப்பாறை வீழ்ச்சி, பாதிப்புகள்.n இந்திய அரசியல் அறிவியலில் அரசியலமைப்பு சட்டத்தின் வளர்ச்சி, அட்டவணைகள், முக்கிய ஷரத்துகள், சமீபத்திய சட்டத் திருத்தங்கள், ஜனாதிபதி, பிரதமர், முக்கிய பதவிகளை பற்றிய சிறப்பம்சங்கள், சமீபத்திய அரசியல் மாற்றம், தேர்தல் கமிஷன்.n பொருளாதார கோட்பாடுகளை கூறியவர்கள், பொருளாதார வார்த்தைகளின் அர்த்தம், ஐந்து ஆண்டு திட்டங்களின் சிறப்பம்சம், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், கமிட்டிகள்.

பொதுத்தமிழ் 

இதுவரை குரூப் - 4 தேர்வில் உள்ள கேள்விகளைப் பார்த்து, அதில் உள்ளவற்றிக்கு விடையளிக்க முயற்சிக்க வேண்டும். இதனால், எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் என்ற தெளிவு கிடைக்கும்.
பகுதி (அ) இலக்கணம் : இலக்கணத்தில் முக்கியமானது தொடரும் தொடர்பும், அறிதல், பிழை திருத்தம், பெயர்ச்சொல்லின் வகையறிதல், இலக்கணக் குறிப்பறிதல், எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல், எதுகை, மோனை, இயைபு பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு முயற்சியுடன் விடையளிக்க வேண்டும். இதற்கு பயிற்சி மிக முக்கியம். இதனால் அதிக மதிப்பெண் பெற முடியும்.
n பொதுத்தமிழ் பாடப்பகுதிக்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை படிப்பது நல்லது. தமிழ் இலக்கண எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி பகுதிகளில் தற்போது யாப்பு, அணி பகுதிகளில் இருந்து அதிகம் வினாக்கள் கேட்கப்படுகிறது.n துணைப்பாடத்தில் முக்கிய கூற்றுகளை கவனிக்கவும், புணர்ச்சி விதி, சந்திப்பிழைகளை நன்கு படிக்கவும்.n நுாலின் வேறு பெயர்கள், நுாலாசிரியர் பெயர், அவரின் சிறப்பு பெயர், அறிஞர்களின் கூற்றுகள், புகழ் பெற்ற தொடர்களை கூறியவர்கள் மற்றும் இடம்பெற்ற நுால்கள், இலக்கண குறிப்பு.
பகுதி (ஆ) இலக்கியம் : இதிலிருந்து 30 வினாக்களுக்கு மேல் கேட்கப்படும். இதை எளிமை என அலட்சியம் கூடாது. சமயம், பண்பாடு, காலாசாரம், நாகரிகம் இப்பகுதியில் அடங்கியுள்ளது. முக்கியமானது பதிணென் மேற்கணக்கு, பதிணென் கீழ்கணக்கு, பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம். புரிந்து தெளிவாக விடையளிக்க வேண்டும்.

n சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம், புதுக்கவிதை வரை உள்ள நுால்,- நுாலாசிரியர்கள், குறிப்புகள், அவர்களின் பிற இலக்கியப் படைப்புகள்.
பகுதி(இ) தமிழ் அறிஞர்கள், தமிழ் தொண்டு மறுமலர்ச்சிக் காலம் என்பது தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டாற்றியவர்களும் ஆவர். இவர்கள் உலக நாடுகளுக்கு தமிழ் சென்றடைய முக்கியமானவர்கள். இதில் மிக முக்கியமானது பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், மருதகாசி, புதுக்கவிதை கவிஞர்கள், கலைகள், சிற்பம், உரைநடை, உ.வே.சாமிநாத அய்யர், தேவ நேயப்பாவாணர், ஜி.யு. போப் வீரமாமுனிவர், தமிழ் பெண்கள், தமிழர் வணிகம், உணவே மருந்து, திரு.வி.க.,வை மனப்பாடம் செய்யாமல், அவர்களின் வாழ்க்கை சிறப்புகளை வியந்து பார்த்து படித்தால் தெளிவு கிடைக்கும்.

- பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குனர்,நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங்,மதுரை. 90470 34271.

டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள 5451 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6 ல் தேர்வு நடக்கிறது. இதில் 12 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்விற்காக ஆவலுடன் உள்ளனர். இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், அறிவுக்கூர்மை தொடர்பாக 25 வினாக்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை. ஆதலால் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
தேர்விற்கு செல்லும் முன்... 

* ஹால் டிக்கெட், நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட “பால் பாயின்ட் பேனா” மூன்று அல்லது நான்கு கொண்டு செல்க.* தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சென்றால் பதற்றத்தை தவிர்க்கலாம்.* கைக்கடிகாரம் அணிந்து அடிக்கடி நேரத்தை சரிபார்க்கவும்.* தேர்வுக்கு முதல் நாள் இரவு, நன்கு துாங்கவும். துாக்கமின்றி சென்றால், யோசிக்கும் திறன் குறையும்.* கவனச் சிதைவு இன்றி முழு கவனத்துடன் கேள்விகளை படித்து பார்க்கவும்.* தன்னம்பிக்கையுடன் கூடிய பயிற்சி, முயற்சியே போட்டித் தேர்வுகளில் வெற்றியை தேடித்தரும். இதை மனதில் வைத்து படித்து நீங்களும் அரசு ஊழியராக வாழ்த்துகள்!
பண்டிகை நிறைவு; பட்டாசு சத்தம் குறைவு...தித்தித்தது தீபாவளி! தீ விபத்தின்றி இனிதாக கழிந்ததால் மகிழ்ச்சி!
கடந்த சில ஆண்டுகளை விட, இந்த ஆண்டு தீபாவளி கூடுதல் உற்சாகத்துடன் கோவை மக்களால் கொண்டாடப்பட்டது; ஆனால், பட்டாசு வெடிப்பது குறைந்து, தீ விபத்துக்களும் இல்லாமல் இனிதே நிறைவு பெற்றது பண்டிகை.
வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டில், கோவையிலுள்ள தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து கழகம் போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தீபாவளி போனஸ் முன்கூட்டியே வழங்கப்பட்டது. இதனால், தீபாவளி 'பர்சேஸ்' மிக விரைவாகவே துவங்கியது. துணிக்கடை, ஸ்வீட் கடை, எலக்ட்ரானிக் கடைகளில் மக்கள் கூட்டம், அலை அலையாய்த் திரண்டது.
விடிய விடிய கூட்டம்!வியாழக்கிழமை இரவிலிருந்தே, தீபாவளி உற்சாகம், நகரில் களை கட்டத்துவங்கி விட்டது. வெள்ளிக்கிழமை இரவையும் பகலாக்கும் வகையில், வீடுகள் தோறும் வெடி வெடித்தும், வண்ண மயமான பட்டாசுகளை கொளுத்தியும் மகிழ்ந்தனர். இரவு முழுக்க நகருக்குள், மக்கள் நடமாட்டம் இருந்தது. வெளியூர் செல்லும் மக்களின் கூட்டம், வெள்ளிக்கிழமை இரவு வரையிலும் குறையவில்லை.
தீபாவளி பண்டிகையான நேற்று, காலை புத்தாடை அணிந்து, குடும்பம் சகிதமாக கோவில்களுக்கு சென்றனர். கிராமங்களில், கோவில் மற்றும் பொது மைதானங்களில் வெடி வெடித்து ஆரவாரமாய் பண்டிகை கொண்டாடினர். வீட்டில் தயாரித்த இனிப்பு, காரம் வகைகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பக்கத்து வீட்டாருக்கும் பரிமாறி பண்டிகை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடைத்தெருக்களில் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. பேக்கரி, ஓட்டல்கள் செயல்பட்டன. பெரும்பாலான ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டதால், குட்டீஸ்கள் ரோட்டில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
இணைந்த நட்பும், இனிய உறவும்!ஈச்சனாரி விநாயகர், மகாலட்சுமி மந்திர், மருதமலை, புலியகுளம் விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், சித்தாபுதுார் ஐயப்பன், ராம் நகர் ராமர் கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மன் கோவில், கோட்டை சங்கமேஸ்வரன் கோவில்களில் வழிபாட்டுக்காக மக்கள் குவிந்தனர். இதனால், இந்தப் பகுதிகளில் மட்டும், வாகன போக்குவரத்து நேற்று அதிகமாக இருந்தது.
ஆன்மிக பயணம், உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு பயணம், சினிமா காட்சிகளுக்கு படையெடுப்பு என, குடும்பத்துடன் கிளம்பியதால், ரோடுகளில் வாகன ஓட்டம் ஓயவில்லை. ஆனால், பெரும்பாலான முக்கியச் சாலைகள், பரபரப்பின்றி படு அமைதியாகக் காட்சியளித்தன.

