Monday, February 3, 2020

`எவ்வளவு அழகு தஞ்சை பெரிய கோயில்!' - தீயணைப்பு வாகனத்தின் உதவியால் மெய்சிலிர்த்த மக்கள்

கே.குணசீலன்

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கின் பாதுகாப்புக்காக வந்துள்ள அதி நவீன தீயணைப்பு வாகனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.


தீயணைப்பு வாகனத்தில் மக்கள்

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். நேற்று மாலை யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. இதைக் காண குடும்பம் குடும்பமாக தங்கள் குழந்தைகளுடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் பெரிய கோயிலுக்கு திரண்டு வருகின்றனர்.

தீயணைப்பு வாகனம்

இந்த நிலையில், யாகசாலையில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அதை உடனே அணைப்பதற்கும் குடமுழுக்கு தினத்தில் 216 அடி உயரம் கொண்ட கோபுரத்தில் ஏறும் சிவாச்சாரியார்கள் உள்ளிட்டவர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக அவர்களை மீட்பதற்கும் ஏற்ற வகையில் முதன்முறையாக அதிநவீன தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு விமான கோபுரத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 ஹைட்ராலிக் பிளாட்பார்ம் என்று அழைக்கப்படும் இந்த வாகனம் நீரியியல் அழுத்தத்தில் செயல்படுகிறது. தீயணைப்புத் துறையின் பயன்பாட்டுக்காக பின்லாந்து நாட்டிலிருந்து ரூ.17 கோடி மதிப்பில் இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பலர் நிற்கக்கூடிய வகையில் சுழல் மேஜையுடனும் இதன் ஓரத்தில் தடுப்புகளுடன் கொண்ட ஏணியுடன் உள்ளது இந்த தீயணைப்பு வாகனம். இதை விமான கோபுரத்தின் உயரம்வரை இயக்கிப் பார்த்தனர் தீயணைப்பு வீரர்கள். அப்போது 216 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் உச்சிக்கு சில நிமிடங்களில் சென்று விடுகிறது மேஜையுடன் கூடிய ஏணி.


தீயணைப்பு வாகனம்

இதைப் பார்த்த பக்தர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் வியப்படைந்தனர். அத்துடன் அதன் அருகே நின்று செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர். பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினரும் அந்த வாகனத்தின் முன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். மேலும், `அந்தக் காலத்தில் எவ்வளவு சிரமப்பட்டு உச்சிக்கு பெரிய கற்களைக் கொண்டு இக்கோயிலை எழுப்பியிருப்பர். இப்போது அதன் உச்சிக்கு நொடியில், எந்த சிரமும் இல்லாமல் செல்ல முடிகிறதே?' என பேசிக்கொண்டனர். கோயிலுக்கு வரும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அதி நவீன தீயணைப்பு வாகனத்தைக் காண ஆர்வம் காட்டுகின்றனர்.



தீயணைப்பு வாகனம்

இந்த நிலையில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை சுழல் மேஜையில் நிற்க வைத்து விமான கோபுர உயரத்தின் பாதி வரை அழைத்துச் சென்றனர் தீயணைப்பு வீரர்கள். அதில், சென்றவர்கள் கோபுரத்தை அருகில் சென்று பார்த்ததால் பரவசமடைந்து, `எவ்வளவு அழகாக இருக்கு, பெரிய கோயில் கோபுரம்' என மகிழ்ச்சியடைந்தனர்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...