Monday, February 3, 2020

`ரூ.80 லட்சம் ஒதுக்கிய அரசு; அள்ளித்தந்த உபயதாரர்கள்!'- விமரிசையாக நடைபெறும் பெரியகோயில் குடமுழுக்கு

.குணசீலன்ம.அரவிந்த்

`குடமுழுக்கு விழாவிற்கு எனத் தமிழக அரசு ரூ.80 லட்சம்தான் கொடுத்தது. இந்தப் பணம் போதாது' எனக் கோயில் வட்டாரத்தில் தொடக்கத்தில் ஆதங்கப்பட்டனர்.

பெரியகோயில் குடமுழுக்கு ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடக்க உள்ளதாகக் கோயில் தரப்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பெரியகோயில் குடமுழுக்கு

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இன்று மாலை யாகபூஜைகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக தஞ்சை வெண்ணாற்றங்கரையிலிருந்து நேற்று எடுத்துவரப்பட்ட புனித நீர் பெருவுடையார் சந்நிதியில் வைக்கப்பட்டது.

அது, இன்று காலை 11.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதின இளைய சந்நிதானம் ஆகியோர் தலைமையில் மேள தாளங்கள் முழங்க யாகசாலை பந்தலுக்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து இன்று மாலை யாகபூஜைகள் தொடங்குகின்றன. அத்துடன் பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் மருந்து சாத்துதல் நிகழ்வு நடைபெற உள்ளது.

குடமுழுக்கு

குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தலைமையில் விழா பணி குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தபட்டு வருகிறது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 8 காலங்களாக நடைபெறும் யாக பூஜையில் 124 மூலிகைகள் பொருள்கள் பயன்படுத்தபட உள்ளன.

இந்தநிலையில் குடமுழுக்கு விழாவிற்கு வேண்டியதை உபயதாரர்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு செய்து வருகின்றனர். குறிப்பாக யாகசாலையில் பயன்படுத்தப்படும் மூலிகை உள்ளிட்ட பொருள்கள் தருமை ஆதினத்தில் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விமான கோபுரங்களிலும் பயன்படுத்தப்படும் மாலை, பட்டு வஸ்திரம், யாக பூஜையில் ஈடுபடும் ஓதுவார்களுக்கான ஒரு கால பூஜைக்கு மட்டும் கொடுக்கப்படும் சம்பளம் ரூ.6 லட்சம். இதன்படி எட்டுக்கால பூஜைக்குக் கொடுக்கப்படுகிறது. அத்துடன் ரூ.8 லட்சம் மதிப்பிலான பூக்கள் என ஒவ்வொன்றையும் உபயதாரர்கள் ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.


பெரியகோயில் குடமுழுக்கு

ஏற்கெனவே மின்விளக்கு வசதி, தற்காலிக காவல் நிலையம், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி என அனைத்துப் பணிகளும் உபயதார்கள் மூலமே செய்யப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என விழாக் குழுத் தரப்பில் சொல்லப்பட்டது. குடமுழுக்கு விழாவுக்குத் தமிழக அரசு ரூ.80 லட்சம் ஒதுக்கியது. இந்தப் பணம் போதாது எனக் கோயில் வட்டாரத்தில் உள்ளவர்கள் தொடக்கத்தில் ஆதங்கப்பட்டனர். ஆனால், தற்போது கோயிலுக்கும், குடமுழுக்கிற்கும் செய்ய வேண்டிய ஒவ்வொரு பணியையும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர். இதனால் குடமுழுக்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது எனக் கோயில் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024