Sunday, September 16, 2018

வடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்

Published : 14 Sep 2018 16:48 IST


இந்து குணசேகர்

 



கோம்பை அன்வர்

அந்தப் பரப்பரப்பான பேருந்து நிலையக் காட்சிகள் இரண்டரை வருடங்கள் கழித்தும் இன்னும் நினைவில் ஓடிக் கொண்டிருக்கிறது...

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்துக் கொண்டிருக்கும்போது, மதிய நேர வகுப்பாக களப்பணிக்கு பேராசிரியர்கள் மாணவர்களை அனுப்புவது வழக்கம்.
 
அப்போது எங்களது பிரதான தேர்வாக பிராட்வேவும், அதனைச் சுற்றியிருந்த இடங்களும் இருந்தன. முன்பின் தெரியாத மனிதர்கள்...சற்று வித்தியாசப்பட்டிருக்கும் முகங்கள்...இவர்களைத் தொலைவிலிருந்து கவனித்து அவர்களைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்க வேண்டும். அதுவும் சுவாரஸ்யமாக...

இவ்வாறு எனது காலச் சக்கரத்தில் எங்கோ ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களையும், இடங்களையும் ஒருங்கே சேர்ந்து காணப்படும் பிராட்வேவை பற்றித்தான் வடசென்னை பற்றிய இந்தத் தொகுப்பில் காண இருக்கிறோம்....

பிராட்வே..... வடசென்னையின் அதிமுக்கியப் பகுதி. சாமானிய மக்கள் ஏதோ ஒருவகையில் தங்களுக்கான வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ளவும், தங்களது பொருளாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் குவியும் முக்கியப் பகுதிகளில் ஒன்று.

அவ்வாறு வரும் மக்களை முதுகில் தட்டிக் கொடுத்து நம்பிக்கை தரும் இடமாக பிராட்வேயின் பாரீஸ் கார்னர், பர்மா பஜார், பூக்கடை, பீச் ஸ்டேஷ்னை ஒட்டியுள்ள பகுதிகள் எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன.

தொழில் சார்ந்து பிழைக்க வந்த மக்கள் நாளடைவில் அதனைச் சுற்றியோ அல்லது அதன் அருகிலுள்ள பகுதிகளிலோ தங்களது குடியிருப்புகளை அமைத்துக்கொள்வதன் தொடர் கலாச்சாரம் பிராட்வேயில் பரவுவதை நாம் காணலாம்.

இதற்கு சிறந்த எடுத்துகாட்டாக பர்மா பஜாரைக் குறிப்பிடலாம். 1960 -களில் பர்மாவிலிருந்து அங்கு குடியேறிவர்களின் காரணமாக இப்பகுதி பர்மா பஜார் என்று அழைக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே அங்கு பர்மிய பாரம்பரியம் சார்ந்த உணவு வகைகளான அத்தோ, மொய்ங்கோ போன்ற உணவுப் பொருட்கள் சார்ந்த கடைகள் இங்கு நிறைந்து காணப்படுகிறது.

இவ்வாறு சென்னையின் குட்டி வணிகச் சந்தையாக அடையாளப்படுத்தப்படும் பிராட்வேவுக்கு இன்னும் பல சுவராஸ்யமான முகங்கள் உள்ளன என்பதை நமக்கு படமிட்டுக் காட்டுகிறார், ’யாதும்’ ஆவணப் பட இயக்குனர் கோம்பை அன்வர்,

”பிரெஞ்சுக்காரர்களுக்கு பிறகு, போர்ச்சுகீசியர்கள் , யூதர்கள் என ஒவ்வொருவரின் கட்டுப்பாட்டிலும் மாறி மாறி வந்திருக்கிறது பிராட்வே. இதன் காரணமாகவே பிராட்வே தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது.

இதன் காரணமாகவே அக்காலத்தில் வணிகம் சார்ந்த வளர்ச்சி சென்னையைப் பொறுத்தவரை தெற்கு நோக்கி என்றில்லாமல் வடக்கிலிருந்துதான் தொடங்கியிருக்கிறது. இதனால் பெரும் வளர்ச்சிக்குரிய இடமாகவே பிராட்வே கருதப்பட்டது. அதன் பின்னர் இருபதாம் நூற்றாண்டுகளில் பிராட்வே நெருக்கடிக்கு உள்ளானது.

இதனைத் தொடர்ந்து பல வணிக நிறுவனங்களும், கல்வி நிலையங்களும் மதராஸின் தெற்குப் பகுதிகளை நோக்கி நகர்ந்தன. எடுத்துக்காட்டுக்கு மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியைக் குறிப்பிடலாம்.

