Wednesday, October 4, 2017

தொலைதூர கல்வி மையங்கள் தரும் பட்டம் செல்லாது!




Advertisement
 தொலைதூர கல்வி மையங்கள் தரும்  பட்டம் செல்லாது!
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதுார கல்வி மையங்களில் தரப்படும் பட்டம் எதுவும் செல்லாது என்று, ஐகோர்ட்டில்பல்கலை மானியக்குழு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; இதனால், இந்த மையங்களில் படித்துள்ள
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் எல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இப்பகுதிகளில் உள்ள உறுப்புக் கல்லுாரிகள் மற்றும் இணைப்புக் கல்லுாரிகளுக்கு மட்டுமே, பல்கலையால் அங்கீகாரம் தர முடியும். அதேபோன்று, இந்த எல்லையில் மட்டுமே, தொலைதுார கல்வி மையங்களை நடத்த வேண்டும்.

ஆனால், பாரதியார் பல்கலை நிர்வாகம், சி.பி.ஓ.பி., (Centre for Participatory and Online Programme), சி.சி.ஐ.ஐ., (Centre for Colabration of Industries and Institutions), சி.பி.பி., (Centre for Participatory Programme) என பல்வேறு பெயர்களில், 'எல்லை மீறி' தொலைதுார கல்வி மையங்களை, பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதைத் தடுப்பதற்கு, தமிழக அரசின் உயர் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

380 கல்வி மையங்கள்

இதனால், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என்று 380க்கும் அதிகமான தொலைதுார கல்வி மையங்களைத் துவக்க, பாரதியார் பல்கலை அனுமதி அளித்துள்ளது. இந்த மையங்களில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு மட்டுமின்றி, மெடிக்கல் கவுன்சில், பார்மசி கவுன்சில் மட்டுமே அனுமதி தரக்கூடிய பல்வேறு பாடப்பிரிவுகளும் நடத்தப்பட்டு, பட்டம் மற்றும் பட்டயங்கள் வாரி வழங்கப்படுகின்றன.

வெறும் பத்துக்குப் பத்தடி அளவிலுள்ள கட்டடங்களில் செயல்படும் இந்த மையங்களால், முறையாக வகுப்புகள் நடத்தப்படுவதில்லை; வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே வந்தால் போதுமென்று விளம்பரம் தரப்படுவதால், ஏராளமான மாணவர்கள் இதில் சேர்கின்றனர். இவர்களின் விடைத்தாள்களும், பெயரளவில் திருத்தப்பட்டு, தேர்ச்சி தரப்பட்டு, பாரதியார் பல்கலை பெயரிலேயே பட்டங்கள் தரப்படுகின்றன.

அதேநேரத்தில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பணத்தையும், பல ஆண்டுகளையும் செலவழித்து, கஷ்டப்பட்டு படித்துத் தேர்வு எழுதும் மாணவர்களால் எளிதில் தேர்ச்சி பெற முடிவதில்லை. இதன் காரணமாக, கல்லுாரிகளை விடுத்து, இந்த மையங்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் பெறப்படும் கலை அறிவியல் படிப்புகளுக்கான பட்டத்துக்கு, எந்த மதிப்புமே இல்லாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது.

இதைக் கண்டித்து, பல முறை மனுப்போர் நடத்தியும் பலனில்லாமல் போனதால், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் கல்லுாரிகள் சங்கம் சார்பில், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாரதியார் பல்கலை பதிவாளர், பல்கலை மானியக்குழு செயலர், தொலைதுாரக் கல்வி அமைப்பு துணைச் செயலர், தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் ஆகியோர், இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

தொலைதுார கல்வி மையங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரும் இந்த மனுவின் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், பல்கலை மானியக் குழு சார்பில், அதன் கல்வி அலுவலர் மேகா கவுசிக், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரம், பாரதியார் பல்கலையின் அத்தனை அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், பல்கலை மானியக்குழுவின் விதிகளின் படியே செயல்பட வேண்டும் என்பதற்கான பல்வேறு சட்டப்பூர்வமான தரவுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது இந்த மனு. பாரதியார் பல்கலை எந்த சட்டத்தையும், விதியையும், சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மதிக்கவே இல்லை என்பதையும் பட்டவர்த்தனமாக விளக்கியுள்ளது.

பேராசிரியர் யஷ்பால், சட்டீஸ்கர் அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவின் மீது, 2005ல் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மையங்களுடன் இணைந்து உரிமம் அடிப்படையில் தொலைதுார கல்வி மையங்களை நடத்தக்கூடாது என்பதை பாரதியார் பல்கலைமீறியுள்ளதை இந்த மனு, பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளது.

எல்லை மீறல்

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில முக்கிய அம்சங்கள்:கோவை பாரதியார் பல்கலை, அதன் எல்லைக்குட்பட்ட கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு (திருப்பூர் மாவட்டத்தையும் உள்ளடக்கியது) மாவட்டங்களில் தொலைதுார கல்வி மையங்களை நடத்தலாம். ஆனால், எல்லையைத் தாண்டி, மையங்களை நடத்தி வருகிறது.

பல்கலைக்கழகங்களுக்கான எல்லைகள், தனியார் மையங்களுடன் இணைந்து தொலைதுாரக் கல்வி மையங்களை நடத்துவது தொடர்பாக, பல்கலை மானியக்குழு சார்பில் 2001 ஆக.,9 அன்று, விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதை பல்கலை நிர்வாகம் மதிக்கவே இல்லை.
பல்கலை மானியக்குழு சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, பல்கலை வளாகத்திலும், அதன் எல்லைக்குட்பட்ட பிற பகுதிகளிலும் 'கோர்ஸ்'களை நடத்தி, பட்டங்களை வழங்கலாம். 

வேறுதனியார் மையங்களுடன் இணைந்து,கல்வி மையங்களை நடத்துவதாக இருந்தால், அதற்கு பல்கலை மானியக்குழுவிடம் முன் அனுமதி பெறுவது அவசியம்.பல்கலை மானியக்குழு சார்பில், 2009 ஜூன் 15 அன்று, நாடு முழுவதும் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, 'தங்களது பல்கலை எல்லையைத் தாண்டிய பகுதியில், இணைப்புக் கல்லுாரிகள், வளாக மையம், கல்வி மையம் போன்றவற்றை நடத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

2016 மே 4 அன்று, அனைத்து மாநில உயர் கல்வித்துறை செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்தும் வகையில், மாநில அரசின் சட்டங்களில் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்; மாநில எல்லையைத் தாண்டி, பல்கலைகள் நடத்தும் கல்வி மையங்களை உடனே நிறுத்த வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பல்கலைக்கழகங்கள், தங்களது எல்லையைத் தாண்டி, இத்தகைய மையங்களை நடத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது. மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள், அந்தந்த பல்கலைச் சட்ட விதிகள் அனுமதித்த பகுதிகளில், பல்கலை மானியக்குழுவின் முன் அனுமதி பெற்ற பின்பே, எந்த பாடப்பிரிவையும் நடத்த வேண்டும்.

பட்டம் செல்லாது

ஆனால், பாரதியார் பல்கலைக்கழகம், பல்கலை மானியக்குழுவின் விதிகளுக்கு முரணாகவும், அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில், இந்திய மெடிக்கல் கவுன்சில், இந்திய பார்மசி கவுன்சில் உள்ளிட்ட சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் எதிலும் அனுமதி பெறாமலும், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளை, சட்டவிரோதமாக தொலைதுார கல்வி மையங்களால் நடத்தப்படுகிறது.

பல்கலையின் பெயர் மற்றும் 'லோகோ'வுடன், இந்த மையங்கள் விளம்பரங்கள் வெளியிடுவதால், பொது மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எல்லோரும், இந்த மையங்களை நம்புகின்றனர். இந்த மையங்கள் அனைத்தும், சட்டத்துக்கு விரோதமாகவும், பல்கலை மானியக்குழு விதிகளை மீறியும், சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் அனுமதியின்றியும் நடத்தப்படுவதால், இந்த மையங்களில் படித்து வாங்கிய பட்டம், சட்டப்படி செல்லாது.

மத்திய அரசின் அறிவுறுத்தல்கள், பல்கலை மானியக்குழு மற்றும் சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் பலவிதமான எச்சரிக்கைகள், கடிதங்கள், இணையங்களில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் என எதையும் கருத்தில் கொள்ளாமல், இந்த மையங்களை பாரதியார் பல்கலை நடத்தி வருகிறது.

இத்தகைய சட்டவிரோத மையங்களில் படித்துள்ள ஏராளமான மாணவர்கள், தங்கள் வாழ்க்கையின் பல ஆண்டுகளையும், பணத்தையும் இழந்துள்ளனர். எனவே, பல்கலை மானியக்குழு சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கருத்துக்களின் அடிப்படையில், உரிய உத்தரவை வழங்க வேண்டும்.இவ்வாறு, அந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை மானியக்குழுவே, பகிரங்கமாக இந்த மையங்களை 'இல்லீகல்' என்று கூறியுள்ளதோடு, இந்த மையங்களில் தரப்படும் பட்டங்கள் செல்லாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், இந்த மையங்களில் படித்து பல ஆயிரம் மாணவர்கள் வாங்கி வைத்துள்ள பட்டத்திற்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், சுப்ரீம் கோர்ட் உத்தரவை பாரதியார் பல்கலை நிர்வாகம் மீறியுள்ளதாகவும் கூறியுள்ளதால், ஐகோர்ட் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புஎகிறியுள்ளது.

எந்த ஆண்டு முதல்?

கல்வியாளர்கள் கூறுகையில், 'பல்கலை மானியக்குழுவின் சுற்றறிக்கையின்படி பார்த்தால் கடந்த, 2001ம் ஆண்டுக்குப்பின், பாரதியார் பல்கலையின் தொலை துாரக்கல்வி மையத்தால் வழங்கப்பட்ட பட்டங்கள் செல்லாது என்றே தெரிகிறது. இதுகுறித்து, மானியக்குழுதான், மாணவர்களின் நலன்கருதி வெளிப்படையான அறிவிப்பினை வெளியிட வேண்டும்' என்றனர். 

ஏன் எதிர்க்கிறது சுயநிதி கல்லுாரிகள் சங்கம்?

கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க இயலாத கிராமத்து இளைஞர்கள், வேலைக்குச்செல்வோர், உயர் கல்விக்கு விரும்பும் ஏழை மாணவர்கள் என பல தரப்பினருக்கும் தொலைதுார கல்வி மையங்கள் உதவும்போது, அவற்றை ஏன் மூட வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த மையங்களை அனுமதிக்கக்கூடாது என்று சட்டரீதியாகப் போராடும் தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம், இதற்குக் கூறும் காரணங்கள், யோசிக்க வைப்பவை.
* மாணவர்களிடம் 'ரெகுலர் கோர்ஸ்' என்று இந்த மையங்கள் ஏமாற்றுகின்றன. ஆனால், இவை தொலைதுாரக் கல்வி என்பது மட்டுமில்லாது, இந்த மையங்களுக்கு பல்கலை மானியக்குழுவின் அங்கீகாரமே கிடையாது.
* அரசாணை, முழு நேர ஆசிரியர்கள், ஆய்வுக்கூடம், நுாலகம் உள்ளிட்ட கட்டமைப்பு எதுவும் இந்த மையங்களுக்கு இல்லை.
* கல்வி சார்ந்த அமைப்புகள், இந்த மையங்களை நடத்துவதில்லை என்பதால் கல்வியின் தரம் கேள்விக்குறியாகிறது.
* மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கிடையாது; பல்கலை இணைப்புக் கல்லுாரிகளில், 75 சதவீதத்துக்குக் குறைவான வருகை இருந்தால், ஒரு மாணவன் தேர்வு எழுத முடியாது.
* மையங்களில் நடக்கும் தேர்வு, முறையாகக் கண்காணிக்கப்படாததால், நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கான விடைத்தாள் திருத்துவதும், மாலை 5:30 மணிக்குப் பின், முறையற்ற பணியாக நடக்கிறது.
* கஷ்டப்பட்டு கல்லுாரிக்குச்சென்று படிக்கும் மாணவனுக்கும், இத்தகைய மையங்களில் படிக்கும் மாணவனுக்கும் ஒரே மாதிரியான பட்டம் தரப்படுகிறது; அதில், எந்தவிதமான வேறுபாடும் சுட்டிக்காட்டப்படுவதில்லை.
* இணைப்புக் கல்லுாரிகள் தராத அல்லது தர முடியாத 'கோர்ஸ்'களையும் இந்த 'இல்லீகல்' மையங்களில் நடத்துகின்றனர்.
* வகுப்புகள் நடத்தாமல், செயல்முறைப் பயிற்சி அளிக்காமலே தேர்வுக்கு அனுமதிக்கின்றனர்.
* இந்த மையங்களால், பாரதியார் பல்கலைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது; அந்த அவப்பெயர், இதன் இணைப்புக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களையும் பாதிக்கிறது; அவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது.

அனுமதி அளித்தோரே பொறுப்பு!


பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்: 
பாரதியார் பல்கலை, யு.ஜி.சி., உத்தரவை மீறி, எல்லை தாண்டி தொலைதுார கல்வி மையங்கள் அமைத்து செயல்படுத்தி கொண்டிருப்பது, சட்டப்படி குற்றமாகும். கல்வியை வியாபாரமாக்கும் இம்முயற்சியால், பாதிக்கப்படுவது மாணவ சமுதாயம் மட்டுமே. இதன்மூலம் கிடைத்த, கல்விச்சான்று செல்லாது என்ற நிலை வந்தால், இம்மையங்களுக்கு அனுமதி அளித்தவர்களே, பொறுப்பேற்க வேண்டும். பதவி உயர்வு காரணங்களுக்காக, தொலைதுார கல்வி முறையில் படித்தவர்களின் கல்விச்சான்றிதழ் செல்லாது என அறிவிக்கும் போது, தன்னெழுச்சியாக மாணவர்கள் திரண்டு போராடுவது அவசியம்.

நிதியை நிறுத்த வேண்டும்!

பாலகுருசாமி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்:
 பாரதியார் பல்கலையின், அத்துமீறல் செயலை கட்டுப்படுத்த, தமிழக அரசாலும், யு.ஜி.சி.,யாலும் முடியும். பல்கலைக்கான நிதியை நிறுத்தி கண்டிப்பை வெளிப்படுத்த வேண்டிய, யு.ஜி.சி., மவுனம் சாதிக்கிறது. தமிழக அரசுக்கு, துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க, முழுஅதிகாரம் உண்டு. சிண்டிகேட் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றினால், துணைவேந்தரால் எதுவும் செய்ய முடியாது. தொலைதுார கல்வி மையங்களால், 'கரன்சி' கிடைப்பதால், தட்டி கேட்க வேண்டியவர்கள், வாய்மூடி வேடிக்கை பார்க்கின்றனர். எதற்கெல்லாமோ போராடும் மாணவ சமுதாயம், தனக்கான கல்வி
வியாபாரமாவதற்கு எதிராக, போராட முன்வர வேண்டும்.

அப்பட்டமான சட்டவிரோதம்

ஏ.எம்.எம்.கலீல், தலைவர், தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம்: 
பல்கலை மானியக் குழுவே, இந்த மையங்கள் வேண்டாமென்று தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டது; அதன் பின்னும், இந்த மையங்களை பல்கலை நிர்வாகம் நடத்த அனுமதிப்பதில் துளியும் நியாயமில்லை. இது அப்பட்டமான சட்டவிரோதமாகும். மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள், பல்கலை மானியக்குழுவின் எச்சரிக்கை அத்தனையையும் மீறி, செல்லாத பட்டத்தைத் தருவதற்கு, இந்த மையங்களை பல்கலை நிர்வாகமே நடத்தினால், அந்த பல்கலைக்கும், போலி கல்வி நிறுவனத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

இப்போது, பல்கலை மானியக்குழுவே, இதை பகிரங்கமாகத் தெரிவித்திருப்பது, வரவேற்கத்தக்க விஷயம். பல்கலை மானியக்குழுவின் முடிவு, எங்களைக் கட்டுப்படுத்தாது என்று பாரதியார் பல்கலை நிர்வாகம் அறிவிக்கட்டும்; பார்க்கலாம். இவ்வழக்கில், நீதி மன்றத்தில் நியாயமான முடிவு கிடைக்குமென்று நம்புகிறோம்.

சுண்டல் வியாபாரமானது கல்வி!

'பாடம்' நாராயணன், சமூக ஆர்வலர்: 
பல ஆண்டுகளாக தொலைதுார கல்வி மையங்களில், மிகப்பெரிய சுரண்டல் நடக்கிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழங்களுக்கு, இதுபோன்ற காரணங்களால் தான், அவப்பெயர் ஏற்பட்டது. சென்னை அண்ணா பல்கலையே, பொறியியல் படிப்பை தொலைதுார கல்வியாக அறிவித்து பின், திரும்ப பெற்றது. ஏனெனில், தொலைதுார கல்வியில், தனியார் பயிற்சி மையங்களோடு சேர்ந்து கூட்டு சதி நடக்கிறது. இதில் வரும் லஞ்சத்தில், துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட அனைவருக்கும் பங்குண்டு. சுண்டல் வியாபாரம் போல, கல்வியை கூவி விற்பதாக இச்செயல்பாடு அமைந்துள்ளது.

இதே நாளில் அன்று
பதிவு செய்த நாள்03அக்
2017
20:39




1904 அக்டோபர் 4

திருப்பூர் குமரன், ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகிலுள்ள, செ.மேலப்பாளையம் என்னும் சிற்றுாரில், நாச்சிமுத்து -- கருப்பாயி தம்பதிக்கு மகனாக, 1904 அக்., 4ல் பிறந்தார். வறுமையால், பள்ளிப் படிப்பை, ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார்.காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார். 1932ல் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் துவங்கிய போது, தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது.திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த, மறியலில் பங்கேற்றார். 1932 ஜன., 10ல் கையில் தேசியக் கொடி ஏந்தி, தொண்டர் படைக்கு தலைமை ஏற்று, அணிவகுத்து சென்றார். அப்போது, காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டதில், ஜன., 11ல் அவர் இறந்தார். கொடிக்காத்த குமரன் என, அனைவராலும் போற்றப்படும் அவரின் பிறந்த தினம், இன்று.
வங்கிகளில், 'ஆதார்' இணைப்பு மையங்கள் 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிப்பு

பதிவு செய்த நாள்03அக்
2017
20:13

வங்கிகளில், 'ஆதார்' இணைப்பு மையங்கள் 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிப்பு

வங்கிக் கணக்கு எண்ணுடன், 'ஆதார்' எண்ணை இணைக்க, வங்கிக் கிளைகளில், சிறப்பு முகாம்கள் செயல்பட துவங்கி உள்ளன.

70 சதவீதத்தினர் : 'வங்கிக் கணக்கு மூலமே, மத்திய, மாநில அரசுகளின் மானியம், முதியோர் பென்ஷன், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை என, அனைத்து பண பலன்களும் வழங்கப்படுவதால், ஒவ்வொருவரும், ஆதார் எண்ணை, வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, வங்கி வாடிக்கையாளர்கள், முதியோர் பென்ஷன் பெறுவோர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிவோர் என, வங்கிக் கணக்கை சார்ந்துள்ள அனைத்து தரப்பினரும், தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கின்றனர். ஆனால், 60 - 70 சதவீத, வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமே, இதுவரை, ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். நடப்பாண்டு இறுதிக்குள், இப்பணியை நிறைவு செய்ய, மத்திய அரசுதிட்டமிட்டு உள்ளது.

பத்துக்கு ஒன்று : தொடர்ச்சியாக, வங்கிக் கிளைகள் சார்பில், சிறப்பு இணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்டந்தோறும் செயல்படும் வங்கிகள், தங்களது, 10 கிளைகளுக்கு, ஓர் இணைப்பு மையம் அமைத்துள்ளது. மையத்தில், எந்த வங்கிக் கிளையின் வாடிக்கையாளரும் சென்று, தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள லாம்; இணைப்பு விபரம், அப்போதே உறுதி செய்யப்படும்.
நேற்று முதல், இந்த மையங்கள் செயல்பட துவங்கி உள்ளன. மையங்களின் செயல்பாடுகளை, 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணித்து, பதிவு செய்ய வேண்டும் எனவும், வங்கிகளின் தலைமையகங்கள் உத்தரவிட்டு உள்ளன.

- நமது நிருபர் -டுவதால், ஒவ்வொருவரும், ஆதார் எண்ணை, வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, வங்கி வாடிக்கையாளர்கள், முதியோர் பென்ஷன் பெறுவோர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிவோர் என, வங்கிக் கணக்கை சார்ந்துள்ள அனைத்து தரப்பினரும், தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கின்றனர். ஆனால், 60 - 70 சதவீத, வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமே, இதுவரை, ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். நடப்பாண்டு இறுதிக்குள், இப்பணியை நிறைவு செய்ய, மத்திய அரசுதிட்டமிட்டு உள்ளது.

பத்துக்கு ஒன்று : தொடர்ச்சியாக, வங்கிக் கிளைகள் சார்பில், சிறப்பு இணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்டந்தோறும் செயல்படும் வங்கிகள், தங்களது, 10 கிளைகளுக்கு, ஓர் இணைப்பு மையம் அமைத்துள்ளது. மையத்தில், எந்த வங்கிக் கிளையின் வாடிக்கையாளரும் சென்று, தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள லாம்; இணைப்பு விபரம், அப்போதே உறுதி செய்யப்படும்.
நேற்று முதல், இந்த மையங்கள் செயல்பட துவங்கி உள்ளன. மையங்களின் செயல்பாடுகளை, 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணித்து, பதிவு செய்ய வேண்டும் எனவும், வங்கிகளின் தலைமையகங்கள் உத்தரவிட்டு உள்ளன.

- நமது நிருபர் -
சென்னை,திருவள்ளூர்,வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
பதிவு செய்த நாள்
அக் 03,2017 20:11



சென்னை: சென்னை, திருவள்ளூர் , செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருநின்றவூர், கோடம்பாக்கம், சூளைமேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்துார் , தாம்பரம், வண்டலுார், அண்ணாநகர், மந்தைவெளி, ஆவடி,பெருங்களத்துார்,பொழிச்சலுார், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.மழை காரணமாக ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு,வேங்கல் கூட்ரோடு.தாமரைப்பாக்கம், ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

வேலூர் மாவட்டத்தில் வேலூர்,காட்பாடி, சத்துவாச்சாரி, பொய்கை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.
வங்கி வட்டி விகிதம் இன்று அறிவிப்பு
பதிவு செய்த நாள்04அக்
2017
07:00




புதுடில்லி : வங்கிகளுக்கான, 'ரெப்போ' வட்டியை குறைத்து, நாட்டின் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க, ரிசர்வ் வங்கியின் உதவியை, மத்திய அரசு எதிர்நோக்கி உள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அறிமுகம் காரணமாக, பல்வேறு துறைகளின் வளர்ச்சியில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் எதிரொலியாக, மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, ஏப்., - ஜூன் வரையிலான காலாண்டில், 5.7 சதவீதமாக குறைந்துள்ளது.

