Friday, September 7, 2018


ஆராய்ச்சி செய்யாத பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு, 'கட்'

Added : செப் 07, 2018 00:56




'ஆராய்ச்சிகளில் ஈடுபடாத பேராசிரியர்களுக்கு, பதவி உயர்வு இல்லை' என, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், தமிழகம் முழுவதும், 600க்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங் மற்றும் கட்டடவியல் மேலாண்மை கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு, இணை பேராசிரியர்களாகவும்; இணை பேராசிரியர்களுக்கு, பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகின்றன.

ஆனால், கடந்த ஆண்டு களில், பதவி உயர்வு வழங்கியதில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளை சரியாக பின்பற்றவில்லை என, உயர் கல்வித் துறை கண்டறிந்துள்ளது.அதனால், இந்த ஆண்டு முதல், பதவி உயர்வுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின் அடிப்படையில் மட்டுமே, பதவி உயர்வு வழங்க, அண்ணா பல்கலை முடிவு செய்து உள்ளது.இது குறித்து, கடந்த வாரம், அண்ணா பல்கலையில் நடந்த, சிண்டிகேட் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதையடுத்து, 'பதவி உயர்வுக்கு தகுதி பெறும், உதவி மற்றும் இணை பேராசிரியர்கள், பிஎச்.டி., என்ற ஆராய்ச்சி படிப்பில், குறைந்தபட்சம், ஒரு மாணவரையாவது உருவாக்க வேண்டும்.

'யு.ஜி.சி., அங்கீகரித்த பிரபலமான ஆய்வு இதழ்களில், குறைந்தபட்சம், இரண்டு ஆய்வு கட்டுரை கள் வெளியிட்டிருக்க வேண்டும்' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.பதவி உயர்வுக்கு விண்ணப்பித்தோர் குறித்து, அண்ணா பல்கலை துணை வேந்தர் தலைமையிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, சுயமாக முடிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், 1,884 பேர், பதவி உயர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில், 600 பேருக்கு மட்டுமே, புதிய விதிகளின்படி பதவி உயர்வு கிடைக்கும் என, கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...