Wednesday, October 4, 2017

'திருமணத்தை கோர்ட் ரத்து செய்ய முடியுமா?'
பதிவு செய்த நாள்03அக்
2017
20:00

புதுடில்லி: கேரளாவில் நடந்த, 'லவ் ஜிகாத்' தொடர்பான வழக்கில், 'அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், ஒரு திருமணத்தை ரத்து செய்து, நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்பது குறித்து விசாரிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இம்மாநிலத்தைச் சேர்ந்த, முஸ்லிம் இளைஞர், ஷபின் ஜகான், ஹிந்து மதத்தைச் சேர்ந்த, ஒரு பெண்ணை திருமணம் செய்தார். 'திருமணத்துக்கு முன், அந்த பெண், முஸ்லிமாக மத மாற்றம் செய்யப்பட்டார். 'ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு உதவுவதற்காக, ஹிந்து பெண்களை திருமணம் செய்வதாகக் கூறி, மத மாற்றம் செய்து, ஏமாற்றுகின்றனர்' என, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஷபின் ஜகானின் திருமணத்தை, 'லவ் ஜிகாத்' எனக்கூறி, 'அது செல்லாது' என, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, ஜகான் தொடர்ந்த வழக்கில், 'ஹிந்து பெண்கள் மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பப்படுவது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

என்.ஐ.ஏ., விசாரணையை எதிர்த்து, ஜகான் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, உச்ச நீதிமன்ற அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, 'திருமணம் செல்லாது என உத்தரவிட, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து ஆராயப்படும்' என, அமர்வு கூறியது. இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை, 9க்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024