அதே சமயம், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலை உயர்வால், ஆகஸ்டில், நாட்டின் பணவீக்கம், ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு, 3.36 சதவீதமாக அதிகரித்துள்ளது; இது, ஜூலையில், 2.36 சதவீதமாக இருந்தது. இத்தகைய சூழலில், பொருளாதாரம் மேலும் சுணக்கம் அடைவதை தடுத்து நிறுத்திட, ரிசர்வ் வங்கியின் உதவியை, மத்திய அரசு எதிர்நோக்கி உள்ளது.
திருப்புவனம் அருகே இந்துக்கள் கொண்டாடிய மொகரம் பண்டிகை



திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பூக்குழி இறங்கியும், ஊர்வலமாக வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அக்டோபர் 02, 2017, 04:15 AM

திருப்புவனம்,

திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்டது முதுவன்திடல். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். அந்த காலக்கட்டத்தில் பாத்திமா நாச்சியார் என்ற பெண் சிறப்பாக வாழ்ந்து வந்தார். பாத்திமா நாச்சியார் இறந்தபின்னர் அவரது நினைவாக முதுவன்திடல் கிராமத்தில் உள்ள மையப்பகுதியில் பள்ளி வாசல் மற்றும் தர்கா அமைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் கிராமமக்கள் பாத்திமா நாச்சியாரை தெய்வமாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இங்கு வசித்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது இந்து மக்களே முதுவன்திடல் கிராமத்தில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

இருப்பினும் கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பண்டிகையின்போது பாத்திமா நாச்சியார் நினைவாக 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது திருமணம், குழந்தை வரம், நோய் தீர்த்தல் போன்றவைகளுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கிராமமக்கள் விவசாயம் செய்து அறுவடை செய்தபின்னர், முதலில் பாத்திமா நாச்சியாருக்கு படையல் செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.திருப்புவனம் அருகே இந்துக்கள் கொண்டாடிய மொகரம் பண்டிகை
தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்


தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 37 லட்சத்து 51 ஆயிரத்து 230 வாக்காளர்கள் உள்ளனர்.

அக்டோபர் 04, 2017, 04:30 AM

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பொன்னையா வெளியிட்டார். இதனை மாவட்ட வருவாய் அதிகாரி நூர்முகமது பெற்றுகொண்டார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து ஆண் வாக்காளர்கள் 18 லட்சத்து 54 ஆயிரத்து 276, பெண் வாக்காளர்கள் 18 லட்சத்து 96 ஆயிரத்து 603, இதர வாக்காளர்கள் 351 என்று மொத்தம் 37 லட்சத்து 51 ஆயிரத்து 230 வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:–

சோழிங்கநல்லூர் தொகுதியில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 789 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 10 ஆயிரத்து 542 பெண் வாக்காளர்களும், 74 இதர பாலின வாக்காளர்களும் என்று மொத்தம் 6 லட்சத்து 24 ஆயிரத்து 405 வாக்காளர்கள் உள்ளனர். இது தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக விளங்குகிறது.

ஆலந்தூர் தொகுதியில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 335 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 80 ஆயிரத்து 887 பெண் வாக்காளர்களும், 7 இதர பாலின வாக்காளர்களும் என்று மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 229 வாக்காளர்கள் உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் 1 லட்சதது 54 ஆயிரத்து 847 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 62 ஆயிரத்து 959 பெண் வாக்காளர்களும், 47 இதர பாலின வாக்காளர்களும் என்று மொத்தம் 3 லட்சத்து 17 ஆயிரத்து 853 வாக்காளர்கள் உள்ளனர்.

பல்லாவரம் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 776 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 9 ஆயிரத்து 403 பெண் வாக்காளர்களும், 25 இதர பாலின வாக்காளர்களும், என்று மொத்தம் 4 லட்சத்து 18 ஆயிரத்து 204 வாக்காளர்கள் உள்ளனர்.

தாம்பரம் தொகுதியில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 888 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 96 ஆயிரத்து 180 பெண் வாக்காளர்களும், 35 இதர பாலின வாக்காளர்களும், என்று மொத்தம் 3 லட்சத்து 92 ஆயிரத்து 103 வாக்காளர்கள் உள்ளனர்.

செங்கல்பட்டு தொகுதியில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 470 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 95 ஆயிரத்து 923 பெண் வாக்காளர்களும், 43 இதர பாலின வாக்காளர்களும் என்று மொத்தம் 3 லட்சத்து 86 ஆயிரத்து 436 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்போரூர் தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 664 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 846 பெண் வாக்காளர்களும், 19 இதர பாலின வாக்காளர்களும் என்று மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 529 வாக்காளர்கள் உள்ளனர்.

செய்யூர் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 139 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 94 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலின வாக்காளர்களும், என்று மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 262 வாக்காளர்கள் உள்ளனர்.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 948 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 615 பெண் வாக்காளர்கள், 47 இதர பாலின வாக்காளர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 610 வாக்காளர்கள் உள்ளனர்.

உத்திரமேரூர் தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 836 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 25 ஆயிரத்து 782 பெண் வாக்காளர்கள், 14 இதர பாலின வாக்காளர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 632 வாக்காளர்கள் உள்ளனர்.

காஞ்சீபுரம் தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 584 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 54 ஆயிரத்து 372 பெண் வாக்காளர்கள், 11 இதர பாலின வாக்காளர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரத்து 967 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், சப்–கலெக்டர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான மனுக்களை வரும் 8–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 5 மணிவரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பெறப்படும்.

வாக்காளர் பட்டியலில் விவரங்கள் சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள ஏதுவாக முகாம் வரும் 7–ந்தேதி (சனிக்கிழமை), 21–ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) பன்னீர்செல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) (பொறுப்பு) சா.சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், எழிலரசன், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பொழிச்சலூர் அருகே ‘வார்தா’ புயலால் சேதம் அடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை


பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் இருந்து கொளப்பாக்கம் செல்லும் சாலையில் அடையாறு ஆற்றில் கவுல்பஜார் தரைப்பாலம் உள்ளது.

அக்டோபர் 04, 2017, 04:15 AM

தாம்பரம்,

கொளப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் வந்து செல்லும் மாணவ–மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் இந்த பாலத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த பாலம் நீரில் மூழ்கி விடுவதால் போக்குவரத்து நிறுத்தப்படும்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ‘வார்தா’ புயலின் காரணமாக இந்த தரைப்பாலம் பெரும்பாலும் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் தற்காலிகமாக மண் கொட்டி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் தரைப்பாலத்தில் மண் கலவை கொட்டப்பட்ட இடம் அடித்துச்செல்லப்பட்டு பாலத்தை முழுமையாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மோசமான நிலையில் உள்ள தரைப்பாலத்தை அகற்றிவிட்டு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பியதால் போக்குவரத்து நெரிசல் பயணிகள் கடும் அவதி



தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் வண்டலூர் முதல் பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

அக்டோபர் 04, 2017, 04:45 AM

தாம்பரம்,

ஆயுத பூஜை, விஜயதசமி, முகரம், காந்தி ஜெயந்தி என 4 நாட்கள் தொடர் அரசு விடுமுறை விடப்பட்டதால் சென்னையில் வேலை பார்க்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்களில் நேற்று சென்னை திரும்பினர்.

தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் சென்னைக்கு வந்தன. இதனால் அதிகாலையில் இருந்தே பெருங்களத்தூர் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அலுவலக நேரமான காலையில் மேலும் பல வாகனங்கள் வந்ததால் வண்டலூரில் இருந்து இரும்புலியூர் வரை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் வாகனங்களை உடனடியாக சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட பஸ்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்தன. அதிகாலை முதல் காலை 10 மணி வரை பெருங்களத்தூர் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக தென் மாவட்ட பயணிகள் மட்டும் அல்லாமல் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்வோரும் கடும் அவதி அடைந்தனர்.
தலையங்கம்
சிறுசேமிப்புகளுக்கு கூடுதல் வட்டி




‘சிக்கனமாய் வாழணும், சேர்த்து வைக்க பழகணும்’ என்பது திரைப்பட பாடலாக இருந்தாலும், ஆண்டாண்டு காலமாக தமிழ் குடும்பங்களில் உள்ள பெரியவர்கள், இளைய சமுதாயத்தினருக்கு சொல்லும் அறிவுரையாகும்.

அக்டோபர் 04 2017, 05:00 AM

எறும்புக்கூட மழைக்காலத்தில் தனது உணவுக்காக ஆங்காங்கு அரிசி போன்ற உணவு தானியங்களை சேமித்து வைக்கிறது. எறும்புக்கு மழைகாலம் என்றால் மனிதகுலத்திற்கு முதிர்வயது காலத்திற்காக சேமித்து வைக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். கவிஞர் வைரமுத்து சமீபத்தில் எழுதிய ஒரு கட்டுரையில், ‘முதுமைக்காலத்தை மனதில் நினைத்து எதிர்காலத்திற்காக ஒவ்வொரு மனிதனும், தன் வருவாயில் மூன்றில் ஒருபங்கு சேமிக்கவேண்டும். சோறு என்பது இன்றைய தேவை. அரிசி என்பது நாளைய தேவை. விதைநெல் என்பது எதிர்கால தேவை. சேமிப்பும் இப்படி மூன்று வகைப்பட்டதுதான். இதுதான் மனித வாழ்க்கையின் தத்துவம். வேறு ஒன்றும் இல்லை’ என்று கூறிய அவர், எவ்வாறு சேமிக்கவேண்டும் என்பதற்கும் ஒரு அறிவுரையை கூறியுள்ளார்.

நன்கு தெரிந்த நம்பிக்கையுள்ள சேமிப்புகளில்தான் முதலீடு செய்யவேண்டும் என்பதை சொல்லும் வகையில், ‘ஆழம் கண்டுதான் நீச்சல் அடிப்பேன். அதனால், எனக்கு ஆறுகளும், குளங்களுமே போதும். கடல்வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார். முதலில், முதிர்வயதிற்காக சேமிக்கவேண்டும் என்ற உணர்வு வேண்டும். அப்படி சேமிக்கவேண்டும் என்று முடிவெடுத்தால், எது நம்பிக்கைக்குரிய வகையில், பின்னால் நமக்கு பலனும், வருமானமும் தரும் என்று யோசித்து சேமிக்கவேண்டும்.

அந்தவகையில், பொதுமக்கள் நம்பிக்கைக்குரிய சேமிப்புகளில் பணம் போடாமல், அதிகவட்டி கிடைக்கிறது என்பதற்காக போலி நிதிநிறுவனங்களில் முதலீடுசெய்து, உள்ளதும் போச்சுடா என்றநிலையில் வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி சேமித்த சேமிப்புகளையெல்லாம் ஏமாந்துப்போய் விட்டுவிடும் நிலைமையும் நாட்டில் அடிக்கடி செய்திகளாக வருகிறது. ஆக, பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய சேமிப்புகள் என்றால், அது அஞ்சலகங்கள், வங்கிகளில் சேமித்துவைக்கப்படும் சேமிப்புகள்தான். இதில், அஞ்சலகங்களில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களுக்கு பொதுமக்களிடம் நல்லஆதரவு இருக்கிறது. அதனால்தான் ஏராளமானவர்கள் அஞ்சலகங்களில் உள்ள சேமிப்புகளையே நாடுகிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், ஆண்டுதோறும் சிறுசேமிப்பு கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.20,737 கோடியே 29 லட்சம் வசூலாகியுள்ளது. பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி கால்ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த வட்டித்தொகையெல்லாம் இப்போது 2 கால் ஆண்டுகளாக .1 சதவீதம் குறைக்கப்பட்டு வந்துள்ளநிலையில், இந்த கால்ஆண்டில் அதாவது, அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள கால்ஆண்டுக்கு வட்டி விகிதம் கூட்டவும் இல்லை, குறைக்கவும் இல்லை என்பது நிச்சயமாக வரவேற்கக்கூடியது.

