Tuesday, September 25, 2018


நேற்று, இன்று, நாளை - தி இந்து

Published : 24 Sep 2018 08:57 IST

 




மகாத்மா காந்தி படுகொலையை முதல் பக்கச் செய்தியாக பிரசுரிக்காத இந்திய நாளிதழ் எது? இப்படி ஒரு கேள்வியை ‘போர்ன்விடா புதிர் போட்டி’யில் கேட்டார் அமீன் சயானி. பதில்: ‘தி இந்து’.

தேசத் தந்தை மீது மரியாதை இல்லாமல் அப்படிச் செய்யவில்லை, முதல் பக்கம் முழுவதும் விளம்பரங்களை வெளியிடுவதே அப்போது அதன் வழக்கமாக இருந்தது. இப்போது எல்லாப் பத்திரிகைகளுமே முழுப் பக்க விளம்பரங்களை முதல் பக்கத்தில் பிரசுரிக்கின்றன. 140 ஆண்டுகளாகத் தொடரும் பத்திரிகை என்பதால், அது பார்க்காத மாற்றமோ, செய்யாத மாற்றங்களோ இல்லை.

கணிசமான தென்னிந்தியர்களுக்கு ‘தி இந்து’ ஒரு நெருங்கிய உறவினரைப் போல. கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகள் ‘தி இந்து’வுடன் வளர்ந்துள்ளன. 1970-களில் எங்கள் குடும்பம் கல்கத்தாவில் குடியேறியது. ‘தி இந்து’ படிக்காமல் திண்டாடினோம். பிறகு சந்தா கட்டினோம். ஒரு நாள் தாமதமாக தபாலில் வீட்டுக்கு வந்துவிடும். நேற்றைய நாளிதழே என்று நாங்கள் நினைத்ததில்லை. உள்ளூர் செய்திகளை ஒன்றுவிடாமல் படிப்போம். கடுங்குளிரும் பனிமூட்டமும் நிரம்பிய கல்கத்தாவில், சென்னை நகர வெதுவெதுப்பை இந்து மூலம் பெற்றோம்.

பகடி செய்வோர் ‘தி இந்து’வை ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’ என்பார்கள். அதை நீங்கள் வாழ்த்தினாலும், வைதாலும் படிக்காமல் இருக்க முடியாது. சுதந்திரப் போராட்டத்தை, அதிலும் காந்திய வழியை ‘தி இந்து’ வலுவாக ஆதரித்தது. உலகின் எந்தப் பகுதியில் நடந்தாலும் சர்வாதிகார ஒடுக்குமுறைகளை அது வன்மையாகக் கண்டித்தது. அக்காலத்தில் அரசில் வேலை செய்தவர்கள் ‘தி இந்து’விடம் வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் இருக்க முடியாது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அரசைக் கடுமையாக விமர்சிப்பதைக் குறைத்துக்கொண்டது. பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி மிகுந்த பக்குவத்துடன் ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கியது. இதே காலத்தில் நுண்கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்கத் தொடங்கியது. நெருக்கடிநிலையின்போது ‘தி இந்து’ தன்னுடைய கருத்தைக் காரமாகச் சொல்லியிருக்கலாமே என்று பல சமயங்களில் வாசகர்களுக்குத் தோன்றியது உண்டு. நெருக்கடிநிலைக் காலத்தில் ‘தி இந்து’வின் ‘மௌனம்’ காதைப் பிளந்தது. ஆனால், போஃபர்ஸ் பீரங்கி பேரம் பற்றி எழுதியபோது, அது சண்டமாருதமாக இருந்தது. இதே காலத்தில்தான் இலங்கை அரசியலில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுக்கலானது ‘தி இந்து’. தீர்வானது அமைதி வழியில் வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

2003-ல் ‘தி இந்து’ ஆசிரியரைக் கைதுசெய்ய ஜெயலலிதா தலைமையிலான அரசு உத்தரவிட்டது. முதலமைச்சரின் எதேச்சாதிகார வழிகளை விமர்சித்ததால் அவருடைய கோபத்துக்கு ஆளாக நேர்ந்தது. இந்துக்களின் எதிரி என்று ‘தி இந்து’வை வலதுசாரிகள் வசைபாடுவது இயல்பு. இடதுசாரி சார்பை அது சந்தேகத்துக்கு இடமில்லாமல் வெளிப்படுத்தியுள்ளது. வேதாந்தத்தை விளக்கமாக எழுதும் அதே நாளில்தான், மாட்டுக்கறிக்குத் தடை விதிப்பதை எதிர்த்தும் எழுதுகின்றனர். எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசை மேதமையைப் புகழும் அதே பகுதியில்தான், கானா பாட்டின் தனித்தன்மையைச் சிலாகித்தும் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. எல்லோர் தரப்புக் குரலுக்கும் இடம்தருகிறது ‘தி இந்து’.

சுதந்திரமான சமூகத்துக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்படுவதில் ‘தி இந்து’ உறுதியாக இருக்கிறது. புதிய வகை சுதந்திரத்துக்காகப் புதிய போராட்டத்தை அது நடத்திக்கொண்டிருக்கிறது.

வி.ஸ்ரீராம்

- ‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: சாரி

No comments:

Post a Comment

Madras univ convocation: Higher edu secy will sign certificates, says minister

Madras univ convocation: Higher edu secy will sign certificates, says minister A RaguRaman@timesofindia.com 25.09.2024  Chennai : In the abs...