பிராட்வேயில் அமைந்துள்ள கட்டிடங்கள் பல பாரம்பரியத் தன்மை கொண்டவை. குறிப்பாக ஜார்ஜ் டவுன் மிகுந்த பழமையானது. மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டதும் கூட.... இதன் சிறப்பு கருதியே யுனெஸ்கோவால் இது பாரம்பரியம் மிக்க (ஹெரிடேஜ்) இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாது பச்சையப்பன் முதலியார் அறக்கட்டளை சார்ந்த பள்ளிக் கூடங்கள், கல்லூரிக் கட்டிடங்கள் எனப் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க கட்டிடங்கள் பல இங்கு உள்ளன.

பாரீஸ் கார்னருக்கு எதிரே அமைந்துள்ள கோர்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் வடிவமைப்பு உள்ளேயும் வெளியேயும் வித்தியாசமான கலை நுணுக்கத்துடன் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மெட்ராஸின் ஆரம்பகட்ட உள்கட்டமைப்புகள் அனைத்தும் வடக்கிலிருந்துதான் தொடங்கியது, குறிப்பாக பிராட்வேயில் என்று குறிப்பிடலாம்..

மெட்ராஸின் முதல்ரயில்வே பாதைகள் ஏன் ராயபுரத்திலிருந்து தொடங்கின....?

இதனை அடிப்படையாக வைத்தே எல்லா தொழில் வளர்ச்சிகளும் இங்கிருந்துதான் தொடங்கப்பட்டன. தொழில் வளர்ச்சிகள் அனைத்தும் வடசென்னை சார்ந்ததாகத்தான் இருந்திருக்கின்றன.

பாரீஸை நோக்கி வணிகம் செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் வந்து பின்னர் இங்கேயே குடிபெயர்ந்தவர்களின் மதம் சார்ந்த ஆன்மிகத் தளங்களும் இங்கு பரவலாகக் காணப்படுகின்றன.


இதுமட்டுமல்லாது ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இருக்கின்றன. ஆனால், நாம் அதற்குரிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். இதனை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று பிராட்வே மீதும், பாரம்பரிய கட்டிடங்கள் குறித்தான பிரியத்தை நம்முடன் பகிர்ந்து கொண்ட கொம்பை அன்வர், இன்றைய இளம் தலைமுறையினர் சென்னையிலுள்ள பாரம்பரியமான கட்டிடங்களை அறிந்து கொள்வதற்காக ’ஹெரிடேஜ் வாக்’ போன்ற விழிப்புணர்வு சார்ந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதனைக் களத்தில் செயலாற்றியும் வருகிறார்.

அவரது சந்திப்பிற்குப் பிறகு நமது பயணம் மேலும் தொடர்ந்தது....

சினிமா படப்பிடிப்புகள்...

பாரம்பரிய கட்டிடங்கள், பரபரப்பான வணிகப் பகுதிகள் மட்டுமல்ல பிராட்வே உள்ள பல இடங்கள் தென்னிந்திய சினிமா துறைக்கு படப்பிடிப்புத் தளங்களாக 1960, 1970 களில் பயன்பாட்டில் எழுந்திருக்கின்றன.

குறிப்பாக, பெரியமேடு பகுதியில் அமைந்துள்ள மை லேடி கார்டன் பூங்காவில் அக்காலத்தின் காலத்தின் பல பாடல் காட்சிகள் பலவும் படமாக்கப்பட்டுள்ளன.

உதாரணத்துக்கு மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் சாவித்ரி, ஜெமினி கணேசன் இடம்பெற்ற ’வாராயோ வெண்ணிலாவே’ போன்ற பாடல்கள் அங்குதான் படமாக்கப்பட்டுள்ளன.

காலப்போக்கில் அந்த படப்பிடிப்புகள் அங்கிருந்து கொஞ்சமாக கால ஓட்டத்தில் நகர்த்தப்பட்டு பின்னர் அந்த இடங்கள் தற்போது இவ்வாறு செய்திகளில் குறிப்பிடும் இடங்களாக அறியப்பட்டு வருகின்றன.


மை லேடி கார்டன்

தற்போது அந்தப் பூங்காவில் உள்ள அந்த ஒற்றைப் பெண் சிலையும், மரங்களும்... இன்று அங்கு நடைப்பயிற்சிக்கு செல்லும் மக்களின் காலை மற்றும் அந்தி சாயும் பொழுதை இனிதே கழிக்கும் இடங்களாக மாறியுள்ளன.

செல்லப் பிராணிகளின் பெட் மார்க்கெட்

செல்லப் பிராணிகளின் காதலர்களாக இருப்பவர்கள் புது அனுபவத்தைக் கொடுக்கும் இடம் ஒன்று உள்ளது பிராட்வேயில்... பெட் மார்க்கெட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பெட் மார்க்கெட் என்று படித்ததும், உங்கள் சிந்தனைகளில் ஓடும் சந்தைகளின் பிம்பங்களுக்கு சற்றும் நேர்மாறாக காணப்படுகிறது அச்சந்தை.