இப்போதைய நிலவரப்படி, வருங்கால வைப்புநிதிக்காக 7.8 சதவீதமும், மூத்தகுடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதமும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.5 சதவீதமும், தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 7.8 சதவீதமும், அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்திற்கு 7.5 சதவீதமும், தொடர் வைப்புநிதிக்கு 7.1 சதவீதமும், செல்வமகள் சேமிப்புத்திட்டத்திற்கு 8.3 சதவீதமும், சேமிப்புநிதிக்கு 4 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. கடந்த 2016–17–ம் ஆண்டுகளை ஒப்பிட்டால் பெருமளவில் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. சிறுசேமிப்பு அதிகளவில் இருந்தால்தான் அரசு பொருளாதார நிலைமையும் வலுவாக இருக்கும். எல்லா திட்டங்களுக்கும் இப்படி வட்டியை குறைத்துக்கொண்டே போவது சரியல்ல.

இப்போதுள்ள நிலையில் மூத்த குடிமக்களுக்கு மருத்துவசெலவு போன்ற பல்வேறு செலவுகள் உயர்ந்துகொண்டே போவது, பெருகிவரும் விலைவாசிகள் ஆகிய நிலையில், அரசு இதுபோன்ற சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை குறைக்காமல், கூடுதல்வட்டி அளிப்பது பொதுமக்களின் நலனை பாதுகாப்பதாக அமையும். இது மூத்த குடிமக்களின் வேண்டுகோள் மட்டுமல்ல, எதிர்காலத்துக்காக சேமித்துவைக்கும் அனைவரின் கோரிக்கையுமாகும்.
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நிறுத்தப்படும் கார்களை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு

2017-10-04@ 00:44:07




தாம்பரம்: குரோம்பேட்டை பகுதி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக உள்ளது. தி.நகரில் உள்ள பெரும்பாலான பிரபல துணிக்கடை, நகைக்கடை உள்ளிட்டவை தற்போது குரோம்பேட்டைக்கு வந்துவிட்டன. இதன் காரணமாக, விசேஷ நாட்கள், பண்டிகை கால நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க, சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் குரோம்பேட்டையில் உள்ள கடைகளுக்கு வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி ஜிஎஸ்டி சாலையில் சினிமா தியேட்டரும் உள்ளதால் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நெரிசல் மிகுந்து காணப்படும். இப்படி தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் குரோம்பேட்டை பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. ஆனால், இங்குள்ள பெரும்பாலான கடைகளில் பார்க்கிங் வசதி இல்லாததால், இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை ஜிஎஸ்டி சாலையின் இரு புறங்களிலும் நிறுத்துகின்றனர்.

இதனால், குரோம்பேட்டை பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாலை ஓரமாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததை பயன்படுத்தி மர்ம நபர்கள் அவற்றின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருக்கும் உடமைகளை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், கடந்த சனிக்கிழமை இரவு தனது கணவருடன் குரோம்பேட்டை சென்றார். அங்கு, காவல் நிலையம் அருகில் உள்ள சர்ச் எதிரில் தங்களது காரை நிறுத்திவிட்டு பாணி பூரி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், இவர்களின் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பையை திருடியுள்ளனர். இதனை புவனேஸ்வரி பார்த்து சத்தம் போட்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடி உள்ளனர். இவர்களில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட ஆசாமி கர்ணன் (33) என்பதும், தப்பியவர்கள் திருச்சி மாவட்டம், சமயபுரம், ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் சண்முகம் என்பதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல, செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுந்தர மாணிக்கம் (48) உட்பட பலரது கார்களில் கொள்ளை நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சாலை ஓரம் நிறுத்திய கார்களின் கண்ணாடிகளை உடைத்து மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று, குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்படும் கார்களின் கண்ணாடியை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் இருப்பதாகவும், குற்றவாளிகளை பிடித்து தொடர் திருட்டு, வழிப்பறியை தடுக்க முன்வருவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கண்டுகொள்ளாத போலீசார்

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் உள்ள பிரபல ஓட்டல்கள், கடைகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், அங்கு முறையாக பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதை போக்குவரத்து போலீசாரோ, மற்ற காவலர்களோ கண்டுகொள்வதில்லை. இப்படி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் முக்கிய சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதசாரிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட ஓட்டல்கள், கடைகள், நிறுவனங்கள் போலீசாரை உரிய முறையில் கவனிப்பதால் அவர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கிலோ 110 ஆக உயர்வு கண்ணீரை வரவழைக்கும் சின்னவெங்காயம்

2017-10-03@ 00:54:43




நாகர்கோவில்: சின்ன வெங்காயம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி வருகிறது. பதுக்கல் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். சமையல் அறையில் முக்கிய இடம்பிடிப்பது சின்ன வெங்காயம். சைவம் ஆனாலும், அசைவம் ஆனாலும் சமையலில் சின்ன வெங்காயத்தின் பங்கு மிகவும் முக்கியம். இது சாம்பார் வெங்காயம் எனவும் அழைக்கப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயம் இல்லாத சமையலை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் அதனுடன் ஒன்றிப்போயுள்ளனர். பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் சின்ன வெங்காயம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. அண்மையில் ரூ.80 வரை சரிந்திருந்த ஒரு கிலோ சின்ன வெங்காயம் மீண்டும் கிலோ ₹110 ஆக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் மொத்த வியாபாரிகளால் பதுக்கி வைப்பதாகவும், அதுவே விலையேற்றத்திற்கு காரணம் என்றும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

நாட்டில் மிகவும் பெரிய சின்ன வெங்காய விற்பனை மையமான நாசிக் பகுதியில் உள்ள 25 குடோன்களில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். விலையேற்றத்தை ஏற்படுத்துவதற்காக சின்ன வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஏழு முக்கிய வியாபாரிகள் வீடுகள், வணிக நிறுவனங்களில் சுமார் 120க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனை நடத்தியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் சின்ன வெங்காயம் விலை கட்டுக்குள் வரவில்லை. நாகர்கோவில் மார்க்கெட்களில் மீண்டும் ₹110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயம் விலையை கேட்டாலே மக்களுக்கு கண்ணீர் வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
பள்ளிபாளையத்தில் பளீச் வெள்ளையில் தயாராகிறது: தீபாவளி ஸ்பெஷல் மோனோ காட்டன் சட்டை: டெய்லரிங் ஆட்கள் பற்றாக்குறை பாதிப்பு
2017-10-04@ 00:06:43




பள்ளிபாளயைம், அக்.4: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தான் பிரதானம். முன்பு துணிகளை மட்டும் நெய்து விற்பனை செய்து வந்தவர்களில் பலர் மதிப்பு கூட்டும் தொழிலில் ஈடுபடுவது அதிகம். ஆயத்த ஆடைகள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது 200க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் பள்ளிபாளையத்தில் செயல்படுகின்றனர். இப்பகுதியில் தைக்கப்படும் வெள்ளை சட்டைகளுக்கு தான் முன்னணி நிறுவனங்கள் விரும்பி கொள்முதல் செய்கின்றன. குழந்தைகளுக்கு பல வகை செக்டு டிசைன் சட்டைகள் தயாரிப்பும் அதிகம்.

இந்தாண்டு தீபாவளிக்கு கலப்பினமில்லாத பருத்தி நூல் மட்டுமே பயன்படுத்தி மோனோ காட்டன் என்ற பெயரில் பளீர் வெண்மையுடன் வெள்ளை சட்டைகள் தைத்து கொடுக்க பல முன்னணி ஜவுளி கடைகள் ஆர்டர் கொடுத்துள்ளன. அதற்கேற்ற உயர் ரக பஞ்சு கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை கொள்முதல் செய்து ஒற்றை கோடு கொண்ட மோனோ காட்டன் சட்ைடகளை தயாரிப்பாளர்கள் தைத்து கொடுத்து வருகின்றனர். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் குறைந்தபட்சம் ₹200 முதல் மோனோ காட்டன் சட்டைகள் தைக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் டெய்லரிங் தொழில் தெரிந்தவர்கள் பற்றாக்குறை உள்ளது. பள்ளிபாளையத்தில் மட்டும் தற்போதைக்கு குறைந்தபட்சம் 1500 டெய்லர்கள் முதல் 2ஆயிரம் பேர் தேவைப்படுவர். ஆனால் 30 சதவீதத்துக்கு மேல் பற்றாக்குறை உள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். மத்திய அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பல்வேறு பிரச்னைகள் தற்போது ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கட்டாத மல்லையா லண்டனில் கைதாகி விடுதலை
2017-10-04@ 01:23:37




புதுடெல்லி: கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லைா, லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா தனது நிறுவனத்துக்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் ரூ.6,027 கோடி கடன் வாங்கினார். வட்டியுடன் சேர்த்து கடன் நிலுவை தற்போது ரூ.9,000 கோடியை தாண்டி விட்டது. கடனை திருப்பித்தராத மல்லையா, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து லண்டனில் பதுங்கியுள்ளார். விசாரணைக்கும் ஒத்துழைப்பு தரவில்லை. அவரை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் மல்லையா வங்கிகளில் வாங்கிய ரூ.6,000 கோடிக்கும் மேற்பட்ட கடனை 7 நாடுகளில் உள்ள போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதை அமலாக்கத்துறையும், சிபிஐயும் கண்டுபிடித்துள்ளன. இதற்கிடையில், லண்டனிலும் மல்லையா சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதன்பேரில் லண்டன் புலனாய்வு அமைப்பு அவரிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. இதை தொடர்ந்து விஜய் மல்லையா நேற்று கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார்.

மல்லையா மீது கடன் மோசடி வழக்கு ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. அவற்றை போலி நிறுவனங்களில் முதலீடு செய்ததன் மூலம் பண மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட உள்ளது. எனவே இரட்டை குற்றங்கள் புரிந்தவராக இருப்பதால், இந்திய சட்டப்படி மட்டுமின்றி இங்கிலாந்து சட்டப்படியும் அவர் நாடு கடத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இரண்டாவது முறையாக கைதான மல்லையா மீண்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதால், வழக்கு உடனடியாக முடிவு பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு கடத்தும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

வங்கிகளில் மல்லையா வாங்கிய கடன் ரூ.6,027 கோடி. வட்டியுடன் சேர்த்து நிலுவை ரூ.9,000 கோடியை தாண்டிவிட்டது. கடன் மோசடியுடன், இந்த தொகையை 7 நாடுகளில் உள்ள போலி நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மார்ச் முதல் லண்டனில் பதுங்கியுள்ளார் மல்லையா. கடந்த பிப்ரவரியில் மல்லையாவை நாடு கடத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்தது.

