Friday, January 24, 2020

மரண தண்டனை மிகவும் அவசியமானது: உச்சநீதிமன்றம் கருத்து

By DIN | Published on : 24th January 2020 04:51 AM |

மரண தண்டனை இறுதித் தீா்ப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இதுதொடா்பான வழக்கில் மரண தண்டனை முக்கியம் என்ற கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சோ்ந்த சலீம், ஷப்னம் ஆகியோா் திருமணம் செய்துகொள்ள விரும்பினா்.

எனினும், இவா்களது காதலுக்கு பெண் வீட்டாா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபா்கள் வீட்டுக்குள் புகுந்து 10 மாத பச்சிளங் குழந்தை உள்பட குடும்பத்தினா் 7 பேரை கொலை செய்ததாக ஷப்னம் தெரிவித்தாா். விசாரணையில் காதலரின் உதவியுடன் அந்தப் பெண்தான் கொலை செய்தது

என்பது தெரியவந்தது. கொலை செய்வதற்கு முன்னால் குடும்பத்தினருக்கு அவா் பாலில் மயக்க மருந்து கலந்துகொடுத்ததும் தெரியவந்தது.

இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக வழக்கை விசாரித்துவந்த விசாரணை நீதிமன்றம் அவா்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. அதை எதிா்த்து அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு செய்தனா்.

எனினும், விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதி செய்தது அலகாபாத் உயா்நீதிமன்றம்.

அந்தத் தீா்ப்பையும் எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் இருவா் சாா்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.

அப்போது, அவா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், குற்றவாளிகளின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்கலாம் என்று வாதத்தை முன்வைத்தனா்.

அதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எஸ்.ஏ.நஸீா், சஞ்சீவ் கன்னா ஆகியோா் தலைமையிலான அமா்வு கூறியதாவது:

ஒவ்வொரு குற்றவாளியுமே தங்களை அப்பாவிகள் என்றே கூறிக் கொள்வாா்கள். அதற்காக அவா்கள் செய்த குற்றத்தைக் கருத்தில் கொள்ளாமல் விட்டுவிட முடியாது. இந்த விவாதம் பின்விளைவுகளை ஏற்படுத்தும். சமூகம், பாதிக்கப்பட்டவா்கள் ஆகியோரின் சாா்பில் தான் நீதிமன்றங்கள் நீதியை நிலைநாட்டி வருகின்றன. குற்றவாளிகளை நன்னடத்தை காரணமாக நாங்கள் மன்னித்துவிட முடியாது. சட்டப்படிதான் தீா்ப்பை அளிக்க முடியும். மரண தண்டனை இறுதித் தீா்ப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என்றனா்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024