பாரீஸிலுள்ள மண்ணடியில் ஒரு குறுகிய தெருவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடந்து கொண்டிருக்கும் சென்னையின் பழமையான சந்தை இது.

சுற்றிலும் மார்வாடி மக்களும், இஸ்லாமியர்களும் பரவலாகக் காணப்படும் அம்மன் கோவில் தெருவில் நடந்து கொண்டிருக்கிறது இந்தக் குட்டி சந்தை.

ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை முதல் நண்பகல்வரை மனிதத் தலைகளால் நிறைந்து காணப்படும் இந்தச் சந்தை அமைந்துள்ள தெருவில் கோழி, மீன், புறா, நாய்க்குட்டிகள் என பல்வேறு வகையான செல்லப் பிராணிகளை நீங்கள் வரிசையாகக் கடக்கலாம்.


பெட் மார்க்கெட்டில் விற்கப்படும் செல்ல பிராணிகள்

அவ்வாறு சென்று கொண்டிருக்கும்போதுதான் அங்கு வந்திருந்த வாடிக்கையாளர்களை சம்மணமிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேலுவைப் பார்க்க நேர்ந்தது.

வியாபாரத்தை ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள் விற்றுத் தீர்ந்துள்ள அவர் கொண்டு வந்த புறாக்கள். சிறுது நேரம் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

முதலில் பேசத் தயங்கியவர்... பின்னர் சுற்றியிருந்த அவரது சக நண்பர்களும், அருகிலிருந்த டீ கடைக்காரர்கள் உற்சாகப்படுத்த தயக்கத்துடனே தொடங்கினார்,

"வேலு என்னோட பெயர். திருவொற்றியூரில் வசித்து வருகிறேன். கடந்த மூப்பது வருடமாக இங்கு வியாபாரத்துக்காக வந்து கொண்டிருக்கிறேன். நமது பாடப் புத்தகத்தில் படிச்சிருப்பீங்களே, பண்ட மாற்றுமுறையைப் பற்றி. அதுதான் இங்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சந்தைக்கு வாங்குகிறவர்களும் வருவார்கள்... விற்கிறவர்களும் வருவார்கள்.

நான் பல வருடங்களாக புறாக்களில் பல வகைகளை இங்கு கொண்டு வந்து விற்று வருகிறேன். மாடப் புறா, சங்கிலி புறா, கிங், காக்டோ, மெக்கோ போன்ற பல வகைகள் இங்கு விற்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் இந்தத் சந்தை நடைபெறும். 200 ரூபாயிலிருந்து 7,000 ரூபாய் வரை இங்கு புறாக்கள் விற்கப்படுகின்றன.



வேலு

யார் வேண்டுமானாலும் தங்களிடம் ஆரோக்கியமாக உள்ள செல்லப் பிராணிகளை இங்கு கொண்டு வந்து விற்கலாம். பச்சைக்கிளி போன்ற பறவைகளை மட்டும் இங்கு விற்க அரசு தடை விதித்துள்ளது.

முன்பெல்லாம் இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களின் மூலம் நிறைய பேருக்குத் தெரிந்துள்ளது. வெவ்வேறு இடங்களிருந்து இந்தச் சந்தையைப் பார்வையிட வருகிறவர்களும் உண்டு.

முன்பெல்லாம் 2 ஆயிரம் பேர் வந்தார்கள் என்றால் தற்போது இதன் எண்ணிக்கை இரண்டு மடங்காகி இருக்கிறது.

அதிகாலை 6 மணியிலிருந்து மக்கள் கூட்டம் வரத் தொடங்கும். நண்பகல் வரை எங்கள் சந்தை நடைபெறும். எந்தவித சண்டைகள் சச்சரவுகள் இல்லாமல் எங்களது வணிகத்தை இங்கு ஓட்டிக் கொண்டிருக்கிறோம். போதிய வருமானமும் கிடைக்கிறது" என்ற வேலு எந்தவித மனக்குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக அங்கிருந்து புறப்பட்டார்.

செல்லப் பிராணிகள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, தகவல் தொழில் நுட்பத்தில் பணிபுரியும் இளைஞர்கள் பலரும் இங்கு செல்லப் பிராணிகள் விற்கும் தொழிலை துணைத் தொழிலாக செய்து வருகின்றனர்.

பிராட்வேயில் ஞாயிறு பொழுதுகளில் எங்கேனும் சிக்கிக் கொண்டீர்கள் என்றால் சற்று பொடி நடையாய் இந்தச் சந்தையை சுற்றிப் பாருங்கள் நிச்சயம் ஏமாற்றாது...

அனுபவப் பயணங்கள் தொடரும்....

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...