கழுவிய மீனில் நழுவிய மல்லையா

வங்கி கடன் மோசடி வழக்கில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்ட மல்லையா, வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதுபோல், நேற்றும் கைது செய்யப்பட்ட உடனேயே மல்லையா விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் இரண்டு முறையும் அவர் தப்பி விட்டார்.
மனநிலை பாதித்தவர்களை கவனிக்க முடியாததால் விபரீத முடிவு மகன், 2 மகள்களை கொன்று முதியவர் தற்கொலை
dinakaran

2017-10-04@ 00:43:23




திருச்சி: திருச்சி அடுத்த ஜீயபுரம் அருகே உள்ளது திருச்செந்துறை. இங்குள்ள அக்ரகாரத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (85). பீகார் மாநிலம் ரூர்கேலாவில் டெலிபோன் துறையில் இன்ஜினியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கமலா (80). இவர்களுக்கு சுப்பிரமணியன் (40), ரகு(36) என்ற 2 மகன்களும், அகிலா (34), மதுமிதா (32) என்ற 2 மகள்களும் உண்டு. இவர்களில் சுப்பிரமணியன், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தேசிய வங்கி கிளையில் மேலாளராக வேலை பார்க்கிறார். அதேபகுதியில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 2வது மகன் ரகு, அகிலா, மதுமிதா ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இதனால், அவர்களை கிருஷ்ணமூர்த்தியே கவனித்து வந்தார். அவ்வப்போது, மூத்த மகன் சுப்பிரமணியன் வந்து, தந்தை, தம்பி, தங்கைகளை பார்த்துவிட்டு செல்வார். அதேபோல், கடந்த சனிக்கிழமையன்று வீட்டுக்கு வந்தார். அப்போது, வயதான காலத்தில் என்னால் அம்மாவையும், பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. நான் எப்படியோ இங்கு இருந்து கொள்கிறேன். தம்பி, தங்கைகளை உன்னுடன் அழைத்து சென்றுவிடு’’ என்று சுப்பிரமணியனிடம் கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

அதற்கு சுப்பிரமணியன், ``நான் வாடகை வீட்டில் இருக்கிறேன். இந்த நிலைமையில் தம்பி, தங்கைகளை என்னுடன் வைத்து கவனிக்க முடியாது. 5 மாதம் பொறுத்திருங்கள். நான் மாற்று ஏற்பாடு செய்கிறேன்’’ என்று தந்தையிடம் கூறினார். பின்னர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் கமலாவை மட்டும் சுப்பிரமணியன் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். இந்தநிலையில், கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு பால்காரர் நேற்று காலை பால்போட வந்தார். அப்போது, ஞாயிறு மாலையில் போட்ட பால்பாக்கெட் வெளியே இருப்பதை கண்டு சந்தேகமடைந்தார். வீடும் திறந்து கிடந்தது. இதனால், ரகுவை அழைத்தார். பதில் வராததால் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு ஒரு அறையில் கிருஷ்ணமூர்த்தியும், ரகுவும் இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். மற்றொரு அறையில் அகிலா இறந்து கிடப்பதை பார்த்து அலறியபடி ெவளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தாரிடம் தகவலை ெதரிவித்தார்.

உடனடியாக ஜீயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், போலீசார் வந்து வீட்டுக்குள் நுழைந்தனர். கிருஷ்ணமூர்த்தி, அகிலா, ரகு ஆகிய 3 பேரும் வாயில் ரத்தம் வழிந்தபடி இறந்து கிடந்தனர். வீட்டின் பின்பக்க காம்பவுன்ட் சுவர் ஓரம் புதர்மண்டிய இடத்தில் மதுமிதா இறந்து கிடந்தார். இதையடுத்து 4 பேரின் உடல்களை கைப்பற்றி, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தயிர் சாதத்தில் விஷம்: இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், `சுப்பிரமணியன் பார்த்துவிட்டு சென்றவுடன் கிருஷ்ணமூர்த்தி மன உளைச்சல் அடைந்துள்ளார். பிள்ளைகளை எப்படி சமாளிப்பது என்று வேதனை அடைந்துள்ளார். இதையடுத்து, தயிர் சாதத்தில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார்’ என்பது தெரியவந்தது. இதுபற்றி, ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்குச் மார்ச் 2018-ம் வரை சேவை கட்டணம் இல்லை
2017-10-03@ 20:28:46

புதுடெல்லி: ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்குச் மார்ச் 2018-ம் வரை சேவை கட்டணம் கிடையாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேவை கட்டணம் ரத்து சலுகையை மார்ச் 2018 வரை நீட்டித்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
100 வயது நிரம்பியவருக்கு 2 மடங்கு ஓய்வூதியம்
2017-10-04@ 01:43:33

தஞ்சை: தஞ்சை யாகப்பா நகரை சேர்ந்தவர் சீதாராமன். இவர் கடந்த 1917 செப்டம்பர் 27ம் தேதி பிறந்தவர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி இறுதியாக நிலவரித் திட்ட அலுவலராக 1973ல் ஓய்வு பெற்றார். இவருக்கு கடந்த செப்டம்பர் 27ம் தேதி 100 வயது நிரம்பியது. இதையடுத்து அவருக்கு செப்டம்பரில் 2 மடங்கு ஓய்வூதியம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கருவூலத்தில் நடந்த ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில் சீதாராமனுக்கு 100 சதவீத கூடுதல் ஓய்வூதியத்திற்கான ஆணையை மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் வழங்கியதுடன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
'திருமணத்தை கோர்ட் ரத்து செய்ய முடியுமா?'
பதிவு செய்த நாள்03அக்
2017
20:00

புதுடில்லி: கேரளாவில் நடந்த, 'லவ் ஜிகாத்' தொடர்பான வழக்கில், 'அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், ஒரு திருமணத்தை ரத்து செய்து, நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்பது குறித்து விசாரிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இம்மாநிலத்தைச் சேர்ந்த, முஸ்லிம் இளைஞர், ஷபின் ஜகான், ஹிந்து மதத்தைச் சேர்ந்த, ஒரு பெண்ணை திருமணம் செய்தார். 'திருமணத்துக்கு முன், அந்த பெண், முஸ்லிமாக மத மாற்றம் செய்யப்பட்டார். 'ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு உதவுவதற்காக, ஹிந்து பெண்களை திருமணம் செய்வதாகக் கூறி, மத மாற்றம் செய்து, ஏமாற்றுகின்றனர்' என, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஷபின் ஜகானின் திருமணத்தை, 'லவ் ஜிகாத்' எனக்கூறி, 'அது செல்லாது' என, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, ஜகான் தொடர்ந்த வழக்கில், 'ஹிந்து பெண்கள் மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பப்படுவது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

என்.ஐ.ஏ., விசாரணையை எதிர்த்து, ஜகான் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, உச்ச நீதிமன்ற அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, 'திருமணம் செல்லாது என உத்தரவிட, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து ஆராயப்படும்' என, அமர்வு கூறியது. இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை, 9க்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பழைய நோட்டை மாற்றிய விவகாரம் : வருமான வரி விசாரணையில் 'டாஸ்மாக்'

பதிவு செய்த நாள்03அக்
2017
23:36

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 'டாஸ்மாக்' கடைகளில் வசூலான தொகையை, வங்கியில் செலுத்தியதில் நடந்த முறைகேடு புகார் தொடர்பாக, வருமான வரித்துறையினர் விசாரிக்கவுள்ளனர்.

இது குறித்து, வருமானவரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, டாஸ்மாக் கடை வசூல் தொடர்பாக புகார் வந்தது. அதன்படி, சென்னையில், ஒன்பது கடைகளில் அதிரடி சோதனை நடத்தினோம்; எதுவும் சிக்கவில்லை. டாஸ்மாக்கில் வசூலாகும் தொகையை, பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம், தினசரி பெற்று, அதை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் செலுத்துகிறது. அதற்காக, முத்தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த புகார் தொடர்பாக விசாரிக்க, அந்த வங்கிக் கிளைக்கு சென்றோம். அவர்களோ, அந்த தனியார் நிறுவனம், டாஸ்மாக் கடைகளில் பணத்தை வசூலிக்கும் போது கொடுத்த ரசீதை தந்தனர். ஆனால், பழைய நோட்டுகளா; புதிய நோட்டுகளா என்பது குறித்து, வாய் திறக்கவில்லை. அவை, 'கரன்சிசெஸ்ட்' என்ற, பணம் இருப்பு மையத்திற்கு அனுப்பி விட்டதாகவும், அதனால் விபரம் கூறுவது சிரமம் என, கைவிரித்து விட்டனர்.இதற்கிடையில், கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்திற்கான கெடு நெருங்கியதால், விசாரணையை நிறுத்தி வைத்தோம். அதில், முறைகேடு நடந்திருப்பதாக கருதுவதால், டாஸ்மாக் அதிகாரிகள், தனியார் வங்கி அதிகாரிகளிடம், மீண்டும் விசாரணை நடத்த முடிவு எடுத்துள்ளோம். இதில், 600 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 'நோட்டீஸ்' அனுப்பியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தஞ்சை கோவிலில் சூடு தங்காமல் பக்தர்கள் அவதி
பதிவு செய்த நாள்03அக்
2017
21:49




தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், பிரகாரத்தை சுற்றி வர தரை விரிப்புகள் இல்லாததால், சூடு தாங்காமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு நாள்தோறும், 1,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர், பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியரும் அழைத்து வரப்படுகின்றனர். கோவிலின் முகப்பு முதல் உட்பிரகாரம் வரை, அனைத்தும் கற்களால் ஆன தரை தளம் கொண்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், ராஜராஜன் நுழைவு வாயிலில் துவங்கி, மூலவர் சன்னதி, வாராஹி அம்மன் சன்னதி, நந்தி மண்டபம், முருகன் சன்னதி, கருவூரர் சன்னதி என, அனைத்து பகுதிகளுக்கும் நடந்து செல்கின்றனர்.

தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வர வசதியாக, தரைகளில் விரிப்புகள் எதுவும் இல்லை. தரை பகுதி சூடாக இருப்பதால், பக்தர்கள், சுற்றுலா பயணியர் ஓட்டமும், நடையுமாக, அடுத்தடுத்த சன்னதிகளுக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகின்றனர்.
'கோவில் நிர்வாகம், தரமான விரிப்புகளை பிரகாரம் முழுவதும் விரித்து வைக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை

பதிவு செய்த நாள்03அக்
2017
21:44




சிதம்பரம்: சம்பளம் வழங்காததை கண்டித்து, அண்ணாமலை பல்கலை ஊழியர்கள், துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையை, 2013ல், அரசு கையகப்படுத்தியது. தற்போது, தொலைதுாரக் கல்வி மற்றும் பொறியியல் புலம் உள்ளிட்ட பல துறைகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால், பல்கலை நிர்வாகம் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.

போராட்டம் : தற்போது, பல்கலையில், 9,500 பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அரசிடம் இருந்து நிதி பெற்று, சம்பளம் வழங்க காலதாமதமாகி வருகிறது. 

