Tuesday, September 18, 2018

ராஜிவ் கொலையாளிகள் விடுதலையில் சிக்கல்:
தமிழக அரசு பரிந்துரையை எதிர்த்து வழக்கு


dinamalar 18.09.2018

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, ஏழு பேரை விடுதலை செய்வதற்கு, கவர்னருக்கு, தமிழக அரசு அனுப்பிஉள்ள பரிந்துரையை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.




காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில், ஆயுள் தண்டனை பெற்ற, ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்க்கும், மத்திய அரசின் வழக்கை முடித்து வைப்பதாக, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியது.'தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற, பேரறிவாளன் கருணை மனு மீது, கவர்னர் முடிவு எடுக்கலாம்' என, உச்ச நீதிமன்றம், சமீபத்தில்

தீர்ப்பளித்தது.அதைத் தொடர்ந்து, 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட, ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்' என, தமிழக கவர்னருக்கு, மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கிடையே, இந்த ஏழு பேரையும் விடுவித்து,தமிழக அரசு, 2014ல், பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, எஸ். அப்பாஸ், ஜான் ஜோசப், அமெரிக்கை நாராயணன், மாலா, சாமுவேல் திரவியம், கே. ராமசுகந்தம் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில், அப்போது மனு தாக்கல் செய்தனர்.
மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:
ஒருவரது தண்டனையை குறைப்பது, முன் கூட்டியே விடுவிப்பது தொடர்பாக, ஏற்கனவே, ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசுக்கும் இதுபோன்ற அதிகாரம் இருப்பது, சட்டவிரோதமானது என, அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.'தமிழக அரசின் முடிவை எதிர்த்து, மத்திய அரசு வழக்குதொடர்ந்துள்ளதால், அதன் முடிவுக்குப் பின், இந்த மனு மீது விசாரணை நடத்தப்படும்' என, உச்ச நீதிமன்றம், 2014ல், கூறியது.தற்போது, மத்திய அரசின் மனு மீதான வழக்கை, உச்ச நீதிமன்றம் முடித்துவைத்துள்து.இதையடுத்து, 'எங்கள் மனுக்களை விசாரிக்க வேண்டும்' என, அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என, தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதால், அதையும் எதிர்த்து, தங்கள் மனுவில் திருத்தம் செய்து, புதிதாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த மனுவை நேற்று விசாரித்த, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, மூன்று வாரத்துக்குள் புதிய மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து உள்ளது.இதனால், ராஜிவ் கொலையாளிகள் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...