Wednesday, October 4, 2017

பழைய நோட்டை மாற்றிய விவகாரம் : வருமான வரி விசாரணையில் 'டாஸ்மாக்'

பதிவு செய்த நாள்03அக்
2017
23:36

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 'டாஸ்மாக்' கடைகளில் வசூலான தொகையை, வங்கியில் செலுத்தியதில் நடந்த முறைகேடு புகார் தொடர்பாக, வருமான வரித்துறையினர் விசாரிக்கவுள்ளனர்.

இது குறித்து, வருமானவரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, டாஸ்மாக் கடை வசூல் தொடர்பாக புகார் வந்தது. அதன்படி, சென்னையில், ஒன்பது கடைகளில் அதிரடி சோதனை நடத்தினோம்; எதுவும் சிக்கவில்லை. டாஸ்மாக்கில் வசூலாகும் தொகையை, பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம், தினசரி பெற்று, அதை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் செலுத்துகிறது. அதற்காக, முத்தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த புகார் தொடர்பாக விசாரிக்க, அந்த வங்கிக் கிளைக்கு சென்றோம். அவர்களோ, அந்த தனியார் நிறுவனம், டாஸ்மாக் கடைகளில் பணத்தை வசூலிக்கும் போது கொடுத்த ரசீதை தந்தனர். ஆனால், பழைய நோட்டுகளா; புதிய நோட்டுகளா என்பது குறித்து, வாய் திறக்கவில்லை. அவை, 'கரன்சிசெஸ்ட்' என்ற, பணம் இருப்பு மையத்திற்கு அனுப்பி விட்டதாகவும், அதனால் விபரம் கூறுவது சிரமம் என, கைவிரித்து விட்டனர்.இதற்கிடையில், கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்திற்கான கெடு நெருங்கியதால், விசாரணையை நிறுத்தி வைத்தோம். அதில், முறைகேடு நடந்திருப்பதாக கருதுவதால், டாஸ்மாக் அதிகாரிகள், தனியார் வங்கி அதிகாரிகளிடம், மீண்டும் விசாரணை நடத்த முடிவு எடுத்துள்ளோம். இதில், 600 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 'நோட்டீஸ்' அனுப்பியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024