Sunday, September 16, 2018

கும்பகர்ண தூக்கத்தில் இருந்து அரசு விழிக்கும்: ஐகோர்ட் நம்பிக்கை

Added : செப் 16, 2018 02:34

சென்னை, 'கும்பகர்ண துாக்கத்தில் இருந்து விழித்து எழுந்து, நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, தமிழக அரசு தாமதமின்றி நிறைவேற்றும்' என, சென்னை உயர் நீதிமன்றம்நம்பிக்கை தெரிவித்துள்ளது.மாவட்ட நுாலக அதிகாரிகளாக பணியாற்றி வந்த, மணிகண்டன் என்பவர் உட்பட சிலர், 'கிரேடு - ௧' மற்றும், 'கிரேடு - ௨' நுாலகர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை, ௨௦௧௫ம் ஆண்டில், பொது நுாலக இயக்குனரகம் பிறப்பித்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், 'மாவட்ட நுாலக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டதன் வாயிலாக, மாவட்ட நுாலக பணியில் இருந்து, மாநில கல்வி பணிக்கு மாறி விட்டோம். சீனியாரிட்டி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம், எங்களை பாதிக்காது. எனவே, பதவி இறக்கத்தை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டது.அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'மாவட்ட நுாலக அதிகாரிகளாக, மனுதாரர்கள் நியமிக்கப்பட்டது, தற்காலிக அடிப்படையில் தான்; அதனால், மனுதாரர்கள் உரிமை கோர முடியாது. சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால், மற்றவர்களை விட, ஜூனியர் நிலையில் மனுதாரர்கள் உள்ளனர்' என, கூறப்பட்டது.இதையடுத்து மனுக்களை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடன், உயர் நீதிமன்றத்தில், மணிகண்டன் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஆர்.சுப்ரமணியன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:நுாலகத்துறை, ஒரே பிரிவாக இயங்க துவங்கிய பின், கிரேடு - ௧ நுாலகர்களாக பணியாற்றிய சிலர், கிரேடு - ௩க்கு மாற்றப்பட்டனர். இதை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. கால தாமதமின்றி, பணி விதிகளில் திருத்தம் கொண்டு வர, தீர்ப்பாயம் பரிந்துரைத்தது.கடந்த, ௧௯௮௧ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, நேரடி தேர்வு மூலம், மாவட்ட நுாலக அதிகாரிகளாக, மனுதாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கல்வித் துறையில், மாவட்ட நுாலக அதிகாரிகளாக, இவர்கள் சேர்ந்து விட்டனர். பதவி உயர்வு மூலம், மாவட்ட நுாலக அதிகாரிகளாக, இவர்கள் வரவில்லை. அதனால், இவர்களை பதவி இறக்கம் செய்ய முடியாது.எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. பதவி இறக்கம் செய்த உத்தரவும், ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர்கள் ஒவ்வொருவருக்கும், தலா, ௨௫ ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகை வழங்கப்பட வேண்டும்.இந்தப் பிரச்னையை, மாநில அரசும், அதிகாரிகளும் கையாண்ட விதத்தில், எங்களுக்கு திருப்தி இல்லை. நுாலக துறையை, ஒரே பிரிவாக கொண்டு வர, ௧௯௮௯ல், கொள்கை முடிவு எடுக்கப்பட்டும், ௧௭ ஆண்டுகளுக்கு பின், ௨௦௦௬ல் தான், இடைக்கால விதிகள் ஏற்படுத்தப்பட்டன. கால தாமதமின்றி, விதிகளை உருவாக்கும்படி, தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.இருந்தும், விதிகளை உருவாக்க, அரசுக்கு, ௧௭ ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனால், மனுதாரர்கள் அலைக்கழிக்கப்பட்டு உள்ளனர். அரசு இயந்திரத்தின் செயல்பாடு, வேதனை அளிக்கிறது. அரசு இயந்திரம் கடமை தவறுவதால், பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டிக்காக வழக்கு தொடுப்பதும், அதனால், நீதிமன்ற நேரம் வீணாவதும் நடக்கிறது.இனிமேலாவது, கும்பகர்ண துாக்கத்தில் இருந்து, அரசு விழித்து எழும் என, நாங்கள் நம்புகிறோம். நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, தாமதமின்றி பின்பற்றினால், இதுபோன்ற வழக்குகளை, எதிர்காலங்களில் தவிர்க்கலாம்.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...