Thursday, November 28, 2019

மருத்துவ இயக்குனருக்கு ஆணையம், 'நோட்டீஸ்'

Added : நவ 27, 2019 22:10

சென்னை: மனநல காப்பகத்தில், பெண் கைதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பதில் அளிக்கும்படி, மருத்துவ கல்வி இயக்குனருக்கு, மாநில மனித உரிமை ஆணையம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள், 65. கொலை வழக்கில், சிறை தண்டனை பெற்று, வேலுார் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.

அவர், மன உளைச்சலில் பாதிக்கப் பட்டிருந்ததால், சென்னையில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், சிகிச்சை பெற்று வந்தார்.அவரை, உறவினர்கள் பார்க்க வராததால், மன அழுத்தம் காரணமாக, இம்மாதம், 21ம் தேதி, மனநல காப்பக குளியல் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுவோரின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.இது குறித்து, மாநில மனித உரிமை ஆணையம், வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன், மருத்துவ கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், 'மனநல காப்பகத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஐந்து வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024