Wednesday, October 4, 2017

மனநிலை பாதித்தவர்களை கவனிக்க முடியாததால் விபரீத முடிவு மகன், 2 மகள்களை கொன்று முதியவர் தற்கொலை
dinakaran

2017-10-04@ 00:43:23




திருச்சி: திருச்சி அடுத்த ஜீயபுரம் அருகே உள்ளது திருச்செந்துறை. இங்குள்ள அக்ரகாரத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (85). பீகார் மாநிலம் ரூர்கேலாவில் டெலிபோன் துறையில் இன்ஜினியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கமலா (80). இவர்களுக்கு சுப்பிரமணியன் (40), ரகு(36) என்ற 2 மகன்களும், அகிலா (34), மதுமிதா (32) என்ற 2 மகள்களும் உண்டு. இவர்களில் சுப்பிரமணியன், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தேசிய வங்கி கிளையில் மேலாளராக வேலை பார்க்கிறார். அதேபகுதியில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 2வது மகன் ரகு, அகிலா, மதுமிதா ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இதனால், அவர்களை கிருஷ்ணமூர்த்தியே கவனித்து வந்தார். அவ்வப்போது, மூத்த மகன் சுப்பிரமணியன் வந்து, தந்தை, தம்பி, தங்கைகளை பார்த்துவிட்டு செல்வார். அதேபோல், கடந்த சனிக்கிழமையன்று வீட்டுக்கு வந்தார். அப்போது, வயதான காலத்தில் என்னால் அம்மாவையும், பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. நான் எப்படியோ இங்கு இருந்து கொள்கிறேன். தம்பி, தங்கைகளை உன்னுடன் அழைத்து சென்றுவிடு’’ என்று சுப்பிரமணியனிடம் கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

அதற்கு சுப்பிரமணியன், ``நான் வாடகை வீட்டில் இருக்கிறேன். இந்த நிலைமையில் தம்பி, தங்கைகளை என்னுடன் வைத்து கவனிக்க முடியாது. 5 மாதம் பொறுத்திருங்கள். நான் மாற்று ஏற்பாடு செய்கிறேன்’’ என்று தந்தையிடம் கூறினார். பின்னர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் கமலாவை மட்டும் சுப்பிரமணியன் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். இந்தநிலையில், கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு பால்காரர் நேற்று காலை பால்போட வந்தார். அப்போது, ஞாயிறு மாலையில் போட்ட பால்பாக்கெட் வெளியே இருப்பதை கண்டு சந்தேகமடைந்தார். வீடும் திறந்து கிடந்தது. இதனால், ரகுவை அழைத்தார். பதில் வராததால் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு ஒரு அறையில் கிருஷ்ணமூர்த்தியும், ரகுவும் இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். மற்றொரு அறையில் அகிலா இறந்து கிடப்பதை பார்த்து அலறியபடி ெவளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தாரிடம் தகவலை ெதரிவித்தார்.

உடனடியாக ஜீயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், போலீசார் வந்து வீட்டுக்குள் நுழைந்தனர். கிருஷ்ணமூர்த்தி, அகிலா, ரகு ஆகிய 3 பேரும் வாயில் ரத்தம் வழிந்தபடி இறந்து கிடந்தனர். வீட்டின் பின்பக்க காம்பவுன்ட் சுவர் ஓரம் புதர்மண்டிய இடத்தில் மதுமிதா இறந்து கிடந்தார். இதையடுத்து 4 பேரின் உடல்களை கைப்பற்றி, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தயிர் சாதத்தில் விஷம்: இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், `சுப்பிரமணியன் பார்த்துவிட்டு சென்றவுடன் கிருஷ்ணமூர்த்தி மன உளைச்சல் அடைந்துள்ளார். பிள்ளைகளை எப்படி சமாளிப்பது என்று வேதனை அடைந்துள்ளார். இதையடுத்து, தயிர் சாதத்தில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார்’ என்பது தெரியவந்தது. இதுபற்றி, ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024