இதை கண்டித்தும், மாத இறுதி வேலை நாளில் ஊதியம் வழங்க வலியுறுத்தியும், ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் - ஜாக் கூட்டமைப்பினர், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த மாத சம்பளம், நேற்று வரை வழங்கப்படாததால், ஆத்திரம் அடைந்த ஜாக் கூட்டமைப்பினர், 200க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 10:30 மணிக்கு, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைவிட்டனர் : துணைவேந்தர், பதிவாளர் சென்னை சென்றிருக்கும் தகவலை அறிந்த போராட்டக் குழுவினர், பொறுப்பு பதிவாளர் சந்திர சேகரன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

'துணைவேந்தர், பதிவாளர் ஆகிய இருவரும், ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையை பெறவே, சென்னை சென்றுள்ளனர். 'அனைவருக்கும், 5ம் தேதி சம்பளம் வழங்கப்படும்' என, பொறுப்பு பதிவாளர் சந்திரசேகரன் கூறினார். இதை ஏற்று, ஜாக் கூட்டமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர்.
மலேஷியாவில் தவிக்கும் காஞ்சிபுரம் பெண்:மீட்டுத்தர பிள்ளைகள் கோரிக்கை

பதிவு செய்த நாள்03அக்
2017
23:49

காஞ்சிபுரம்;திருக்காலிமேட்டிலிருந்து மலேஷியாவிற்கு, வீட்டு வேலைக்கு சென்ற பெண், அங்கு சிக்கி தவிப்பதாகவும், அவரை மீட்க வேண்டும் எனவும் அவரது பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் அடுத்த திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி, அல்லி, 38. இவர்களுக்கு, விக்னேஷ், 22; கீர்த்தனா, 19 மற்றும் 17 வயதில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.காஞ்சிபுரத்தில் வீட்டு வேலை செய்து வந்த அல்லி, தனியார் நிறுவனம் மூலம், ஜூலை மாதம், மலேஷியா நாட்டிற்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.மலேஷியாவில், தமிழர் வீட்டில் பணி புரிவதால், திருக்காலிமேட்டில் இருக்கும் உறவினர்கள் நிம்மதியுடன் இருந்தனர்.
ஆனால், கடந்த இரு வாரமாக, அல்லி தன் குழந்தைகளுடன் மொபைல் போனில் பேசவில்லை. இதுகுறித்து அவர்கள் விசாரித்த போது, மலேஷியாவில் தங்கள் தாய் மோசமாக நடத்தப்படுவதும், அவரின் மொபைல் போனை அங்குள்ளவர்கள் பறித்து வைத்திருப்பதும் தெரிய வந்தது.தன்னை மீட்க வேண்டும் என, அல்லி, தன் பிள்ளைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.எனவே, மலேஷியாவில் சிக்கி தவிக்கும் தங்கள் தாயை, தமிழக, மத்திய அரசுகள் மீட்க வேண்டும் என, அல்லியின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை - -புனலூர் அகல ரயில்பாதை : 2018 ஜனவரியில் ரயில்கள் இயக்க வாய்ப்பு
பதிவு செய்த நாள்03அக்
2017
23:47




திருநெல்வேலி: செங்கோட்டை - புனலுார் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் வரும் டிசம்பருக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம், புனலுார் வரையிலான 49.5 கி.மீ. தொலைவுக்கு மீட்டர்கேஜ் ரயில் பாதையை, அகலப் பாதையாக்கும் பணிகள், 358 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2010 செப்.20ல்
துவங்கின. மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டாலும், கடினமான பணிகள், நிதி ஒதுக்கீடு குறைவு காரணமாக 7 ஆண்டுகளாகி விட்டன.கேரள எல்லைக்குள் 37.38 கி.மீ., தமிழக எல்லைக்குள் 12.12 கி.மீ., துாரம் இந்த வழித்தடத்தில் உள்ளது. இதில், செங்கோட்டை - பகவதி
புரம் - ஆரியங்காவு - புதியஆரியங்காவு நிலையங்களுக்கு இடையே பணிகள் முடிந்துவிட்டன. 

கேரளாவில் புனலுாரில் துவங்கி செங்கோட்டையை நோக்கி வரும் தடத்தில் எடமண், ஒட்டக்கல்,தென்மலை ஆகிய ஸ்டேஷன்களின் பணிகள் முடிந்துவிட்டன.தென்மலை - கழுதுருட்டி - எடப்பாலம் ஆகிய நிலையங்களுக்கு இடையிலான சுமார் 14 கி.மீ.,பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில், புதிய குகைப்பாலங்கள்,ஏற்கனவே உள்ள பாரம்பரியமான தென்மலை பாலம் ஆகியவற்றிலும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து, 2018 ஜனவரியில் புனலுாரில் இருந்து நெல்லை வரையிலும் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

நினைவிடம் கோரிக்கை : இதற்கிடையே அக்.6ம் தேதி தென்மலையில் இருந்து ஆரியங்காவு வரை ரயில் பயணிகள் சங்கத்தினர்,உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கைகளை முன்வைத்து நடைபயணத்தை துவக்குகின்றனர். அக்.6ம் தேதி தென்மலையில் கொல்லம் எம்.பி.,பிரேமசந்திரன், பத்தினாபுரம் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் ஆகியோர் துவக்கி வைக்கும் ஊர்வலம்,அக்.13ம் தேதி ஆரியங்காவுவில் நிறைவடைகிறது.

110 ஆண்டுகளுக்கு முன்பு குகைப்பாலம் கட்டும்போது இறந்த தொழிலாளர்களுக்கு நினைவிடம் ஏற்படுத்த வேண்டும். 13 கண் பாலம் என்றழைக்கப்படும் தென்மலை உயர்பாலத்தின் பழைய புகைப்படங்களின் கண்காட்சியை அங்கு நிறுவவேண்டும். தென்மலையில் ரயில்வே மியூசியம் நிறுவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் நடைபெறுகிறது.
இருள் சூழ்ந்த வண்டலூர் -- கேளம்பாக்கம் சாலை

பதிவு செய்த நாள்03அக்
2017
23:26

வண்டலுார்;வண்டலுார் கேளம்பாக்கம் சாலையில், விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது.ஜி.எஸ்.டி., சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை அமைந்துள்ளது.இச்சாலையில், ஏராளமான கல்வி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை வாகனங்கள் அதிகளவில் பயணிக்கின்றன.

மேலும், மாமல்லபுரம், புதுச்சேரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வோரும், இச்சாலையையே பயன்படுத்துகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து விடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.இரவு நேரங்களில் அவ்வப்போது விபத்துகளும் நடப்பதால், இச்சாலையில் விளக்குகளை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மின் கட்டணம் செலுத்த நெல்லிக்குப்பத்தில் வசதி
பதிவு செய்த நாள்03அக்
2017
23:22

நெல்லிக்குப்பம்;மின் கட்டணம் செலுத்த, இரண்டு பேருந்துகள் பிடித்து செல்லும் அவல நிலையில் கிராமவாசிகள் உள்ளனர்.திருப்போரூர் ஒன்றியத்தில் நெல்லிக்குப்பம் ஊராட்சி உள்ளது. இதன் அருகே கீழ்கல்வாய், கொட்டமேடு, கீழூர், தர்மாபுரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதி மக்கள் மின் கட்டணம் செலுத்த இரண்டு பேருந்துகள் பிடித்து, 12 கி.மீ., சென்று, திருப்போரூர் மின் வாரிய அலுவலகத்திற்கு வரவேண்டிய உள்ளது.வளர்ந்து வரும் பகுதியான நெல்லிக்குப்பம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் ஏற்படும் மின் பழுதுகளை துணை மின் நிலைய பணியாளர்களே கவனித்து வருகின்றனர்.

இதே இடத்தில் மின் கட்டணம் செலுத்த வசதியாக, மின் துறை உதவி பொறியாளர் அலுவலகத்தை ஏற்படுத்தினால், மின் கட்டணம் செலுத்த வெகுதுாரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. மேலும், கிராமவாசிகளின் வீண் அலைச்சலும், செலவும் குறையும்.எனவே, மின் துறையினர், நெல்லிக்குப்பம் பகுதியில் மின் கட்டணம் செலுத்துவதற்கான வசதியை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம்:4 பஸ்கள் பறிமுதலாகிறது; 25 பேருக்கு அபராதம்

பதிவு செய்த நாள்03அக்
2017
22:42

நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் நான்கு நாள் விடுமுறையில் அதிக அளவுக்கு கட்டணத்தை உயர்த்திய 25 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 4 பஸ்கள் பறிமுதலாகிறது.கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்ல இரண்டு ரயில்களை தவிர்த்தால், ஆம்னி பஸ்களை நம்பித்தான் மக்கள் உள்ளனர். அரசு பஸ்களில் கூடுதல் பயண நேரம் ஆகிறது. ஆனாலும் தொடர் விடுமுறை காலங்களில் இந்த பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர்.

நேற்று முன்தினம் இதுபோல அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்து, வட்டார போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வடசேரி ஆம்னி பஸ் ஸ்டாண்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பல பஸ்களிலும் அதிக கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், 25 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 4 பஸ்கள் மிக அதிக கட்டணம் வசூலித்திருந்ததால் அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பஸ்கள் நேற்று காலை சென்னை சென்றடைந்தன. அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை நாகர்கோவில் வந்ததும், அந்த பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முடிவுக்கு வந்தது விடுமுறை: மின் தேவை எகிறியது
பதிவு செய்த நாள்03அக்
2017
21:50

தொடர் விடுமுறைக்கு பின், பள்ளிகள், அலுவலகங்கள், நேற்று திறக்கப்பட்டதால், ஒரே நாளில், மின் தேவை, 1,500 மெகாவாட்டை தாண்டியது. தமிழகத்தில், தினசரி மின் தேவை சராசரியாக, 13 ஆயிரம் மெகாவாட் என்றளவில் உள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தியை யொட்டி, செப்., 29ல் இருந்து, நேற்று முன்தினம் வரை, தொடர்ந்து அரசு விடுமுறை. 

இதனால், பள்ளிகள், கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாததால், மின் தேவை, 11 ஆயிரம் மெகாவாட்டிற்கு கீழ் சென்றது. குறிப்பாக, நேற்று முன்தினம், மின் தேவை, 10 ஆயிரத்து, 360 மெகாவாட் என்றளவில் இருந்தது. இந்நிலையில், விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் செயல்பட துவங்கின. இதனால், ஒரே நாளில் மின் தேவை, 1,550 மெகாவாட் அதிகரித்து, 11 ஆயிரத்து, 910 மெகாவாட்டாக இருந்தது. இது, தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் தேவை குறைந்ததால், அனல் மின் நிலையங்களில், 900 மெகாவாட் மட்டும், உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் அதிகரித்து வருவதால், அவற்றில், 1,450 மெகாவாட்டிற்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது; இது, படிப்படியாக அதிகரிக்கப்படும். நீர் மின் நிலையங்களிலும், நீண்ட நாட்களுக்கு பின், 1,400 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
கோட்டையில் இன்று முதல் எல்.இ.டி., பல்பு விற்பனை

பதிவு செய்த நாள்03அக்
2017
19:21

சென்னை, தலைமை செயலகத்தில், மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்ட்' நிறுவனம், இன்று முதல், எல்.இ.டி., பல்பு விற்பனையை துவக்க உள்ளது. மத்திய அரசின், எனர்ஜி எபிஷியன்ட் நிறுவனம், குறைந்த மின்சாரத்தில் இயங்கும், 'எல்.இ.டி., பல்பு, டியூப் லைட்' உள்ளிட்ட சாதனங்களை விற்பனை செய்கிறது. இவற்றின் விலை, வெளிச்சந்தையை விட, மிகவும் குறைவு. சென்னை, காஞ்சிபுரம், வேலுாரில் உள்ள, மின் கட்டண மையங்களுக்கு அருகே, மார்ச் முதல், இந்த சாதனங்கள் விற்கப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை, ஆறு லட்சம், எல்.இ.டி., பல்புகள்; 1.60 லட்சம் டியூப் லைட்கள்; 32 ஆயிரம் மின் விசிறிகள் விற்பனையாகி உள்ளன. இந்நிலையில், சென்னை, தலைமை செயலகத்தில், இன்று முதல், மேற்கண்ட சாதனங்கள் விற்கப்பட உள்ளன.

