Thursday, November 21, 2019

ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பயன்கள் கருவூலத்துறை முதன்மை செயலர் ஜவஹர் தகவல்

Added : நவ 20, 2019 22:57 

மதுரை: ''ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மூலம் காலையில் பில் சமர்ப்பித்தால் மாலையில் பணம் பட்டுவாடா செய்யப்படும். ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பயன்கள் வழங்கப்படும்,'' என மதுரையில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளர் ஜவஹர் தெரிவித்தார்.

மண்டல அளவிலான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியதாவது: மாநிலத்தில் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட இதர பணப்பயன்கள் 18 ஆயிரம் பணம் பட்டுவாடா அலுவலர்கள் மூலம் வங்கிகளில் செலுத்தப்படுகிறது. இதுதவிர மாநிலத்தில் 7.20 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களும் இத்துறை மூலம் வங்கிகளில் செலுத்தப்படுகிறது.ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி சம்பளம் உள்ளிட்ட பில்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாவட்ட கருவூலங்களில் சமர்பிப்பர். அதை பரிசீலித்து சரியாக இருக்கிறதா என ஆராய்ந்து கருவூல அலுவலர்கள் வங்கிகளுக்கு அனுப்ப ஐந்து நாட்களாகி விடும்.

ஆனால் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் காலையில் பில் சமர்ப்பித்தால் மாலையில் பணம் பட்டுவாடா செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் அனைத்து பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்படும். ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதியபயன்கள் வழங்கப்படும்.

இதற்காக மண்டல வாரியாக பணம் பட்டுவாடா அலுவலர்கள், கருவல அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. மதுரை மண்டலத்தில் மட்டும் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 743 அரசு ஊழியர்களுக்கு மூவாயிரத்து 167 பணம் பட்டுவாடா அலுவலர்கள் மூலம் பணப்பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024