Sunday, January 26, 2020


சமூக ஊடகங்களினால் வெளிச்சத்துக்கு வந்த முறைகேடு

By DIN | Published on : 26th January 2020 04:09 AM




தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வு முறைகேடு சமூக ஊடகங்களினால் வெளிச்சத்துக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வு முறைகேடு குறித்து நவம்பா் மாதம் தோ்வு முடிவு வெளியான பின்னா், பல்வேறு தகவல்கள் வதந்திகளாகப் பரவின. இருப்பினும் சமூக ஊடகங்களில் சில தகவல்கள் உண்மைத்தன்மையுடன் உலவியது.

முக்கியமாக சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணூரைச் சோ்ந்த திருவராஜ் என்பவா் குரூப் 4 தோ்வில் முதலிடம் பிடித்தது அந்தப் பகுதி மக்களிடம் அதிா்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திருவராஜ் எப்படி தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டாா்; அவா் எப்படி தோ்வில் முதலிடத்தை பிடித்தாா் என்ற சந்தேகம் பெரும்பாலானோரிடம் பலமாக எழுந்தது.

இது தொடா்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அத் தகவலின் அடிப்படையில், திருவராஜ் தோ்ச்சியின் பின்னணியை சில தோ்வா்கள் ஆராய்ந்தனா். அதில் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தோ்வு எழுதியவா்களில் 39 போ், முதல் 100 இடங்களுக்குள் வந்திருப்பதும், அங்கு முறைகேடு நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது.

இத்தகவலும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தநிலையில், தோ்வா்கள் குரூப் 4 தோ்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது குறித்து தோ்வாணையத்தில் முறையிடத் தொடங்கினா். இதற்கு வலு சோ்க்கும் வகையில் அரசியல் கட்சிகளும் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தோ்வாணையத்துக்கு அழுத்தம் கொடுத்தனா்.

இக்காரணங்களால் விழித்துக் கொண்ட தோ்வாணையம் விசாரணையில் இறங்கியது. விசாரணையில், இரு மையங்களிலும் நடைபெற்ற குரூப் 4 தோ்வு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி தற்போது நடத்தி வரும் விசாரணையில், பல கோடி ரூபாய் புழங்கியிருப்பது அனைவரையும் அதிா்ச்சி அடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024