- நமது நிருபர் -
ஆப்பரேஷன் தியேட்டரிலும் திரையிடப்பட்ட, 'பாகுபலி'
பதிவு செய்த நாள்03அக்
2017
20:04

குண்டூர்: இந்திய திரையரங்குகளில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் பிரமாண்ட வெற்றி பெற்ற, பாகுபலி படம், ஆந்திராவில் உள்ள, ஒரு மருத்துவமனையின் ஆப்பரேஷன் தியேட்டரிலும் திரையிடப்பட்டது.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, குண்டூரைச் சேர்ந்த நர்ஸ், விஜயகுமாரிக்கு, 43, மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில், அவருக்கு, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இது குறித்து, அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் கூறியதாவது: மயக்க மருந்து தராமல், சுயநினைவுடன், இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். அதற்காக, ராஜமவுலி இயக்கத்தில், நடிகர்கள் பிரபாஸ், ராணா, நடிகையர் அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த, பாகுபலி படத்தை லேப் - டாபில் திரையிட்டு, அதை, விஜயகுமாரி பார்த்து கொண்டிருந்த போதே, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது, இந்த அறுவை சிகிச்சைக்கு, 'பாகுபலி அறுவை சிகிச்சை' என, பெயரிட்டு உள்ளோம்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
புதிய 100 ரூபாய் நோட்டு; அடுத்தாண்டு வெளியாகிறது
பதிவு செய்த நாள்04அக்
2017
04:30




புதுடில்லி: புதிய, 100 ரூபாய் நோட்டுகள், அடுத்த ஆண்டு வெளியிடப்பட உள்ளன.

ரிசர்வ் வங்கி வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள, ரூபாய் நோட்டு அச்சகங்களில், தற்போது, 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன; இந்த பணி, 2018 மார்ச்சில் முடியும். அதன்பின், மாற்றி வடிவமைக்கப்பட்ட, புதிய, 100 ரூபாய் நோட்டுகள், 2018 ஏப்., முதல், அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்படும்.

தற்போது, பயன்பாட்டில் உள்ள, 100 ரூபாய் நோட்டுகள், தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்; அதன்பின், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், படிப்படியாக, அந்த ரூபாய் நோட்டுகள், 'வாபஸ்' பெறப்படும். கடந்தாண்டு, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதன்பின், 500 - 2,000 ரூபாய் நோட்டுகள், புதிதாக வெளியிடப்பட்டன. தற்போது, 50 - 200 ரூபாய் நோட்டுகளும், புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.


15 நாள், பரோல், கேட்ட, சசிகலா, விண்ணப்பம்,நிராகரிப்பு!

கவலைக்கிடமாக உள்ள கணவர் நடராஜனை பார்க்க, 15 நாள் பரோல் கேட்ட சசிகலாவின் விண்ணப்பம்,நிராகரிக்கப்பட்டது.'நடராஜன் உடல்நிலை சரியில்லை என்பதற்கு,தகுந்த ஆதாரமில்லை' என, பரோல் மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக சிறைத்துறை, புதிய மனு தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டு உள்ளது. சசிகலா வருகையை பயன்படுத்தி, பழனிசாமி அரசுக்கு நெருக்கடி தர நினைத்த தினகரன், 'அப்செட்' ஆகியுள்ளார்.



இதற்கிடையில், சசிகலாவுக்கு, 15 நாட்கள் பரோல் அளிப்பது தொடர்பாக, கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு, 'தடையின்மை சான்று' கோரி கடிதம் அனுப்பியுள்ளது; அது கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தன் அக்கா மகன் தினகரனை துருப்பு சீட்டாக பயன்படுத்தி, முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில்,

வெற்றி கிடைத்தால் தான், பரோலில் தமிழகம் வரப் போவதாக, அவர் சபதம் எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது.

பிடிவாதம்:

அதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில், அவரது அண்ணன் மகன், மகாதேவன் மரணமடைந்த போது, வர மறுத்து விட்டார். சசிகலா வருகையை, உறவினர்கள் எதிர்பார்த்தனர்; ஆனால், பிடிவாதமாக இருந்து விட்டார்.

தற்போது, அவரது கணவர் நடராஜன், 74, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழந்து, கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, சென்னையில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகம்,இருமுறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, 234 நாட்கள் சிறைவாசத்தை முடித்துள்ள சசிகலா, கணவரை பார்க்க, 15 நாட்கள் பரோல் கோரி, பெங்களூரு மத்திய சிறையில் விண்ணப்பித்தார்.

பரோலில் செல்ல கைதி விண்ணப்பித்தால், அவர் மீது, கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதா; அவரை வெளியில் செல்ல அனுமதி அளித்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா; சதிச் செயலில் ஈடுபடுவாரா; தப்பி ஓடி விடுவாரா; அதற்கு பின்னணியில் இருப்போர் யார் என்பது குறித்தெல்லாம்,

சிறைத்துறை நிர்வாகம் விசாரணையில் இறங்கும்.மேலும், பரோல் அளிக்கலாமா என்பது குறித்து, கைதி சார்ந்துள்ள மாநில அரசிடமும், காவல் துறையிடமும், 'தடையின்மை சான்று' கேட்கப்படும்.

அதன்படி, தற்போது தடையின்மை சான்று கோரி, கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு, கடிதம் அனுப்பி இருப்பதாக தெரிகிறது. அரசும், போலீஸ் கமிஷனரும் ஆட்சேபனை தெரிவித்தால், சசிகலாவுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, கூறப்பட்டது.

ஆவணம் இல்லை

இதற்கிடையில், சசிகலா வின் பரோல் விண்ணப்பத்தை, கர்நாடக சிறைதுறை, நேற்று இரவு நிராகரித்துள்ளது. 15 நாட்கள் பரோல் வழங்கக் கோரி,பெங்களூரு,பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளர், சோமசேகரிடம், சசிகலா நேற்று மனு தாக்கல் செய்தார்.இது தொடர்பாக,சட்ட வல்லுனர் களுடன், சோமசேகர் ஆலோசனை நடத்தினார்.

பின், அவர் கூறுகையில், ''நடராஜனின் உடல் நிலை சரியில்லை என்பது உண்மை என, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை உள்ள வட்டாரத்தை சேர்ந்த, 'கெஜடட்' அதிகாரி
உறுதிபடுத்த வேண்டும்.அதற்கான ஆவணத்தை, சசிகலா தாக்கல் செய்யாததால், பரோல் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. அந்த ஆவணத்தை இணைத்து வழங்கினால், பரோல் கொடுப்பது பற்றி பரிசீலிக்கப்படும்,'' என்றார்.

இதையடுத்து, சசிகலா தரப்பில், சிறைத்துறை கேட்ட ஆவணங்களுடன், புதிய மனு தாக்கல் செய்ய, அவரின் வக்கீல்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆனால், சசிகலா வருகை தாமதம் ஆவதால்,தினகரன் அதிர்ச்சி அடைந்து உள்ளார். அவரது வருகையை பயன்படுத்தி, பழனிசாமி அரசுக்கு நெருக்கடி தர போட்ட திட்டம் தோல்வி அடைந்து விடுமோ என்ற கலக்கத்தில், அவரும்,ஆதரவாளர்களும் உள்ளனர். 

- நமது நிருபர் -

Tuesday, October 3, 2017

Dinakaran booked for distribution of pamphlets with remarks against Modi, TN CM

This is the second case slapped against Dinakaran, who is engaged in a tussle for power with Tamil Nadu chief minister Palaniswami.INDIA Updated: Oct 02, 2017 17:29 IST

Press Trust of India, Salem (TN)


Sidelined AIADMK leader T T V Dinakaran was on Monday booked and 10 of his supporters were held in connection with distribution of pamphlets allegedly containing defamatory remarks against Prime Minister Narendra Modi and Tamil Nadu chief minister K Palaniswami here.

Former MLA Venkatachalam and local AIADMK functionary Saravanan were among the 10 arrested on the basis of a complaint filed by one Vinayakam, alleging that the accused were found distributing the pamphlets among the public outside a hall, where Palaniswami was holding a meeting with senior officials on Sunday.

The pamphlets contained “derogatory remarks” against the prime minister and the chief minister, the police said.

Dinakaran and his loyalists P Vetrivel, one of the 18 AIADMK MLAs recently disqualified from the Tamil Nadu Assembly under the anti-defection law, and V Pugazhenthi have also been named as accused in the case, the police said.

This is the second case slapped against Dinakaran, who is engaged in a tussle for power with Palaniswami, by the state police.

Earlier, the sidelined AIADMK leader, along with Tamil actor and party functionary Senthil, had been booked for allegedly making defamatory remarks against P Kumar, the party MP from Tiruchirappalli.

The Madurai Bench of the Madras high court had restrained the Tiruchirappalli police from arresting them.

Responding to the latest case against him, Dinakaran alleged that it was filed since his rival Palaniswami “is the police minister”.

The chief minister also holds the Home portfolio, under which comes the police department.

“This government is anyway going to fall. They are doing such these things since he (Palaniswami) is the police minister...Let them do what they want. The AIADMK supporters and the people are going to send them home,” Dinakaran told reporters in Chennai.

Fake ‘originals’ leave passport officials in a tight spot

There have been a few cases of immigrants obtaining Indian passports by furnishing authentic Aadhaar cards.File Photos  

Officials unable to spot fake applications because of illegally procured documents

Fake documents are no longer the big cause for concern for passport-issuing authorities. Original documents such as Aadhaar and PAN card, submitted by applicants who later turn out to have provided false information, are proving to be the real challenge.
Around two months ago, the Bengaluru Regional Passport Office (RPO) received a rude shock when two people who were issued passports from the office were arrested in West Bengal in separate cases. They were later found to be immigrants from Bangladesh.
“We instantly know which ones are fake. We refer suspect documents to the police. But here the documents they submitted were valid. We wanted to file a police complaint here, but as they were apprehended in West Bengal, the police there are investigating the case,” said Bharath Kumar Kuthati, Regional Passport Officer, Bengaluru.
“In these cases, they managed to get passports based on authentic documents such as PAN card, Aadhaar card and EPIC. But these were obtained illegally. That makes it all the more serious. This is a risky proposition as we rely on these documents,” said Mr. Kuthati.
Significantly, passport applications are subject to police verification before the sanctioning of the official document, which is also a certificate of citizenship. Last year, the Ministry of External Affairs further simplified certain passport procedures, including the application for a new one for certain categories of applicants.
The Bengaluru RPO issued over 6.44 lakh passports in 2016. This year, 4.52 lakh passports had been issued till August 11.
‘Not many cases’
However, the Bengaluru police say such cases are few and far between. City Police Commissioner T. Suneel Kumar said the cases brought to their notice are dealt with on a “specific case basis”.
“If they are found with bogus certificates, we can book criminal cases against them for forgery. But when it comes to originals, we have to verify with the issuing authorities,” Mr. Kumar added.
Unique Identification Authority of India (UIDAI) officials, however, say Aadhaar is not proof of citizenship. “Rather, it is only an enabler for identification. For example, once issued with a card, ‘A’ cannot claim to be ‘B’. Whoever has a proof of identity and address, and has lived here for the preceding 182 days, is enrolled. We capture biometrics too, and after all this a unique identity number is issued. Our duty ends there,” an official said.

