Friday, January 11, 2019

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க அனுமதிகேட்டு தமிழக அரசு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை


சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

பதிவு: ஜனவரி 11, 2019 05:30 AM
சென்னை,

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1,000 பரிசும் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் வசதிபடைத்தவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்க தடை விதித்தனர்.

அதாவது சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு அ.தி.மு.க. வக்கீல் பாலசுப்பிரமணியம் ஆஜராகி, தடை உத்தரவை மாற்றியமைக்கக்கோரி வழக்கு தொடர உள்ளதாக கோரிக்கை விடுத்தார். அதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதையடுத்து பிற்பகலில் நீதிபதிகள் முன்பு கூடுதல் அரசு பிளடர் மனோகர் ஆஜராகி, ‘சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று அரசு மனு தாக்கல் செய்ய உள்ளது. அந்த மனுவை உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதிகள், வழக்கை உடனே விசாரணைக்கு ஏற்கமுடியாது. வழக்கு தொடர்ந்தால், வரிசைப்படி விசாரணைக்கு ஏற்கப்படும் என்றனர்.

இதையடுத்து தடை உத்தரவை மாற்றியமைக்கக்கோரி உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ரேஷன் கடைகளில் எந்த பொருளும் வாங்காதவர்களுக்கும், சர்க்கரை வாங்குபவர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க தடை விதித்து ஐகோர்ட்டு கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டது. இதில் சர்க்கரை வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த ரொக்கப்பரிசு வழங்க அனுமதிக்க வேண்டும்.

பொது வினியோக திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ரேஷன் அட்டைகள் வழங்கும்போது அதை யாரும் தவறாக பயன்படுத்திவிட கூடாது என்பதில் அரசு கூடுதல் கவனத்துடன் செயல்படுகிறது.

இவ்வாறு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினர், நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பத்தினர், வசதிபடைத்த குடும்பத்தினர் என்று 3 வகையில் பிரித்து ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர். இவர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 உள்ளனர். இவர்களில் கடந்த 9-ந் தேதி வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசான ரூ.1,000 வாங்கிச் சென்றுவிட்டனர்.

இதனால் பொங்கல் ரொக்கப்பரிசு வாங்காத மீதமுள்ளவர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர். அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதால் பொங்கல் பரிசான ரூ.1,000-த்தை அவர்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டும். இதற்கு ஏற்ப 9-ந் தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.09.2024