Monday, May 13, 2019

மதுரை மருத்துவக் கல்லுாரிக்கு 100 'சீட்'

Added : மே 13, 2019 00:42

மதுரை : 'மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கும் அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகும்,'' என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இக்கல்லுாரியில் 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. கூடுதலாக 100 இடங்களை உருவாக்கி ஆண்டுதோறும் 250 மாணவர்கள் படிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கோரியது.'இடங்களை அதிகரிக்க போதிய கட்டட வசதிகள் இருக்க வேண்டும்' என கவுன்சில் தெரிவித்தது.

தேவையான கட்டடங்களை கட்ட 66 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. அதன் மூலம் வகுப்பறைகள், விரிவுரை கூடங்கள், நிர்வாக அலுவலகங்கள், மாணவருக்கான விடுதிகள் கட்டும் பணி நடக்கிறது.திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரிக்கும் கூடுதல் இடங்களை அரசு கோரியிருந்தது. இக்கோரிக்கையை ஏற்று சில நாட்களுக்கு முன் கூடுதலாக 100 இடங்களை ஒதுக்கி மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. மதுரை கல்லுாரிக்கு கூடுதல் இடங்கள் குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறுகையில், ''மதுரை மருத்துவக் கல்லுாரிக்கும் கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு 10 நாளில் வெளியாகும். இதுகுறித்த கூட்டம் டில்லியில் நடக்கவுள்ளது. நடப்பு ஆண்டில் கூடுதல் இடங்கள் கிடைக்கும்'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024