தீ விபத்தில்லா தீபாவளி!கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் பட்டாசு சத்தம் சற்று குறைவாகத் தெரிந்தது. கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீ விபத்தில்லா தீபாவளியாக இருந்தது. இந்தாண்டு, தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தீ விபத்தை தவிர்க்க மாவட்டம் முழுவதும், 24 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருந்தன. ஆனால், இரு நாட்களில் தீ விபத்து ஏதும் இல்லை. அதனால், இந்தாண்டும், தீ விபத்தில்லா தீபாவளியானது.

பசுமைக்கு பச்சைக்கம்பளம்!கோவை மாநகராட்சி சார்பில், பசுமை தீபாவளி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டமொன்று அறிவிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை இயற்கை சூழலுடன் இணைந்து கொண்டாடும் வகையில், மரக்கன்று நட்டு அதனை போட்டோ, வீடியோ எடுத்து, 81900 00200 என்ற எண்ணுக்கு 'வாட்ஸ் ஆப்' அனுப்புமாறு, மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை (31ம் தேதி) இரவு வரையிலும், பசுமை தீபாவளி கொண்டாட்ட படங்களை அனுப்பலாம். இத்திட்டத்தில் பங்கேற்போருக்கு பரிசு வழங்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார். இத்திட்டத்துக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்து, மரக்கன்று நடுவதையும், பட்டாசு குப்பையை தனியாக குவித்து, சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிப்பதையும் 'செல்பி' படம் எடுத்து, அனுப்பியுள்ளனர்.
காலையிலேயே 'கலக்கிய' வியாபாரம்!பண்டிகை கொண்டாட்டத்தால், இறைச்சிக்கடைகளில் நேற்று காலை முதலே கூட்டம் அலை மோதியது. ஆட்டிறைச்சி, பிராய்லர் மற்றும் மீன் கடைகளில் மக்கள் அணிவகுத்து நின்று, குடும்பத்தினருக்கு பிடித்த இறைச்சியை வாங்கிச்சென்றனர்.
அதேபோன்று, சினிமா தியேட்டர்களில் இளைஞர்கள் கூட்டம் அள்ளியது. தீபாவளிக்கு வெளியான புதுப்படங்களை முன்பதிவு செய்தவர்களும், காட்சி நேரத்துக்கு சென்று டிக்கெட் எடுப்பவர்கள் என, நாள் முழுக்க கூட்ட நெரிசலாகவே காணப்பட்டது. திரையரங்குகளிலும் காட்சிகள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தனர்.

பண்டிகை கால கூட்டத்தை போன்று, நேற்று 'டாஸ்மாக்' கடைகள் திறப்பதற்கு முன்பே கூட்டம் கூடி நின்றது. கடை நிறந்ததும் பல இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. 'குடி' பிரியர்களை குறி வைத்து, காலை முதலே, பார்களில் 'சரக்கு' விற்பனை சட்ட விரோதமாக கொடி கட்டிப்பறந்தது. போதையில் தள்ளாடி ரோட்டோரத்தில் சரிந்தவர்களும் ஏராளம்.

-நமது நிருபர்-

Saturday, October 29, 2016

சான்றிதழ் வேணும்னா 3 ஆயிரம் ரூபாய் வேணும்; இலஞ்ச கேட்ட அதிகாரி.

சான்றிதழ் கேட்டுவந்த விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளரை இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பொடிவைத்து பிடித்துக் கைது செய்தனர்.

கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (53). இவர் ஒரு விவசாயி. இவருடைய மாமனார் தண்டபாணி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் குணசேகரன் தன்னுடைய மாமனார் தண்டபாணி இறப்புச் சான்றிதழ் கேட்டு நீட்திமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இதற்காக கடலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து அவருக்கு இறந்து போன தண்டபாணியின் இறப்பை பதிவு செய்யவில்லை என சான்றிதழ் தேவைப்பட்டது. இதனை அடுத்து குணசேகரன் நகராட்சி பிறப்பு - இறப்பு சான்றிதழ் பிரிவில் உதவியாளராக இருக்கும் கடலூர் அன்னவெளி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த ராமன் (39) உதவியை நாடினார்.
பின்னர் அவரிடம் என்னுடைய மாமனார் இறப்பை பதிவு செய்யவில்லை என சான்றிதழ் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு உதவியாளர் ராமன், குணசேகரனிடம் ரூ.3 ஆயிரம் இலஞ்சம் தந்தால் உனக்குச் சான்றிதழ் தருகிறேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் அவருக்கு சான்றிதழ் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். பின்னர் இது பற்றி குணசேகரன் கடலூர் இலஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறிய அறிவுரைப்படி, இரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்தை கடலூர் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு - இறப்பு சான்றிதழ் பிரிவில் இருந்த ராமனிடம் வெள்ளிக்கிழமை குணசேகரன் வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்து இருந்து கண்காணித்த இலஞ்ச ஒழிப்பு காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், திருவேங்கடம், திருமால் ஆகியோர் ராமனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும், ஏற்கனவே தயாராகி இருந்த 100 பிறப்பு - இறப்பு சான்றிதழ்களையும் இலஞ்ச ஒழிப்பு காவலர்கள் கைப்பற்றினர். அந்த சான்றிதழ்களை ஏன்? இன்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை என்றும் இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்றும் இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ராமன் மீது ஏற்கனவே நில அளவீடு செய்ததில் இலஞ்சம் பெற்றதாக இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு உள்ளது

குறிப்பிடத்தக்கது. நகராட்சி அலுவலகத்தில் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

HC rescues woman employee from fraudulent marriage

SPECIAL CORRESPONDENT

The Madras High Court has come to the rescue of a woman who was fraudulently shown as being married to a former colleague.

The court found that a human resources executive in a private firm, in which the woman was employed as an engineer, used documents she had signed for some other purpose to register a fictional marriage between them. The executive had obtained her signatures on some papers in the guise of giving her a transfer from Thoothukudi to Chennai.

Allowing a writ petition filed by the woman, Justice M. Govindaraj quashed the registration of the supposed “marriage” and directed the Marriage Registrar, Chennai North, to “delete, cancel and remove” the entry made on September 15, 2014 in the Marriage Register.

The judge said it would be “unfair” to direct the petitioner to go to a Family Court seeking declaration of the marriage as null and void since it would cause further mental agony to the woman who was already in distress.

He noted that the woman was recruited as a Trainee Engineer in a private power plant in Thoothukudi in 2014 and was desperate to get transferred to its Chennai office. The HR Executive, T. Mohamed Fahmi, took her to the company’s office at Egmore in Chennai and obtained signatures in a couple of papers on the promise of finding a suitable position for her.

Subsequently, he made a volte face, citing lack of vacancies in Chennai. The petitioner left the job in March 2015 as she was unable to cope with the work pressure in Thoothukudi.

It was only before the Assembly elections in May this year that the petitioner found that her name had been included in the voters’ list of Srivaikuntam constituency in Thoothukudi district, mentioning her as the wife of Fahmi.

On enquiry, she came to know that he had included her name as his wife in his passport as well as family card.

Further, probe revealed that such documents had been created on the basis of the registration of a ‘marriage’ that took place between them in the office of Chennai-based advocate K. Ameer Batcha and duly registered with the Registrar of Marriages.

Shocked over such allegations, the High Court on August 2 included the advocate as well as the Bar Council of Tamil Nadu and Puducherry as respondents to the case and ordered notices to them.

The Bar Council rushed to the court to inform that advocate Batcha “was a person known for his chamber activities of solemnizing and registering the marriages and that he had solemnized lot of marriages at the chambers and acted as a priest contrary to the oath taken before the Bar Council.”

