Monday, March 26, 2018

அரசு மருத்துவக் கல்லூரி நிச்சயம் வரும்; அமைச்சர் மணிகண்டன் உறுதி

Added : மார் 26, 2018 00:22

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி நிச்சயம் வரும். அதுவரை முயற்சியை கைவிடமாட்டேன், என்று அமைச்சர் மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தில், உலக காசநோய் தினமான நேற்று பன்மருந்து எதிர்ப்பு காசநோய் சிகிச்சை பிரிவை துவக்கி வைத்துஅமைச்சர் மணிகண்டன் பேசியது: ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி அமைக்க தொடர்ந்து முதல்வரிடம் வலியுறுத்தி வருகின்றேன்.
என்னை சமாதானப்படுத்தும் நோக்கில் கடந்த பட்ஜெட்டில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளை அறிவித்தனர். தற்போது, 20 கோடியில் இங்கு சீமாங் சென்டர் அமைய உள்ளது. இருந்தாலும், அரசு மருத்துவக்கல்லுாரி வேண்டும், என்பதுதான் பிரதான கோரிக்கை. நிதி பற்றாக்குறையால் முதல்வரால் அறிவிக்க முடியவில்லை. மத்திய அரசு நிதி வழங்காமல் பாராமுகமாக உள்ளது. இருந்தாலும், மருத்துவக் கல்லுாரி அமையும் வரை முயற்சியை கைவிட மாட்டேன். உலகளவில் 1.04 கோடி பேருக்கும், இந்தியாவில் 24 லட்சம் பேருக்கும் காச நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மையங்களில் காசநோய் பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் ஆண்டிற்கு சராசரியாக 1500 முதல் 1800 பேருக்கு காசநோய் சிகிச்சையளிக்கப்படுகிறது. 2025க்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க உறுதி ஏற்போம்.இவ்வாறு பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் டாக்டர் முல்லைக்கொடி, ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., சுமன், துணை இயக்குனர்(காசநோய்) முனியரசு, துணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024