Friday, May 24, 2019

மக்கள் தீர்ப்பு 2019: டாப் 10 ஹைலைட்ஸ்! #ElectionResults2019


மலையரசு 



2014 மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி 351-க்கும் இடங்களுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 542 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க-வின் வெற்றித் தொகுதிகளே மேஜிக் நம்பரான 272-ஐ எட்டுவதுதான் இந்தத் தேர்தலில் சிறப்பு.



மிகுந்த எதிர்பார்ப்புடன் களம் கண்ட ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியால் 90 இடங்களைப் பெறவே திணற வேண்டியதாகிவிட்டது. இதரக் கட்சிகள் சுமார் 101 இடங்களைப் பெறுகின்றன. தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி மாலை நிலவரப்படி 37 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் இருந்தது. அ.தி.மு.க கூட்டணி ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் இருந்தது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க-வும், பா.ம.க-வும் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டன.




டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க-வும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு சில இடங்களில் மட்டுமே டெபாசிட் பெறக் கூடும்.

மக்களவைத் தேர்தல், அ.தி.மு.கவுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தாலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களை வசப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தப்பியிருப்பதில் அக்கட்சிக்கு நிம்மதி.

மத்தியில் பா.ஜ.க-வுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில், மாயாவதி - அகிலேஷ் மெகா கூட்டணி கடும் வீழ்ச்சியையே சந்தித்தது. அங்கே பா.ஜ.க-வின் வியூகம் வெற்றிக்கு வித்திட்டது.



இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, இந்தி பேசும் மாநிலங்களே பா.ஜ.க-வுக்கு பெருந்துணை புரிந்துள்ளன. குஜராத், டெல்லி, பீகார், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களே பா.ஜ.க கூட்டணிக்கு வலு சேர்த்தன. மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மேற்கு வங்கத்திலும் 18 இடங்களைக் கைப்பற்றுகிறது பா.ஜ.க.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில், மோடி எதிர்ப்பு அலையில் உறுதியாக உள்ள தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்து பூஜ்ஜியத்தையே பா.ஜ.க பூசிக்கொண்டது. தெலங்கானாவில் சில இடங்கள் மட்டுமே கிடைக்கின்றன. அதேவேளையில், கர்நாடகாவில் மகத்தான வெற்றி எண்களைப் பதிவு செய்திருக்கிறது பா.ஜ.க.

மோடியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி தொடங்கி விவசாயிகள், வேலையின்மை பிரச்னைகள் வரை பல்வேறு பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்தாலும், அமித் ஷா டீமின் தேர்தல் வியூகம் மகத்தான வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.



``இந்த வெற்றி, இந்தியாவின் வெற்றி. இது இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளின் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி. பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் மீது மக்கள் கொண்ட நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி" என்று அமித் ஷா கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டில், ``மீண்டும் ஒருமுறை இந்தியா வென்றது. அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவை சேர்ந்து உருவாக்குவோம்" என்று கூறியிருக்கிறார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ``மக்களின் முடிவுக்கு நான் சாயம் பூச விரும்பவில்லை. மோடிக்கு எனது வாழ்த்துகள். அமேதியில் என்னை விழ்த்திய ஸ்மிரிதி இரானிக்கும் என்னுடைய வாழ்த்துகள். மக்கள் மீதான எனது அன்பு தொடரும்" என்றார். அமேதியில் தோல்வியைத் தழுவினாலும், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மகத்தான வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

``இந்த வெற்றியைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், களத்தில் இறங்கும் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அதன்படி இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம். இப்போது ஒரே ஒரு கவலைதான். அது, கலைஞர் இந்த வெற்றியைப் பார்க்க முடியவில்லையே என்பதுதான்'' என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



இதனிடையே, ஆந்திரப் பிரதேசம் முழுவதுமே ஜெகன் அலை வீசியிருக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார்.

No comments:

Post a Comment

CJI, Nalsar students have one query for BCI: ‘Who are you?’ It Is Between Me And Them, Says Surya Kant

CJI, Nalsar students have one query for BCI: ‘Who are you?’ It Is Between Me And Them, Says Surya Kant  Dhananjay.Mahapatra@timesofindia.com...