However, neither the HR Executive Fahmi nor the lawyer Batcha entered appearance despite the court serving notice on them and the Bar Council contended that they would not appear before the court since the registration was per se illegal.

The petitioner’s counsel brought it to the notice of the court that the marriage had been reported to have been performed under Section 7A of the Hindu Marriage Act, 1955 which was a special provision with respect to solemnisation of self respect marriages between Hindu couples and not applicable to couples professing different religions.

HR executive of a firm she worked for obtained her signatures in a devious way and registered the marriage







×



High Court favours employment of widow of temporary worker

SPECIAL CORRESPONDENT

Empathising with the widow of a temporary municipality employee who died before his services could be regularised, the Madras High Court Bench here has directed the Commissioner of Paramakudi Municipality in Ramanathapuram district to sympathetically consider her plea for accommodating her in some temporary post as expeditiously as possible and communicate the decision to her.

A Division Bench of Justices M. Sathyanarayanan and J. Nisha Banu passed the order while dismissing a writ appeal preferred by the widow J.K. Shanthi challenging the refusal of a single judge to direct the Commissioner of Municipal Administration and that of the Municipality to disburse the terminal benefits due to her husband who had served as Pump Operator, in a temporary post, in the local body since August 16, 1989.

The Bench held that the single judge had rightly refused to issue such a direction since the petitioner’s husband J.R. Kannan had died on January 29, 2006 even before his services were regularised by the State Government on the basis of a proposal forwarded to it by the municipality. They also pointed out that he had lost the chance of regularisation by a whisker since other similarly placed employees got regularised on February 23, 2006.

On October 5, 2006, the petitioner made an application to the Commissioner of Municipal Administration seeking compassionate employment and on March 22, 2007 a petition was submitted to the Commissioner of Paramakudi Municipality demanding the terminal benefits due to her husband. Both the requests were rejected on the ground that those benefits could be accorded only with respect to permanent employees and not temporary staff.

16 cats kept for meat rescued in Chennai

CHENNAI: Police and volunteers of People for Animals (PfA) rescued 16 catsfrom a narikorava settlement in Pallavaram here on Friday. The cats were kept for their meat.

PfA volunteer Sagar Sheth, who was part of the operation, said they received information that pet cats were trapped by the narikorvas, who on weekends skinned them and sold the meat to roadside eateries in and around Pallavaram. The meat was used in biryani.

Two PfA volunteers visited the settlement on Thursday. They befriended a couple of narikorava youths and asked them to demonstrate how the cats are trapped and then skinned. The demonstration was recorded by the volunteers. Later, the footage was shown to the Pallavaram police, who agreed to rescue the cats from the narikoravas.

On Friday morning, the police and PfA volunteers went to the narikorava settlement. All the 16 cats were kept in a single cage, and they were not provided water to drink.

Pallavaram police inspector G Venkatesan said they had received complaints about pet cats being stolen from various residential areas and kept in narikorava settlement. "When the PfA volunteers approached us for help, our team went and rescued the cats," he said.

The rescued cats were sent to in the PfA shelter in Red Hills. PfA co-founder Shiranee Pereira said the rescued cats were visibly shocked and dehydrated. They were not fed regularly. This was evident from their aggressive behaviour. "It will take at least a month for the cats to recover from the shock and behave normally," she said.

Land encroachment: Court issues notice to Chennai doctor

CHENNAI: A Kancheepuram district court has ordered notice to a doctor for allegedly encroaching a land and constructing a house on it.

Hugo John Gozamo, 74, from Kollam in Kerala alleged that Dr V Dharmalingam of Adyar in Chennai encroached his land measuring 6,450sqft in Pillaipakkam village in Sriperambudur taluk in June 2013.

After constructing a house, the doctor offered to pay the prevailing land price to Hugo. The doctor had to pay Rs 35.97 lakh, out of which, he paid Rs 5.5 lakh in advance, and promised to pay the rest in two months. After paying a total amount of Rs 10 lakh by April 2015, the doctor refused to pay the remaining amount.

Dharmalingam also constructed a building for manufacturing Siddha medicine on Hugo's land after entering into a joint venture project with the department of AYUSH.