City’s second airport may come up in Kancheepuram or Tiruvallur

AAI officials say land availability is a problem in Sriperumbudur

Nearly 10 years ago, the State government announced a plan to build a second airport for Chennai at Sriperumbudur.
Thereafter, the Chennai airport went through phase I modernisation and a few years after the terminals were saturated phase II project is all set to begin in a few months. But even now, there isn’t a concrete proposal for the second airport for the city whose traffic has been growing rapidly.
Recently, Minister of State for Civil Aviation Jayant Sinha too spoke of the need to have a greenfield airport for the city at the earliest.
The only development perhaps in recent times is that Sriperumbudur will no longer house the second airport and the State may choose from four other sites —Walajabad and Madhurantakam in Kancheepuram district and Alamathy and Gummidipoondi in Tiruvallur district.
Officials in Airports Authority of India (AAI) said the reason to look for alternate location arose owing to availability of land. “After the initial announcement, not much happened with the project and in the meantime, there have been a lot of development in the areas. Also, the available land are not together. The lands available now are few and far between. It will be extremely difficult to acquire the remaining lands,” he added.
Cost factor
Even if the State wants to acquire, the cost of the project will grow manifold, they said. “The guideline value has changed; plus, the market prices have multiplied enormously since the project was announced,” an official said.
Officials from the Ministry of Civil Aviation and AAI said they have had been meeting the State government authorities every now and then to push for the project.
“Recently, when we met the authorities, we asked them to identify a site so that the rest of the process can begin. We are waiting to hear from them,” an official said.
The sooner the process for the project begins, the better it is, they added. “Just getting permissions from various authorities will take a few years. After that, the construction will consume another 4-5 years. By that time, the phase II modernisation also would not be enough to cater to the city’s traffic,” he added.
When the new airport becomes operational, it is likely to have only international operations, say officials. The domestic operations may continue in the existing airport. “So if the new airport is located 40-50 km away, we need a direct overpass or a high speed rail corridor to transit passengers,” an official said.

Fake ‘originals’ leave officials in a tight spot

Fake documents are no longer the big cause for concern for passport-issuing authorities. Original documents such as Aadhaar and PAN card, submitted by applicants who later turn out to have provided false information, are proving to be the real challenge.
Judge gets call for clerk job, smells scam, initiates case

TNN | Updated: Oct 2, 2017, 10:45 IST

HIGHLIGHTS

It all started when Justice S Vaidyanathan received the job offers for posts including clerk under Rajiv Vikas Yojna
The offer letter also demanded amounts ranging from 250 to 750 as enrollment fee



CHENNAI: Five different job offers made by private employment consultants to a sitting judge of the Madras high court for posts ranging from clerk to supervisor have landed the firms in a tight spot, with the high court initiating a suo motu pleaagainst them.

It all started when Justice S Vaidyanathan received the job offers for posts including clerk under Rajiv Vikas Yojna (a central government initiative) with monthly salary of 26,500 on September 30 at his Villivakkam residence from Reliance Industrial Recruitment, Tirupur, Air Tech Solutions HRD, Trichy , Renald Industrial Recruitment, Tirupur, Volvo Industria, Tirupur, and Diamond Industrial Recruitment.The offer letters also demanded amounts ranging from 250 to 750 as enrollment fee. Justice Vaidyanathan ap proached Chief Justice Indira Banerjee and sought permission to constitute a special bench on Sunday to suo motu take up the issue. The Chief Justice immediately constituted a division bench of Justices N Kirubakaran and S Vaidyanathan. The authorities were also directed to probe with the cyber crime department whether this was part of a larger network.
Sasikala has applied for 15-day parole, Dhinakaran says

Julie Mariappan| TNN | Updated: Oct 2, 2017, 15:12 IST

HIGHLIGHTS

Sasikala’s husband M Natarajan is undergoing treatment in a hospital in Chennai
Dhinakaran is hopeful that his aunt would get ordinary leave from jail to meet her husband
Dhinakaran says he wants a CBI probe into Jayalalithaa's death


V K Sasikala

CHENNAI: Sidelined AIADMK leader TTV Dhinakaran on Monday said party leader and his aunt V K Sasikala has sought a 15-day parole from Parapana Agrahara prison in Bengaluru to meet her ailing husband.

Sasikala's husband M Natarajan is undergoing treatment in a private hospital in Chennai. He is currently in the liver intensive care unit with decompensated liver disease leading to liver and kidney failure and lung congestion. He is receiving dialysis and other intensive care therapies.

Dhinakaran was hopeful that his aunt would get ordinary leave from jail. "We are not sure of the duration of parole. The authorities will decide on that," he told reporters here.

'We want a CBI probe into Jaya death'

Dhinakaran said he was not sure about the state government's inquiry commission led by a retired judge to probe into the death of former chief minister J Jayalalithaa. "We want a CBI probe. Only then, former chief minister O Panneerselvam and other ministers, who are now coming with contrary views on the accessibility to the ailing leader, will be investigated properly," he said.

He alleged that the Edappadi K Palaniswami government had turned treacherous and would be sent home shortly.

"People know the present government has fallen short of the majority mark of 117. Let Palaniswami, chosen by our Chinnamma (Sasikala) give up his post and get elected by the members of legislature party again. We will not have any problem then. Now, he has to prove his majority in the assembly," said Dhinakaran, who claims to have the support of 21 MLAs. "We are confident of winning the court battle against disqualification move," he said.

Accusing the government of poorly combating the "sporadic outbreak of dengue," Dhinakaran said nothing could be expected from the present government led by Palaniswami.

TOP COMMENT  why all influenced people easily get payroll.while a common man unable to get the same even in funeral of there family..Raunak Singhal

"They are far worse than dengue and more dangerous than the disease. You cannot expect anything from them. Amma (Jayalalithaa) was running the government effectively when she was alive," he said.

He said the doubts raised over her death was to hide the poor functioning of the government.
Two new subways soon onbusy Guindy-airport stretch

TNN | Updated: Oct 2, 2017, 23:55 IST

Chennai: Southern Railway will construct two subways — one pedestrian-only facility; the other for two-wheelers — between Guindy and Meenambakkam railway stations to replace level crossings (LCs) on the busy stretch.

Railways officials pressed ahead with the plan after Greater Chennai Corporation recently granted approval to the shutting down of the two level crossings, LC14 and LC18.

LC14, which connects Velachery Road and City Link Road near the Maduvinkarai flyover, will make way for a pedestrian subway. The two-wheeler vehicular subwaywill replace LC18, which connects GST Road (via the Airport Authority staff quarters) and College Road in Nanganallur.

Railways and corporation officials decided to close the level crossings on the recommendation of the Alandur tehsildar, who identified the stretch as accident-prone.

Traffic jams were frequent at both spots due to a sharp rise in vehicular density over a decade, till the St Thomas Mount and Meenambakkam subways opened. But people with two-wheelers still prefer to cross the level crossings instead of using the subways (or the Maduvinkarai flyover) as that involves a detour of 500m.

The corporation's engineers in April led a team with Metrowater, TNEB and Southern Railway representatives on a joint inspection of the sites to evaluate the feasibility of the projects. The team found that the soil at LC14 was not conducive for a subway slope. "Metrowater's 600mm sewerage line, a drinking water main and storm water drains run alongside the road," an official said.

"During the 2015 floods, the level crossing helped me get home when all nearby subways — at Meenambakkam, Pazhavanthangal, Thillai Ganga Nagar and St Thomas Mount — were flooded," said Madipakkam resident G Murugesan, who rides a motorcycle.

The railways still needs approval from Airports Authority of India to go ahead with the subway at LC18, because it will require a parcel of land from the AAI housing quarters to complete the structure.

Southern Railway did not respond to queries by TOI on the cost of the projects.

LATEST COMMENT  Complete the 500 meter MRTS link pending which will make operational Velachery/ Mount MRTS link which will benefit kakhs of commuters and give link from Koimbedu-- Mylapore through Metro/MRTS and hu... Read MoreGopalarathnam Krishna Prasad

The corporation special officer's council, which granted project approval, noted that Southern Railway had approached the civic body in December 2016 but confusion over the permit-granting authority caused a delay. "The superintending engineer (bridges and roads) thought it was under the ambit of the district collector," the council document said.

The Kancheepuram collector clarified that the projects required approval from the local body.
‘Vet university gave ‘false’ details in HC to appoint assistant professors’

Ram Sundaram| TNN | Updated: Oct 3, 2017, 06:54 IST




CHENNAI: Tamil Nadu Veterinary and Animal Sciences University (Tanuvas) has appointed assistant professors even as a case in this connection is pending before the Madras high court by allegedly submitting 'false' and 'misleading' facts to the Madurai Bench of the court, confidential documents available with TOI reveal.

Serious objections were raised over the recent appointments based on the Madurai Bench's judgment as the presented candidates were termed 'unsuitable' and 'inexperienced' for post of assistant professor.

In May, P I Ganesan, former director of the Centre for Animal Sciences of Tanuvas, approached the Madras high court to declare the selection process for recruiting 49 assistant professors (including 3 in food sciences) null and void as the process was 'bogus' and 'fraudulent'. The case is pending.

One of the 49 candidates, A Gnanapragasam, filed a writ petition with the court's Madurai Bench against the university, seeking a direction to publish the results for three posts in food sciences.

Instead of submitting details about the writ petition on the selection process that is subjudice, counsel for the university referred to a different writ petition filed by the same petitioner (Ganesan) on recruitment of university officers and disposed this August, it was found.

"A case which was in no way connected to the assistant professor selection process was cited as the reason for delay. By this, learned counsel of Tanuvas misguided the court," Ganesan told TOI.

The Madurai Bench directed Tanuvas to publish results of recruitment for three posts in food sciences before September 15. Accordingly, Gnanapragasam and D Raghu were appointed assistant professors in College of Food and Diary Technology, Chennai.

Documents with TOI suggest objections were raised over their appointment. Sources say a dissent note was already recorded against their selection as they allegedly lacked qualification and experience in the field as per Indian Council for Agricultural Research norms.

'False' details irrelevant to the case presented by counsel for the university compelled the Madurai Bench of the Madras HC to rule in favour of the petitioner (Gnanapragasam), read the internal communication to the university registrar on September 15. Sources added that following the objection, the duo were posted in Hosur.
Judge turns mirror on HC; takes a dig at his colleague

TNN | Oct 3, 2017, 00:03 IST

Chennai: Taking a dig at a judge who referred a case to a larger bench who later penned the judgment as part of the bench, Justice C T Selvam of the Madras high court has wondered whether such a verdict delivered by one who had made the reference would be proper, even if it may be right.

"We find judges making references on decisions they are not in agreement with, and then adorning the larger benches sitting upon the reference. If this is not bad enough, we find the judgment on the reference delivered by the one making the reference. The decisions might even be right, but is it proper," said Justice Selvam. "It is for the individual judges making the reference to recuse themselves when by an administrative slip they are called to join the bench answering the same," he added.

The issue pertains to a decision of a single judge dated August 27, 2016 holding that petitions seeking directions to register cases under Section 482 of CrCPC were not maintainable.

As for disposal of criminal cases at the admission stage itself, Justice Selvam said, "While huge pendency of cases would justify a push for early disposal, it would not justify a rush therefore as this institution can ill-afford to sacrifice quality at the alter of quantity. Many a senior counsel has expressed misgivings over criminal appeals being dismissed at the stage of admission. Many inform that petitions seeking suspension of sentence pending appeal are not even taken up for consideration."

NewsToday 18.10.2024