Wednesday, October 4, 2017

மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பியதால் போக்குவரத்து நெரிசல் பயணிகள் கடும் அவதி



தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் வண்டலூர் முதல் பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

அக்டோபர் 04, 2017, 04:45 AM

தாம்பரம்,

ஆயுத பூஜை, விஜயதசமி, முகரம், காந்தி ஜெயந்தி என 4 நாட்கள் தொடர் அரசு விடுமுறை விடப்பட்டதால் சென்னையில் வேலை பார்க்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்களில் நேற்று சென்னை திரும்பினர்.

தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் சென்னைக்கு வந்தன. இதனால் அதிகாலையில் இருந்தே பெருங்களத்தூர் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அலுவலக நேரமான காலையில் மேலும் பல வாகனங்கள் வந்ததால் வண்டலூரில் இருந்து இரும்புலியூர் வரை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் வாகனங்களை உடனடியாக சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட பஸ்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்தன. அதிகாலை முதல் காலை 10 மணி வரை பெருங்களத்தூர் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக தென் மாவட்ட பயணிகள் மட்டும் அல்லாமல் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்வோரும் கடும் அவதி அடைந்தனர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024