Hugo then approached the second district court, which granted an interim injunction and restrained the doctor from letting out the property to any third party. The matter has been posted on November 2 for further hearing.

10,000 homes in old Pallavaram will be affected by ASI boundary

TOI 

Chennai: It is going to be a dull Diwali for over 10,000 homes in old Pallavaram as the ASI has announced plans to put up boundary stones after November 5.

This will make it impossible for the families to either sell their land or carry out alterations to their houses as the area comes under one of the 23 megalithic sites in Chennai. Speaking to TOI on Friday, residents who had been living there for over five decades said they were not able to conduct a wedding in the area or sell a part of their land as the area was an archaeological site. The Ancient Monuments and Archaeological Sites and Remains (Amendment and Validation) Act, (AMASR) 2010, is under implementation in the area, and this restricts any activity in monuments protected by the ASI.

The high court recently directed the ASI to identify archaeological sites and constructions within 100 to 300 metres of these and submit a report to the court on November 5 after a resident of Subham Nagar petitioned the court that he could not sell his land. Residents living on the megalithic sites on the city outskirts, including Pallavaram, Tambaram and Sembakkam, are among those affected.

"We have been living here for more than five decades. We cannot sell a part of our land to get our daughters married and the land rates have plummeted due to this ban. The court and the authorities should come to our aid and end this ban," said G Vijaya, a resident.

Pallavaram is home to 34,450 people, many of whom began constructing houses in the area about two decades ago. Residents of survey numbers 56 and 63, surrounding parts of Shubham Nagar, Zameen Pallavaram, KGK Nagar and Kamakshi Nagar are among those affected.

Friday, October 28, 2016

U’khand HC orders removal of Ayurved Univ VC on charges of misrepresentation of age

NAINITAL: Uttarakhand high court on Thursday ordered removal of the vice-chancellor (VC) of Dehradun-based Uttarakhand Ayurved University after concluding the hearing of a petition which alleged that the VC, Satyendra Prasad Mishra, had secured the post by providing wrong information about his age.

 A single bench of Justice Sudhanshu Dhulia delivered the order of removing the VC after hearing a PIL which was filed by Neeraj Kumar Dhulia, a resident of Pauri district in August. The PIL had alleged that Mishra, who was born in 1949, had misrepresented his date of birth claiming it to be 1951 in order to show that he was eligible for the position. The maximum age limit for applying to the post was 65 years which the petitioner alleged, Mishra had crossed at the time he was appointed.

Yogesh Kumar Pacholia, advocate of the petitioner NK Dhulia, told TOI that the matter of the VC’s age had been raised before other officials, including the university’s chancellor and CM Harish Rawat but “since there was no action, we were forced to approach the court.”


Incidentally, Mishra had been vice-chancellor of the university, which is an autonomous body of the Uttarakhand government, since more than five years. The university had been set up in 2009 as the first government ayurvedic university in the state. It has two campuses in Haridwar and a number of colleges affiliated to it including Baba Ramdev’s Patanjali Ayurvedic College and Hospital. Mishra took over as the first VC of the university in January 2011.
 He was reappointed to the post in Januray 2015 after his tenure expired. This reappointment, Dhulia argued in his PIL, was against norms as Mishra had misrepresented his date of birth and was not eligible for the position.

According to Dhulia, he sought information about the VC’s date of birth through an RTI application. The reply to his query revealed that the VC had himself submitted his bio-data in the institution in which he had mentioned his date of birth as July 14, 1949. During the reappointment, the PIL alleged, the year of birth was changed to 1951. “According to the information provided through RTI, Mishra’s age was more than 65 years on January 7, 2015 which was the date of his appointment as the vice-chancellor. This was in violation of the provisions of the Uttarakhand Ayurved University Act 2009 which stipulates that the vice-chancellor should not be more than 65 years of age,” said Pacholia.

Pradeep Hairiya, the advocate representing Mishra, told TOI that his client had submitted his resignation to the governor KK Paul who is the chancellor of the university on October 8 but it had not been accepted. “The court has disposed off the petition today and announced its judgment, so there is nothing else to be said in the matter,” he said.

NEWS TODAY 25.09.2024