Wednesday, October 4, 2017

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை

பதிவு செய்த நாள்03அக்
2017
21:44




சிதம்பரம்: சம்பளம் வழங்காததை கண்டித்து, அண்ணாமலை பல்கலை ஊழியர்கள், துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையை, 2013ல், அரசு கையகப்படுத்தியது. தற்போது, தொலைதுாரக் கல்வி மற்றும் பொறியியல் புலம் உள்ளிட்ட பல துறைகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால், பல்கலை நிர்வாகம் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.

போராட்டம் : தற்போது, பல்கலையில், 9,500 பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அரசிடம் இருந்து நிதி பெற்று, சம்பளம் வழங்க காலதாமதமாகி வருகிறது. 

இதை கண்டித்தும், மாத இறுதி வேலை நாளில் ஊதியம் வழங்க வலியுறுத்தியும், ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் - ஜாக் கூட்டமைப்பினர், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த மாத சம்பளம், நேற்று வரை வழங்கப்படாததால், ஆத்திரம் அடைந்த ஜாக் கூட்டமைப்பினர், 200க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 10:30 மணிக்கு, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைவிட்டனர் : துணைவேந்தர், பதிவாளர் சென்னை சென்றிருக்கும் தகவலை அறிந்த போராட்டக் குழுவினர், பொறுப்பு பதிவாளர் சந்திர சேகரன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

'துணைவேந்தர், பதிவாளர் ஆகிய இருவரும், ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையை பெறவே, சென்னை சென்றுள்ளனர். 'அனைவருக்கும், 5ம் தேதி சம்பளம் வழங்கப்படும்' என, பொறுப்பு பதிவாளர் சந்திரசேகரன் கூறினார். இதை ஏற்று, ஜாக் கூட்டமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024