Wednesday, February 26, 2020

சென்னை - மும்பை மெயில், தாதர் விரைவு ரயில்கள் அதிவிரைவு 

ரயில்களாக இயக்கம்- ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது



சென்னை 26.02.2020

சென்னையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் தாதர் மற்றும் மும்பை மெயில் ஆகிய இரு ரயில்களும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அதிவிரைவு ரயில்களாக இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்கு இரவு 11.55 மணிக்கு மும்பை மெயில் (வண்டி எண்.11028) இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து தாதருக்கு காலை 6.45 மணிக்கு தாதர் விரைவு ரயில் (வண்டி எண்.12164) இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரு ரயில்களும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அதிவிரைவு (சூப்பர்ஃபாஸ்ட்) ரயில்களாக இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாதர் விரைவு ரயில் ஜூலை 1-ம் தேதி முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படுவதற்கு பதிலாக சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும். அதேபோல், தாதரில் இருந்து இயக்கப்படுவதற்கு பதிலாக லோகமான்ய திலக் முனையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. அத்துடன், இந்த ரயில் மும்பையில் இருந்து வரும்போது அரக்கோணத்தில் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மும்பை மெயில் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக எழும்பூரில் இருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் இனி நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மும்பையில் இருந்து சென்னைக்கு வரும்போது மட்டும் அரக்கோணத்தில் நிற்கும்.

இதற்கிடையே, இந்த இரு ரயில்களுக்கும், குறிப்பிட்ட ரயில் நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, ரயில் பயணிகள் சிலர் கூறும்போது, “மும்பை மெயில் கடந்த 60 ஆண்டுகளாக திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்நிலையில், இந்த ரயில் நிலையங்களில் நிற்காது என அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

பயணிகள் யாராவது இனி எழும்பூரில் மும்பை மெயிலை தவற விட்டுவிட்டால் அடுத்ததாக ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் சென்றுதான் ஏற முடியும். முன்புபோல், வழியில் திருவள்ளூர், அரக்கோணம் அல்லது திருத்தணி என எந்த ரயில் நிலையத்திலும் ஏற முடியாது.

இதேபோல், தாதர் விரைவு ரயில் மும்பையில் இருந்து சென்னைக்கு வரும்போது அரக்கோணத்தில் நிற்கும். தற்போது இந்தநிறுத்தம் ரத்தானதால் அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதியை சுற்றியுள்ள பயணிகள் இனிமேல் ரேணிகுண்டாவில் இறங்க வேண்டும் அல்லது பெரம்பூரில் இறங்கி செல்ல வேண்டும். இது பயணிகள் அனைவருக்கும் பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்” என்றனர்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...