Sunday, February 3, 2019


அரசு மருத்துவ கல்லூரியில் 103பேரை சேர்க்க பரிந்துரை

Added : பிப் 03, 2019 03:08

சென்னை:தனியார் கல்லுாரி மாணவர்கள், 103 பேரை, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்க, புதிதாக பரிந்துரையை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லுாரி, 2016 - 17ம் ஆண்டில், புதிதாக துவக்கப்பட்டது. அதே ஆண்டில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.இந்திய மருத்துவக் கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாததால், 2017- 18மற்றும்,2018 - 19ம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்க்க,மத்திய அரசு தடை விதித்தது.

இதையடுத்து, இந்தக் கல்லுாரியில் சேர்ந்த, 103 மாணவர்கள், வேறுகல்லுாரிகளுக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்களை, அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு மாற்றஉத்தரவிட்டது.இதை எதிர்த்து, தமிழகஅரசு மேல்முறையீடுசெய்தது. 

அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், ''அரசு கல்லுாரிகளில், இடங்கள் காலியாக இல்லாததால், இந்த மாணவர்களை சேர்க்க முடியாத நிலை உள்ளது,'' என்றார். மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், பி.வில்சன், சிலம்பண்ணன், வழக்கறிஞர்கள், எச்.ராஜசேகர், ரகமத் அலி ஆஜராகினர்.மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் ரபு மனோகர், தமிழக அரசு சார்பில், சிறப்பு பிளீடர் பாப்பையா, மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர், வி.பி.ராமன், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில், வழக்கறிஞர், டி.ரவிச்சந்திரன் ஆகியோர், 'நோட்டீஸ்' பெற்றனர்.

மனுவை விசாரித்த, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய,'டிவிஷன் பெஞ்ச்'பிறப்பித்த உத்தரவு:மாணவர்கள் மீது தவறு இல்லாததால், அவர்களின் நிலையை கருதியும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், தனியார் மருத்துவ கல்லுாரி இயங்காததாலும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இரண்டு வாரம்

*தமிழகத்தில் உள்ள,22 அரசு மருத்துவ கல்லுாரிகளில், இந்த மாணவர்களை சேர்ப்பதற்கான புதியபரிந்துரையை, இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆட்சிமன்ற குழுவிடம், இரண்டு வாரங்களில், தமிழக அரசு சமர்பிக்க வேண்டும்.

* பரிந்துரையை பெற்ற பின், தகுதி மற்றும் விதிமுறைகளின்படி அதை பரிசீலித்து, இரண்டு வாரங்களில், மத்திய சுகாதார துறை அமைச்சகத்துக்கு, மருத்துவக் கவுன்சிலின் ஆட்சி மன்ற குழு அனுப்ப வேண்டும்
.
*அதன்பின், இரண்டு வாரங்களில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், சட்டப்படி பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து, அமைச்சகம் எடுத்த முடிவை, சீலிட்ட உறையில் வைத்து, மார்ச், 28க்குள் தாக்கல் செய்யவேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024