Wednesday, January 2, 2019

மாநில செய்திகள்

‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டு மூலம் இனி பணம் எடுக்க முடியாது



‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் மூலம் இனி பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியாது. எனவே பழைய கார்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

பதிவு: ஜனவரி 02, 2019 03:15 AM
சென்னை,


‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் மூலம் இனி பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியாது. எனவே பழைய கார்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

‘சிப்’ உள்ள ஏ.டி.எம். கார்டுகள்

வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ள ஏ.டி.எம். கார்டு மூலம் எளிதாக மோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்தனர். எனவே மோசடியை தடுக்க பழைய முறையிலான ஏ.டி.எம். கார்டுகளுக்கு பதிலாக ‘சிப்’ வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனைத்து வங்கிகளுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக இது நடைமுறைக்கு வந்தது. ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் செயல்படாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனவே பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பழைய ஏ.டி.எம். கார்டுகளை கொடுத்து ‘சிப்’ உள்ள புதிய ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி விட்டனர்.

பணம் எடுக்க முடியவில்லை

ஆனால் சிலர் இன்னமும் புதிய ஏ.டி.எம். கார்டு வாங்காமல் உள்ளனர். இதனை கண்டுகொள்ளாமல் இருந்த வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள் நேற்று முதல் செயல்படவில்லை.

குறிப்பாக சென்னையில் பல வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது:-

தபாலில் அனுப்பி வைப்பு

‘சிப்’ இல்லாத டெபிட், கிரெடிட் ஏ.டி.எம். கார்டுகள் ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் வேலை செய்யாது என்பதால் அந்த கார்டுகளை வைத்து ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் ‘ஸ்வைப்’ செய்து பொருட்கள் வாங்கவோ முடியாது.

எனவே பழைய கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவற்றை வங்கியில் கொடுத்து ‘சிப்’ வைத்த புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர் பெயர் இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் ஒரே நாளிலும், பெயருடன் கூடிய கார்டுகள் 7 நாட்கள் அவகாசத்திலும் வழங்கப்படுகிறது. சாதாரண வகை கார்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பி வருகிறது. மஞ்சள் நிற மாஸ்டர் கார்டுகளை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த உத்தரவு அனைத்து சர்வதேச, உள்நாட்டு வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...