Sunday, January 26, 2020

நிர்பயா வழக்கில் குற்றவாளியின் வழக்கறிஞர் கோர்ட்டில் குறிப்பிட்ட சத்ருஹன் சின்ஹா வழக்கின் விவரம் என்ன?

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட சத்ருஹன் சின்ஹா வழக்கின் தீர்ப்பைக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் நிறைவேற்றப்பட இருக்கிறது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17-ம் தேதி நிராகரித்தார். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சத்ருஹன் சின்ஹா வழக்கில் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தபின் அரசியலமைப்புச் சட்டம் 32-வது பிரிவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1997-ம் ஆண்டு குஜராத்தில் சத்ருஹன் சின்ஹா, மகேந்திர சவுஹான் குடும்பத்தினரைக் கொலை செய்த வழக்கில் சுரேஷ், ராம்ஜி ஆகிய இருவருக்குத் தூக்குத் தண்டனை விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2000ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

ஆனால் குற்றவாளிகள் இருவரும் தங்கள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த கருணை மனு மீது கடந்த 12 ஆண்டுகளாக எந்தவிதமான முடிவும் எடுக்காமல், அந்த மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக தங்களுடைய கருணை மனுமீது எந்தவிதமான முடிவும் எடுக்காமலிருந்து அதை நிராகரித்த குடியரசுத்தலைவர் முடிவுக்கு எதிராக அரசியலமைப்பு பிரிவு 21 மற்றும் 32 ஆகியவற்றின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் சுரேஷ், ராம்ஜி இருவரும் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகய், சிவா கீர்த்தி சிங் ஆகியோர் விசாரித்தனர். குடியரசுத் தலைவர் கருணை மனு மீது தன்னுடைய முடிவை அறிவிக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது பொறுக்க முடியாதது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-க்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. கடந்த 12 ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் தாமதித்து இருக்கக்கூடாது என்ற கூறி இருவரின் தூக்குத் தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்தனர்.

இந்த வழக்கைச் சுட்டிக்காட்டித்தான் நிர்பயா குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024